Wednesday, October 8, 2014

பெருமாள்முருகன் - கேவலமான எழுத்தாளர்

பொக்கிஷம் புத்தக அங்காடியில் ஏற்பாடாகியிருந்த பெருமாள்முருகனின் மூன்று நாவல்களான “மாதொருபாகன், ஆளண்டாப் பட்சி, பூக்குழி” - மூன்று நாவல்களின் கலந்துரையாடல் நிகழ்வைத் தொகுத்து வழங்க மட்டுமே முதலில் நண்பர் தமிழ்மகன் கேட்டிருந்தார். போலவே, சில நிமிட வரவேற்புரையும் கொடுக்கலாம் என்று யோசித்து வைத்திருந்தோம். எதிர்பாராத விதமாக, “பூக்குழி” பற்றிப் பேச ஒத்துக்கொண்டிருந்த கவிஞர் ஒருவரால் நிகழ்விற்கு வரமுடியாத சூழ்நிலை. ஆகவே, அது பற்றியும் நானே பேச வேண்டிய சூழல் உருவாகிவிட்டது.

“மாதொருபாகன்” குறித்துப் பேச வந்திருந்த எழுத்தாளர் சுரேஷ் கண்ணனுடனும், “ஆளண்டாப் பட்சி” பற்றி பேச வந்திருந்த கவிஞர் வேல் கண்ணனுடனும் அளவலாவிக் கொண்டிருந்த சமயத்தில் ஜெயமோகனைப் பற்றிய பேச்சு வந்தது.

“அது ஏன்னே தெரியல... ஜெயமோகன எல்லாரும் அசால்ட் பண்றதுக்குத் தயங்கறதே இல்ல... எதுக்கெடுத்தாலும் அவரைத் திட்றாங்க...” என்றார்.

“ஏங்க... அவர திட்டாம இருந்தாத் தான் ஆச்சர்யம்... நானும் கூட அப்பப்ப ஜெயமோகன திட்டி எதையாச்சும் ஸ்டேடஸ் போடுறேன்... அவர் பேசுகிற விஷயங்களும் அப்படி இருக்கிறது.” என்றேன்.

“அதெல்லாம் தப்புங்க கிருஷ்ணா... இது என்ன மாதிரியான மனநிலை...?” என்று சுக கேட்டார்.

ஞாயமான கேள்விதான். கொஞ்சம் போல சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன். முதலில் “ஆளண்டாப் பட்சி”யைக் குறித்து வேல்கண்ணன் பேசும் பொழுது “கேவலம்” என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். இந்நாவலுக்குச் சமந்தமில்லாத வார்த்தை தான், இருப்பினும் கேவலம் என்ற வார்த்தையைத் தவறாகவே நிறைய இடங்களில் பயன்படுத்துகிறோம் என்கிற தகவலைப் பகிர்ந்துகொண்டார். அதற்கடுத்து பேச வந்த சுரேஷ்கண்ணன் “பெருமாள்முருகனை தொடர்ந்து மார்கெட்டிங் செய்கிறார் கிருஷ்ணபிரபு” என்று ஆரம்பித்தார். “ஷேக்ஸ்பியர், டால்ஸ்டாய், தஸ்தெவ்யெஸ்கி” என்று எஸ்ரா மூன்று மணிநேரம் உரையாற்றினால் – அது இலக்கிய சிறப்புரை. அதையே சாமானியன் செய்தால் “மார்கெட்டிங்கா?” எனக்குப் புரியவில்லை நண்பர்களே!.

இடைமறித்து நான் சொன்னேன்: “மார்கெட்டிங்னு மட்டுமே சொல்லாதீங்க... பி.ஆர்.ஓ-ன்னும் சேர்த்துச் சொல்லுங்க. ஒரு கௌறதையா இருக்குமில்ல.”

எனினும் மாதொருபாகன் பற்றிய கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட சுக, “இந்தப் புத்தகத்தை எல்லோரும் அவசியம் படிக்கணும். நாவலின் உள்ளடக்கத்தைப் பற்றிய விவாதத்தையும் நம் இலக்கிய சூழலில் முன்னெடுக்க வேண்டும். இதையெல்லாம் பற்றிப் பேசாமல் இருப்பது ஞாயமே இல்லை.” என்று, சில சினிமாக்களைத் தொடர்புபடுத்தியும், ஒப்புமை செய்தும் சுவாரஸ்யமாகவே தந்து கருத்துக்களை முன்வைத்துப் பேசினார்.


ஒரு கவிஞரின் அளவிற்கோ, ஓர் எழுத்தாளரின் அளவிற்கோ இலக்கியக் கூட்டங்களில் பங்கேற்றுப் பேசுவதற்கு வேண்டிய சரக்கு நம்மிடம் (என்னிடம்) இல்லை என்பது ஒரு விஷயம். அடிப்படையில் “மார்கெட்டிங் ப்ரஃபஷனல்” என்பதால் எதைப் பேசினாலும் உரையானது வியாபாரத் தன்மையில் அமைந்துவிடுவது இரண்டாவது விஷயம். மூன்றாவதாக நான் எங்கிருந்தாலும் – அதில் எனக்கும் பங்கிருப்பதாக நினைத்துக் கொள்கிறார்கள். சிலர் “கேணி கிருஷ்ண பிரபு” என்றும், சிலர் “காலச்சுவடு கிருஷ்ணபிரபு” என்றும் அழைப்பதைக் கேட்கும்பொழுது திகிலடைந்துப் போகிறேன். “நம்ம காத்து மாதிரி எல்லா எடத்துலயும் இருக்கறதுண்டு...” என்றாலும் யார் கேட்கிறார்கள்?

சினிமாவில் நிகில்முருகனைப் போல, இலக்கியத்தில் நாமும் ஒரு பொசிஷனை அடையவேண்டும் என்பதுதான் நம்முடைய (என்னுடைய) திட்டம் என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளுங்கள். பெருமாள்முருகனிடமிருந்து நிகில்முருகனுக்கு என்பதாக எமது (எனது) இலக்கியப் பயணம் அமைய வேண்டும். அதுபோல அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் நம்முடைய (எம்முடைய) திட்டமும் கூட. சரி போகட்டும்...

“பூக்குழி”யைக் குறித்துப் பேச எழுந்தபோது இப்படித்தான் எனது பேச்சை ஆரம்பித்தேன்:

“நான் பெருமள்முருகனைப் பற்றி நிறைய பேசுவதாகவும், மார்கெட்டிங் செய்வதாகவும் குறைபட்டுக் கொள்கிறார்கள். முருகன் எழுத ஆரம்பித்து – எழுதிக் கொண்டிருக்கும் இந்த இருபது வருடத்தில் நிறையவே அவரைப் பற்றிப் பேசி இருக்க வேண்டும். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. (காலச்சுவடு பதிப்பகத்தாரின் புத்தக வெளியீடு தவிர்த்த) பெருமாள் முருகனின் நாவல்கள் குறித்து சென்னையில் நடக்கும் முதல் நிகழ்வு இது என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், முருகன் குறித்து நான் நிறையவே பேசுவதாகச் சொல்கிறார்கள். ‘பெருமாள்முருகன் ஒரு கேவலமான எழுத்தாளர்’ என்பதால் அவரைப் பற்றிப் பேச என்ன இருக்கிறது? நடிகர் திலகம் சிவாஜியைப் பற்றியும், நாட்டியப் பேரொளி பத்மினியைப் பற்றியும் எழுத்தாளர் அ. முத்துலிங்கம் தனது கட்டுரையொன்றில் எழுதியிருந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டு, பூக்குழி நாவலைப் பற்றிக் குறைந்த தகவகளைப் பகிர்வதுடன், ஃபேன்ட்றி என்ற வட இந்தியத் திரைப்படத்துடன் தொடர்புபடுத்தி ஒருசில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டு திரும்பிச் செல்லலாம்” என்று நினைக்கிறன். (இந்த விஷயங்களை மிகச் சுருக்கமாகவே பேசினேன்.)

கடைசியாக “பூக்குழி, ஃபேன்ட்றி” போன்ற படைப்புகள் சாதிய அடுக்குகளின் கட்டுமான நிழலில், சாதிய வட்டத்தில் மௌனித்து வாழக் கூடிய என் போன்றவர்களின் மீது எறியப்படும் கற்கள். படைப்பாளிகளும், எழுத்தாளர்களும் வீசி எறியக்கூடிய இதுபோன்ற கலாப்பூர்வமான கற்களைக் கவனிக்க வேண்டிய அவசியம் முற்போக்கானவர்களைக் காட்டிலும், சாதிய அடுக்கில் விருப்பமில்லாமல் வாழும் நம் போன்றவர்களிடம் (என் போன்றவர்களிடம்) நிச்சயமாக இருக்க வேண்டும்.

சிவாஜி – பத்மினி காதல் விவகாரத்தையும், உரையில் தொட்டுப்பேசிய இதர விஷயங்களையும் விரிவாக ஏதேனும் இதழுக்கு எழுதலாம் என்றிருப்பதால், இந்தப் பதிவில் பூசி மொழுகி எழுதியிருக்கிறேன். ஆகவே, முழுப் பதிவிற்கும் கொஞ்சம் காத்திருங்கள்.

பெருமாள்முருகனைக் “கேவலமான எழுத்தாளர்” என்று சொல்லியிருந்தேன் இல்லையா? “கேவலம்” என்றால் “முழுமை” என்று அர்த்தமாம். கவிஞர் வேல்கண்ணன் இதனைத் தன் பேச்சில் பகிர்ந்துகொண்டர். “கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, அகராதிப் பதிப்பு, ஆய்வுக் கட்டுரைகள், தொகுப்புகள், பதிப்புகள்” எனக் கிளைவிரித்து – எழுத்தின் எல்லா அம்சங்களையும் தொட்டுப் பயணிக்கும் எழுத்தாளனை – “முழுமையான எழுத்தாளார்” என்று சொல்லாமல் வேறு யாரைச் சொல்வதாம்!. இன்னொரு விஷயத்தையும் சொல்லியே ஆகணும்:

“பெருமாள்முருகன் கேவலமான மனிதரும் கூட”

குறிப்பு: பெருமாள்முருகனின் படைப்புகளைத் தொடர்ந்து கிருஷ்ணபிரபு பேசிக் கொண்டிருக்கிறான் என்கிறார்கள். வரலாறு முக்கியம் நண்பர்களே...! எழுத்தாளர் கண்மணி குணசேகரன் – தான் பங்கேற்கும் எல்லா கூட்டங்களிலும் “பெருமாள்முருகன்” என்ற வார்த்தையை உச்சரிக்காமல் இருந்ததில்லை நண்பர்களே. ஆக, எனக்கு முன்னோடி “கண்மணி குணசேகரன்” என்பது குறிப்பிடத்தக்கது. கண்மணியின் குரல் என்னுடைய குரலிலிருந்து நிச்சயம் வித்தியாசப்படும். ஏனெனில் நானொரு “மார்கெட்டிங் ப்ரொபஷனல்”.

Tuesday, August 5, 2014

சக பயணியின் சிரிப்பு

சென்னைக்கு அவசரமாகச் செல்ல வேண்டிய சூழல். போகும் வழியில் உ. நா. அரசு கல்லூரித் தமிழ்த்துறை முதுநிலை மாணவரிடம் கொடுத்திருந்த இந்துகோபன் எழுதி, குளச்சல் மு யூசுப் மொழியாக்கம் செய்திருந்த “திருடன் மணியன்பிள்ளை” புத்தகத்தை வாங்கலாம் என்று சென்றிருந்தேன். கல்லூரியின் நுழைவாயில் கேட்டை இழுத்து மூடியிருந்தார்கள். ஏராளமான போலீஸ் பாதுகாப்பும் இருந்தது. காவலரிடம் சொன்னேன்:

“பாருங்க... என்னோட ஒரு புத்தகம் உள்ள இருக்குற மாணவரிடம் இருக்குது...! வாங்கிட்டுப் போகணும்...”

“அதெல்லாம் உள்ள விட முடியாதுங்க.” என்றார்.

“என்னங்க விஷயம்? ஏதாச்சும் பிரச்சனையா?” என்றேன்.

“அதெல்லாம் ஒன்னும் இல்ல... போயிட்டு ஒருவாரம் கழிச்சி வாங்க.” என்றார். அதே கல்லூரியில் படிக்கும் முதலாமாண்டு, இரண்டாமாண்டு மாணவர்களும் வெளியில் காத்திருந்தனர்.

“என்னப்பா விஷயம்...?” என்றேன்.

“காலேஜ் அட்மிஷன் பிரச்சனைங்க அண்ணா... லூசுப் பசங்க காலேஜ் படிக்கிற எங்களையும் உள்ளே விட மாட்டேன்றாங்க.” என்றான்.

நல்லக் கதையாகத் தான் இருக்குது என்று நினைத்துக் கொண்டு முதுநிலை மாணவரை செல்பேசியில் அழைத்தேன். அவரும் நுழைவாயிலுக்கு வந்துசேர்ந்தார். நண்பரின் கையிலிருந்த “திருடன் மணியன்பிள்ளை” என்ற புத்தகத்தின் முன்னட்டையைப் பார்த்த போலீஸ்காரர்கள் வாயைப் பிளந்துகொண்டு எங்களிருவரையும் நோட்டம் விட்டார்கள். போலீஸ்காரகள் அப்படிப் பார்த்தது எனக்கு ஜாலியாக இருந்தது. “ஒரு நிமிஷம் உங்க காதைக் கொடுங்களேன்” என்றார் முதுநிலை மாணவர். ஏதோ ரகசியம் சொல்வதுபோலக் கூறினார்:

“சில எடங்கள்ல செக்ஸ் படம் பார்த்தா மாதிரி பீலிங் இருந்துச்சி’ண்ணா இந்த புக்ல.”

“அடச் சீ... நாசமத்துப் போறவனே...!” என்றேன். இதற்கிடையில் என் கைக்கு மாறியிருந்த புத்தகத்தைப் பிடுங்கியவாறு ஒரு தோழர் கேட்டார்:

“இது என்ன புக்? நீங்க என்ன பண்றீங்க?”

“இது திருட்டுப் புத்தகம். நான் ப்ரீ லான்ஸ் ஜர்னலிஸ்ட். ஆமா... என்னை கேள்வி கேக்குறீங்களே... நீங்க யாரு?”

“நான் தமிழ்ல பிஎச்டி முடிச்சி இருக்கேன். வேலைக்காக ரெசியூம் கொடுக்கலாம்னு வந்தேன். உள்ளே விட மாட்டேன்றாங்க...!” என்றார்.

“அட நாசமத்துப் போறவங்களா...! காலேஜ்ல படிக்க அப்ளிகேஷன் போட்றவங்களையும் உள்ள விட மாட்டிங்க. வேலை கேட்டு வறவங்களையும் விட மாட்டிங்க. இங்கியே படிக்கிற பசங்களையும் உள்ள விட மாட்டிங்க. என்னை மாதிரிப் பொறுக்கித் தனமாகச் சுற்றுகிறவர்களையும் அனுமதிக்க மாட்டிங்க. நல்லா இருங்கடே...! இந்த காலேஜக் கட்ட இடம் கொடுத்தவரே எங்க தூரத்துச் சொந்தம் தான். வாழ்ந்து கெட்டவங்களுக்கு இது தாண்டா மரியாத” என்று அழாதக் குறையாக சென்னைக்குக் கிளம்பினேன்.

பீச் ஸ்டேஷன் செல்வதற்காக பூங்கா ரயில் நிலையத்தில் காத்திருந்தேன். என்னருகில் முதியவர் ஒருவர் உட்கார்ந்திருந்தார். நான்கு பேர் ஒரு ஸ்ட்ரெக்ச்சரில் பிணத்தைக் கருப்பு பாலித்தீன் கவரால் சுருட்டியவாறு பொட்டலம் கட்டிச் சுமந்துகொண்டு வந்தனர். சரியாக எங்களது இருக்கைக்குப் பின்னர் பிணத்தை வைத்துவிட்டுக் குமட்டுவது போன்ற உடல்மொழியை வெளிப்படுத்தி - வாந்தி எடுக்காத குறையாக தலையில் கையை வைத்துக்கொண்டு இங்குமங்கும் நடந்தனர். பிணத்தைச் சுமந்தவர்களில் மூன்று முதியவர்கள், ஒருவன் மட்டும் முப்பது வயதுக்குள் இருப்பவன்.

நாங்கள் அமர்ந்திருந்த இருக்கையின் அருகில் அந்த இளைஞன் வந்து அமர்வதற்கு இடம் கேட்டான். சாராய வாடையும், ஏதோ அழுகியது போன்ற சாக்கடை நாற்றமும் அவன் மீது வீசியது. போலீசார் தூரத்தில் நின்றுகொண்டிருந்தனர். உடனே நான் எழுந்துகொண்டு அவனிடம் கேள்வி கேட்டேன்:

“அச்சச்சோ... செத்துப் போனவரு வயசானவரா இளைஞரா...?”

என்னுடைய கேள்வியைக் காதில் வாங்காமல் “ஐயோ... நான் எப்படி சாப்புடுவேன்... என்னால நாத்தம் தாங்க முடியலையே...” என்று புலம்பினான். நான் அருகில் இருந்த பிணத்தைச் சுமந்து வந்த வயதானவரிடம் நகர்ந்தேன். அவரிடம் கேட்டேன்:

“அச்சச்சோ... செத்துப் போனவரு வயசானவரா இளைஞரா...?”

“யாருக்குத் தெரியும்... செத்து நாலுநாள் இருக்கும் போல... சாக்கடைத் தண்ணியிலையே இருந்திருக்குறான். இந்தப் பொணம் - கூவம் நாத்தம்... கூ( ) நாத்தம் அடிக்குதுடா சாமி... எவ பெத்த புள்ளன்னு தெரியலையே...” என்றார்.

தவித்துக் கொண்டிருந்த இளைஞனுக்குத் “தண்ணி வேணுமா...!” என்றார், ஆரம்பத்தில் என்னருகில் ரயிலுக்காகக் காத்திருந்த சக வயோதிகப் பயணி. “கொஞ்சம் இருந்தா கொடுங்க ஐயா...” என்றான் குமட்டலில் தவித்தவன்.

மஞ்சள் நிறத் தண்ணீர் பாட்டிலை இளைஞனிடம் நீட்டினார் சக பயணி. கொஞ்சம் போல வாயில் தண்ணீரை ஊற்றிக்கொண்டு, ஒரு மிடறுக்கு மேல் விழுங்க முடியாமல் தண்ணீர் பாட்டிலைத் திருப்பிக் கொடுத்தான் பிணத்தைச் சுமந்து வந்த இளைஞன்.

உடைந்த ஆங்கிலத்தில் நயமாக சக பயணியிடம் மிதமாகக் குரலில் கூறினேன்: “It’s not hygienic… You first throw it away” “You wanna me to make this guy to feel bad. I will not…” என்றவாறு மஞ்சள் நிறத் தண்ணீர் பாட்டிலின் மூடியைத் திருகி பைக்குள் வைத்துக்கொண்டார்.

“Oh no… I never meant like that… He touched a decomposed dead body without a proper hand GLOUZ I suppose. You please don’t misunderstand me.” என்று சால்ஜாப்புக் கூறினேன்.

சக பயணி லேசாகச் சிரித்தார். எனக்கு அவரைப் பார்த்துச் சிரிக்கத் தோன்றவில்லை. நம்மைக் குற்ற உணர்ச்சிக்கு உள்ளாக்கும் மனிதர்களைப் பார்த்து எப்படிச் சிரிப்பது?. எனினும், இந்த மனிதர் மிகமிக நல்ல மனிதர். இதுபோன்ற மனிதர்கள் நீண்டநாள் ஜீவித்திருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். எனினும், என் போன்று முகம் சுளிக்கும் மனிதர்கள் தானே உலகமெல்லாம் பல்கிப்பெருகி முளைத்திருக்கிறார்கள். கடற்கரை ரயில் நிலையத்திற்குச் சென்று, அங்கிருந்து எக்மோர் சென்று, வேலைகளையெல்லாம் முடித்துக் கொண்டு – அண்ணா சாலையிலுள்ள சாகித்ய அகாடமிக்குச் செல்ல பேருந்து நிலையத்தில் காத்திருந்தேன். பன்னிரண்டாவது படிக்கும் அடையாள அட்டையைக் கழுத்தில் சுமந்தவாறு மாணவர்கள் நான்கு பேர் பேசிக் கொண்டிருந்தனர். நல்ல ஆங்கிலப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள். ஒவ்வொரு வாக்கியத்தை ஆரம்பிக்கும்போதும் “ங்கோத்தா” என்ற வார்த்தையைப் பயன்படுத்தினர். நடுநடுவில் “பாடு, கூ.., சூ... பூ...” போன்ற வார்த்தைகளுக்குப் பஞ்சமில்லை. பக்கத்தில் என் போன்று பலரும் நின்று கொண்டிருந்தனர். எங்களை ஒரு பொருட்டாகவே அவர்கள் கருதவில்லை. தமிழிலுள்ள கெட்ட வார்த்தைகளைச் சரளமாக மாணவர்கள் பேசியது மிகுந்த சந்தோஷமாக இருந்தது. எனினும் அவர்களை டெஸ்ட் செய்தேன்.

“தம்பி... எஸ்.இ.ஐ.டி போகணும்... எந்த பஸ் போகும்?”

“23C-ல போகுங்க அண்ணா... அந்த பஸ் தான் போகும்...” என்று தன்மையான, மரியாதையான பதிலை நாகரீகமாகச் சொல்லிவிட்டு – அவர்களது உலகில் மீண்டும் ஐக்கியமாகினர். சாகித்ய அகாடமியிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு வந்தேன். பழைய கட்டிடத்தினுள் நுழைந்து புறநகர் ரயில் நிலையத்தை அடைய நினைத்து உள்ளே சென்றேன். துப்பாக்கியை ஏந்திய ஐம்பதுக்கும் மேற்பட்ட போலீசார் காவலுக்கு நின்றிருந்தனர்.

“ஒருக்கால் எவனாவது பாம் வச்சி வெடிக்கிறதுக்கு இருக்குதோ” என்று நினைத்துக் கொண்டேன். பயணப் பொதிகள் குவியலாகக் கிடக்க, அதைச் சுற்றிலும் சில நபர்கள் அமர்ந்திருந்தனர். ஒரு சிலர் உணவுப் பொட்டலத்தைப் பிரித்து வைத்துக்கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். சில நிமிடங்கள் அவர்களை நோட்டம் விட்டேன். அவர்களில் ஒருவர் கூட சிரிப்பதுபோலத் தெரியவில்லை. எனக்கோ ஒன்றும் புரியவில்லை!. போலீசாரிடம் விசாரித்தால் கையிலுள்ள மரக்கொம்பாலும், ஸ்டீல் குச்சியாலும் பின்புறத்தில் ஒன்று வைப்பார்கள். மெல்ல நகர்ந்து புத்தகக் கடையின் அருகிலிருந்த ஒருவரிடம் விசாரித்தேன்.

