Thursday, December 20, 2012

பனித்திரை – குறும்படம்


ஒளிக்கற்றையின் பாதையில் அலையும் தூசித் துகள்கலென, பாதை நெடுக காற்றின் திசையில் மூடுபனிக் குவியல்கள் நகர்ந்து கொண்டிருந்தன. ஜன்னலின் வழி முகத்தில் அறையும் காற்றின் மூலம் மூடுபனி திட்டுக்கள் முத்தமிட்டன. பிரசித்தி பெற்ற நிருத்தத்தினுள் நின்றிருந்த பேருந்தில் அமர்ந்திருந்தேன். எதிர்படும் நபர்களின் முகத்தில் சந்தம் வழிவது போல இருந்தது. பக்கத்துப் பேருந்திலும் பச்சிளம் குழந்தையை துணியால் சுருட்டியவாறு ஒரு பெண்மணி அமர்ந்திருந்தாள். குழந்தையின் துள்ளலைக் கண்டும் அவளது முகம் சலனமற்றிருந்தது. நடுத்தர வயது தான் அவளுக்கு. அருகில் சுமாரான தோற்றத்தில் ஓர் இளைஞனும் அமர்ந்திருந்தார். ஒரு போலீஸ் வாகனம் நிருத்தத்தினுள் வந்து நின்றது. காவலர்கள் சிலர் நேராக அந்தப் பெண்மணியிடம் சென்றனர். அவளிடம் ஏதோ பேசினார். அதனைத் தொடர்ந்து மறுப்பேதும் சொல்லாமல் காவலர்களைப் பின் தொடர்ந்து சென்றவள் ஜீப்பில் ஏறி பின்னிருக்கையில் அமர்ந்து கொண்டாள். கச்சிதமாக நெறியாள்கை செய்த நாடகம் போல எல்லாம் நடந்து கொண்டிருந்தது.

“குழந்தைத் திருட்டாக இருக்குமோ!? கணவனுடன் முரண்பட்டு கோவத்தில் கைக்குழந்தையை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வந்திருப்பாளோ!? மாமியார், நாத்தனார் போன்றவர்களின் கொடுமையாக இருக்குமோ!?” என எண்ணங்கள் தறிகெட்டு ஓடியது.

நண்பர் சக்கரவர்த்தி ஆஸ்துமா பற்றிய விழிப்புணர்வு குறும்படத்தை இயக்கியிருக்கிறார். இன்று அதன் குறுந்தகடு வெளியீடு ஏற்பாடாகியிருந்தது. அங்கு செல்வதற்காகத் தான் பேருந்தில் அமர்ந்திருந்தேன். சுற்றிலும் நடந்த களேபரத்தில் பேருந்திலிருந்து இறங்கி, “என்ன தான் நடக்கிறது?” என்று நோட்டம் விட்டேன். சற்று நேரத்தில் போலீஸ் ஜீப் சடாரென நழுவிச் சென்றது. கூடவே, திரட்ட நினைத்த தகவலும் தான். பாரதிய வித்யா பவனில் நுழைந்த போது விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து கொண்டிருந்தன. ஹமீது தான் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார்.

அதற்கு முன் ஒரு விஷயத்தை பகிர வேண்டும். கடந்த 2012-ல் நடந்த புத்தகக் கண்காட்சியின் ஒரு நாள், அரங்கிலிருந்த கேண்டினுக்குச் சென்றிருந்தேன். உருண்டு உப்பிய செந்நிற போண்டாக்களை வைத்துக்கொண்டு சக்கரவர்த்தி தின்று கொண்டிருந்தார். அருகில் ஆஸ்துமா சிறப்பு மருத்துவர் ஸ்ரீதரும் அமர்ந்திருந்தார். மருத்துவரை பார்பதற்கு ஃபாரின் ரிடர்ன் அமெரிக்க மாப்பிளை போல இருந்தார். உண்மையில் அவர் அமெரிக்காவில் தங்கி ஆஸ்துமா பற்றி படித்திருக்கிறார். எழுத்தாளர் சுஜாதா, பாஸ்கர் சக்தி போன்ற பல பிரபலங்களுக்கு இவர் தான் ஆஸ்தான மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.

“என்னமோ சீரியஸ் டிஸ்கஷன் போயிட்டு இருக்கு போல” என சக்ரவர்த்தியிடம் யதார்த்தமாகக் கேட்டேன். “சார் ஒரு குறும்படம் எடுக்கப் போறாரு... அதை நான் தான் இயக்கப் போறேன்” என பதார்தமாக பதில் தந்தார் சக்ரவர்த்தி. (அருகில் இருந்த மருத்துவர் பவ்யத்துடன் சிரித்தவாறு என்னைப் பற்றி விசாரித்துக் கொண்டார்). கிட்டத்தட்ட ஒரு வருட உழைப்பில் எடுக்கப்பட்ட குறும்படம் தான் இது. சமகாலத்தில் டாக்டர்கள் படம் எடுக்க முன் வருவது, ஒருவித கிலியை ஏற்படுத்துகிறது. அது போன்ற கிலியுடன் தான், நிகழ்ச்சி நடக்கும் விழா அரங்கினுள் சென்று அமர்ந்திருந்தேன். “பனித்திரை” - என்ற குறும்படம் திரையிடப்பட்டது. சினிமாவின் மூலம் அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பவர் அல்ல இவரென்பதை புரிந்துகொண்டேன். போலவே குரும்படத்தைப் பற்றிய பாராட்டு உரைகளும் பின்னர் அரங்கேரியது.

சக்ரவர்த்தியின் ஆஸ்தான குருவான இயக்குனர் வசந்த் நடுநாயகனாக அமர்ந்திருந்தார். விழா நாயகன் மருத்துவர் ஸ்ரீதரும் இருந்தார். சிறப்பு விருந்தினர்களாக எழுத்தாளர் எஸ்ரா, குணசித்திர நடிகர் – திரைப்பட வசனகர்த்தா – பேச்சாளர் மற்றும் எழுத்தாளர் பாஸ்கர் சக்தி (இயக்குனர்), தமிழ் ஸ்டுடியோ அருண் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர். எல்லோரும் குரும்படத்தைப் பற்றிய தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். குறிப்பாக பாஸ்கர் சக்தி பேசும்போது, சிறுவயதில் ஆஸ்துமாவால் தான் பட்ட அவதியையும், அதிலிருந்து வெளிவர மலையில் அலையும் கருங்குரங்கின் ரத்தத்தை விஸ்கியில் வடித்தெடுத்துக் குடித்ததையும் பகிர்ந்துகொண்டார். போதாததற்கு கருங்குரங்கின் மாமிசத்தை பதப்படுத்து வேறு சாப்பிட்டிருக்கிறாராம். அசைவப் பிரியன் தான் என்றாலும் குமட்டிக் கொண்டு வந்தது. இதுபோன்ற ரத்தவாடை பத்தியங்கள் தான் ஆஸ்துமாவிற்கு வாழையடி வாழையாக நம்மவர்களால் பரிந்துரைக்கப்பட்டு வருகிறது. புறாவின் ரத்தத்தையும் சிலர் பரிந்துரைப்பர். அதெல்லாம் தேவையில்லை, ஆங்கில மருத்துவத்தின் மூலமே இதனை சரி செய்யலாம் என்பதை பற்றிய விழிப்புணர்வைத் தான் மருத்துவர் ஸ்ரீதர் பல்வேறு வடிவங்களில் ஏற்படுத்தி வருகிறார். ஆஸ்துமாவைப் பற்றி இவர் எழுதிய புத்தகம் ஏற்கனவே விகடன் பிரசுரத்தால் வெளியிடப்பட்டுள்ளது. தொலைகாட்சி விவாத நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்று பல தகவல்களை ஏற்கனவே பகிர்ந்திருக்கிறார். அதன் அடுத்த கட்ட முயற்சியாகத் தான் இந்தக் குறும்பட வெளியீடு.

ஆஸ்துமாவை ஒழித்துக்கட்ட இவர் ஏன் தன்னை நேந்துவிட்டுக் கொள்ள வேண்டும்? இதன் பின்னர் ஒரு ருசிகரத் தகவல் இருக்கிறது. உண்மையில் மருத்துவரின் மனதில் வடுவாக பதிந்திருக்கும் இளமைக்கால நினைவுகள் என்று தான் அதனைச் சொல்ல வேண்டும்.

ஸ்ரீதரின் அம்மா & அப்பா இருவருக்கும் ஆஸ்துமா இருந்ததாம். சில சமயம் அவருடைய தாயாருக்கு திடீரென மூச்சிறைப்பு ஏற்படுமாம். ஒருமுறை சமையலறையின் ஜன்னல் கம்பியைப் பிடித்துக்கொண்டு, முகம் கோநியவாறு சிரமப்பட்டு மூச்சுவிட்டுக் கொண்டிருந்தாராம். அதனைக் கண்ட பத்துவயது சிறுவன் ஸ்ரீதர் மிகுந்த துயரம் அடைந்து, ஆஸ்துமாவை இல்லாமல் செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டாராம். அந்த காலத்தில் மருத்துவர்கள் பொறுப்புணர்ந்து சேவை செய்து கொண்டிருந்தார்கள். இக்கட்டான நேரங்களில் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து பிரதிபலன் பார்க்காமல் மருத்துவ சேவை செய்வார்கள். நாம்முடைய சக்திக்கு ஏற்றவாறு கொடுப்பதை ஏற்றுக்கொண்டு செல்வார்கள். இப்போதைய மருத்துவர்களுக்கு அந்த குணம் இருப்பதில்லை என்ற உண்மைத் தகவலை மருத்துவராக இருந்துகொண்டே பணப பேய்களாகத் திகழும் மருத்துவர்களை இடித்துரைத்தார்.

வறுமையில் இருக்கும் ஆஸ்துமா நோயாளிகளுக்கு மருத்துவர் ஸ்ரீதர் இலவச சிகிச்சை அளிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏராளமான ஆஸ்துமா விழிப்புணர்வு முகாம்களையும் நடத்திக் கொண்டு வருகிறார். மருத்துவர் ஸ்ரீதர் மருத்துவத்தில் சிறக்கவும், நண்பர் சக்கரவர்த்தி திரைத்துறையில் மின்னவும் வாழ்த்துக்கள். மற்றபடி வேறென்ன சொல்ல முடியும் எந்த எளியவனால்...

Friday, November 9, 2012

மாற்று சினிமா மார்கெடிங்


விளையாடவில்லை, சீரியசாகத் தான் சொல்கிறார் குனித் மோங்கா. அனுராக் காஷ்யப் ஃபிலிம்ஸ் பிரைவேட் லிட் (A.K.F.P.L)” நிறுவனத்தின் சூத்திரதாரி இவர்.

காதோரம் நரைத்த முடிகளையும், உருவத்தையும் பார்த்தால் வயதானவர் போல் தோன்றும். ஆனால் 28 வயதுதான் ஆகிறது. விநியோகஸ்தர்களையும் தெரியாது. திரையரங்க உரிமையாளர்களுடனும் பழக்கமில்லை. வானுயர்ந்த கட்டிடத்தில் அலுவலகம் இல்லை. மெத்தப் படித்த மேதாவிகள் துணையும் இல்லை. ஒரு லேப்டாப். ஒரு செல்போன். சினஞ்சிறு குடிசையில் அலுவலகம். காபி, டீ குடிக்க வேண்டுமானால் பக்கத்திலேயே கடை. கை தட்டினால் தேநீர் வரும்.


இதுதான் குனித் மோங்கா. இதுதான் இவரது அன்றாட வாழ்க்கை. ஆனால், இவர் தான் மெகா பட்ஜெட் படங்களையும், 50, 60 கோடி ரூபாய் களில்  சம்பளம் வாங்கும் இந்தி நடிகர்களையும் எதிர்த்து லோ பட்ஜெட் படங்களை வெளியிட்டு வருகிறார். மாற்று சினிமாவுக்காக தன் உடல் பொருள் ஆவி என சகலத்தையும் அர்பணித்திருக்கும் அனுராக் காஷ்யபின் படங்களை உலகம் முழுக்கத் திரையிட இவர் ஒருவர் தான் முழு மூச்சாக போராடி வருகிறார்.

