Wednesday, December 25, 2013

ரஜினிக்கு ஒரு கடிதம்

ரஜினிக்கு,

நலம் தானே நண்பரே? நீங்கள் “இவன் வேற மாதிரி” படத்துக்கு எழுதியிருந்த கடிதத்தை, பிரபல தமிழ் நாளிதழ்களின் திரைப்பட விளம்பரப் பகுதியில் பார்க்க நேர்ந்தது. (22/12/2013 – தினகரன் & தினத்தந்தி நாளிதழ்). தனிப்பட்ட மடல்களில் ஆயிரம் பிழைகள் இருக்கலாம். அதெல்லாம் ஒரு விஷயமே இல்லை.

எழுத்துப் பிழைகள், ஒற்றுப் பிழைகள், வார்தை மற்றும் வாக்கியப் பிழைகளும் கூட இருக்கலாம். கடித எழுத்தில் இதெல்லாம் இயல்புதான். ஆனால், உங்களுடைய கடிதமானது பலகோடி ரசிகர்களின் கவனத்திற்குச் செல்லக் கூடிய ஒன்று. சமீப ஆண்டுகளில் திரைப்படங்களைப் பற்றி தாங்கள் எழுதிய பாராட்டுக் கடிதங்களை நாளிதழ் விளம்பரங்களிலும், திரைப்பட சுவரொட்டிகளிலும் நிறையவே பார்க்க முடிகிறது. எனினும் கவனம் கொண்டு வாசித்ததில்லை. ஆனால் மேற்படி குறிப்பிட்டுள்ள பிரபல நாளிதழ்களில் வெளியாகியிருந்த, “இவன் வேற மாதிரி” படத்தின் மடலை வாசிக்க நேர்ந்தது. அதில் சில விஷயங்கள் கண்ணில் பட்டன.

உதாரணமாக,

1. /-- படத்தை பார்த்தேன்--/ - என்ற வார்த்தைகளுக்கு இடையில் “ப்” சேர்ந்து “படத்தைப் பார்த்தேன்” என்பதாக வரவேண்டும்.

2. /--உட்ச்சகட்ட காட்ச்சிகள் பிரமிக்க வைக்கிறது--/ - என்ற வாக்கியத்திலும் பிழைகள் இருப்பதாகத் தோன்றுகிறது. உச்சகட்ட காட்சிகள் பிரம்மிக்க வைக்கிறது என்பது தான் சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது. மேலும் “பிரம்மிக்க வைக்கின்றன” என்றிருந்தால் இன்னும் கூட நன்றாக இருக்குமோ என்ற எண்ணமும் எழுகிறது.

3. போலவே, /-- இந்த படம் வெற்றிக்கு என் வாழ்த்துக்கள்--/ என்ற வாக்கியமும் தங்களது மடலின் கடைசி வரியாக அமைகிறது. இதுவும் கொஞ்சம் போல உதைக்கக் கூடிய வாக்கிய அமைப்புதான். “இந்தப் படம் வெற்றிபெற என்னுடைய வாழ்த்துக்கள்” அல்லது “இந்தப் படத்தின் வெற்றிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்” என்பது போல வாக்கியத்தை அமைத்திருந்தால் கோர்வையாகவும் அழகாகவும் இருந்திருக்கும்.

“இவன் இலக்கிய மாணவனாக இருப்பானோ?”, “மொழி ஆர்வலனோ?” என்பது போன்ற எண்ணங்கள் உங்களுக்கு எழலாம். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. வாசிப்பதில் மிகுந்த நாட்டம் உள்ளவன். அந்த வகையில் தான் தங்களின் கடிதத்தையும் வாசித்தேன். அதிலுள்ள ஒன்றிரண்டு அபிப்ராயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள நினைத்தேன். அவ்வளவே.

