Thursday, May 23, 2013

கறயண்டா ஷாஜி கறயண்டா

சமீபத்தில் பின்னணிப் பாடகர் பிரதிவாதி பயங்கர ஸ்ரீனிவாஸ் இயற்கை எய்தினார். பல்வேறு மொழிகளின் கருப்பு வெள்ளை திரைப்பட கதாநாயகர்களின் ஆஸ்தானப் பாடகராக விளங்கியவர் என்பதால் அவரைப் பற்றிய துண்டுச் செய்திகளும், ஏராளமான துணுக்குகளும், ஒருசில நுனிப்புல் கட்டுரைகளும் என பலதையும் படிக்கக் கிடைத்தன. (பிழையான கட்டுரைகளையும் சேர்த்தே தான் இங்குக் குறிப்பிடுகிறேன்.) அவற்றில் மே மாதம் உயிர்மை இதழில் வெளியான ஷாஜியின் கட்டுரையை வாசித்துவிட்டு துக்கத்தில் அழுவதா அல்லது ஷாஜியின் அறியாமை நினைத்துச் சிரிப்பதா என்ற தீவிர குழப்பத்தில் ஆழ்ந்தேன். ஏற்கனவே ஷாஜி எழுதியுள்ள பி பி ஸ்ரீனிவாஸ் பற்றிய கட்டுரையையும் படித்ததுண்டு. அந்தக் கட்டுரையில் “உட்லண்ட்ஸ் டிரைவ் இன் எங்கிருந்தது? அந்த ஹோட்டலுக்கு P B ஸ்ரீனிவாஸ் எதில் வருவார்? அங்கு PBS என்ன செய்வார்? அவருடன் ஷாஜி கைகுலுக்கு பேசிய சம்பவங்கள்... மேலும் PBS என்ன பாடினார்? ஏது பாடினார்?” போன்ற தகவல்களை அடுக்கி, அவருடன் சமகாலத்தில் பின்னணி பாடியவர்களுடன் PBS -ன் குரல் வளத்தை ஒப்பிட்டு – முழுக் கட்டுரையையும் ஓரளவிற்கு ஒப்பேற்றி இருப்பார். அந்தக் கட்டுரை இணையத்திலும் படிக்கக் கிடைக்கிறது.

பி.பி.ஸ்ரீனிவாஸ் - போன காலங்களின் இசை வசந்தம்

ஒரு பாடகராக பி பி ஸ்ரீனிவாஸ் என்ற கலைஞரை அணுகும் பொழுது, “அவர் பட்டுப் பீதாம்பர ஆடை அணிந்து கொண்டு, ஜொலிக்கும் தங்கக் கிரீடத்தை சூட்டிக் கொண்டு, சட்டை பாக்கெட்டில் எட்டு கலர் எழுதுகோல்களை வைத்துக் கொண்டு உட்லண்ட்ஸ் டிரைவ் இன் ஹோட்டலில் வளம் வருவார்” போன்ற வியந்தோதும் விஷயங்களைத் தான் முதன்மையானதாக ஷாஜி கருதுகிறார் போல. வாசிப்பவர்களுக்கும் இந்த விஷயங்கள் தான் தேவைப்படுகின்றன என்று நினைத்துவிட்டார் போல.

ஷாஜியை இசை விமர்சகர் என எல்லோரும் குறிப்பிடுகிறார்கள். ஆனால் ஷாஜி எழுதும் பெரும்பாலான தமிழ் கட்டுரையகளில் இசைக் கலைஞர்களின் பிறப்பு இறப்பு பற்றிய குறிப்புகளும், அவர்கள் வாழ்ந்த சமூகப் பின்னணியும் வர்ணிக்கப்பட்டு – பின்னர் அந்த இசைக் கலைஞரின் பங்களிப்பை போகிறபோக்கில் தொட்டுக் கொண்டும் எழுதப்பட்ட கட்டுரைகளாகத் தான் இருந்திருக்கின்றன. அதற்கு மேலே கொடுத்துள்ள பிபிஎஸ் பற்றிய கட்டுரையையே உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். “அனுபவக் குறிப்பின் தன்மையில் எழுதப்படும் கட்டுரைகளை விமர்சனமாக எப்படி எடுத்துக் கொள்வது?” என்று புரியவில்லை. கேணி போன்ற சந்திப்புகளில் கூட பத்திரிகையாளர் ஞாநி போன்ற அறிவுஜீவிகள் ஷாஜியை இசை விமர்சகர் என்று தான் குறிப்பிடுகிறார்கள். இசையை அதன் தொழின்முறை நுட்பம் சார்ந்து அணுகாமல் – வெறுமனே வியாபார அனுகூலங்களையும் இயந்திரத் தொழில் நுட்பங்களையும் மட்டுமே கருத்தில் கொண்டு எழுதப்படும் தட்டையான கட்டுரைகளை மட்டும் கணக்கில் வைத்துக் கொண்டு ஷாஜியை விமர்சகராக ஏற்றுக் கொள்வதில் சங்கடங்கள் நிறையவே இருக்கின்றது.

உயிர்மை இதழில் ஷாஜி சமீபத்தில் எழுதிய அஞ்சலிக் கட்டுரைக்கு வருவோம். ஒருவர் இறந்துவிட்டால் “ஐயையோ... அவர் உயிருடன் இருந்த பொழுது அவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை... விருதுகள் கொடுத்து கௌரவிக்கவில்லை” என்பது சாதாரணமாக நடப்பதுதான். பாரதி, புதுமைப்பித்தன், கணித மேதை ராமானுஜர் போன்றவர்களை ஒவ்வொரு துறைக்கும் உதாரணமாகச் சொல்லலாம். போலவே பாடகர் பி பி ஸ்ரீனிவாஸ் பற்றி ஷாஜியும் அங்கலாய்க்க வருவதும் அதுதான். ஆனால் அந்த அங்கலாய்ப்பையும் மீறி அவருடைய “சொல்லில் அடங்காத இசை” என்ற புத்தகம் சார்ந்த சுய விளம்பரம் தான் கட்டுரை முழுவதும் விரவிக் கிடக்கிறது. (கட்டுரையிலிருந்து ஒருசில பகுதிகள் கீழே)

/-- பிபிஎஸ் பற்றி “போன காலங்களின் இசை வசந்தம்” – என்னுடைய இணையதளத்தில் தமிழிலும் ஆங்கிலத்திலும் கிடைக்கும் அந்த ஒரே கட்டுரைதான் PBS பற்றி இதுவரைக்கும் வந்திருக்கும் ஒரே விரிவான பதிவு.