முழு நேர பணி அனுராக் காஷ்யபின் நிறுவனத்தில், என்றாலும் காஷ்யபின் அனுமதியுடன் சிக்யா என்டர்டயின்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் சொந்தமாக நடத்தி வருகிறார். ‘சைத்தான்’, ‘தட் கேர்ள் இன் யெல்லோ பூட்ஸ்’, ‘கேங்க்ஸ் ஆப் வாசேபூர்’ (2 பாகங்கள்), ‘அய்யா’ ஆகியவை இவரது முயற்சியில் வெளிவந்த படங்கள். தயாரிப்பில் இருப்பவை ‘மைக்கேல்’, ‘பெட்லர்ஸ்’, ‘ஹராம்கோர்’, ‘மான்சூன் சூட்’, ‘லூவ் சுவ் தே சிக்கன் குரானா’, ‘வக்கிர துண்ட மஹாகாய’.

பெரிய பெரிய கார்பரேட் நிறுவனங்களே ஒரு நேரத்தில் ஒன்று அல்லது இரண்டு படங்களை மட்டுமே தயாரிக்கின்றன. அப்படியிருக்க வெரும் கையில் முழம் போட்டபடி இவரால் எப்படி இவ்வளவு படங்களை ஒரே நேரத்தில் உருவாக்க முடிகிறது.

சிம்பிள் தயாரிப்புச் செலவை வெளியில் மக்களிடமிருந்தே வசூலிக்கிறார்கள். அதிகபட்சம் 4 கோடிக்கு மேல் எந்தப் படத்தின் தயாரிப்புச் செலவும் போகக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார். ஸ்கிரிப்ட் வேலைகள் தொடங்கும் போதே மார்கெட்டிங் செய்ய ஆரம்பிக்கிறார்.

உதாரணமாக ‘பெட்லர்ஸ்’ படத்தின் மொத்தச் செலவு 2 கோடி ரூபாய். கைவசம் இருந்தது 1 கோடி ரூபாய் தான். எஞ்சிய தொகையை பேஸ் புக் மூலமாக நண்பர்களிடமிருந்து திரட்டியிருக்கிறார். ‘மான்சூன் சூட்’ பட ஸ்க்ரிப்டை பிராஸ் நாட்டிலுள்ள தனியார் தொலைக்காட்சிக்கு அனுப்பி, அந்த நாட்டின் சாட்டிலைட் உரிமையை அவர்கள் வாங்கும்படி செய்திருக்கிறார். இதற்காக அந்த தொலைகாட்சி நிறுவனம் கொடுத்த பணத்தில் தான் ‘மான்சூன் சூட்’ படப்பிடிப்பே ஆரம்பமாகியிருக்கிறது.
இதுதான் குனித் மோங்காவின் வழிமுறை. எத்தனை கோடி ரூபாய் செலவாகும்? எவ்வளவு வசூலாகும்? பரஸ்பரம் ஷேர் எவ்வளவு? இந்த மூன்று கேள்விகளுக்கான பதிலை முதலில் அணுகுபவர்களிடம் இருந்து பெற்று விடுகிறார். அதற்கேற்ப அக்ரிமென்ட் தயாரித்து கையெழுத்து போட்டு கொடுத்து விடுகிறார். பட வெளியீட்டுக்குப் பிறகு சொன்ன சொல்லைக் காப்பாற்றி விடுகிறார்.

உலகில் எங்கு திரைப்பட விழா நடந்தாலும் அங்கு சென்று தயாரித்த, தயாரிப்பில் இருக்கும் படங்கள் குறித்து மார்கெட்டிங் செய்கிறார். உடனடியாக யாரும் படங்களை வாங்கவில்லை என்றாலும் பரவாயில்லை. அவர்களது மின்னஞ்சல், செல்போன் எங்களை வாங்கி வந்து அடிக்கடி தொடர்பு கொண்டு, பேசி, மெல்ல மெல்ல தன் பக்கம் ஈர்க்கிறார்.

வெளிநாட்டு ரைட்ஸ், வெளிநாட்டு டிவிடி ரைட்ஸ், அங்கு சேட்டிலைட் ரைட்ஸ் என திட்டமிட்டு நாட்டுக்கு நாடு காய் நகர்த்தி அனுராக் காஷ்யபின் கனவுகளுக்கு உயிர் கொடுக்கிறார்.

ஸ்டுடியோ சிஸ்டம் எனப்படும் கார்பொரேட் நிறுவனங்களை நம்பாமல் இண்டிபெண்டன்ட் சினிமா என்கிற சுதந்திர சினிமாவுக்காக தனந்தனியாகப் போராடிவரும் குனித் மோங்கா, லோ பட்ஜெட் படங்களாலும் லாபம் சம்பாதிக்க முடியும் என நடைமுறை ரீதியாகக் காண்பித்து வருகிறார். இவரது பாதையில் நாமும் ஏன் செல்லக் கூடாது?

"கே. என். சிவராமன்" - தினகரன் வெள்ளி மலர். 

Thursday, November 8, 2012

கனவு மெய்ப்பட வேண்டாம்!

வேலையை எழுதிக் கொடுத்துவிட்டு, ஊர் உலகத்தை சுற்றிக் கொண்டிருந்த சமயம் அது. அதிகாலையில் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தேன். செல்பேசி ஒலிக்கவும் எடுத்துப் பேசினேன். உடன் வேலை செய்த கார்த்தி தான் அழைத்திருந்தான்.

“மாமா... எங்க இருக்க? எப்படி இருக்க?” என்றான்.

“நல்லா இருக்கேண்டா! சொல்லு... இந்த நேரத்துல என்னடா அதிசயமா
Phone call? Anything Urgent...?” என்றேன்.

“ச்சே.. ச்சே... ஒன்னும் இல்ல மாமா... நீ நல்லா இருக்கியான்னு சொல்லு?” என்றான்.

“டேய்... நல்லா தூங்கிட்டு இருக்கவன எழுப்பி கேக்குற கேள்வியாடா இது? உனக்கே நல்லா இருக்கா?” என்றேன்.

“தப்பா நெனக்காத மாமா...?” என்றவனின் குரலில் பயத்தை உணர முடிந்தது.

“டேய் ச்சீ... எதுன்னாலும் சொல்லுடா...பார்த்துக்கலாம்!” என்றேன்.
“மாமா... கரண்ட் போஸ்ட் உன்மேல உழுந்து, நீ சாவுறது போல கனவுகண்டு மெரண்டு போயிட்டேன்! அதான் உன்ன உடனே கூப்பிட்டேன்” என்றான். மனம் விட்டு சிரித்ததில் தூக்கம் கூட கலைந்துவிட்டது.

“சிரிக்காத மாமா...! பார்த்து பத்திரம்” என்றான். அவனைச் சமதானம் செய்துவிட்டு செல்பேசியைத் துண்டித்தேன்.

எல்லோருக்கும் கனவு வரும். தெரிந்த நண்பர்களும், உறவினர்களும் கனவில் வருவார்கள். எனக்கோ – தூக்கத்தில் கனவு காண்பது அரிதிலும் அரிது. நீண்ட நாட்களாக பார்க்காத போது, அக்கா மகன் அகில் மட்டும் எப்பொழுதாவது சொப்பனத்தில் வந்து சேட்டை செய்வான். அவனுடைய குறும்புத் தனத்தைக் காட்டி விட்டு ஓடிவிடுவான்.

மற்றபடி, மிகவும் அரிதாக துர்-சொப்பனங்கள் வந்து நடு இரவில் எழுந்து கொள்வதும் நடக்கும். மூன்று வருடங்களுக்கு முன்பு ஒரு கனவு! என்னுடன் வேலை செய்த, புதிதாகக் கல்யாணமான நண்பர் ஒருவர் சாலை விபத்தில் இறப்பது போல கனவு கண்டேன். மறுநாள் அலுவலகத்தில் நுழைந்தபோது மனமெல்லாம் குழப்பம்.

“ஏன் கிருஷ்ணா டல்லா இருக்கீங்க?” என்றான் ஹேம்நாத்.

அவனிடம் பகிர்ந்த போது “தயவு செஞ்சி வாய மூடுங்க கிருஷ்ணா! வேற யாருகிட்டயும் சொல்லிடாதிங்க?” என்றான். ஏதோ! அந்த நேரம் மன பாரம் குறைந்தது போல இருந்தது. ஆனால், சில மாதங்களிலேயே சொப்பனத்தில் வந்த நண்பர் அகால மரணம் அடைந்தார். சுடுகாட்டில் நண்பருக்கு வாய்க்கரிசி போடும் சமயம், சக மனிதரின் இழப்பையும் மீறி குற்ற உணர்ச்சிதான் மேலோங்கியது.

இரண்டு தினங்களுக்கு முன்பு ஒரு கனவு. உடன் படித்த தோழி ஒருத்தி, பரிட்சயமான கிராமத்தில், நடந்து பழகிய தெருவில் இருப்பது போல கனவில் வந்தாள். தூரத்தில் பார்த்தபோது சாந்தமாக இருந்த முகம், நெருங்கிச் சென்றதும் கோரமாக மாறியது. மன நலம் பாதிக்கப்பட்ட பெண் போல அவளது நடத்தை இருந்தது.

“ஹே... நீ என்ன பண்றன்னு உனக்குத் தெரியுதா? எல்லோரும் உன்ன தான் பாக்குறாங்க. உனக்குக் கொழந்தைங்க வேற இருக்காங்க! You Please… control yourself” என்கிறேன்.

“அத சொல்ல நீ யாருடா? பைத்தியம்...” என்கிறாள்.

தெருவில் நடந்து போவோர் என்னைத் தான் விநோதமாகப் பார்ப்பது போல தோன்றியது. “ஒ... மை காட்... ஹே... ஹே...” என்று குரலெழுப்பும் சமயம் கால்போன போக்கில் தோழி நடக்கலானாள். அதோடு தூக்கம் கெட்டு எழுந்துவிட்டேன். அந்தத் தோழி இதுவரை நன்றாகத் தான் இருக்கிறாள். இரண்டு குழந்தைகளுக்குத் தாயும் கூட. அவள் ஏன் பைத்தியமாக என்னுடைய கனவில் தோன்ற வேண்டும்? தூரத்தில் பார்த்தால் சிரித்து விட்டு நகர்ந்துவிடும் அவளிடம் பகிர்ந்துகொள்ள முடியுமா என்ன?

கடவுளே! யதார்த்த வாழ்கையிலேயே எனக்கு கனவுகள் இல்லை. ஆழ்ந்த உறக்கத்திலும் அந்த எழவு தேவையில்லை. ஆகவே, கடைசியாக வந்த எழவையும் பலிக்காமல் செய்யும். என்னுடைய "கனவுகள் மெய்ப்பட வேண்டாம்!"

(சுபம்... மங்களம்...)

Thursday, October 11, 2012

பாபா ஓர் சரணாலயம்


நீண்ட நாட்களாக வீட்டின் பின்புறமுள்ள காலி இடத்தில் குப்பையைக் கொட்டுகிறார்கள் பக்கத்து வீட்டினர். (சென்ற பதிவில் எழுதி இருந்தேனே... அவர்களே தான்... அத்துமீறி மரத்தை வெட்டிய அதே பக்கத்து வீட்டினர் தான்.) விசாரித்தால்  “வேறு யாரோ கொட்டுகிறார்கள் எங்களுக்குத் தெரியாது!” என்கிறார்கள். இத்தனைக்கும் வாரத்தின் மூன்று நாட்களில் குப்பையைச் சேகரிக்க, ஊர் பஞ்சாயத்து குப்பை வண்டியை ஏற்பாடு செய்துள்ளது. அவற்றில் கொண்டு குப்பையைக் கொட்டினால், வீட்டுக் கொள்ளையில் ஏதேனும் ‘மரம், செடி, கொடிகள்’ வளர்ந்து பூமி குளிர்ந்துவிடுமே.

ஆகவே, “இதோ பார் சர்மிளா! அவங்கள, நம்மோட மெனையில குப்பையைக் கொட்டுறத நிறுத்தச் சொல்லு! இல்லன்னா...!” என்றேன்.

“நான் சொன்னா கேப்பாங்களாடா?” என்று தயங்கினாள்.