“எதுக்கு இவ்வளோ போலீஸ் இருக்குறாங்க? இவங்க எல்லாரும் யாரு?”

“ஏதோ அகதிகள்னு சொல்றாங்க... எங்க போறாங்கன்னு தெரியல” என்றார்.

“ஓ... சரி சரி...” என்று ரயிலைப் பிடிக்க ஓடினேன். ஒரு வேலை எக்மோர் புத்த விகாரத்திற்கு வந்திருந்த சிங்களப் பயணிகளாகவும் இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன். “அகதிகள்” என்ற வார்த்தையைக் கேட்டதும் தான் நாடே “இந்தியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தை மூட வேண்டும்” என்று கோஷம் எழுப்புவது ஞாபகத்திற்கு வந்தது. நான் சிட்டுபோலப் பறந்து ரயிலைப் பிடிக்க ஓடினேன். பயணத்தில் இதெல்லாம் நமக்கொரு வேடிக்கை. “பிறப்பது, சாப்பிடுவது, வளர்வது, படிப்பது, வேலைக்குச் செல்வது, போக்கிடம் தெரியாமல் உட்கார்ந்திருப்பது, மரணிப்பது” – இதுபோலத்தான் எல்லோரது வாழ்க்கையும் நகர்ந்து கொண்டிருகிறது. இதில் சில கைகுளுக்கல்களும், புன்னகைப் பரிமாற்றங்களும், உரையாடல்களும், உச்சிக்கொட்டல்களும்.

பூங்கா ரயில் நிலையத்தில் சக பயணி சிந்திய சிரிப்பு மனிதத்துவம் நிரம்பியது நண்பர்களே. இந்த மனிதம் தான் நம்மை முன்னோக்கி நகர்த்துகிறது. அடுத்தடுத்த தருணங்களில் முகம் தெரியாத மனிதர்களுடன் சேர்ந்து நம்பிக்கையுடன் நகர்வதுதானே வாழ்க்கை. வாக்குமூலம் போலச் சொல்ல நினைத்ததைச் சொல்லிவிட்டேன். இப்போதைக்கு வேறெதுவும் இல்லை. முதலில் இங்கிருந்து நகருங்கள்...! முடிந்தால் ஒரு புன்னகையைச் சிந்திவிட்டு...!

மேடையே வையகம் ஒரு மேடையே
வேசமே அங்கெல்லாம் வெறும் வேசமே
மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும்
நாம் கூத்தாடும் கூட்டமே

Thursday, July 31, 2014

மீண்டும் காலச்சுவடில்...

ஜூலை மாதத்தின் முதல் வாரத்தில் ஒருநாள், காலச்சுவடு கண்ணன் தனது சென்னை பயணத்தின்போது சந்திக்க வருமாறு நேரம் கொடுத்திருந்தார். உங்களுக்குத் தான் தெரியுமே சென்னையின் வாகன நெரிசல்கள் பற்றி...! குறித்த இடத்திற்குச் சென்று சேர்வதற்குள் அரைமணி நேரம் தாமதமாகிவிட்டது. கண்ணன் கேட்டார்:

“பிரபு... நீங்க எப்பவுமே இப்படித்தானா!?”

“ஆங்... எப்படி?” – இது நான்.

“சாவுக்கு ‘வா’-ன்னா. காரியத்துக்கு வராப்போல வந்து நிக்கிறது?” – என்று கேட்டார்.

“ஹாஃபன் அவர் லேட்டெல்லாம்... ஒரு லேட்டே இல்லிங்க கண்ணன்? நீங்க எந்தக் காலத்துல இருக்குறீங்க? எதுக்கு டயம் வேஸ்ட் பண்ணிக்கிட்டு... சரி விஷயத்துக்கு வாங்க...” – இது நான். (குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டக்கூடாது. அப்படியே ஓட்டினாலும் காண்பித்துக் கொள்ளக் கூடாது இல்லையா!)

“விஷயம் இதுதான். போன வருஷம் சென்னை புக் ஃபேர்ல காலச்சுவடு ஸ்டால்ல இருந்தீங்க இல்ல... ஆமா... அதே மாதிரி இந்த வருஷ சென்னை புக் ஃபேர்லயும் ஒரு அசைன்மென்ட் இருக்கு... நீங்க தான் பண்ணனும்...!”

“ஏங்க... புக் ஃபேர்க்கு இன்னும் ஆறு மாசம் இருக்குங்க...! நானெல்லாம் எக்ஸ்ஸாமுக்கே ஓவர்நைட்ல படிக்கிற ஆளு” என்றேன்.

“நானும் தான் கேலண்டர் பாக்குறேன்... எனக்கும் ஆறு மாத இடைவெளி இருப்பது தெரியும். அப்புறம்... எக்ஸ்சாம் எழுதுறது வேற... புத்தகம் விக்கிறது வேற” என்றார். போலவே, “எதிர் வரும் புத்தகச் சந்தையில் உங்களோட அசைன்மென்ட் பெரிதாக ஒன்றும் இல்லை. போன வருஷம் சுமார் ஆயிரம் யங் ரீடர்ஸ்’கிட்ட பேசினேன்னு பெருசா சொன்னீங்க இல்ல! அத எல்லோர் போலவும் நானும் நம்புறேன். ஆனா, அவங்கெல்லாம் மறுபடியும் காலச்சுவடு அரங்கிற்கு புத்தகம் வாங்க வறாங்களா? அதுல எவ்வளோ பேரு மறுபடியும் வறாங்க? உங்கள ஞாபகம் வச்சிருந்து உங்கக்கிட்ட மறுபடியும் பேசுறாங்களா? வேற ஏதாச்சும் புத்தகத்த ரெஃபர் பண்ணச் சொல்லிக் கேக்குறாங்களா?” அப்படி வரவங்க எந்தத் துறையில இருக்குறாங்க? என்பது போன்ற ஒரு டீடெயில் அனாலிசிஸ் ரிப்போர்ட் வேணும்” என்றார்.

எனக்குத் தலையைச் சுற்றியது. “இந்திய உளவுத்துறையும், இஸ்ரேலிய மொசாடும் உங்கக்கிட்ட கெட்டுது போங்க... இந்த மாதிரி ஒரு ரிப்போர்ட்ட டாக்டரேட் (PhD) பண்ற மார்கெட்டிங் ஸ்டூடன்ஸ் கூட (சிறப்பா சப்மிட்) பண்ண முடியாது. அப்படி இருக்கும் போது என்னால சாத்தியமா?” என்றேன்.

“ஆராய்ச்சிய பண்ணனும்னா எலிய வச்சித்தான் பண்ணனுமே தவிர, அறிவாளிய வச்சி இல்ல...!” என்றவாறு, இரண்டு கைகளையும் கோர்த்துக் கொண்டு – பின்னந்தலையில் வைத்தவாறு வானத்தைப் பார்த்துச் சிரித்தார். சமயத்தில், சுந்தர ராமசாமியும் இப்படித் தான் வானத்தைப் பார்த்துச் சிரிப்பாறாம். சீனியர் வாசகர்கள் பகிர்ந்து கொண்டதுண்டு. ஆனால், ஒரு யங் அஸ்பைரிங் டேலண்டை கிண்டலடிப்பாரா என்று தெரியவில்லை.

எனினும் கண்ணனுடைய பதிலிலும் ஞாயம் இருக்கிறது. அதற்கு மேல் நானென்னப் பேச. “ஆகட்டுங்க கண்ணன். நான் பரிசோதனை எலியாவே இருந்துட்டுப் போறேன். வேற ஏதாச்சும் சொல்லனுமா?” என்றேன்.

“வேற ஒன்னும் இல்ல... போயிட்டு வாங்க. நீங்க வேலை செய்யுற அழகைப் புத்தகசந்தையில பார்க்கலாம்” என்றார்.

“பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களும், வேலைக்குச் செல்லும் இளைஞர்களும் இலக்கியம் வாசிக்க விரும்புகிறார்களா? இலக்கியப் புத்தகங்களை வாங்கப் புத்தகச் சந்தைக்கு ஆர்வத்துடன் வருகிறார்களா? ஆம் எனில்...! தொடர்ந்து புத்தகம் வாங்க முன் வருகிறார்களா?” என்பது தான் காலச்சுவடு நிறுவனம் தெரிந்து கொள்ள நினைக்கும் விஷயம். ஒரு பதிப்பகம் இப்படிப்பட்ட விஷயங்களைத் தெரிந்துகொள்ள நினைப்பதும் நல்ல விஷயம் தானே...!

எல்லா காலங்களிலும் விலைபோகும் பண்டங்கள் என மூன்று விஷயங்களைப் பட்டியலிடலாம். அவையாவன, “காதல் (Love), காமம் (Sex), ஆன்மிகம் (Spiritual)” எனலாம். சுகி சிவம் எதைப் பேசினாலும் கேட்கிறார்கள். ஓஷோ எதைப் பேசினாலும் கேட்கிறார்கள். “நித்யானந்தா, பிரேமானந்தா” – என்று யார் பேசினாலும் வாய் பிளந்தவாறு கேட்கிறார்கள். அவர்களது சரக்கும் விலைபோகிறது. காதலும் காமமும் தான் காட்சி ஊடகங்களின் தலையாயப் பண்டங்கள். “காதல், காமம், ஆன்மிகம்” – இந்த மூன்றிலிருந்தும் வேறுபட்ட ஏதோ ஒரு பூடகமான விஷயமாகத் தான் படைப்பிலக்கியத்தை எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் இந்த மூன்றின் ரசபாஷக் கலப்பே இலக்கிய ஆக்கங்கள் என்பது மொழியை முக்கியப் பாடமாக எடுத்துப் படிக்கும் மாணவர்களுக்கே கூட தெரிவதில்லை. மொழிப்பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்கள் சராசரி மாணவர்களைக் காட்டிலும் மோசம்.

“புத்தகத்தைத் திறந்தாலே எனக்குத் தூக்கம் வருகிறது?” என்று நிறைய பேர் குறைபட்டுக் கொள்கிறார்கள். வாஸ்தவம் தான். முதல்முறை “கட்டிங்” அடிக்கும் போது குமட்டுகிறது. விஷம்போலக் கசக்கிறது. முதல் முறை “தம்” அடிக்கும் போது மூச்சை அடைக்கிறது. நெஞ்சிக்கூடு வெடிக்கிறது. பழகிய பின் இவற்றை விட முடிகிறதா? இவையில்லாமல் வாழ்க்கை இனிக்கிறதா? அதுபோலத் தான் புத்தக வாசிப்பும். “எனக்குத் தூக்கம் வருகிறது?” என்று சொல்லும் நண்பர்களுக்கு ஜெயகாந்தனின் “சுமைதாங்கி” என்ற சிறுகதையை வாசிக்கக் கொடுப்பேன்.

“அண்ணா...! இந்த சிறுகதய படிச்சது ஒரு ஷார்ட் ஃபிலிம் பார்த்தாப் போல இருக்குதே...! நம்ம இந்தக் கதைய ஷார்ட் ஃபிலிமா எடுக்கலாமா?” என்பார்கள்.

“சரி போயிட்டு இன்னொருவாட்டி வா...!” என்பேன். மறுபடியும் தேடி வரும்பொழுது “ஷார்ட் ஃபிலிம் எடுக்கலாம்னு சொன்னியே...!? ஆளையேக் காணோமே!” என்பேன்.

“ஆமா... ஆமா... நல்ல கதை’ங்கண்ணா... என்னால மறக்கவே முடியல...” என்பார்கள்.

“மொத முறையா படிச்ச இல்ல... அதான்... இந்தா இந்தக் கதையக் கொஞ்சம் படிச்சிப் பாரு...” என்று அதே ஜெயகாந்தனின் “தாம்பத்தியம்” என்ற சிறுகதையைக் கொடுத்துவிட்டு, “நீ...! பார்க் போயிருக்கியா?” என்று கேட்பேன்.

“இதென்னக் கேள்வி...?” என்பது போலச் சிரிப்பார்கள்.

கதையைப் படித்துவிட்டு “ஹே... இதுகூட சூப்பரா இருக்குது’ண்ணா...!” என்பார்கள்.

சுமைதாங்கி” – ஒரு சாலை விபத்தை மையமாகக் கொண்டது. “தாம்பத்யம்” – நடைபாதைத் தம்பதிகள் உடலுறவு கொள்ள முடியாமல் அல்லல்படும் கதையைக் கருவாகக் கொண்டது. ஆனால், இரண்டு கதைகளுமே அடுத்தது என்ன என்ற ஆர்வத்தைத் தூண்டும் கதைகள். “இந்தமாதிரி ஒரு நூறு ரைட்டர்ஸ் இருக்குறாங்க! ஆயிரமாயிரம் கதைகள் இருக்குது...! எல்லாத்தையும் ஷார்ட் ஃபிலிமா எடுக்க முடியுமா?” என்பேன்.

“ஓ... அப்பப்பக் கொடுன்னா படிக்கிறேன்.” என்பார்கள்.

“ஒரு ஷார்ட் ஃபிலிம் எடுக்க இதையெல்லாம் படிக்கணும்னு அவசியம் இல்ல. சினிமா(மொழி) வேற. இலக்கிய(மொழி)ம் வேற. சினிமாவுக்கு இலக்கியமும், இலக்கியத்துக்கு சினிமாவும் ஒரு வகையில வளமை சேர்க்கும். அத மொதல்ல புரிஞ்சிக்கனும்” என்பேன். இதெல்லாம் வேதாளத்தின் காதில் சங்கூதிய கணக்கு. அதது அததன் கழுத்தில் தொங்கத்தானே பிரியப்படும். பத்து பேரிடம் இப்படித் தொடர்பில் இருந்தால் ஆறு நண்பர்கள் ஓடிவிடுவார்கள். மீதி நான்குபேர் எதையேனும் வாசிக்கக் கேட்டுக் கொண்டே இருப்பார்கள். நமக்கு நான்கு பேர் போதும். விற்கும் விலைவாசியில் இந்த நான்கு பேருக்குத் தீனிப் போடவே நம்மால் ஆகாது.

நாவல்களைப் பொறுத்த அளவில் “பால்யகாலசகி, மதில்கள், என் பெயர் ராமசேஷன், உப்பு நாய்கள், ராமாவும் உமாவும், நாளை மற்றொரு நாளே” போன்ற நாவல்கள் தான் ஆரம்ப வாசகர்களின் ரசனைக்குத் தீனி போடுகிறது. இவையெல்லாம் உணர்வுகளைத் தூண்டி, வேறொரு கனவு நிலைக்குக் கொண்டுசெல்லும் படைப்புகள். “ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம், உண்மை கலந்த நாட்குறிப்பு, ஒற்றன், வெட்டுப்புலி, பிஞ்சுகள்” போன்ற நாவல்களையும் இந்தக் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம். இந்த நாவல்களைப் பரிந்துரை செய்த யாரும் என்னைத் திட்டியதில்லை. அதன்பின்னர் தான் கஷ்டகாலமே. “சாய்வு நாற்காலி, மீஸான் கற்கள், கூள மாதாரி, நிழல்முற்றம், மௌனத்தின் குரல், இரண்டாம் இடம், பருவம், என் பெயர் சிவப்பு, ஏழாம் உலகம், அஞ்சலை” போன்ற ஏதேனும் ஆக்கங்களைப் பரிந்துரைக்கும் போதுதான் பிரச்சனையே ஆரம்பமாகும். “அண்ணா...! இதெல்லாம் டஃப் லேங்குவேஜா இருக்குதுங்க’ண்ணா. ஒன்னும் புரியல...!” என்பார்கள்.

“தமிழ்ல தானே எழுதி இருக்காங்க. அதெப்படி புரியாம போகும்.” என்று கேட்பேன்.

“ஒரு அம்பது பக்கம் படி அந்த லேங்குவேஜ் உனக்குப் பழகிடும்” என்பேன். அது போலவே சிலருக்குக் கைகூடியும் இருக்கிறது. “அண்ணா. சில இடங்கள்ள அழுதுட்டே’ண்ணா” என்பார்கள்.

“அதெப்படி... லேங்குவேஜ் புரியாம அழுத?” என்று மடக்குவேன்.

“அப்புறம் அப்புறம்... புரிய ஆரம்பிச்சிடுச்சி’ண்ணா...” என்பார்கள்.

இப்படித்தான் நட்பு சூழ் உலகம் உருண்டு கொண்டிருகிறது. “மீசன் கற்கள்” – முதல் நூறு பக்கங்கள் தாண்டுவது கொஞ்சம் சிரமம் தான். அவ்வளவு கதாப்பாத்திரங்கள் இந்த நூறு பக்கங்களில் வருவார்கள். நமக்கு அன்னியப்பட்டக் கதையாக இருந்தாலும், வாசித்து முடிக்கும் போது இந்நாவல் நம்மைச் சுற்றிலும் நடக்கும் கதைபோல இருந்திருக்கும். “சாய்வு நாற்காலி” – ஒருவனது அகச்சிக்கலை முன்வைக்கும் கதை. எனினும், அவனுக்குள் நாம் பிரவேசித்திருப்போம்.

காலச்சுவடு போன்ற இலக்கிய ப்ராண்ட் வேல்யூ உள்ள, ஒர் அரங்கில் வாசக நண்பர்களைச் சந்திப்பதில் உள்ளூர என்றுமே மகிழ்ச்சி தான். அதுவும் முகம் தெரியாத வாசக நண்பர்களைச் சந்தித்துப் பேசுவதில் சொல்லமுடியாத சந்தோசம். அப்படி உரையாடும் வாய்ப்பு கிடைக்கும் போது – நான் விரும்பி வாசித்த படைப்புகளைப் பற்றி சின்னதாக ஒரு டெமோ கொடுப்பதில் என்ன குறைந்துவிடப் போகிறது.

கடந்த புத்தகக் கண்காட்சியில் “கவிஞர் சுகுமாரன், பெருமாள்முருகன், தோப்பில் முகமது மீரான், குளச்சல் மு யூசுப், ஜி குப்புசாமி, பி. ஏ. கிருஷ்ணன்” ஆகியோர் தான் என்னுடைய ப்ராடக்ட். ஆ. ரா. வேங்கடாசலபதியின் “அந்த காலத்தில் காப்பி இல்லை” என்ற புத்தகத்தையும் ஒரு புராடக்டாக எடுக்கத்தான் நினைத்திருந்தேன். ஆனால், கண்காட்சி முடிய இருக்கும் சமயத்தில் தான் புத்தகங்கள் அச்சாகி அரங்கிற்கு வந்து சேர்ந்தன. இங்கு தான் ஒரு தன்னிலை விளக்கம் தேவைப்படுகிறது. இந்தப் பட்டியலிலுள்ள எல்லோரும் என்னுடைய இணக்கமான நண்பர்கள் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பட்டியலில் ஒருசில பேராசிரியர்கள் கூட இருக்கிறார்கள். என் போன்ற சராசரிக்கும் கீழான மாணவர்களுக்கு எந்த ஆசிரியரைப் பிடிக்கும் சொல்லுங்கள்?

உண்மையில், கவிஞர் சுகுமாரனைத் தவிர மற்ற யாருடனும் அதற்கு முன்பு பேசிப் பழக்கமில்லை. கேணியிலும், புத்தக வெளியீடுகளிலும் இதர எழுத்தாளர்களில் ஒருசிலரை தூரத்திலிருந்து பார்த்ததுண்டு. ஒரு மின்னஞ்சலோ!, ஒரு பேச்சு வார்த்தையோ! ஹூஹூம்... எனினும், இவர்களது ஆக்கங்கள் எனக்கு நிறையவே பரிச்சியம். பெருமாள்முருகன் புத்தகச் சந்தைக்கு வந்து சேர்வதற்குள் “கூள மாதாரி, நிழல் முற்றம்” ஆகிய புத்தகங்களை விற்றுத் தீர்துவிட்டேன். சேலத்திலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருக்கையில் பத்தி’அண்ணா முருகனிடம் தொடர்புகொண்டு “உங்க ரெண்டு நாவலையும் கிருஷ்ணபிரபு வித்துத் தீத்துட்டு இருக்குறாரு...!” என்று சொல்லி இருக்கிறார்.

“அப்படியா...? யாரவரு...!” என்று முருகன் கேட்டிருக்கிறார்.

அதன் பிறகு பத்தியண்ணன் என்னிடம் கேட்டார்: “என்னங்க கிருஷ்ணா...! உங்கள பெருமாள்முருகனுக்குத் தெரியாதா?”

“ஹூஹூம்... அவர் கூட பேசினது இல்லைங்க அண்ணா” என்றேன்.

நாகம் அக்காவும், முத்த’ண்ணாவும் கவுன்டரில் அமர்ந்திருக்க “இந்தப் பையன் யாரு... இவ்வளோ எனர்ஜியா வொர்க் பண்றானே...!?” என்று ஆச்சர்யத்துடன் ஜி குப்புசாமி கேட்டிருக்கிறார். பி. ஏ. கிருஷ்ணன், ஆ. ரா. வேங்கடாச்சலாபதி போன்றோருக்கு கண்ணன் அறிமுகம் செய்துவைத்தார். “ஓ...” என்ற ஒலியுடனும், ஒரு சின்ன கைகுலுக்களுடனும் பரஸ்பரம் விலகிச் சென்றோம். இதில், “பெருமாள்முருகனை மட்டும் கொஞ்சம் போல தூக்கி வைத்துப் பேசுகிறீர்களே” என்று எல்லோரும் முறையிடுகிறார்கள்.

நான் புத்தகக் கண்காட்சியை ஒட்டி எழுதியிருந்த பதிவில் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தேன்: “என்னைப் பொறுத்த வரை இந்த வருஷம் பெருமாள் முருகனின் வருடம். போலவே ஜி குப்புசாமியின் வருடமும் கூட...”

காவியா பதிப்பகம் என்று நினைக்கிறேன். யாரோ ஒரு தோழர் பெருமாள்முருகனின் படைப்புகளை முனைவர் பட்டத்திற்காக ஆராய்ச்சி செய்து புத்தகமாக வெளிக்கொண்டு வந்திருக்கிறார். ஒழுங்கா படிச்சிருந்தா இந்த வேலையை நாம் செய்திருக்கலாமே என்று தோன்றும். ஆய்வை விட்டுத் தள்ளுங்கள். வைரமுத்துவின் நாவல்கள் கூட உன்னதமான படைப்புகள் என்று சொல்லி ஆய்வுகள் நடக்கிறது. ரசனையின் அடிப்படையில் என்று வைத்துப் பார்த்தாலும் கூட, முருகனின் படைப்புகள் அவசியம் விவாதிக்க வேண்டிய விஷயம். கொங்குமண் சார்ந்த அவ்வளவு விஷயங்கள் முருகனின் படைப்புகளில் கொட்டிக் கிடக்கின்றன.