இதை நான் மகிழ்ச்சியுடன் சொல்லவில்லை. தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாள வெகு ஜன இசையின் தவிர்க்க முடியாத ஆளுமையான PBS -ஐ பற்றி இந்த மொழிகளின் வெகுஜன கலை சார்ந்த இதழ்கள், ஊடகங்கள் சொல்லும் படியாக எதுவுமே பதிவு செய்ய முடியவில்லை என்பது எவ்வளவு துர்பாக்கியமானது. ---/

இவருடைய கட்டுரை மட்டும் தான் இதுவரைக்கும் வந்திருக்கும் விரிவான கட்டுரை என்று ஷாஜி சொல்கிறார். எண்பதுகளின் இறுதிகளிலேயே PBS பாடுவதை நிறுத்திவிட்டார். (அல்லது அவருக்கான வாய்ப்பு அதற்குப் பின் மங்கி இருக்கிறது.) அதற்கு முன்பு வெளியான இதழ்களில் (கல்கி, விகடன், அமுதசுரபி) போன்ற இதழ்களில் அவரைப் பற்றிய விரிவான கட்டுரைகளும் நேர்முகங்களும் வந்திருக்க வாய்பிருக்கிறது இல்லையா?

அந்த காலத்து சிற்றிதழ்களை விட்டு விடுங்கள். அந்த காலத்து சிற்றிதழ்கள் சினிமாவைச் சீண்டவில்லை. ஆகவே அதைப் பற்றி எழுதி இருக்க வேண்டும் என்று எதிர்பார்பதிலும் ஞாயம் இல்லை. அப்படியே எழுதி இருப்பதாக வைத்துக் கொண்டாலும் – 2009 ஆண்டுகள் வரை ஜெமோ தான் ஷாஜியின் ஆங்கிலக் கட்டுரைகளை மொழிபெயர்த்துக் கொடுக்கிறார். அதன் பிறகு ஷாஜியே தமிழில் எழுதவும் படிக்கவும் கற்றுக் கொண்டுவிட்டார். இடைப்பட்ட இந்த குறைந்த ஆண்டுகளில் அவர் கடந்த ஐம்பதாண்டுகள் வெளியான இதழ்களை எல்லாம் ஆராயந்துவிட்டுத் தான் – “தன்னுடைய கட்டுரை மட்டும்” தான் PBS பற்றி வந்திருக்கும் ஒரே பதிவு என்று கிளைம் செய்கிறாரா?

/-- நான்கு மொழிகளிலும் முன்னணிப் பாடகராக இருந்த PBS –க்குத் தனது வாழ்நாளில் சொல்லிக்கொள்ளும் படியான எந்தவொரு விருதுமே கிடைக்கவில்லை. பட்டங்களும் பதவிகளும் அவரைத் தேடி வரவில்லை. நாம் அவரைப் பெரிதாகக் கொண்டாடவில்லை. (ஆங்கிலப் பத்திரிக்கை ஸ்ரீனிவாஸ் இறந்துவிட்டதாக வந்த செய்தியைக் குறிப்பிட்டு – அந்த இளம் பாடகர் தனது நண்பர் தான். அதே புத்தக வெளியீட்டில் அந்த இளம் பாடகர் தான் கஸல் கச்சேரி செய்தார் என்பதையும் ஷாஜி கட்டுரையில் மறக்காமல் குறிப்பிட்டிருக்கிறார்.) --/

இங்கும் கூட தன்னுடைய புத்தக வெளியீட்டைப் பற்றித் தான் சுற்றிச் சுற்றிப் பேசுகிறார்.

/-- PBS - பற்றின எனது கட்டுரையுடன் இணையத்தில் நான் போட்டிருக்கும் புகைப்படங்களைத் தான் உலகம் முழுவதுமுள்ள தொலைகாட்சி, இணைய, அச்சு ஊடகங்கள் பயன்படுத்திக் கொண்டன. முன்சொன்ன உயிர்மை புத்தக வெளியீட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் அவை...--/

அய்யா ஷாஜி... தமிழில் உள்ள பெரும்பாலான இதழ்கள் கட்டண சேவையில் இயங்குபவை. அப்படி இருக்க... இலவசமாக எங்கெல்லாம் தேவையான ரிசோர்ஸ் கிடைக்கிறதோ அவற்றைப் பயன்படுத்திக் கொள்வது தானே இணைய தர்மம். அந்த ரீதியில் தான் உங்களுடைய வலைப் பூவில் பதிவேற்றியிருந்த புகைப்படங்களை மீடியா தோழர்கள் எடுத்து பயன்படுத்தியிருக்கிறார்கள். (விகடன், குமுதம், கல்கி – போன்ற இதழ்களில் PBS –ன் புகைப்படங்கள் இல்லாமல் இருக்காது. ஆனால் கட்டணம் செலுத்தி அவற்றை பெற்றிருக்க வேண்டும்.) மேலும் நூறாண்டுகளாகவா இணையம் இருக்கின்றது. கடந்த இருபதாண்டு காலமாகத் தானே. அதிலும் தமிழ் இதழ்கள் கடந்த பத்தாண்டு காலமாகத் தானே இணையத்தில் படிக்கக் கிடைக்கின்றன. இவ்வளவு ஏன் உயிர்மை தளத்திற்குச் சென்று பாருங்கள். கடந்த நவம்பர் 2012 கழித்து வெளிவந்த இதழ்களை கட்டணம் கட்டித் தான் படிக்க முடியும் என்ற உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் எழுதிய கட்டுரைகள் வெளியாகும் இதழே இணையத்தில் கட்டணச் சேவையிலும், எளிதில் தகவல்களை எடுக்க முடியாத வகைத் தன்மையிலும் இருக்கும் பொழுது - மற்ற வெகுஜன இதழ்களையும், ஊடகங்களையும் குறைபட்டுக் கொண்டு என்ன பயன்? மேலும் தேடு பொறியில் பாடகர் PBS பற்றி தேடிய பொழுது உங்களுடைய வலைப்பூவை கூகுள் முன்னணியில் வரிசைப் படுத்தி இருக்கும். ஆகவே அதனை மீடியா நண்பர்கள் பயன்படுத்தி இருக்கலாம். அப்படி இருக்கையில் அஞ்சலிக் கட்டுரையில் கூடவா சுயா விளம்பரம் தேடிக்கொள்வது என்ற இங்கிதம் வேண்டாமா உங்களுக்கு!? இது போன்ற கட்டுரைகளை வாசிக்கும் பொழுது வருத்தத்தை விட அருவருப்பு தான் மிஞ்சுகிறது ஷாஜி.