“அடிப்பாவி! நம்ம சொல்லிக் கேக்குற மக்களா அவர்கள். அப்படிக் கேக்குறதா இருந்தா - மொதல்ல சொன்னதையே கேட்டிருப்பாங்க இல்ல. இப்போ நான் செய்யப் போறதே... வேற ஒரு விஷயம் – கவனமா கேளு... நைட்டெல்லாம் உட்கார்ந்து யோசித்தது...” என்றேன்.

“இன்னாடா செய்யப் போற? இதோ பாரு போலீசு கேசுன்னு போயிடாத!” என்றாள்.

“உனக்குக் கொஞ்சம் கூட அறிவே இல்லையா?! நம்ம என்ன அரசாங்க காண்ட்ராக்ட் எடுத்தா சம்பாதிச்சு இருக்கோம். இல்ல அரசாங்க வேலையில லஞ்சம் வாங்கி சம்பாதிச்சு இருக்கோமா? பணத்தை வாரி இறைக்க...!” என்றேன்.

“அப்போ! என்னடா பண்ணப் போற?” என்றாள்.

“அது ரொம்ப சிம்பிள்... நம்ம ஆர்டிஸ்ட் பாபு இருக்காரு இல்ல. அவருகிட்ட சொல்லி சிரிடி சாய்பாபா படத்தை 5  அடிக்கு, 3 அடி வரையச் சொல்லப் போறேன். அதுவும் மூணு படம் வரையச் சொல்லப் போறேன்.” என்றேன்.
ஆர்வமிகுதியில் “எதுக்குடா!?” என்றாள்.



“அவங்க எங்க குப்பையைக் கொட்டுறான்களோ – அந்த காம்பவுன்ட் அருகில் ஆர்டிஸ்ட் பாபு வரையிற படங்கள கொண்டு போயி நட்டு வைக்கப் போறேன். வீட்டின் பின்னாலுள்ள இருப்பிடத்தை “சிருடி பாபா தோட்டம்” என்று பெயர் சூட்டப் போகிறேன். அவங்க எந்த எடத்துல குப்பையைக் கொட்டிட்டு வராங்களோ... அந்த எடத்தப் பார்த்து கன்னத்துல போட்டுக்க வைக்கப் போறேன். கோர்ட்டு கேசுன்னு போனாலும் இதே செலவு தானே ஆகும்.” என்றேன்.

“டேய்... குப்பையில கொண்டு பாபா படத்த வைக்காத... பாவம் சுத்திக்கப் போகுது!” என்றாள்.

“அத்துமீறி மரத்த வெட்டுறதால சுத்தாத பாவமா - இதனால சுத்திக்கப் போகுது?” என்றேன். மேலும் எழுத்தானது சரஸ்வதி என்கிறார்கள். “இங்கு சிறுநீர் கழிக்காதே”  என்று எழுதுகிறார்கள். அங்குதான் நம்முடைய மக்கள் சிறுநீர் கழிக்கிறார்கள். அப்படியெனில் சரஸ்வதியின் தெய்வீகத் தன்மை குறைந்துவிடுமா!?

“நட்டு வச்ச பாபா படத்தாண்ட குப்பையைக் கொட்டுனா என்ன செய்வ?”
“அதுவும் சிம்பிள்... எனக்குத் தெரிஞ்சி கவரப்பேட்டையில ஒரு பாபா கோவில் இருக்கு... அங்கக் கொண்டுட்டு போயி படத்தைக் கொடுத்து, நடக்கப் போறதச் சொல்லுவேன்.” என்றேன்.

“என்னடா நடக்கப் போகுது?” என்றாள்.

“எங்க வீட்டாண்ட இந்தப் படங்கள நட்டு வச்சேன். ஆனா... யாரோ தினமும் இந்தப் படங்கலாண்ட குப்பையைக் கொட்டுறாங்க. எனக்குக் கஷ்டமா இருக்கு... உங்க கோவில்ல இந்தப் படங்கள வச்சிக்கிறிங்களான்னு” கேட்பேன்.

“யாரு அப்படி செஞ்சதுன்னு?” அவங்க ஒருவேளை கேட்டாங்கன்னா – “யாருன்னு தெரியல நண்பர்களே...! பக்த கோடிகள் எல்லாரும் எங்க வீட்டுக்கு ஒருநாள் விருந்துக்கு வரணும். பாபாவின் பக்தர்களை நான் உபசரிக்கணும்” என அழைப்பு விடுத்துவிட்டு வருவேன் என்றதும் சர்மிளா சிரித்தாள்.

அந்த சிரிப்பிற்கு அர்த்தம் இருக்கிறது. ஏனெனில் குப்பையைக் கொட்டியவர்கள் அந்தக் கோவிலின் மூலையில் என்றேனும் அமர்ந்து கண்களை மூடி தியானம் செய்யும் பொழுதும், மலர்களைத் தூவி வணங்கும் பொழுதும் துர்நாற்றம் அவர்களின் மூக்கைத் துளைக்கும். அவர்கள் உண்மையான சிரிடி பாபாவின் பக்தர்களாக இருந்தால்...

 “அந்நியர்களிடம் அன்பாய் இரு” என்பது தான் சிரிடி பாபாவின் முக்கியக் கோட்பாடு. “காட்டுமிராண்டித் தனமாக அடுத்தவர்கள் உங்களை வதைத்தாலும் பொறுத்துக் கொள்ளுங்கள்” என்பார். அந்த மகானை குப்பையோடு குப்பையாக நட்டு வைக்கும்படியும், என்னைக் காட்டுமிராண்டியாகவும் மாற்றப் போவது அதே பாபாவின் பக்தர்கள் தான்.

1. பண பலமும், அதிகார பலமும் சார்ந்து காவல் துறையின் சார்பு ஒருவேளை உண்மைக்கு எதிராகச் சாயலாம். ஒரு பக்கமாக துணை நிற்கலாம்.

2. அதே “பண பலமும், அதிகார பலமும்” உற்பத்தி செய்யும் பொய் சாட்சிகளின் மூலமும் - உண்மைக்குப் புறம்பாகப் பேசுதலின் மூலமும் நீதித்துறையின் சார்பு ஒருவேளை உண்மைக்கு எதிராகச் சாயலாம்.

மேற்கண்ட இரண்டின் மூலமும் உளுத்துப் போகச் செய்யும் உண்மைத் தன்மையினை - மனிதர்களின் உளவியல் மையத்தினை தகர்க்கும் பொழுது வாய்மையை நிலை நாட்டலாம் என்று நினைக்கிறேன்.

என்னடா இப்படி கீழ் தரமாக யோசிக்கிறோமே என்று எனக்குக் கொஞ்சமும் வருத்தம் இல்லை. “அரசியல் பலமும், பண பலமும்” இருக்கிறது என்ற கர்வத்தில்  “எதை வேண்டுமானாலும் செய்யலாம்! எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம்! பகையுடன் அடுத்தவர்களை உருட்டி விளையாடலாம்!” என்றிருப்பவர்களுக்கு, அவர்களின் உளவியல் கூறுகளைத் தகர்ப்பதின் மூலம் தான் பாடம் புகட்ட முடியும். இந்தச் செயலைச் செய்யப் போவதின் மூலம் நரகத்தில் எனக்கான இடத்தை ஆன்மீகவாதிகள் ஒதுக்கி வைக்கலாம். அதனை புன்சிரிப்புடன் ஏற்றுக் கொள்வேன். அதைப் பற்றி எனக்குக் கொஞ்சமும் கவலை இல்லை. வீட்டைச் சுற்றிலும் மைக்கா கவர் இல்லாத, குப்பைக் கூளங்கள் இல்லாத, காற்றில் சுதந்திரமாக கிளை விறித்தாடும் பச்சைப் பசேல் சுற்றமும் இருந்தால் போதும். இதைத் தவிர்த்து வேறெந்த சொர்க்கமும் எனக்கு வேண்டாம். பூவுலகின் நண்பனாக இருத்தலே எனக்கு அத்ம திருப்தி தான்..

“அக்காவைத் தூது அனுப்பி இருக்கிறேன்”. அவள் கொண்டு வரும் செய்தியைப் பொறுத்துத்தான் மற்றதையெல்லாம் யோசிக்கவேண்டும்.


பாபா ஓர் சரணாலயம் - அவன்
பாதங்கள் கமலாலயம்


# பொறந்த கொழந்தையையே குப்பைத் தொட்டியில் போடும் அவலம் இருக்கும் நம்முடைய சுற்றத்தில், வரைந்த ஆன்மீகவாதியின் படத்தை குப்பைக்கு நடுவில் நட்டு வைத்தால் குடியா முழுகிவிடும். கௌண்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்...    

Wednesday, October 10, 2012

மரங்களை வெட்டாதீர்

கிராமத்தில் இருக்கும் என்னுடைய அண்டை வீட்டார், எங்களுடைய அனுமதியின்று மரங்களை வெட்டுவதும் – பிளாஸ்டிக், மைக்கா, திரவ மற்றும் திடக் கழிவுகளைக் கொட்டி பின்புறக் கொள்ளையை நாசப்படுத்துவதும் என ஓயாது தொல்லை கொடுத்துக் கொண்டு இருக்கின்றனர். அதைப் பற்றிய சட்ட ஆலோசனைகளைக் கேட்க வேண்டி முகநூலில் என்னைத் தொடரும் நண்பர்களிடம் வினா எழுப்பி இருதேன். அதை அப்படியே இங்கு பகிர்கிறேன். யாருக்கேனும் உதவும் என்ற நம்பிக்கையில்...  

முகநூல் ஸ்டேட்டஸ் 




ப்ளீஸ்... உங்களுக்குத் தெரிந்த சட்ட மற்றும் அறவழி ஆலோசனைகளைச் சொல்லுங்கள்:

பக்கத்து வீட்டில் இருப்பவர்களுடன் எங்களுக்கு பல ஆண்டுகளாக பேச்சு வார்த்தை இல்லை. ஒரு வகையில் அது நிம்மதியும் கூட... (வேண்டுமெனில் அதைப் பொதுவில் எழுதவும் தயங்க மாட்டேன்.)

விஷயம் என்னவெனில், எங்கள் வீட்டின் பின்புற காலி இடத்தில் சில மரங்கள் இருக்கிறது. அவற்றின் கிளைகள் பக்கத்து வீட்டில் எட்டிப் பார்க்கிறது. மரங்களுக்குத் தெரியுமா? இவர்கள் வேண்டியவர்கள்! இவர்கள் வேண்டாதவர்கள் என...

நாங்களே மரத்தின் கிளைகளைக் கழிக்க வேண்டும் என்றிருந்தோம். ஆனால் பாருங்கள்... எங்களுடைய அனுமதியில்லாமல், நாங்கள் கவனிக்காத பொழுது எங்களுடைய மரத்தின் கிளைகளை வெட்டிக் கூளமாக அப்படியே போட்டுவிட்டுச் சென்றுள்ளனர். அதில் இன்னும் சில குட்டி மரக் கன்றுகள் அழிந்துள்ளன. அமைதியான முறையில் எடுத்துக் கூறியும் அவர்கள் அடங்குவதாக இல்லை. திமிர் தனத்துடன் “அப்படித்தான் செய்வோம்” என்று சொல்லாமல், சொல்லுகிறார்கள். 
கத்தியை எடுத்துக்கொண்டு வந்து, அவர்களின் உறவினர் ஒருவர் எங்களை ‘வெட்டுவேன், குத்துவேன்’ என்றபோதும் ஒரு புன்னகையுடன் தான் கடந்து சென்றேன். கோவத்தில் இதெல்லாம் சகஜம்தான். ஆனால், மரத்தின் கிளைகளை வெட்டி நாசப்படுத்தும் போது என்னால் பொருக்க முடியவில்லை. 
இது சார்ந்து சட்ட ரீதியாக எப்படி அணுகுவது என்றும் எனக்குத் தெரியவில்லை! நான் இல்லாத நேரத்தில் என்னுடைய தாயார் தனியாக வீட்டில் இருக்கிறார். நான் ஏதேனும் பேசப்போய், தனியாக இருக்கும் அவர்களை ஏதேனும் செய்துவிட்டால் என்ன செய்வது!? அவர்களே உடல் நலம் இல்லாமல் பல நேரங்களில் மயங்கி கீழே விழுகிறார். 