உங்களுடைய “Letter Pad” –ல் கைப்பட எழுதித் தரும் திரைப்படங்களைப் பற்றிய பாராட்டு வாசகங்கள் - ஸ்லோகங்கள் போல நாளிதழ்களிலும், திரைப்பட சுவரொட்டிகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. எனவே கொஞ்சம் போல கவனம் எடுத்து எச்சரிக்கையுடன் எழுதித் தரலாமே. முடிந்தால் ஓர் உதவியாளரின் துணைகொண்டு, கடிதத்திலுள்ள பிழைகளைத் திருத்தி உரிய நபர்களுக்கு அனுப்பி வைக்கலாமே. ஓர் அரங்கக் கலைஞனாக இருந்தவருக்கு, மேடை நாடக நடிகராக இருந்தவருக்கு பிழையற்ற மொழியின் முக்கியத்துவம் பற்றி சொல்லித் தெறிய வேண்டியது இல்லையே.

மடலின் வழியே உங்களுடன் பேசியதில் மிக்க மகிழ்ச்சி நண்பரே. இக்கடிதத்தை நேர்மறையாக அணுகி, நட்புடன் சகித்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

நன்றி.

அன்புடனும் நட்புடனும்,
கிருஷ்ணபிரபு

Friday, December 20, 2013

மாணவியை மிரட்டுவது ஞாயமா?


உப்பு சப்பில்லாத விஷயமாகத் தோன்றலாம். இதன் பின்னணியில் இருக்கும் மரபான உளவியல் அவசியம் களையப்பட வேண்டிய ஒன்று. ஆங்கிலேயர்களிடமிருந்து கடன் பெற்ற “
Sir, Madam” போன்ற வார்த்தைகளை – அரசு இயந்திர ஊழியர்களும், கல்வித்துறை ஊழியர்களும் பிடித்துக் கொண்டு விடாமல் தொங்கிக்கொண்டிருப்பதன் தாத்பர்யம் தான் எனக்கு இன்னும் விளங்கவில்லை. 

“யுவர் ஆனர், மை லார்ட்” – போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி என்னை அழைக்க வேண்டிய அவசியமில்லை. அதென்ன “யுவர் ஆனர், மை லார்ட்”? நீதிமன்றத்தில் எல்லோரும் சரிசமம். எனவே சாதாரணமாகவே வாதாடலாம். வேண்டுமெனில் “
Sir” என்ற வார்த்தையிப் பயன்படுத்துங்கள் என்கிறார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்ற நீதிநாயகம் சந்துரு.   

அம்பேத்கர் “மிஸ்டர், மிஸ், மிசர்ஸ்” என்ற அடைமொழியிட்டு பெயர் சொல்லியே எல்லோரையும் அழைக்கிறார். காந்திஜியை எல்லோரும் மகாத்மா என்றே அழைக்கிறார்கள். அம்பேத்கரோ “மிஸ்டர் காந்திஜி” என்றே ஒவ்வொருமுறையும் அழைக்கிறார். உச்சமாக “பூமியில் நிறைய மகாத்மாக்கள் பிறக்கிறார்கள். இறக்கவும் செய்கிறார்கள். ஆனால் தீண்டாமையால் ஒடுக்கப்படும் மக்களுக்கு அவர்களால் நல்லது எதுவும்  நடக்கவில்லை” என்கிறார். எல்லோராலும் மகாத்மா என்றழைக்கப்பட்ட ஒருவரை “மிஸ்டர் காந்தி... மிஸ்டர் காந்தி” என்றே இறுதிவரை அம்பேத்கர் அழைக்கிறார். அப்படியெனில் காந்தியை அம்பேத்கர் அவமானப் படுத்திவிட்டாரா? கலங்கப்படுத்திவிட்டாரா?

அம்பேத்கரின் வாழ்வில் சில விதிவிலக்குகளும் இருக்கின்றது. தன்னைப் படிக்க வைத்த பரோடா இளவரசரையும், பிறகு மேல்படிப்பு படிக்க, பத்திரிக்கை நடத்த என பல்வேறு உதவிகளை செய்த முற்போக்கான நவாப்பையும் “
Sir என்றே அழைக்கிறார். மற்ற எந்த ஒரு நபரையும் அவர் பெயர் சொல்லியே அழைக்கிறார். தனது பொருளாதார ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்த ஆங்கிலப் பேராசிரியரான வழிகாட்டியையும் கூட “மிஸ்டர் ...................” என்று பெயர் சொல்லியே அழைக்கிறார். 

