Tuesday, January 31, 2012

மைதானத்தில் மூன்றாம் அரங்கு

கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பயிற்சிப் பள்ளியில் ஹோவர்ட் ஃபாஸ்ட் தனது பயிற்சியை நிறைவு செய்யும் பொழுது, 1888 ஆம் ஆண்டு எழுதப்பட்ட “The Ancient Lowly” என்ற புராதன தொழிலாளர்களைப் பற்றிய வரலாற்றுப் புத்தகத்தைப் பரிசாகப் பெறுகிறார். இரண்டு தொகுதிகளைக்கொண்ட இப்புத்தகம் இரண்டாயிரம் பக்கங்களைக்கொண்ட து. அதிலிருந்துதான் ஸ்பார்டகஸ் பற்றிய கதைக்கரு ஃபாஸ்ட்டுக்கு உதித்திருக்கிறது. அதனை நாவலாக்கும் எண்ணம் நீண்ட நாட்களாக இருந்தாலும் ‘வில் பாயின்ட்’ சிறைவாசம்தான் அதற்கான சந்தர்ப்பத்தை வழங்கி இருக்கிறது. அதன்படி 1951-ஆம் ஆண்டு வெளிவந்த இப்புத்தகம், கடந்த 60 ஆண்டுகளில் உலகின் 100 மொழிகளுக்கும் மேல் மொழி மாற்றம் செய்யப்பட்டு பல லட்சம் பிரதிகள் விற்று சாதனை படைத்துள்ளது. “ஸ்பர்டகஸ், கிளாடியேட்டர்” என்ற பெயர்களில் திரைப்படமாகவும் வெளிவந்து பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது. “ஹைதராபாத் புக் டிரஸ்ட்” முயற்சி எடுத்து இந்நாவலை தெலுங்கில் வெளியிட்டுள்ளார்கள். அதனையும் ஆங்கிலத்தையும் மூலமாகக்கொண்டு ஏ. ஜி. எத்திராஜிலு இந்நாவலை தமிழில் மொழிபெயர்த்துள்ளார் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

அதற்கும் முன்பே, ஆங்கில மூலத்தினைக்கொண்டு இந்திய அளவில் புகழ்பெற்ற நாடக ஆசிரியர்களில் ஒருவரான பாதல் சர்க்கார் இதனை நாடகமாக்க விரும்பி இருக்கிறார். அரங்க மேடை வடிவத்தில் இந்நாடகத்தை அரங்கேற்ற முடியுமா என்ற தயக்கம் அவருக்கு இருந்திருக்க வேண்டும். என்றாலும் 1972ம் ஆண்டில் அதனை செய்து முடித்தார். திறந்த வெளி நாடக வடிவத்தை முயற்சித்த போதுதான் அதற்கான துணிச்சலையும் பெற்றிருக்கிறார். 1973-ல் ‘சதாப்தி’ என்ற குழுவினரோடு இந்நாடகத்தை முதன் முறையாக அரங்கேற்றி அதன் பின் பல முறை அரங்கேற்றியிருக்கிறார்.

1989-ஆம் ஆண்டு திருச்சியில் நடந்த பாதல் சர்க்கார் நாடகவிழாவில் மு. ராமசாமியால் முதன்முறையாக இந்நாடகம் தமிழில் அரங்கேற்றப்பட்டது. கோ. ராஜாராம் மொழிபெயர்த்திருந்தார். 86 வயதில் காலஞ்சென்ற பாதல் சர்க்காரின் நினைவை போற்றும் வகையில் கருணா பிரசாத்தின் “மூன்றாம் அரங்கு” இதனை தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நிகழ்த்தி வருகிறார்கள். அதன் காரணமாக தற்கால இளம் நடிகர்களைக்கொண்டு மறுபடியும் DG வைஷ்ணவா கல்லூரி மாணவர்களுக்காக சில மாதங்களுக்கு முன்பு “ஸ்பார்டகஸ்” நாடகத்தை மு ராமசாமி நெறியாள்கை செய்திருந்தார். அக்கல்லூரியின் விஸ்காம் துறையினர் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்கள்.