உங்களுக்கு நன்றாக எழுத வருகிறது. நிறையவே எழுதுங்கள். ஆனால் இந்தத் திமிர் தனம் வேண்டாமே ஷாஜி. அழுவலாம்... ஆனால் அழுவதின் மூலம் சுயவிளம்பரம் தேடக் கூடாது. ஆகவே கறயண்டா ஷாஜி கறயண்டா.

# உங்களுடைய வலைப்பூவில் இருந்த புகைப்படத்தைப் பயன்படுத்திக் கொண்டு, வேண்டுமென்றே தான் உங்களுக்கான மரியாதையைச் செலுத்துகிறேன். நன்றி ஷாஜி. 

Tuesday, May 21, 2013

பாலுமகேந்திராவின் நேர்மை


கலந்துரையாடல் மற்றும் விவாதம் சார்ந்த ஆரோக்கியமான முன்னெடுப்புகள் படைப்பு ரீதியாகச் செயல்படும் கற்பனாவாதிகளிடமும், நம்முடைய சூழலிலும் இருக்கிறதா என்பது சந்தேகம் தான். முரணான எதிர் கருத்துக்களையும் விமர்சனங்களையும் நட்புடன் அணுகும் மனப்பாங்கு அரிதிலும் அரிதாகத் தான் இருக்கின்றது.

எழுத்தாளர் மற்றும் விமர்சகர் கௌதம சித்தார்த்தனுடன் பேசிக் கொண்டிருந்த பொழுது அவரிடம் ஒரு கேள்வியை எழுப்பினேன். திரைப்படங்களைப் பற்றிய கறாரான விமர்சனங்கள் எழுதக் கூடிய நண்பர் என்பதால் தான் “எதற்கும் கேட்டு வைப்போமே...!” என்று கேட்டேன்.

“கெளதம்... நீங்கள் விமர்சனம் எழுதுகிறீர்கள் சரி... அதற்கு முன்பு நீங்கள் ஒரு சிறுகதையாளரும் கூட. அப்படி இருக்கையில் உங்களுடைய விமர்சனங்கள் –நல்ல நண்பர்களையும் எதிரிகளாக்கி விடுமே? எப்படி சமாளிக்கிறீர்கள்?” என்றேன்.

“அட... போங்க தலைவா...! அதெல்லாம் எவ்வளவோ பார்த்துட்டோம்....” என்றார்.

(“எஸ்ரா, ஜெமோ” போன்றவர்கள் நூறு சிறந்த சிறுகதைகளில் இவருடைய கதையையும் சேர்த்தால் தான் – “கௌதம சித்தார்தன்” போன்றவர்கள் சிறுகதையும் எழுதி இருக்கிறார்கள் என்று தற்கால வாசக உலகம் ஏற்றுக்கொள்ளும். இல்லையேல் கஷ்டம் தான். சிறுகதை நாவல் சார்ந்த எத்தனையோ விமர்சனக் கட்டுரைகள் அந்தந்த காலங்களில் நிச்சயம் வந்திருக்கும். அவற்றை வசித்து வாசகர்கள் ஏன் தெரிந்துகொள்ள முற்படுவதில்லை என்ற புதிர் நீண்ட காலமாக எனக்கு இருக்கிறது. தனிப்பட்ட ஒரு நபர் விரும்புவதை – அவருடைய ஒளிவட்டம் கருதி மற்றவர்களும் விரும்பக் கூடிய காலகட்டத்தில் தான் இன்னும் இருக்கிறோம் என்பது வேதனையான விஷயம். இணையத்தில் எதையோ ஒன்றை எழுத வேண்டும் என்று அவர்களும் எழுதுகிறார்கள். வாசகர்களும் அவர்களுடைய பகிர்தல்கலையே வேதவாக்காக எடுத்துக்கொண்டு அவற்றை பரப்புரை செய்கிறார்கள்.)

சரி விஷயத்திற்கு வருவோம். கௌதம சித்தார்த்தனுடன் மேலும் கதைக்களானேன்.

“ம்ம்... சரி போகட்டும் கௌதம்.... கறாரான விமர்சனத்தை முன் வைத்தும்... கருத்து மோதலை மறந்துவிட்டு உங்களுடன் தொடர்பு கொண்டு பேசிய யாரேனும் ஒரேயொரு சினிமா படைப்பாளியாவது இருக்கிறார்களா?” என்று கேட்டேன்.

கொஞ்சம் கூட யோசிக்காமல் “அட்டகத்தி ரஞ்சித்” என்றார். தீராநதியில் கௌதமின் விமர்சனத்தைப் படித்துவிட்டு செல்பேசியில் அழைத்து - அவர் எழுதிய விமர்சனம் சார்ந்து பாராட்டிப் பேசினாராம். அதிலுள்ள சில மாற்றுக் கருத்துக்களையும் முன்வைத்தாராம். இத்தனைக்கும் ரஞ்சித்தின் முதல் படம் “அட்டகத்தி” என்பது குறிப்பிடத்தக்கது. திரையுலகில் கோலோச்சும் அனைவருக்கும் இருக்க வேண்டிய தன்மையான குணம் இது.