சமீபத்தில் நான் படித்த கல்லூரியின் ஊழியர் ஒருவருக்கு, ஓர் இலக்கிய விழா சார்ந்த சந்தேகத்தை எழுப்பி – அதன் விவரம் தருமாறு கேட்டிருந்தேன். 

HI XYZ” என்று ஃபார்மலாக பெயருடன் “ஹாய்” சேர்த்து, பல கல்லூரிகளிலும்  ஏற்பாடாகியிருக்கும் ஓர் இலக்கிய விழா சார்ந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ள மின்னஞ்சல் (E-Mail) & முகநூல் உள்பெட்டித்  தகவலை (FB Message) – நான் படித்த கல்லூரியில் வேலை செய்யும், அந்த கல்லூரியின் விழா பொறுப்பினை ஏற்றிருக்கும் “XYZ” என்ற நபருக்கு அனுப்பியிருந்தேன்.

எனக்கான பதில் மின்னஞ்சல் வந்து சேரவே இல்லை. சரி அந்த “XYZ” மிகவும் பிசியான நபராக இருக்கக் கூடும் என்று நினைத்துக் கொண்டேன். (கல்லூரி விரிவுரையாளர்களுக்கும், பேராசியர்களுக்கும் இருக்கக் கூடிய மேலதிக வேலையைக் காட்டிலும் – இந்த பிரபஞ்சத்தில் வேறு யாருக்கு இருக்கக் கூடும்.)

விழா நடைபெற்ற நாளன்று அந்த கல்லூரிக்குச் சென்று நோட்டம் விட்டேன். மத்திய அரசின் வருடாந்திர பட்ஜெட் தயாரிக்கும் இடமான குவாரண்டம் போல, உச்ச பட்ச பாதுகாப்பில் விழா நடக்கும் அரங்கமானது இருந்தது. யாருக்கும் அனுமதி இல்லை என்றார்கள். கல்லூரி மாணவர்களுக்கும் கூட அனுமதி இல்லையாம். அவ்வளவு ஏன்? போட்டியில் கலந்துகொள்ளும் நபர்களைத் தவிர்த்து – கல்லூரியில் பயிலும் இலக்கியத் துறை மாணவர்களுக்கும் கூட அனுமதி இல்லை. கூத்து என்னவெனில் நடந்தது “கவிதை ஒப்பிக்கும் போட்டி”...!

இலக்கியம் பயிலும் மாணவர்களுக்கு பார்வையாளராக உட்கார அந்த இடத்தில்  அனுமதி இல்லை என்பது துருதிஷ்டம். போதிய இடவசதி இல்லை என்று சொல்லி சமாளிக்கலாம். கல்லூரி வளாகத்தில் திறந்தவெளி மேடை இருக்கிறதே...! அது எதற்கு...? 

சில துறையைச் சார்ந்த மாணவர்கள் தேர்வெழுதுகிறார்கள். அவர்களுக்குத் தொந்தரவாக இருக்கும் என்ற நொண்டிச் சாக்கைச் சொல்லலாம்...! அப்படியெனில், மாணவர்களுக்குத் தேர்வு நடக்கும் பொழுது, “எப்படி ஓர் இலக்கிய விழா ஏற்பாடாகியிருக்கிறது?”. மற்ற துறையைச் சேர்ந்த மாணவர்களுக்கு இலக்கியத்தில் ஆர்வம் இருக்காதா? ஒரு பல்கலைக் கழகம் இதையெல்லாம் யோசிக்காதா?. கவனத்தில் எடுத்துக் கொள்ளாதா? அல்லது கல்லூரி நிர்வாகம் தான் இதனை அவர்களுக்கு எடுத்துச் செல்லாதா? (நாற்பதுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பல்வேறு நிரல்களுடன் கூடிய இந்த இலக்கிய விழா நடக்கிறது. ஒரு பிரசித்திபெற்ற பல்கலைக்கழகமானது, சில தனியார் நிறுவனங்களுடன் இணைந்து நடத்தும் இதுபோன்ற சடங்கான விழாவினை ஆதாரத்துடன் கடுமையாக விமர்சனம் செய்து ஒரு பதிவினை எழுத வேண்டும் என்றிருக்கிறேன். அவகாசம் இருந்தால் அந்த விஷயங்களைப் பிறகு பார்க்கலாம்.)