மைதானத்தை நெருங்கும்போது நறுக்கி வீசப்பட்ட கோரைப் புல்லின் பச்சை வாசம் நாசியில் இறங்கியது. நடிகர்கள் ஒத்திகையில் இருந்தனர். சினிமா மற்றும் நாடகக் கலைஞர் நாசர் ஒத்திகையின் பார்வையாளனாக ஓர் ஓரத்தில் நின்றுகொண்டிருந்தார். குழுக்குழுவாக மாணவர்கள் வரத் துவங்கினர். வந்தவர்கள் எல்லோரும் வட்ட வடிவில் அமர்த்தப்பட்டனர். வட்டத்தின் நான்கு திசையிலும் நுழைவாயில் இருக்குமாறு சற்றே இடைவெளி விட்டு அமர்ந்திருந்தோம்.

ஊலையிட்டுக்கொண்டு நான்கு வாயில்களிலும் அடிமைகள் மையம்நோக்கி நகர்கிறார்கள். அதுவே சந்தையாக மாறுகிறது. காற்றைக் கிழித்துக்கொண்டு குதிரைகள் மையம் நோக்கி முன்னேறுகின்றன. வட்டமடிக்கும் குதிரைகளின் குளம்படி சத்தம் அடிமைகளை நடுங்கச்செய்கிறது. சந்தைக்கு வருவோர் அடிமைகளின் புஜபலத்தைப் பார்த்து விலைபேசுகிறார்கள். விலைக்கு வாங்கப்படும் அடிமைகள் எஜமானனின் சொல்லைக் கேட்டு ஆயுள் முழுவதும் நடக்க வேண்டும். விவசாயம், கல்வெட்டுதல், வியாபாரம், தோட்ட வேலை, கால்நடை பராமரிப்பு என எல்லா வேலைகளிலும் இவர்கள் அமர்த்தப்படுவார்கள். அதில் ஒருவருக்கொருவர் சண்டையிடும் வீர விளையாட்டும் அடங்கும்.

பிரபு வம்சத்தினரும், பொருளாதாரத்தில் முன்னேற்றம் கண்டவர்களும் கூடியுள்ள ஓர் உள்ளரங்கில், விலைக்கு வாங்கி பழக்கப்பட்ட அடிமையானவன் தனக்கு நிகரான மற்றொரு அடிமையோடு விலங்கினைப் போல மோதிச் சண்டையிட வேண்டும். பலம்கொண்ட அடிமை தன்னால் அடித்து வீழ்த்தப்பட்ட சக அடிமையைக் குத்திக் கொன்று, தன் உயிரைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு மனிதன், தன் சக மனிதனோடு மோதிச் சண்டையிட்டு மடியும் இந்நிகழ்வைக் குதூகலத்துடன் கரவொலி எழுப்பி மகிழ்ந்தது கலாச்சாரத்தில் முன்னேறியிருந்த அன்றைய ரோமானிய அரவ வம்சம். இந்தச் சண்டையில் பங்குபெறும் அடிமைகளுக்கு கிளாடியேட்டர் என்று பெயர். ஸ்பார்டகஸ் புகழ்பெற்ற கிளாடியேட்டராக இருந்தவன்.

கிறிஸ்து பிறப்பதற்கு 71 ஆண்டுகளுக்கு முன்பு இத்தாலியிலுள்ள புகழ்பெற்ற நகரில் நிகழும், அரக்கத் தனமான ரோமாபுரி அரசர்களின் பூர்ஷ்வா வாழ்க்கையையும், அதனால் சிக்கலுக்கு உள்ளாகும் அடிமைகளின் எழுச்சிப் போராட்டமுமே இக்தை. ஸ்பார்டகஸ் கொல்லப்பட்ட பிறகு, அவனைக் குறித்த சம்பவங்களை பிரபுக் குலத்தினர் பேசி உரையாடி நினைவு கூர்வதாக இந்நாடகம் அமைக்கப்பட்டிருக்கிறது. அடிமை முறை தற்போது ஒழிந்துவிட்டாலும் முள்ளிவாய்க்கால், சானல்4 போன்ற சம்பவங்களின் ஒப்பீட்டுடனே நாடகம் துவங்கியது. அந்த நொடியில் பாரததேசம் ரோம் சாம்ராஜ்ஜியமாக மாறியது.