ஆடுகளம் திரைப்படம் தேசிய அளவில் பலப்பல விருதுகளை அள்ளிய தருணம் அது. தரமணி திரைக் கல்லூரிக்கு அந்தப் படத்தின் இயக்குனர் வெற்றிமாறனை மாணவர்களுடனான கலந்துரையாடலுக்குப் பேச அழைத்திருக்கிறார்கள். “ஆடுகளம்” குறித்த பல கேள்விகளையும் அந்த சமயத்தில் மாணவர்கள் எழுப்பி இருக்கிறார்கள். குறிப்பாக ஒளிப்பதிவு பிரிவில் படிக்கும் ஒரு மாணவர் ஆடுகளத்தின் DI சார்ந்த கேள்வி ஒன்றை எழுப்பி இருக்கிறார்.

“சார்... ஆடுகளத்தின் DI (Digital intermediate) வொர்க் – அந்தப் படத்துக்கு என்ன தேவையோ... அது சரியா இல்லாதமாதிரி இருக்குங்களே சார்...?” என்று படத்தின் கலர் டோன் பற்றிய கேள்வியை ஒளிப்பதிவு மாணவர் முடிக்கும் முன்பே இயக்குனர் வெற்றிமாறன் குறுக்கிட்டிருக்கிறார்.

ஞாயமாக வெற்றிமாறன் பதில்தனே சொல்லி இருக்க வேண்டும். DI சார்ந்த பதிலாகத் தானே அதுவும் இருந்திருக்க வேண்டும். ஆனால் ஒரு முக்கியமான மடைமாற்றலை வெற்றிமாறன் அங்கே செய்திருக்கிறார்.

கேள்விகேட்ட மாணவரைப் பார்த்து “உங்கள விட பாலு மகேந்திரா நல்ல ஒளிப்பதிவாளர்னு நான் நம்புறேன்... அவரே இந்தப் படத்தைப் பார்த்துட்டு DI வொர்க் ரொம்ப நல்லா வந்திருக்குன்னு சொல்லிட்டாரு.” என்றாராம். கேள்வி கேட்ட ஒளிப்பதிவு மாணவர் வாயடைத்துப் போய் இருக்கையில் அமர்ந்தாராம்.

ஒரு திரைப்படக் கல்லூரி மாணவன் – திரைப்படம் சார்ந்த நுணுக்கமான கேள்வியைக் கேட்கிறான் எனில் அதற்கு நேரடியான ஞாயமான பதிலைத் தராமல் - தனது குருவான, வாத்தியாரான பாலுமகேந்திராவை, வெற்றிமாறன் கேடயமாகப் பயன்படுத்தி சூழலை சமாளித்து இருக்கிறார். விழாவினை எப்படியும் கல்லூரி இயக்குனராக இருந்தவர் (ஸ்ரீதர்) தலைமை தாங்கி இருப்பார். இயக்குனர் பிரிவு துறைத் தலைவராக இருந்தவர் (ரவிராஜ்) உடன் இருந்திருப்பார். ஒளிப்பதிவு துறைத் தலைவர் (ஜிபிகே) அருகில் இருந்திருப்பார். இவர்கள் எல்லாம் வெற்றிமாறனின் இந்த பதிலை எப்படி எதிர் கொண்டிருப்பார்கள் என்பதை நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைக்கவில்லை. (ஜிபிகே எனும் கிருஷ்ணன் பிசி ஸ்ரீராமிடம் அசோசியேட்டாக இருந்தவர். திரைக்கல்லூரியில் பணிபுரிபவர்களில் திறமையானவர் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்.)

கேள்வி கேட்கும் மாணவனை வகுப்பறையில் மட்டுமல்ல, பொதுவாக நடக்கும் கலந்துரையாடலிலும் வாயடைக்கும் வேலையைத் தான் நிர்வாகங்கள் செய்து கொண்டிருக்கின்றன. அல்லது அப்படி நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன. இயக்குனர் வெற்றிமாறனே இதனை மறந்திருப்பார். இதனை இப்பொழுது நான் ஏன் கிளற வேண்டும்?

கடந்த ஞாயிறு அன்று இயக்குனர் பாலுமகேந்திராவின் பிறந்த நாள். பாலு கேக் வெட்டும் வைபவம் சமூக இணையதளத்தில் பார்க்கக் கிடைத்தது. அருகில் பாலுவின் சீடர்கள் எல்லோரும் இருக்கின்றனர். வெற்றிமாறனும் அருகில் நின்று கொண்டிருந்தார். பாலுவின் திரைக்கல்லூரி பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அதில் படித்த ஒருவர் என்னுடைய நண்பர். நீண்ட நாட்களுக்கு முன்பு அந்த நண்பர் என்னிடம் ஒரு விஷயத்தைப் பகிர்ந்திருந்தார். வெற்றிமாரனையும் பாலுவையும் ஒன்றாகப் பார்க்கும் பொழுது நண்பர் பகிர்ந்த விஷயம் தான் நினைவிற்கு வந்தது.

ஒருமுறை பாலுமகேந்திரா அவருடைய குரும்படத்தைத் திரையிட்டு மாணவர்களுக்கு வகுப்பெடுத்துக் கொண்டிருந்தாராம். அதிலொரு மாணவர் திரையிடப்பட்ட குறும்படத்தில் இருந்த தற்கப் பிழையைச் சுட்டிக் காட்டி கேள்வி கேட்டாராம். பாலுமகேந்திரா சமாளிக்க முயன்றிருக்கிறார். மாணவர் மேலும் மேலும் கேள்வியைக் கேட்டு நெருக்குதல் கொடுத்திருக்கிறார். பாலுவால் சூழலை சமாளிக்க முடியவில்லை. மாணவரிடம் கோவத்தை வெளிப்படுத்தி அடக்கியிருக்கிறார். வகுப்பு முடிந்து எல்லோரும் சென்றுவிட்டார்கள். பாலுவும் வீட்டிற்கு சென்றுவிட்டாராம். மறுநாள் பாலு திரைக்கல்லூரிக்கு வந்திருக்கிறார். கேள்வி கேட்ட மாணவரை அழைத்தாராம்.