“நல்ல விதி நேராகாகச் சென்றால், கோணல் விதி குறுக்கால் வருமாம்” என்பது போல, எதிரில் பழவேற்காடு மீனவ குப்பத்தைச் சேர்ந்த ஒரு தங்கை வந்துகொண்டிருந்தாள். பார்த்தும் பார்க்காதது போல முகத்தை வெட்டிக்கொண்டு சென்றவளை குரல் கொடுத்து அழைத்து பேசிக்கொண்டிருந்தேன். இதனை தூரத்திலிருந்த அந்த “
XYZ” என்ற நபர் பார்த்திருக்கக் கூடும் போல. நான் அங்கிருந்து கிளம்பியதும் தங்கையைத் தனியாக அழைத்து மிரட்டியிருக்கிறார்.

“உங்கூட பேசிக்கினு இருந்தாருள்ள... அவரு எனக்கு
HI  XYZ-ன்னு ஃபேஸ் புக்குல - எம்பேரச் சொல்லி எப்படி மெசேஜ் அனுப்பலாம்?. அந்த மாதிரி இனிமே அவர், என் பெயரைச் சொல்லி மேசேஜ் பன்னினாருன்னா நான் உன்ன சும்மா விடமாட்டேன்.” என்று உடன் வேலை செய்யும் பல ஆசிரியர்களுக்கு முன்னால் அந்தத் தங்கையை மிரட்டியிருக்கிறார். (தங்கையை மிரட்டியதற்கு ஆதாரம் இருக்குமாயின் நடந்திருக்கும் கதையே வேறு. அவள் தைரியத்துடன் பேசிவிட்டு வந்திருக்கிறாள் என்பதும் வேறு கதை.)

தங்கையைக் கூப்பிட்டு மிரட்டிய விஷயத்தை என்னுடைய காதில் ஒருவர் போட்டுவிட்டுச் சென்றார்.
தங்கை இளங்கலை படிக்கிறாள். அவளுக்கு முதலிரண்டு வருடத்தில் ஆங்கிலமும் பாடமாக வரும் (| & || Paper). அவளுடைய அண்ணன் கல்லூரிக்குச் சென்றிருந்தாலும்... இன்னும் பட்டம் வாங்கவில்லை. அவனுக்கு இன்னும் ஒன்றிரண்டு பாடத்தில் அரியர் இருக்கிறது. அந்த வகையில் இவள் தான் குடும்பத்தின் முதல் பட்டதாரி ஆகப் போகிறாள். கடற்கரை கிராமத்தைச் சேர்ந்த தலித் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணும் கூட.

எனக்கு எங்குமில்லாத கோவம் வந்துவிட்டது. மெயில் அனுப்பியது நான். முகநூலில் மெசேஜ் செய்ததும் நான். மிரட்ட வேண்டுமெனில் என்னை மிரட்டி இருக்கலாம். கேட்க வேண்டுமெனில் என்னிடம் நேரடியாகவே அதை பற்றிக் கேட்டிருக்கலாம். மின்னஞ்சலில் தனது அதிருப்தியை குறிப்பிட்டு, விமர்சனம் செய்து மின்னஞ்சல் அனுப்பி இருக்கலாம். அதை விட்டுவிட்டு, இந்த விஷயத்தில் சம்மந்தமே இல்லாத ஒரு மாணவியைக் கூப்பிட்டு மிரட்ட வேண்டிய அவசியம் தான் என்ன? எங்கிருந்து இதுபோன்ற குறுக்கு புத்தியும், பழிவாங்கும் மனப்பான்மையும் ஓர் ஆசிரியருக்கு வருகிறது? இந்த தைரியம் எப்படி அவர்களுக்கு வருகின்றது?