கையஸ் கிராசஸஸூம், அவன் தங்கை ஹெலினாவும் ரோமபுரியில் இருந்து கேப்புவா செல்லும் சாலையில் பயணிக்கிறார்கள். பாதையின் இரு மருங்கிலும் ஆயிரமாயிரம் சிலுவைகள் காணக் கிடைக்கின்றன. சிலுவையில் அறையப்பட்ட அடிமைகளின் பிணங்களைத் தாண்டியே அழகிய நகரான கேப்புவாவிற்குச் செல்ல வேண்டும். மூன்றாம் படையின் தளபதியாக இருந்த ஃபிலேவியஸ் அடிமைத் தரகனாக அறிமுகமாகிறான். பிட்சை எடுப்பதை காட்டிலும் தரகனாக இருப்பதில் தவறில்லை என்று நினைக்கிறான். அவனிடம் “இவன்தான் ஸ்பர்டகஸா?” என்று கேட்கிறார்கள்.

“அவன் பிணம்தான் கிடைக்கவில்லையே, தெரியாதா?” என்று பதில் கூறுகிறான்.
“ஸ்பார்டகஸ் சின்னா பின்னமாகிவிட்டான். ஆனால் இதோ இருக்கிறானே இவன் பெயர் பேர்டாக்ஸ். அவனை விட மோசமானவன். ஆனால் உயிருடனே பிடித்துவிட்டார்கள்” என்கிறான் தரகன். மேலும் பிடிபட்டவன் அமைதியாகவே இருந்தான். சிலுவையில் அறையப்பட்டு மரணத்தைத் தழுவும் முன் “நான் திரும்பி வருவேன்… லட்சலட்சமாய் கோடிகோடியாய்..” என்ற அற்புதமான வார்த்தையை சொல்லிச் சென்றதாகக் கூறுகிறான்.
வில்லா சாலேரியா மாளிகையில் ரோம் செனட்டின் படைத் தலைவன் கிராகஸ், அறிஞர் மற்றும் தத்துவன ஞானியான சிகாரோ, பணக்காரனான ஆக்டேநியஸ், பிரபு வம்சத்தவர்களான கையஸ் மற்றும் அவன் தங்கை ஹெலனா ஆகியோர் கூடுகின்றனர். அடிமைகளின் முக்கியத்துவம் பற்றிப் பேசுகின்றனர்.

ரம்யமான இரவில் அறிஞர் சிகாரோ பேசத் துவங்குகிறார். “ரோம் நாகரிகமே அடிமைகளின் மீதுதான் நிற்கிறது. இது ஆபத்தான விஷயம். இப்படியே சென்றால் என்றாவது ஒருநாள் நம்மை அவர்கள் அழித்துவிடுவார்கள்” என்கிறார். அதற்கான காரணங்களை ஆதாரத்துடன் முன்மொழிகிறார். மு ராமசாமி இந்தப் பாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தி இருந்தார். அவருடைய வயதும், நாடகக் கலையின் முதிற்சியும் அறிஞரின் பாத்திரமாக வெளிப்பட்டது.