“இங்க பாரு (...............)... நான் இத்தன வருஷமா தரமான படங்களைத் தான் கொடுத்திருக்கேன்னு கர்வத்தோட இருக்கேன். எல்லா படத்தையும் பார்த்துப் பார்த்துதான் செஞ்சிருக்கேன். ஆனா... அதுல நீ ஒரு கொற சொல்லும் போது என்னால தாங்க முடியல... அதான் நேத்து கோவப்பட்டுட்டேன்... மத்தபடி நீ புத்திசாலிதான்... நீ சரியான கேள்வியைத் தான் கேட்டிருக்க...” என்றாராம்.

ஒரு படைப்பாளியாக, ஆளுமையாக இங்குதான் பாலுமகேந்திரா வெற்றி பெற்று நிற்கிறார். ஏறக்குறைய ஏழு தேசிய விருதுகளை பெற்றவர் பாலு என்பது குறிப்பிடத் தக்கது. இயக்குநருக்காக மூன்றுமுறை பெற்றிருக்கிறார். “கேமரா, எடிடிங், திரைக்கதை, இயக்கம்” என பல துறைகளிலும் தேசிய விருது பெற்ற ஒரே திரைக் கலைஞர் இவராகத் தான் இருப்பார். தன்னுடைய தவறை உணர்ந்து அதற்கான வருத்தத்தையும், சரியான பதிலையும் – வளரும் கலைஞர்களான தன்னுடைய திரைப்பள்ளி மாணவருக்குக் கொடுத்திருக்கிறார். தன்னிடம் ஒரு கேள்வியை அல்லது விமர்சனத்தை முன் வைக்கிறார்கள் எனில் அதற்கான தன்னிலை விளக்கத்தைக் கொடுக்க வேண்டியது மிக மிக அவசியம். (வார்த்தை ஜாலத்தால் செய்த தவறை ஞாயப்படுத்தும் பதில் அல்ல. சரியான விளக்கம். தவறு எனில் அதை ஏற்றுக்கொள்ளும் தன்னிலை விளக்கம்.) பாலு மகேந்திராவிற்கு அந்தத் தன்மை இருக்கிறது. அவரிடம் சினிமா பயின்றவர்களுக்கும் அது இருப்பின் மிக்க மகிழ்ச்சிதான்.

இந்த மாதிரியான உங்களுடைய மென்மையான குணங்கள் வெளியில் தெரியாததால் தான் பாலு... தேவையில்லாமல் எதிர்மறையாக விமர்சிக்கப் படுகிறீர்கள். அதனால் தான் இன்னும் கூட உங்களுடைய உண்மையான முகம் வெளியில் தெரியவில்லை. இந்தச் சம்பவத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றுதான் அந்த நண்பர் என்னிடம் பகிர்ந்துகொண்டார். தமிழ் சினிமாவின் போக்கை திசை திருப்பியதில் உங்களுடைய பங்களிப்பு நிறையவே இருக்கிறது. போலவே இந்தச் சம்பவத்தைப் பகிர்வதில் மூலம் சமகால இயக்குனர்கள் - கேள்வி கேட்பவர்களிடமும், விமர்சகர்களுடமும் எப்படி தன்மையாக நடந்துகொள்ள வேண்டும் என்ற போக்கையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவலில் தான் பகிர்ந்துகொண்டேன். இதுவரை யாரும் பெறாத அளவிற்கு தேசிய அங்கீகாரம் பெற்றுவிட்டீர்கள். எனினும் அந்த அளவிற்கு உங்களை தென்னிந்திய சமூகம் கொண்டாடவில்லையோ என்ற ஏக்கம் உங்களுடைய ரசிகர்களான எங்களுக்கு இருக்கின்றது. இதோ அடுத்ததாக நடிக்கவும் செய்கிறீர்கள். எல்லோரும் ஆவலுடன் இருக்கிறோம். சீக்கிரமே திரைக்கு வந்துவிடுங்கள்.

பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாலு.

Monday, May 6, 2013

பரதேசி – பாலாவின் கள்ளத்தனம்

பாலாவின் பரதேசி திரைப்படம் வெளிவந்திருந்த சமயம் முகநூலில் பகிர்ந்து முன்னெடுத்த கருத்துக்கள் தான் இவை. 
பரதேசிகளின் திருவோட்டை பண்பட்டவர்கள் சொந்தம் கொண்டாடலாமா? 

ஒரு நாவலை திரைப்படமாக எடுக்கும் பொழுது, கதையின் போக்கை திரைக்கதையில் வடிக்க – மூலக் கதையைச் சிதைத்து, இருப்பதை விலக்கிவிட்டு, இல்லாததைச் சேர்த்து ஒரு காம்போவாகத் தான் வார்த்தெடுக்க இயலும்.

“முள்ளும் மலரும்” – உமா சந்திரனின் கதை (Written By). எனவே ‘திரைக்கதை, வசனம், இயக்கத்தில்’ மட்டுமே மகேந்திரன் தனது பெயரைப் போடுகிறார். (நாவலின் முடிவு வேறு, சினிமாவின் முடிவு வேறு என்பது தீவிர வாசகர்கள் அறிந்த ஒன்று தான்...)

இப்பொழுதுள்ள சினிமா டைரக்டர்கள் ஒரு நாவலை எடுத்துக் கொண்டு படமாக்கும் பொழுது, கதைக்கான கிரிடிட்டை எழுத்தாளனுக்குத் தருவதில்லை என்பது வருத்தமான விஷயம். “*************** என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது (Based On)” என்பதுடன் நிறுத்திக் கொள்கிறார்கள். இது எந்த விதத்தில் ஞாயம் என்பது எனக்குப் புரியவில்லை.

