Monday, April 21, 2014

சென்னை புத்தகச் சங்கமம் - YMCA

உலகப் புத்தகத் திருநாளைக் கொண்டாடும் நோக்குடன், புத்தக விரும்பிகளின் ஆவலுக்குத் தீனி போடும் வகையில் - பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம், நேஷனல் புக் டிரஸ்ட் ஆஃப் இந்தியா-வுடன் இணைந்து சென்னை ராயப்பேட்டை "ஒய்.எம்.சி.ஏ" மைதானத்தில் புத்தகக் கண்காட்சியை ஏப்ரல் 18 முதல் 27ஆம் தேதி வரை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். பல முக்கியமான தமிழ் மற்றும் ஆங்கில பதிப்பகங்களும் தமது வெளியீடுகளை ஏறக்குறைய நூறு அரங்குகளில் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள்.

திருச்சியில் ஓரிரு மாதங்களில் நூறடி உயரமுள்ள "ஈ. வெ. ரா. பெரியார்" சிலையைத் திறக்க இருக்கிறார்கள் போல. அதன் மாதிரி உருவத்தைக் கண்காட்சியின் நுழைவாயிலில் வைத்திருக்கிறார்கள். எனக்கு ஆன்மிகம் பிடிக்கும். போலவே பெரியாரையும் பிடிக்கும். எனவே மாதிரிச் சிலையை மனமாரச் சேவித்துவிட்டு உள்ளே சென்றேன்.

சனிக்கிழமையில் தான் பார்வையாளர்கள் வரவில்லையென்று பார்த்தால் ஞாயிற்றுக் கிழமையும் அதே நிலைமை தான் இருந்தது. இரண்டு நாட்களிலும் காலச்சுவடு அரங்கில் தான் உட்கார்ந்திருந்தேன். சென்னை கண்காட்சியில் சந்தித்துப் பேசிய ஒன்றிரண்டு புதிய வாசகர்கள் காணக் கிடைத்தார்கள். ஒரு சேல்ஸ் மேனாக வேலை செய்த என்னை ஞாபகம் வைத்திருந்து, வாசகர்கள் கைகுலுக்கிப் பேசியது ஆச்சர்யமாகத்தான் இருந்தது. அதில் ஒருவர் பெங்களூரிலிருந்து வந்திருந்தார்.

"நந்தனம் புக் ஃபேர்ல நீங்க எதையோ பேச வந்தீங்க... ஏற்கனவே என்கிட்டே ஒரு லிஸ்ட் இருக்குன்னு சொல்லியிருந்தேன்..." என்றார்.

"அப்போ... என்னை அவாய்ட் பண்ணிட்டு... அசிங்கப் படுத்திட்டுப் போயிருக்கீங்க... அத டீசென்ட்டா சொல்ல வரீங்க... இல்லையா..." என்றேன்.

சப்தமில்லாமல் சிரித்தார். "சரி நீங்க பாருங்க..." என்று சிரித்தவாறு நகர முற்பட்டேன்.

"நீங்க நந்தனம் வந்தவங்களுக்கு சில புக்ஸ் ரெஃபர் பண்ணிட்டு இருந்திங்க இல்லையா?" என்றார்.

"ஆமாமா... இந்த புக்ஸ் தான்..." என்றவாறு "மீசான் கற்கள் மற்றும் சாய்வு நாற்காலியை" எடுத்துக் காண்பித்தேன். அந்த நண்பர் கொஞ்சம் கூட யோசிக்காமல் வாங்கிக்கொண்டார்.

எழுத்தாளர் முத்துகிருஷ்ணன், விஷ்ணுபுரம் சரவணன் - இருவரையும் சனிக்கிழமை சந்தித்துப் பேச முடிந்தது. கட்டியக்காரி குழுவினர் சதத் ஹசன் மண்டோவின் "அவமானம்" கதையை மேடையேற்ற இருந்ததால் - புத்தகச் சங்கமத்திற்கு வந்ததாக விஷ்ணுபுரம் சரவணன் கூறினார். ஏற்கனவே இந்த நாடகத்தை சரவணன் பார்த்ததுண்டு. எனினும் நாடகத்தை நெறியாள்கை செய்த ஸ்ரீஜித்துக்காக வந்திருப்பதாகக் கூறினார்.

கடந்தமாதம் திருநங்கைகள் சார்ந்த விழா ஒன்று திநகரில் ஏற்பாடாகியிருந்தது. தொடர்ந்து மூன்று நாட்கள் திருநங்கைகள் சார்ந்த விழா கின்னஸ் ரெக்கார்டுக்காக நிகழ்த்தப்பட்டது. அதில் ஸ்ரீஜித்தின் கட்டியக்காரி நாடகக் குழுவும் கலந்துகொண்டு "அவமானம்" நாடகத்தை மேடையேற்றி இருக்கிறார்கள். ஸ்ரீஜித்துக்குக் கொடுத்திருந்த நேரத்தைக் காட்டிலும் இரண்டு மேனி நேரங்கள் தாமதமாகத் தான் அவர்களை மேடையேற்றி இருக்கிறார்கள். கால்மணி நேரம் "அவமானம்" நாடகம் நடந்துகொண்டிருக்கும் பொழுது அறிவிப்பாளர் மேடையில் தோன்றி "சிறப்பு அழைப்பாளர் அவசரமாகக் கிளம்பிச் செல்ல இருப்பதால், அவர்களை மேடைக்கு அழைக்கிறோம். நாடகம் இடையில் நிறுத்தப்படுகிறது" என்று சொல்லி இருக்கிறார். (குட்டி பத்மினி தான் சிறப்பு அழைப்பாளராக வந்திருந்தார் என்று நினைக்கிறன்.)