சிகாரோவின் வார்த்தைகளை மற்றவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. எனவே “ஸ்பார்டகஸின் கதை என்ன ஆனது?. நர்த்தமாவின் மண்ணுக்கு அவன் இறையாகவில்லையா? அதே நிலைமைதான் மற்ற அடிமைகளுக்கும்” என்று கருத்து சொல்கிறார்கள். நான்கு வருடங்கள் படைத் தளபதியாக இருந்த கிராசிஸ் கொஞ்சம் அழுத்தமாகவே சீருகிறான். ஒரு முடிவுக்கும் வரமுடியாமல் கூட்டம் கலைகிறது. கையஸ் மற்றும் ஹெலனா ஆகிய இருவரும் பூங்காவிற்குச் செல்கிறார்கள். சண்டை மைதானத்தின் முதலாளியான லெண்டுலஸ் பாடியாட்டஸ் வருவதற்காக இருவரும் காத்திருக்கிறார்கள். அவனிடம் சண்டை பயின்ற ஸ்பர்டகஸ் பற்றி தெரிந்துகொள்ள திட்டமிடுகிறார்கள். அவனோ குடித்துவிட்டு கழிவிறக்கத்தில் பொருமுகிறான். கிளாடியேட்டர் அடிமைகளை சண்டைக்குப் பழக்கும் தன்னையும் தீண்டத்தகாதவனாக பார்க்கும் மேல்தர சமூகத்தை நினைத்துக் குமுறுகிறான். இந்தப் பாத்திரத்தை ஏற்று நடித்த கருணா பிரசாத் செம்மையாகச் செய்திருந்தார். குதிரையின் குலம்படிச் சத்தத்தை குரல் வழியாக வெளிப்படுத்தியபோது நிஜக் குதிரையே வந்ததுபோல மெய்சிலிர்க்க வைத்தார். ஹெலனாவாக நடித்தவர், சந்தையின் அடிமைகளைப் பார்த்து காமப் பார்வையில் சந்தோஷிப்பது போன்ற முகபாவம் செய்தது யாதார்த்தமாக இருந்தது. ரோம் கலாச்சாரத்தின் காமக் குறியீடாக அவருடைய முகபாவம் அமைந்திருந்தது. முக்கியமான கதாப் பாத்திரங்களைத் தவிர்த்து மற்ற எல்லோரும் ஸ்பார்டகஸாக வந்து சென்றார்கள். புரட்சியின் குறியீடான சிகப்பு நிற துணியே அவனை அடையாளப்படுத்துகிறது. சோக இழையோடும் அந்திகாற்று பாலாவின் குரல் கிளாடியேட்டர்களின் துயரை காற்றில் நிரப்பியது. நாடகம் முடிந்தும் அதன் ரம்யம் எதிரொலித்துக் கொண்டே இருந்தது.

“அடிமைமுறை தற்போது முற்றிலும் ஒழிந்துவிட்டது. அப்படி இருக்கையில் இதுபோன்ற நாடகங்கள் தேவைதானா?” என்று நாடகம் முடிந்ததும் பார்வையாளர்களில் இருந்த நண்பரொருவர் என்னிடம் கேட்டார்.

அடிமைகளை வைத்துக் கொள்வதை கௌரவமாக நினைத்த நாகரிகம் முற்றிலும் மாறி, நவீன நாகரிகத்தில் வீறுநடை போட்டுக் கொண்டிருக்கிறோம். என்றாலும் ரத்தம் சொட்டச்சொட்ட முகத்தில் தாக்கி குத்துச்சண்டை விளையாடுகிறார்கள். அதற்கான பெரிய வியாபாரமே விளையாட்டுச் சந்தையில் இருக்கிறது. கரணம் தப்பினால் மரணம் என்றாலும் அதிவேக கார் பந்தையங்கள் உலகெல்லாம் நடக்கின்றன. பணம் படைத்தவர்கள் கண்டு ரசிக்கும் விளையாட்டில் இதுவும் ஒன்று. தனிமனிதச் சுதந்திரம் கட்டுக்கோப்பாகப் பாதுகாக்கப்பட்டாலும், பண அடிமைகள் விருப்பத்துடன் இது போன்ற போட்டிகளில் பங்கேற்கிறார்கள். உலகமெல்லாம் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. பெரு நிறுவனங்கள் இதற்கான பணத்தை வாரி இறைக்கின்றன. மொழி, இனம், தேசம் கடந்து பார்வையாளர்கள் இதனை ரசிக்கிறார்கள். ரோம பிரபுக்களுக்கும், இதுபோன்ற பார்வையாளர்களுக்கும் என்ன வித்யாசம்? மரபில் வந்த அரக்கத்தனத்தின் புத்தாக்க வடிவம் தானே இது.