இதோ...! மறுபடியும் ஒருமுறை புத்தகக் கண்காட்சியில் சேல்ஸ் மேனாக வேலை செய்ய காலச்சுவடு கண்ணன் அழைத்திருக்கிறார். இந்த வாய்ப்பைக் கொஞ்சமும் எதிர் பார்க்கவில்லை. உண்மையில் எந்த எழுத்தாளரைப் பற்றிய டெமோவையும் கொடுக்குமாறு என்னை அவர் பணிக்கவில்லை. கண்ணனுக்குத் தேவையானது – ஆய்வும், அதுசார்ந்த புள்ளிவிவரமும். அப்படியிருக்க மேலதிகமாக இந்த வாய்ப்பினை விருப்பப்படிப் பயன்படுத்திக் கொள்ளவே பிரியப்படுகிறேன்.

அடுத்த சந்தைக்கான டெமோ புத்தகங்களை இனிமேல் தான் தெரிவு செய்யவேண்டும். என்றாலும், முதல் பட்டியலில் “மாதொருபாகன், பனி, திருடன் மணியன்பிள்ளை, பச்சைவிரல்” ஆகிய நான்கு புத்தகங்கள் ஏற்கனவே இடம் பெற்றுவிட்டன.

“நீங்க என்ன கிபி இந்த வருஷமும் பெருமாள்முருகனோட புராணத்தைத் தான் புத்தகச் சந்தையில் பாடப் போறீங்களா?” என்று கேட்பது காதில் விழுகிறது. அதுதான் இல்லை. இன்னும் சில எழுத்தாளர்களும் இருக்கிறார்கள். அவர்கள் யாரென்பது சஸ்பென்ஸ்.

ஆக, புத்தகச் சந்தைக்குப் புதிதாக வருபவராக இருக்கலாம். ஏற்கனவே வந்தவராகவும் இருக்கலாம். நாம் சந்தித்து மகிழ்ச்சியுடன் உரையாடியும் இருக்கலாம். கடந்தமுறை பரிந்துரை செய்த புத்தகங்கள் உங்களுக்கு ஏற்புடையதாக இல்லாமலும் இருந்திருக்கலாம். ஆகவே, என்னுடன் சண்டையிட நீங்கள் பிரியப்படலாம்.

எதிர்வரும் ஜனவரி மாதப் புத்தகக் கண்காட்சியில் சந்தித்து, வேண்டிய மட்டும் உரையாட மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறேன். இயற்கை அதற்கான சாத்தியங்களை உருவாக்கித் தரும் என்றே நம்புகிறேன்.

கவுன்ட் டவுன் ஸ்டர்ட்ஸ் ஹியர்... 

Monday, July 28, 2014

C2H – சேரன் – எஸ்கேபி கருணா

ஓர் ஆங்கிலப் புத்தகத்தைப் பற்றிய குறிப்பை நீண்ட நாட்களுக்கு முன்பு தமிழில் படித்தேன். அதில் அமெரிக்கப் பொருட்களுடன் (Product Guide) வழங்கும் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் வாசகங்களைக் கிண்டலடித்திருந்தார்கள். குழந்தையை வைத்துத் தள்ளிக்கொண்டு செல்லும் வாகனத்துடன் விநியோகிக்கும் புத்தகத்தில் ஒரு குறிப்பு எழுதப்பட்டிருக்கிறது.

“குழந்தையை இதில் உட்காரவைத்து மடிக்கக் கூடாது.”

எந்த முட்டாளாவது அதுபோலச் செய்வார்களா? குழந்தையை உட்காரவைத்துத் தள்ளிக்கொண்டு செல்லும் வாகனத்தை, குழந்தை உட்கார்ந்திருக்கும் சமயம் நான்காக மடிப்பார்களா? அதுவும் மெத்தப் படித்தவர்கள் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் மேற்கத்தியர்கள் வாங்கும் பொருட்களில் இதுபோன்ற குறிப்புகள் தேவைதானா? என்பது போன்ற கேள்விகள் எழும். எனினும் ஒரு பொருளைப் பயன்படுத்தும் போது, “அதனை எப்படிப் பயன்படுத்த வேண்டும்!, எப்படிப் பயன்படுத்தக் கூடாது! பயன்படுத்தாமல் போனால் எப்படி அப்புறப்படுத்த வேண்டும்” என்பதை விளக்கமாகச் சொல்லிவிடுகிறார்கள். அதுதான் முக்கியம். நம்மிடம் இல்லாத விஷயமே இந்தப் பண்புதான். (இது போன்று பல பொருட்களிலுள்ள பயன்படுத்தும் முறையைப் பற்றிய குறிப்பை நக்கலடித்து எழுதப்பட்ட புத்தகம்.)

ஒரு வருடத்தில் சுமார் 300 தமிழ்த் திரைப்படங்கள் உருவாகிறது. அதில் ஐடல் வொர்ஷிப் படங்கள் என்று எடுத்துக்கொண்டால் பத்திலிருந்து பதினைந்து படங்கள் தேறும். இந்தக் குறைந்த எண்ணிகையில் அமைந்த படங்கள் இதர 95% தமிழ்த் திரைப்படங்களை காவு கொள்கின்றன. இந்த மிகுதியான 95% படங்களிலிருந்து “நல்ல படங்களும், ரசனையான படங்களும், கலாப் பூர்வமான படங்களும், கலைப் படங்களும்” தியேட்டர் கிடைக்காமல் முடங்கிவிடுகிறது. அப்படியே கிடைத்தாலும் ஒருவாரதிற்கு மேல் ஒடுவதற்கான கால அவகாசங்கள் கிடைப்பதில்லை. அப்படிப்பட்டத் திரைப்படங்களை மக்களுக்குக் கொண்டு செல்ல ஆசைப்படுகிறார் இயக்குனர் சேரன்.

சமீபத்தில் வெளியான ஒளிப்பதிவாளர் நடராஜன் மையப்பாத்திரம் ஏற்று நடித்திருந்த “சதுரங்க வேட்டை” திரைப்படமானது, சென்ற ஆண்டுகளில் வெளிவந்த ஜனரஞ்சகப் படங்களான “பீட்சா, சூது கவ்வும்” போன்ற படங்களை விடவும், “ஆரண்யகாண்டம்” போன்ற மேக்கிங் அளவில் முக்கியமாகக் கவனிக்கப்பட்டப் படங்களிலிருந்தும் சற்றே விலகிய “நல்ல முயற்சி” என்றே தோன்றுகிறது. எனினும் “வேலையில்லா(ப்) பட்டதாரி, திருமணம் எனும் நிக்காஹ்” போன்ற படங்களின் சுழலில் “சதுரங்க வேட்டை” தியேட்டரை விட்டுக் காணாமல் போனது.

“பீட்சா, சூது கவ்வும்” போன்ற படங்களுக்கும் இந்த நிலைமை ஏற்பட்டிருக்கலாம். அதிர்ஷ்டவசமாகத் தப்பித்துவிட்டது. உலகத் திரைப்பட விழாக்களிலும், சினிமா பயிற்சியாளர்கள் மற்றும் பழகுனர்களிடமும் “ஆரண்யகாண்டம்” - மிக நல்ல எதிர்வினையை ஏற்படுத்தியது. எனினும், இன்றுவரை அதன் குறுந்தகட்டை நம்மால் பெற முடியவில்லை. (தயாரிப்பாளர் – இயக்குனர் தரப்பு பனிப் போரின் காரணமாக படம் திரிசங்கு போலத் தொங்குகிறது என்கிறார்கள். உண்மை நிலை என்ன என்பது யாருக்குத் தெரியும்?)

கணித மேதை ராமானுஜன் வாழ்க்கையைச் சித்தரித்த “ராமானுஜன்” திரைப்படத்திற்குத் தமிழகத்தின் பல திரையரங்குகள் கிடைக்கவில்லை. “வெங்காயம்” திரைப்படத்திற்கும் கூட திரையரங்குகள் கிடைக்கவில்லை. இயக்குனர் சேரன் போராடி “வெங்காயம்” படத்தின் மீது ஓரளவிற்கு வெளிச்சம் பாய்ச்சினார். இதுபோல ஒவ்வொரு படத்திற்குமா போராடிக் கொண்டிருக்க முடியும். ஆகவே, “சினிமா டூ ஹோம் – C2H” திட்டத்தின் மூலம் “நல்ல, ரசனையான, முக்கியமான, ரசிக்கத்தக்க” திரைப்படங்களை - ரூபாய் 50/- விலை மதிப்பிலான குறுந்தகடுகளாகக் கொண்டுவரும் திட்டமிருப்பதாகக் கூறினார். அதற்கு பல்வேறு தரப்புகளிலிருந்து “ஆதரவுகளும் விமர்சனங்களும்” எழும்பியவாறு இருக்கிறது.

இந்த வியாபாரம் வெளிநாட்டுவாழ் இந்தியர்களிடம் செல்லுபடியாகாது என்கிறார் ஒருவர். முழுக்க முழுக்க சரிவராத வியாபாரம் என்கிறார் இன்னொருவர். இவற்றிலிருந்து முற்றிலும் மாறான சுற்றுச்சூழலியல் கருத்தைத் தோராயப் புள்ளிவிவர அடிப்படையில் முன் வைத்திருக்கிறார் எஸ்கேபி கருணா. 


சூழலியல் கேடு எந்தத் தொழிலில் தான் இல்லை. மைக்கா, டியூப் லைட், காலாவதியான மருந்துகள், எலக்ட்ரிக் சாதனங்கள் , சென்ட், கிரீம் போன்ற அழகுசாதனப் பொருட்கள் முதல் ஆணுறைக் கவசங்கள் வரை குப்பை மேலாண்மை என்பது இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகளில் தலைக் குடைச்சலான விஷயம் தான். ஆறு மாத காலத்தில் குறைந்தது ஒரு கோடி பயன்படுத்தப்பட்டக் குறுந்தகடுகள் சுற்றுப்புறங்களில் வீசப்பட்டு, அதனால் சூழலியல் கேடுகள் உண்டாகும் வாய்ப்புகள் இருக்கிறது. இது கேன்சர் போன்ற வியாதிகளையும், மழை நீரை பூமிக்குள் செல்லவிடாமல் தடுக்கும் என்பதையும் காரணமாகக் கூறிக் கடுமையாக எதிர்ப்பதாகவும் கூறுகிறார். 

தொழில்நுட்பங்கள் வளர வளர இதுபோன்ற பிரச்சனைகளை எதிர்கொண்டு தான் ஆகவேண்டும். எனினும், மாறாக எஸ்கேபி கருணா “டிடிஎச், கேபிள் டிவி ஒளிபரப்பு, இணைய ஒளிபரப்பு” போன்ற முறைகளையே ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தலாம் என்றும் குறிப்பிடுகிறார். இது மறுபடியும் தியேட்டர் போன்ற கார்பரேட் லாபிகளிடம் மாட்டிக்கொள்ளும் கண்ணிகளுக்கு ஒப்பானது. “டிடிஎச், இணையம்” போன்றவை இந்தியாவின் 80% சாமானிய மக்களால் பயன்படுத்தக் கூடிய நிலையிலா இருக்கிறது. போலவே ஒளிபரப்பாகும் குறிப்பிட்ட நேரத்தில் குடும்பத்திலுள்ள அனைவரும் திரைப்படத்தைப் பார்க்கவேண்டிய கட்டாயமும் இந்த முறைகளில் ஏற்படுகிறது. நவக்கிரகம் போல ஆளுக்கொரு திரையை நோக்கி நின்றுகொண்டிருக்கும் நிலையில் இது சாத்தியமா? இடையில் மின்வெட்டு ஏற்பட்டாலும் கட்டிய பணம் ஸ்வாகா. குறுந்தகடு - விருப்பப்பட்ட நேரத்தில் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாகப் பார்க்கக்கூடிய வசதியினை வழங்குகிறது.

பயன்படுத்தப்பட்டு புதர் காடுகளிலும், கழிவரை மலப் பீங்காங்களிலும் வீசி எறியப்படும் ஆணுறைகளும் தான் சதவீதத்தின் அடிப்படையில் அதிகம். ரப்பர் மக்குவதற்கு நாளாகும், சரியான முறையில் அப்புறப்படுத்தாத விந்துக்கள் கசிந்த ஆணுறையால் தொற்றுக்கள் உண்டாகும் என்று யாரேனும் ஆணுறையை எதிர்ப்பார்களா? அதுபோலத் தான் இருக்கிறது இதுபோன்ற வாதங்களும்.

நம்மாட்கள் எதைக் கொடுத்தாலும் பயன்படுத்துவார்கள். நம் மக்களுக்கு ஒரு வரைமுறையே கிடையாது. ஆளுயர வினைல் ஹோர்டிங் சூழலுக்கு மிகுந்த கேட்டினை விளைவிக்கக் கூடிய ஒன்று. நண்பரும், எழுத்தாளருமான ஞாநி தனது மேற்கத்திய நாட்டுப் பயணத்தைப் பற்றி “ஆப்பிள் தேசம்” என்ற தலைப்பில் கட்டுரை எழுதியபோது - மேற்கத்திய நாடுகளில் “வினைல் ஹோர்டிங் பேனர்கள்” தடை செய்யப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டு எழுதியிருந்தார். இந்தியாவில் பேனர்கள் தென்படாத ஏதேனும் விழாக்கள் உள்ளதா? பயன்படுத்திவிட்டுத் தூக்கி வீசப்பட்ட மெழுகு போன்ற வழவழ பேனர்கள் தான், மழைக் காலத்தில் ஏழைக் குடிசைகளில் கூரையாக இருக்கிறது. பேனர்களில் அச்சிடப்பட்ட ரசாயனகள் மழைநீர் பட்டு, சாலைகளில் ஓடுகிறது. ஏழைச் சிறுவர்கள் அந்த நீரில் தான் விளையாடுகிறார்கள். இந்த ரசாயனங்களாலும் தோல் வியாதிகள் உட்பட கேன்சர் வருவதாகக் கூறுகிறார்கள். பொது இடங்களில் தூக்கி வீசப்படும் பேனர்களாளும் மழை நீர் பூமிக்குள் செல்வது தடைபடுகிறது. “காதுகுத்து, கல்யாணம், கருமாதி, பிறப்பு, இறப்பு, பூப்பெய்திய பெண்ணைக் குந்த வைக்கும் சடங்கு” என குடும்பம் தோறும் விழாக்களுக்கு பிளக்ஸ் பேனர்கள் வைக்கிறார்கள் எனில், அரசியல்வாதிகள் பத்தடிக்கு ஒரு பேனர் வைக்கிறார்கள். “முதிர்ந்த மூத்தத் தமிழே...! முத்தமிழே...! தளபதியே, அஞ்சா நெஞ்சனே” என்று இந்தப் பக்கம் வைத்தால், “அம்மா தாயே...” என்று அந்தப் பக்கம் வைக்கிறார்கள்.

இதுபோன்று மக்களின் வாழ்வில் இரண்டறக் கலந்த பொருட்களால் வராத சூழலியல் கேடா சேரனின் C2H நிறுவனத்தின் குறுந்தகட்டால் வந்துவிடப் போகிறது. சகோதரர் எஸ்கேபி கருணா இன்ஜினியரிங் கல்லூரி சார்ந்து இயங்குவதால் இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும். புள்ளி விவரத்தில் கூறினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

தமிழகத்தில் மொத்தம் 550 –க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லூரிகள் இருக்கின்றன. கல்லூரிக்குச் சராசரியாக 1, 000 நபர்கள் இன்ஜினியரிங் முடித்துவிட்டு வருவதாக எடுத்துக் கொண்டாலும், வருடத்திற்கு 5, 50, 000 இன்ஜினியர்கள் தமிழகக் கல்லூரிகளில் இருந்து மட்டும் வெளியில் வருகிறார்கள். இதில் பாதிபேர் சினிமா ஆசையினாலும், இன்ஜினியரிங் படிக்க முடியாததாலும் டிகிரியை வாங்க முடிவதில்லை. தொடர்ந்த பத்து வருடங்களுக்கு ஒரு தோராயக் கணக்கை எடுத்துக் கொண்டாலும் சுமார் 55 லட்சம் இன்ஜினியரிங் க்ராஜூவேட்ஸ் பத்து ஆண்டுகளில் உருவாகிறார்கள். இவர்கள் எல்லோருமா வேலைக்குச் செல்கிறார்கள். படித்து முடித்தும் வேலையில்லாமல் அலைகிறார்கள். பாடத்தில் கோட்டை விட்டவர்கள் எப்படியாது அடித்துப்பிடித்து மீண்டும் தேர்வெழுதி என்ஜினியரிங் பட்டத்தை வாங்கி விடுகிறார்கள். எனினும் தகுந்த வேலை கிடைக்காமல் எல்லோரும் திண்டாடுகிறார்கள். இந்த வேலையில்லாத அபரிதமான மனித எண்ணிக்கைகளைக் காட்டிலுமா சமூகக் கேட்டைக் காடிலுமா குறுந்தகடுகள் போன்ற பொருட்கள் சூழலியல் கேட்டை ஏற்படுத்திவிடப் போகிறது. “கொலை, கொள்ளை, அடிதடி, வழிப்பறி” போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் பற்றிய நாளிதழ் செய்திகளில் பெரும்பாலும் என்ஜினியரிங் மாணவர்களின் பெயர்கள் தான் அடிபடுகின்றன. சமூக உளவியலில் இதுபோன்ற நெகடிவ் திசையில் பயணிக்கும் என்ஜினியரிங் மாணவர்கள் ஏற்படுத்தியுள்ள தாக்கம் நுட்பமாக அவதானிக்க வேண்டியுள்ளது.

மாணவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கு, அவர்கள் படித்த என்ஜினியரிங் கல்லூரிகளைக் குற்றம் சொல்ல முடியுமா என்ன? அதுபோலத் தான் இருக்கிறது – சினிமா சார்ந்து ஆக்கப்பூர்வமாக ஒரு நிறுவனத்தைத் தொடங்க இருக்கும் இயக்குனர் சேரனைக் கடுமையாக விமர்சிப்பதும் எதிர்ப்பதும்.

“கார்பொரேட் மென்பொருள் நிறுவனங்கள், ஆடியோ கம்பெனிகள், டிப்ளமோ சான்றிதழ் வழங்கும் கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவங்கள்” போல, சேரனும் தான் சார்ந்த துறையின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு அடியெடுத்து வைக்கிறார். அதற்கு இது போன்ற சூழலியல் காரணங்களை எதிர்மறையாக முன்வைப்பது ஞாயமே அல்ல.

“டிவிடி, சிடி” போன்றவற்றால் சூழலியல் கேடு உண்டாகும் என்ற வாதத்தைக் காட்டிலும், கல்லூரியில் பயிலும் பொறியியல் மாணவர்களுக்குப் போதிய வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்து – “மறுசுழற்சி முறையில் இதுபோன்ற உபயோகமற்ற பொருட்களை என்ன செய்யலாம்?” என்பதை ப்ராஜெக்டாகச் சமர்ப்பிக்கச் சொல்லலாம். கலை மனிதர்களைப் பண்படுத்தும். நல்ல விஷயங்கள் அடித்தட்டு மக்களிடம் சென்று சேருவதில் தடை இருப்பதால் தான் எல்லா பிரச்சனைகளுமே ஆரம்பமாகிறது. இயக்குனர் சேரன் நல்ல படங்களை எடுப்பவர். நல்ல படங்கள் திரையரங்குகளுக்குச் சென்று சேர வேண்டும் – எல்லா தரப்பு மக்களிடமும் சென்று சேர வேண்டும் என்று நினைப்பவர். அவரைக் குறுக்கிடாமல் இருப்பதே நல்ல சினிமா வெளிவருவதற்கு நாம் செய்யும் உதவி. உங்களது (எஸ்கேபி கருணா) நட்பு வட்டத்தில் இருக்கக் கூடிய நல்ல சினிமா நண்பர்களில் சேரனும் ஒருவர் என்கிறீர்கள். உங்களைப் போன்றவர்கள் அவருடன் கைகோர்க்க வேண்டும். இல்லையேல் பேசாமல் இருந்துவிட வேண்டும். எதற்குக் கடுமையாக ஆட்சேபிக்க வேண்டும். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

ஐ சப்போர்ட் சேரன்... 
சமூகப் பொறுப்பு சினிமாக்காரர்களிடம் மட்டுமே இருக்க வேண்டிய விஷயமா என்ன? அது எல்லோருக்குமே இருக்க வேண்டும். முக்கியமாகப் பொதுமக்களுக்கு. சினிமா இயக்குனராக இருந்தால் என்ன? எழுத்தாளனாக இருந்தால் என்ன? என்ஜியரிங் கல்லூரி நிறுவனராக இருந்தால் என்ன? அரசியல்வாதியாக இருந்தால் என்ன? எல்லோரும் சமூகத்தின் அங்கம் தானே!அங்கம் தானே!

குறிப்பு: இயக்குனர் சேரனை ஆதரித்துப் பல்வேறு தருணங்களில் – இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் கால இடைவெளியில் எதையாவது சொல்லிக் கொண்டிருக்கிறேன். ஆகவே, சேரன் எனக்கு நண்பராக இருப்பாரோ என்று தப்புக் கணக்குப் போட்டுவிடாதீர்கள். ஆர் பி அமுதனின் ஆவணப்படத் திரையிடலிலும், பாதை புத்தக வெளியீட்டிலுமாக இரண்டு தருணங்களில் தூரத்திலிருந்து சேரனைப் பார்த்ததோடு சரி. மற்றபடி வானத்து நட்சத்திரம் போலவே, இயக்குனர் சேரனும் எனக்கு தூர தூரமாக... C2H – நல்ல முயற்சி. வளர்ந்து செழிக்க வாழ்த்துக்கள்.

Thursday, July 10, 2014

கேணி சந்திப்பு - இயக்குநர் ஞான. ராஜசேகரன்

பாரதிமணியை அவருடைய வீட்டில் சில ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்தபோது “கிருஷ்ணா...! கணித மேதை ராமானுஜன் வாழ்க்கையை இயக்குனர் ஞானராஜசேகரன் படமா எடுக்க இருக்குறாரு...” என்றார். 


மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. ஏனெனில் கணிதத்தை முக்கியப் பாடமாக எடுத்து – இளநிலை மற்றும் முதுநிலையில் – அரியர் மேல் அரியர் வைத்து - அட்டைக்கு மேல் அட்டை வாங்கிய – அசாத்தியமான மாணவர்களில் நானும் ஒருவன். பின்னர் “ராமானுஜன்” படத்தில் நண்பர் மணிபாரதி நடித்திருப்பது தெரிந்ததும் சந்தோஷத்தில் ததும்பி வழிந்தேன். இருக்காதே பின்னே...! “ராமானுஜன்... ராமானுஜன்...” படத்தில் நமக்குத் தெரிந்த ஒரு நபர் - சின்ன பாத்திரத்தில் தலையைக் காட்டுகிறார்.