அடுத்தவர்களின் வீட்டுக் காம்பவுண்ட் சுவரை இடிக்க வந்தால், திருட வந்தார்கள் என போலீசில் புகார் செய்யலாம். ஆனால் மரங்களை வெட்டினால் அப்படிச் செய்ய முடியுமா என்று தெரியவில்லை?
தொடர்ந்து மரங்களை வெட்டுவதும், கபளீகரம் செய்வதுமாக அவர்கள் தொந்தரவு செய்கிறார்கள். இது எனக்கான பிரச்சனை மட்டுமல்ல. ஒவ்வொரு தெருவிலும் இதுபோன்ற மக்கள் இருக்கிறார்கள். அவர்களை எப்படிச் சமாளிப்பது.
மரங்களை வெட்டுபவர்களுக்கு எதிராக அறவழியில் நின்று, இது போன்ற சமூக விரோதிகளுடன் போராட முடியுமா? அதற்காகக் குழு ஏதேனும் இருக்கிறதா? என்பதைப் பற்றி எனக்குத் தெரிய வேண்டும்.

சுற்றுச் சூழல் சார்ந்த இதுபோன்ற சிறு சிறு பிரச்சனைகளுக்கு பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள், ஆக்டிவிஸ்ட், அரசியல்வாதிகள், நிருபர்கள் என பலருடைய கருத்தையும் நான் எதிர்பார்க்கிறேன். இலக்கியம் வாசித்து, இதயத்தில் அன்பை வழியவிடும் என்போன்றவர்கள் இவர்கள் மிகவும் சோதிக்கிறார்கள்.

ஆகவே, ப்ளீஸ்... உங்களுக்குத் தெரிந்ததைச் சொல்லுங்கள்.

அதற்குக் கிடைத்த பின்னூட்டங்கள்: 

விமர்சகர் ஞாநி: உங்கள் வீட்டு மரத்தை உங்கள் அனுமதி இல்லாமல் வெட்டினாலும் போலீசில் புகார் செய்யலாம்.


மௌலி: போலிசில் புகார் தாருங்கள், இன்றை தேதி போலிசுக்குப் பக்கத்து வீட்டுக்காரரே மேல் என்ற எண்ணம் வந்துவிடும்

பிரகாஷ் ராஜகோபால்: சொந்த வீடாக இருந்தால், போலிசுக்குப் போவதை விட பேசித் தீர்ப்பதே சிறந்தது.இரு வீட்டுக் காரர்களும் பெரிதும் மதிக்கும் சான்றோர் / பெரியவர் ஒருவரை அழைத்து வந்து மத்யஸ்தம் செய்ய முயற்சிக்கலாம்.(பக்கச் சார்பற்ற உங்களின் நியாயத்தை அவர்களுக்குப் புரியவைக்க). பல பத்தாண்டுகள் தொடர்ந்து வாழப் போகும் இடத்தில், நட்பு பாராட்டாவிடினும், பகைமை உணர்வு தொடர்ந்து கொண்டே போவதைத் தவிர்க்கலாம்.

சுரேஷ் கண்ணன்: காவல் துறையில் புகார் அளிக்கும் முன் அவர்கள் வீட்டுப் பெரியவர்களை அணுகி உரையாடுவது நல்லது என்று தோன்றுகிறது.

Sa Na கண்ணன்: வர்கள் செய்வது தவறுதான். ஆனால், உங்கள் வீட்டு மரக்கிளை அவர்கள் வீட்டுப் பக்கம் செல்வதால் நிச்சயம் இலைகள் கீழே விழுந்து குப்பை உருவாகியிருக்கலாம். அவர்களுக்கு இது பிடிக்கவில்லை எனும்போது நீங்கள் அவர்களுக்கு ஏற்றமாதிரி மாறுவதுதான் நிம்மதியைக் கொடுக்கும். அவர்கள் வீட்டுப் பக்கம் கிளைகள் எதுவும் போகாமல் பார்த்துக்கொண்டால் பிரச்னை தீரும் என்று நினைக்கிறேன்.

விமர்சகர் ஞாநி:  //பக்கத்து வீட்டில் இருப்பவர்களுடன் எங்களுக்கு பல ஆண்டுகளாக பேச்சு வார்த்தை இல்லை. ஒரு வகையில் அது நிம்மதியும் கூட... (வேண்டுமெனில் அதைப் பொதுவில் எழுதவும் தயங்க மாட்டேன்.)// இதுதான் கிருஷ்ணபிரபு மற்றும் அவர் குடும்பத்தாரின் மனநிலை. இவர்களுக்கு பொது மனிதர், சான்றோர், பெரியவர்கள் எதுவும் உதவமுடியாது. போலீஸ்தான் சரி.

முத்துச்சாமி பழனியப்பன்: நீங்களே ஒரு ஆள் பிடித்து அவர்கள் வீட்டுப் பக்கமாகப் போகும் மரக் கிளைகளை வெட்டி விடுங்கள், மரத்திற்கு எந்தப் பக்கம் வளர வேண்டும் என அவர்களுக்கும் தெரியாது தான், சண்டைக்கு இழுக்க வேண்டும் என முடிவான பிறகு நீங்கள் என்ன சொன்னாலும் கேட்க மாட்டார்கள், தயவு செய்து போலிசுக்கு போகவே வேண்டாம், சாட்சிக்காரன் கால்ல விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவதே மேல், முடிந்தால் பெரிய கயிறு வாங்கி மரத்தை உங்கள் வீட்டுப் பக்கமாக இழுத்துக் கட்டுங்கள், பெரிய மரமாக இருந்தால் வளையாது தான், ஆனால் இது அந்த முட்டாள்களுக்கு புரியாது, நாம சொல்றத கேட்கிறார்கள் என்ற நினைப்பு வந்து விடும், கிட்டத்தட்ட சின்னப் பசங்களை ஏமாத்துற டெக்னிக் தான் இது, அப்புறமா பக்கத்துக்கு வீட்டுகாரங்ககிட்ட சும்மா கூட ஒரு வாய்ப்பேச்சு இல்லாம இருந்தா இப்படியெல்லாம் வரத் தான் செய்யும்..யாராவது பேச முயற்சி பண்ணனும், எனக்கு என்ன சொல்றது ன்னு தெரியல


கிருஷ்ணபிரபு: நண்பர்களே பின்னூட்டத்திற்கு நன்றி.

என்னுடைய அண்ணன் சென்னை உயர்நீதி மன்றத்தில் வக்கீலாக இருக்கிறார். “போலீஸ், நீதிமன்றம்” என்று செல்வதில் எனக்குப் பிரச்சனையே இல்லை. 
என்னுடைய எண்ணம் என்னவெனில், செய்த தவறை அண்டை வீட்டார் உணர வேண்டும். அதற்காக மண்டையைக் குத்திக் கொண்டு யோசித்தேன்.

பின்புறத்தில் இருக்கும் சிறிய தோட்டத்திற்கு “சிரிடி பாபா தோட்டம்” என்று பெயர் சூட்ட இருக்கிறேன். அவர்கள் குப்பையைக் கொட்டும் இடத்தை ஆட்களை வைத்துச் சுத்தம் செய்து, அந்த இடத்தில் சினிமா போஸ்டர் போன்ற பெரிய சைஸ் ‘சிரிடி பாபா’வின் ஆளுயர போஸ்டரை நட்டு வைக்க இருக்கிறேன். 
அதைப் பற்றிய பதிவினை விரைவில் வலையேற்றுகிறேன்.

# போலீஸ், கேஸ் என்று போனாலும் அதே செலவுதானே.  

Saturday, October 6, 2012

இளம் ஓவியர் முகில்

தொழில்முறையாக MindFresh எத்தனையோ பயிலரங்குகளை ஏற்பாடு செய்தாலும், என்னுடைய மனதிற்கு நெருக்கமான பட்டறை என்றால் Flying Elephants தான். இந்த Package முழுக்க முழுக்க டீன் ஏஜ் வயதுடையோருக்கானது. துரு துருவென்று சேட்டை செய்யும் பனிரெண்டு வயது மாணவர்கள் முதல், தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கலென அழிட்சாட்யம் செய்யும் விடலைப் பருவத்தின் விளிம்பில் நிற்கும் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் வரை – எல்லா வகையினரையும் ஒன்றாக ஒரே இடத்தில் கட்டிப்போடுவது யார் ஒருவருக்குமே சிரமமான காரியம் தான். அதுவும் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை - நான்கு நாட்களுக்குத் தொடர்ந்து அவர்களுடைய கவனத்தைக் குவிக்கும்படி செய்யவேண்டும்.

நான்கு நாட்கள் தொடர்ந்து நடைபெறும் பயிலரங்கு என்பதால் காலாண்டு மற்றும் அரையாண்டு அல்லது முழு ஆண்டுப் பரீட்சை விடுமுறைகளில் தான் இந்தப் பட்டறையை ஏற்பாடு செய்ய முடியும். இதில் நுட்பமான இன்னொரு சிக்கலும் இருக்கிறது. வருடமெல்லாம் ‘படிப்ஸ் படிப்ஸ்’ என பள்ளிகள் வாட்டி வதைப்பதால், விடுமுறை நாட்களில் இதுபோன்ற இத்தியாதி பட்டறைகளுக்குக் குழந்தைகள் வரத் தயங்குவார்கள். அவர்களே விரும்பி வருவது மிகமிக அபூர்வம். பெற்றோர்கள் தான் வலுக்கட்டாயமாக கொண்டு வந்து சேர்ப்பார்கள். எந்தவித அழுத்தமும் இல்லாமல் விளையாடிக் களிக்க சிறுவர்கள் விரும்புவது இயல்புதானே.

முதல்நாள் காலையில் பெயர்களைச் சொல்லி பதிவு செய்யும் போது, குழந்தைகள் முகத்தைத் தொங்கப்போட்டுக் கொண்டு சோர்வுடன் இருப்பார்கள். பார்ப்பதற்கே ஹாஸ்யமாக இருக்கும். அவர்களை வயதிற்கு ஏற்றார்போல குழுவாகப் பிரித்து, ஓர் அலைவரிசையில் கொண்டு வந்து சேர்ப்பதற்குல்லாகவே முதல் நாள் சென்றுவிடும். அடுத்தடுத்த நாட்களில் குழந்தைகள் பட்டறையுடன் இரண்டறக் கலந்துவிடுவார்கள். கடைசி நாளில் பிரிவதற்கு மனமில்லாமல் கண்ணீர்விடும் குழந்தைகளும் உண்டு. இந்த முறையும் அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்ததாக சாது எனக்குத் தெரியப்படுத்தினான்.

“யாருடா அது!” என்று கேட்டேன்.

“அதான் கிருஷ்ணா... தினமலர் சப் எடிட்டர் சேதுவோட பையன்” என்றான்.
“ஓ முகிலா...!” என்றேன்.

(கண்ணாடி போட்டுக்கொண்டு, திருநீர் வைத்துள்ளவர் தான் ஓவியர் முகில் கிருஷ்ணா)

முகில் எனக்கு அறிமுகமானதே வித்யாசமாக இருந்தது. பட்டறையின் முதல்நாளில் ஒரு சிறுவன் என்னிடம் நெருங்கி “அங்கிள்! இந்தப் பையன் என்ன நோண்டிக்கிட்டே இருக்கான் அங்கிள்! அவனக் கொஞ்சம் சும்மா இருக்கச் சொல்லுங்க” என்றான் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு அருகிலிருந்தவனைக் காண்பித்து.

“ஏன்டா சும்மா அவன தொந்தரவு செய்யுற?” என்றேன்.

“அங்கிள்... சும்மா விளையாடுனா கூட இவன் செய்ங்குனு அழுவுறான் அங்கிள்...” என்றான்.

“அது எப்படிடா சும்மாவே செய்ங்குனு அழுவான்... நீ இந்த நாலு நாளும் என்ஜாய் பண்ணுடா தங்கம். ஆனா யாரையும் டிஸ்டப் பண்ணக்கூடாது... சரியா?” என்றேன்.

“ஓகே அங்கிள்” என்றான்.

