Thursday, January 31, 2013

விஸ்வரூபம் – அமெரிக்க ஏஜென்ட்

கணவனை சந்தேகப்படும் தமிழ் பிராமணப் பெண்ணாக பூஜாகுமார் அறிமுகமாகிறார். இவர் ஓர் அணு விஞ்ஞானியும் கூட. மேலும், இவருக்கு மிகப் பிடித்த உணவு மசாலா தடவி வேக வைத்த முழுக்கோழி. கதக் நடனம் கற்றுக் கொடுக்கும் ஆசிரியராக அவரது கணவர் கமல். மனைவிக்குப் பிடித்த உணவுகளை சமைத்தும் கொடுக்கிறார். மனைவியின் மீது அவ்வளவு அன்பு. கதக் நடனம் கற்றுக்கொள்ளும் மாணவியாக ஆண்ட்ரியா வருகிறார். உடும்பு போல ஆசிரியரை ஒட்டிக்கொண்டிருக்கும் மாணவி. 

ஆசிரியருக்கும், மாணவிக்கும் கசமுசா இருக்கிறது என்ற சந்தேகத்தில், கமலை கண்காணிக்க ஒரு பிரைவேட் டிடக்டிவ்வை ஏற்பாடு செய்கிறார் பூஜாகுமார். கமல் ஹிந்து அல்ல, உண்மையில் முஸ்லிம் என்பது அப்பொழுது தான் தெரிய வருகிறது. பூஜா குமார் ஆச்சார ஹிந்து பிராமின் என்பது குறிப்பிடத்தக்கது. என்றாலும் அமெரிக்காவில் வளர்ந்தவள் இல்லையா! ஆகவே தனது முதலாளியுடன் கள்ளத் தொடர்பு வைத்துக்கொள்கிறாள். தலையைச் சுற்றுகிறதா? அதற்காகத் தான் தலைப்பைக் கூட “கள்ளத் தொடர்பில் இருப்பவளின் கள்ளக்காதல் சந்தேகம்” என வைக்கலாம் என்றிருந்தேன்.



கமலைப் பின்தொடரும் பிரைவேட் டிடக்டிவ் ஒருவனால் தாக்கப்பட்டு மரணிக்கிறான். கொலை செய்தவன் ஒரு முஸ்லிம். அவனுடைய இயக்கத் தலைவனான உமருக்கு செய்தி பறக்கிறது. இறந்தவனின் டைரியில் கமல் பற்றிய குறிப்புகளும் முகவரியும் இருக்கிறது. ஆகவே கொலை செய்தவன் கமலின் வீட்டிற்குச் சென்று கணவன், மனைவி என இருவரையும் கடத்துகிறான். இவருடைய புகைப்படத்தையும் உமர் மின்னஞ்சலில் அனுப்புமாறு கேட்கிறான். முதலில் கமலின் புகைப்படம் அனுப்பப்படுகிறது. அதைப்பார்த்த உமர் உடனே உத்தரவிடுகிறான்:

“பினைக்கைதியான கமலின் கால்முட்டியில் சுட்டுவிடுங்கள். அவனுக்கு உயிர் மட்டுமே இருக்க வேண்டும், அதுகூட நான் வரும் வரை” என்கிறான்.

பூஜாவின் கள்ளக் காதலனுக்கும் உமரின் கூட்டத்துடன் தொடர்பிருக்கிறது. தனது கூட்டத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும், பூஜாகுமாரின் கள்ளக் காதலனை கண் முன்னாலேயே சுட்டுத் தள்ளுகிறார்கள். இப்பொழுது கமலுடைய கால்களின் முட்டியை நோக்கி துப்பாக்கி குறி வைக்கப்படுகிறது. “கடைசி முறையாக அல்லாவைத் தொழ வேண்டும். ஒரு இஸ்லாமியனா என்னோட கடைசி ஆசை இது” என கோரிக்கை வைக்கிறார் கமல். எல்லாவற்றையும் உமரிடம் கேட்டுவிட்டுச் செய்யும் நபர், கழிவிறக்கத்தால் இங்கு தன்னிச்சையாக முடிவெடுக்கிறார்.  கைக்கட்டு அவிழ்க்கப்படுகிறது. முட்டிபோட்டு தொழுகை நடத்துகிறார் ஹீரோ. கண்ணிமைக்கும் நேரத்தில் எதிராளிகளை ஹாலிவுட்டை மிஞ்சும் சண்டைக் காட்சிகளில் துவம்சம் செய்கிறார் நம் உலக நாயகன்.