“இது போன்ற நாடகங்கள் தேவையா? ஸ்பர்டகஸ் இருக்கிறானா? இறந்துவிட்டானா?” என்பது போன்ற புதிர் கேள்விகளின் விடையைத் தேடுவதல்ல இதுபோன்ற நிகழ்த்துக் கலையின் நோக்கம். அவன் கொல்லப்பட்ட பின்பு, அடிமைகளின் சார்பாக தீபத்தை ஏந்தி யார் வேண்டுமானாலும் ஸ்பார்டகஸாக மாறமுடியும் என்ற நிதர்சன உண்மையை அனுபவமாக பரிமாற்றுவதே இதன் உள்ளர்த்தம். பணத்தாலும், அதிகாரத்தாலும் கட்டுண்டுள்ள சமூகம் அடிமை முறையை வேறுவிதத்தில் உருமாற்றிக் கொண்டிருக்கிறது. அதற்கேற்ப அடிமைத் தலைவனும் ஜனிக்க வேண்டியது அவசியம் இருக்கிறது. அதன் கருவை கலைதான் சுமக்க வேண்டும். நம் கலைஞர்கள் சுமந்துகொண்டிருக்கிறார்கள். பிரசவ நாளை எதிர்பார்த்து.

(முற்றும்)

நாடகப் பிரதி: பாதல் சர்க்கார்,
தமிழில்: கோ ராஜாராம்
நெறியாள்கை: பேராசிரியர் மு ராமசாமி
குரலிசை: அந்திகாற்று பாலா
வீர விளையாட்டுப் பயிற்சி: பழனி, ஜெட்லி சம்பத்
புகைப்பட உதவி: மணிகண்டன் (டேனி)
தயாரிப்பு: மூன்றாம் அரங்கு
பங்குபெற்ற நடிகர்கள்: பேராசிரியர் மு ராமசாமி, கருணா பிரசாத், யோகேஷ் ராஜேந்திரன், சுபாஷ்கர், கேசவன், பாக்யராஜ், ராஜன், வேலாயுதம், கே சரவணன், ஜெ சரவணன், சதீஷ், பாலமுருகன், அழகுராஜ், செந்தமிழ்ச் செல்வன்

நன்றி: தமிழ் பேப்பர் - இணைய இதழ்

தரையில் இறங்கும் விமானங்கள்

“உங்கண்ணா ரொம்ப உயர்ந்த மனுஷர். அவர் மாதிரி ஒருத்தரைப் பார்க்கவே முடியாதோன்னு சில சமயம் எனக்குத் தோணும். இந்த மாதிரி ஒரு மனுஷனான்னு ஆச்சர்யமாக் கூட இருக்கும். அந்த மனசுக்கு எனக்கு என்ன தகுதி இருக்குன்னு அடிக்கடி கேட்டுப்பேன்”.

சட்டென்று திரும்பி அவளைப் பார்த்தான் விஸ்வம். மனசை உலுக்கிவிட்ட மாதிரி இருந்தது. உடம்பு ஒரு தரம் சிலிர்த்தது. ‘என்ன இது! இதில் யார் உயரம் அதிகம்! இந்த மாதிரி பொறுக்கிப் பார்த்து ஸ்வாமி எப்படி ஒன்றாய்ப் போட்டது!’