“சரி போகட்டும் நீ என்னடா படிக்கிற?” என்றேன்.

“அங்கிள்... தயவுசெய்து கிண்டல் பண்ணமாட்டேன்னு சொல்லுங்க? அப்பதான்  எந்த கிளாஸ்னு சொல்லுவேன்” என்றான்.

“இது என்னாடா டீலிங்... சும்மா சொல்லுடான்னா?” என வாய்விட்டுச் சிரித்தேன்.

“நான் எட்டாவது படிக்கிறேன் அங்கிள்” என்றான். ஆனால், பார்ப்பதற்கு ஆறாவது படிப்பது போன்ற தோற்றத்தில் இருந்தான். தோற்றத்திற்கு ஏற்றதுபோல செம துருதுரு. PhoniX குழுவின்  பயிற்றுநர்களான ஷோபாவையும், சாதுவையும் இரண்டில் ஒன்று பார்த்துவிட்டான். முகிலின் தனித் திறமை எனில் ஓவியம் வரைதல். பயிற்சியின் இரண்டாம் நாளில் ஓர் ஓவியம் வரைந்து கொண்டு வந்திருந்தான். அதைப் பார்த்து நானும் (தினேஷ்)ஆதியும் வாய் பிளந்தோம்.

பயிலரங்கம் முடிந்து வீட்டிற்குத் திரும்பும் சமயத்தில் தான் முகில் கண்கலங்கியிருக்கிறான். அதைத்தான் சாது என்னிடம் தெரியப்படுத்தினான். அதற்கு மறுநாள் ஜெயா என்னை அழைத்தாள். “டேய்... அந்தப் பையன் முகில் ஒரு ட்ராயிங் பண்ணியிருக்காண்டா! எவ்வளோ... நல்லா வரஞ்சி(யி)ருக்காண்டா!” என்றாள்.

“வொர்க் ஷாப்-லையே பார்த்தேன் ஜெயா...” என்றேன்.

“டேய்... இது Flying Elephants கான்செப்ட வச்சி அவனோட கற்பனையை வரைஞ்சி அனுப்பிச்சி இருக்காண்டா!” என்றாள்.

“தயவு செய்து எனக்கு அனுப்பிவை ஜெயா! நானும் பார்க்குறேன்...” என்ற அடுத்த நொடி என்னுடைய மின்னஞ்சலில் அட்டாச்மென்ட் ஃபைல் வந்து சேர்ந்தது. அதில் பயிற்சி வகுப்பைப் பற்றிய முகிலின் சில வார்த்தைகளும் இருந்தன...


Thank you for giving such a nice opportunity for coaching.
The coaching was very useful to me.
Unlike school it was a different experience.
I learnt many new things.
I will apply these in my daily life.
HEARTILY THANKING YOU
-MUGIL KARTHICK

இணையம் சார்ந்த வேலையை விட்டதே இதுபோன்ற சிறுசிறு சந்தோஷங்களுக்காகத் தான். அதைப் பூரணமாக அனுபவிக்கிறேன். அடுத்த டீன் வொர்க் ஷாப் நடைபெற இருக்கும் டிசம்பர் மாதத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். யார் கண்டது! இதைப் படிக்கும் உங்களுடைய குழந்தைகளையும் ஒருவேளை அங்கு சந்திக்க நேரலாம். ஏதேனும் ஒரு கலைவடிவத்தில்...

அடுத்த பயிலரங்கின் விவரம்:


Start:December 27, 2012 8:00 am
End:December 30, 2012 5:00 pm
Organizer:MindFresh
Phone:98409 27660
Email:contact@mindfresh.in
Venue: IITM Research Park, Hall 3
Address: Taramani, Near Tidel Park, Chennai, Tamil Nadu, 600113, India
Link: www.mindfresh.in/event/flying-elephants

Thursday, October 4, 2012

திருடன் போலீஸ்


ராயப்பேட்டை பென்ஷன் ஆபீசுக்குப் போய்விட்டு, அங்கிருந்து அங்கிள்-ஐ சந்திக்க  கீழ்ப்பாக்கம் சென்றிருந்தேன். இன்றைய தினம் பகல் நேரத்தில் கொளுத்திய வெயிலைச் சொல்லிமாளாது. ஆட்டோவில் திரும்பிக் கொண்டிருந்தபோது அங்கிள் சொன்னார்.

“ரெண்டு பெரிய வேலய இன்னிக்கி முடிட்சிட்டப்பா. நீ இல்லன்னா ரொம்ப கஷ்டப்பட்டிருப்பேன்பா. நீ நல்லா இருக்கணும்.”

ஒவ்வொரு மாதமும் அந்த இரண்டு வேலையை முடித்துவிட்டுத் திரும்பும்  பொழுதும் இதே வார்த்தைகளை அங்கிள் சொல்லுவார். பெரிதாக ஒன்றும் இல்லை. ATM-ல் இருந்து அவர் கேட்கும் தொகையை எடுத்துக் கொடுப்பேன். அப்படியே சூப்பர் மார்கெட் சென்று வீட்டிற்குத் தேவையான மளிகைப் பொருட்களை வாங்கி வருவோம். ஹப்பா... எவ்வளவு கடினமான பணி. இதை முடித்துவிட்டுத் தான் அந்த பேருந்து நிலையத்திற்குச் சென்றிருந்தேன்.
கோயம்பேடு பிளாட்ஃபா(ர்)ம் ஒரு பார்வையில் ஆங்கில எழுத்து “E வடிவில் இருக்கும். எப்பொழுது அங்கு சென்றாலும் அந்த “E வடிவை நான்கு முறையாவது சுற்றி வருவேன். நடைப் பயிற்சிக்கு நடைப் பயிற்சியும் ஆச்சு, பொழுதுக்குப் பொழுதும் போகும் இல்லையா?


நேற்றைய தினமும் அப்படித்தான் நடந்து கொண்டிருந்தேன். எனக்கே தெரியாமல் அந்த போலீஸ் என்னை பின் தொடர்ந்திருக்கிறார். ஒரு புள்ளியில் என்னை மடக்கி விசாரிக்க ஆரம்பித்தார்.

“நீ எந்த ஊருக்குப் போகணும்? நீ இங்க எப்ப வந்த?”

“நான் கும்மிடிபூண்டி செல்லும் வழியிலுள்ள கிராமத்துக்குப் போகணும். இங்க வந்து 2 மணி நேரம் ஆகுது...

“எங்க வேல செய்யுற?” என்றார்.

“வேல எதுவும் செய்யல. ராயப்பேட்டை பென்ஷன் ஆபீஸ் போயிட்டு ஊருக்குத் திரும்பி கொண்டிருக்கிறேன்.”

“அப்ப இங்க ஏன் ரொம்ப நேரமா சுத்திட்டு இருக்க? உன்ன கேமராவுல வாச் பண்ணிட்டாங்க! போலீஸ் ஸ்டேஷன்-கு கூட்டிட்டு வரச் சொல்லிட்டாங்க!” என்றார்
“சரி... வாங்க போகலாம்.”

“ப்ரூப் எதாச்சும் இருக்கா?” என்றார்.

“ஓ இருக்கே! இந்தாங்க என்னோட டிரைவிங் லைசென்ஸ். இதோ என்னோட வோட்டர்ஸ் ஐடி.”

“உன்னோட மொபைலைக் கொடு...” என்றதும் சற்றும் யோசிக்காமல் எடுத்துக் கொடுத்துவிட்டேன். அப்படியே “உன்ன பாத்தா சும்மா இருக்க மாதிரி தெரியலையே?” என்றார்.

“ஆமா... வீட்டில் இருந்தே வொர்க் பண்றேன். கொஞ்சம் தமிழில் எழுதுவேன்.”
“பைத்தியக்காரன் மாதிரி சுத்தச் சொல்லவே நெனச்சேன்... உங்களுக்கு எல்லாம் வெக்கமா இல்ல!? எவன் பின்னாடியாவது சுத்த வேண்டியது. அத அப்படியே எழுத வேண்டியது. இதுல உங்களுக்கு இன்னாயா கெடைக்குது. பல்லான மேட்டர்ல கூட உன்ன உட்கார வெக்க முடியும் தெரியுமா?”

அவ்வளோ எல்லாம் நான் வொர்த் இல்லை என்பதாக மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். நானும் போலீசும் நடந்து கொண்டிருந்தோம். ஸ்டேஷனுக்குத்தான் போகப் போகிறோம் என்று ஜாலியாகச் சென்று கொண்டிருந்தேன். காலியாக இருந்த பயணியர் இரும்பு இருக்கையில் உட்கார வைத்துக் கொண்டார்.

உன்னோட பேக்கில் (Bag) என்ன இருக்கு?என்றார்.

“ரெண்டு மூணு புத்தகங்கள்....” என்று அவரிடம் முதுகுப் பையை நீட்டினேன். உதாசீனமாக என்னைப் பார்த்தவர் “உங்களோட ரிலேஹான்ஸ் யாராவது வந்து தான் உங்களை கையெழுத்துப் போட்டுட்டு கூட்டிட்டுப் போகணும்” என்றார்.

“சரி என்னோட மொபைலைக் கொடுங்க என்னோட மருமகனை வரச் சொல்றேன்.”
“நீயே பொடிசு மாதிரி இருக்க?” என்றார்.

“சரி என்னோட அக்காவ வந்து கூட்டிட்டுப் போகச் சொல்றேன். இல்லன்னா என்னோட இன்னொரு கசின் வருவாரு...”

“எழுத்தாளர்னு சொல்ற... ஜர்னலிஸ்ட் யாரையும் தெரியாதா? அந்த வார்த்தைய சொல்லித் தானே மெரட்டுவிங்க...” என்றார்.

“ஓ... பாலபாரதியைத் தெரியுமே...! அவர வேனும்னாக் கூட கூப்புட்றேன்...” என்று சொல்லிவிட்டு, “பத்திரிகையாளராக அல்ல, ஓர் அண்ணனாக” என்பதை மனதில் நினைத்துக் கொண்டேன். அந்த போலீஸ் கடைந்தெடுத்த முட்டாள். நான் தமிழில் கொஞ்சம் எழுதுவேன் என்றுதானே சொன்னேன். ஜர்னலிஸ்ட் என்றா சொன்னேன். வார்த்தைகள்... வார்த்தைகள் ரொம்ப முக்கியம்.

சீருடைப் பணியாளர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. “சரி நீங்க போங்க...” என்று சொல்லிவிட்டு கைக்குட்டையை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டார். எனக்கும் முகமெல்லாம் வியர்த்திருந்தது. சட்டையால் முகத்தைத் துடைத்துக் கொண்டு நடக்கலானேன். 

# (மருமகன், ஜெயா, பாலபாரதி – இவங்க மூணு போரையும் போலீஸ் ஸ்டேஷனில் நிருத்தலாம்னு நெனச்சேன். ஜஸ்ட் மிஸ்...)

Wednesday, October 3, 2012

டீனேஜ் வொர்க் ஷாப்


கீர்த்தன்யாவின் நான்கு நாள் விடலைகள் பயிலரங்கிற்கு சென்னையின் பல பகுதிகளிலிருந்தும் – 12  வயது முதல் 17 வயது வரையுள்ள, கிட்டத்தட்ட 35 குழந்தைகள் வந்திருந்தனர். குழந்தைகளை கவனித்துக் கொள்ள அக்காவிடம் பகுதிநேர பயிற்றுனர்கள் (Coach) பலரும் இருக்கிறார்கள். குழந்தைகளைக் கண்காணிக்கும் பணியில் அமர்த்துபவர்களைப் பொறுத்தவரை அக்கா சமரசம் செய்துகொள்ளவே மாட்டாள். பொறுமைசாலிகளாகவும், கோவப் படாதவர்களாகவும், சமயோஜிதமாக நடந்து கொள்பவர்களாகவும் இருக்கவேண்டுமென எதிர் பார்ப்பாள். என்றாலும் சாதுவை அவர்களில் ஒருவராக வைத்துக் கொள்ளுமாறு நேரில் சந்திக்கும் ஒவ்வொரு தருணத்திலும் அக்காவை நச்சரித்துக் கொண்டிருந்தேன். முன்பொருமுறை சாது என்னிடம் பகிர்ந்ததுண்டு...

