Friday, August 16, 2013

ஆதலால் காதல் செய்வீர் – ஒரு பார்வை

நண்பர்களைப் பார்ப்பதற்காக தரமணி திரைக் கல்லூரிக்கு விசிட் அடித்துவிட்டு, மத்திய கைலாஷ் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தேன். குரோட்டன்ஸ் செடியை நூல்பிடித்து வெட்டியதைப் போல, தலையிலுள்ள சுருட்டை முடியை ஹேர்கட் செய்திருந்தார் ஒருவர். டிப் டாப்பான தோற்றத்தில் வேறு அந்த நபர் இருந்தார். நெருங்கிச் சென்று “நீங்க பழநியண்ணனோட மூத்த மகன் தானே...!” என்று கேட்டேன். 

“ஆமாங்கண்ணா...” என்றார். விசாரித்ததற்கு MSW (சோஷியல் வொர்க்) படிப்பதாகக் கூறினார்.

“பாக்குறதுக்கு ஃபேஷன் டிசைன் படிக்கறவரு மாதிரி விநோதமா இருக்கீங்க...! மாடலிங் பன்றிங்களோ...? ஹேர் ஸ்டைல் வித்யாசமா இருக்கே?” என்று கமென்ட் அடித்தேன்.

“எதுக்கு மொக்கை போடுறீங்க...?” என்பது போல மெலிதாகச் சிரித்துக் கொண்டார். பேருந்து வரவும் அவருக்கு டாட்டா காட்டிவிட்டு ஏறிக்கொண்டேன். தூரத்திலிருந்து பார்பதற்கு - புட்டபதி சாய்பாபா போல அவரது தலைமுடி புதராகத் தெரிந்தது. 


புதிதாகக் குடியேறியிருக்கும் பொன்னேரி வீட்டின் அடுத்த தெருவில் தான் பழநியண்ணன் குடும்பத்துடன் வசிக்கிறார். திரையில் அவரது மூத்த மகனின் (மோகன்பாபு என்கிற பிரசாத்) முகத்தைப் பார்த்ததும் ஆச்சர்யம் தாங்கவில்லை. பொன்னேரி பழைய பஸ் ஸ்டாண்டில், மசூதியை ஒட்டினாற் போல “பழநி கூல் டிரிங்க்ஸ்” என்றொரு சிறிய பழரசக் கடை இருக்கும். ஏறக்குறைய இருபத்தைந்து வருடங்களாக அந்தக் கடை இருக்கிறது. பழநியண்ணனுக்கு உடல்நிலை சரியில்லையெனில் மோகன்பாபுவை அங்குக் காண முடியும். அவர் தான் ஹீரோவின் கல்லூரித் தோழனாக “ஆதலால் காதல் செய்வீர்” படத்தில் நடித்திருக்கிறார். ரொம்பவும் அழுத்தமான கதாப்பாத்திரம் ஏற்றிருக்கிறார் என்றெல்லாம் சொல்ல முடியாது. இனி நல்ல கதாப்பாத்திரங்கள் அமைந்து கோலிவுட்டில் மோகன்பாபு ஜொலிக்க வாழ்த்துக்கள்.

“ஆதலால் காதல் செய்வீர்” - காதல் செய்பவர்கள் மனதளவில் மட்டுமின்றி, உடலளவில் நெருங்கி விளையாடி குஷியை அனுபவிப்பதும் சகஜம் தான். மெரீனா பீச் சென்று பாருங்கள். பெசன்ட் நகர் சென்று பாருங்கள். சென்னை செம்மொழிப் பூங்காவிற்குச் சென்று பாருங்கள். காதலர்கள் நெருக்கமாக அமர்ந்துகொண்டு ஒருவரை ஒருவர் பிசைந்து மயங்கிக் கிடப்பார்கள். அருகில் யாரேனும் கடந்து சென்றால் கூட அவர்களுக்குப் பிரச்னை இல்லை. உடல் கிளர்ச்சியை விட்டுக் கொடுக்கவே மாட்டார்கள். 
“தூ... இதெல்லாம் ஒரு காதலா...? ஒடம்பு சொகத்துக்கு அலையுற சனியனுங்க...! நல்ல குடும்பத்துல பொறந்ததுங்களா இதுங்க...!? உச்சி வெயில் கொளுத்துதே... சூத்து வெந்துடாது... நாதாரிங்க...” என்போம். நம்மால் செய்ய இயலாத ஒன்றை, அடுத்தவன் செய்யும் பொழுது அடிவயிற்றில் புகை கிளம்புவதும் சகஜம் தானே. அதுவுமில்லாமல் அட்டகாசமான ஃபிகர்ஸ் எல்லாம், அட்டு பசங்கக் கூட சுத்தறது ஜீரணிக்கக் கூடிய ஒன்றா என்ன?

இதே விஷயத்தை ‘ஓர் அமெரிக்கரோ! ஆங்கிலேயரோ! ஜெர்மனியரோ! அல்லது ஏதேனும் மேற்கத்திய நாட்டினரோ’ கோவா பீச்சில் - நிர்வாணக் குளியளுடன், இதழுடன் இதழ் கவ்வி முத்தமிட்டு சந்தோஷித்திருக்கும் காட்சியைக் காண நேர்ந்தால்: “என்னமா லைஃப்-அ என்ஜாய் பன்றான்யா வெளிநாட்டுக்காரன். அவனுங்களுக்கு ஒடம்பெல்லாம் மச்சம்’யா!? பொறந்தா அந்த நாட்டுல பொறக்கனும்யா” என்று ஆதங்கப்படுவோம். உலகின் எந்தப் பகுதியில் வசிப்பவராக இருந்தால் என்ன? காதலில், காம எண்ணங்கள் பீரிடுவதும் ஒரு பகுதி தானே. நமது சமூக அமைப்பு திருமணத்திற்கு முன்பு உடலளவில் நெருங்கிப் பழகுவதையும், உடலுறவு கொள்வதையும் ஒரு பெரிய சமூகக் குற்றமாகக் கருதுகிறது. அந்த உளவியல் சிக்கலைத் தான் இந்தப் படம் பேசுகிறது.

மரபான கலாச்சார வாழ்வு, யதார்த்த வாழ்வியல் முறையிலிருந்து (Life style) முரண்பட்டு விலகுவதை சுசீந்திரன் திரைக்கதையாக வடித்துள்ளார். நடுத்தர குடும்பத்து ஆணும், பெண்ணும் காதலிக்கின்றனர். மரபான கலாச்சாரப் பின்னணியிலிருந்து வந்திருந்தாலும், நபர்கள் வட்டத்தில் அவர்களது வாழ்வியல் முறை மேற்கத்திய கலாச்சாரத்தை ஒத்திருக்கிறது. “காஃபி டே, ஷாப்பிங், டின்னர்” என்று சுற்றுகிறார்கள். போலவே ‘மது அருந்துதல், டேட்டிங் செல்லுதல்’ போன்றவற்றை ‘ஃபிரண்ட்ஸ் பார்ட்டி’ என்ற ஒற்றை வார்த்தையில் கடந்து செல்கிறார்கள். இப்படிப் பட்டவர்களின் முதிர்ச்சியற்ற காதல், கவனக் குறைவான பாதுகாப்பற்ற உடலுறவு மற்றும் அது சார்ந்த பின் விளைவுகள் பற்றியே படம் அலசுகிறது.

ஹீரோவாக நடித்திருக்கும் சினிமா தயாரிப்பாளர் ஒருவரது மகன் “சந்தோஷ் ரமேஷ்” பல இடங்களில் நெருட வைக்கிறார். பார்க்கச் சகிக்கவில்லை. சில இடங்களில் கதாப்பாதிரதிற்கு கச்சிதமாகப் பொருந்திப் போகிறார். ஹீரோயின் கொள்ளை அழக்காக ஜொலிக்கிறார். இவ்வளோ அழகான பொண்ணு ஒருத்தன லவ் பண்ணா...!? எந்த பையன் தான் சும்மா இருப்பான். பூர்ணிமா பாக்கியராஜ், ஜெயபிரகாஷ் போன்றவர்கள் நடுத்தர பெற்றோர்களாக வாழ்ந்திருக்கிறார்கள். கேமரா, எடிட்டிங் போன்றவையும் திரைப்படத்திற்கு கைகொடுதிருக்கிறது. இந்தப் படத்தின் மியூசிக்கை “ஆஹா ஓஹோ”-ன்னு பேசுறாங்க. அதெல்லாம் சபை நாகரீகம் கருதி முகஸ்துதி செய்கிறார்கள்.