இங்கிருந்து தான் கதைக்களம் வேறு திசை நோக்கி பயணிக்கிறது. ஆப்கனுக்கு எதிராக நடக்கும் அமெரிக்கத் தாக்குதலில், பின்லேடனின் முக்கியத் துருப்பாக உமர் இருக்கிறான். அவர்களுடைய இயக்கத்தில் தமிழ் பேசும் இந்திய காஷ்மீரி இஸ்லாமியனாக கமல் நுழைகிறார். ஆனால்... ஆனால்... ஆனால்... அமெரிக்க மற்றும் இந்தியாவின் ரகசிய உளவாளியாக தனது வேலையைச் செய்யவே கமல் ஆப்கனுக்குச் செல்கிறார். தனது உளவு வேலையைக் கச்சிதமாக முடித்துவிட்டு, அமெரிக்காவின் அத்துமீறல்களுக்கு எதிரான ஆப்கனின் சுதந்திர வேட்கை இயக்கத்தை கபளீகரம் செய்துவிட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆகிறார் கமல்.

திரைக்கதை ஆப்கனை ஒட்டி பின்னப்பட்டுள்ளதால், இஸ்லாமிய பின்புலத்தை அல்லாமல் வேறெப்படி காண்பித்து கதாமாந்தர்களைக் காட்சிப்படுத்த இயலும் என்பது புரியவில்லை. இத்தனைக்கும் மசூதி அல்லது மக்கள் தொழுகை செய்யும் இடங்கள் போன்ற எதையும் கவனமாகக் காட்சிப்படுத்தாமல் கமல் தவிர்த்திருக்கிறார். அதனால் தான், “என்னுடைய முஸ்லீம் சகோதரர்களை காயப்படுத்தும் எந்த ஒரு விஷயமும் இந்தப் படத்தில் இல்லை” என பகிரங்கமாகச் சொல்கிறார். மேலும்
அல்-குவைதா தலைவர் ஒசாமா பின்லாடன் போல தோற்ற ஒற்றுமை உடைய ஒருவரைத் தான், ஆப்கான் இயக்கத்தினருக்கும், உமருக்கும் கட்டளையிடும் முக்கியத் தலைவராகக் காண்பிக்கிறார்கள். முழு படத்திலும் - மிக மெதுவாக பயணிக்கும் ஆப்கான் பகுதியில் தான் விஸ்வரூபம் பிரச்சனை, மத அரசியல் ரீதியாக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. எவ்வளவு தான் “வெட்டினாலும், ஓட்டினாலும், மொழிகினாலும்”, மேலும் மேலும் பிரச்னையை எழுப்ப மத அமைப்புகளுக்கு இங்கு நிறையவே வாய்ப்பிருக்கிறது.

இயக்க வேலையின் பொருட்டு வெவ்வேறு இடங்களுக்கு பயணத்தில் அலையும் உமர் திடீரென தனது வீட்டிற்கு வருகிறான். அங்கு தனது மனைவிக்கு ஆஸ்துமா வைத்தியம் பார்க்க வந்த ஆங்கில பெண் மருத்துவரிடம், “முதலில் உன் முகத்தை மூடு, உடம்பயும் மூடு, பிறகு வெளியில் எழுந்து போ” என்கிறான் உமர். அவள் மௌனித்து வெளியேறுகிறாள்.

“எங்க அம்மா கூட அஸ்துமாவால கஷ்டப்பட்டு இருக்காங்க... வைத்தியம் பார்க்கட்டுமே” என்கிறார் கமல்.

“பக்கத்துல தான் நம்ம ஆளுங்க தங்கி இருக்காங்க. இவ மூலமா எதிரிகளுக்கு  தகவல் போயிட்டா?” என்கிறான் தனது மனைவியின் உயிரைக் கூட துச்சமென மதிக்கும் உமர். மேலும் தனது ஒரே வாரிசை அழைத்து அறிமுகப்படுத்துகிறேன். தடங்கலின்றி கமலிடம் சரளமாக ஆங்கிலத்தில் பேச எத்தனிக்கும் அவனது மகனைக் கண்டு திகைக்கிறான். “நீ அவன் கூட இங்கிலீஷ்ல பேசுறியா?” என்கிறான் அவனுடைய மனைவியை நோக்கி. அவளோ “நான் இல்லை...” என அலறுகிறாள்.

