Saturday, November 27, 2010

கேணி - ஓவியர் சந்திப்பு

'The best and most beautiful things in the world cannot be seen or even touched. They must be felt with the heart." - மாற்றுத் திறனாளியான ஹெலன் கெல்லரின் இந்த கூற்று முற்றிலும் உண்மை என்பதை மனோகர் தேவதாஸின் கேணி சந்திப்பில் உணர்ந்தேன்.

நாம் உண்ணும் உணவின் சக்தியில் நிறைய கலோரியை கண்பார்வைக்குத் தான் செலவிடுகிறோம். இருந்தும் நம்முடைய பார்வைத் திறன் ஒவ்வொரு நாளும் குறைந்து கொண்டே வருகிறது. அறிவியல் தொழில் நுட்பத்தின் உதவியுடன் அவற்றை நிவர்த்தி செய்தாலும், மனிதனுடைய கண்டுபிடிப்புகளுக்கு சவால் விடக்கூடிய குறைபாடுகளும் இருக்கத்தானே செய்கிறது. அவற்றில் ஒன்று தான் "ரெட்டினைட்டிஸ் பிக்மன்டோஸா (Retinitis pigmentosa)". தீர்க்க முடியாத இந்த பார்வைக் குறைபாட்டிற்குச் சொந்தக்காரர் மனோகர் தேவதாஸ். அதனை பொருட்படுத்தாமல் அவர் நம் சமூகத்திற்கும், பாரம்பரியத்திற்கும் - ஓவியமாக, புத்தகமாக, கலை வடிவாக செய்திருப்பது ஏராளாம். அந்த பணிகளின் மூலம் சாதித்ததும், கொடுத்ததும், கொடுத்துக் கொண்டிருப்பதும் ஏராளம்... ஏராளம்...

30 வயது வரை கண் பார்வை இருந்து, அதன் பிறகு இல்லாமல் போவது சகிக்க முடியாதது. அதுவும் ஓர் ஓவியனுக்கு இந்த நிலைமை என்பது கொடூரமானது. அ முத்துலிங்கத்தின் 'இருளில்' என்ற கட்டுரை பார்வை இல்லாதவர்களின் விசித்திர உலகை மனக் கண்ணில் நிறுத்துபவை. கட்டுரையை முழுவதும் வாசித்துவிட்டு மனோகருடன் கைகோர்ப்பது நல்லது.

இருளில் - அ முத்துலிங்கம்

தந்தையின் மருத்துவ வேலை காரணமாக மனோகரின் பால்ய வயதில் மதுரைக்கு குடிபெயர்ந்திருக்கிறார்கள். அவருடைய சிறுவயது மதுரை அனுபவங்கள் அழகியல் நிரம்பியது. 50 வருடங்களுக்கு முந்தைய மதுரையை அவர் ஓவியமாக வரைந்திருப்பது அழகுக்கு அழகு சேர்ப்பவை. முறையாக யாரிடமும் ஓவிய கலையைக் கற்று கொண்டதாக அவர் எங்குமே குறிப்பிடவில்லை.

அவருடைய நண்பர்களுக்கும் ஓவிய நுணுக்கம் என்பது சிறு வயதிலேயே சுயமாக அமைந்திருக்கிறது. கல்லூரி பேராசிரியராக தனது வாழ்க்கை அமைய வேண்டும் என்பதுதான் மனோகரின் இளவயது ஆசை. புற்று நோயால் தந்தை இறக்கவும், குடும்ப சூழ்நிலை காரணமாக வெளிநாட்டு நிறுவனத்தில் வேதியியல் ஆராய்ச்சியாளராக சேர்ந்திருக்கிறார். நிறுவன மேலாளர்களுக்கு மனோகரைப் பிடித்துவிடவும், கம்பெனியே ஆறு மாத பயிற்சிக்காக மனோகரை மேல் நாட்டிற்கு அனுப்பி இருக்கிறது. கல்யாண சந்தையில் அவருடைய மதிப்பு உயர்ந்து மஹிமா கிடைக்க அதுவே காரணமாக அமைந்திருக்கிறது. நுண்கலை படித்த மஹிமா வாழ்க்கை துணையாகக் கிடைத்தது அவருடைய அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும். கல்யாணத்திற்குப் பிறகு வேலையை உதறிவிட்டு படிப்பதற்காக சில ஆண்டுகள் வெளிநாடு சென்றிருக்கிறார். அவருடன் சென்ற மஹிமா 'கலை மற்றும் கலாச்சார மைய'-த்தில் வேலைக்கு சேர்ந்திருக்கிறார். பல நாட்டு நண்பர்களும் அவர்களுக்குக் கிடைத்திருக்கிறார்கள். இடையில் ஒரு பெண் குழந்தையும் பிறந்திருக்கிறது. சொந்த நாட்டிற்குத் திரும்பிவிடலாம் என்ற எண்ணம் தோன்றவே நண்பர்களின் வற்புறுத்தலையும் மீறி வாய்ப்புகள் இருந்தும் இந்தியாவிற்குத் திரும்பி இருக்கிறார்கள். வேலை செய்த பழைய நிறுவனத்தில் மீண்டும் சேர்ந்திருக்கிறார்.