எழுத்தாளர்கள் இங்கு தான் நுட்பமாக வஞ்சிக்கப் படுகிறார்கள். ஏமாளிகளாக நிற்க வைக்கப் படுகிறார்கள். (விக்கிப்பீடியாவில் தேடிப்பாருங்கள்: “நான் கடவுள், அரவான், அழகர்சாமியின் குதிரை, பரதேசி” வரை இந்த அழுச்சாட்டியம் நீளும். விக்கிப்பீடியாவில் அணில் சேவை செய்யும் பலரும் மூளையைக் கழட்டி ஹாங்கரில் மாட்டிவிடுவார்கள் போல... அவ்வளவு தவறான தகவல்களை வலையேற்றுகிறார்கள்.)

Written By – ல் டைரக்டர்கள் ஏன் தங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும். இது அநியாயம் இல்லையா? மூத்தப் படைப்பாளி மகேந்திரனுக்கு இருக்கும் கண்ணியம் இவர்களிடம் ஏன் இருப்பதில்லை? ஏப்பா....! நீங்க ScreenPlay, Dialogue, Direction இதிலெல்லாம் உங்களின் பெயரைப் போட்டுக் கொள்ளுங்கள். ஒருவரும் கேட்கப்போவதில்லை. கதையும், எழுத்தும் (Written & Story) அவர்களுடையது ஐயா!

எரியும் பனிக்காடு டேனியல் எழுதிய ஆங்கில நாவல். இரா. முருகவேல் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார் என்பது உலகறிந்த விஷயம். கதையின் ஆரம்பத்தையும் முடிவையும் மாற்றுவதின் மூலம் மட்டுமே தழுவல் என்றாகிவிடுமா? நாவலின் ஆதாரச் சாரம் மசாலா தடவி திரைப்படமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

மக்களே பரதேசி படத்தை தியேட்டருக்குச் சென்று பாருங்கள். அதுதான் சினிமா கலைஞர்களுக்குச் செய்யும் ஞாயம். ஆனால் டைட்டில் கார்டில் “கதை, திரைக்கதை, வசனம்” என்று பட்டியலிட்டு பாலா தன்னுடைய பெயரைப் போட்டுக்கொண்டால், “கதை உங்களுடையதா பாலா?” என்று தவறாமல் கேள்வி எழுப்புங்கள். அது எழுத்தாளர்களுக்குச் செய்யும் ஞாயம்!

ஆடை வடிவமைப்பு குறித்து:


பரதேசி நாயகன் அதர்வாவின் நடிப்பு அருமை. ஆனால் அவருடைய காஸ்டியூம் சற்றே மலங்க வைக்கிறது. ஊரிலுள்ள எல்லோரும் மேல் சட்டையில்லாமல் இருக்க, அல்லது கதர் சட்டை அணிந்திருக்க – இவர் மட்டும் சாக்குப் பையை போன்ற உடையை எப்படி அணிந்திருக்கிறார்? 1939 – சுதந்திரத்திற்கு முன்பான ஆண்டுகள் இல்லையா? இதுபோன்ற ஆடைகளை ஆங்கிலேயர்கள் கூட அணிந்திருப்பார்களா என்பது சற்றே விவாதிக்க வேண்டிய விஷயம் தான்.

நீலகிரி மலையின் குளிர்ச்சியான பிரதேசத்தில் இந்த சாக்குப் பை ஆடையை நாயகன் அணிந்து கொள்கிறார் சரி. வெக்கையைக் கிளம்பும் செம்பன் புழக்கத்தில் கூடவா அந்த சாக்குப்பை உடையை அணிய வேண்டும்? # Paradesi Doubt (பின்னர் இந்தப் படத்தின் ஆடை வடிவமைப்பிற்கு தேசிய விருது அறிவித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எதனடிப்படையில் இந்த விருது கொடுக்கப்பட்டது என்று விளக்கினார்கள் எனில் தன்யனாவோம்.)

போஸ்டர் சார்ந்த அவதானிப்பு:


சினிமா போஸ்டரின் வடிவத்திற்கு ஏற்ப முடிந்த மட்டும் முக்கியமான டெக்னீஷியன்களின் பெயர்கள் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும். விதவிதமான வடிவங்களில் போஸ்டர் உலவ விடப்படுதலும் சினிமா வியாபாரத்தில் அங்கம் தான்.

இயக்குனர், கேமரா மென், எடிட்டர், சண்டைப்பயிற்சி இயக்குனர், இசை அமைப்பாளர் போன்றவர்களது பெயர்கள் இருக்கும். அவசியம் எனில் திரைக்கதை மற்றும் வசனத்தில் பங்கு பெற்றவர்களின் பெயர்களும் குறிப்பிடப்பட்டிருக்கும்.

பாலாவின் கடந்த திரைப்படங்களான நான் கடவுள் மற்றும் அவன் இவன் போன்ற படங்களையே கூட இதற்கு உதாரணம் எடுத்துக் கொள்ளலாம். வசனம் சார்ந்து ஜெயமோகன் மற்றும் எஸ் ராமகிருஷ்ணனின் பெயர்களும் குறிப்பிடப்பட்டிருக்கும்.

ஆனால் பரதேசியின் போஸ்டர்களில் இதுவரை நான் பார்த்ததில் நாஞ்சில் நாடனின் பெயரை எங்கும் காண இயலவில்லை. மூத்த படைப்பாளியின் சினிமா வருகையை ஆர்பரித்துக் கொண்டாட வேண்டியதில்லை! மற்றவர்களுக்குக் கொடுக்கும் இடத்தை நடனுக்கும் கொடுக்கலாமே என்பதுதான் ஆற்றாமையாக இருக்கிறது!?