கட்டுக்கோப்பான இசையும், பாடல்களும் இருந்திருந்தால் இன்னும் கூட இந்தப் படம் முத்திரையைப் பதித்திருக்கும். பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கும். யுவன் ஷங்கர் ராஜா இந்தத் திரைப்படத்தில் தனது முக்கியத்துவத்தை உணராமல் வேலை செய்திருக்கிறார். படத்தின் கடைசியில் வரும் பாடல் ஆளையே உருக்குகிறது என்று சமூக வலைத்தளங்களில் பார்க்க முடிகிறது. பாலாவின் “சேது” திரைப்படத்தின் வரும் “வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா மார்ப்பு துடிக்குதடி...” என்ற கிளைமேக்ஸ் பாடலுடன் ஒப்பிட்டுப் பேசுகிறார்கள். அதெல்லாம் அதீத ஒப்பீடு. காட்சிகள் ஏற்படுத்தும் சலனத்தைக் கூட, இருட்டு அரங்கில் ஒலிக்கும் பாடல் ஏற்படுத்தவில்லை.

லாஜிகல் மிச்டேக்ஸ் கிடக்கட்டும். எனக்குத் தெரிந்து குறையாகப்படுவது. இந்தப் படத்தில் சொல்லிக்கொள்ளும்படி காமெடி டிராக்கே இல்லை. சுசீந்திரன் எதற்காகத் தவிர்த்தார் என்று தெரியவில்லை. ரெட்டை அர்த்த ஜோக்குகளை துணிந்து சேர்த்திருக்கலாம். (சமீபத்தில் +2 படிக்கும் மாணவர் ஒருவர் அனுப்பி இருந்த ஜோக்கை இங்கு பகிர்ந்தால் என்னுடைய உருவச் சிலையை எரிப்பீர்கள்.)

மொத்தத்தில் “ஆதலால் காதல் செய்வீர்” திரைப்படத்தை விழிப்புணர்வுப் படம் போல எல்லோரும் பகிர்கிறார்கள். கதையுடன் ஒட்டிய விஸ்தாரமான காமெடி டிராக் இல்லாததுதான் அப்படியொரு மூடினை கிரியேட் செய்கிறது போல. இது எல்லோரும் பார்க்கக் கூடிய “பீல் குட் மூவி” தான். தாராளமாக ஒருமுறை தியேட்டருக்குச் சென்று பார்க்கலாம்.

நல்ல படத்தைக் கொடுத்த இயக்குனர் சுசீந்திரன் அவர்களுக்கும், தயாரிப்பாளரான அவரது தம்பி “நல்லு ஸ்டுடியோஸ்” தாய் சரவணன் அவர்களுக்கும், பழநிய’ண்ணனின் மூத்த மகன் மோகன் பாபுவுக்கும், சில ப்ரேம்களில் வந்து சென்ராலும், நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்படும் குறும்படங்களில் தொடர்ந்து முத்திரை பதித்து வரும் நடிகரான ராம் சந்திரன் அவர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

Thursday, August 15, 2013

எதேர்சையான சந்திப்பு - காஞ்சிவரம் லோகு

எதிரில் வந்தவனை அப்படியே மடக்கினேன்...! முதலில், கபடியில் உள்ளிறங்கி ஆடுவதுபோல நெருங்கினேன். என்ன ஒண்ணு...! கையையும் காலையும் நீட்டி “டச்” ஒன்று தான் செய்யவில்லை.

இரண்டு மூன்று சந்திப்புகளை முடித்துவிட்டு CMBT-யில் பேருந்தைப் பிடிப்பதற்காக சாவகாசமாக சென்று கொண்டிருந்தேன். கருப்பு நிற லன்ஞ்ச் பேக் ஒரு கையில். தூரலில் இருந்து தப்பிக்க கருப்பு நிறக் குடை மற்றொரு கையில். நான்கு அடி ஆறு அங்குலம் உயரத்திற்கு மேல் இருப்பார் என்று சொல்லிவிட முடியாது. “டடக் புடக்... டடக் புடக்...” என எதிரில் வந்து கொண்டிருந்தார்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு மூங்கில் குச்சி போல ஒல்லியாக இருந்தவன், பூசணிக்காய் போல உருண்டு திரண்டிருகிறான். “கண்கள்...” – இந்த ஒன்று தான் அவனை அடையாளம் காட்டியது. ஆகவே துணிந்து மடக்கினேன்.

“என்னை யாருன்னு தெரியுதா...!?”

“நீ கிருஷ்ணபிரபு தானே!?... பார்த்தியா உன் பேர கூட நான் ஞாபகம் வச்சிருக்கேன்.” என்றான்.

“அடப்பாவி... இந்த ஆயிரம் பேரு கூட்டத்துல உன்ன கண்டு புடிச்சது நான் தான்டா... உன் பேரு லோகு தானே!?...” என்றேன். “பரவாயில்லையே... ஞாபகம் வச்சிருக்க....!” என்றான்.

அதெப்படி மறக்க முடியும்?... காஞ்சிபுரம் கலக்டர் ஆபீசுக்கு எதிரில் இருக்கும் கூட்டுறவு மேலாண்மை பட்டாயப் படிப்பை ஓராண்டு காலம் தங்கிப் படித்தேன். மாலை நேரத்தில் நண்பர்களுடன் இறகுப் பந்து விளையாடுவேன். லோகநாதனும் உடன் விளையாடுவான். “சாப்பாடு, வகுப்பு, உறக்கம், விளையாட்டு” – இப்படியே நாட்கள் கடந்து சென்றது. கடைசித் தேர்வும் முடிந்தது. எல்லோரும் வீட்டிற்குக் கிளம்பினோம். உடைமைகளை பேக் செய்துகொண்டு அவரவர் இல்லங்களுக்குத் திரும்ப, என்னுடன் தங்கிய அறைத் தோழர்கள் எல்லோரும் சீக்கிரமாகவே கோ-ஆபரேடிவ் இன்ஸ்டிடியூட்டை விட்டுக் கிளம்பினோம். ஆகவே யாருடனும் அதிகமாகப் பேசமுடியவில்லை.

வீட்டு உரிமையாளரிடம் சாவியைக் கொடுத்துவிட்டு – காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த ஒரு பேருந்தில் நண்பர்கள் அமர்ந்து “ச்சே... இனிமே இந்த ஊருன்னா ஊருக்கு வரமுடியாது இல்ல... எவ்வளோ நல்ல ஊரு...” என்று பேசிக் கொண்டிருந்தோம். ஓரிடத்தில் பிறந்து, ஓரிடத்தில் வளர்ந்து, பேச்சுலராக ஓரிடத்தில் தங்கிப் படிப்பவர்களுக்குத் தான் அந்த அருமை புரியும். (வேலையின் நிமித்தம் பேச்சுலர்ஸ் லைஃப்-ஐ வாழ்பவர்களை எங்களது குரூப்பில் சேர்ப்பதில்லை.)

வியர்க்க விறுவிறுக்க லோகு ஓடி வந்து கொண்டிருந்தான். பேருந்தின் ஜன்னலில் தலையை நீட்டி “என்னடா விஷயம்...!” என்று விசாரித்தோம்.

“மச்சி... உங்க அட்ரஸ், காண்ட்டாக்ட் நம்பர் இதெல்லாம் குடுக்காம போறீங்கலேடா...!” என்றான்.

“அடப்பாவி அதுக்காடா இப்பிடி ஓடிவர...?” என்றோம்.

“பஸ்சு போயிடுச்சின்னா பிறகெப்படி வாங்குறது...!?” என்றான்.

நாங்கெல்லாம் ஒரு ஆளுன்னு, தேடிப் புடிச்சி நட்பு பாராட்டுபவர்களை எப்படி மறக்க!? அதனால் தான் சுதந்திர தினத்தன்று எதிரில் வந்தவனை அப்படியே மடக்கினேன். பரிமாறிக்கொண்ட முகவரிகளும், தொலைபேசி இலக்கங்களும் மாறி – தொடர்பற்று இருந்தோம். எனினும் காலம் எதிரெதிரே நிறுத்தி இருக்கின்றது. இப்படித்தான் எதிர்பார்க்காமல் சில விஷயங்கள் நடந்து விடுகிறது.

சுதந்திர தினம் என்பதால் கோயம்பேட்டில் ஏகப்பட்ட கெடுபிடி. பயணிகளின் உடைமைகளை சரிபார்த்துத் தான் உள்ளே விட்டார்கள். லோகுவின் கைப்பையை ஒரு பெண் போலீஸ் திறந்தார். உள்ளே காலி லஞ்ச் பாக்ஸ்சும், சில நொறுக்குத் தீனிகள் இருந்தன.