ராமானுஜன் படத்தைப் பற்றி பேசுகையில் “பை கணித மன்ற” சிவாவைப் பற்றி நினைக்கவில்லை எனில் என் கட்டை வேகாது. ஒரு நாள் தனது வீட்டிற்கு வருமாறு சிவா அழைப்பு விடுத்திருந்தார். சென்னையின் வீதிகளில் ‘அழுக்கான, சாயம்போன, கிழிந்த’ ஆடையுடன் சுற்றுவதுதான் எனக்கு மிகப் பிடிக்கும். ஆகவே பெரும்பாலான விருந்தோம்பல் அழைப்புகளைத் தவிர்த்துவிடுவேன். ஆனால், ‘பை கணித மன்ற’ சிவாவை அப்படித் தவிர்க்க இயலாது.

டி. ஜி. வைஸ்னவா கல்லூரியில் இளநிலைக் கணிதமும், சென்னை ஐஐடி-யில் முதுநிலைக் கணிதமும், சென்னைப் பல்கலைக் கழகத்தில் தனது முனைவர் பட்டத்தையும் கணிதத்தில் பெற்றவர். டாக்டரேட் பட்ட ஆராய்ச்சியிலும் ராமானுஜத்தின் நிரூபனங்களைத் தொட்டுத்தான் பயணித்திருக்கிறார். தற்போது டி. ஜி. வைஸ்னவா கல்லூரியில் பேராசிரியராகக் கடமையாற்றுகிறார். அவரைச் சந்தித்ததின் காரணம் இதுவல்ல. மாறாக பல்வேறு இதழ்களிலும் கணிதம் சார்ந்து தமிழில் எழுதுகிறார். “தி ஹிந்து” தமிழ் நாளிதழில் வாரம்தோறும் கணித்ததைப் பற்றி ஏதேனும் எழுதுகிறார். கணித மேதைகள் பகுதி | & || என்ற தொகுதிகள் ஏற்கனவே வெளிவந்துள்ளது. ராமானுஜன் பற்றிய விரிவான புத்தகத்தைத் தமிழில் எழுதி இருக்கிறார். சிவாவின் இரண்டு புத்தகங்கள் தமிழக அரசு விருது பெற்றுள்ளன.

அன்றாட வாழ்க்கையில் “கணிதப் பயன்பாடுகள்” என்பது நம் போன்ற எளிய மக்களால் புரிந்துகொள்ள முடியாத விஷயம். ஆகவே, “கணிதப் பயன்பாடுகள்” என்ற புத்தகத்தைக் கூடிய சீக்கிரமே கொண்டுவரும் முயற்சியிலும் இருக்கிறார். இது போன்ற மனிதர்களை சந்திக்கச் செல்வது சுவாரஸ்யம் நிறைந்த விஷயம் தானே...!

வீட்டில் நுழைந்ததுமே அவரது படுக்கையறைக்கு அழைத்துச் சென்றார். சுவரில் கணித அறிஞர்களின் பிளாக் & வொயிட் படம் மாட்டப்பட்டிருந்தது. தரையில் அமர்ந்துகொண்டேன். சிவா பேசத் துவங்கினார்:

“இங்க பாருங்கோ கிருஷ்ணா...! நான் எங்கையாவது வெளிய போறதா இருந்தாச்சும் கூட ராமானுஜனை சேவிச்சிட்டுத் தான் போவேன்...! அவர் தான் எனக்கு எல்லாமே. கடவுள் மாதிரின்னு வச்சிக்கோங்கோ...!” என்றார்.

இப்படிக் கூடவா மனிதர்கள் இருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு, “நீங்க ஆச்சரியப் படுத்துறீங்க சிவா...!” என்றேன்.

ஏறக்குறைய ஆயிரம் கணிதப் புத்தகங்களின் சேகரிப்புகள் சிவாவிடம் இருக்கிறது. ராமானுஜத்தின் தேற்றங்களைத் தனது முனைவர் பட்ட ஆராய்ச்சிக்காக எடுத்துக் கொண்டவர் சிவா. அவரது அலமாரியிலுள்ள புத்தகங்கள் தான் “ராமானுஜன்” படத்தில் ராமானுஜனாக நடித்த – நட்சத்திரத் தம்பதிகளான ஜெமினிகணேசன் – சாவித்திரியின் பேரன் வைத்துக்கொண்டு திரிந்திருக்கிறார். நமக்குத் தெரிந்தவரின் புத்தகங்கள் ராமானுஜன் படத்தில் நடித்திருக்கிறது. “ஐயோ... ஐயோ... ஐயோ...” சந்தோசம் தாங்கள...!

இரவு நேரத்தில் சென்னை சென்ட்ரலில் இருந்து - வீடு திரும்ப சில நேரங்களில் பயணிப்பதுண்டு. மீஞ்சூர் ரயில் நிலையத்தில் இறங்கும் ஒரு நண்பர் அப்படிப்பட்ட பயணங்களில் பழக்கம். அவரது பெயர் உஸ்மான். பார்ப்பதற்கு லட்சணமாக இருப்பார். ரயில் ஸ்நேகம் – ரயில் பயணத்தோடு முடிந்துவிடும். ஒரு நாள் திநகர் பழைய GRT தங்க நகைக்கடைக்கு எதிரிலுள்ள மேம்பாலத்தின் கீழ், ரோட்டோரத்தில் கடை விரித்து - உஸ்மான் துணி விற்றுக் கொண்டிருந்தார். “ஓ... நீங்க இங்கதான் வியாபாரம் பண்றீங்களா?” என்றேன்.

“ஆமா’ண்ணா! நீங்க எங்க இந்தப் பக்கம்?” என்றார். கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு அங்கிருந்து கிளம்பினேன். அதன் பிறகு நீண்ட நாட்களாகிவிட்டது உஸ்மானைப் பார்த்து. இரண்டு நாட்களுக்கு முன்பு மீண்டும் கண்ணில் பட்டார்.

“என்னங்க ஆளையே பார்க்க முடியல?” என்றேன்.

“ராமானுஜன் படத்துல ஒரு சின்ன ரோல்ல நடிச்சேங்க’ண்ணா... கும்பகோணத்துல ஷூட்டிங்... கொஞ்ச நாள் அங்க போயிருந்தேன்... அதான்...” என்றார்.

“அடடே...! மீஞ்சூரில் இருந்தும் ஒருவர் ராமானுஜன் படத்தில் நடிக்கிறாரா?” என்று இறும்பூஊஊஊது எய்தினேன்.

எனுடைய கணிப்பு சரி எனில்... முதுகைக் காட்டிக்கொண்டு உட்கார்ந்திருக்கும் பயல் தான் – சக பயணி உஸ்மான். இந்தப் பயலின் மண்டையும், முகவெட்டும் உஸ்மானைப் போலவே உள்ளது.

என்னுடைய பள்ளி ஆசிரியர் சொல்லி இருக்கிறார்: “டேய்.... பசங்களா நீங்க எங்க போனாலும் இந்த மேத்ஸ் உங்கள உடாது... ஒழுங்கா படிச்சிடுங்க...!”

அவர் எந்த அர்த்தத்தில் சொல்லியிருப்பார் என்று தெரியவில்லை. நாமாவது படிப்பதாவது!? எனினும், கணிதமேதை ராமானுஜன் பல விதங்களிலும் என்னைத் துறத்துகிறான். என்னமோ தெரியவில்லை இந்தப் படத்தில் வேலை செய்பவர்களை அடிக்கடி சந்திக்க நேர்கிறது.

இதோ ராமானுஜன் படத்தின் இயக்குனர் ஞான ராஜசேகரன் “கேணி சந்திப்புக்கு” வர இருக்கிறார். “மோகமுள், பாரதி, காமராஜர், ராமானுஜன்” போன்ற முக்கியமான படங்களை இயக்கி இருக்கிறார். ஞானராஜசேகரன் ஓர் ஐ.ஏ.எஸ் என்பது குறிப்பிடத்தக்கது.


“சங்கராபரணம், இது நம்ம ஆளு” போன்ற படங்களில் இசை விற்பன்னராக – முக்கியமான பாத்திரத்தில் நடித்தவர் ஓர் ஐ.ஏ.எஸ் ஆபீசர் என்று கேள்விப்பட்டதுண்டு. அதுகூடப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகுதான் நடிக்க வந்தார். ஞானராஜசேகரன் மூன்று வருடங்களோ என்னவே – இடையில் விடுமுறை எடுத்துக்கொண்டு வந்தவர். அரசாங்க வேலையில் தொடர்புடையவர்கள் – கலைத்துறையில் ஈடுபடும் பொழுது எதுபோன்ற “பிரச்சனைகளையும், இடர்பாடுகளையும் சந்திக்க நேர்கிறது” என்பதை தோழர் ஞானராஜசேகரிடம் கேட்கலாம் என்றிருக்கிறேன். உங்களுக்கும் சில கேள்விகள் இருக்கலாம். தோழரை சந்திக்க எழுத்தாளர் ஞாநியின் வீட்டிற்கு வாருங்கள். நண்பருடன் உரையாடலாம்.

நாம் சந்திக்கப்போகும் இடம் மற்றும் நாள் பின்வருமாறு:

கேணி சந்திப்பு:

பாரதி','பெரியார்', 'ராமானுஜன்' பட இயக்குநர் ஞான. ராஜசேகரன் பேசுகிறார்.

ஜூலை 13, ஞாயிறு மாலை 4 மணி,

39 அழகிரிசாமி சாலை,

கலைஞர் கருணாநிதி நகர்,

சென்னை 78.

அன்புடன் அழைப்பது
ஞாநி, பாஸ்கர் சக்தி.

டிஸ்கி: தியேட்டருக்குச் சென்று நீண்ட நாட்கள் ஆகிறது. ராமானுஜன் படத்தைத் திரையரங்கில் பார்க்கலாம் என்றிருக்கிறேன். திருட்டு சிடி-ய இடையில உட்டு எங்கனவுல மண்ணைத் தூவாதிங்க. போலவே, படம் கலக்ஷ்ன் சரியா இல்லைன்னு படத்தையும் தியேட்டர வுட்டு தூக்கிடாதிங்க. இதுபோன்ற அறிவுசார் ஆளுமைகளைப் பற்றிய படங்கள் தமிழுக்குப் புதிது. அவசியம் ஓடவேண்டும். தமிழ் சினிமா வேறு தளத்திற்கு நகரவேண்டும். நம் அசலான மக்களின் முகங்கள் திரையில் தெரிய வேண்டும்.

Wiki: இயக்குநர் ஞான. ராஜசேகரன்

Thursday, June 12, 2014

ஒரு நடிகை பேசுகிறாள் – ரோஹிணி

இரண்டு வருடங்களுக்கு முன்பு, பெசன்ட் நகர் “சந்திரலேகா ஸ்பேசஸ்” அரங்கில் நவீன நாடகம் ஒன்று ஏற்பாடாகியிருந்தது. சீக்கிரமே சென்றுவிட்டதால் ஸ்பேசஸ் அரங்கின் முன்பிருக்கும் சிமென்ட் குட்டிச்சுவரில் உட்கார்ந்துகொண்டு, தொலைதூரக் கடலை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன். வெள்ளைச் சுடிதாரில் பக்கத்தில் ஒரு பெண்மணியும் உட்கார்ந்திருந்தார். கொஞ்ச நேரம் கழித்து தான் உரைத்தது அவர் “நடிகை ரோஹிணி” என்பது. அவரைப் பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தாரோ என்னவோ தெரியவில்லை. சிநேகத்துடன் மெல்லிய புன்னகையை வீசினார். நானும் சிரித்துவிட்டு அங்கிருந்து கொஞ்சம் விலகிச் சென்று அமர்ந்துகொண்டேன். பிரபலங்களுக்கு நம்மால் கொடுக்கக் கூடிய ஒரே நல்ல விஷயம் ப்ரைவசி தானே...! ஏற்கனவே சில புத்தக வெளியீடுகளில் அவரை தூரத்திலிருந்து பார்த்ததுண்டு. எனினும் கடந்த ஜனவரியில் ஏற்பாடாகியிருந்த “தி ஹிந்து லிட் ஃபார் லைப்” நிகழ்வின் ஒருங்கிணைப்பாளராக நீண்டநாள் கழித்து ரோஹிணியை மறுபடியும் பார்க்க நேர்ந்தது. அவருடன் ஓரிரு வார்த்தைகள் பேசியதும் அப்பொழுதுதான்.

தமிழ் பெண் கவிஞர்களும் நண்பர்களுமான “சல்மா, அனார், ஸர்மிளா சையத்” ஆகியோர் ஓர் அமர்வின் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டதால் நானும் சென்றிருந்தேன். ஸர்மிளா சையத் ஒரு கேமராவைக் கொடுத்து “பிரபு... கொஞ்சம் போட்டோஸ் எடுத்துக் கொடுங்களேன்” என்றார்கள். எனக்கும் நிகழ்வினை ஒலிக் கோப்புகளாக ரெக்கார்ட் செய்ய வேண்டியிருந்தது. ஆனால், நிகழ்வினை கவனிக்கப் பணியமர்த்தப் பட்டிருந்த கல்லூரி மாணவர்கள், “எங்களுக்குக் கொடுத்துருக்குற இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் இப்படிங்க சார்... நீங்க இங்க உட்காரக் கூடாதுங்க (தரையில) சார். நீங்க இங்க நிக்கக் கூடாதுங்க சார்” என்று படுத்தி எடுத்தார்கள்.

“யோவ்... நீங்க கூப்பிட்டு இருக்குற சீஃப் கஸ்ட் தான்யா போட்டோ எடுக்கச் சொன்னாங்க. இங்க உக்காந்தாத் தான்யா ரெக்கார்ட் பண்ண முடியும்...” என்று சொல்லிப் பார்த்தேன். “ஹூஹூம்... நாங்களா விடுவோம்... எங்களுக்குக் கொடுத்திருக்க இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் இப்(பி)டீங் சார்... நீங்க இங்க உட்காரக் கூடாதுங்(க) (தரையில) சார். நீங்க இங்க நிக்கக் கூடாதுங்(க) சார்” என்று படிய பல்லவியையே திரும்பத் திரும்பப் பாடினார்கள். “போங்கடா... நீங்களும் உங்களோட எழவு ஈவன்டும்” என்று தூரப்போய் நின்றுகொண்டேன். நிகழ்ச்சி முடிந்ததும் ரோஹிணியைச் சந்தித்து “ஏங்க... இந்தப் பசங்க இப்படிப் படுத்தி எடுக்குறாங்க? பேஜார் பண்றாங்களே” என்றேன் எரிச்சலுடனும், கோபத்துடனும்.

“போயெட்ஸ் வேல்யூ அவங்களுக்கு என்னங்க தெரியும்...? நீங்க என்கிட்டே சொல்லி இருந்திங்கன்னா நான் அவங்கக்கிட்டப் பேசி உங்களுக்கு வசதி ஏற்படுத்திக் கொடுத்திருப்பேனே...!?” என்றார். உண்மையில் வாய் வார்த்தைக்குக் கூட அப்படிச் சொல்லியிருக்கலாம். எனினும் அடுத்தவர்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் தன்மை எல்லோரிடமும் காணக் கிடைப்பதில்லை. ரோஹிணியிடம் அது நிறையவே இருக்கிறது. 

“மகளிர் மட்டும்” திரைப்படத்தில் நடிகர் நாகேஷ் பிணமாக நடித்து ஸ்கோர் செய்திருப்பார். கூடவே ரோஹிணியும் நடித்திருப்பார். நாகேஷ் அளவிற்கு ரோஹினியின் நடிப்பு இந்தக் காட்சியில் சிலாகிக்கப் படவில்லை. நினைத்துப் பார்க்கையில் ரோஹிணியின் அந்தப் பாத்திரம் தான் மனதில் பசுமையாக நிற்கிறது. நாகேஷுக்கு இணையாக அவரும் அதில் பட்டையைக் கிளப்பி இருப்பார்.

தமிழோ, ஆங்கிலமோ ரோஹினியின் உச்சரிப்பு ஸ்படிக சுத்தமாக இருக்கும். அவருடைய மொழியாளுகையும் அசத்தலாக இருக்கும். தமிழிலும், ஆங்கிலத்திலும், தெலுங்கிலும் வெளியாகக் கூடிய நவீன இலக்கியங்களைத் தேடிப் படிக்கிறார். இலக்கியப் பரிட்சயம் ரோகினிக்கு நிறையவே இருக்கிறது. தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாளப் திரைப்படங்களில் அரிதாரம் பூசியிருக்கும் இவர் - பச்சைக்கிளி முத்துச்சரம் உட்பட மூன்று திரைப்படங்களுக்குப் பாடல்களை எழுதியிருக்கிறார். இவர் தியேட்டர் ஆர்டிஸ்டும் கூட. டப்பிங் ஆர்டிஸ்ட்டாக மனீஷா கொய்ராலா, ஐஸ்வர்யா ராய் போன்றவர்களுக்கு ரோஹிணிதான் தொடர்ந்து குரல் கொடுக்கிறார். தொலைகாட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் என வெவ்வேறு தளங்களில் இயங்கிய ரோகினி தற்போது “அப்பாவின் மீசை” என்ற திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். (இயக்குனர் சேரனின் தயாரிப்பு என்று நினைக்கிறன்.) கேணி சந்திப்பில் என்ன பேசப் போகிறார் என்ற ஆவல் நிறையவே இருந்தது. “இப்போ... இங்க பேசப் போற விஷயங்கள வேற எங்கயும் பேச முடியாது... அதனால அந்த விஷயங்கள இங்க பேசுறதுதான் சரியாவும் இருக்கும்...” என்று பாகிர்வைத் துவங்கினார்.

“ரெண்டு விஷயங்கள் நம் வாழ்க்கையில் தற்செயலாக அமைகிறது. ஒண்ணு, நாம ஆணாகவோ, பெண்ணாகவோ அல்லது மூன்றாம் பாலினராகவோ பிறப்பது. இன்னொன்னு நாம பொறக்கற எடம். நேரமும் கூட அதை நிர்ணயிக்குது. நான் பெண்ணாகவும், நடிகையாகவும் ஆனது தற்செயலாக நடந்த விஷயங்கள். அதற்காக நிறைய வருத்தப்பட்டிருகிறேன். I was made to feel bad. சின்னச் சின்ன விஷயங்கள்ல அத புரிஞ்சிக்குனு இருக்குறேன்.” என மர்ம நாவலின் முதல் அத்யாயம் போலவே ரோஹினியின் ஆரம்பப் பேச்சு அமைந்தது. எனினும் திறந்த புத்தகம் போலத் தனது வாழ்வின் முக்கியமான தருணங்களைப் பகிர்ந்துகொண்டார்.

உயிர்மை புத்தக வெளியீட்டில் (2005) எழுத்தாளர் சுஜாதா புத்தகத்தை வெளியிட, ரோகினி பெற்றுக் கொண்டிருக்கிறார். புத்தகத்தை வெளியிட்ட சுஜாதா “உங்களுக்குத் தமிழ் படிக்கத் தெரியுமா...?” என்று கேட்டிருக்கிறார். படிச்சவங்க, அறிவாளிங்க முதல் சாமான்ய மக்கள் வரை “நடிகைன்னா இப்படித்தான் இருப்பாங்க... அவங்க படிக்கவே மாட்டாங்க” என்ற ஸ்டீரியோ டைப் பார்வை இருக்குதில்லையா, அதைப் பற்றித் தான் இன்னைக்குப் பேசலாம்னு இருக்குறேன். அசோகமித்திரன் எவ்வளோ பெரிய ரைட்டர், அவர் எழுதிய ‘கரைந்த நிழல்க’ளாக இருக்கட்டும், “மானசரோவர், தண்ணீர்” என எல்லா நாவல்களிலும் நடிகைகளை அவர் சித்தரித்திருக்கும் விதம் ஏற்புடையது அல்ல. அவர் மட்டும்தானென்று இல்லை. நடிகைகளைப் பற்றி எழுதிய எல்லோருமே ஒரு ஸ்டீரியோ டைப் மனப்பான்மையில் தான் எழுதியிருக்கிறார்கள். ஒரு படைப்பில் ‘நல்ல போலீஸ், கெட்ட போலீஸ்’ என்று சித்தரிக்கப் பட்டிருக்கிறார்கள். ஆனால், நடிகை எனில் அவளுடைய சித்தரிப்பு ஸ்டீரியோ டைப்பில் ஒரே மாதிரியாகத் தான் இருக்கும். கரைந்த நிழகள் நாவலின் முக்கியக் கதாப்பாத்திரத்தில் உள்ள குறையாக எனக்குத் தோன்றுவது இதுதான்.

மகளிர் தினத்தில் பேசுவதற்காக ஒரு கல்லூரிக்குப் பேச அழைத்திருந்தார்கள். ஒருமணி நேரம் “பெண்ணியம்” பற்றிப் பேசுவதற்கு ஏற்றார்போல தாயார் படுத்திக்கொண்டு சென்றிருந்தேன். நிகழ்ச்சியில் பேசி முடித்ததும் அவர்களிடம் கேட்டேன்: “நீங்க எதாச்சும் சொல்றதா இருந்தா சொல்லலாம்.”

“மேடம்... நீங்க எப்போ பேசுறத நிறுத்துவிங்கன்னு எதிர்பார்த்தோம்... எங்களோட பஸ்சுக்கு டயம் ஆகுது” என்றார்கள். ஒரு கல்லூரிக்கு எட்டு மணிநேரம் பயணம் செய்து சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டேன். “இனிமே ப்ரிப்பர் பண்ணிட்டுப் போறதெல்லாம் வேஸ்ட். அடியன்ஸ்கிட்ட எதாச்சும் கேட்டுட்டு, அதுக்குத் தகுந்த மாதிரி பேசலாம்” என “உங்களுக்கு எதைப் பத்திப் பேசணும்” என்று கேட்டேன்.

“அச அதிகம் வச்சி...” பாட்டுக்கு டேன்ஸ் ஆடுங்க என்றார்கள். என்னிக்கோ நான் ஆடுன ஒரு பாட்டுக்கான டேன்ச மேடையில ஆடச் சொன்னங்க. நாம பரிமாறிக்க எவ்வளவோ விஷயங்கள் இருக்குது இல்லையா?