நாட்கள் மகிழ்ச்சியாக சென்றிருக்கிறது. சென்னையிலுள்ள மஹிமாவின் வீட்டிலிருந்து மதுரைக்கு மனோகர், அவருடைய அம்மா, மகள் சென்றிருக்கிறார்கள். மஹிமாவே கார் ஓட்டியிருக்கிறார். எதிர்பாராமல் நடந்த விபத்து அவர்களுடைய வாழ்க்கையையே திருப்பிப் போட்டிருக்கிறது. மற்றவர்களுக்கு லேசான காயம் தான் என்றாலும் மஹிமாவின் முதுகுத்தண்டில் அடிபட்டு கழுத்துக்குக் கீழ் எந்த பாகத்தையும் அசைக்க முடியாத நிலை. ஓரிரு வருடத்தில் மனோகருக்கும் வலக் கண் மையப் பார்வையில் குறைபாடு ஏற்பட்டிருக்கிறது. பார்வைக் குறைபாடு வேகமாக அதிகரித்திருக்கிறது.

மஹிமாவோ படுக்கையை விட்டு நகர முடியாத நிலை. மனோகருக்கோ தீர்க்க முடியாத பார்வைக் குறைபாடு. அது அடுத்த கண்ணிலும் பரவக் கூடிய அபாயம் இருக்கிறது. அதற்குள் தங்களது வாழ்நாளுக்குத் தேவையான பொருளினை ஈட்ட வேண்டிய கட்டாயம்.

பார்வையை முழுவதும் இழப்பதற்கு முன்பு, மதுரையை பற்றிய நினைவுகளை புத்தகமாகவும், மதுரை வீதிகளையும், கோவில் மற்றும் கட்டடங்களை கருப்பு வெள்ளை ஓவியமாகவும் வரையுமாறு மஹிமா கேட்டிருக்கிறார். வரைந்த படங்களை மகிமாவே படுக்கையில் இருந்தவாறு வியாரம் செய்திருக்கிறார். பார்வை நன்றாக இருந்த பொழுது வரைந்ததைக் காட்டிலும், கண்ணில் கோலாரினை வைத்துக் கொண்டு மகிமாவுன் பேசிக்கொண்டே வரைந்த ஓவியங்கள் அதிகம், தரமும் முன்பிருந்ததை விட அதிகம் என்று சொல்லிய போது ஆச்சர்யமாக இருந்தது. ஆதர்ஷ்ய தம்பதிகள் என்ற வார்த்தையின் அர்த்தமும் உரைத்தது.

30 வருடம் ஒரு நிறுவனத்தில் வேலை செய்து ஓய்வு பெரும் பொழுது கிடைத்த ரொக்கம் 3.5 லட்சம். மஹிமாவுன் இருக்க நேர்ந்த ஓய்வு காலத்தில் வரைந்த ஓவியம் மூலமாகவும், எழுதிய புத்தகம் மூலமாகவும் கிடைத்த பணம் 38 லட்ச ரூபாய் என்றார். அந்த பணம் முழுவதும் சங்கர நேத்ராலயா, ஸ்ரீ அரவிந்தர் கண் மருத்துவமனை போன்ற அறக்கட்டளைக்கு ஏழை மக்கள் பயனடையுமாறு மனோகர் தம்பதியினர் நன்கொடையாக வழங்கி வருகிறார்கள். (நீங்கள் வாங்கும் மனோகரின் ஓவியமோ, வாழ்த்து அட்டையோ, புத்தகமோ எதுவாக இருப்பினும் அதன் மூலம் கிடைக்கும் பணம் நேரடியாக ஏழை மக்களுக்குச் செல்கிறது. அதற்காக நிச்சயம் வாங்க வேண்டும் என்று கோஷம் போடவில்லை). மஹிமாவின் மீதான மனோகரின் காதல் பரவசமானது. சலித்துப் பார்த்தால், அவர் பேசிய கோர்வையான வாக்கியங்களின் தொடக்கத்திலும், முடிவிலும் மஹிமா என்ற பெயர் இருக்கும். ஒரு வட்டத்தின் மையம் போல அவருடைய மனைவியின் ஞாபகத்தை அழுத்தமாக இருத்தி முழு உரையைப் பேசி முடித்தார்.

கேணியில் அவர் பேசிய 3 மணி நேரத்தில் 'மஹிமா' என்ற பெயரை நூறு முறைக்கு மேல் உச்சரித்திருப்பார். கல்யாண நிச்சயம் ஆனது முதல், மஹிமா இறந்தது வரை வரையப்பட்ட பல ஓவியங்களையும் காண்பித்தார். தொடர்புடைய பல அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். தேவையான பொழுது ஞாநியிடன் உதவி கேட்டு, மடிக்கணினியை அவர் உபயோகித்த விதம் ஆச்சர்யமாக இருந்தது.

ஒரு கேள்விக்கான பதில் எனக்கு சுவாரஸ்யம் நிரம்பியதாக இருந்தது. ஒவ்வொரு உலகியல் அனுபவத்திலும் அவருடைய மனைவியை எப்படி நினைவு கூர்கிறார் என்பதை தெரிந்து கொள்ளும் பதிலாகவும் அது அமைந்தது.