மூன்றாம் பாலினத்தவரின் உரிமை மற்றும் மேம்பட்ட வாழ்வுக்கான போராட்டம் சார்ந்து அரங்க வடிவில் தொடர்ந்து குரலெழுப்பக் கூடியவர் ஸ்ரீஜித் என்பது விழா ஏற்பாட்டாளர்களுக்குத் தெரிந்திருக்காமலா இருந்திருக்கும். பேராசிரியர் அ. மங்கைக்கும், பத்திரிகையாளர் கவின்மலருக்கும் அந்த விழாவில் விருது கொடுத்து கௌரவிக்க இருந்தார்களாம். சிறப்பு அழைப்பாளரைக் காரணம்காட்டி நாடகத்தை இடைநிறுதியதால், அவர்கள் இருவரும் விருதினை ஏற்காமல் வெளிநடப்பு செய்திருகிறார்கள். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு ஸ்ரீஜித் பங்கேற்று நெறியாள்கை செய்யும் நாடகம் என்பதால் விஷ்ணுபுரம் சரவணன் வந்திருப்பதாகக் கூறினார்.

போலவே, நடிகரும் டப்பிங் ஆர்டிஸ்டும், குறும்படத் தயாரிப்பாளராக அறியப்பட்டிருந்தாலும் - எமக்குப் பதிப்பாளராக அறிமுகமாகியிருக்கும் நாகரத்னா பதிப்பக குகனைப் பார்த்து உரையாட முடிந்தது. இவருடன் பேசும் ஒவ்வொரு முறையும் விறுவிறுப்பும், சுவாரஸ்யமும் தொற்றிக்கொள்ளும். மதி நிலையத்தின் மூலம் வெளியீடு கண்ட சமீபத்திய புத்தகங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார். பா. ராகவனின் "அலகிலா விளையாட்டு" நாவலின் பதிப்பையும் மதி நிலையத்தில் காணக் கிடைத்தது. சப்தமில்லாமல் ராகவன் மீள் பதிப்பைக் கொண்டுவந்திருக்கிறார் போல.

மற்றபடி, புத்தகக் கண்காட்சி மிக மந்தமாக இருப்பதாகத் தான் எனக்குத் தோன்றியது. புனித வெள்ளியன்று கண்காட்சி துவங்கியிருக்கிறது. அதே நாளில் வடிவேலு நடித்த தெனாலிராமன் ரிலீஸ் காண்கிறது. நீண்ட நாட்கள் கழித்து வடிவேலு திரைக்கு வருகிறார். அடுத்தடுத்த இரண்டு நாட்களும் கூட விடுமுறை நாட்கள் தான். எனினும் கூட்டமெல்லாம் பெரிதாக ஒன்றும் இல்லை. தமிழகப் பாராளுமன்ற தேர்தல் வேறு நெருங்குகிறது. அதிலும் சிலர் முடங்கிக் கிடக்கிறார்கள். பபாசி நடத்திய பிரம்மாண்ட 700 பதிப்பகங்கள் கலந்துகொண்ட புத்தகக் கண்காட்சி முடிந்து இரண்டு மாதங்கள் கூட பூர்த்தியாகவில்லை. அப்படியிருக்க யார் தான் இந்த புத்தகச் சங்கமத்தின் ஆடியன்ஸ் என்பதையும் கிரகிக்க முடியவில்லை.

"கருத்தரங்கம், பட்டிமன்றம், உணவுத் திருவிழா, கலை மற்றும் பறையிசை, மாணவர்கள் பங்கேற்கும் நடைப் பயணம்" என முக்கியமான நிகழ்வுகள் புத்தகக் கண்காட்சியை ஒட்டி ஏற்பாடாகியிருக்கிறது. அரங்கின் உள்ளே நுழையும் போது, ஒரு பெண்மணி "வணக்கம்" கூறி வரவேற்கிறார். கழிப்பறைகள் ஓரளவிற்குச் சுத்தமாக இருக்கிறது. அடுத்தடுத்த ஆண்டுகளில் சந்தை சுறுசுறுப்படையும் என்றே நினைக்கிறன்.

மின்னஞ்சலை சரி பார்த்துவிட்டு இந்தப் பதிவினை எழுதலாம் என்று உட்கார்ந்தேன். வந்திருந்த மின்னஞ்சல்களில் ஒன்று மனதிற்கு நிறைவாக இருந்தது. "சுந்தர்" என்ற புத்தக வாசகர் அனுப்பியிருந்த மின்னஞ்சல்:

Sir,
I met you in the Chennai book fair held a few months back.I've completed reading the novel 'Mesaan Karkal' that you asked me to read. A lovely novel.Eramullan's character was the one that made a golden impression.I was totally shattered and lost in the end when Kungali starts walking along the shore without knowing what to do next.Thank you for recommending such a book.

நம்மல்லாம் ஒரு ஆளுன்னு மதிச்சி, நம்ம சொல்றதையும் ஒருத்தர் காது கொடுத்துக் கேக்குறாங்கன்னா அவர்களது பண்பு பாராட்டுக்குரியது. போலவே, நமக்காக நேரம் எடுத்து மின்னஞ்சல் அனுப்புகிறார்கள் எனில் அதனினும் சந்தோசம் தானே...!

நான் வியப்பில் ஆழ்ந்த சந்தோஷத்தில் இருக்கிறேன். குளச்சல் மு யூசுப்பை செல்பேசியில் நிதானமாக அழைத்துப் பேச வேண்டும். இந்த விஷயத்தைப் பகிர வேண்டும். யூசப் - புனத்தில் குஞ்சப்துல்லாவிடம் பேசுவார். எங்களுக்கு இதிலெல்லாம் ஒரு ஆனந்தம். ஒரு பரம திருப்தி. அவ்வளவுதான்...!

No comments:

Post a Comment