இடையில் புகுந்து “அவன் ஸ்கூல்-ல கத்துக்கிட்டான்” என்கிறான் ஒருவன்.

“ஆமா... அவன் ஒருவேல ஸ்கூல்-ல கத்துக்கிட்டு இருப்பான்...” என்கிறார் கமல்.

“இங்க ஏது ஸ்கூல்?” என்று பக்கத்தில் இருந்து பேசியவனை முறைக்கிறான் உமர். லண்டனில் சிவில் என்ஜினியராக இருந்து, ஒரு சம்பவத்தால் கால்களை இழந்து சொந்த ஊரில் வசிக்கும் அவனே பிள்ளைகளுக்கு ஆங்கிலப் படம் சொல்லிக் கொடுப்பதாக சந்தேகப்பட்டு, அவனை எச்சரித்து அனுப்புகிறான் உமர்.

குழந்தையிடம் ஆங்கிலத்தில் பேசிப் பழக முயற்சிக்கிறார் கமல். ஊஞ்சலில் வைத்து சிறுவனை ஆட்டி விடுகிறார். அவனோ விலகிச் செல்கிறான். உளவாளிகளுக்கு குழந்தையும் ஒரு துருப்புச் சீட்டு தானே. இதனைக் காட்சிப்படுத்திய விதத்தில் இயக்குனர் கமலின் புத்திசாலித்தனம் வெளிப்படுகிறது.

தனது பிள்ளை போராளியாக வர வேண்டும் என்று ஆசைப்படுகிறான் உமர் அதற்கேற்ப அவனுக்கு பயிற்சியும் அளிக்கிறான். கண்களைக் கட்டிவிட்டு துப்பாக்கியையும் தோட்டாக்களையும் சிறுவனிடம் கொடுத்து, விரல்களால் தடவி ‘எந்த ரக துப்பாக்கி? எந்த ரகத் தோட்டா?’ என்பதைக் கண்டுபிடிக்கச் சொல்கிறான் உமர். (இங்கு ஒரு பிரச்சனை எழுந்தது. குரானை பிடுங்கிவிட்டு துப்பாக்கியை கையில் கொடுப்பது போன்ற காட்சி இருப்பதாக... ஆனால், அதனை நீக்கிவிட்டார்கள் என்று நினைக்கிறேன்.)

கமல் தனது சக உளவாளியுடன் சேர்ந்து, அபின் கவரில் ஒரு
TRACKER மறைத்து வைத்து அமெரிக்க படைகளுக்கு உதவி செய்கிறார். ஒரு சந்தர்பத்தில் இதனைக் கண்டுபிடித்து விடுகிறார்கள். பழியானது நிரபராதியான வேறொரு ஆப்கன் மீது விழுகிறது. அவனை அடித்து எல்லோர் முன்னையிலும் தூக்கில் மாட்டுகிறார்கள்.

இறந்தவனின் தாய் சொல்கிறாள்: “ஹே காஷ்மீரி. என் பையன காப்பாத்த யாருமில்லையே? அவன் நிரபராதி... உன் கண்முன்னாடி சாகிறான் பாரு!”

டு வீதியில் நிரபராதி தூக்கில் தொங்குவதைப் பார்த்து கண் கலங்குகிறார் கமல். சக உளவாளியுடன் தனியாகச் சென்று துக்கத்துடன் கேட்கிறார் கமல்:

“முன்னாடியே கவனிச்சி இருக்கனும்ல. அல்லா நம்மள மன்னிக்கவே மாட்டாரு!”

அதற்கு சக உளவாளி சொல்கிறான்: “நம்மளயா? உங்களன்னு சொல்லுங்க... என் பேரு மட்டும் தான் *********************. ஆனா மதம் இல்லையே!?” என்கிறான். இந்த இடத்தில் தியேட்டரில் விசில் பறக்கிறது. இது போன்ற சபாஷ் போடும் வசனங்கள் நிறையவே இருக்கிறது. ஆனால் கமலின் ரசிகர்கள் போடும் கூச்சலில் ஒருசில முத்துக்கள் தான் காதில் விழுந்தது.