ஆகவே, கல்லூரி இருக்கும் பகுதியின் SFI President-ஐ அழைத்து என்னுடைய ஆதங்கத்தை மிக அழுத்தமாக பதிவு செய்தேன். கூடவே “Sir, Madam-ன்னு எல்லாம் இவங்கள எதுக்குக் கூப்பிடனும். அம்பேத்கரிடமிருந்து கடன்வாங்கிக் கொண்ட பெயரிட்டு அழைக்கும் முறைதான் என்னுடைய பழக்கமும் கூட. சம்மந்தமே இல்லாத விஷயத்திற்கு ஒரு மாணவி ஏன் தண்டிக்கப்படனும்? அவங்கள பேர் சொல்லி தான் கூப்பிட்டேன். ஆனால் மரியாதைக் குறைவாகவோ அல்லது தனிப்பட்ட தேவையில்லாத விஷயத்தையோ அவர்களிடம் எதுவும் பேசவில்லை. அதனால வர்ற பிரச்சனைய நான் பாத்துக்குறேன் தோழர். ஒன்றுமில்லாத விஷயத்திற்கு - என்னை வச்சி ஒரு மாணவிய பழி வாங்கறாங்கன்னா அத நீங்க தான் கவனிக்கணும்... ஒருத்தரை பிளாக்மெயில் பண்றதும், மிரட்டுவதும் சட்டப்படி தப்பு. சாட்சிகள் இருக்கும் பட்சத்தில் அந்த தங்கச்சிக்கு உங்க இயக்கம் சப்போர்ட் பண்ணணும் தோழர். ஒருவேளை சாட்சிகள் இல்லை எனினும் இந்த மாதிரி விஷயத்துக்கு எந்தவிதத்தில் தீர்வு காண்பது என்பதையும் யோசித்துப் பாருங்கள்.” என்றேன்.

“கண்டிப்பாங்க’ண்ணா...” என்றார் SFI President.

யாரேனும் நம்மைப் பெயர் சொல்லி அழைத்தால் அதனை அவமானமாகக் கருத வேண்டுமா? இந்தியர்களின் ஆன்மாவுடன் Sir, Madam போன்ற வார்த்தைகள் இரண்டறக் கலந்துவிட்டது போல. இந்த வார்த்தைகளைக் காதால் கேட்டு உச்சி குளிர்வதில் தான் இவர்களது ஜென்மப் பிறவியே இருக்கிறது போல. “வா, போ, வாடி, போடி, வாடா, போடா...” என்று ஒருமையில் அழைப்பது தவறு. பெயர் சொல்லியும், பெயருடன் “வாங்க போங்க” என்று அழைப்பது எந்த விதத்தில் மரியாதைக் குறைவான காரியம் என்றே புரியவில்லை.

பேராசிரியர் அ. மார்க்ஸ், (மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக) தமிழ் துறைப் பேராசிரியர் அ. ராமசாமி, நாடகத் துறைப் பேராசிரியர் மு. ராமசாமி, பேராசிரியர் (வெங்கடா)சலபதி, மனிதவளத் துறைப் பேராசிரியர் ஸ்ரீனிவாசன், பேராசிரியர் பெருமாள் முருகன், ஆங்கிலத் துறைப் பேராசிரியை மங்கை, ஓய்வுபெற்ற பேராசிரியர்கள் ரத்னவேல், முனைவர் ராமகுருனாதன், முனைவர் திருப்பூர் கிருஷ்ணன் போன்ற பலரையும் கூட பெயர் சொல்லி கூப்பிட்டுப் பேசியிருக்கிறேன். ஒருவரும் முகம் சுழித்ததில்லை. அருவருப்பாகப் பார்த்ததில்லை. வாஞ்சையுடன் மட்டுமே பேசியிருகிறார்கள். அடுத்தடுத்த சந்திப்புகளிலும் அன்புடன் அனுகியிருக்கிறார்கள். வழி நடத்தியும் இருக்கிறார்கள். இவர்களில் பலரும் “நவீன படைப்பிலக்கியம், விமர்சனம், கட்டுரை, நாடகம்” என பல வடிவங்களில் வளமான பங்களிப்பை மொழிக்குச் செய்திருக்கிறார்கள். அந்தந்த துறைகளில் பழம் தின்று கொட்டையைப் போட்டவர்கள் என்பதும் முக்கியமான விஷயம்.
நேரடியாகக் கூப்பிட்டு என்னிடம் பேசியிருந்தால் அதற்கு மரியாதையாகவும் பணிவுடனும் விளக்கமளித்திருப்பேன். தரம்கெட்ட முறையில் ஒரு மாணவியைத் தனியாகக் கூப்பிட்டு மிரட்டிய ஓர் ஆசிரியரை விட்டுவிட முடியுமா? அப்படி மிரட்டியதை அந்த துறையைச் சேர்ந்த மற்ற ஆசிரியர்களும் பார்த்துக்கொண்டு எதிர்வினையாற்றாமல் இருந்திருகிறார்கள். படமெடுக்கும் நாகத்தின் படர்ந்த தலையில் நின்றுகொண்டு நர்த்தனம் ஆடுவதுதான் திருவிளையாடலா என்ன? மரபில் ஊறித் திளைக்கும் மனிதர்களுக்கு எதிராக - மாற்றத்தின் குறியீடாகவும், நவீனத்தின் அடையாளமாகவும் வாழ்வின் போக்கில் சில எதிர்வினைகளை ஆற்றுவதும் திருவிளையாடல் தானே...! அதைத் தான் செய்யலாம் என்றிருக்கிறேன்.