“இந்த கவர்மென்ட் வேலை பாக்குறவங்க நொறுக்குத் தீனி இல்லாம எங்கயும் நகர மாட்டாங்க போல...” என்றேன். பெண் போலீஸ் சிரித்தார். 

ஒரு வழியாக உள்ளே சென்றோம். நீண்டநேரம் பேசிவிட்டு, லோகுவினை காஞ்சிபுரம் பேருந்தில் ஏற்றிவிட்டுத் தான் ஊருக்குத் திரும்பினேன். இந்த பத்தாண்டுகளில் லோகு வக்கீலுக்குப் படித்திருக்கிறான். TNPSC தேர்வெழுதி அரசாங்க உத்தியோகத்திலும் சேர்ந்திருக்கிறான். வேலையில் சேர்ந்து இரண்டு மாதங்கள் தான் ஆகிறதாம். சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் தான் வேலை செய்கிறானாம். என்றேனும் ஒருநாள் அவனை சிந்தாதிரிப் பேட்டை அலுவககத்தில் சென்று பார்க்க வேண்டும். இத்தனை ஆண்டுகளில் பொறுப்புள்ள ஒரு மனிதனாக மாறி இருக்கிறான்.

என்னையும் சொல்லுங்க...! வெறுமனே சும்மாத்தானே சுத்திட்டு இருக்கேன்...!

ஆனாலும், வெறுமனே ஊர் சுற்றுவதிலும் ஒரு பிரயோஜனம் இருக்கின்றது. பாருங்கள்...! பத்தாண்டுகளுக்கு முன்பு சந்தித்தவனை – இதோ அடையாளம் கண்டுகொண்டு அளவலாவிவிட்டு வந்தேன். இதெல்லாம் வெறுமனே சும்மா இருப்பதால் தானே வாய்க்கிறது.

Saturday, August 3, 2013

மௌனித்து நிற்கும் அப்பாக்கள்

சினிமாவில் கூட ஒரு தந்தையானவன், தனது மகளிடம் கண்ணியமாக (பர்ஃபெக்டா) இருக்கணும்னு எதிர்பார்ப்பவன், நல்ல விஷயங்களை தொடர்ந்து செய்யும் - வெளியுலகிற்குத் தெரியாத ஒரு கலைஞனை நாளிதழ்கள் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பவன், இளைஞர்கள் செய்யும் வித்தியாசமான முயற்சியைத் தட்டிக்கொடுத்து ஊக்குவிப்பவன் – சொந்த வாழ்வில் தனது மகளுக்கு பாதகமாக நடந்துகொள்வானா? சில மாதங்களுக்கு முன்பு நடிகை சுகாசினி தனக்கே உரித்தான பாவனையில் மாநிறம் கொண்ட நடிகர்கள் ஹீரோக்களாக நடிப்பதை அலுத்துக்கொண்டு கருத்து தெரிவித்த போது, மேடையிலேயே தனது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தது மட்டுமல்லாமல், இதுபோன்ற கருத்துக்களைப் பொதுமேடையில் முன் வைத்ததற்காக வருத்தத்தைப் பதிவு செய்யவில்லை எனில் “மேடையை விட்டு நான் இறங்க மாட்டேன்” என்று உணர்ச்சிவசப் பட்டார். இதையெல்லாம் மறந்துவிட்டு ஒருவரை மதிப்பிடக் கூடாது.

காதலானது சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளை சமன் செய்யும் என்பதால் காதல் சார்ந்த பிரச்னைகளுக்கு, காதலர்களுக்கு ஆதரவாக முற்போக்குவாதிகள் குரலெழுப்புகிறார்கள். உண்மையில் பாராட்டப் பட வேண்டிய விஷயம் தான். தற்போதெல்லாம் காதல் சார்ந்த பிரச்சனைகளைப் பற்றி ஊடகங்களில் நிறையவே எழுதுகிறார்கள். அதுவும் பிரபலங்கள் வீட்டுப் பிரச்சனை எனில் ஊடகங்களுக்கு இருட்டுக்கடை அல்வா கிடைத்த மாதிரிதான். அவர்களே சினிமாத் துறையைச் சேர்ந்தவர்களாக இருந்தால் – ஒரு முழம் மல்லிகைப் பூவையும் சேர்த்தே இந்த ஊடகப் பிரதிநிதிகள் வாங்கிக் கொள்கிறார்கள். அந்த அளவிற்குக் குதூகலத்துடன் எழுதுகிறார்கள். நடிகர் ரஜினி துவங்கி, இயக்குனர் சேரன் வரை நிறைய பேரை இதற்கு உதாரணமாகக் கூறலாம். பிரபலங்கள் தான் என்றில்லை - பெற்ற மகள்களுக்கு முன்னால் எப்பேர்பட்ட தந்தையும் குட்டிக்கரணம் அடித்து, தேவைப்பட்டால் கைகட்டி வாய் பொத்தி நிற்கிறார்கள் என்பது தான் உண்மை.

மகாநதி திரைப்படத்தின் ஓர் உணர்வுப் பூர்வமான காட்சி. சோனாகச்சியின் விபச்சார அறையில் தனது மகளை ஒவ்வொரு அறையாகத் தேடிக்கொண்டு செல்கிறான் சேது. விலைமகளாக அங்கங்கள் தெரிவது போலப் படுத்திருக்கிறாள் சேதுவின் (கமலஹாசன்) மகள் காவேரி. ஓர் அறைக் கதவை மெதுவாகத் திறந்து பார்க்கையில் சப்தம் எழுகிறது. ஊரிலிருந்து தேடிக்கொண்டு வந்த தந்தைதான் பின்னால் நிற்கிறார் என்பதை அறியாத மகள் மெதுவான குரலில் முனகுகிறாள்.

“தேவுடியா பசங்களா...! கொஞ்ச நேரம் ரெஸ்ட் கொடுங்களாண்டா...” – இந்த வசவைக் கேட்ட தந்தை வெடித்துக் கதறுகிறான். இந்த இடத்தில் கமல்ஹாசன் “எப்படி ஆக்ட் செய்திருப்பார்...!” என்று சொல்லித் தெறிய வேண்டியதில்லையே. அழுகைச் சத்தத்தைக் கேட்ட விலைமகளான காவேரி திரும்பிப் பார்க்கிறாள். தந்தையை அடையாளம் கண்டுகொண்ட மகள் பதறித் துடிக்கிறாள். அங்கங்கள் தெரிவதுபோல ஆடையணிந்த பதற்றம் வேறு அவளுக்கு. பணம் கொடுத்து புணர வந்தக் காமந்தர்கள் பலரையும் தாங்கிய படுக்கையின் மேல் விறித்திருந்த போர்வையை எடுத்து அங்கங்களை மறைத்துக் கொள்கிறாள் காவேரி. முகத்தை மூடிக்கொண்டு அழுகிறாள் அந்தச் சிறுமி. தந்தையான கமல்ஹாசன் பதறியடித்து ஓடி, தனது மகள் காவேரியை இரண்டு கைகளிலும் தூக்கிக்கொண்டு வேகமாக ஓடுவது போன்ற காட்சி.

தந்தையாக நடித்த கமலஹாசனின் கைகள், மகளாக நடித்த காவேரியின் வனப்பான முலைப் பகுதியின் சமீபத்தில் இருந்திருக்கிறது. இந்த காட்சியைப் பற்றிய அதிருப்தியை பலரது முன்னிலையில் ஓர் உதவி இயக்குனர் கமலஹாசனிடம் நேரிடையாகச் சொல்கிறார்.

“அதெப்படி சார்... மகளோட மார்புப் பகுதியை தொட்டாமாதிரி ஒரு அப்பா அவளைத் தூக்கிட்டு போவாரு. அது சரியா இருகாதுங்க சார்.” என்கிறார் அந்த உதவி இயக்குனர். அடுத்த நாளிலிருந்து அந்த உதவி இயக்குனர் மகாநதி ஷூட்டிங்கில் வேலை செய்யவில்லை. எளிதில் உணர்ச்சிவசப்படும் அந்த நபர் வேறு யாருமல்ல இயக்குனர் & நடிகன் சேரன் தான். காலங்கள் ஓடியதில் இயக்குனர் சேரன் “பாரதி கண்ணம்மா, ஆட்டோகிராஃப், பொற்காலம், தவமாய் தவமிருந்து” போன்ற பல செண்டிமெண்ட் படங்களைத் தமிழில் கொடுத்து பிரபலம் அடைந்தது வேறு கதை. தொழில் ரீதியாக சினிமாவில் முத்திரைபதித்த சேரனைத் தான் ஊடகங்கள் வில்லனைப் போல சித்தரிக்கின்றன. சேரனை தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசியதில்லை. ஆனால் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு இரண்டு சந்தர்பங்களில் சேரனை நுட்பமாகக் கவனித்ததுண்டு. அந்த சம்பவங்களை மனதில் இருத்தி சேரனைப் பற்றி பகிர வேண்டியது முக்கியமெனப் படுகிறது.