கிருஷ்ணா! எனக்கு 24 வயசாகுது. இது வரைக்கும் தொடர்ந்து 2 மணி நேரம் கூட ஒரே இடத்தில் உட்கார்ந்ததில்ல. “ஸ்கூல், காலேஜ், சினிமா தியேட்டர்” –ன்னு எல்லாத்துக்கும் இது பொருந்தும்  என்றான்.

சாதுவின் இயல்பைத் தெரிந்துதான் அக்காவிடம் பரிந்துரை செய்திருந்தேன். அக்கா, என்ன நினைத்தாளோ தெரியவில்லை! மறுப்பேதும் சொல்லாமல் சாதுவை எடுத்துக் கொண்டாள். பயிலரங்கின் மூன்றாம் நாளில் சாது மெல்ல என்னிடம் நெருங்கினான். “கிருஷ்ணா! எனக்குக் கடுப்பா இருக்கு! என்ன இங்க கொண்டுட்டு வந்து போட்டு ஏன் டார்ச்சர் பண்றிங்க!? என்னால முடியல!  இதுக்கு மேல ஒரு நிமிஷம் கூட பொருக்க முடியாது... இப்பவே...” என்று நற நறவென தாடைப் பற்களைக் கடிக்கப் போகிறான் என்றுதான் நினைத்தேன்.

மாறாக, “கிருஷ்ணா! ஐ லவ் திஸ் ஜாப்... ஐ லவ் திஸ் கிட்ஸ்” என காதோரம் கிசுகிசுத்துவிட்டு குழந்தைகளுடன் சேர்ந்து ‘Chamak Chalo’ சொல்லியவாறு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டான். வாண்டூஸ்களோ – இடுப்பை ஒடித்து வெட்டியவாறு, கால்களைத் தரையில் உதைத்து, கைகளைக் காற்றில் நீட்டி நடனமாடிக் கொண்டிருந்தனர். ஒருசிலர் கைகளையும், பின்புறத் தோளையும் பற்றி பனைமரம் போல அவனை பாவித்து ஏறிக் கொண்டிருந்தனர்.


வெளியில் நின்றிருந்த அக்காவிடம் “சாது எப்படி? ஓரளவிற்கு பரவாயில்லையா? உனக்கு சரியா இருப்பானா?” என்றவாறு பல கேள்விகளை எழுப்பினேன்.

“டேய் வீணாப்போனவனே!... MindFresh is not a place for me. It’s a perfect place for young kids. அவங்களுக்கு எது சரிப்பட்டு வருதோ – அத வச்சிக்க நான் தயங்கவே மாட்டேன். சாதுவிடம் ரொம்ப ஈஸியா கொழந்தைங்க SET ஆயிட்டாங்க... அதுக்கு மேல நான் முடிவெடுக்க என்ன இருக்கு...” என்றாள் பக்குவமாக. 

ஏழாவது படிக்கும் சிறுவன்/சிறுமி கூட “கீர்த்தன்யா... கீர்த்தன்யா...” என்று உரிமையுடன் ஏலம் போட்டுக்கொண்டு அக்காவைச் சுற்றிவரும் ரகசியம் இதுவாகத்தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். நான் சாதுவைச் சுட்டியவாறு நன்றிப் பெருக்குடன் அக்காவைப் பார்த்தேன். 

“டேய்... டேய்... ஓவர் ஆக்டிங் கொடுக்காத... ஒடம்புக்கு ஆகாது!” என்பதைப் போல நக்கலாகச் சிரித்துவிட்டு, கண்ணாடிக் கதவைத் திறந்துகொண்டு, குளிரூட்டப்பட்ட அறைக்குள் நுழைந்தாள். சக தோழியின் வருகையைக் கண்ட குழந்தைகளின் ஆரவாரக் குரல் ஒரே மூச்சில் வெளிப்பட்டு காதைப் பிளந்தது.

“கவனிக்கிறோம்” நண்பர்களுடனான சந்திப்பு ஏற்பாடாகியிருந்ததால், பட்டறையின் கடைசி நாளன்று குழந்தைகளுடன் பொழுதைக் கழிக்க முடியவில்லை என்பதில் மிகப் பெரிய வருத்தம். பின்னிரவில் சாதுவை செல்பேசியில் அழைத்தேன்.

“அடேய்... வொர்க் ஷாப் நல்லபடியா முடிஞ்சிதா?”

“அதை ஏன் கேக்குறீங்க கிருஷ்ணா!... சில கொழந்தைங்க அழுதுட்டாங்க...” என்றான்.

“ஏன்டா...? என்ன ஆச்சு?”
“Team -யும், Friends -யும் மிஸ் பண்றாங்க இல்ல... அதான்...!” என்றான்.

குழந்தைகளின் உலகம் அலாதியானது. அழுகையையும் சேர்த்துத் தான் சொல்கிறேன்.

:-( 

WebSite: www.mindfresh.in

Sunday, September 30, 2012

லவ் ஃபெய்லியர்

எனது முதல் காதல் அதுவாகத் தான் இருந்திருக்க வேண்டும். அக்கா ஜெயாவிடம் பகிர்ந்தபோது கொல்லெனச் சிரித்தாள். பத்தாம் வகுப்பில் படித்தபோது, என்னுடன் ஒன்றாக டியூஷன் படித்த நண்பனை பேருந்து பயணத்தில் தற்செயலாகச் சந்தித்தேன். அதுவும் பதினைந்து ஆண்டுகள் கழித்து. முதலில் அவன் தான் அடையாளம் கண்டு பேசினான். என்னை நெருங்கியவன் “நீங்க கிருஷ்ணபிரபு தானே” என்றான். 

“ஆமா நீங்க...” என்றேன். “நம்ம ரெண்டு பேரும் பத்தாவது படிக்கும் போது ஒரே டியூஷன்...” என்றான். 

“அப்போ எதுக்கு இந்த – ‘வாங்க போங்க’ – குப்பைகள் எல்லாம்” என்றேன்.

“உங்கள பாத்தா ‘டா’ போட தோனல. உங்க கூட ரொம்பப் பேசி பழகினது இல்லையே!” என்றான். 

“சரி... உன்னோட விருப்பம்... சொல்லு... எப்படி இருக்க?” 

“ம் ம் ம்... உங்களுக்கு ஞாபகம் இருக்கா?” என்றான். 

“எதப்பத்திடா கேக்குற?. “நம்ம டியூஷன்ல படிச்சாளே...? XYZ” என்று அந்தப் பெயரை உதிர்த்தபோது, அவனுடைய முகமெல்லாம் தண்ணீர் தெளித்த பூவைப்போல புத்தாக்கம் கண்டது. அடுத்த நொடியே வாடி வதங்கிய முகத்தைத் தொங்கப் போட்டான். 

“அடடே... வாழ்வில் காதல் தோல்வி கண்டவர்கள் எல்லாம் என்னைத் தேடி வந்து துன்புறுத்துவார்கள் போல” என்று நினைத்துக் கொண்டேன். கூடவே அந்தப் பெயரும், அவளுடைய முகமும் ஞாபகத்தில் வரவே இல்லை. “டேய்... நான் ஒரு உண்மை சொல்லணும்... என்னோட கிளாஸ்மேட்ஸ்சோட பேரு கூட ஞாபகத்தில் இல்ல. அவங்க எல்லாரோட முகம் கூட ஞாபகத்தில் இருந்து மறஞ்ஜிடுட்சி... நீங்க ரெண்டு பேரும் வேற செக்ஷனா இருப்பீங்கன்னு நெனைக்கிறேன்...” 

“ஆமாங்க...” என்றான். 

“சரி... இதுக்கு மேல நீ தான் சொல்லணும்” என்றேன். 

தயங்கி பேசத்தொடங்கியவன். “உங்களுக்குத் தெரியுமோ தெரியாதோ... எனக்கு டியூஷன் படிக்கறதுக்கு எல்லாம் விருப்பமே இல்லை. அவளுக்காகத் தான் டியூஷன் சேர்ந்தேன்...” என சுற்றி வளைத்தான். 

“ஐயோ...! இவன் எதுக்குத் தேவையில்லாம என்னைப் பொறாமைப் பட வெக்கிறான். ஒருவேளை நான் வாங்கிவந்த வரம் அப்படியோ!” என மைன்ட் வாய்சில் ஏதேதோ பேசிக்கொண்டேன். 

“பொண்ணுங்க செம கியூட் தெரியுமா! நான் அவ பின்னாடி சுத்தறத அவ கண்டுபிடிட்சிட்டா!... அதனால என்ன விட்டு வெலகி வெலகி போயிட்டு இருந்தா...” என்றதோடு “அதுக்கு மேல ஒரு விஷயம் இருக்கு...” என்றான்.

இங்க என்ன ட்விஸ்ட் வக்கப் போறானோ என்று நினைத்துக் கொண்டேன். “எங்கையாவது முக்குச் சந்துல நேருக்கு நேரா சந்திச்சி காதல சொல்லிட்டியா?” என்றேன். 

“விஷயம் அது இல்லங்க... xyz –க்கு உங்களைத் தான் ரொம்ப பிடிக்கும்... அவ உங்களைத் தான்...” என்று எதோ பினாத்திக் கொண்டிருந்தான். உடனே அவனை இடைமறித்து “இதென்ன வேடிக்கை, அவளோட மனசுல நான் இருந்தேன்னு உனக்கு எப்படித் தெரியும்...?” என்றேன். 

“நான் ஸ்கூல்ல படிச்சத விட அவல நோட்டம் விட்டதுதான் அதிகம். அவளோட ஒவ்வொரு அசைவும் எனக்கு அத்துப்படி... ஒரு பையன் ஒரு பொண்ண ஜூட் விட்றத எல்லாரும் கண்டு பிடிட்சிடலாம். ஆனா பொண்ணுங்க யார ஜூட் விட்றாங்கன்னு அவங்கள லவ் பன்றவங்களுக்குத் தான் நல்லா தெரியும்” என்றான். 

அடக் கடவுளே, எனக்கான காதல் எனக்கே தெரியாமல் உதிர்ந்திருக்கிறது. அதை வேறொருவன் வந்து தெரியப்படுத்திச் செல்கிறான். வேப்பம்பூவின் தேனை ருசித்தால் கொஞ்சம் கசப்பையும் உணர்ந்துத் தானே ஆகவேண்டும். இது என் வாழ்நாளின் பிட்டார் ஸ்வீட் எக்ஸ்பீரியன்ஸ். இனி நானும் லவ் ஃபெய்லியர் என்று இறுமாப்புடன் சொல்லிக்கொள்வேன். சக மனிதர்கள் நம்மை நேசிக்கிறார்கள் என்பதைவிட வேறெந்த ஒன்றும் வாழ்வை சிறப்பித்துவிடாது. 

“இதை அப்பவே சொல்லாம... இப்ப ஏன்டா எங்கிட்ட சொல்ற?” என்று நண்பனிடம் கேட்டேன். 

“அப்பல்லாம் உங்கள அடிக்கனும்னு கூட நெனட்சிருக்கேன். அவ்வளோ கடுப்புல இருந்தேன். அதான் உங்ககிட்ட நெருங்கிப் பழகல...” என்றான்.

“இப்போ அவ எங்க இருக்கா...?” 

“யாருக்குத் தெரியும்...!?...” என்று சொல்லிவிட்டுச் சிரித்தான். 

சிறகிலிருந்து பிரிந்த 
இறகு ஒன்று 
காற்றின் 
தீராத பக்கங்களில் 
ஒரு பறவையின் வாழ்வை 
எழுதிச் செல்கிறது...!

(இந்த மூணு புள்ளி... ஒரு ஆச்சர்யக் குறி மிக முக்கியம்...)

Monday, August 27, 2012

அடக் கடவுளே...!