புழு, பட்டாம் பூச்சியாக மாறும் விதத்தை குழந்தைகளுக்கு அனுபவபூர்வமாக கற்பிப்பதர்க்காக அவருடைய மகள், தேவையான இலைகளுடன் ஒரு பட்டாம் பூச்சி முட்டையிலிருந்து வெளியில் வந்த புழுவை பாட்டலில் வளர்த்தாராம். இலைகளை சாப்பிட்டு வளர்ந்த கூட்டுப் புழு முழுமையான வடிவம் பெற்று ஒரு நாள் வெளிச்சத்தை நோக்கிப் பறந்து சென்றதாம். என்னுடைய மஹிமாவும் அப்படித்தான். படுத்த படுக்கையில் சுமக்க முடியாத பாரங்களை சுமந்தாள். அவளுக்கான நேரம் வந்ததும் ஒரு பட்டாம் பூச்சியைப் போல வெளிச்சத்தை நோக்கி பறந்து விட்டாள் என்ற போது அவருடைய முகம் பூவைப் போல மலந்தது. அவருடைய உதடசைவில் மீசை கூட பறக்கத் துடிக்கும் பட்டாம் பூச்சி போலவே இருந்தது.

'இருட்டு என்பதே குறைந்த வெளிச்சம்' என்று எங்கோ படித்த ஞாபகம். குறைந்த வெளிச்சத்தையும் காண முடியாத நிலையிலுள்ள ஓர் ஓவியனை சந்திக்க இருப்பது பரிதாபத்திற்குரியது என்ற எண்ணங்களுடனே மனோகரை சந்திக்க கேணிக்குச் சென்றிருந்தேன். திரும்பும் பொழுது மனோகரின் 'எனது மதுரை நினைவுகள்' நாவலில் வரும் ஜித்தன் சாட்டர்ஜியின் மனநிலையுடன் எனது மனநிலை ஒத்திருந்தது. நாவலில் சாட்டர்ஜி சொல்லியவை...

"மிஸ்டர் மனோகர், நான் உங்களைப் பார்த்துப் பரிதாபப் படவே இல்லே. ஒரு விதத்தில் உங்களைக் கண்டு பொறாமைப் படறேன்னு சொல்லலாம்."

நீங்கள் கூட மனோகருடன் உரையாட நேர்ந்தால் நிச்சயம் பொறாமைப்படுவீர்கள். பொறாமை என்பது இத்தனை சந்தோஷத்தைத் தரக்கூடிய சிறந்த, அழகான விஷயம் என்பதை முதன் முறையாக, அந்த அழகான மாலையில் உணர்ந்தேன். அப்பொழுது ஹெலன் கெல்லரின் வார்த்தைகளை நினைத்துக் கொண்டேன்.

'The best and most beautiful things in the world cannot be seen or even touched. They must be felt with the heart." - Helen Keller

மனோகர் தேவதாசைப் பற்றிய இதர பதிவுகள்:
1. வாழ்க்கையல்ல... வேதம்! - எழுத்தாளர் ரவிபிரகாஷ்
3. எனது மதுரை நினைவுகள் - மனோகர் தேவதாஸ்
4.
கேணி சந்திப்பு - பிரபாகரன்

கேணியின் அடுத்தடுத்த சந்திப்புகள் பற்றிய விவரம்:

டிசம்பர் - எழுத்தாளர் வண்ணதாசன்.
ஜனவரி - தமிழிசை மற்றும் தமிழிசை மரபு பற்றி
பிப்ரவரி - கர்னாடக சங்கீதக் கலைஞர் TM கிருஷ்ணா

பின் குறிப்பு:
1. நீண்ட நாள் கழித்து எழுதுவதால் ஞாபகத்தில் இருப்பதை மட்டுமே எழுதி இருக்கிறேன்.,
2. Multiple Facets Of My Madurai, Green Well Years, A Poem To Courage, Dreams, Seasons And Promises, எனது மதுரை நினைவுகள் போன்ற புத்தகங்கள் விலைக்குக் கிடைக்கிறது.
3. புத்தக விற்பனையில் கிடைக்கும் பணம் கண்மருத்துவ மனைகளுக்கு நன்கொடையாக அளிக்கப் படுகிறது.
4. East West Books (madras) Pvt Ltd மற்றும் கண்ணதாசன் பதிப்பகத்தில் இவருடைய புத்தகங்கள் கிடைக்கிறது.

Tuesday, November 9, 2010

திருவடிசூலம் to திருக்கழுக்குன்றம்

ஜில் புயலின் மூர்க்கம் தணிந்து காலநிலை சாதகமாக இருந்ததால், பால்ய நண்பன் வில்சன்ராஜின் திருமணத்திற்கு திருக்கழுக்குன்றம் கிளம்பினேன். மாலை 6 மணிக்கு நடக்கவிருக்கும் திருமண வரவேற்பிற்கு காலை பத்து மணிக்கே 10 நண்பர்களுடன் கிளம்பிவிட்டேன். முதலில் திருவடிசூலம் என்ற மலை கிராமத்திற்கு செல்வதாக முடிவானது. செங்கல்பட்டு - திருபோரூர் செல்லும் வழியில் இருக்கிறது. பனைமர உயர அம்மன் சிலையை நிர்மாணித்து இந்த ஊரில் கோவில் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.எங்களுடைய குலசாமி முனீஸ்வரன். என்னுடைய தம்பிக்கு இந்த அம்மன் தான் குலசாமி மாதிரி. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை.