ஒருசில உரையாடல் மூலம் கமல், தனது தாயின் மீதான நெருக்கத்தைக்  கட்டமைக்கிறார். ஓர் இடத்தில் உமர் சொல்கிறான், “அப்பன் இல்லாத பசங்க கில்லாடின்களா இருப்பாங்க!” என சொல்லிவிட்டுச் சிரிக்கிறான். அதற்கு பதிலாக “அப்பன் யாருன்னே தெரியாத பசங்க அதவிட கில்லாடின்களா இருப்பாங்க!” என்கிறார் ஏளனத்துடன் கமல். இந்த உரையாடலை வெளிப்படுத்தும் விதமே தாய் மீதான பாசத்தை ஒரு வெறியுடன் வெளிப்படுத்துவார். ஆகவேதான் அந்த  நிரபராதியின் தாய் “ஏய், காஷ்மீரி...” என்று ஒப்பாரி வைக்கும் போது கண்கலங்கி சஞ்சலம் அடைகிறார். அதுவே,
TRACKER மூலம் அமெரிக்கப் படைகளுக்கு சமிக்ஞை சென்று அதன் மூலம் குழந்தைகளும், பெண்களும் பலியாவதை நினைத்து அவர் மனம் கொஞ்சமும் சஞ்சலம் அடைவதில்லை. அடுக்கடுக்காக, கொத்துக்கொத்தாக அமெரிக்க படையின் மூலம் ஆப்கன் மக்களை பலி கொடுத்துவிட்டு, கதக் கலைஞராக அமேரிக்கா பறந்துவிடுகிறார்.

கொலையாளிகளிடமிருந்து தப்பித்த கமல், மற்ற உளவாளி நண்பர்கள் மூலம் உமரின் திட்டத்தை முறியடிக்கப் பறக்கிறார். பூஜாகுமாரின் முதலாளி இயந்திர சரிபார்த்தல் நிறுவனம் நடத்துகிறார். அந்த இயந்திரத்தின் உப பொருளாக  சீசியம் இருக்கிறது. அதனை சுரண்டி எடுத்து, கதிர்வீச்சை பரப்பும் வீரியம் கொண்ட துகள்களாக மாற்றி, புறாவின் கால்களில் கட்டி அதன் மூலம் நியூயார்க் நகரத்தில் கதிர்வீச்சைப் பரப்பி, நகரத்தையே அழிக்கப் பார்க்கிறான். இந்தத் திட்டம் கமலுக்கு ஏற்கனவே தெரியும். ஆகவே முறியடிக்க முயற்சி செய்கிறார். ஆனால் துரதிஷ்ட வசமாக அமெரிக்க போலீசிடம் சிக்கிக் கொள்கிறார். எந்த நாட்டு உள்ளூர் போலீசுக்கு இன்டர்நேஷனல் உளவாளிகளைக் கண்டுபிடிக்க முடிகிறது? ஆகவே, போலீஸ் கமலை ரவுண்டு கட்டி அடிக்கிறது. கமல் அதற்கெல்லாம் அசைந்து கொடுக்கவே இல்லை. “எம்பாஸிக்கு... ஒரு ஃபோன் மட்டும் பண்ணிக்கிறேனே?” என்கிறார். அடி பலமாக விழுகிறது. இந்தியத் தூதரக அதிகாரிகள் துரிதமாக வந்துதான் அவரைக் காப்பாற்றுகிறார்கள்.