சமீபத்தில், அண்ணன் பாலபாரதியை சந்திக்க புதிய தலைமுறை அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன். அலுவலகத்தின் இளம் (ஆண்) ஊழியர்கள் முதலாமாண்டு நிறைவு விழா கொண்டாட்டத் தோரணங்களைக் கட்டிக் கொண்டிருந்தனர். தொலைகாட்சி சேனல் ஆரம்பித்து இதற்குள் ஒரு வருடம் உருண்டோடி இருக்கிறது. சேனலின் வீச்சும் தான் அதற்கேற்ப வேகமாக வளர்ந்திருக்கிறது. அல்லோல கல்லோலப்பட்ட இடத்தின் கண்ணாடிச் சுவரின் ஓரத்தில் அமர்வதற்கு இருக்கை போட்டிருந்தார்கள். அதில் ஒரு வாடிய முகம் தென்பட்டது. கிராமிய முகம் என்பது கூடுதல் சிறப்பு. அவர் மட்டுமே அமர்ந்திருந்தார் என்பதை ஒரு தகவலுக்காக பதிய விரும்புகிறேன்.

அந்த நபரைப் பார்த்து "ஹாய்" என்றேன் குதூகலத்துடன். இதைச் சற்றும் எதிர்பார்க்காதவர் மலங்க மலங்க விழித்தார். "இங்க வேலை செய்யிறிங்களா?" என்றேன்.

"இல்லைங்க சார்... ஒருத்தர பார்க்க வந்தேன்." என்றார்.

"Oh yes.... சார் போட்டுக் கூப்பிடும் அளவிற்கு நான் பெரிய ஆல் இல்லை. என்னோட பேரு கிருஷ்ண பிரபு" என்றேன்.

"என் பேரு பிரபு" என்றார்.

போகட்டும் "யாரைப் பார்க்க வந்திங்க?" என்றேன் மேலும் பேச்சுக் கொடுக்க.

"எதோ ஒரு கட்டுரையைச் சுட்டிக் காட்டி..." அதை எழுதியவரைப் பார்க்க வந்தேன். "அதைப் பற்றிய தகவல்களைத் திரட்ட" என்றார்.

"கூகுளில் தேடி இருக்கலாமே. இவ்வளவு மெனக்கெட்டு வர வேண்டுமா" என்றேன்.

"அதெல்லாம் எனக்குத் தெரியாதே!" என்றார்.

என்னுடைய விசிடிங் கார்டை அவரிடம் கொடுத்துவிட்டு, "மெயில் அனுப்புங்கள். இது தொடர்பாக ஏதேனும் என் கண்ணில் பட்டால் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்" என்று சொல்லி முடிப்பதற்குள் பாலபாரதி வந்து சேர்ந்தார்.

பாலபாரதி குழந்தைகளைப் பற்றி ஆராயக் கூடியவர். ஆர்வமுடன் தகவல்களை சேகரிக்கக் கூடியவர். தன்முனைப்பு குறைபாடுடைய (ஆட்டிசம்) குழந்தைகள் சார்ந்து கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார். என்னுடைய சகோதரி கீர்த்தனா கிருஷ்ணமூர்த்தியும் கடந்த பல வருடங்களாக குழந்தைகள் மன நலம் சார்ந்து இயங்கி வருகிறார். பள்ளி மற்றும் கல்லூரியிலும் - மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மைன்ட் ட்ரைனர்-ஆக இருக்கிறார். பொதிகையில் அது சார்ந்த நிகழ்ச்சியையும் தொடர்ந்து செய்து வருகிறார். கனியமுதனைப் பற்றி பேசிக் கொண்டிருந்ததால் பேச்சு சுழன்று சுழன்று குழந்தைகளைப் பற்றியே சென்று கொண்டிருந்தது. மேலும் விரிவாகப் பேச கீர்த்தனாவுடன் அவரை ஒருநாள் வந்து சந்திப்பதாகக் கூறினேன்.

அண்ணனுடன் குஸ்தி விளையாடிக் கலைத்து, அங்கிருந்து புறப்பட எத்தனித்தேன். ஓவியர் மருது வந்துகொண்டிருந்தார். அவருக்கு எதிரில் சென்று சடுகுடுவில் ஆட்களை மடக்குவதுபோல அரண் அமைத்தேன்.

"வணக்கம் Mr. மருது, ஒரு நிமிடம் உங்களிடம் பேச வேண்டும்" என்றேன்.

"சொல்லுங்க" என்றார்.

"என்னுடைய நண்பர் இந்திய ஓவியங்களைப் பற்றிய, முக்கியமாக தமிழ் ஓவியங்களைப் பற்றிய புத்தகங்களைத் தேடிக் கொண்டிருக்கிறார். உங்களிடம் ஏதாவது பரிந்துரை செய்ய இருக்கிறதா?" என்றேன்.

"அப்படி எதுவும் இருக்க மாதிரி தெரியலை... விட்டல்ராவ் எழுதனது இப்போ கெடைக்கறது இல்ல" என்றார் வருத்தத்துடன்.

இனி பேச எதுவுமில்லை என்பதால், அவரிடமிருந்து விடைபெற்றேன். அங்கிருந்து புறப்படும் நேரத்தில் அந்த நபர் என்னைச் சீண்டினார். பாவப்பட்ட முகத்தை வைத்துக் கொண்டு "உங்களிடம் பேச வேண்டும்" என்றார்.

"சரியாப்போச்சு... உங்களைப் பார்த்தால் ரொம்ப கொழப்பத்துலயும், டெண்ஷன்லயும் இருக்க மாதிரி தெரிஞ்சுது. ஒருவேலை இன்டெர்வியூ-விற்கு வந்திருப்பிங்கலோ-ன்னு நெனச்சி தான் ரிலாக்ஸ் செய்ய பேச்சுக் கொடுத்தேன்... ஆனால், நீங்க கட்டுரையாளரத் தானே பார்க்க வந்திருக்கீங்க. என்கிட்டே பேச என்ன இருக்கு?" என்றேன்.

"நீங்களா தான எங்கிட்ட பேசினிங்க?" என்றார்.

"அட... நான் எந்த ஆபீசுக்கு போனாலும் ரிஷப்ஷனிஸ்ட் கிட்டக்கூட பேச மாட்டேன். இன்டர்வியூ-க்கு வந்திருக்க மாதிரி யாராச்சும் தெரிஞ்சாங்கனா... சும்மா பேச்சு கொடுத்து கொஞ்சம் டென்ஷனை கம்மி செய்வேன். அப்படி நெனட்சிதான் உங்ககிட்ட பேசினேன் " என்றேன்.

"நீங்க மொதல்ல சொன்னது ரொம்ப கரெக்ட்" என்றார்.

"நான் என்னங்க சொன்னேன்...?" என்றேன்.

"நான் ரொம்ப கொழப்பத்துல இருக்கேன்...என்ன பண்றதுன்னே தெரியல?" என்றார்.

இந்தச் சின்னப் பையனிடம் அப்படி என்ன பெருசாக பிரச்சனை இருக்கப்போகிறது என்று "சரி... உட்காருங்கள் இப்பொழுதே பேசி சரி செய்துவிடலாம்" என்றேன்.

"எங்கக் குடும்பம் ரொம்ப வருமையில இருக்காங்க. அக்காவுக்கு கல்யாணம் ஆயிடுச்சி. தம்பி வேலை செய்யுறான். அம்மா தான் எங்களை எல்லாம் காப்பாத்துனாங்க. பாருங்க நான் பண்ணண்டாவது (12th) வரைக்கும் ஃப்ரீ ஹாஸ்டல்ல தங்கி படிச்சேன். பாஸ் பண்ணிட்டு வேலைக்குப் போகலாம்னு தான் நெனச்சேன். படிச்ச ஸ்கூல்ல இருந்த டீச்சேர்ஸ் தான், நீ எஞ்சினியரிங் படின்னு சொன்னாங்க. எனக்கு என்னவோ வேலைக்குப் போகணும்னு தான் தோனுச்சி. ஒருத்தர் நான் படிக்க வக்கிறேன்னு சொன்னாரு. சரின்னு நானும் ஒரு பிரைவேட் காலேஜில சேர்ந்துட்டேன். ஒரு வருஷத்துக்கு மேல அவரால காசு கொடுக்க முடியலை. எதோ கஷ்டம்ம்னு பணம் கொடுக்கறத நிறுத்திட்டாரு.

இப்போ படிப்புக்காக காசு கொடுங்கன்னு யார்கிட்டயாவது கேக்க வேண்டி இருக்கு. எல்லாத்துக்கும் அடுத்தவங்ககிட்ட போய் நிக்க வேண்டி இருக்கேன்னு ரொம்ப கஷ்டமா இருக்கு. அதுவே மைன்ட் பிரஷரா இருக்கு... " என்றார்.

"ஓ மை காட்... நான் எச்சைக் கையால் ஈ ஓட்டத் தயங்குபவன். என்னிடம் ஏன் இந்த பச்சிளம் பாலகன் மடை திறந்த வெள்ளம் போல பேசுகிறான் என்று சுதாரித்தேன். மைன்ட் பிரஷ் - பற்றி பாலபாரதியிடம் பேசியதை பையன் கவனித்திருக்க வேண்டும். அதுதான் விஷயம். "சரிங்க பிரபு... என்னுடைய இ-மெயிலுக்கு உங்களுடைய பையோ டேட்டா அனுப்புங்க. நிச்சயமா உங்கள கூப்பிடுறேன். பாருங்க, நான் பணம் கொடுத்து உதவி செய்ய முடியாது. ஏன்னா, ஐ ஆம் ஜாப்லெஸ்... ஆனால் வேறு ஒரு வகையில் உங்களுக்கு உதவ முடியும்" என்றேன்.

"எனக்கு மட்டும் தான் Emotional Training கெடைக்கனுமா? என்ன மாதிரி ஹாஸ்டல்ல நெறைய பேர் இருக்காங்க... அவங்களுக்கும் கெடச்சா நல்லா இருக்கும்" என்றார்.

Btec இரண்டாம் வருடம் படிக்கும் அந்தச் சின்னப் பையனுக்கு எவ்வளோ நல்ல மனசு. ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதாக உறுதி கூறுகிறேன், அந்த வசதியை தனக்காக மட்டும் பயன்படுத்தாமல், தன்னைப் போன்ற இயலாமையில் இருக்கும் பலருக்கும் கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறான். இந்த சந்திப்பைப் பற்றி என்னுடைய அக்காவிடம் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

வலது கையால் கொடுப்பது இடது கைக்கு தெரியக் கூடாது என்பார்கள். இங்கு அப்படியா நடக்கிறது. அகரம் ஃபவுண்டேஷன் முதல் விஜய் டிவி வரை.... இவர்கள் எங்கள் தயாரிப்பு என்று தம்பட்டம் அடித்துக் கொள்வதிலேயே இருக்கிறார்கள். அந்தப் பிஞ்சு நெஞ்சங்களுக்கு எவ்வளவு வலிக்கும். இதை நாம் ரசித்து ரசித்து நெக்குருகி வரவேற்பறையில் உட்கார்ந்துகொண்டு பார்க்கிறோம். குழந்தைகளை அழவைக்கும், காயப்படுத்தும் எல்லா நிகழ்ச்சிகளையும் தடை செய்ய வேண்டும்.

நான் பகிர நினைப்பது, இதிலிருந்து முற்றிலும் முரணான ஒன்று. பிளஸ் 2 ரிசல்ட் வரும் சமயத்தில் கர்ண பரம்பரையில் பிறந்ததுபோல உதவி செய்கிறேன் என்று சொல்லிவிட வேண்டியது. பிறகு தன்னால் முடியவில்லை என்று விலக வேண்டியது. இதனால் குழந்தைகள் எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். பள்ளியோ, கல்லூரியோ - மாணவர்களுக்கு பண உதவியை விட, அன்பும், அரவணைப்பும் ஆறுதலும் தான் முக்கியம். அதை முதலில் கொடுக்க முடியுமா என்று பார்ப்பது நல்லது.

உதவி பெரும் மாணவர்களையும் குறை சொல்லித்தான் ஆகவேண்டும். முற்றிலும் ஒருவரை நம்பி வாழ்வது தவறுதானே. பகுதி நேரமாக ஏதேனும் வேலை செய்யலாம். என்னுடைய உறவினர்களில் பலரும் வெளிநாடு சென்று படிக்கும் பொழுது, அங்குள்ள சூப்பர் மார்கெட், பெட்ரோல் பங்க் போன்ற பகுதி நேர வேலையில் ஈடுபடுகிறார்கள். ஆனால் இந்தியாவில் இருக்கும் பொழுது தண்ணீர் குடித்த டம்ப்லரைக் கூட அருகிலுள்ள சிங்க்கில் கொண்டு வைக்கத் தயங்குவார்கள். இவர்களைத் தடுப்பதுதான் என்னவென்பது புரியவில்லை?