சிலையை கிராமத்தில் எடுத்து வந்து சேர்க்க ஏதோ ஒரு ஷிப்பிங் கம்பெனியை அணுகினார்களாம். பல லட்சம் தரவேண்டியிருக்கும் என்று அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதே நேரத்தில் கம்பெனி முதலாளிக்கு நீண்ட நாட்கள் இழுத்துக் கொண்டிருந்த வேறொரு வியாபாரத்தில் பெருத்த லாபம் கிடைத்ததாம். இந்த சிலை வந்த நேரம் தான் அதிர்ஷ்டம் கொட்டுகிறது என்று இலவசமாகவே சிலையை கிராமத்திற்கு எடுத்து வந்து கொடுக்கச் சொன்னாராம். L&T கூட இலவசமாகவே சிலையை பூப்போல எடுத்து நிமிர்த்தினார்கலாம். அதுமட்டுமில்லாமல் இரண்டு நிறுவனமும் ஏதோ நன்கொடை வேறு வழங்கி இருக்கிறார்கள்.

"இதையெல்லாம் யாரும் சும்மா செய்யமாட்டாங்கடா...! ஏதோ சக்தி இருக்குது...! நீ வேணும்னா பாரு, இன்னும் கொஞ்ச நாள்ல இந்த இடம் பெரியப்பாளையம் மாதிரி, திருவேற்காடு மாதிரி... பிரபலம் ஆயிடும்" என்று தம்பி சொல்லிக் கொண்டிருந்தான். சிலையின் பிரம்னாண்டத்தைப் பார்த்தவுடன் எனக்கும் அப்படித்தான் தோன்றியது.

திருபோரூர் செல்லும் பிராதான சாலையில் திருவடிசூலம் அமைந்துள்ளது. மலைகள் சூழ்ந்த அமைதியான கிராமம். பிரதான சாலைகள் கூட வளைந்து நெளிந்துதான் செல்கிறது. அங்கிருந்து பிரிந்து செல்லும் கிளைச் சாலையின் 3 கி மீ தொலைவில் இந்த இடம் அமைந்துள்ளது. அம்மன் கோவில் செல்லும் வழியில் பழமைமிக்க சிவஸ்தலம் அமைந்துள்ளது. (ஞானபுரீஸ்வரர், இடைச்சுரநாதர்) அதனைக் கடந்து சென்றால் 'ஆதி பரமேஸ்வரி தேவி ஸ்ரீ கருமாரியம்மன் க்ஷேத்ரம்' பிரமாண்டத்துடன் நம்மை வரவேற்கிறது.

நாங்கள் சென்ற நேரத்தில் ஜோடியாக இரண்டு தம்பதியினர் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களைத் தாண்டி சென்றதும் பூசாரி எங்களை வரவேற்று தீப ஆராதனை காண்பித்தார். போலவே ரவா கேசரியை தொன்னையில் வைத்துக் கொடுத்தார். நாங்களும் பிரசாதம் சாப்பிட உட்கார்ந்தோம். இலவச பிரசாதம் சுவையாக இருந்தது.

கோவில் கோபுரங்கள் இன்னும் முழுமை பெறவில்லை. அதற்கான பணிகளை நன்கொடையின் மூலம் செய்து கொண்டிருக்கிறார்கள். கட்டுமானப் பணிகள் முடிந்ததும், பிரம்மாண்ட அளவில் கும்பாபிஷேகம் நடக்க இருப்பதாக பூசாரி பகிர்ந்துகொண்டார். கோபுரவிழா விரைவில் நடக்கவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் கீழ்கண்ட முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்.

ஆதி பரமேஸ்வரி தேவி ஸ்ரீ கருமாரியம்மன் க்ஷேத்ரம்,
ஸ்ரீ கோவில்புரம், திருவடி சூலம்,
செங்கல்பட்டு தாலுகா - 603108

(அல்லது)

9/13, முதல் மேற்கு தெரு,
காமராஜ் நகர், திருவான்மியூர்,
சென்னை - 41

ஒருவழிச் சாலையாக இருக்கும் திருபோரூர் சாலையை அகலப்படுத்த மக்கள் - சாலை மறியல் செய்ததாக நீண்ட நாட்களுக்கு முன்பு படித்த ஞாபகம். அவர்களுக்கு சாதகமாக விஷயம் நடக்குமெனில் இயற்கை அன்னை கொஞ்சம் அனுசரித்துக் கொள்ளவேண்டும். சிவன் கோவில் மூடி இருந்ததால் பார்க்க முடியவில்லை. அங்கிருந்து திருக்கழுக்குன்றம் சென்றோம்.

திருக்கழுக்குன்றம் - http://thirukalukundram.blogspot.com

மலைக்கோவிலுக்குச் செல்ல சாதாரணமாகவும், செங்குத்தாகவும் செல்லும் படிகளில் ஏறினோம். மூச்சுவாங்க கோவிலுக்குள் நுழையும் பொழுது அபிஷேகம் ஆரம்பமாகியிருந்தது. சிவனும், அம்மனும் அமிஷேகம் முடிந்து பிரகாசமாக காட்சி தந்தார்கள். கலை நயமிக்க தூண்களும், சித்திர வேலைப்பாடுகளும் மனத்தைக் கொள்ளை கொண்டது. எண்ணை விளக்கின் மனமும், ஒளியும் மனதிற்கு புத்துணர்வை அளித்தது. மலையின் மேலிருந்து ஊரினைப் பார்க்கும் பொழுது தெரியும் பெரிய கோவிலும், தெப்பக்குளமும், வயல் வெளியும் தேர்ந்த கலைஞனின் ஓவியம் போல தெரிந்தது. பூஜை முடிந்ததும் வேறு பதை வழியாக கீழே இறங்கினோம். அங்கிருந்து பெரிய கோவிலுக்கு சென்றோம்.