இனி என்னுடைய நக்கலும் நையாண்டியுமான திருவிளையாடல் ஆரம்பமாக இருக்கிறது. அதே கல்லூரியில் அடுத்து நடக்கவிருக்கும், அதே இலக்கிய விழாவின் மற்றொரு நிகழ்வைப் பற்றிய சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ள, பிரசித்தி பெற்ற பல்கலைக்கழகம் விழாவினை நெறியாள்கை செய்யும் பொறுப்பினை ஒப்படைத்துள்ள அதே “
XYZ” என்ற நபருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்ப உத்தேசித்திருக்கிறேன். அந்த மின்னஞ்சலை இப்படி ஆரம்பித்தால் நன்றாக இருக்கும் தானே...!

Respected Prof XYZ,

Blah blah blah….
Blah blah blah…. Blah blah blah…. Blah blah blah….

With Humble,
Krishna Prabhu

மாணவியைக் கூப்பிட்டு மிரட்டிய விஷயம் என்னுடைய காதிற்கு வந்துவிட்டது என்பதை சூசகமாக உணர்த்த வேறு வழியில்லையே...! மேற்கண்ட மின்னஞ்சலைக் கண்டு மேன்மை பொருந்திய மாண்புமிகு ஸ்ரீலஸ்ரீ
“XYZ” அவர்கள் ஒற்றைக்காலில் நர்த்தனம் ஆடலாம். பதில் சொல்லும் விதமாக நானும் அந்தரத்தில் நடனம் ஆடலாம் என்றிருக்கிறேன். அதற்கும் மேல் கடவுள் விட்ட வழி... 

# ஒரு கல்லூரியின் பழைய மாணவனாக, அந்தக் கல்லூரியின் இலக்கிய விழாவில் பங்கெடுக்கும் உரிமை எனக்கிருக்கிறதா? இல்லையா?
என்று கேள்வி எழுப்ப நினைத்த எனக்கு “கல்லூரியில் பயிலும் இலக்கியத் துறை மாணவர்களே புறக்கணிக்கப் படுகிறார்கள்...” என்பது மலைப்பான விஷயமாக இருக்கிறது. மரபில் ஊறிய ஆசிரியையின் போக்கு அதனினும் மலைப்பாக இருக்கிறது.

மேலும் அட்டானமஸ் காலேஜ் என்பதால் உப்புசப்பான சமந்தமே இல்லாத விஷயத்திற்கெல்லாம் கூட மாணவர்கள் மிரட்டப்படுகிறார்கள் என்பது மேலதிக பதைப்பாக இருக்கின்றது.  
பழைமை ஊறிய கல்வித்துறையும், அந்த பழங்குட்டையில் ஊறிய பழைமைவாதி ஆசிரியர்களும் திருந்தவே மாட்டார்கள் போல.

அசுபம்... அமங்களம்...