“நடிகைன்னா இப்படித்தான் இருப்பார்கள். அவர்களுக்கு இதுமட்டும் தான் தெரியும்” என்று எல்லோரும் நினைகிறார்களோ? என்று பலநேரங்களில் நினைத்துக் கொண்டதுண்டு. அதனால் வருத்தமும் அடைந்ததுண்டு. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியிருந்தாலும், பதினைந்து வயதில் – என்னை விட இருபது வயது அதிகமுடைய நடிகருக்குக் கதாநாயகியாக ஒரு படத்தில் ஒப்பந்தமானேன். அந்த வயதிற்கே உரிய குழப்பங்கள், அந்த நடிகருடன் காதல் காட்சிகளில் நடிக்கும் போது உண்டான குழப்பங்கள் என மிகுந்த சிரமத்திற்கு உள்ளானேன். “இந்தப் படத்திற்குப் பிறகு நீ இன்டஸ்ரியில இருந்த... நான் என் தொழிலையே விட்டுடறேன்” என புலியூர் சரோஜா கூட சொல்லியிருக்கிறார். டெக்னீஷியஸ் எல்லோரையும் அவ்வளோ படுத்தி இருக்கிறேன். சிறுவயதிலிருந்தே நடிக்க வந்துவிட்டதால், பள்ளிக்கூடம் செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை. நடிக்கறதுல கொஞ்சம் கூட விருப்பம் இல்லாமல் தான் இருந்தேன். மலையாள இயக்குனர் பரதன், பாலுமகேந்திரா போன்றவர்களுடன் வேலை செய்தபோதுதான், நடிப்பின் மீது ஆர்வம் வந்தது.

முதல் ஐந்து வகுப்புகள் வீட்டிலிருந்தே படித்தேன். ஒருவர் வீட்டிற்கு வந்து தெலுங்கு கற்றுக் கொடுப்பார். தமிழ் சரியாகப் பேச வராது. தேவையான விஷயங்கள தெலுங்கில் எழுதி வைத்துப் படிப்பேன். சான்ஸ் கேட்டுத் தேவரைப் பார்க்கச் சென்றபோதும், நான்கு வரிகள் எழுதிக் கொடுத்தார்கள். அதைத்தான் அவரிடம் சொன்னேன். அவருக்கும் என்னைப் பிடித்திருந்தது. ஒரு தெலுங்கு படத்துல கிருஷ்ணர் வேஷத்துல நடிச்சிருந்தேன். அந்த படத்த தேவர் பார்த்திருக்காரு. முருகன் வேஷத்துல நடிக்கறதுக்கு என்னோட முகம் சரியா இருக்கும்னு நெனச்சாரு போல. அதனால முருகர் வேஷத்துல நடிக்கறதுக்கு சேன்ஸ் கெடைச்சுது. அப்போ எல்லாம் லைவ் சவுண்ட் ரெக்கார்ட் பண்ணுவாங்க. “முருகன் அடிமை” என்ற படத்துல நடிக்க மூணு மாசம் டயம் இருக்குது. அதுக்குள்ளே தமிழ் சொல்லிக் கொடுங்க என்று தேவர் சொன்னார். அப்படித்தான் தெலுங்கு, தமிழ்ன்னு மத்த பாடங்களையும் ஆள வச்சி சொல்லிக் கொடுத்தாங்க. அப்பாவுக்குத் தமிழில் ஆர்வம் இருந்ததால், எனக்கும் தொடர்ந்து சொல்லிக் கொடுத்து ஆர்வத்தை ஏற்படுத்தினார். அப்படித்தான் தமிழ் மீதும் ஆர்வம் வந்தது. ஆர்வம் வந்து மேலும் மேலும் படிக்க ஆரம்பித்ததும் தான் நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடிந்தது. வாழ்க்கையையும் புரிந்துகொள்ள முடிந்தது.

நாகேஷ காமெடியனா, குணச்சித்திர நடிகரா உங்களுக்கெல்லாம் தெரியும். ஆனால், நாகேஷ் தெலுங்குல ஒரு படம் டைரக்ட் செய்திருக்காரு. அந்தப் படத்துல நான் தான் சைல்ட் ஆர்டிஸ்டா நடிச்சேன். நாகேஷப் பொருத்தவரை அழுவர சீன்ஸ் வந்தா கிளிசரின் போட விடமாட்டாரு. காட்சிய சூட் பண்றதுக்கு முன்னாடி கூப்புடுவாறு, கண்ணையே உத்துப் பார்க்கச் சொல்லுவாரு. சில நொடிகள் அவரோட கண்ணையே பார்த்துட்டு இருந்தால் போதும். எங்கிருந்துதான் வரும்ன்னு தெரியாது. அடக்கமுடியாம அழுக பொத்துக்குனு வரும். உடனே சீன சூட் பண்ணிடுவாங்க. அழுவர சீன்ஸ் வந்தால், ஐஸ்கிரீமும் சாக்லேட்டும் எக்ஸ்ட்ரா கெடைகும்றதால எனக்கும் சந்தோஷமா இருக்கும். ரொம்பநாள் கழிச்சி தியேட்டர் நாடகங்களல்ல நடிக்கும் போது தான், நாகேஷ் சொல்லிக் கொடுத்த இந்த டெக்னிக்க அங்க யூஸ் பன்றத பார்த்தேன். அப்போதான் ஒண்ணு புரிஞ்சிது... எனக்கே தெரியாம நான் நெறைய ஸ்கூலுக்கு போயிருக்கேன். நான் யாருகிட்ட எல்லாம் நடிக்க போனேனோ அவங்ககிட்ட இருந்து நெறைய விஷயங்களைக் கத்துட்டு இருந்திருக்கேன்.

உலகம் எனக்கு அறிமுகமான பத்திரிகைகள் மூலம் தான். ஆனால் பத்திரிகைகள் நம்மைப் பற்றி “கவர்ச்சிக் கண்ணி, அது இதுன்னு” எழுதுறாங்க. ஆரம்பத்துல இதுல இருந்தெல்லாம் எப்படி தற்காத்துக் கொல்றதுன்னு தான் தோணுச்சி. பெண்னென்றாலே இரண்டாம் குடிகளாகத் தான் பார்கிறார்கள். அதனினும் தரம் குறைந்த இடத்தைத் தான் நடிகைகளுக்குக் கொடுக்கிறார்கள். அறிவார்த்த சமூகமான எழுத்தாளர்கள், படைப்பாளிகள், கலைஞர்கள் இருக்கும் சூழலிலும் இது போன்ற விஷயங்களை நேரடியாகவே எதிர்கொண்டேன். நம்முடைய சமூகம் ஸ்டீரியோ டைப் சமூகமாகவே தான் இருக்கிறது என்பதற்கு இதெல்லாம் உதாரணம். ஏதாவது பிரச்சனையில் பெண் கைதானால் “அழகி கைது” என்று பத்திரிகைகள் எழுதுகிறார்கள். “அப்போ அழகன் என்ன ஆனாரு?. அத பத்தி எல்லாம் எழுத மாட்டாங்க.”

இதையெல்லாம் யோசித்தபோது, ரெண்டு தற்செயலா நடந்த விஷயத்துக்காக I was made feel bad-னு சொல்லி இருந்தேன் இல்லையா?. Then, I took a decision. I was not going to feel bad. மாறாக நான் கூச்சப் படப்போவதில்லை. பெண்ணாகப் பிறந்ததற்கு நான் பெருமை கொள்கிறேன். அதிலும் நடிகையாகப் பிறந்ததற்கு பெருமை கொள்கிறேன் என்று என்னை நானே உந்திக் கொண்டேன். எனினும் பிரக்ஞையுடன் ஒரு நடிகையாக இருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் மலையாளத்தில் நான் செய்த படங்கள் தான். மலையாள நடிகர்களான வேணு, கோபி போன்றவர்களுடன் நடித்தது பெரிய அனுபவம். இயக்குனர் பரதனுடன் வேலை செய்த பிறகுதான் சினிமாவையே நேசிக்கக் கற்றுக் கொண்டேன் என்று கூட சொல்லலாம். அடிப்படையில் பரதன் ஓர் ஓவியர். அவருடன் பணியாற்றுவது பல விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கு ஒப்பானது. அவங்க உங்களுக்குள்ள இருக்குற கிரியேடிவ் டேலண்ட வெளியைக் கொண்டு வருவாங்க. தமிழில் பாலுமகேந்திரா போன்றவர்களுடன் பணியாற்றிய போதும் அதுபோல உணர்ந்ததுண்டு.

நீங்க எவ்வளோ தான் தெறமையானவங்களா இருந்தாலும், நெறைய விஷயங்களைக் கத்துக்கிட்டாலும் – ஒரு நடிகைன்னா சொசைட்டியில மரியாத இருக்கறது இல்ல. இதையெல்லாம் நெனச்சி ஆரம்பத்துல ரொம்பக் கஷ்டப்பட்டதுண்டு. இவற்றிலிருந்தெல்லாம் என்னை மீட்டெடுப்பதற்கு துணையாக இருப்பது கலையும், இலக்கியமும், நண்பர்களும், தியேட்டரும் (நாடக ரங்கம்) தான். நான் இப்படி இருக்கேன்னு எதையும் சொல்லத் தெரியல. ஆனால் எதையெல்லாம் செய்வதில் எனக்கு இன்பம் கிடைக்கிறதோ, அதையெல்லாம் செய்துகொண்டிருக்கிறேன். மற்றபடி நான் பேசியதில் ஏதாவது தவறிருந்து சுட்டிக் காட்டினால் அதைப் பற்றிப் பேசலாம். “இல்ல... தமிழ் ரைட்டர்ஸ் நல்ல படியாகவும் எழுதி இருக்காங்கன்னு மேற்கோள் காட்டினிங்கன்னா கொஞ்சம் சந்தோஷமா இன்னிக்கி வீட்டுக்குப் போவேன்.” என்று முடித்துக் கொண்டார்.

தண்ணீர் நாவலின் ஜமுனா கதாப்பாத்திரத்தை முன்வைத்தும், அரந்தை நாராயணின் இரண்டு படைப்புகளை, சினிமா நடிகையை மையப் பாத்திரமாகக் கொண்ட இரண்டு நாவல்களைக் குறித்தும் ஞாநி தனது பார்வைகளை முன்வைத்தார். அதில் ஒரு நாவலை ஞாநி தொலைக்காட்சித் தொடராகவும் எடுத்திருப்பதாகப் பகிர்ந்துகொண்டார். ஞாநி தனது அறிமுக உரையில் ரகுவரனைப் பற்றிய எந்தக் கேள்விகளையும் கேட்க வேண்டாம் என்று குறிப்பிட்டிருந்தார். “ஐயையோ... ரகுவ பத்தி பேசறதுக்கு நெறைய விஷயங்கள் இருக்கு. தாராளமா கேட்கட்டும்” என்று ரோகினி உடனே ஞாநியின் ஆட்சேபனையை மறுத்துக் கூறினார். எனினும் யாரும் ரகுவரனைப் பற்றி இறுதிவரை வாய் திறக்காமல் இருந்தனர்.

“ஒரு படத்துல கமிட் ஆனவுடன் ரகுவரன் நிறைய ஹோம் வொர்க் செய்யவாறேமே...? அதப்பத்திக் கொஞ்சம் சொல்லுங்களேன்?” என்றார் ஒளிப்பதிவாளரும், ஆவணப்பட இயக்குனருமான அருள்மொழி.

ரோஹிணி: ஐயோ ஃபென்டஸ்டிக் கொஸ்டின்... ரகுவபத்தி கேக்கவே இல்லையேன்னு நெனச்சேன். ஒவ்வொரு படத்துக்கும் அவர் பண்ற ஹோம் வொர்க் பயங்கரமா இருக்கும். மொதல்ல ஒரு படத்துல கமிட் ஆனா காஸ்டியூம்ஸ் வாங்க ஆரம்பிப்பாருங்க. அதெல்லாம் பைத்தியக்காரத் தனமா இருக்கும். ஒவ்வொரு மெட்டீரியலையும் பார்த்துப் பார்த்து செலக் செய்வாரு. ஒவ்வொரு கடையா தேடி அலையுவோம். கேரக்டருக்கு ஏத்தா மாதிரி கண்ணாடி வேணும்னா... ஒவ்வொரு பழைய கண்ணாடி இருக்குற கடையா தேடி அலையிவாறு. இதெல்லாம் அவரோட ப்ராசஸ்னு புரிஞ்சிக்கிறதுக்கே ரொம்ப காலம் ஆயிடுச்சு. இதெல்லாம் கேரக்டர்குள்ள போறதுக்கான அவரோட ப்ராசஸ்.

அதே மாதிரி அவரோட போஷர்ன்ஸ் மொத்தத்தையும் சூட் பண்ணிட்டுத்தான் லஞ்சுக்குப் போவாரு. ரெண்டுமணி, மூனுமணி, ஆறு மணின்னு பார்க்கவே மாட்டாரு. இத்தனைக்கும் அவருக்கு டயபடிக் இருந்துச்சி. அல்சர் வேற இருந்துச்சு. இது மாதிரி இருக்குற ஒடம்ப வச்சிட்டு அவ்வளோ மெனக்கெடுவாறு. வெறும் டீயையும் சிகரட்டையும் வச்சிக்குனு ஒட்டுவாறு. சில டைரக்டர்ஸ் அத புரிஞ்சுக்குனு லன்ச் டயம் முடியறதுக்குள்ள அவரோட போஷர்ன்ஸ்ச சூட் பண்ணிடுவாங்க. ஆனா எல்லாரும் அது மாதிரி இருப்பாங்கன்னும் சொல்ல முடியாதுங்க இல்லிங்களா.

அதே மாதிரி ஷூட்டிங் போறதுக்கு முன்னாடி ரெண்டு மூணு முறை டையரக்டர்ஸ்ச கூப்பிட்டுப் பேசுவாரு. அவங்களுக்கு அவ்வளோ இன்புட்ஸ் கொடுப்பாரு. அவங்களுக்கும் அந்த பாயின்ட்ஸ் எல்லாம் எத்துக்குறா மாதிரி இருக்கும். இன்னும்கூட நெறைய சொல்லிக்கிட்டே போகலாம். 

கேணி வாசகர்கள் கேட்டப் பல கேள்விகளுக்குப் பொறுமையாகவும், தெளிவாகவும் ரோஹிணி தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். நடிகைகளைக் குறித்த ஸ்டீரியோ டைப் கருத்தாக்கங்கள் வெளிப்படும் பல சம்பவங்களை ரோஹிணி பகிர்ந்துகொண்டு வருத்தப்பட்டார். இதுவரை கேணிக்குக் கைவீசிக் கொண்டுதான் சென்றிருக்கிறேன். ஆனால், வீட்டிலிருந்து இம்முறை கேணிக்குக் கிளம்பும்போதே மொழிபெயர்ப்புத் தெலுங்கு நாடகமான “சீதை ஜோசிய”த்தின் ஒரு பிரதியைத் தோழர் ரோஹிணிக்காக எடுத்து வைத்துக் கொண்டேன். கூட்டம் துவங்குவதற்கு முன்பே ரோஹினியை நெருங்கி “இந்தாங்க ரோஹிணி... உங்களுக்காக நான் எடுத்துட்டு வந்த புத்தகம் இது...” என்றேன்.

“என்ன புக் இது?” என்றார்கள்.

“ஒரு டிராமா ஸ்கிரிப்ட். தெலுங்கு மூலம்... தமிழில் சாகித்ய அகாடமி ரொம்ப நாளுக்கு முன்னாடி வெளியிட்டிருக்காங்க...” என்றேன்.

“தெலுங்கா... ரைட்டர் பேரு என்ன? புக் டைட்டில் என்ன? எப்போ வந்தது?” என்று புரட்டிப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்.

ஆய்வாளர் வா.கீதா, எழிலரசி அக்கா, அரங்க நடிகை வினோதினி, கவிஞர் விஜயலட்சுமி போன்றவர்களுக்காக வாங்கியப் பிரதிகளில் ஒன்று மிஞ்சியிருந்தது. நடிகர் ரோகிணிக்காக அந்தப் பிரதியை எடுத்துச் செல்ல வேண்டுமென்று எனக்கு ஏன் தோன்றியது? புதிராகத் தான் இருக்கிறது...! இத்தனைக்கும் ரோஹிணி நவீன இலக்கியம் வாசிக்கக் கூடியவர், பாடல்களை எழுதியிருக்கிறார் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது.

உலகம் ஸ்டீரியோ டைப் ஆட்களால் மட்டுமே நிரம்பியதில்லை. “நான் கொஞ்சம் அரொகென்ட் தான். ஆனால், ஸ்டீரியோ டைப் ஆளான்னு நீங்க தான் சொல்லணும்” போலவே, பெண்கள் சார்ந்த, நடிகை சார்ந்த எண்ணங்களைப் பொருத்தவரை உங்களுடைய மனநிலை என்ன என்பதையும் கேட்டுக்கொள்ளுங்கள். ஏனெனில் நாம் வாழ்வது ரத்தமும் சதையுமான உலகில்.

Tuesday, June 10, 2014

வார்த்தைகளும் அர்த்தங்களும்

ஆங்கிலம் மட்டுமே தெரிந்தவர்கள் அதிசயித்து அதிர்ச்சியுடன் பார்க்கலாம். தமிழும் ஆங்கிலமும் தெரிந்தவர்கள், புரிதலுடன் கூடிய நமுட்டுச் சிரிப்புடன் இதனை அணுகலாம்.

பழைய காலத்தில் மருந்தானது புட்டிகளில் இருக்குமாம். அதனைக் காற்றுப் புகாமல் அடைக்கப் பயன்படும் ரப்பரால் ஆன மூடியை “காக்” என்பார்களாம். போலவே சேவலையும், ஆணுருப்பையும் கூட “காக் (COCK)” என்றே சொல்கிறார்கள். இந்த பிரியாணிக் கடை முதலாளி, ஒரு டிசைன் கம்பெனியை நம்பி பேனர் டிசைனிங் வேலையை ஒப்படைத்திருக்கிறார். டிசைன் கம்பெனியின் மொழி அறிஞர் தான் நூதனமாக COCK என்ற வார்த்தையைப் பயன்படுத்தி இருக்க வேண்டும். வார்த்தைகள் கனமானவை தோழர்களே. தவறாகப் பயன்படுத்தினால் நாம் தான் கோமாளியாவோம், மோசம் போவோம் என்பதற்கு சாமான்ய உதாரணம் இது. டிவிட்டரில் தான் இந்தப் புகைப்படம் பகிரப்பட்டிருந்தது. இந்த விளம்பரத் தட்டியைப் பலபேர் நக்கலடித்து இணையத்தள சமூக ஊடங்களில் பகிர்ந்திருந்தார்கள். 

பகுத்தறியும் தன்மையில்லாத புலங்களில் தான் இதுபோன்ற தவறுகள் நடக்கின்றன என்று நினைப்பீர்களானால், ஒரு விஷயத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள அனுமதி வேண்டுகிறேன். ஐந்து நிமிடங்கள் எனக்குப் போதுமானது தோழர்களே. சரியான உச்சரிப்பு “கொலேஜ் பஸ்” என்பதாக இருந்தாலும், சாதாரண உச்சரிப்பில் பயன்படுத்தும் அதே வார்த்தையான “காலேஜ் பஸ்” என்பதை Callage Bus என்று எழுதினால் என்னவாகும். அனர்த்தம் தானே மிஞ்சும். (Callage – கூப்பிடும் வயது. இதனர்த்தம் புரிகிறது தானே!.)

தமிழகத்தில் 589 அரசு மற்றும் தனியார் என்ஜினியரிங் கல்லூரிகள் இருப்பதாக உறுதிபடுத்துகிறார்கள். திருவள்ளூர் & காஞ்சிவரம் மாவட்டத்தில் தான் நிறைய தனியார் கல்லூரிகள் இருக்கும் வேண்டும் என்பதாக நினைக்கிறேன். பொன்னேரிக்கு வந்து, மாணவர்களை ஏற்றிச் செல்லும் பிரபல கல்லூரிகளின் பேருந்துகளைக் கடந்த ஒருவார காலமாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். சென்னைக்குப் பயணப்பட நேர்கையில் கழுத்து வலிக்கத் திரும்பித் திரும்பி பேருந்துகளின் ஜன்னலுக்குக் கீழ் ஓரப்பார்வை பார்கிறேன். (கல்லூரி மாணவிகளை சைட் அடிக்கிறேன் என்று கூட உங்களுக்குத் தோன்றலாம். இன்னும் கூட ஆஞ்சநேய பக்தனாகத் தான் இருக்கிறேன் என்பதை நண்பர்களுக்கு நினைவு கூற விரும்புகிறேன்.)

ஒவ்வொரு கல்லூரிக்கும் குறைந்தது 10 பேருந்துகளாவது ஓடுகிறது. எல்லாவற்றிலும் “College Bus” என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. சிலர் பெயின்டால் கைப்பட எழுதி இருகிறார்கள். “College Bus” என்பதன் தமிழாக்கம் போலக் “கல்லூரி பேருந்து” என்று அதே ஸ்டிக்கரில் அச்சிடப்பட்டுள்ளது. அல்லது கைப்பட எழுதப் பட்டுள்ளது.

இங்கு “கல்லூரிப் பேருந்து” என்பதாகத் தானே இருக்க வேண்டும். ஒரு “ப்”-ல் என்ன குடிமுழுகி விடப்போகிறது? என்று தான் நானும் நினைத்திருந்தேன். ரஜினியின் கடித்ததிலுள்ள ஒற்றுப் பிழைகளைப் பற்றிப் பேசினால், மலிவான விளம்பரத்தைக் “கிபி” தேடுகிறான் என்கிறார்கள். தினசரி பத்திரிகைகளிலுள்ள ஒற்றுப் பிழைகளைச் சுட்டிக் காட்டினால் “இதெல்லாம் உனக்குத் தேவையா? வேலையப் பாரு...” என்கிறார்கள். “தமிழ், தமிழர், செம்மொழி, தமிழர் உணர்வு” என கொடி பிடிப்பவர்களிடம் ஒற்றுப் பிழைகளைப் பற்றிப் பேசினால் “இந்த காலத்துல யாருதான் ஒற்றுப் பிழையில்லாமல் எழுதுறாங்க? நம்ம தமிழர்கள் கொடி பிடிச்சி சாதிக்க வேண்டிய நெறைய விஷயம் இருக்குது...” என்கிறார்கள் அரசியல் உள்குத்துடன். 

பதிவுலக, சமூக இணையதள நண்பர்களிடம் பேசினால் “நீ போயி மொதல்ல உன்னோட ப்ளாக்கையும், மூஞ்சிப் புத்தக ஸ்டேடசையும் ஒருமுறை படிச்சிப் பாரு... ஆயிரம் மிஸ்டேக்ஸ் இருக்குது” என்கிறார்கள்.

என் போன்ற சாதாரண வேலையற்ற மனிதர்களால் “தமிழை இலக்கண சுத்தத்துடன் பயின்ற “பிஏ (தமிழ்), எம்ஏ (தமிழ்)” ஆட்களை நேர்முகம் செய்து வேலைக்கு எடுக்க முடியாது. மேலே பட்டியலிடப்பட்டுள்ள நட்சத்திர ஆளுமைக்கும், வர்த்தக பத்திரிக்கை நிருவனங்களுக்கும் என்ன கேடு?”