பெரிய கோவிலைச் சுற்றி வீடுகளும், கடைகளும் இருப்பதால் மக்கள் நெருக்கம் அதிகமாக இருக்கிறது. மழைக் கோவிலின் அமைதி இங்கு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். சிவனும் அம்மனும் அலங்காரமாக வீற்றிருக்கிறார்கள். முருகர், விநாயகர் என்று பல கடவுளுக்கும் சிறிய அளவில் கோவில்களும் உள்ளே இருக்கின்றன. வேகமாக ஒரு சுற்று சுற்றிவிட்டு திருமண வரவேற்பிற்குச் சென்றோம்.

நண்பன் அவனுடைய துணையுடன் மேடையில் நின்று கொண்டிருந்தான். அவனுக்கு வாழ்த்து சொல்லிவிட்டு பிரியாணி வேட்டையில் இறங்கினோம். பிரியாணியில் பீஸ் கம்மி, குஸ்கா அதிகம். வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு இருண்ட சாலையில் ஹெட் லைட் வெளிச்சத்தில் செங்கல்பட்டிலிருந்து வண்டலூர் வழியாக அம்பத்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் பயணமானோம். சில இடங்களில் பாலியல் தொழிலாளிகள் கையசைத்து நின்று கொண்டிருந்தனர். இந்த மாதிரி நபர்கள் சபலப்பட்டு நிற்பவர்களிடம் கொள்ளை அடிப்பது பரவலாக நடப்பதாக நாளேடுகளில் படித்தது ஞாபகம் வந்தது. தம்பி உடையான் படைக்கு அஞ்சான். கூடவே தடிமாடு மாதிரி வாலிபர்கள் பக்கத்தில் இருந்ததால் வண்டியை நிறுத்துமாறு தம்பியிடம் கூறினேன். "நல்லபடியா போறது உனக்கு புடிக்கலையா? அதுவும் இல்லாம பாக்கறவங்க என்ன நெனைப்பாங்க?" என்று தம்பி இடித்துரைத்தான்.

"அவர்களிடம் 10 நிமிடம் நேர்முகம் செய்வதில் நீ ஒன்றும் குறைந்து விடப்போவதில்லை" என்று குரலை உயர்த்தியதும் நிறுத்த சம்மதித்தான்.

"என்னமோ கடவுள் விட்ட வழி... டேய் கழுத்துல நகை இருந்தா மறச்சிக்கன்கடா.." என்று பின்னால் குரல் கொடுத்தான்.

"வண்டியிலிருந்து இறங்கி ஹாய்..." என்றதும் பாலியல் தொழிலாளிகள் ஓடி விட்டார்கள்.

"நீ ரம்பம்னு அவங்களுக்கு எப்படிடா பேசாமலேயே தெரிஞ்சிது" என்று தம்பி வண்டியுடன் சேர்த்து என்னையும் ஒட்டிக் கொண்டு ஊரை நோக்கி பயணமானான். என்னுடைய மனமோ தப்பித்து எதிர்திசையில் ஓடியவர்களுடன் பயணம் செய்துகொண்டிருந்தது.

Monday, November 1, 2010

உலகத் திரைப்பட விழா - சென்னை

சென்னையில் மழைக்காலம் ஆரம்பித்து ஓடுகிறது. பாதுகாப்பிற்கு குடையுடன் தான் அலைகிறேன். இருந்தாலும் செவந்த் சேனல் சினிமா தயாரிப்பு நிறுவனமும், இண்டர்நேஷனல் தமிழ் ஃபில்ம் அகாதமியும் இணைந்து 28.10.2010 முதல் 31.10.2010 வரை ஏற்பாடு செய்திருந்த சர்வதேசத் திரைப்பட விழாவிற்கு திட்டமிட்டு (மழைக்காக) ஒதுங்கினேன்.

முதல் நாளில், 20 நிமிடம் தாமதமாக விழா துவங்கியது. சாருவுக்காக எல்லோரும் காத்திருந்தார்கள். அவர் வந்ததும் செவந்த் சேனல் மாணிக்கம் நாராயணன் துவக்க உரையாற்றி விழாவைத் துவங்கி வைத்தார். எந்தவித லாப நோக்கும் இன்றி தனது கைக்காசைப் போட்டு இந்த விழாவை ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்தி வருவதாகவும் அதற்கு உறுதுணையாக இருக்கும் அனைவருக்கும் நன்றி கூறினார். சாருவுக்கும் மிஷ்கினுக்கும் நன்றி கூறிய பொழுது சாதாரணமாகப் பேசியவர், பத்திரிகை நண்பர்களுக்கு நன்றி கூறிய பொழுது நிறையவே உணர்ச்சி வசப்பட்டார். சமாளித்துக் கொண்டு சாருவை பேச வருமாறு அழைத்தார்.