இடையில் வானுயர்ந்த ஒரு கட்டிடத்தையும் உமரின் ஆள் வெடி வைத்துத் தகர்க்கிறான். அதனைத் தடுக்க நம் ஹீரோவால் முடியவில்லை. உமரின் ஆட்கள் யுரேனியத்தை பிரித்தெடுக்கும் இடத்திலும் ஒரு வெடி வைக்கப்படுகிறது. ஆட்கள் எல்லோரும் முழங்காலிட்டு ஜபிக்கிறார்கள். வெடிக்க வேண்டிய இடத்தின் அருகில் சிறுவர் பள்ளியும் இருக்கிறது. தொழுகை செய்யும் சமயத்திற்கு இடையில், குழந்தைகளை பாதுகாப்பாக வேறொரு இடத்திற்கு மாற்றுகிறார்கள். ஆனால் வெடி வெடிக்கிறது. இரண்டு பக்க ஆட்களும் (உமரின் ஆட்கள், அமெரிக்க போலீஸ்) கூண்டோடு கைலாயம் செல்கிறார்கள். இறுதியாக ஒரு சீசியம் வெடியையும் நைஜீரியன் ஒருவனால் வெடிக்க வைக்க உமர் ஏற்பாடு செய்கிறான். ஒரு பொத்தானை அழுத்த வேண்டியதுதான் பாக்கி. நைஜீரியன் முழங்காலிட்டு தொழுவதற்கு தயாராகிறான். அதே சமயத்தில் கமலும் தொழுகைக்கு ஆயத்தமாகிறார். உள்ளேயும், வெளியேயும் தொழுகை நடக்கிறது. இறை வணக்கத்தை முடித்துவிட்டு எழுந்துகொள்ளும் சமயம் போலீஸ் உள்ளே உழுந்து நைஜீரியனைச் சுடுகிறது. என்றாலும் யுரேனிய வெடியை தூரத்திலிருந்து வெடிக்க வைக்கும் முறையை உமர் உபயோகிக்கலாம். கமலின் மனைவி அணு விஞ்ஞானியாயிற்றே. ஓடி வந்து பார்க்கிறார்! நிலைமையின் தீவிரம் அவருக்கு புரிகிறது. மின்னினைப்பில் சூடாக்கப்பட்ட
OWAN-னை எடுத்து வெடியின் மீது கவிழ்க்கிறார். அந்தந மூலம் சீசியம் வெடி தகர்த்தெறியப்பட்டு அமெரிக்க நகரம் காக்கப்படுகிறது.

உமர் தனி விமானத்தில் பறக்கும் முன், நைஜீரியனுக்கு ஃபோன் பேசுகிறார். அதனை எடுத்து “உன் திட்டம் பலிக்காது... உன்ன விடமாட்டேன்...” என்கிறார் கமல். வெற்றிக் கூட்டணி மகிழ்ச்சியுடன் நடை போடுகிறார்கள். சிரித்துக் கொண்டே “ஹப்பா... நல்லபடியா முடிஞ்சுது...!” என்கிறார் பூஜா குமார்.

“இல்ல... ஒண்ணு நான் இருக்கணும், இல்ல அவன் இருக்கணும்...” என்பதாக விஸ்வரூபம் பாகம்
1 முடிகிறது. அதற்கு மேல் விஸ்வரூபம் பார்ட் 2-ல் தான் விடை தெரியும். அதற்கு முன்னர் விஸ்வரூபம் 1  தமிழகத்தில் வெளிவர வேண்டும். அந்த நாளுக்காகவே கமலின் கோடானு கோடி ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். தொழில்நுட்பம் சார்ந்தும், மேக்கிங் சார்ந்தும் சினிமா சார்ந்தவர்கள் வாய்பிளந்து பேச அவ்வளவு இருக்கிறது படத்தில். போலவே, அமெரிக்க சார்பில் நின்று கதையைக் கொண்டு சென்றதின் மூலம் விமர்சகர்களின் வாயிலும் கைப்பிடி அவலை அள்ளி கமல் போட்டிருக்கிறார். “விமர்சனத்தின் மூலம் வளர்ந்தவன் நான்” என கர்வத்துடன் சொல்லிக்கொள்பவர் கமல்ஹாசன். ஆகவே விமர்சகர்கள் பற்றி அவருக்குக் கவலை இல்லை.

தற்போதைய ஒரே கவலை விஸ்வரூபம் தடையைக் கோரும் மத அமைப்புகளும், அவர்களின் பின்னணியில் நிற்கும் தமிழக அரசும் தான்.
இந்தப் படத்தில் கமலின் மனைவியாக நடித்த பூஜாகுமார் “ஹையோ... கடவுளே!” என்று புலம்புவது போல ஒரு வசனம் வரும்.

அதற்கு “எந்தக் கடவுள்” என்று விஸ்-சாக நடித்த கமலஹாசன் கேட்பார். தியேட்டரில் விசில் சப்தம் பறந்தது.

கலைஞர்களுக்கு ரசிகர்கள் தானே “கடவுள், அட்சயபாத்திரம், கல்பதரு” என எல்லாம் என்று நினைத்துக் கொண்டேன். 