மறுபக்கம் ஆர்.பி.அமுதன் ஓராண்டுகளுக்கு முன்னர் தன்னுடைய “பீ” & மயானம் சார்ந்த ஆவணப்படங்களை சென்னை பல்கலைக்கழக, தமிழ்த் துறை பவளவிழா அரங்கத்தில் திரையிட ஏற்பாடு செய்திருந்தார். வீ. அரசு தலைமையில் ‘இயக்குனர் சேரன், எழுத்தாளர் முத்துகிருஷ்ணன்’ போன்ற பலர் இந்தத் திரையிடலில் கலந்து கொண்டார்கள். சேரன் மேடையில் அமுதனைப் பாராட்டிப் பேசிக்கொண்டிருந்தார். ஆங்கில நாளிதழ் ஒன்றிலிருந்து நிகழ்வை கவர் செய்ய ஒரு புகைப்பட நிருபர் வந்திருந்தார். சேரன் மேடையில் பேசுவதை ஏதாவதொரு கோணத்தில் ஃபோட்டோ எடுக்க அந்தப் புகைப்பட நிருபர் படாதபாடு பட்டுக்கொண்டிருந்தார். சேரன் புகைப்படக் காரரின் ஃப்ரேமில் சிக்கவே இல்லை.

ஒரு கட்டத்தில் பேசுவதை நிறுத்திவிட்டு, அந்த ஃபோட்டோ ஜர்னலிஸ்டிடம் “இங்க பாருங்க Sir... என்ன எதுக்கு ஃபோட்டோ எடுக்குறீங்க? இப்போ நான் ஃபோட்டோ எடுக்கறதுக்கு விட்டுட்டேன்னா - நாளைக்கு என்னோட ஃபோட்டோவ போட்டு இந்த ஈவண்ட சும்மாவாச்சும் கவர் பண்ணிடுவிங்க. இந்த முக்கியமான டாக்குமென்ட்றிய எடுத்தது அவர் தான். அவர ஃபோட்டோ புடிச்சி பேப்பர்ல போடுங்க. அமுதனைப் பத்தி கொஞ்சம் அதிகமா கவர் பண்ணுங்க. அதுதான் ஞாயம். நீங்க என்ன தொடர்ந்து ஃபோட்டோ எடுத்திங்கன்னா – நான் பேசறத நிருத்திடுவேன்.” என்றார் ஆர்.பி.அமுதனை சுட்டிக் காட்டியவாறு. மறுநாள் காலையில் ஆங்கில நாளிதழைப் புரட்டினேன். சேரன் மேடையில் பேசுவதைப் போன்ற படம் போட்டு, நிகழ்வைப் பற்றி எழுதியிருந்தார்கள். சேரன் எதிர்பார்க்காத சமயத்தில் தூரத்தில் நின்றவாறு ஜூம் செய்து அந்தப் புகைப்படக்காரர் ஒருவேளை ஃபோட்டோ எடுத்திருக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன். என்றாலும் சேரனின் முன்யோசனையை நினைத்து சிரித்துக் கொண்டேன்.

ஒருமுறை இலக்கிய விருது நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, இரவு நேரத்தில் அசோகமித்திரன் பேருந்திற்காகக் காத்துக் கொண்டிருந்தாராம். அந்தப் பக்கமாக சேரன் வந்திருக்கிறார். "ஐயா... நீங்க இந்த நேரத்துல இங்க இருக்குறீங்களேய்யா? ஏதாவது உதவி வேனுமாங்கைய்யா." என்று கேட்டிருக்கிறார்.

"வேளச்சேரி பஸ்ல ஏத்தி விட்டுடுங்களேன்" என்று சொல்லியிருக்கிறார் அசோகமித்திரன்.

"ஐயோ... இந்த நேரத்துல எப்படிங்கைய்யா நீங்க பஸ்ல போவிங்க..." என்று தனது காரில் அசோகமித்ரனை ஏற்றி அவரது வீட்டில் இறக்கிவிடச் சொல்லியிருக்கிறார். இதனை ஆனந்த விகடனில் படித்ததாக ஞாபகம். "எவ்வளோ பெரிய எழுத்தாளர் இந்தமாதிரி தனியா உட்கார்ந்துட்டு இருந்தாரே. நம்ம பார்த்தால போச்சு. இல்லன்னா எவ்வளோ கஷ்டப்பட்டிருப்பாரு என்று அசோகமித்ரனை அனுப்பி வைத்துவிட்டு அருகிலிருந்தவர்களிடம் வருத்தப்பட்டாராம் சேரன்.

அதற்கடுத்த சந்திப்பு எதிர்பாராமல் நிகழ்ந்த ஒன்று. மியூசிகல் நாவலை வெளியிடும் ‘பாதை பதிப்பக’த்தின் அங்கத்தினரான அர்ஜூன் செல்பேசியில் அழைத்து “ரணம் சுகம்” இசை வெளியீட்டிற்கு வரவேண்டுமென்று அழைப்பு விடுத்தார். ஏ.வி.எம் பிரிவ்யூ தியேட்டரில் இசைவெளியீடு ஏற்பாடாகியிருந்தது. சென்னை புத்தகக் கண்காட்சில் ஒரேயொரு முறைதான் பாதை அர்ஜுனை சந்தித்திருக்கிறேன். பல மாதங்கள் அவருடன் தொடர்பே இல்லாமல் இருந்தது. என்றாலும் ஞாபகத்தில் இருத்தி அழைத்திருந்ததால் மறுக்க முடியாமல் சென்றிருந்தேன். “மாலை 5 மணிக்கு இசை வெளியீடு” என்ற தகவல் வந்திருந்தது. கொஞ்சம் முன்னதாக 4.30 மணிக்கே AVM preview theatre-க்குச் சென்றுவிட்டேன். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஒருசில கலைஞர்கள் “ரணம் சுகம்” புத்தக ஆல்பத்திலிருந்து ஒருசில வரிகளைப் பாடிக் கொண்டிருந்தார்கள். தொண்டையில் மீன் முள் சிக்கியதால் நெளிகிறார்களோ என்பதுபோல எனக்குப் பட்டது. அடுத்த ஐந்து நிமிடங்களில் சிகப்பு நிறக் கார், பார்க்கிங்கில் வந்து என்னருகே நின்றது. காரிலிருந்து இறங்கிய லட்சணமான பெண், “அப்பா வந்துட்டாரு. கார்ல தான் உட்கார்ந்துட்டு இருக்காரு. ப்ரோக்ராம் ஸ்டார்ட் ஆகும் பொழுது சொல்லுங்க. அவர் வந்துடுவாரு.” என்று தொலைபேசியில் யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தாள். அப்பொழுதுதான் கவனித்தேன் இயக்குனர் சேரன் முன்னிருக்கையில் தவமாய் தவமிருப்பது போல உட்கார்ந்து கொண்டிருந்தார்.

பாடுபவர்களையும், வருவோர் போவோரையும் கவனித்துக் கொண்டிருந்தார். அறிமுகமில்லாத ஒருவரிடம் பேசிக்கொண்டே சேரனை கவனித்துக் கொண்டிருந்தேன். புத்தகங்களைப் புரட்டுவதும், வேடிக்கை பார்ப்பதுமென சாவகாசமாக உட்கார்ந்திருந்தார். அநேகமாக ஏதேனும் ப்ளேயர் முடுக்குவிக்கப்பட்டு பாடலும் ஓடிக் கொண்டிருந்திருக்கலாம். ஏனெனில் அவர் உற்சாகமான மனநிலையில் தான் இருந்தார். ஏறக்குறைய நாற்பது நிமிடங்கள் கழித்துத் தாமதமாகத் தான் நிகழ்ச்சியைத் துவக்கினார்கள். பொறுமையாக அமர்ந்திருந்தார். போதுமான பார்வையாளர்கள் வந்து சேரவில்லை என்பதுதான் இசை வெளியீடு தாமதமானதற்கு முக்கியக் காரணம். இதே நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்த இயக்குனர் ராம், படவா கோபி ஆகிய இருவரும் நிகழ்ச்சி துவங்கிய பின்னர் தான் வந்து சேர்ந்தார்கள். முதலில் மேடையேறிய சேரன் மைக்கைக் கேட்டு வாங்கினார். நிகழ்ச்சி தாமதமானதற்காக திட்டப்போகிறார் என்றுதான் நினைத்தேன்.