மிருதுவான நடையில் துருதுரு பார்வையுடன் சாரு பேச வந்தார். ஏற்கனவே எழுதியிருந்த சினிமா கட்டுரைகளை புத்தகத்திற்காக தொகுத்துக் கொண்டிருக்கிறேன். அந்த பணியின் காரணமாக 10 நிமிட தாமதமாகிவிட்டது. மன்னித்துக் கொள்ளுங்கள். முதல் பக்கத்தில் 'நண்பன் மிஷ்கினுக்கு' என்று எழுதி விட்டுத்தான் இங்கு வந்திருக்கிறேன் என்று பேச ஆரம்பித்தார்.

நானும் ஒரு தயாரிப்பாளரும் மதுவினை குடித்துக் கொண்டிருந்தோம். வேறொரு முக்கியமான சினிமா நண்பர் அப்பொழுது வந்தார். எங்களுடன் சேர்ந்து கொள்ளுங்கள் என்றோம். 'இன்று மட்டும் குடிக்க மாட்டேன்' என்றார். காரணத்தை ஆவலுடன் கேட்டோம்.

'இப்பதான் சார், எந்திரன் பாத்துட்டு வரேன். குடிச்சேன்னா எங்கிட்ட இருக்குற சினிமா நண்பர்களுக்கு ஃபோன் போட்டு, மனசு தீர படம் எடுத்தவங்களை திட்டிடுவேன். அப்புறம் நான் சினிமாத் துறையிலையே இருக்க முடியாது... என்னை விட்டுடுங்க..' என்றார்.

எனக்குக் கூட 50 வயசு ஆள் 25 வயசு பையன் மாதிரி காலேஜ் ஸ்டுடென்ட் வேஷம் போட்டுக் கொண்டு மரத்தை சுற்றி ஆடுவதைப் பார்க்கும் பொழுது கரப்பான் பூச்சி உடம்பில் ஊறுவது போல இருக்கிறது. இதற்கு சுவிசர்லாந்து வேறு செல்கிறார்கள். அமிதாபச்சன் 56 வயது கிழவனாக 25 வயது பெண்ணைக் காதலிப்பது போல நடிக்கிறார். எந்த பந்தாவும் இல்லாமல் 25 வயது பையனின் காலில் விழுகிறார். Black, Paa போன்ற வித்யாசமான முயற்சிகளின் மூலம் சினிமாவை முன்னெடுத்துச் செல்கிறார். அந்த துணிச்சல் ரஜினி போன்ற நடிகர்களுக்கு இல்லை. ரஜினி இது போன்ற விழாக்களுக்கு வந்து ஊக்கப்படுத்த வேண்டும். திருவனந்தபுரத்தில் நடக்கும் சர்வதேச பட விழாக்களுக்கு நான் செல்லுவதே இல்லை. கடைசி வரை நின்று கொண்டுதான் பார்க்க வேண்டும். சென்னையிலும் அது போன்ற ஆரோக்கியமான நிலை உருவாக வேண்டும். அதற்கு ரஜினி போன்றவர்கள் முன்வர வேண்டும். இது ஒரு கோரிக்கை மட்டுமே என்று உரையை முடித்தார்.

அழுவது மாதிரியான சுகம் வேறெதுவும் இல்லை. என்னுடைய துணை இயக்குனர்களிடம் 'அழுங்கடான்னு' சொல்லுவேன் என்று பத்திரிகை நண்பர்களைப் பற்றி பேசியபொழுது மாணிக்கம் நாராயணன் சிந்தாத கண்ணீருக்கு கனத்தை ஏற்றினார் இயக்குனர் மிஷ்கின். அவருடைய படத்திற்கான ஸ்கிரிப்ட் எழுதும்போது ஓர் இடத்தில் அடக்க மாட்டாமல் அழுதாராம். அந்த நேரத்தில் சுகமாக இருந்தது என்றார். அவருடைய அம்மாவுடன் சண்டையிட்டு வீட்டைவிட்டு வெளியில் வந்து 13 வருடங்கள் ஆகிறதாம். மறுபடியும் வீட்டிற்கு திரும்பவே இல்லை என்றார். இது வரை 22 வேலைகள் பார்த்திருக்கிறேன். எதுவுமே பிடிக்கவில்லை. லேண்ட்மார்க்கில் இருந்த பொழுது நிறைய புத்தகங்கள் வாசித்தேன். மணிரத்னம் போன்ற மனிதர்களை சந்திக்க முடிந்தது. அவர்களுடன் உரையாட முடிந்தது. அதன் பிறகு சினிமாவில் இருப்பதுதான் பிடித்திருக்கிறது.

சினிமாவைத் திரையிடும் இருட்டறையில் இருக்கும் பொழுது, தாயின் கருவறையில் மீண்டும் சென்றது போல இருக்கிறது என்று இரண்டு கைகளையும் அகலமாக விறித்து நின்றார். டைடானிக் ஹீரோ கெட்டப்பில் மாடியின் உச்சியில் நின்றுகொண்டு கூவம் நதியைச் சுட்டிக் காட்டும் கவுண்டமணியின் பிம்பம் என் கண்களுக்குள் தோன்றி மறைந்தது. போலவே விறித்த கைகளை விறித்தவாறு மிஷ்கின் சுகமாக நின்று கொண்டிருந்தார்.