Friday, January 25, 2013

தி மியூசிக் ஸ்கூல் – சென்னை


சாதரணமாகத் தான் உள்ளே நுழைந்தேன். வெளியில் வரும்பொழுது ஸ்டாலில் அமர்ந்திருந்த பெண்மணி சிரித்தார். ஒரு எதிர் சிரிப்பு சிரித்தேன். அப்படியே, நைசாகக் கழண்டு கொள்ளலாம் என்றுதான் நினைத்தேன்.
“நீங்க என்ன பண்றிங்க?” என்றார்.

“என்ன செய்யறதுன்னு தெரியாமத் தானே இங்க சுத்திட்டு இருக்கேன்!” என்பதாக மனதில் நினைத்துக் கொண்டு, “எப்பவாச்சும் டயம் கெடச்சா ஆன்லைன் மேகசின்ல எழுதுவேன்...” என்றேன். (பெருமைக்கு பீத்திக்கின கதையாக...)


“எங்க ஊட்டுக்காரரும் ரைட்டர் தான்...” என்றார் அந்தப் பெண்மணி.


“(அடிசக்க...) இன்னாத்தபத்தி எழுதுவாரு உங்க ஊட்டுக்காறாரு?” என்றேன்.


“சினிமாவ பத்தி விகடன்ல எழுதுவாரு” என்றதும், அப்படியா என்று புருவத்தை உயர்த்தினேன். (சினிமா விமர்சனம் பத்தி நம்ம ஏன் படிக்கப் போறோம்? அதுவும் விகடன்ல...) 


“பாருங்க சிஸ்டர் எனக்கு சினிமா அறிவே கெடையாது. அதப்பத்தி அதிகமா தெரிஞ்சிக்கவும் பிரியம் காட்டினது இல்ல... அதனால உங்க ஊட்டுக்காறாரு பேர சொல்லுங்க... தெரியுதான்னு பாக்குறேன்...” என்றேன். (‘அவரு பேற என் வாயால எப்படி சொல்றது’ ன்னு அந்த சிஸ்டர் கேட்பார் என்றுதான் நினைத்தேன்.)


“செழியன்...” என்றார். தலையில் கொட்டியதுபோல தடவிக் கொண்டேன்.


“யாரு...? பரதேசி படத்துல கேமரா புடிக்கிறாரே அவரா?” என்றேன்.


“உங்களுக்குத் தெரியுமா?” என்றார்.


“NFSC-ல அமுதனின் டாக்குமெட்ரி பற்றி பேசிய போதும், அய்யப்ப மாதவனின் கவிதை நூல் குறித்து ஒரு முறை பேசிய பொழுதும் அவரை கடைசி இருக்கையில் இருந்தவாறு பார்த்திருக்கிறேன்.” என்றேன்.


“அடடே... உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்னு நெனச்சேன்...” என்றார் சுவாரஸ்யம் குறைந்தவராக.


“சரி போகட்டும்... அவரு கேமரா புடிக்கிறாரு... நீங்க மியூசிக்கா?” என்றேன்.


“அவரு கீ-போர்டுல 8th கிரேடு முடிச்சி இருக்காரு... அவரோடது தான் இந்த மியூசிக் ஸ்கூல். நானும் கூட இருக்கேன்...” என்றார். ஒரு வாழ்க்கைத் துணை என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். அதற்கு மேல் திருமதி செழியனே பேசுகிறார்:


இருந்த இடத்தில் இருந்தபடியே தொலைதூர வகுப்பில் மேற்கத்திய இசையைப் படிக்க எங்களுடைய நிறுவனம் வசதியை ஏற்படுத்திக் கொடுக்கிறது. ஏறக்குறைய தொலைதூர இசைப் பயிற்சி என்று வைத்துக் கொள்ளுங்களேன். இதற்கென தனியாக சிலபஸ் எல்லாம் இருக்கிறது. கற்றுக்கொள்ள ஆர்வம் தான் வேண்டும். 


“The Music School” - ஒரு முழுமையான மேற்கத்திய இசை பள்ளி. நம் எல்லோருக்கும் இசையைக் கற்றுக்கொள்ளும் விருப்பம் இருக்கிறது. ஆனால் எத்தனை பேருக்கு விரும்பியவுடன் கற்றுக்கொள்ளும் வாய்ப்புக் கிடைக்கிறது? எனவே விரும்பியவுடன் உங்கள் வீட்டில் இருந்தே இசையின் அடிப்படைகளை நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் எளிமையான பாடத்திட்டங்களுடன் “The Music School” துவங்கப்பட்டுள்ளது.