சரி... சரி... என்ஜினியரிங் காலேஜ் விஷயத்திற்கு வருவோம். அரசுக் கல்லூரிப் பேராசிரியரும், எழுத்தாளருமான – நண்பர் பெருமாள் முருகனிடம் ஒருநாள் முழுக்க நேரத்தைச் செலவழிக்க நேர்ந்தது. அவரிடம் கேட்டேன்:

“கல்லூரி பேருந்து, கல்லூரிப் பேருந்து – இரண்டில் எது சரிங்க அன்பான அழகான தோழரே?”

“ஹூம்... நீ மோசமான பையனாச்சே... கலியுக நாரதனாச்சே...! இந்த மாதிரி எதாச்சும் நீ கேள்வி கேட்டாலே... ஏதோ குட்டைய கொழப்பபோறேன்னு அர்த்தமேச்சே...! இங்கிருந்து ஓடிப்போயிடு பிரபு... எம்பக்கதுல வராத...! நேரத்த வீணாக்காத...!” என்றார்.

“ஒழுங்கா சொன்னீங்கன்னா நான் ஓடிப் போயிட்றேன். இல்லன்னா... இன்னிக்கிகெல்லாம் உங்க பின்னாடியே வந்து ஃபாலோ பண்ணுவேன். கேள்விமேல கேள்வி கேட்டு உங்கள டிஸ்டர்ப் பண்ணுவேன். வசதி எப்படிங்க என்னுடைய அன்பான, அழகானத் தோழரே...!?” என்றேன்.

“அப்படியாவது தொலைஞ்சி போவேன்னா... சந்தோஷம்தான்” என்று வேண்டா வெறுப்பாக முகத்தை வைத்துக் கொண்டு “ரெண்டுமே சரிதாங்க பிரபு. எடத்துக்கு ஏத்த மாதிரி பயன்படுத்தணும்...!” என்றார் முருகன்.

“அடடே... கஷ்டமான கேள்வியா கேட்டுட்டேன் போல இருக்குது. சமாலிஃபிகேஷன்ஸ் செய்யிறாப் போலத் தெரியுதே...” என்றேன்.

“யோவ்... ஊராயா இது? பேருதான் சிங்காரச் சென்னை. ஊரு முழுக்க வெறும் காட்டுப் பூச்சிங்களா இருக்குமாட்டு இருக்கு...” என்றார் பக்கத்திலிருந்த சக எழுத்தாள நண்பரைப் பார்த்து.

“நீ கர்பூறம்டான்னு ஊரே என்னைப் பாராட்டுங்க முருகன். என்னோட கேள்விக்கு பதில் சொல்ல முடியாம, தெனறித் தண்ணி குடிக்கணும் போல இருக்குதா?” என்றேன்.

“ஒன்னாப்பு, ரெண்டாப்பு, அஞ்சாப்பு, பத்தாப்பு வரைக்கும் - நீங்க என்னதான் படிச்சிங்க...? சுதந்திர தினத்துல மிட்டாய் கொடுப்பாங்களே... வாரத்துல ரெண்டுநாள் சத்துணவு முட்டை கூடப் போடுவாங்களே... அந்தப் பக்கம் ஒதுங்கனதே இல்ல போல... தெண்டத்துக்குன்னாலும் ஒரு பொறப்புன்னு...” என்றார் குத்தலாக.

“ஹூம்... கூட படிச்ச பொன்னுங்கக் கூட ‘டாடா டீடீன்னு’ கடலை போட்டுக்குனு இருந்தேன்...! ஒரு கேள்வியக் கேட்டக் கேள்விக்கு பதில் சொல்லுவிங்களா? அதென்ன கவிதை வாசிச்சிக்கிட்டு...” என்றேன்.

“ஒருத்தங்க திட்டினா அது மனசுல ஒரைக்கணும்... அப்பறமேட்டு உணர்ந்து திருந்தனும்... சரி போகட்டும்... இந்த வார்த்தைய எங்க பார்த்து தொலைச்ச...!” என்றார்.

“காலேஜ் பஸ்ல முருகன்... காலேஜ் பஸ்ல... அதுவும் ஜன்னலுக்குக் கீழ...” என்றேன்.

“ஒஹ்... அது தானா விஷயம்... அப்போ ‘கல்லூரிப் பேருந்து’” என்பதுதான் சரி என்றார் முருகன். போலவே, ‘கல்லூரி பேருந்து’ என்று எழுதினால் அது ‘கல்லூரியும் பேருந்தும்’ என்ற அர்த்தத்தில் வரும் என்றும் கூறினார்.

எனக்குத் தேவையானது கிடைத்துவிட்டது. இனி உங்கள் தயவு எனக்கெதற்கு என பேராசிரியரை விடுதலை செய்தேன். ‘கல்லூரியும் பேருந்தும்’ என மாணவர்கள் செல்லும் வாகனத்தில் எழுதவேண்டிய அவசியமில்லை. ஆகவே, ஒற்றுப் பிழையானது உறுதி செய்யப்படுகிறது. வெல்லாலக்குல வெலாங்காய்ப் பெற்றோர்களே...! உங்களை வெல்லத்தில் வைத்து இடித்துச் சாப்பிட...! (வெலாங்கா சாப்பிட்டு நிறைய நாட்கள் ஆகிறது. இப்படித் திட்டியாவது அந்த ஏக்கத்தைத் தீர்த்துக் கொள்ளலாம் என்றுதான் புதுமையாக யோசித்தேன். பெற்றோர்களாகிய நண்பர்கள் கோவிக்கக் கூடாது). ரெண்டு தமிழ் வார்த்தைய தப்பில்லாம எழுத முடியல... அந்தத்தப்பக் கண்டு பிடிக்க முடியல இவங்களால.... இவங்க என்சீநியரிங் கத்துக் கொடுக்கறாங்களா?

சரி... விஷயத்திற்கு வருவோம். தமிழகத்தில் 589 அரசு மற்றும் தனியார் என்ஜினியரிங் கல்லூரிகள் இருக்கின்றன. ஒரு கல்லூரியின் தலைக்கு 10 பேருந்துகள் என்றாலும் கூட, ஏறக்குறைய ஐயாயிரம் கல்லூரிப் பேருந்துகள் ஓடுகின்றன. “வேலம்மாள் கல்லூரி, ஆர்.எம்.கே கல்லூரி, ஆர்.எம்.டி கல்லூரி, எஸ்.ஆர்.எம் கல்லூரி, ஜேஎன்என் கல்லூரி” போன்ற முக்கியமான கல்லூரிப் பேருந்துகளிலும் தவறாக அச்சிடப்பட்ட “கல்லூரி பேருந்து” என்ற ஸ்டிக்கர் தான் ஒட்டப்பட்டுள்ளது. இதோ இந்தப் பதிவைப் படித்துவிட்டு, சென்னையைச் சுற்றி ஓடும் காலேஜ் பஸ் ஒவ்வொன்றையும் நுட்பமாக கவனித்துப் பாருங்கள். உங்களுக்கு உண்மை புரியும். (தமிழகத்தின் பிற பகுதிகளில் ஓடும் காலேஜ் பஸ்களைப் பற்றிய தகவலை, புகைப்படத்துடன் நண்பர்கள் யாரேனும் அனுப்பி வைத்தால் மகிழ்வேன். சமூக இணையதள ஊடகங்களில் ஆதாரத்துடன் பகிர்ந்தால் அதனினும் மகிழ்வேன்.) பிரதியுஷா கல்லூரி வாகனத்தில் சரியாகப் பிழையில்லாமல் எழுதியிருகிறார்கள்.

நான் உங்கள் முன் வைக்க விரும்பும் கேள்வி இதுதான். “கோழி வறுவலுக்கு பதில் காக் ஃப்ரை” என்று எழுதி பேனர் வைப்பவர்களுக்கும், ஒற்றுப் பிழையுடன் பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டி வைத்துள்ள, கல்விப் புலத்தில் இயங்கக் கூடிய என்ஜினியரிங் கல்லூரிகளுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? இனி அந்தந்தக் கல்லூரிகளின் மாணவ நண்பர்கள் தான் இதற்கான பதிலைச் சொல்ல வேண்டும்.

அந்தந்த மொழிகளைப் பிரக்ஞையின்றி பிழையாகப் பயன்படுத்தும் சூழல் ஒரு புறமிருக்க, வேற்று மொழியிலிருந்து சில வார்த்தைகள் தமிழுக்கு வருவதும், தமிழிலிருந்து சில வார்த்தைகள் பிற மொழிகளுக்குச் செல்வதும் சகஜமாக நடக்கக் கூடிய ஒன்றுதான். நண்பர் ஞாநியுடன் பேசிக் கொண்டிருக்கையில் “ஆல்பொகடாப் பழம், ஆள்தோட்டம்” போன்ற வழக்கு வார்த்தைகளைப் பற்றி அலசிக் கொண்டிருந்தோம். (துருதுஷ்ட வசமாக உரையாடலை நீண்ட நேரம் தொடர முடியாமல் போனது.)

நியூ காலேஜிக்கு எதிரிலுள்ள “ஹால்ஸ்” என்பவரின் நினைவாக கார்டன் ஒன்றிற்கு வைத்த பெயர் “ஆள்தோட்டம்” என்பதாக மாறி இருக்கிறது போல. ஞாநி தான் இதனைப் பகிர்ந்துகொண்டார். “ஆல்பொகடா” என்பது என்ன? ஜுரம் வந்தால் கொடுக்கும் புளிப்பான பழத்திற்கு அந்தப் பெயர் எப்படி வந்தது? என்பதை மொழியாளர் ஒருவரிடம் தான் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஆக, ஒரு மொழியானது மற்றொரு மொழியுடன் இயல்பாக ஒன்றிணைந்து, சில குறைப் பிரசவ வார்த்தைகள் பிறப்பதையும், பூரண ஆயுசுடன் அவ்வார்த்தைகள் நூற்றாண்டு கடந்து வளமுடன் வாழ்வதையும் நாம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். பத்திரிக்கை துணுக்குக்காகவோ, வேறு பயன்பாட்டிற்காகவோ - முகமறியாத யாரோ ஒருவர் மொழிபெயர்க்க – யதார்த்தப் பயன்பாட்டில் இவ்வார்த்தைகள் நிலைபெற்று விடுகின்றன.

ஆரியர், முகமதியர், டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் என வந்தவர்கள் அனைவரும் இந்தியப் பிராந்திய மொழிகளில் உறவாடித் தோற்றுவித்தப் பல்வேறு வார்த்தைகள், தற்போது அன்றாடப் புழக்கத்தில் உள்ளன. இது மொழியின் தேய்வுக்கு வழிவகுக்கிறதா? அதற்கு மாறாக மொழியின் அடுத்தகட்ட பரிமாண வளர்ச்சிக்கு வித்தாகிறதா? என்பதை நாம் விழாக்கால சிறப்புப் பட்டிமன்றக் கலைஞர்களிடம் விட்டுவிடுவோம். இறுதித் தீர்ப்பை பட்டிமன்ற நடுவர் பார்த்துக் கொள்ளட்டும்.

மொழிபெயர்ப்பு என்பது கலை. தேர்ந்த மொழி பெயர்ப்பாளர்கள் கலாச்சாரத் தூதுவர்கள் போல. ஓரிடத்திலிருந்து, மற்றொரு இடத்திற்கு வளமான விஷயங்களைப் பதியம் செய்கிறார்கள். ஓர் எழுத்தாளனுக்கே நம் சமூகத்தில் மதிப்பில்லாத போது, சரியான அங்கீகாரம் கிடைக்காத போது - மொழிபெயர்ப்பு சார்ந்து இயங்குபர்கள் உள்ளார்த்த ஆர்வத்தின் காரணமாகத் தான் இதனைச் செய்கிறார்கள். “புனைவு, அ-புனைவு” என எந்தப் புலத்தில் இயங்கினாலும் (ஒரு சிலர் இரண்டையுமே செய்கிறார்கள்), அவர்களது முயற்சி பாராட்டத்தக்கது. தமிழில் மொழிபெயர்ப்பு சார்ந்து ஆங்காங்கு நிறைய பேர் பங்காற்றுகிறார்கள். ஆனால், ஒருவருக்கு ஒருவர் பரிசியமில்லை என்ற நிலைதான் இருக்கிறது.

எனவே, மொழிபெயர்ப்பாளர்கள் ஒருவருக்கு ஒருவர் அறிமுகமாகி, ஒருங்கிணைந்து பணியாற்றும் சூழல் அமைந்தால் சிறப்பாக இருக்கும் என்ற எண்ணத்தில், கிழக்கு பதிப்பகம் ஒருநாள் “மொழிபெயர்ப்பு கருத்தரங்கை” ஏற்பாடு செய்திருந்தார்கள். இந்தக் கருத்தரங்கில் மொழிபெயர்ப்பாளர்கள் மட்டுமல்லாமல் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம் என்ற சலுகை இருந்ததால் நானும் சென்றிருந்தேன். ஒரு நாள் பட்டறையில் “நலங்கிள்ளி, தீக்கதிர் குமரேசன், ஜி. குப்புசாமி” என மொழிபெயர்ப்பில் தீவிரத்துடன் இயக்கக் கூடிய சிலரும், மொழிபெயர்ப்பில் ஆர்வமுள்ள பலரும் வந்திருந்து பல்வேறு நுணுக்கங்களைப் பகிர்ந்துகொண்டார்கள். “பிரியாணிக் கடை விளம்பரத் தட்டிபோல, காலேஜ் பஸ் ஸ்டிக்கர் போல” மொழிபெயர்ப்பு பல நேரங்களில் காலை வாரிவிடும். அதனை நுட்பத்துடன் எதிர்கொண்டால் தான் மொழிபெயர்ப்பில் சிறந்து விளங்க முடியும் என்பதுபோல இருந்தது அவர்களது பகிர்வுகள். ஒருநாள் கருத்தரங்கின் முடிவில் பத்ரி பகிர்ந்துகொண்ட விஷயம் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டிய ஒன்று.

“இந்த ஒருநாள் கருத்தரங்கை முன்னோட்டமாக எடுத்துக்கொள்ளலாம். மூன்று அல்லது நான்குநாள் பயிலரங்கம் ஒன்றை மொழிபெயர்ப்பு சார்ந்து ஏற்பாடு செய்யவேண்டும் என்ற ஆசை என்.எச்.எம் நிறுவனத்திற்கு இருக்கிறது. மொழிபெயர்ப்பில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு நாங்கள் பயிற்சியளிக்க விரும்புகிறோம். இங்க வந்திருக்கவங்க கிழக்கு பதிப்பகத்துக்கு மட்டுமே மொழிபெயர்ப்பு வேலைய செய்யணும்னு நாங்க எதிர்ப்பார்கல. ஏதோ பேசினோம், களஞ்சி போனோம்னு இருக்கக் கூடாது. ஒரு குழுவா நெறைய விஷயங்கள நம்ம மொழிபெயர்ப்பு சார்ந்து ஷேர் பண்ணிக்கணும். அதுக்கொரு ஆரம்பமா இந்தக் கருத்தரங்கு அமையனும்.” என்றார்.

கிழக்கு பதிப்பக பத்ரி ஷேசுவைத் தொடர்ந்து ஃபாலோ செய்யுங்கள். என்றேனும் அவர் மூன்று நாள் மொழிபெயர்ப்புக் கருத்தரங்கிற்கு அழைப்பு விடலாம். ஆர்வமுள்ள இளவட்டங்கள் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். முக்கியமாகக் கல்லூரி மாணவர்களை மொழிபெயர்ப்பு சார்ந்து பயன்படுத்திக்கொள்ள பத்ரி விரும்புகிறார். ஆர்வமுள்ள கல்லூரி மாணவர்களே உங்களைத் தயார் படுத்திக்கொள்ளுங்கள். உங்களது கல்லூரிப் பேருந்தை உற்று நோக்கி அதிலிருந்து தொடங்குங்கள்.

நன்றி...

Monday, April 21, 2014

மூன்று பேர் மூன்று காதல்

ராயப்பேட்டை YMCA புத்தகக் கண்காட்சிக்குச் செல்லப் பயணப்பட்டுக் கொண்டிருந்தேன். “அண்ணா... உங்கள பார்க்கணுமே...” என்ற குரலில் கொஞ்சம் தடுமாற்றம் புலப்பட்டது.

“சரி... இங்க வந்துடு...” என்று சொல்லி இருந்தேன்.

கண்கள் அழுது வீங்கியிருந்தது. “எவ்வளோ சின்சியரா லவ் பண்ணேன். எங்கெல்லாம் சுத்தி இருக்கேன்... நாங்க ரெண்டு பேரும் லவ் பண்றது பிரெண்ட்ஸ் எல்லாருக்கும் தெரியும்... இப்போ வேணாம்னு சொல்றா... எவ்வளோ அசிங்கமா இருக்குது...” என்றான்.

“நீ என்ன பண்ண...? எதாச்சும் மிஸ் பிஹேவ் பண்ணியா?” என்றேன்.

“இல்லிங்க அண்ணா... எனக்குத் தெரியாம இன்னொருத்தன் கூடவும் சுத்திட்டு இருக்கா... நான் கண்டு புடிச்சிட்டேன்...” என்றான்.

“நீ சந்தேகப் பட்றதா நெனைக்கிறாலோ?” என்றேன்.

“இல்லைங்க அண்ணா... அவ கேரக்டர் சரியில்லைங்க அண்ணா... இப்போ தான் ரியலைஸ் பண்றேன். அவ வேனாண்டாம் மச்சின்னு ஃப்ரென்ண்ட்ஸ் எல்லாரும் முன்னாடியே சொன்னாங்க... பொறாமையில சொல்றாங்கன்னு நெனச்சிக்கிட்டேன். இப்போ ஏமாந்துட்டேன்...” என்றேன்.

“அய்யய்யய்ய... அதான் உனக்கு சரி வரலன்னு ரியலைஸ் பண்ணிட்ட இல்ல... விட்டுத் தொலையேன்டா” என்றேன்.

“முடியலையே...” என்றான்.

“இதெல்லாம் சும்மா கத... ஆக்டிங் குடுக்காத...” என்றேன்.

“என்னால தாங்க முடியல...” என்றான்.

“இந்த டூமாகோலியை சமாதானம் செய்ய இயலாது” என என்னை நானே தேற்றிக்கொண்டு கிளம்பினேன். கிளம்பும்போது “Book Fair-க்கு வரியா?” என்றேன்.

“I am sorry. I am not” என்று வார்த்தைகளை முழுங்கினான்.

புறப்படும்போது மட்டும் ஒருவார்த்தை கேட்டேன்: “டேய் பையா... லவ்வு புட்டுக்கிச்சின்னு சூசைட் பண்ணிக்க மாட்டியே...?”

“ச்சே... ச்சே...” என்று தலையை ஆட்டினான்.

“அதானே பார்த்தேன். இவன் சாவறதா இருந்தா...! என்பாட்டுக்குப் போற என்ன கூப்பிட்டு வச்சி ஏன் கழுத்தறுக்கப் போறான்?” என்று நினைத்துக்கொண்டு மந்தவெளி பேருந்தில் ஏறினேன்.

ஒட்டுனருக்குப் பீச்சாங்கை பக்கத்துக்கு இருக்கை காலியாக இருந்தது. ஓடிச்சென்று அமர்ந்து கொண்டேன். பின் இருக்கையில் ஒரு காதல் ஜோடி குசுகுசு என பேசிக்கொண்டு வந்தனர். அரசல் புரசலாக காதில் விழுந்தது. அண்ணா சாலையின் ஒரு பழரசக் கடையைப் பார்த்திருப்பாள் போல, கொஞ்சம் பெரிய குரலில் “நீயும் இந்த ஜூஸ் கடைக்கு என்ன கூட்டிட்டுப் போறேன்னு சொல்லிச் சொல்லியே ரெண்டு வருஷம் ஓடிப் போயிடுச்சி...” என்று ஆதங்கப்பட்டாள்.

“இந்த வருஷம் தான் டிகிரி முடியுதுல்ல... வேலைக்குப் போயிடறேன். ஜூஸ் கடைக்குப் போகலாம். சினிமா போகலாம். கல்யாணமும் பண்ணிக்கலாம். அது வரைக்கும் காலேஜ், கம்ப்யூட்டர் கிளாஸ் மட்டும் தான்.” என்றான்.

“ஹே... வேணாம் வேணாம்... நான் வெயிட் பண்றேன்டா... நீ மேல படி...” என்றாள். எனக்கு ராயப்பேட்டை வந்துவிட்டது. இறங்குவதற்கு எழுந்துகொண்டேன்.

“வேணான்டி... அதெல்லாம் சரி வராது...” என்று சொல்லியது காதில் விழுந்தது. காதலனின் கையினை அந்தக் காதலி உள்ளங்கையில் ஏந்திக்கொண்டிருந்தாள். “கடவுளே...! இந்தக் காதல் கைகூட வேண்டும்” என்று நினைத்துக் கொண்டேன்.

புத்தகக் கண்காட்சியின் காலச்சுவடு அரங்கில் இருந்துவிட்டு சென்ட்ரலுக்குக் கிளம்பினேன். ரயில் புறப்பட ஒரு நிமிடம் மட்டுமே இருந்தது. வேகமாக ஓடி ரயிலில் ஏறினேன். மூச்சு வாங்கியவாறு ஜன்னல் ஓர இருக்கை ஏதேனும் இருக்கிறதா? என்று பார்வையைத் திருப்பினேன்.

ஒரு ஜன்னலோர இருக்கையில் – ஜரிகை வேட்டியில் மாப்பிள்ளை வேட்டியில் ஒருவர் உட்கார்ந்திருந்தார். மாநிறம் தான் எனினும் கொஞ்சம் போல குண்டாக இருந்தார். ஜன்னலுக்கு வெளியில் அவரது பார்வை இருந்தது. எதையோ சாதித்த சந்தோசம். பக்கத்தில் கூரைப் புடவையில் மணப்பெண். அவளது பார்வை ரயில் பெட்டியின் மேற்கூரையில் நிலைகுத்தி இருந்தது. கொஞ்சம் போல சோர்வும், கணிக்கமுடியாத குழப்பமும் முகத்தில் தென்பட்டது. சுற்றியிருந்தவர்கள் அவளிடம் சிரித்துப் பேச முயன்று கொண்டிருந்தனர். புதுமணத் தம்பதிகளை நோட்டம்விட்டதில் என் பக்கத்தில் நின்றிருந்தவர்களை கவனிக்கவில்லை. ஒரு கல்லூரி காதல் ஜோடி.