ஓரிரு பாடலை எழுதிய வைரமுத்துவுக்கு இடமிருக்கிறது! ஆனால் தனது சிறுகதையும் வசன பங்களிப்பையும் செய்த நாஞ்சில் நாடனுக்கு......!?

தொடர்ந்து வெளிவரும் தின இதழ்களில் பரதேசி படத்தின் விளம்பரங்களை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். அது எந்த வடிவத்தில் அமைந்த விளம்பரமாக இருந்தாலும் சரி... நாஞ்சில் நாடனின் பெயரை கிஞ்சித்தும் காண முடியவில்லை.

இதுதான் சினிமா உலகம் போல....!

Sunday, May 5, 2013

சோக கீதத்தின் பின்னணி

அவருக்கு படபடப்பாகத் தான் இருந்திருக்க வேண்டும். கூடவே அடிவயிற்றில் ஏதோ பிசைவது போலவும் இருந்திருக்க வேண்டும். சினிமா என்பது செண்டிமெண்ட் பார்க்கும் உலகம். முதல் நாள் படப் பூஜையின் போது ஏதேனும் அபசகுனத்தை அல்லது தடங்கலை உணர நேர்ந்தால் தயாரிப்பாளர்கள் படம் எடுப்பதை நிறுத்தி விடுவார்கள். இன்றளவிலும் கூட இதுதான் நிலைமை. ஏவிஎம் ரெகார்டிங் தியேட்டரில் பாடல் பதிவுடன் தனது முதல் பட பூஜைக்கு ஏற்பாடு செய்திருக்கிறார் காரைக்குடி நாராயணன். அன்றைய தினம் பார்த்து ரெகார்டிங் இயந்திரத்தில் ஏதோ கோளாறு ஏற்பட்டிருக்கிறது. ஆகவே பாடல் பதிவை மேற்கொள்ள முடியாத சூழல். இது தெரிந்தால் தயாரிப்பாளர் “என்ன முடிவை எடுப்பாரோ!?” என்ற தயக்கம் காரைக்குடி நாராயணனுக்கு. இத்தனைக்கும் அந்த நேரத்தில் பிரபல வசனகர்த்தாவாக வளம் வந்தவர் தான் அவர்.


இளையராஜா தான் இந்தப் படத்திற்கு இசை இயக்குனர் என்று முடிவு செய்திருக்கிறார்கள். நான்கு படங்களுக்கு மட்டுமே மேஸ்ட்ரோ இசையமைத்திருந்த காலம் அது. அந்த வகையில் இசைஞானியும் புதியவர் தான். எனினும் காரைக்குடி நாராயணன் ராஜாவிடம் ஓடுகிறார்.

“என்ன செய்யறது ராஜா? இப்படி ஆயிடுச்சே? சரிப்பட்டு வராது போல...!” என்று நீட்டி முழகியிருக்கிறார்.

“பயப்படாதீங்க அண்ணே...! உங்கள அப்படியெல்லாம் விட்டுட மாட்டேன்...” என்று சொன்னதோடு மட்டுமல்லாமல், பிரசாத் லேபிற்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு அவர்களிடம் பேசி - மதியம் இரண்டு மணி முதல் தொடர்ந்து ஆறுமணி நேரத்தில் இரண்டு பாடல்களை – காரைக்குடி நாராயணனின் முதல் படமான “அச்சாணி” என்ற படத்திற்கு கம்போஸ் செய்துக் கொடுத்திருக்கிறார் மேஸ்ட்ரோ.

இந்தப் படத்தின் பாடல் பதிவின் போது இன்னுமொரு சம்பவமும் நிகழ்ந்திருக்கிறது. தினத்தந்தியில் இளையராஜாவே அதனை நினைவு கூர்ந்து எழுதியிருந்தார்.


இரண்டு பாடல்களில் ஒரு பாடலை ஜானகி பாட ரெக்கார்டிங் நடந்துகொண்டிருக்கிறது. இயக்குனரோ கலவரத்தில் இருக்கிறார். வாத்தியக் கலைஞர்கள் வாசித்துக் கொண்டிருக்க... ஜானகியும் கொடுக்கப்பட்ட மெட்டில், கவிஞர் வாலி எழுதிய பாடல் வரிகளை கவனத்துடன் பாடிக் கொண்டிருக்கிறார். திடீரென வாத்தியக் கலைஞர்கள் வாசிப்பதை நிறுத்தி இருக்கிறார்கள். இளையராஜாவிற்கு ஒன்றுமே புரியவில்லை. ஏற்கனவே படத்தின் இயக்குனர் காரைக்குடி நாராயணன் டென்ஷனில் இருக்கிறார். அவருக்கு சீக்கிரம் பாடலை முடித்துக் கொடுக்க வேண்டிய கட்டாயம். அப்படி இருக்க ரெக்கார்டிங் தடைப்பட்டு எல்லோரும் அமைதியாக இருக்கிறார்கள். மேஸ்ட்ரோ கோவத்துடன் வெளியில் வந்து விசாரித்திருக்கிறார்:

“என்ன பிரச்சன..? ஏன் ரெகார்டிங்-அ ஸ்டாப் பண்ணிட்டிங்க...?”

அதற்குள் சுதாரித்து கைக்குட்டையால் கண்களைத் துடைத்துக் கொண்டு ஜானகி சொல்லி இருக்கிறார்:

“சாரி ராஜா... இந்த வரிகளும் பாடலும் பாவமும் மனச பாரமாக்குது... அதான் பாட முடியாமல் அழுதுட்டேன்...”

“ஓ... சரி சரி... ரிலக்ஸ் பண்ணிட்டு சீக்கிரம் பாடிடுங்க...” என்று சொல்லிவிட்டு மீண்டும் வேலையில் கவனம் செலுத்துகிறார் ராஜா. அந்தப் பாடல் தான் அச்சாணி படத்தில் வரும் “மாதா உன் கோவிலில்.... மணி தீபம் ஏற்றினேன்...”