மேற்கத்திய இசைக்குறிப்புகளை ( Notations) படிக்கவும், எழுதவும், வாசிக்கவும் கற்றுக்கொள்வதற்கு வசதியாக இதன் பாடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த இசைப்பயிற்சியில் நீங்கள் மாணவராகச் சேர்வதன் மூலம் மேற்கத்திய இசையின் அடிப்படைகளை முழுமையாகக் கற்றுக்கொண்டு keyboard வாசிக்கும் திறமையைப் பெற முடியும். நீங்களோ உங்கள் குழந்தைகளோ அல்லது உங்கள் நண்பர்களோ இசை கற்க விரும்பினால் The Music School உங்களின் அற்புதமான தேர்வாக இருக்கும். 


திருமதி செழியன் சொல்லுவதிலும் உண்மை இல்லாமல் இல்லை. இணையம் வந்த பிறகு, இருந்த இடத்தில் இருந்தவாறு எல்லாவற்றையும் வரவழைக்க முடியும் என்னும் பொழுது இசையை மட்டும் வரவழைக்க இயலாதா என்ன? விருப்பம் இருந்தால் முயற்சி செய்து பாருங்கள். 


ஆனால் ஒன்று, இசையைக் கற்றுக் கொள்கிறேன் பேர்வழி என்று செழியனிடம் சேர்ந்துவிட்டு அசிஸ்டன்ட் கேமராமேனாக போஸ்டிங் கேட்கக் கூடாது. போலவே அவருடைய கேமரா கண்களால் படம் பிடிக்கப்பட்டு திரைக்கு வரும் புதுப்படங்களின் ஓசி டிக்கட்டையும் கேட்கக்கூடாது. இசைப்பள்ளியானது விதிமுறைகளுக்கு உட்பட்டது என்பதை நினைவில் கொள்க. மேலும் விவரங்களுக்கு:


The Music School
19/9, 
பிருந்தாவன் தெரு, 
மேற்கு மாம்பலம், 
சென்னை 600 033.
மின்னஞ்சல் : master@themusicschool.co.in
 தொலைபேசி : +91 - 94457 62191
http://www.themusicschool.co.in
FaceBook: The Music School

 ஸ்டாலை விட்டுப் புறப்படும் பொழுது வருகைப் பதிவேட்டில் பெயரையும், மின்னஞ்சலையும் எழுதச் சொன்னார். போலவே எழுதினேன்.

“எங்க வீட்டுக்காரருக்கும் உங்களுக்கும் தெரிஞ்ச பொது நண்பர் யாராச்சும் இருக்கணுமே?” என்றார்.

“சினிமாத் துறையில எனக்கு யாரையும் தெரியாதுங்களே சிஸ்டர்! அதுவுமில்லாம... அவங்க கூட பத்து நிமிஷம் பேசினா ஒரு சின்ன சிரிப்பு மட்டும் தான் பதிலா இருக்கும். பின்ன எப்படி தெரிஞ்சி வச்சிக்கிறது” என்றேன்.  


“நீங்க சொல்றதும் கரெக்ட் தான்...” என்றார். எனக்கு சந்தோஷமாக இருந்தது. 

கவிஞர் அய்யப்பமாதவனும் செழியனும் ஒரே ஊர்க்காரர்கள் என்பது திடீரென ஞாபகம் வந்தது. ஆகவே கவிஞரின் பெயரைச் சொன்னேன். அவரும் குறித்துக் கொண்டார். ‘கவிஞருக்கு என்னை ஞாபகம் இருக்க வேண்டுமே!’ என்ற யோசனையில் அங்கிருந்து கிளம்பினேன்.

“செழியன் கூடத்தானே லக்ஷ்மன ராஜா இருக்காரு... அவரு பேர சொல்லி இருக்கணுமோ!” என்ற யோசனையும் வந்தது. ‘க்கும்... யாருக்கும் என்னைத் தெரியாது. இதுல யாரு பேரைச் சொல்லி எமாத்துனா என்ன வந்தது?’ என்று திருப்திப்படுத்திக் கொண்டு விசிலடித்தவாறு அடுத்த ஸ்டாலை நோக்கி நடந்து சென்றேன்.