“நான் ரொம்ப முன்னாடியே வந்து கார்ல உட்கார்ந்துட்டு எல்லாரையும் கவனிச்சிட்டு இருந்தேன். ரொம்ப ஓடியாடி பரபரப்பா வேலை செய்யிறிங்க. ஆடியன்ஸ் ரொம்ப கொறைவா இருக்காங்களேன்னு கவலைப்படாதிங்க. நல்ல விஷயங்களுக்கு குறைவான நண்பர்கள் தான் ஆதரவு கொடுப்பாங்க. நம்பிக்கையோட தொடர்ந்து பயணம் செய்யுங்க. உங்களோட பதிப்பகத்தின் பெயரே பாதை. இன்னிக்கி நீங்க போட்ற விதை நாளைக்கு பாதையெங்கும் மரமா, செடியா, கொடியா வளர்ந்து நிக்கும். என்னால முடிஞ்ச உதவிய உங்களுக்குப் பண்றேன். வாழ்த்துக்கள்” என்றார். (“ரணம் சுகம்” – மியூசிகல் நாவலை சேரன் தயாரிப்பதற்கு முன்வந்தார். பின்னர் அந்த ப்ரொஜெக்ட் என்ன ஆனது என்று தெரியவில்லை.)

“பாதை” இளைஞர்களுக்கு இயக்குனர் சேரன் “வாய் சவடால் விடுகிறாரோ?” என்று நீங்கள் நினைக்கலாம். சங்ககிரி ராஜ்குமார் இயக்கிய “வெங்காயம்” படம் ஒன்றிரண்டு திரையரங்குகளாவது கிடைத்து தியேட்டரில் ஓடியதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்களில் இயக்குனர் சேரனும் ஒருவர். மூட நம்பிக்கைகளை விமர்சித்து எடுக்கப்பட்ட முற்போக்கான முக்கியமான தமிழ் படம். சேரனின் உதவி மனப்பான்மையை சங்ககிரி ராஜ்குமார் கூட நெகிழ்ச்சியுடன் சில இடங்களில் பகிர்ந்துண்டு. முற்போக்கான விஷயத்தைப் பேசிய திரைப்படம் மக்களைச் சென்று சேரவேண்டும் என்று நினைக்கும் முற்போக்கான மனிதன், தனது சொந்த வாழ்விலும் முற்போக்கான எண்ணங்கள் உடையவனாகத் தானே இருக்கவேண்டும். “எனது தந்தையால் உயிருக்கு ஆபத்து. ரவுடியைப் போல என்னுடைய காதலனைத் துரத்துகிறார்” என்று சேரனின் 20 வயது நிரம்பிய இரண்டாவது மகள் கமிஷனரிடம் புகார் கொடுத்திருக்கிறாராம்.

எனது சொந்த வாழ்விலிருந்தே சில விஷயங்களைப் பேச வேண்டியிருக்கிறது. அம்மாவின் ரத்த உறவினருக்கு நெருங்கிய சொந்தமான ஒரு வயோதிகப் பெண்மணி வீட்டிற்கு வந்திருந்தாள். அந்த அம்மணியின் பேத்திக்கு திருமணம் நிச்சயமாகியிருந்தது. அதுவும் காதல் திருமணம் என்று கேள்விப்பட்டேன். ஆகவே "ஆமா... உங்க பேத்திக்கு கல்யாணமாமே! அவங்க லவ் பன்றவருக்கே பேசி முடிட்சிட்டிங்கலாமே... ரொம்ப சந்தோசம்..." என்றேன்.

இல்லியே இது அரேஞ்ஜிடு மேரேஜ் என்ற ரீதியில் சமாதானம் பேசியவள், கல்யாணப் பெண்ணிடம் என்ன சொறிஞ்சி விட்டாலோ தெரியவில்லை. அதுவும் மாப்பிள்ளை வீட்டார் சம்ரதாயதிற்காக பெண் பார்க்க வரும் நேரத்தில் மணப்பெண்ணின் வாயைக் கிளரியிருகிறாள். சிறுவயது முதலே ஆங்கில வழியில் பயின்று என்ஜினியரிங் படித்து, பன்னாட்டு கம்பெனி ஒன்றில் உயர்தர வேலையில் இருப்பவள். சம்பவ இடத்திலில்லாத என்னை, ஊரார் முன்னிலையில் மிக மோசமாக வசவு பாடியிருக்கிறாள்.

“என்னை பத்தி பேசறதுக்கு அவனுக்கு என்ன ரைட்ஸ் இருக்கு? செருப்பால அடிப்பான் அவன. பொட்டப் பய(ன்). நான் இல்லாத சொல்ல என்னைப் பத்தி பேசறானா? மகளிர் போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணி அந்த பொட்டைய போலீஸ்ல புடிச்சி கொடுக்கறேன் பாரு!” என்று தரக்குறைவான வசவு மொழி வசனங்களைப் பேசி இருக்கிறாள்.

சின்ன அண்ணனிடமிருந்து செல்பேசி அழைப்பு வந்தது. எடுத்துப் பேசினேன். ஹலோ என்று சொல்லி முடிக்கும் முன்னர் "ங்கோத்தா... அவங்கள ரெண்டுல ஒன்னு பாத்துடறேன். பஜ்ஜேரிங்க நம்மள பத்தி இன்னாடா நெனட்சிக்குனு இருக்காளுங்க? முண்டைங்க..." என்று பொறிந்து தள்ளினான்.

“இன்னாடா நடந்தது?” என்றேன். "செருப்பால அடிக்கனமும்னு மத்தி (பெரிய மனுஷி) சொல்றா... பொட்டப் பயன்னு பேத்தி சொல்றா... போலீஸ்ல புடுட்சிக் கொடுக்கணும்னு சொல்றா அவளோட சித்திகாரி..." என கோவத்தில் கொக்கரித்தான் அண்ணன்.

“எப்போவ்... பொட்டன்னு சர்டிஃபிகேட் கொடுத்துட்டாங்க இல்ல. போலீஸ்ல புடிச்சி குடுத்தா லேடீஸ் செல்லுல போடச்சொல்லி ரெக்கமண்ட் பண்ணச் சொல்லு...” என்று ஒருவாராக பேசி சூழலை சமாளித்தேன். அம்மாவின் ரத்த உறவு என்பதால், என்ஜினியரிங் படித்த மணப்பெண்ணின் தகப்பனாரை அழைத்து இரண்டு தரப்பிலும் சமாதானம் பேசி பிரச்னையை முடித்தோம்.

அந்தக் கிழவி அந்தப் பெண்ணிடம் என்ன சொன்னாலோ தெரியவில்லை. என்றாலும் கோவப்பட்ட என்ஜினியரிங் மாணவி, மிகவும் கீழ்த் தரமாகப் பேசியது மட்டுமல்லாமல், போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுப்பேன் என்ற அளவில் கொதித்தெழுந்தாள். தனது காதல் திருமணத்தைப் பற்றி “யார் பேசினார்கள்? என்ன பேசினார்கள்?” என்பதை முழுவதுமாகத் தெரிந்துகொள்ளாமல், பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்து கைநிறைய சம்பாதித்து சொந்தக் காலில் நிற்கும் ஒரு பெண்ணே – காதல் சார்ந்த விஷயங்களில் குயுக்தியாக யோசிக்கும் பொழுது, எந்தவித பொருளாதாரப் பற்றுதலும் இல்லாத கல்லூரி மாணவி எடுப்பார் கைபிள்ளையாக இருந்தாலும் இருக்கலாம் இல்லையா? சாதிக்காக பெற்ற பிள்ளைகளையே கவுரவக் கொலை செய்பவர்கள் இருக்கிறார்கள் எனில், காதலித்தவர்களுக்காக எந்த விளிம்பிற்கும் சென்று பெற்றவர்கள் முகத்தில் கரியைப் பூசும் பிள்ளைகளும் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. கமிஷனரிடம் கொடுத்த ஒரு போலீஸ் கம்ப்ளைண்டை மட்டும் வைத்துக்கொண்டு சேரனை அளவிடுவது அபத்தம். அவரைப் பற்றி செய்தித்தாள்களில் காதலுக்கு எதிரான வில்லன் போல சித்தரித்திருப்பது சங்கடமாகத் தான் இருக்கிறது.