ஒருமுறை பயண கதியில், டாம்பீகமான வழிப்போக்கன் ஒருவனை சந்தித்தேன். என்னுடைய இருப்பு அவனை தொந்தரவு செய்திருக்க வேண்டும். அழுக்கடைந்த என்னுடைய உருவத்தைப் பார்த்து முகத்தைச் சுளித்துக்கொண்டே"வாட் ஆர் யு டூஇங்?" என தெனாவட்டாகக் கேட்டான்.

"இட்ஸ் நன் ஓஃப் யூவர் பிசினஸ்" - என்ற அதரப் பழசான சொலவடையில் கடந்து சென்றேன். நாட்டை ஆண்டால் என்ன? டேபிள் துடைத்தால் என்ன? வேலை செய்யும் நேரம் தவிர்த்து, மற்ற நேரங்களில் சாதாரண மனிதனாக வாழப் பழகினால் எல்லாமே கைகூடும். இதைத் தான் பள்ளிகள் கற்றுக் கொடுக்க வேண்டும். மாறாக போட்டி மனப்பான்மையையும், அமைதியின்மைக்கான சூழலையுமே தற்போதைய கல்விமுறை விதைத்துக் கொண்டு வருகிறது.

எத்தனை மாணவர்கள் தினம்தினம் குமுருகிறார்களோ!... அடக் கடவுளே...!

Tuesday, August 21, 2012

அகில இந்திய வானொலி

செல்ஃபோனுக்கு சிக்னல் கிடைக்காமல் முக்கியமான நேரங்களில் தவிக்க வேண்டி இருக்கிறது. அப்படியே கிடைத்தாலும் பாதியில் சிக்னல் ஜேம்-ஆகி பேச்சு தடைபடுகிறது. செல்பேசியில் வந்த நண்பர்களை மீண்டும் அழைக்கும்போது "எங்கு விட்டோம்? எதில் விட்டோம்?" -என்று யோசிப்பதற்குள் பேச வந்த விஷயம் மறந்து பிரக்ஞையானது அந்தரத்தில் தொங்குகிறது. இதுபோன்ற சமயங்களில் என்ன செய்வதென்றும் புரிவதில்லை!. மெசேஜ் அனுப்பலாம் என்றால் அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. ஐந்து குறுந்தகவலுக்கு மேல் (குறிப்பிட்ட காலம் வரை) அனுப்ப இயலாது என அரசு முட்டுக்கட்டை போட்டுள்ளது.

சுதந்திர தினத்தன்று, All India Radio வழங்கும் "மாத்தியோசி" நிகழ்ச்சியில் "நவீன தொழில் நுட்பம் நம்மை அடிமைப்படுத்துகிறதா?" என்பது பற்றி ஐந்து நிமிடங்கள் வருமாறு, உங்களுடைய கருத்துக்களை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று அதற்கு முந்தைய நாளே கவிஞர் ஆசைத்தம்பி சொல்லியிருந்தார்.

என்னுடைய நிலையை எடுத்துச் சொல்லி, "நேராக ஸ்டுடியோ வந்துட்றேன் ஆசை. ஐந்து நிமிடம் என்ன? அரைமணி நேரம் வேண்டுமானாலும் பேசத் தயார். அதுதான் நல்லதும் கூட. பாருங்கள்... இந்த ஐந்து நிமிட சம்பாஷணைக்குள் இரண்டுமுறை பேச்சு அறுபட்டுவிட்டது" என்றேன்.

"இல்லைங்க கிருஷ்ணா. சுதந்திர தினத்துக்கு லீவ் என்பதால் நாளைக்கு யாரும் ஆபீஸ் வரமாட்டாங்க. ஃபோன்லயே மேனேஜ் பண்ணிக்க முடியுமா?" என்றார். அதன் பிறகு நம் கையில் என்ன இருக்கிறது. எல்லாம் அவன் செயல் என்று நினைத்துக் கொண்டேன்.

மறுநாள் காலை, தனது நண்பர் குழாமுடன் ஜெயா கிராமத்திற்கு வந்திருந்தாள். விடுமுறை தினம் என்பதால் ஆந்திர எல்லைக்குச் சென்றுவர கிளம்பியிருப்பார்கள் என்றே நினைக்கிறேன். மழை பெய்ய வேண்டிய காலத்தில் தகிக்கும் வெயிலை இதற்கு முன் கண்டதில்லை. வந்தவர்களை வழியனுப்பிவிட்டு, பத்தரை மணிவாக்கில் தகிப்பின் அசதியைப் போக்க குட்டித் தூக்கம் போடச் சென்றேன். சரியாக ஒரு மணிக்கு செல்பேசி அதிர்ந்தது. அவர்களே தான்....

"வணக்கம். நான் கிருஷ்ணபிரபு. மைன்ட் ஃபிரஷ் - என்ற கம்பெனியின் relationship Manager ஆக பதவி வகிக்கிறேன்." என்று ஆரம்பிப்பதற்குள் "உங்களின் பேச்சு உடைகிறது" என்றார் எதிர் முனையில் தொடர்பு கொண்ட நண்பர். முத்திரை மோதிரத்தை வைத்துக்கொண்டு சீதையைத் தேடியலைந்த அனுமன் போல - மொபைல் ஃபோனைக் கையில் வைத்துக்கொண்டு சிக்னல் சரியுமிடம் தேடி அலைய நேர்ந்தது. மூன்று அடுக்குகள் கொண்ட கான்கிரீட் கட்டிடத்தின் மேல் தளத்திற்குச் சென்று ஓர் ஓரத்தில் ஒதுங்கினேன். வெயில் மண்டையைப் பிளந்தது.
"நவீன தொழில் நுட்பம் நம்மை அடிமைப்படுத்துகிறதா?" - என்றவுடன் கல்யாண்ஜியின் கவிதையொன்று தான் நினைவிற்கு வருகிறது...

கூண்டுக் கிளிகளின்
காதலில் பிறந்த
குஞ்சுப் பறவைக்கு
எப்படி முளைத்தன?
எதற்கு முளைத்தன?
"சிறகுகள்"

- என்று ஆரம்பித்துப் பேசினேன். காய், கனிகளை கல்லில் உடைத்து, தரையில் அடித்து சாப்பிட்ட காலம் மறைந்து, கத்தியால் அறுத்து சாப்பிட ஆரம்பித்ததே தொழில் நுட்பத்தின் வளர்ச்சி தான். ஒரு முனையில் இணையத்தின் மூலம் புரட்சி வெடிக்கிறது, அடுத்த முனையில் வெகுளிப் பெண்களின் வாழ்க்கை சீரழிகிறது. ஆகவே அறிவியல், விஞ்ஞான, தொழில்நுட்ப வளர்ச்சியானது மனித வாழ்வின் இன்றியமையாத அம்சம் என்ற சாதக, பாதக புரிதலுடனே அது சார்ந்த மாற்றுக் கருத்தையும் அணுக வேண்டியிருக்கிறது.

ரயில் பயணமா? பேருந்துப் பயணமா? விமானப் பயணமா? - எதுவாக இருப்பினும் உட்கார்ந்த இடத்தில் இருந்தவாறே முன்பதிவு செய்துவிடலாம். வார விடுமுறையில் சினிமா பார்க்க விரும்புகிறீர்களா அதையும் உட்கார்ந்த இடத்திலிருந்தே செய்துவிடலாம். பணப் பரிமாற்றங்கள் கூட இணையத்தின் மூலமே நடந்துவிடுகிறது. எதற்கும் சக மனிதர்களின் பிரயாசை தேவையில்லை. கடந்த இருபது ஆண்டுகளின் தொழில்நுட்ப வளர்ச்சி மனிதர்களை ஓர் இயந்திர கதியில் தான் நகர்த்திக் கொண்டிருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் இதன் சதவிகிதம் அதிகமோ அதிகம்.

ஏதேனும் ஓர் அலுவலகத்தில் நுழைய நேர்ந்தால், சுற்றிலும் கணினிகள். திரும்பும் இடமெல்லாம் மானிட்டர்கள். வேலை முடிந்து வெளியில் வந்தால் செல்ஃபோன். அதில் 'Texting, Radio Tuning, Listening songs, watching videos (Porn - என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை)' என செயல்படத் துவங்குகிறோம். பணத்தேவை எனில் ATM செல்கிறோம். திரையைத் தொட்டுத்தடவி பணத்தை எடுத்துக் கொள்கிறோம். வீட்டிற்கு வந்தால் தொலைகாட்சி என சட்டகத்தின் ஒளிரும் திரையில் (Monitor Screen) தான் நம்முடைய காலம் கழிகிறது. யாரும் பார்க்கவில்லை என்றாலும் தொலைக்காட்சி ஓடிக் கொண்டிருக்க வேண்டும் என்பது தான் நம்மவர்களின் விசேஷம் குணம். பெரியவர்கள் போலவே குழந்தைகளும் 'கம்பியூட்டர் கேம்ஸ், ப்ளே ஸ்டேஷன்ஸ்' என டிஜிட்டல் விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். சக மனிதர்களிடம் முகம் கொடுத்துப் பேசுவது இன்றுள்ள நிலையில் எல்லோர்க்கும் இரண்டாம் பட்சம் என்றாகிவிட்டது.
நவீன டிஜிட்டல் தொழில்நுட்பம் ஏற்படுத்தித் தரும் சிறப்பு வசதிகளை (Comfortable) பயன்படுத்திக் கொள்வதில் தவறே இல்லை. பணத்தையும் நேரத்தையும் அதன் மூலம் சேமிக்க முடியும் என்பதும் உண்மையே. ஆனால் மேலதிக சாதகமாகப் (advantage) பயன்படுத்தும் போதுதான் பிரச்சனை எழுகிறது. அந்தப் புள்ளியில் தான் அடிமைத்தனம் தொடங்குகிறது. "Internet, Mobile Phone, Digital video" போன்றவை நம்மைச் சிறைபடுத்தி வைத்திருக்கின்றது என்பது தான் உண்மை. சக மனிதர்களைக் காட்டிலும் சாதனங்களுடன் அதிகம் உறவாடுகிறோம். புன்சிரிப்பைக் காட்டிலும், ஸ்மைலியைத் தான் அதிகம் பயன்படுத்துகிறோம்.

கட்டற சுதந்திரத்தில் வாழ்வதாக நினைத்துக் கொண்டாலும், நவீன தொழில்நுட்ப சாதனங்களால் நாம் சிறைபட்டுத்தான் கிடக்கிறோம். கூண்டுக் கிளிகளுக்குப் பிறந்த பட்சியைப் போல. ஆகவே தான் கல்யாண்ஜியின் கவிதை ஞாபகத்திற்கு வந்தது என்று பேசி இருக்க வேண்டும். என முடிப்பதாக எண்ணம். உறக்கத்தில் இருந்து எழுந்ததால் யோசித்ததில் பாதியைத்தான் பேச முடிந்தது. மறுநாள் நிகழ்ச்சியைக் கேட்டபோது, சவுன்ட் எஞ்சினியர் நான் உளறியிருந்ததை - கத்தரித்து, வெட்டி, ஒட்டி ஒருவாறு சரி செய்திருந்தார். வெட்டுப்பட்டதில் தவறாக வாசித்த கல்யாண்ஜியின் கவிதையும் அடக்கம்.

டிஸ்கி: கவிதையை தப்பாக வாசித்தது, நண்பருடன் உரையாடி இணைப்பைத் துண்டித்த பிறகுதான் நினைவிற்கு வந்தது. அதற்குள் இரண்டுமுறை இணைப்பு துண்டித்தும், தடங்கல் ஏற்பட்டும் பேச நினைத்த விஷயத்தில் பாதிகூட பகிரவில்லை என்பது என்னளவில் வருத்தமே.

கூண்டுக் கிளிகளின்
காதலில் பிறந்த
குஞ்சுப் பறவைக்கு
எப்படி வந்தன?
எதற்கு வந்தன?
"சிறகுகள்"