நல்ல படங்களை எடுக்கும் சூழல் தமிழகத்தில் இல்லை. 'சித்திரம் பேசுதடி, அஞ்சாதே' இரண்டும் மட்டமான படங்கள். ஆனால் ஹிட். நந்தலாலா அருமையான படம். வெளியிடுவதற்கு சிரமப்பட வேண்டியிருக்கிறது. ஒரு படத்தின் ஸ்கிரிப்ட் எழுதுவதற்கு வெளியில் செல்ல இருந்தாராம். இந்த விழாவுக்கு அழைத்ததால் அதையும் பொருட்படுத்தாமல் வந்தாராம். ஹிந்தியில் ஒரு படம் இயக்க இருப்பதாகவும், நந்தலாலா தீபாவளி கழித்து இரண்டு வாரங்களில் வெளிவர இருப்பதாகவும் தெரிவித்தார். இந்தப் படத்தில் இளையராஜா அருமையான குத்துப்பாடல் ஒன்றை அமைத்திருப்பதாக பகிர்ந்து கொண்டார்.

வேறு யாரையோ வைத்து இந்த குத்துப் பாடலை இசையமைத்து இளையராஜாவைக் கேட்காமல் படத்தில் சேர்த்து விட்டதால் மிஷ்கினுடன் கருத்து வேறுபாடு என்ற செய்தியை நாளேடுகளில் படித்த ஞாபகம். கிக்கிஜிரோ என்ற ஜப்பானிய படத்தின் தழுவல் தான் நந்தலாலா என்று சினிமா நண்பர்கள் சொல்லக் கேட்டதும் ஞாபகம் இருக்கிறது.

மிஷ்கின் தனது உரையை நிறைவு செய்த பொழுது 'ஜாக்கிசேகர்' அருகில் வந்து அமர்ந்தார். அடுத்து டாக்டர் க்ளோரியானா G செல்வநாதன் பேச வந்தார். இவர் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் (மீடியா) பெற்றவர். தொலைகாட்சி மற்றும் பத்திரிகைகளில் நிருபராக வேலை பார்த்தவர். ஒரு TV சேனலையும் நடத்திய அனுபவம் உண்டு. குறும்படங்கள் எடுப்பதற்கு தயாரிப்பாளராக இருக்கிறார். இவர் பங்களித்த குறும்படம் பரிசைப் பெற்றதால் பரவலாக அறியப்பட்டு 2008 ஆம் ஆண்டு ஆசிய பசுபிக் திரைப்பட விழாவின் இயக்குனராக இருந்திருக்கிறார். பிரான்ஸ், ஜெர்மன், லண்டன் போன்ற இடங்களில் திரைப்பட விழாக்கள் நடத்துகிறார்.

உலகப் பட விழாக்களில் ஆங்கிலத்தில் பேசிப்பேசி அலுத்துவிட்டது. இங்கு தமிழில் பேசுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. செவந்த் சேனல் நிறுவனம் மற்றும் இண்டர்நேஷனல் தமிழ் ஃபில்ம் அகாதமியுடன் இணைந்து இந்த விழாவை ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்துவது மகிழ்ச்சியாக இருக்கிறது. திரையிடப் போகும் படங்கள் எல்லாம் சர்வதேச விழாக்களில் ஒரு முறையாவது பங்குபெற்ற திரையிடப்பட்ட படங்கள். எனவே வடிகட்டப்பட்ட படங்களிலும் வடிகட்டப்பட்ட முக்கியமான படங்கள் தான் காண்பிக்க இருக்கிறோம். எதிர் வரும் நான்கு நாட்களும் நான் உங்களுடனே இருப்பேன். எப்பொழுது வேண்டுமானாலும் என்னுடன் உரையாடலாம் என்று உரையை முடித்தார்.

முதல் படம் திரையிடப்பட்ட ஐந்தாவது நிமிடத்தில் சிணுங்காத தொலைபேசியைக் காதில் வைத்துக் கொண்டு ஜாக்கிசேகர் வெளியில் சென்றார். அரங்கில் இருந்தவர்களில் பலரும் தெறித்து ஓடினார்கள். அப்பொழுதேசுதாரித்து இருக்க வேண்டும். எல்லாம் என்னுடைய நேரம், வேறொன்றும் சொல்லுவதற்கு இல்லை. அரை மணி நேரம் கழித்து வெளியில் சென்றேன். "என்னங்க தலையும் புரியல... காலும் புரியல... ஒன்னும் சரியில்லையே" என்று ஜாக்கியிடம் கேட்டேன்.

"அது முன்னாடியே தெரிஞ்சதாலதான் எழுந்து வந்துட்டேன்" என்று கூலாக பதில் சொன்னார். முதல் நாளை அப்படியே முடித்துக் கொண்டு ஜாக்கிக்கு டாட்டா காட்டினேன். எதிர் டாட்டா காட்டியவர் இருட்டறையில் மறைந்து போனார்.