“என்ன அப்படிப் பாக்கிறீங்க? நான் உண்மையைத் தான் சொல்றேன். அந்த மாதிரி ஒரு மனசு உங்கண்ணாவுக்கு. தப்பா எதையும் நினைக்கத் தெரியாது. யாரையும் தப்பா பார்க்கத் தெரியாது, கோபப்படத் தெரியாது, பிறத்தியார் கஷ்டத்தைப் பார்த்துண்டிருக்கத் தெரியாது. தன் கஷ்டத்தை வெளியே சொல்லிக்கத் தெரியாது. கல்மிஷமில்லாமல் அப்படி ஒரு மனசு யாருக்கும் இருக்க முடியாது. அந்த மாதிரி ஆயிரத்துல ஒருத்தர், லட்சத்துல ஒருத்தராவது இருப்பாரான்றது கூடச் சந்தேகம்தான்.

“ஆனா அவரென்னவோ நான் இடம் மாறி வந்துட்ட மாதிரி நினைச்சுக்கிறார். எங்கயோ கோபுரத்துல இருக்க வேண்டியள்ங்கிற மாதிரி பழகறார். அதுதான் எனக்குக் கஷ்டமா இருக்கு. அழகா இருந்துட்டா அதுக்கு இன்னொரு அழகுதான் சொந்தமாகனும்னு தானா நினைச்சுண்டு அவஸ்த்தைப்பட்டா என்ன பண்றது?”

தலையைக் குனிந்து கொண்டான் விஸ்வம். “ருக்மணி, பேசாதேயேன். என்னால் தாங்க முடியலையே?” என்று சொல்ல வேண்டும் போலிருந்தது. ஆனால், பேசாமல் இருந்தான்.

“உங்காத்லேர்ந்து பெண் பார்த்துட்டுப் போனதுக்கப்புறம் எங்கப்பா வந்து எங்கிட்ட பேசினார். ‘அம்மா, பையன் கொஞ்சம் கருப்புதான். எஸ்.எஸ்.எல்.ஸி தான் படிச்சிருக்கான். சம்பளமும் அவ்வளவா இல்லே. ஆனா குணம் இருக்கே, அது ஒண்ணு போறும். நான் பார்த்து வளர்ந்த பையன். நீ என்ன சொல்றே?” ன்னு கேட்டார். ‘ஏம்பா? நிறம், படிப்பு, சம்பளம் இதெல்லாந்தான் தகுதியா? மனுஷா – மனுஷாளா? இருக்கறது பெரிய தகுதி இல்லையான்?’னு கேட்டேன். ஒரு தரம் அசந்து போன மாதிரி என்னைப் பார்த்தார். அப்புறம் பேசாமல் போயிட்டார்.”

“என்ன சொன்னீங்க? திருப்பிச் சொல்லுங்க” என்று குரல் நடுங்கக் கேட்டான் விஸ்வம்.

“ஆமாம் விஸ்வம். நமக்கு மனுஷத்தனம் மட்டும் இருந்தாப் போறும்னு நினைக்கிறேன். வேற என்ன தெரியணும்? மீதி எல்லாத்தையும் தெரிஞ்சுண்டு இது தெரியாமப் போனா என்ன பிரயோஜனம்? அன்னிக்கி ஒருநாள் நீங்க உங்க ஜமுனாவைப் பத்தி பேசினபோதே சொல்லனும்னு நினைச்சேன். ‘என்னால அவகூடச் சந்தோஷமா இருக்க முடியாதோன்னு பயமா இருக்கு’ன்னு நீங்க சொன்னதைக் கேட்டபோதே சொல்லனும்னு நினைச்சேன். ஆனா அப்பா சொல்லியிருந்த அது அவ்வளவு சரியா இருந்திருக்காது. இப்ப சொல்றேன். நமக்கு யார் கூடவும் சந்தோஷமா இருக்கத் தெரியணும். எப்பவும் சந்தோஷமா இருக்கத் தெரியணும். எங்கப்பா அடிக்கடி சொல்லுவார்; சந்தோஷமா இருக்கத்தான் நாமெல்லாம் பிறந்திருக்கோம்னு. சிரிச்சுண்டே இருந்துட்டா சந்தோஷமா இருந்துடலாம்பார். அந்தச் சிரிப்பு மூஞ்சிலேயும், மனசுலேயும் வந்துட்டா சந்தோஷத்துக்குக் குறைச்சலே இல்லேம்பார். அவர்தான் எனக்குச் சிரிக்கக் கத்துக் கொடுத்தார். எதுக்கும் – எப்போதும் சிரிக்கனும்னு சொல்லிச் சொல்லிப் பயிற்சியாகவே மாத்திட்டார். உங்ககிட்ட அன்னிக்கி பேசிண்டிருந்த போது, இதையெல்லாம் சொல்லிடம்னு தோணித்து. ஆனா ஒரு சந்தர்ப்பம் வரும். சொல்லிக்கலாம்னு இருந்துட்டேன்.