அஜயன் பாலா, சங்ககிரி ராஜ்குமார், வசந்தபாலன் போன்றோர் சேரனுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் எழுதியிருக்கின்றனர். அவர்களுக்கெல்லாம் சேரனுடன் பழகி இருகின்றனர். ஆனால், தனிப்பட்ட முறையில் சேரன் எனக்குப் பழக்கமானவர் அல்ல. அவரைத் தூக்கிப் பிடிக்க வேண்டிய அவசியமும் எனக்கில்லை. இரண்டு சந்தர்பங்களில் அவருடைய இயல்பான பேச்சைக் கேட்டிருக்கிறேன். அவரைப் பற்றி நம்பத் தகுந்த தொழில்முறைத் தகவல்களையும் பகிர்ந்திருகிறேன். அதிலிருந்தே அவரை பற்றி ஒருவாறு யூகத்திற்கு வரமுடியும் என்று நினைக்கிறேன்.

தன்னுடன் பழகியவர்கள், புதியவர்கள் என்று வரும்பொழுதே அவர்களது நளன் சார்ந்து யோசிக்கிறார் எனில், ஒரு தகப்பனாக தன்னுடைய மகளின் எதிர்காலம் குறித்து எந்த அளவிற்கு யோசித்திருப்பார். ஒரு மனிதன் தகப்பனாக மௌனத்தை அடைகாத்து, சமூகத்தின் தனிமனித விமர்சனங்களை சப்தமில்லாமல் மென்று முழுங்குகிறான் எனில் அதற்கு ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும். அந்த அர்த்தங்களும் தன்னுடைய மகளின் நிம்மதியான எதிர்கால வாழ்வு பற்றியதாகத் தான் இருக்கும்.

மகளின் காதலுக்கு எதிரான கருத்துக்களை முன்வைப்பதால் மட்டுமே, முற்போக்கான ஒரு மனிதனைப் பற்றிய எதிர்மறையான தகவல்களை இணைய ஊடகத்தில் ஒருவர் பின் ஒருவராகப் பகிர்வது எந்த விதத்திலும் ஞாயம் இல்லை. தனது மகளின் எதிர்காலம் என்று வரும் பொழுது சிலர் மௌனித்து நிற்கிறார்கள். சிலர் கொஞ்சம் போல அதிருப்தி அடைகிறார்கள். சிலர் வன்முறையைக் கைகளில் எடுக்கிறார்கள். வன்முறையைப் பிரயோகிப்பவர்கள் சார்ந்து குரல் எழுப்புங்கள். மற்றவர்களை இலக்காக வைத்துக் கொள்ளாதீர்கள். அவர்கள் பாவம். ஏனெனில் நமக்கும் குடும்பம் இருக்கிறது. நமக்கும் பிரச்சனைகள் இருக்கிறது. ஊடகங்கள் வேசிமைத் தனத்துடன் சம்பவங்களைப் பிரசுரித்தாலும் நாம் தான் கொஞ்சம் முன்பின் யோசித்து விஷயங்களைப் பகிர வேண்டும். அவ்வளவே...!

Friday, August 2, 2013

புன்னகைக்கும் மங்கை

நடுத்தர வயதுப் பெண் வழிமறித்தாள். இதுவரை அவளிடம் பேசியதில்லை. கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் என்னைவிட எழெட்டு வயது கூடுதலாக இருக்கும். இதழில் புன்னகையை வேறு தவழவிட்டாள். என்றேனும் பேருந்துப் பயணங்களில் எதிர்பட நேர்கையில் பார்த்துச் சிரிப்பாள். ஒவ்வொரு முறையும் நான் பார்க்காதது போலத் திரும்பிக் கொள்வேன். இவளது வீடு எனது கிராமத்தின் காலனியை விட்டு சற்றே தள்ளி இருக்கிறது. தனிமையில் அமைந்த வீடு. காலையோ, மாலையோ – அவளது வீட்டைக் கடக்கும் பொழுதெல்லாம் ஏதாவது வேலை செய்து கொண்டிருப்பாள்.

சில நேரங்களில் பாத்திரத்தை சுழற்றி அதிலுள்ள கழிவை வீதியில் வீசுவாள். சுழற்றி வீசிய நீர் முச்சந்தியில் வந்து விழும். சில நேரங்களில் எனது பாதத்தில் வந்து தெறிக்கும். அப்பொழுதும் கூட இதழ்களில் புன்னகையைத் தவழ விடுவாள். சிரிப்பதற்கென்றே பிறந்தவள் போல. நான் கவனிக்காதது போல சென்றுவிடுவேன்.

“என்னடா இவன் திமிர் புடிச்சவனா இருக்கறானே..”–ன்னு தானே அவள் நினைத்திருக்க வேண்டும். அவளோ...! அதற்கடுத்து பார்க்கும் தருணங்களில், என்னுடைய செய்கையை முற்றிலுமாக மறந்தவாறு அதே டிரேட் மார்க் புன்னகையை மீண்டும் வீசிச் செல்வாள். இன்றும் அப்படித்தான் நடந்தது. புன்னகையை வீசியது மட்டுமல்லாமல் – அருகில் நெருங்கியவாறு வந்தாள். நான் ஸ்தம்பித்து நின்றேன்.

“உங்ககிட்ட பழைய ஃபோன் இருக்குமா? இருந்தா வெலைக்குக் கெடைக்குமா?” என்றாள்.

இந்தப் பெண்மணிக்கு இரண்டு பிள்ளைகள். இருவருமே பத்தாம் வகுப்பு படிக்கிறார்கள். மூத்த மகனை இரண்டு நாட்களுக்கு முன்பு பேருந்தில் சந்தித்தேன். அதுவும் இரவு 10 மணிக்கு. ஸ்கூல் யூனி ஃபார்மில் வேறு இருந்தான். அந்தப் பேருந்தை விட்டால் – ஏதேனும் லாரியைப் பிடித்துத் தான் ஊருக்குத் திரும்ப வேண்டும். எத்தனையோ நாட்கள் “இலக்கியக் கூட்டம், நண்பர்களுடைய சந்திப்பு, இலக்கற்ற பயணம்” என பேருந்தைத் தவற விட்டுவிட்டு “ஷேர் ஆட்டோ, டாட்டா மேஜிக், வேன், லாரி” என பலவாறு பயணப்பட்டு ஊருக்குத் திரும்பியிருக்கிறேன். ஒருமுறை கல்கத்தா நெடுஞ்சாலையில் ஏழு கிலோ மீட்டருக்கு டிராபிக் ஜாம். இரவு பத்தரை மணி இருக்கும். வாகனங்கள் ஒரு இன்ச் கூட நகரவில்லை. கொஞ்சம் கூட யோசிக்காமல் பேருந்தைவிட்டு கீழே இறங்கினேன். பொடிநடையாக 7 கிமீ தூரம் நடந்தே, வியர்க்க விறுவிறுக்க அந்தப் பின்னிரவில் வீட்டிற்கு வந்து சேர்ந்திருக்கிறேன். என்னுடைய அம்மா தொந்தரவுகள் இன்றி நிம்மதியாக படுத்து உறங்கிக் கொண்டிருப்பாள்.

இரவு பத்து மணி வாக்கில் கிராமத்துச் சிறுவன் தனியொருவனாக பேருந்தில் அமர்ந்திருக்கிறான். கடைசி இருக்கையில் உட்கார்ந்து கொண்டு அந்தப் பையனையே கவனித்துக் கொண்டிருந்தேன். அவனோ முன்னிருக்கையில் அமர்ந்துகொண்டு, எந்தவித பதற்றமும் இன்றி மூக்கில் விரல்விட்டு நோண்டிக் கொண்டிருந்தான். வாகனம் புறப்பட்டு ஊருக்கு வந்து சேர்ந்தது. இருவரும் பேருந்தை விட்டு கீழே இறங்கினோம். அவனிடம் கேட்டேன்:

“என்ன ஸ்கூல் கட் அடிச்சிட்டு சினிமாவுக்கு போயிட்டு வரியா?”

“இல்ல’ண்ணா...” என்று தலையாட்டினான்.

“ஃப்ரண்ட்ஸ் கூட ஊர் சுத்திட்டு வரியா...?” என்றேன்.

“அதெல்லாம் இல்லிங்கண்ணா...” என்றான்.