ரயில் பெட்டியின் நுழைவாயில் வழியே காற்று வீச காதலியின் கூந்தல் காற்றிலாடுகிறது. இருவரும் புதுமணத் தம்பதிகளை பார்த்துக் கொண்டிருந்தார்கள். பார்த்தும் பார்க்காதது போல கொஞ்சம் விலகி நின்றுகொண்டேன். சற்று நேரத்தில் ஒருவரை ஒருவர் ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டனர். நாகரீகமாக அந்தக் காதலி, காதலனின் பக்கவாட்டுத் தோள்களில் சாய்ந்துகொண்டாள். அவனும் நாகரீகமாக அவளைத் தழுவிக்கொண்டான். இருவரும் அநேகமாக கல்யாண கோலத்தில் கற்பனை உலகில் பறந்துகொண்டிருக்க வேண்டும்.

தெய்வீக பந்தத்திலே உண்டான சொந்தம் இது
காதல் உறவே...
என்ன தான் சுகமோ நெஞ்சிலே...!

நான் வேண்டிக்கொண்டேன்: “கடவுளே...! இந்தக் காதல் கைகூட வேண்டும்.”

திஸ் சாங் இஸ் டெடிகேஷன் டூ ஆல் லவ்வர்ஸ் இன்குலூடிங் லவ் புட்டுக்குன பசங்க: என்ன தான் சுகமோ நெஞ்சிலே...

தீராத மோகம் நான் கொண்ட நேரம்
தேனாறு நீ வந்து சீராட்டத்தான்
காணாத வாழ்வு நான் கண்ட நேரம்
பூமாலை நீ சூடிப் பாராட்டத்தான்
நீயென் ராணி நாந்தான் தேனி
நீயென் ராஜா நானுன் ரோஜா
தெய்வீக பந்தத்திலே உண்டான சொந்தம் இது
காதல் உறவே

சென்னை புத்தகச் சங்கமம் - YMCA

உலகப் புத்தகத் திருநாளைக் கொண்டாடும் நோக்குடன், புத்தக விரும்பிகளின் ஆவலுக்குத் தீனி போடும் வகையில் - பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம், நேஷனல் புக் டிரஸ்ட் ஆஃப் இந்தியா-வுடன் இணைந்து சென்னை ராயப்பேட்டை "ஒய்.எம்.சி.ஏ" மைதானத்தில் புத்தகக் கண்காட்சியை ஏப்ரல் 18 முதல் 27ஆம் தேதி வரை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். பல முக்கியமான தமிழ் மற்றும் ஆங்கில பதிப்பகங்களும் தமது வெளியீடுகளை ஏறக்குறைய நூறு அரங்குகளில் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள்.

திருச்சியில் ஓரிரு மாதங்களில் நூறடி உயரமுள்ள "ஈ. வெ. ரா. பெரியார்" சிலையைத் திறக்க இருக்கிறார்கள் போல. அதன் மாதிரி உருவத்தைக் கண்காட்சியின் நுழைவாயிலில் வைத்திருக்கிறார்கள். எனக்கு ஆன்மிகம் பிடிக்கும். போலவே பெரியாரையும் பிடிக்கும். எனவே மாதிரிச் சிலையை மனமாரச் சேவித்துவிட்டு உள்ளே சென்றேன்.

சனிக்கிழமையில் தான் பார்வையாளர்கள் வரவில்லையென்று பார்த்தால் ஞாயிற்றுக் கிழமையும் அதே நிலைமை தான் இருந்தது. இரண்டு நாட்களிலும் காலச்சுவடு அரங்கில் தான் உட்கார்ந்திருந்தேன். சென்னை கண்காட்சியில் சந்தித்துப் பேசிய ஒன்றிரண்டு புதிய வாசகர்கள் காணக் கிடைத்தார்கள். ஒரு சேல்ஸ் மேனாக வேலை செய்த என்னை ஞாபகம் வைத்திருந்து, வாசகர்கள் கைகுலுக்கிப் பேசியது ஆச்சர்யமாகத்தான் இருந்தது. அதில் ஒருவர் பெங்களூரிலிருந்து வந்திருந்தார்.

"நந்தனம் புக் ஃபேர்ல நீங்க எதையோ பேச வந்தீங்க... ஏற்கனவே என்கிட்டே ஒரு லிஸ்ட் இருக்குன்னு சொல்லியிருந்தேன்..." என்றார்.

"அப்போ... என்னை அவாய்ட் பண்ணிட்டு... அசிங்கப் படுத்திட்டுப் போயிருக்கீங்க... அத டீசென்ட்டா சொல்ல வரீங்க... இல்லையா..." என்றேன்.

சப்தமில்லாமல் சிரித்தார். "சரி நீங்க பாருங்க..." என்று சிரித்தவாறு நகர முற்பட்டேன்.

"நீங்க நந்தனம் வந்தவங்களுக்கு சில புக்ஸ் ரெஃபர் பண்ணிட்டு இருந்திங்க இல்லையா?" என்றார்.

"ஆமாமா... இந்த புக்ஸ் தான்..." என்றவாறு "மீசான் கற்கள் மற்றும் சாய்வு நாற்காலியை" எடுத்துக் காண்பித்தேன். அந்த நண்பர் கொஞ்சம் கூட யோசிக்காமல் வாங்கிக்கொண்டார்.

எழுத்தாளர் முத்துகிருஷ்ணன், விஷ்ணுபுரம் சரவணன் - இருவரையும் சனிக்கிழமை சந்தித்துப் பேச முடிந்தது. கட்டியக்காரி குழுவினர் சதத் ஹசன் மண்டோவின் "அவமானம்" கதையை மேடையேற்ற இருந்ததால் - புத்தகச் சங்கமத்திற்கு வந்ததாக விஷ்ணுபுரம் சரவணன் கூறினார். ஏற்கனவே இந்த நாடகத்தை சரவணன் பார்த்ததுண்டு. எனினும் நாடகத்தை நெறியாள்கை செய்த ஸ்ரீஜித்துக்காக வந்திருப்பதாகக் கூறினார்.

கடந்தமாதம் திருநங்கைகள் சார்ந்த விழா ஒன்று திநகரில் ஏற்பாடாகியிருந்தது. தொடர்ந்து மூன்று நாட்கள் திருநங்கைகள் சார்ந்த விழா கின்னஸ் ரெக்கார்டுக்காக நிகழ்த்தப்பட்டது. அதில் ஸ்ரீஜித்தின் கட்டியக்காரி நாடகக் குழுவும் கலந்துகொண்டு "அவமானம்" நாடகத்தை மேடையேற்றி இருக்கிறார்கள். ஸ்ரீஜித்துக்குக் கொடுத்திருந்த நேரத்தைக் காட்டிலும் இரண்டு மேனி நேரங்கள் தாமதமாகத் தான் அவர்களை மேடையேற்றி இருக்கிறார்கள். கால்மணி நேரம் "அவமானம்" நாடகம் நடந்துகொண்டிருக்கும் பொழுது அறிவிப்பாளர் மேடையில் தோன்றி "சிறப்பு அழைப்பாளர் அவசரமாகக் கிளம்பிச் செல்ல இருப்பதால், அவர்களை மேடைக்கு அழைக்கிறோம். நாடகம் இடையில் நிறுத்தப்படுகிறது" என்று சொல்லி இருக்கிறார். (குட்டி பத்மினி தான் சிறப்பு அழைப்பாளராக வந்திருந்தார் என்று நினைக்கிறன்.)

மூன்றாம் பாலினத்தவரின் உரிமை மற்றும் மேம்பட்ட வாழ்வுக்கான போராட்டம் சார்ந்து அரங்க வடிவில் தொடர்ந்து குரலெழுப்பக் கூடியவர் ஸ்ரீஜித் என்பது விழா ஏற்பாட்டாளர்களுக்குத் தெரிந்திருக்காமலா இருந்திருக்கும். பேராசிரியர் அ. மங்கைக்கும், பத்திரிகையாளர் கவின்மலருக்கும் அந்த விழாவில் விருது கொடுத்து கௌரவிக்க இருந்தார்களாம். சிறப்பு அழைப்பாளரைக் காரணம்காட்டி நாடகத்தை இடைநிறுதியதால், அவர்கள் இருவரும் விருதினை ஏற்காமல் வெளிநடப்பு செய்திருகிறார்கள். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு ஸ்ரீஜித் பங்கேற்று நெறியாள்கை செய்யும் நாடகம் என்பதால் விஷ்ணுபுரம் சரவணன் வந்திருப்பதாகக் கூறினார்.

போலவே, நடிகரும் டப்பிங் ஆர்டிஸ்டும், குறும்படத் தயாரிப்பாளராக அறியப்பட்டிருந்தாலும் - எமக்குப் பதிப்பாளராக அறிமுகமாகியிருக்கும் நாகரத்னா பதிப்பக குகனைப் பார்த்து உரையாட முடிந்தது. இவருடன் பேசும் ஒவ்வொரு முறையும் விறுவிறுப்பும், சுவாரஸ்யமும் தொற்றிக்கொள்ளும். மதி நிலையத்தின் மூலம் வெளியீடு கண்ட சமீபத்திய புத்தகங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார். பா. ராகவனின் "அலகிலா விளையாட்டு" நாவலின் பதிப்பையும் மதி நிலையத்தில் காணக் கிடைத்தது. சப்தமில்லாமல் ராகவன் மீள் பதிப்பைக் கொண்டுவந்திருக்கிறார் போல.

மற்றபடி, புத்தகக் கண்காட்சி மிக மந்தமாக இருப்பதாகத் தான் எனக்குத் தோன்றியது. புனித வெள்ளியன்று கண்காட்சி துவங்கியிருக்கிறது. அதே நாளில் வடிவேலு நடித்த தெனாலிராமன் ரிலீஸ் காண்கிறது. நீண்ட நாட்கள் கழித்து வடிவேலு திரைக்கு வருகிறார். அடுத்தடுத்த இரண்டு நாட்களும் கூட விடுமுறை நாட்கள் தான். எனினும் கூட்டமெல்லாம் பெரிதாக ஒன்றும் இல்லை. தமிழகப் பாராளுமன்ற தேர்தல் வேறு நெருங்குகிறது. அதிலும் சிலர் முடங்கிக் கிடக்கிறார்கள். பபாசி நடத்திய பிரம்மாண்ட 700 பதிப்பகங்கள் கலந்துகொண்ட புத்தகக் கண்காட்சி முடிந்து இரண்டு மாதங்கள் கூட பூர்த்தியாகவில்லை. அப்படியிருக்க யார் தான் இந்த புத்தகச் சங்கமத்தின் ஆடியன்ஸ் என்பதையும் கிரகிக்க முடியவில்லை.

"கருத்தரங்கம், பட்டிமன்றம், உணவுத் திருவிழா, கலை மற்றும் பறையிசை, மாணவர்கள் பங்கேற்கும் நடைப் பயணம்" என முக்கியமான நிகழ்வுகள் புத்தகக் கண்காட்சியை ஒட்டி ஏற்பாடாகியிருக்கிறது. அரங்கின் உள்ளே நுழையும் போது, ஒரு பெண்மணி "வணக்கம்" கூறி வரவேற்கிறார். கழிப்பறைகள் ஓரளவிற்குச் சுத்தமாக இருக்கிறது. அடுத்தடுத்த ஆண்டுகளில் சந்தை சுறுசுறுப்படையும் என்றே நினைக்கிறன்.

மின்னஞ்சலை சரி பார்த்துவிட்டு இந்தப் பதிவினை எழுதலாம் என்று உட்கார்ந்தேன். வந்திருந்த மின்னஞ்சல்களில் ஒன்று மனதிற்கு நிறைவாக இருந்தது. "சுந்தர்" என்ற புத்தக வாசகர் அனுப்பியிருந்த மின்னஞ்சல்:

Sir,
I met you in the Chennai book fair held a few months back.I've completed reading the novel 'Mesaan Karkal' that you asked me to read. A lovely novel.Eramullan's character was the one that made a golden impression.I was totally shattered and lost in the end when Kungali starts walking along the shore without knowing what to do next.Thank you for recommending such a book.

நம்மல்லாம் ஒரு ஆளுன்னு மதிச்சி, நம்ம சொல்றதையும் ஒருத்தர் காது கொடுத்துக் கேக்குறாங்கன்னா அவர்களது பண்பு பாராட்டுக்குரியது. போலவே, நமக்காக நேரம் எடுத்து மின்னஞ்சல் அனுப்புகிறார்கள் எனில் அதனினும் சந்தோசம் தானே...!

நான் வியப்பில் ஆழ்ந்த சந்தோஷத்தில் இருக்கிறேன். குளச்சல் மு யூசுப்பை செல்பேசியில் நிதானமாக அழைத்துப் பேச வேண்டும். இந்த விஷயத்தைப் பகிர வேண்டும். யூசப் - புனத்தில் குஞ்சப்துல்லாவிடம் பேசுவார். எங்களுக்கு இதிலெல்லாம் ஒரு ஆனந்தம். ஒரு பரம திருப்தி. அவ்வளவுதான்...!

Monday, March 31, 2014

டாய்லெட் கழுவிய நடிகர்

கழிப்பிடத்தைச் சுத்தம் செய்ய தொடப்பக்கட்டையைக் கையில் எடுக்க வேண்டும். உடனே, நடிகர் நாசர் ஆம் ஆத்மியில் சேர்ந்துவிட்டாரோ என்ற எண்ணம் உங்களுக்கு எழலாம். விஷயம் அரசியல் சார்ந்ததல்ல.

தான் படித்த கல்லூரிக்குச் சிறப்பு விருந்தினராக நாசர் அழைக்கப் பட்டிருக்கிறார். கல்லூரியின் மாணவர்களையும், நிர்வாகச் சூழலையும் ஒரு பிடி பிடித்துவிட்டுத் தனது ஆற்றாமையை நெற்றிப்பொட்டில் அறைந்தார் போலப் பதிவு செய்ய விளக்குமாறு என்று சொல்லக்கூடிய தொடப்பத்தைக் கையில் எடுத்திருக்கிறார்.
கேணி இலக்கிய சந்திப்பிலும், கணையாழி மாத இதழ் வெளியீட்டிலும் என நாசரை இரண்டு சந்தர்பங்களில் சந்தித்திருக்கிறேன். முதன்முறையாக நேரில் சந்தித்தது கேணியில் தான். சந்திப்பு ஆரம்பிப்பதற்கு முன்பு எனது பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தார். ரோமங்களற்ற பளபளப்பான கையில் சிராய்ப்புகள் இருந்தன.

“என்னங்க நாசர் கைய யாரோ புடிச்சி கீறி உட்டாப் போல இருக்குது? ஷூட்டிங்குல எதாச்சும் நடந்ததா?” என்றேன்.

புன்னகைத்தவாறு “இல்லைங்க... என்னோட தோட்டத்துல வேல செய்யச் சொல்ல செடியில கீறிக்கிச்சி... எனக்கு கார்டனிங் ரொம்பப் புடிக்கும்...” என்றார்.

“ஓ... சரி சரி...” என்றேன்.

அதன் பிறகு நாசரை எங்கும் சந்தித்ததில்லை. பல ஆண்டுகள் கழித்து மீண்டும் வெளியீடு கண்ட “கணையாழி” மாத இதழின் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். எழுத்தாளர் ஜெயகாந்தன், ஓவியர் ட்ராஸ்கி மருது போன்றவர்களும் வந்திருந்தனர். விழா முடிந்து அரங்கின் வெளியில் நின்று, நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன். ட்ராஸ்கி மருதுவுடன், நடிகர் நாசரும் அரங்கை விட்டு வெளியில் கிளம்பிக் கொண்டிருந்தனர். நாசர் அணிந்திருந்த குர்தாவின் நீள அங்கி தரையில் புரண்டு கொண்டிருந்தது. யாரும் அதனைப் பொருட்படுத்தவில்லை.

எனது அருகில் வந்ததும் “நாசர்...” என்றேன். கவனத்தை என் மீது குவித்தார்.

“உங்க பின்னாடி பாருங்க... நீங்க போட்டுண்டு இருக்க துண்டு தரையில பொறண்டுக்குனு இருக்குது...” என்று சொல்லிவிட்டு நண்பர்களுடன் பேச்சைத் தொடர்ந்தேன்.

ஆடையை சரிபடுத்திக்கொண்டு “நன்றி...” என்ற வார்த்தையை உதிர்த்தவாறு கடந்து சென்றார்.

மேற்கண்ட இரண்டு சந்தற்பங்களைத் தவிர்த்து, ஓர் இணைய தொலைக் காட்சிக்காக நாசர் பேசியிருந்ததை மிகவும் ரசித்தேன். பொங்கல் விழாவுக்கான சிறப்பு நேர்முகம் அது. “தமிழர்களின் பண்டிகையான பொங்கலுக்கு, நம்மளோட தமிழ் மக்களுக்கு நீங்க என்ன மெசேஜ் சார் சொல்ல விரும்புறீங்க?” என்பது தான் மைக்கை நீட்டிய நிருபரின் கேள்வியாக இருந்திருக்க வேண்டும். இயற்கையைக் கபளீகரம் செய்யும் தமிழர்களின் போக்கை அந்தப் பேட்டியில் சாடியிருப்பார். சூடான எண்ணெயில் கொட்டப்பட்டக் கடுகுபோல பொரிந்து தள்ளியிருப்பார். அந்தப் பேட்டி எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நமது பாரம்பரிய விவசாய முறை காணாமல் போவதைத் தனது நேர்முகத்தில் குறிப்பிட்டு “இந்த மாதிரி சூழல் இருக்கும் பொழுது, எந்த லட்சணத்துல நான் தமிழர்களுக்கான பண்டிகைத் திருநாள் வாழ்த்துக்களை சொல்றது... நீங்களே பதில் சொல்லுங்கள்...” என கோபத்தைக் கொட்டியிருப்பார்.

நேற்றைய தினம் திரைக்கல்லூரி மாணவர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்த போது “அண்ணா... நாசர் எங்க காலேஜிக்கு வந்திருந்தார் போல...” என்றான். மார்ச் 22, 2014 அன்று திடீரென விசிட் செய்திருக்கிறார் போல.

“ஆமா... அவரும் உங்க காலேஜில தானே படிச்சாரு... அதனால வந்திருப்பாரு...” என்றேன்.

“இல்லன்னா.... வந்தவரு எல்லாரையும் திட்டிட்டுப் போயிருக்காரு.” என்றான்.

“அடடே... எதாச்சும் கேனத்தனமா கேள்வி கேட்டுட்டிங்களா? நாசர் அனாவசியமா கோவப்பட மாட்டாரே...!” என்றேன்.

“இங்கப் படிச்சிட்டு வெளியில வந்து என்ன மாதிரியான படத்த எடுக்குறீங்க? அதுக்கா இங்கப் படிக்கிறீங்க...?–ன்னு கேள்விமேல கேள்வி கேட்டிருக்காரு. அவருக்கு பதில் சொல்ல முடியாம எல்லாரும் திருதிருன்னு முழிச்சி இருக்காங்க” என்றான்.

நல்ல சினிமா சார்ந்த அடிதடிகளை, விமர்சனத் திட்டுக்களை அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும். ஊர் ரெண்டு பட்டதில் சந்தோஷிக்கும் கூத்தாடிகளைப் போல நாம் வேடிக்கைப் பார்க்கலாம். நாசரின் அடுத்த செயல் தான் மிக முக்கியமான ஒன்று.

“நீங்க யூஸ் பண்ற டாய்லெட்ட கூட சுத்தமா வசிக்கத் தெரியாத உங்களால, எப்படி ஒரு நல்ல சினிமாவ எடுக்க முடியும்”-ன்னு கேள்வி கேட்டுட்டு நேரா ஹாஸ்டலுக்கு போயிருக்காரு. தொடப்பத்த எடுத்து மாணவர்கள் பயன்படுத்தும் டாய்லெட்ட கிளீன் பண்ண ஆரம்பிச்சிட்டாறாம்.

“நீங்க இத பண்ணாதிங்க சார்... நாங்களே பண்ணிடறோம்...” என்று கல்லூரி ஆசிரியர்கள் கெஞ்சிக் கூத்தாடி இருக்கிறார்கள்.

“கூத்தாடி வாழ்க்கையெல்லா....ஆஆஆ...ம் அந்தக் காத்தாடி படும்பாடு, அடி ஆத்தாடி வெக்கக்கேடு” என்று வாயசைத்து நடித்த அவதாரமாயிற்றே, ஆகவே சுற்றி நின்று பேசியவர்களின் வார்த்தைகளைத் தொடர்ந்து உதாசீனம் செய்தவாறு நாசர் தொடர்ந்து கழிப்பறையைச் சுத்தப்படுத்தி இருக்கிறார். அதன் பிறகு டிப்ளமோ மாணவர்கள் இரண்டு பேர் சுத்தப்படுத்த முன்வரவும் தான் அங்கிருந்து கிளம்பியிருக்கிறார்.

நாசரும் திரைக்கல்லூரி மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. கலைராணி, ரகுவரன் போன்றவர்கள் அவருடன் படித்த சக தோழர்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் படித்தபோது இருந்த கல்லூரியின் சூழல் தற்போது இல்லை. பாதி இடத்தை டைடல் பார்கிற்கும், மீதி இடத்தை ராமானுஜன் டெக் பார்க் மற்றும் இந்திய புள்ளியியல் நிறுவனத்திற்கும், மேலும் கொஞ்ச இடத்தை தேவைப்படும் மற்றவர்களுக்கும் தாரை வார்த்திருகிறார்கள். சென்ற வருடம் கல்லூரி வளாகத்தில் இருந்த ஜப்பனீஸ் கார்டன் அழிக்கப்பட்டு ஏதோ புதிய கட்டிடம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு தீக்கதிரில் என்று நினைக்கிறன், ஃபிலிம் ரோலை பிளாக்கில் விற்று பணம் பார்க்கும் கல்லூரியின் இழி செயலைக் குறிப்பிட்டு எழுதியிருந்தார்கள். அது சார்ந்த சலசலப்பே எழவில்லை.

“நான் காவேரி தண்ணீர் பிரச்னைக்கு உண்ணாவிரதம் இருக்கறேன். தமிழர்கள் எனது பேச்சு, அவர்கள் தான் எனது மூச்சு” என்று பஞ்ச் டயலாக் உதிர்க்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி முதல், “கல்யாணத்துக்கு முன்னாடி செக்ஸ் உறவு வச்சிக்கறது தப்பில்ல. ஆனா, பாதுகாப்பான உடலுறவு வச்சிக்கணும். அந்த விஷயத்துல பொண்ணுங்க கவனமா இருக்கணும்” என்று பேசி மீடியாவிடம் வசமாக மாட்டிக்கொண்ட குஷ்புவுக்கு ஆதரவாகப் பேசி, அதே மீடியாவில் மாட்டிக் கொண்ட சுகாசினி வரை திரைக் கல்லூரியில் படித்த செலப்ரிட்டிகளை பட்டியலிட்டால் அனுமன் வால் போல நீளும். தான் சார்ந்த சூழலின் அவலத்தைக் கண்கொண்டு பார்த்து, மாற்றத்திற்கான சிறு முன்னெடுப்பை நிகழ்த்தும் பண்பு மிக முக்கியமான ஒன்று. நடிகர் நாசருக்கு அந்தப் பண்பு இருக்கிறது என்பது பல சந்தர்பங்களிலும் வெளிப்படுகிறது. நாசரைப் பார்க்கும் பொழுது மிக சந்தோஷமாக இருக்கிறது.