“இப்ப அந்தச் சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு. சொல்லிடறேன். நீங்களா ஒரு கனமான குண்டைத் தூக்கி வச்சுண்டு அவஸ்தைப் படறதைப் பார்த்தா கஷ்டமா இருக்கு. எதுக்கு இந்த அவஸ்தையெல்லாம்? கொஞ்சம் ஈஸியா இருந்துட்டுப் போனால் தான் என்ன? சாதாரணமா இருக்கறதுலே என்ன தப்பு சொல்லுங்கோ?” என்று கேட்டு நிறுத்தினாள் ருக்மணி.

அவன் பதில் சொல்லவில்லை. தலை குனிந்து மௌனமாய் நடந்து கொண்டிருந்தான். அவனிடமிருந்து பதில் வராது என்று புரிந்துகொண்ட ருக்மணி, மீண்டும் தானே பேசினாள்:

“எல்லாத்தையும் தெரிஞ்சிக்கணும்னு நினைக்கிறது நல்ல நினைப்புதான். ஆனா தெரிஞ்சுண்டு என்ன பண்ணப் போறோம்?. தெரிஞ்சுண்டவாள்லாம் என்ன பண்றா? நாம பண்ணறதைத்தான் பண்றா. அதுக்காக தெரிஞ்சுக்கறதே அவசியம் இல்லைன்னு சொல்லலை. தெரியாததனால தப்பு ஒன்னுமில்லேன்னுதான் சொல்ல வரேன். ‘அபத்தமா பேசறா’ன்னு அன்னிக்கி நீங்க ஜமுனாவைப் பத்தி சொன்னீங்களே, அதுக்குத்தான் சொல்றேன். அவளுக்கு உங்கள மாதிரி பேசத் தெரியாம இருக்கலாம். உங்களை மாதிரி அத்தனை படிச்சவளா இல்லாம இருக்கலாம். ஆனா அவளுக்கு உங்கமேல ஒரு பிரியம் இருக்கு. அளவு கடந்த பிரியம். அந்த அன்பைத் தவிர வேற என்ன வேணும் உங்களுக்கு? அது எவ்வளவு பெரிய விஷயம். மனுஷ உறவுகளை விட அதெல்லாம் பெருசா என்ன? உங்க புத்திசாலித்தனத்தை நுழைச்சி எல்லாரையும் துருவிப் பாக்கிறதை நீங்க விட்டுடனும். ஒவ்வொருத்தரையும் அப்படியே ஏத்துக்கணும். நிறை குறைகளோட ஏத்துக்கணும். ஏத்துண்டு சந்தோஷமா இருக்கத் தெரியணும். அவாளையும் சந்தோஷப்படுத்தத் தெரியணும்...”

விஸ்வம் மனசு உருக மேலே நடக்காமல் அப்படியே நின்றான். எது எதுவோ புரிந்த மாதிரி இருந்தது. திடீரென்று எல்லாமே சந்தோஷமாகத் தெரிந்தது. தாங்க முடியாமல் கண் கலங்கிற்று. பேச்சு வராமல் அடைத்துக் கொண்டது.

“மன்னி...” என்ற ஒரே வார்த்தைதான் வெளியில் வந்தது.

தரையில் இறங்கும் விமானங்கள் – இந்துமதி (அத்தியாயம் 22 - கடைசி மூன்று பக்கங்கள்)