“சொந்தக்காரங்க வீட்டுக்கு போயிட்டு வரியா...?” என்றேன்.

“ச்சே ச்சே... அங்கெல்லாம் போக மாட்டேண்ணா...” என்றான்.

“ஏன்டா எதைக் கேட்டாலும் இல்ல இல்லன்னு சொல்றியே... அப்போ உன் கேர்ள் ஃப்ரண்ட் கூட ஊர் சுத்திட்டு வரியா...!?” என்றேன் நக்கலாக.

சோர்வாக இருந்தாலும் கேட்ட கேள்வியை சரியாக புரிந்துகொண்டு, அதன் அர்த்தத்தை முழுவதுமாக உள்வாங்கிக் கொண்டு வெட்கப்பட்டுச் சிரித்தவாறே “சென்னை ஸ்கூல்ல சேர்ந்து படிக்கிறேண்ணா” என்றான்.

“சோழவரம் கவர்மென்ட் ஸ்கூல்ல தான நீயும், உன்னோட தம்பியும் ஒரே க்ளாஸ் படிக்கிறீங்க?” என்றேன்.

“இந்த வருஷம் நான் மட்டும் கிண்டிக்கு பக்கத்துல இருக்க (ஆலந்தூர் அரசினர் பள்ளி) ஸ்கூல்ல சேர்ந்துட்டேண்ணா” என்றான்.

“ஏன்டா... சோழவரம் ஸ்கூல் உனக்கு சரிப்பட்டு வரலையா? அதுகூட எங்கயோ போய் சேர்ந்து இருக்கியே. டெய்லி போயிட்டு வர கஷ்டமா இல்ல?” என்றேன்.

“அங்கதாண்ணா... வாலிபால் நல்லா சொல்லி கொடுப்பாங்க.” என்றான்.

“ஒஹ்... வாலிபால்னா இட்டரெஸ்ட்டா...!?” என்றதும், கூச்சத்துடன் கூடிய சந்தோஷத்தில் சிரித்தான்.

“ஸ்கூல் ஹாஸ்டல்ல தங்கிட வேண்டியதுதானே.” என்றேன்.

“அங்கெல்லாம் தங்க புடிக்காதுன்னா...” என்றான்.

“போயிட்டு வறதுக்கே நேரம் சரியா இருக்குமே! நீ எப்படி படிப்ப? எப்படி பாஸ் பண்ணுவ?” என்றேன். பதில் சொல்லத் தெரியாமல் திருதிருவென முழித்தான்.

யார் சொல்லி ஐம்பது கிலோமீட்டர் தள்ளி இருக்கும் பள்ளியில் சேர்ந்தானோ தெரியவில்லை? எப்படி அந்தப் பள்ளியில் சேர்த்துக் கொண்டார்கள் என்பதும் தெரியவில்லை. “புயல், மழை, காற்று, வெயில்” என பருவநிலை எப்படி மாறினாலும் தினந்தோறும் நிச்சயமாக அவன் பள்ளிக்குச் சென்று திரும்புவான். அவனென்ன படிப்பதற்காகவா போகிறான். விளையாடத் தானே பயணம் செய்கிறான். அதுவும் தனக்குப் பிடித்த விளையாட்டை. விடுமுறை நாட்களில் கூட அவன் பள்ளிக்குச் சென்றாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை. என்னுடைய கிராமத்துச் சிறுவனுக்கு இருப்பது விருப்பமோ அல்லது ஆர்வக் கோளாறோ! – ஏதோ ஒன்று தான் அவனை உந்தித் தள்ளுகிறது.

எனினும் பின்னிரவு நேரத்தில் தனியொருவனாக அந்தச் சிறுவன் வீடு திரும்புகிறான். இளம் வயதிலேயே கணவனை இழந்து விட்டு, தனது மனக் கவலைகளை எல்லாம் மறைத்துக் கொண்டு, பார்க்கும் பொழுதிலெல்லாம் புன்னகையை அள்ளி வீசும் நடுத்தர வயதுக் கைம்பெண் – தனது பதின்பருவ மூத்த மகன் நெடுந்தூரம் பயணம் செய்து, பின்னிரவு நேரத்தில் மீண்டும் வீடு வந்து சேரும் வரை களங்கத்தானே செய்வாள்.

“உங்ககிட்ட பழைய ஃபோன் இருக்குமா? இருந்தா வெலைக்குக் கெடைக்குமா?” என வழிமறித்து அந்தக் கைம்பெண் விசாரித்தது, மூத்த மகனுக்காகத் தான் இருக்க வேண்டும்.

“இல்லிங்களே... எங்கிட்டே பழைய ஃபோன் எதும் இல்லிங்களே...” என்றதும் சிரித்தவாறே தலையாட்டிக் கொண்டு “சரிங்க...” என்ற வார்த்தையை மட்டும் உதிர்த்தவாறு தனது வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தாள். அவளது இரண்டாவது மகனோ கிராமங்களில் பயன்படுத்தும் லோக்கல் கிரிக்கெட் ஸ்டம்பை கைகளில் பிடித்து - காற்றில் சுழற்றி மேற்சட்டையின்றி விளையாடிக் கொண்டிருந்தான்.

இதமான மாலைநேரக் குளிர்காற்று முகத்தில் அறைந்தது. நான் எப்பொழுதும் போல இலக்கின்றி நடந்துகொண்டிருந்தேன்.

Thursday, August 1, 2013

எளிமை - பிரபஞ்ச ஆற்றல்

ஒவ்வொருவரின் முனேற்றத்திலும் உழைப்பு தவிற்க முடியாத அம்சம். எனினும் பிரபஞ்ச ஆற்றல் ஒருவரை ஓரிடத்தில் நிற்க வைக்க முடிவு செய்துவிட்டால், அதனை மீறி யார் தான் என்ன செய்துவிட முடியும்? நீங்களே சொல்லுங்கள்...!

ஏ. ஆர். ரகுமானின் வாழ்வில் திருப்பு முனையாக அமைந்த தருணம் என எதைச் சொல்வது?

திலீபிற்கு உடல் சுகமில்லாமல் போகிறது. தந்தையை வேறு அவர் சிறுவயதிலேயே இழந்திருக்கிறார். அவருடைய தாயார் எங்கெங்கோ அழைத்துச் சென்று வைத்தியமும் பார்த்திருக்கிறார். குழந்தை திலீபிற்கு குணமாவது போலத் தெரியவில்லை. கடைசியாக பழவேற்காடு செல்லும் வழியில், ஆண்டார் குப்பத்தின் அருகில் முஸ்லீம் நகர் பகுதிய ஓட்டினார் போல இருந்த - ஒரு முஸ்லீம் மார்க்க ஆன்மீகப் பெரியவரிடம் அழைத்துச் சென்றிருகிறார். (நான் தினமும் நடை செல்லும் பகுதிக்கு மிக அருகில் தான் இந்த இடம் இருக்கிறது. அமீர்கான் போன்ற திரை நட்சத்திரங்கள் கூட இந்தப் பெரியவரைப் பார்க்க வந்ததுண்டு. பெரியவர் இறந்ததும் அதே இடத்தில் அவரை சமாதியாக்கிவிட்டார்கள் என்று கூட கேள்விப்பட்டேன்.)

என்ன ஆச்சர்யம்!? பெரியவரின் வழிகாட்டுதலில் திலீபிற்கு கொஞ்சம் கொஞ்சமாக உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுகிறது. பின்னர் பூரணமாகவும் உடல் நலம் தேரியிருக்கிறார். அதன் பிறகு திலீபும், அவரது தாயாரும், சகோதரியும் முஸ்லீம் மார்க்கத்தைத் தழுவியது தனிக் கதை. பின்னர் “திலீப்” என்ற பெயரை மாற்ற வேண்டி – ஒன்றிரண்டு பெயர்களை பரிசீலனையில் வைத்திருக்கிறார்.

“ரோஜா” திரைப்படம் வெளிவரும் சமயம். பெயரைக் கூட உடனே முடிவு செய்ய வேண்டிய கட்டாயம். இறுதியில் “அல்லா ரக்கா ரகுமான்” என்ற பெயரைச் சூட்டிக் கொள்கிறார். அதனை மணிரத்னம் “ஏ.ஆர். ரகுமான்” என்று சுருக்கி அம்சமாகவும், கேச்சியாகவும் பயன்படுத்துகிறார். (மணிரத்னம் தான் இந்த பெயரை செலக்ட் செய்தார் என்றும் கூறுகிறார்கள்.)