நானும் பார்க்கிறேன். பறக்கும் ரயில் நிலையங்களிலுள்ள ஒரு கழிப்பிடமும் பயன்பாட்டில் இல்லை. சென்னை நகர்புறத்தின் இலவசக் கழிப்பிடங்களில் ஒன்று கூட சரியான நிலையில் இல்லை. வேண்டுமெனில் இரவு நேரத்தில் திருவான்மியூர் பேருந்து நிலையத்திலுள்ள கழிப்பிடத்தைப் பாருங்கள். பேய் வீடு கெட்டது. இதையெல்லாம் பல ஆயிரம் பேர் பயன்படுத்துகிறார்கள். ஆகவே பாழடைந்து கிடக்கிறது என்றுகூட சமாதானம் சொல்லலாம். “பச்சையப்பன் கல்லூரி, உலகநாத நாராயணசாமி அரசு கல்லூரி, நந்தனம் ஆர்ட்ஸ் காலேஜ்” என ஒரு கல்லூரியிலும் சரியான கழிப்பிட வசதி மாணவர்களுக்கு இல்லை. அரசுப் பள்ளிகளிலும் இதுதான் நிலைமை. பச்சையப்பன் கல்லூரியின் விடுதி என்றைக்கு மாணவர்களின் தலையில் விழுந்து பிரச்சனை பூதாகரமாக வெடிக்கப் போகிறதோ தெரியவில்லை. அரசு கல்லூரி மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளின் கழிப்பிட வசதிகளையும், குடி தண்ணீர் வசதிகளையும் யாரொருவர் விவரணப் படமாக்கினாலும் சர்வதேச விருது பெறுவது நிச்சயம். ஆஸ்கர், கேன்ஸ் போன்ற விருதுகள் கிடைத்தாலும் வியப்படைய ஒன்றுமில்லை.

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? மாணவப் பருவத்திலேயே சுகாதாரமான பயன்பாட்டினைப் பழக்க வழக்கமாக்காமல் சுற்றுச்சூழலின் சுகாதாரத்தை எப்படிப் பேண முடியும்?

வினோபாவிற்கு ஒரு பழக்கம் இருக்கிறதாம். பயணப்பட்டு புதிய இடத்திற்குச் செல்ல நேர்ந்தால் - முதலில் கழிப்பிடத்தைச் சென்று பார்ப்பாராம். ஒருமுறை அவரிடம் காரணத்தைக் கேட்டிருக்கிறார்கள். அதற்கு “கழிப்பிடம் சுத்தமாக இருந்தால் மற்றதெல்லாம் சுத்தமாக இருக்கும். மக்களும் தெளிவோடு இருக்கிறார்கள் என்று அர்த்தம்” என்றாராம். அரசியல் செய்பவர்கள் இந்த ஒரு கொள்கையைப் பின்பற்றினாலே போதும். நாடே சுத்தமாகிவிடும்.

ஒருமுறை டி.ஜி. வைஸ்னவா கல்லூரியில் மூன்றாம் அரங்கின் ஸ்பார்டகஸ் நாடகம் ஏற்பாடாகியிருந்தது. ஓவியம் குறித்து தீராநதியில் எழுதும் மோனிகா நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தார்கள். மு. ராமசாமியும், கருணாபிரசாத்தும் சக நடிகர்களுடன் ஒத்திகையில் இருக்க, ஒய்யாரமாக காரில் வந்து இறங்கினார் நாசர். “அவரிடம் பேச என்ன இருக்கிறது?” என்ற யோசனையில் விலகிச்சென்று நின்று கொண்டேன். இனி எங்காவது நாசரைப் பார்க்க நேர்ந்தால், விரும்பிச் சென்று கைகுலுக்கியவாறு “நான் உங்களுடைய தீவிர ரசிகன். ஐ லவ் யூ நாசர்” என்பேன்.

கேட்டுக்கேட்டுப் புளித்துப்போன இந்த அதரப்பழசான வார்த்தைகளை மெல்லிய புன்சிரிப்புடன் – கேட்டும் கேட்காமலும் நாசர் கடந்து செல்லக்கூடும். வெள்ளித் திரையின் அசையும் காட்சிகளில் தோன்றுவதற்கான சாமான்ய ரசிகனின் பாராட்டாகக் கூட கருதிக்கொள்ளலாம். எனினும் இது, தான் படித்த கல்லூரியின் பராமரிப்பற்ற கழிவறையைச் சுத்தப்படுத்திய அருமைத் தோழருக்கான வார்த்தைகள். வேறென்ன சொல்ல...!

Tuesday, February 18, 2014

பிரபலங்களின் முன் விற்பனைப் பிரதிநிதி

தோப்பில் முகமது மீரானின் சாய்வு நாற்காலியைப் படிக்கும் பொழுது, அடூர் கோபாலகிருஷ்ணனின் திரையாக்கமான “எலிப் பத்தாயம்” நினைவுக்கு வரலாம். “சாய்வு நாற்காலி” வாழ்ந்து கெட்ட கடலோர கிராம நிலச் சுவாந்தார் ஒருவனின் கதை. தனிப்பட்ட ஒருவனின் பூர்ஸ்வா வாழ்க்கையால் ஒரு குடும்பத்திற்கு நேரும் அவலத்தை சித்தரிக்கும் படைப்பு. பாலியல் இச்சையையும் வயிற்றுப் பசியையும் பிரதானமாகக் கருதும் ஒருவனால் குடும்ப கௌரவம் நடுத்தெருவுக்கு வருவதையும், இதன் காரணமாக உறவுகள் நிலைகுலைந்து சிதருவதையும் முன்வைக்கும் பிரதி.

குடும்ப கௌரவத்தைத் தூக்கிச் சுமக்கும் மனது ஒருபுறம், காமத்தில் திளைத்த இளமைக் காலங்களும், அந்த காம நினைவுகளை மறக்க முடியாமல் உடல் சூதேறித் திரியும் முதுமையேரிய வயோதிக உடலின் அசைபோடும் மனது மறுபுறம் என தரவாட்டுக்காரனின் வாழ்வியல் சிக்கலை முன்வைக்கும் படைப்பு. “சாய்வு நாற்காலி” – 1997 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற படைப்பு. இது தமிழக கடற்கரையோர கிராமத்தில் நடக்கும் கதை எனில், “மீஸான் கற்கள்” – கேரள கடற்கரையோர நிலச்சுவாந்தார் ஒருவனின் குடும்ப, சமூக வாழ்வைப் பிரதிபலிக்கும் படைப்பு.

ஒருமுறை மொழிபெயர்பாளர் குளச்சல் மு யூசுப் - எழுத்தாளர் ஜெயமோகனிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது “ஸ்மாரக சிலகள் – நல்ல நாவலாச்சே. முடிஞ்சா தமிழுக்குக் கொண்டுவர முடியுமான்னு பாருங்க.” என்று சொன்னாராம் ஜெமோ.

புனத்தில் குஞ்சப்துல்லாவின் மலையாள மூலம் “ஸ்மாரக சிலகள்” மத்திய சாகித்ய அகாடமி (1980), மாநில சாகித்ய அகாடமி (1977) ஆகிய இரண்டு விருதுகளையும் பெற்றுள்ளது. இளம் வயதிலேயே நாவலாசிரியர் இவ்விருதுகளைப் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. காலச்சுவடு பதிப்பகம் இப்புதினத்தை 2004-ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார்கள். குளச்சல் மு யூசுப் இதனை மொழிபெயர்த்திருக்கிறார். “நினைவுச் சிலைகள்” என்ற பெயரில் சிவன் என்பவராலும் மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது. எனினும் குளச்சல் மு யூசுப்பின் “மீசான் கற்கள்” பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

இரண்டு படைப்புகளும் இஸ்லாம் மார்கத்து வாழ்வியலை நம்முன் வைப்பதால், கடற்கரையோர முஸ்லீம் குடும்பங்களின் வட்டார மொழி கையாளப்பட்டிருக்கும். ஆகவே வாசிப்பதற்கு சற்றே சிரமமாக இருக்கும். எனினும் அட்டகாசமான வாசிப்பனுபவத்தை வாசகர்களுக்குக் கடத்தும் நாவல்கள். நம்மில் பலர் சாய்வு நாற்காலியை வாசித்திருக்கலாம். ஆனால் மீஸான் கற்கள் அப்படியல்ல. ஆகவே காலச்சுவடு அரங்கில் நின்றிருந்த போது நல்ல வாசகர்களாக எனக்குப்பட்ட சில செலப்ரிடிகளுக்கு இப்புத்தகத்தைப் பரிந்துரை செய்தேன். அந்தச் சம்பவங்களில் சில...


இயக்குனர் & நடிகர் - கரு பழனியப்பன்: கிபி: “பழனி இந்த புத்தகத்த படிச்சி இருக்கிங்களா?”

“இல்லியே... நல்லா இருக்குமா?” என்றார்.

கிபி: “லைப்ரரியில கெடச்சா டிரை பண்ணி பாருங்க... நல்லா இருக்கும்.”

“அப்படியா...” என்று புத்தகத்தைப் பற்றி கேட்டுத் தெரிந்துகொண்டார். மேலும் “உங்கள எங்கயோ பார்த்தா போல இருக்குதே...?” என்றார் கரு. பழனி.

கிபி: “பாஸ்கர் சக்தி, கவிதா பாரதின்னு ரெண்டு பேரு டீக்கடை அரசியல் சங்கம் ஒண்ணு நடத்துறாங்க இல்ல. அவிங்க போடுற கூட்டத்துக்கு எப்பவாச்சும் வாரதுடுண்டு. நமக்கும் ஒரு அரசியல் பின்புலம் வேணும்ல...”

“ஓ... சரி சரி... புத்தகத்த எடுத்துக்குறேன்...” என்று சிரித்துவிட்டுக் கடந்து சென்றார்.

கவிஞர் & பாடலாசிரியர் நா. முத்துக்குமார்: கிபி: “முத்துகுமார்... ஒரு நிமிஷம்...! இந்த புத்தகத்தைப் படிச்சி இருக்கிங்களா?”

புத்தகத்தை உற்றுப் பார்த்தவர், “குளச்சல் யூசப் மொழிபெயர்ப்பா...! ஏற்கனவே அவரோட மொழிபெயர்ப்ப படிச்சிருக்கேன். ஏனோ தெரியல... என்னால அவரோட எரியாக்குள்ள போக முடியல...” என்றார்.

கிபி: “சரி சரி... அப்போ வேண்டாம்... வேற எதாச்சும் உங்களுக்குப் புடிச்ச புத்தகத்த நீங்களே பாருங்க...” என்று சொல்லிவிட்டு வேறொருவருடன் பேசிக் கொண்டிருந்தேன். கடந்து சென்ற முத்துக்குமார் அடுத்த சில நிமிடங்களில் என்னுடைய தோள்களைத் தொட்டுக்கொண்டு நின்றிருந்தார்.

கிபி: “சொல்லுங்க முத்து... Do you need any help?”

“புத்தகத்துக்கு தானே செலவு பண்றோம். நான் படிக்கலன்னாலும் கூட இருக்க யாராச்சும் படிப்பாங்க இல்ல. நீங்க சொல்றத பார்த்தா முக்கியமான புத்தகமா தெரியுது... நான் ஒண்ணு எடுத்துக்கறேன்.” என்றார்.

எழுத்தாளர் & சினிமா ஆர்வலர் சுகா: “மூங்கில் மூச்சு, வேணுவனம்” சுகாவுடன் ஒருவர் வந்திருந்தார். அதுநாள் வரை சுகாவுடன் கூட ஒரு வார்த்தை பேசியதில்லை. உடன் இருந்தவரை நேரில் பார்த்ததில்லை என்றாலும் தொலைபேசியில் நிறைய பேசி பழகியதுண்டு. பிறகுதான் தெரிந்தது அவர் சொல்வனம் பாஸ்கர் என்பது.

கிபி: “இந்த புத்தகத்த படிச்சி இருக்கிங்களா சுகா...?”

“நான் புக்ஸ் வாங்க வரல. ஏற்கனவே பர்சேசிங் முடிச்சாச்சு. சும்மா பாக்கறதுக்காக வந்தேன். இருந்தாலும் ஏதோ சொல்ல வறீங்க... சொல்லுங்க...” என்றார்.

கிபி: “நல்ல ட்ரான்ஸ்லேஷன். முடிஞ்சா வாசிச்சி பாருங்க...” என்றேன்.

இரண்டு நாட்கள் கழித்து சுகா மீண்டும் வந்திருந்தார். மறக்காமல் பரிந்துரைத்த புத்தகத்தை எடுத்துவந்து, என்னிடம் காண்பித்துவிட்டு “நல்லா இருந்தா உங்ககிட்ட பேசறேன்...” என்றார்.

கிபி: “நல்லா இல்லைன்னா என்ன கூப்பிட்டு திட்டுங்க... பாஸ்கர் கிட்ட செல்பேசி இலக்கங்கள் இருக்குது...” என்றேன். சிரித்துக்கொண்டே பேன்ட் பாக்கட்டில் கையை நுழைத்தவாறு கடந்து சென்றார். சில நேரங்களில் பாலுமகேந்திராவும் அதுபோன்ற மேனரிசத்துடன் கடந்து சென்றதுண்டு.


எழுத்தாளர், அரசியல்வாதி – சிவகாமி I.P.S: கிபி: “ஹேலோ சிவமாமி... நான் இங்க சேல்ஸ் மேன். இந்த புத்தகத்த பாருங்களேன்.”

“ஒரு நிமிடம் புத்தகத்தின் பின்னட்டையைப் பார்த்தவர். இந்த நாவல இன்னும் படிச்சதில்ல. நல்லா தான் இருக்கும் போல எடுத்துக்கறேன்.” என்று கடந்து சென்றார்.

இயக்குனர் சசி: கிபி: “சசி... நான் இங்க சேல்ஸ் மேன். இந்த புக் உங்களுக்கு புடிக்குதா பாருங்களேன்.”

“நல்ல புத்தகங்களா...?” என்றார்.

கிபி: “ஓரளவுக்கு... புத்தகத்த பிரிச்சி பாருங்க. புடிச்சி இருந்தா வாங்கிக்கோங்க...”

“ஒரு நிமிடம் பக்கங்களைப் புரட்டியவர். சரி எடுத்துக்கறேன்” என்றதுடன், “கு. அழகிரிசாமி மொத்தத் தொகுப்பு இங்க இருக்குதுங்களா?” என்றார்.

பெருமாள் முருகன் தொகுப்பில் வெளிவந்த “கு. பா. ரா சிறுகதைத் தொகுதியை” எடுத்து அவரிடம் நீட்டினேன்.

“மன்னிக்கணும்... கு. அழகிரிசாமி தொகுப்பு கேட்டேன்.” என்றார் சசி.

கிபி: “ஓ... சாரி... சாரி... ஏதோ ஞாபகத்துல தப்புப் பண்ணிட்டேன்.” என்றேன்.

“ச்சே ச்சே... இதெல்லாம் சகஜம் தானே” என்று சிரித்தார். “நான் இங்க சேல்ஸ் மேன்” என்று அறிமுகப்படுத்திக் கொண்டு அவரிடம் பேசிக்கொண்டிருந்தாலும் – மிகப் பணிவாகவும், மரியாதையுடனும் சசி பேசியது மகிழ்ச்சியாக இருந்தது. சக மனிதனாக நேசிக்கத்தகுந்த மனிதர் இயக்குனர் சசி.


கவிஞர் வா. மணிகண்டன்: கிபி: “மணி... மீஸான் கற்கள் படிச்சி இருக்கியா?”

“இல்லியே கிருஷ்ணா...! எதாச்சும் ஸ்பெஷல் புத்தகமா அது.”

கிபி: “நல்ல நாவல் மணி... ட்ரை பண்ணி பாரு...”

இரண்டு நாட்கள் கழித்து புத்தகச் சந்தைக்கு வந்தபோது மறக்காமல் வாங்கிக்கொண்டு சென்றான் நண்பன் மணி.

வலசை இதழ் 
கார்த்திகைப் பாண்டியன்: கிபி: “கார்த்தி... இந்த புக் படிச்சி இருக்கியாடா?”

“இல்லையேடா... நல்லா இருக்குமா?”

கிபி: “நீதான் படிச்சி பார்த்துட்டு சொல்லணும்”

பில் கவுண்டரிலிருந்து கிளம்பும் போது “டேய்... இங்க பாருடா... கெளம்பறேன்...” என புத்தகத்தைத் காட்டி கையசைத்துவிட்டுச் சென்றான்.

இயக்குனர் சமுத்திரக்கனி: கிபி: “ஹேலோ கனி... இங்க நான் சேல்ஸ் ரேப். இந்த புக்க பத்தி சொல்லட்டுமா?”

“அச்சோ. புக்ஸ் பத்தின்னா வேணாம்னா சொல்லுவேன்... தாராளமா... சொல்லுங்க...” என்றார் சந்தோஷமாக. கனியும் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார். இரண்டு இளைஞர்கள் வந்து “ஃபோட்டோ பிளீஸ்” என்றார்கள். அவர்களுடன் சிரித்துக்கொண்டு நின்றுவிட்டு மீண்டும் என்னிடம் பேச வந்தார். மீண்டும் சில இளைஞர்கள் அழைத்தனர். அடுத்தடுத்து ரசிகர்கள் வரவும் “ஐயோ... இது சரிப்பட்டு வராது... உங்களுக்கும் டிஸ்டர்ப் ஆகுது... நான் கெளம்பறேன்” என்று கைகொடுத்துவிட்டு கடந்து சென்றார்.

இயக்குனர் வெற்றிமாறன்: சிலபல வருடங்களுக்கு முன்பு உயிர்மையின் புத்தக வெளியீட்டு நிகழ்வு. அரங்கில் ஏராளமான கூட்டம். தாடியைத் தடவி விட்டவாறு பக்கத்தில் இருந்தவரிடம் அந்த இளைஞன் கூறிக் கொண்டிருந்தார்: “எனக்கும் இலக்கியத்துக்கும் என்ன சமந்தம். இலக்கியத்த பத்தி எனக்கு என்ன தெரியும்? என்ன எதுக்கு இங்க கூப்பிட்டாங்கன்னு தெரியல?”

மேடையில் அறிவிப்பு செய்து, மேடை ஏறும் பொழுது தான் கூச்சப்பட்டவாறு பேசிக் கொண்டிருந்த தாடிவைத்த இளைஞர் வெற்றிமாறன் என்பதே தெரிய வந்தது. அவருடைய முதல் திரைப்படம் வந்திருந்த நேரம் என்று நினைக்கிறேன்.

சமீபத்தில் கூட காலச்சுவடு புத்தக வெளியீட்டில் வெற்றிமாறனைப் பார்க்க நேர்ந்தது. போலவே புத்தகக் கண்காட்சியிலும் எனக்கு அருகில் புத்தகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

கிபி: “ஹலோ வெற்றி... இந்த புக்ஸ் எல்லாம் பாருங்களேன்.”

“நீங்களே சொல்லுங்க...” என்றார்.

“என் பெயர் சிவப்பு...” என்று வாயை எடுத்தேன் “படிச்சிட்டேன்” என்றார்.

“கடல், சின்ன சின்ன விஷயங்களின் கடவுள், செம்மீன், பனி, கடவுளும் கிழவனும்...” எந்த புத்தகத்தைப் பற்றிக் கூறினாலும் “படிச்சிட்டேன்” என்றார்.

கடைசி அஸ்திரமாக “மீஸான் கற்கள்” என்றேன். “படிச்சிட்டேன்” என்றார்.

கிபி: “சரி... அப்போ நீங்களே பார்த்து செலக்ட் பண்ணிக்கோங்க” என்றேன். வெற்றியும் கடந்து சென்றார்.

பக்கத்தில் நின்றிருந்த ஒரு கவிஞர் கூறினார்: “சில சினிமாகாரங்க எதுவும் படிக்கலன்னாலும் படிச்சதா காமிச்சிப்பாங்க”

கிபி: “எது எப்படியோ... வெற்றிமாறனைப் பார்த்தல் இனி எதிர்த்திசையில் ஓடுவேன். ஏனெனில் அவரிடம் விற்பதற்கு என்னிடம் எதுவும் இல்லையே...!”

எழுத்தாளர் நாஞ்சில்நாடன்: நாடனை நோக்கிச் செல்லும்போதே காலச்சுவடு கண்ணன் உத்தேசித்திருக்க வேண்டும். “தச்சன் இருக்கும் தெருவுல ஊசி விக்கப் போறீங்களா...?” என்றார்.

“சும்மா இருங்க கண்ணன். எல்லாம் எனக்குத் தெரியும்...!” என்றேன்.

கிபி: “ஹேலோ நாஞ்சில் நாடன்... எப்படி இருக்கீங்க...?”

“நல்லா இருக்கேன்... நீங்க?” என்றார்.

கிபி: புத்தகத்தை அவரிடம் கொடுத்து “இந்த புத்தகத்த படிச்சிருக்கீங்களான்னு பாருங்களேன்?”

“ஓ... மீஸான் கற்களா...! பத்து வருஷமா நானும் பாக்கறவங்க கிட்ட எல்லாம் படிச்சி பாருங்கன்னு ரெக்கமண்ட் பண்றேன். எவன் கேக்குறான்...! வந்தபோதே படிச்சிட்டேன்...” என்றேன்.

கிபி: “ஓ... உங்களுக்குப் புடிச்சி இருந்துசிங்களா?”

“நிச்சயமா... வாசிக்க வேண்டிய புத்தகம்...” என்றார்.

காலச்சுவடு கண்ணன் கிண்டலுடன் சிரித்தார். அதன் உள்ளர்த்தம் “தச்சனிடம் ஊசி விற்காதே” என்பது போல இருந்தது. எனினும் நாஞ்சில் நாடனைப் பார்த்தால் எதிர்த் திசையில் ஓடமாட்டேன். நாஞ்சில்நாடன் பரந்துபட்ட வாசிப்பாளி என்பது தெரியும். அவரிடம் தெரிந்துகொள்ள, கற்றுக்கொள்ள நிறையவே இருக்கிறது.

“ஓ... மீஸான் கற்களா...! பத்து வருஷமா நானும் பாக்கறவங்க கிட்ட எல்லாம் படிச்சி பாருங்கன்னு ரெக்கமண்ட் பண்றேன். எவன் கேக்குறான்...!” என்று நாஞ்சில் நாடன் பகிர்ந்த போது “சரி... நம் வார்த்தைகள் காற்றிலோ நீரிலோ எழுதியதாகத் தான் இருக்கட்டுமே” என்று நினைத்துக்கொண்டேன்.