இரண்டாவது நாள் வேலை இருந்ததால் செல்லவில்லை. ஆகவே மூன்றாம் நாள் சென்றிருந்தேன். பத்து நிமிடம் தான் அரங்கில் படம் பார்த்தேன். பாலுமகேந்திரா திரைப் பட்டறையில் படித்த அனந்துவை சந்தித்தேன். சுரேஷ் கண்ணனின் சினிமா கட்டுரைகளை வெகுவாகப் புகழ்ந்தார். அண்ணா சாலையில் நடந்தவாறே 'ஆதவன், இபா, எஸ்ரா, ஜெமோ, கோபி கிருஷ்ணா, கோணங்கி, லாசாரா' என்று பலரது நாவல்களையும் பற்றி பேசிக் கொண்டே ஒரு தூதரகத்தின் அருகில் சென்று நின்றார். அங்கு வேலை செய்யும் அவருடைய நண்பரான கணேஷை அறிமுகப் படுத்தினார்.

அலுவலகத்தில் நான் வேலை செய்வதைப் பார்த்து 'உன் வாழ்க்கை யாருக்குடா வரும்' என்று உடன் வேலை செய்த பலரும் பொறாமைப் பட்டதுண்டு. வாழ்க்கையில் முதன் முதலில் ஒருவரைப் பார்த்து பொறாமைப் படுகிறேன் என்றால் அது கணேஷாகத் தான் இருக்கும். அவர்களுடன் உரையாடியே விழாவின் மூன்றாவது நாளைக் கழித்தேன்.

விழா நடத்துனர் க்ளோரியானாவிடம் உரையாடும் சந்தர்ப்பம் கடைசி நாளன்று கிடைத்தது.

கேள்வி 1: விழாவுக்கான படங்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள்?

சர்வதேச பட விழாக்களில் ஒரு முறையாவது பங்கு பெற்ற படங்களைத் தான் தேர்வு செய்கிறோம். தேர்வு நாட்டிற்கு நாடு வேறுபாடும். திரையிடப் போகும் நாடுகளின் அரசியல், மதம், கலாச்சாரம், வெளியுறவுக் கொள்கைக்கு ஏற்ப படங்களைத் தேர்வு செய்து தணிக்கைத் துறைக்கு அனுப்புவோம். அவர்களின் ஒப்புதலுக்குப் பிறகுதான் இங்கு திரையிடப் படுகிறது. சில படங்களை தணிக்கைத் துறையினர் நிராகரித்து விடுவார்கள்.

கேள்வி 2: விழாவின் துவக்கத்தில் திரையிடப்பட்ட படத்தினை எதன் அடிப்படையில் தேர்வு செய்தீர்கள்?

ஒன்றிணைந்த ரஷ்யா சிதறியபொழுது உருவான சிறிய தேசம் தயாரித்து இயக்கிய முதல் படம் என்பதால் இந்தப் படத்தை தெரிவு செய்தேன். புதியவர்களை அறிமுகம் செய்வதும் நமது பணி தானே. (http://www.sweatybeards.com)

கேள்வி 3: தமிழ் ஃபில்ம் அகாதமி இணைந்து நடத்தும் விழாவில் ஒரேயொரு தமிழ்ப் படம் கூட திரையிடப் படவில்லையே - ஏன்?

தமிழ் படங்கள் இங்கு ஏற்கனவே திரையிடப்படுகின்றன. குறும்படங்களையும் சில தொலைக்கட்சி சேனல்கள் ஒளிபரப்புகின்றன. அதே படங்களை மறுபடியும் ஒளிபரப்ப வேண்டாமே என்று தான் கருதினோம். மற்றபடி தவிர்க்க வேண்டிய அவசியமில்லை. வெளிநாடுகளில் விழாவை நடத்தி இருந்தால் கண்டிப்பாக தமிழ்ப் படமும் காண்பித்திருப்போம்.

கேள்வி 4: திரையிடப்படும் படங்களுக்காக எவ்வளவு செலவு செய்கிறீர்கள்?

ஒரு முறை திரையிடுவதற்கு 100 EURO முதல் 1200 EURO வரை படத்தினை வாங்கிய கம்பெனிக்குக் கொடுக்க வேண்டும். குறும்படத்திற்கு 50 EURO வரை கொடுக்கிறோம். அவர்களுக்கு இதுதானே வருமானம்.

இரண்டாவது கேள்வியை மனதில் வைத்துதான் அவருடனான உரையாடலை ஆரம்பித்தேன். அதற்கான பதில் கிடைத்துவிட்டதால் நேரம் எடுத்து உரையாடியதற்கு நன்றி கூறி விடை பெற்றேன்.

28-ஆம் தேதி காலையில் தினத்தந்தி வாசித்த பொழுது என்னுடைய ராசிக்கு 'புதிதாக நல்ல அறிமுகம் கிடைக்கும்' என்றிருந்தது. நாளிதழை வைத்துவிட்டு செல்பேசியைக் கையில் எடுத்தேன். 29-ஆம் தேதி வளைகாப்பு ஏற்பாடாகி இருந்த தங்கைக்கு, முந்திய நாள் அதிகாலை 1.50-க்கு அழகான ஆண் குழந்தை பிறந்திருப்பதாக ஹேம்நாத்திடமிருந்து தகவல் வந்திருந்தது. இந்த நான்கு நாட்களில் எத்தனையோ நண்பர்கள் அறிமுகமானார்கள். இருந்தாலும் தோளில் ஏறி தலையில் ஒன்னுக்கடிக்கப் போகிறவன் போல வருமா? விழா முடிந்ததும் அவனைப் பார்ப்பதற்கு தான் சென்றுகொண்டிருக்கிறேன். அடுத்த ஆண்டு சுட்டிப் பையனும் என்னுடன் வருவான்.