“ரோஜா” – ரகுமானின் முதல் படம் அல்ல என்பதுதான் சுவாரஸ்யமான விஷயம். மலையாளத்தில் ஒரு பாடலுக்கோ / இரண்டு பாடலுக்கோ அவருடைய அப்பா வேலை செய்த படத்தில் டியூன் போட்டிருக்கிறார் என்று அரசால் புரசலாக பேசிக் கொல்கிறார்கள். எனினும் “உழவன்” தான் ரகுமானின் முதல் திரைப்படம் என்பது தமிழ்மகன் எழுதியுள்ள “செல்லுலாயிட் சித்திரங்கள்” நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரோஜாவிற்கு பின்னர் வெளிவந்த கதிர் இயக்கிய “உழவன்” தோல்விப் படம். செண்டிமெண்ட் பார்க்கும் இந்திய சினிமா உலகில் “உழவன்” திரைப்படம் முதலில் வெளிவந்திருந்தால் ரகுமான் என்னவாகியிருப்பார்?

பிரபஞ்ச ஆற்றல் ஒருவனை ஓரிடத்தில் நிற்க வைக்க முடிவு செய்துவிட்டால் – யார் தான் என்ன செய்துவிட முடியும்? சந்தற்பங்களும் பிரபஞ்சத்தின் முடிவுக்கு ஏற்பத் தானே அமைகிறது. உருத்தெரியாத அந்த ஆற்றலிடம் ரகுமான் தன்னை முழுவதுமாக ஒப்படைத்து விட்டதுதான் அவர் மென்மேலும் மெருகேறக் காரணமோ என்று கூட நினைத்திருக்கிறேன்.

முதலில் கமிட் ஆகிய “உழவன்” பின்னர் ரிலீஸ் ஆனதும், இரண்டாவதாக கமிட் ஆகிய “ரோஜா” முன்னர் ரிலீஸ் ஆகி மியூசிகல் ஹிட் அடித்ததும், அதன் பின்னர் ரகுமான் உச்சத்தைப் பிடித்ததும் வரலாறு. ரகுமானை தேவதூதன் போல நம் மக்களும் தற்சமயம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

போலவே, லதா மங்கேஷ்கர் வாழ்வில் நடந்த சம்பவமும் சுவாரஸ்யம் நிறைந்தது. அப்போது லதா மங்கேஷ்கருக்கு பதிமூன்று வயது. ஹிருதயக் கோளாறால் தந்தை இறந்துவிட்டார். லதாஜிக்கு சம்பாதித்தே ஆகவேண்டிய கட்டாயம். ஓர் இசையமைப்பாளர் ரயிலுக்காகக் காத்துக் கிடந்தாராம். அந்த நேரம் பார்த்து அங்கு சென்ற லதாஜி சினிமாவில் பாடுவதற்கு ச்சேன்ஸ் கேட்டிருக்கிறார்.

“எதாச்சும் ஒரு பாட்டு பாடு பார்க்கலாம்!” என்று கேஷுவலாகக் கேட்டிருக்கிறார் அந்த ம்யூசிக் அடிப்பவர். ஆம்... “ம்யூசிக் அடிப்பவர்” என்றல் இசைப்பவர் என்று அர்த்தம். லதாஜி சுற்றும் முற்றும் பார்த்திருக்கிறார். அருகில் ஒரு காலி சிகரெட் பெட்டி இருந்ததாம். அதனை எடுத்து, தாளம் போட்டு பாடியிருக்கிறார். பின்னர் லதாஜி இந்திய சினிமா இசையுலகில் உச்சத்தைத் தொட்டார் என்பது வரலாறு. இசைப் பிரியர்களுக்கு லதாஜியும் ஒரு தேவ தூதர்தான். பூமிக்கு வந்து அவதாரம் எடுத்த கந்தர்வ குல மங்கை தான்.

இந்திய திரைவானில் ஜொலிக்கும் நட்சத்திரமான லதாஜியின் இசைவாழ்வு சாதாரண ரயில் நிறுத்தத்தில், காலி சிகரெட் பெட்டியுடன் தொடங்கி இருக்கிறது. நான் தான் சொன்னேனே...! பிரபஞ்ச ஆற்றல் ஒருவரை ஓரிடத்தில் நிற்க வைக்க முடிவு செய்துவிட்டால் யார் தான் என்ன செய்ய முடியும்?

இருவருக்கும் உள்ள ஒற்றுமை என்னவென்றால் இருவருமே உச்சத்தைத் தொட்டவர்கள். போலவே சிறுவயதிலேயே தந்தையை இழந்தவர்கள். இந்திய திரையிசை வரலாற்றில் இருவரது இடத்தையும் இன்னொருவர் அடைவது கூட ஒருநாளில்லை ஒருநாள் சாத்தியமாகலாம். காலம் அவர்களை கடந்து செல்லும்.

“திறமை என்ன திறமை? புகழ் என்ன புகழ்?” – இவையெல்லாம் எல்லோருக்கும் தான் வாய்க்கிறது. ஆனால் மனிதம் சுரக்கும் “எளிமை”. அது தான் முக்கியம். எளிமையைக் காட்டிலும் மனிதர்களுக்குக் கவர்ச்சியையும், ஒளியையும் கொடுக்கக் கூடிய வேறென்ன இருக்கிறது இத்த ஜீவகாருண்ய வாழ்வில்?

பாலச்சந்தர் இயக்கிய “ஏக் துஜே கேலியா” படத்தின் பாடல் பதிவு. லதாஜியும், SPB-யும் அருகருகே அமர்ந்து, கொடுத்த டியூனுக்கு ஏற்ப ஹிந்தி வரிகளைப் பாடி பயிற்சி செய்து கொண்டிருகிறார்கள். SPB-க்கு முதல் ஹிந்தி பிரவேசம். குடிப்பதற்கு சுடச்சுட காஃபி கொண்டுவருகிறார்கள். எதிர்பாராத விதமாக கோப்பை தடுமாறி லதாஜியின் பக்கம் சாய்ந்திருக்கிறது. லதா மங்கேஷ்கரின் புடவையெல்லாம் காஃபிக் கறை. அதற்கு மேல் SPB-யே சொல்கிறார்.

“நம்மளோட ஹிந்தி ச்சேப்டர் இத்தோட க்ளோஸ். நம்ம வீட்டுக்குப் போக வேண்டியது தான்” என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் “லதாம்மா அதை ரொம்ப கேஷுவலா எடுத்துக்கிட்டாங்க. என்னோட பதட்டத்த பார்த்து, சிரிச்சி பேசி ரிலாக்ஸ் பண்ணாங்க. ஹிந்தி சினிமாவுல அவங்க உச்சத்துல இருக்கறவங்க கிட்ட இந்த மாதிரி முட்டாள் தனம் பண்ணிட்டோம்!. எப்படி சமாளிக்கிறதுன்னு தெரியல. துக்கடா பையன் தானேன்னு லதாம்மாவும் கோவப்படாம, அருமையா ரெக்கார்டிங் பண்ணி கொடுத்தாங்க. அவங்கள பத்தியெல்லாம் பேசறதுக்கே எனக்கு தகுதி இல்ல. அவங்கெல்லாம் போட்ட பிச்சை தான் இந்த வாழ்கை” என்று அடுக்கிக் கொண்டே செல்கிறார்.

“தேர் மேரே பீச்சுமே... கேசா ஹேனா பந்தன் அஞ்சாஆஆஆஅ....நா” என்ற பாடல் SPB-க்கு தேசிய விருது பெற்றுத் தந்தது தனிக்கதை. SPB-யும் ஒரு வரலாறு. நான் தான் சொன்னேனே. பிரபஞ்ச ஆற்றல் நினைத்தால் அதற்க்கு மாற்றேது...!

ரஜினியாக இருக்கட்டும்,ரகுமானாக இருக்கட்டும், லதாஜியாக இருக்கட்டும், எஸ்.பி.பி -யாக இருக்கட்டும் – “திறமையானவர்கள், புகழ் வாய்ந்தவர்கள், உச்சத்தில் இருப்பவர்கள், திரைவானின் நட்சத்திரங்கள்” என ஏதேதோ பகிர்கிறார்கள். இவற்றையெல்லாம் விட “எளிமையானவர்கள், தன்மையானவர்கள்” என்பது தெறிய வரும் பொழுதுதான் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏனெனில் எளிமை தானே ஜீவகாருண்யம். அந்த எளிமை தானே வாழ்வை மெருகேற்றுகிறது. பிரபஞ்ச ஆற்றலும் எளிமையத் தானே வலைவீசித் தேடுகிறது.

சுபம்... மங்களம்...