நேற்றைய தினம் தூக்கம் வரவில்லை என ரேடியோவை முடுக்கினேன். அதில் காரைக்குடி நாராயணன் மேற்கூறிய சம்பவத்தை சிரித்துக் கொண்டே நேயர்களுடன் பகிர்ந்துகொண்டார். பாடலைக் கேட்கும் பொழுது ஜானகி தாங்க முடியாமல் அழுத வரிகள் வருகிறதா என்று காத்துக் கொண்டிருந்தேன். அந்த வரிகள் இவைதான்:

பிள்ளை பெறாத பெண்மை தாயானது – (2)
அன்னை இல்லாத மகனை தாலாட்டுது
கர்த்தரின் கட்டளை...
நான் என்ன சொல்வது – மாதா


இந்தப் பாடல் ஒலிக்காத மாதா கோவில்களே இல்லை என்று சொல்லலாம். எவ்வளவு பிரம்மாதமான பாடல். ஒருவருக்கு ஒருவர் எவ்வளவு அனுசரணையாக அன்புடன் வேலை செய்திருக்கின்றனர். பணத்திற்காக, புகழுக்காக, இத்தியாதி வசதிகளுக்காகவே ஒரு வேலையைச் செய்கிறோம் என்றாலும்... இது போன்ற பிணைப்புகள் தான் வாழ்வை அர்த்த பூர்வமாக்குகின்றன. அழகாக்குகின்றன...!

இளையராஜா - ஐ லவ் யூ டா செல்லம்... உன்னை எதுக்கு எல்லாரும் கர்வம் புடிச்சவன்னு சொல்றாங்க. உன்ன பத்தி முழுசா தெரிஞ்சிக்கல அதான்.

Saturday, May 4, 2013

சூது கவ்வும் – திரை விமர்சனம்


உலகத்தையே தன்னுடைய ஆள்காட்டி விரலின் கையசைவில் வைத்திருக்கும் அமெரிக்காவால், அதனினும் பலமடங்கு சிறிய நாடான வெனிசுலாவை ஆட்டவும் முடியவில்லை. அசைக்கவும் முடியவில்லை. காரணம்... வெனிசுலாவின் அதிபர் ‘சாவேஸ்’ என்ற ஒற்றை மனிதர்.

என்னுடைய நெருங்கிய நண்பன் தினேஷ் வெனிசுலாவில் கடந்த இரண்டாண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறான். பிரபல ஆயில் கம்பெனியின் ஒப்பந்த ஊழியனாக அங்கு வேலை செய்கிறான். இவனைப் போலவே இந்தியாவிலும், மற்றுமுள்ள உலக நாடுகளிலிருந்தும் பல பேர் அந்நாட்டிற்கு ஒப்பந்த அடிப்படையில் சென்றிருக்கிறார்கள்.

வேலையை முடித்த ஒரு மாலைப் பொழுதில் பேருந்தில் ஏறச் சென்றிருக்கிறான் தினேஷ். வாகனத்தின் முதல் படியில் காலை வைக்கும் பொழுது ஒரு துப்பாக்கி அவனுடைய முதுகில் வைக்கப்படுகிறது. சப்தமின்றி வண்டியில் ஏறுமாறு ஸ்பானிஷ் மொழியில் சொல்கிறான் அந்த கடத்தல்காரன். உயிர்பிழைத்தால் போதுமென்று சமிக்ஞைக்குக் கட்டுப்பட்டிருக்கிறான் தினேஷ். இவனைப் போலவே வண்டியில் இருந்த பலரையும் பிணைக் கைதிகளாக வைக்கின்றனர். என்னுடைய நண்பனையும் சேர்த்து, வாகனத்தில் இருந்த எல்லோருடைய உடைமைகளையும் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்துச் சென்றிருக்கின்றனர் கொள்ளையர்கள். இதன் உச்சமாக பிணைக்கைதிகள் இருந்த வண்டியை காவல் நிலையத்தின் அருகிலிருந்த மரத்தின் கீழ் நிறுத்திவிட்டுச் சென்றிருக்கிறார்கள். அப்படியெனில் சட்டமும் ஒழுங்கும் எந்த அளவில் இருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள்.

“கிச்சா... இது வெனிசுலாவுல ரொம்ப சாதாரணம்... ஆனால் சினிமா ஹீரோ மாதிரி எதிர்த்து சத்தம் போடாம அவங்க கேக்கறத கொடுத்தடனும்... இல்லன்னா சுட்டுடுவானுங்க... சிலதப்ப நம்ம போட்டிருக்க டிரெஸ் அவங்களுக்கு புடிச்சிருந்தா – அதையும் கழட்டிக் கொடுக்கச் சொல்லுவாங்க... நம்மள ஜட்டியோட நிக்க வச்சிடுவாங்க...” என்று சாதாரணமாகக் கூறினான் அவன்.

“என்னடா இப்படி சொல்ற...? சாவேஸ் இருக்க நாட்டுலையாடா இப்படி நடக்குது...?” என்றேன் ஆச்சர்யத்துடன்.

“எல்லா அரசியல்வாதியும் அவ்வலோதாண்டா... ஒவ்வொரு வீட்டுலயும் நாலு கள்ளத் துப்பாக்கியாவது இருக்கும் அங்க... அதெல்லாம் சாவேஸ்-கு நல்லாவே தெரியும். இந்த மாதிரி திருட்டு, கொல்லைன்னு நடக்கறதும் தெரியும்... ஆனா அவர் ஒண்ணுமே செய்யறது இல்லடா...” என்றான்.

வெனிசுலா அதிபர் சாவேஸ் இறந்த ஒரு மாத காலத்தில் என்னுடைய பள்ளிகாலத் தோழன் தினேஷ் இந்தியா வந்திருந்தான். அவனுடன் பேசிக் கொண்டிருந்த பொழுதுதான் மேற்கூறிய சம்பவத்தைப் பகிர்ந்துகொண்டான். மேலும் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் பலரும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் என்பதையும் பகிர்ந்துகொண்டன். “கெட்டவனாக மாறினால் தான் ஜனத்தோடு ஜனமாக தற்காலத்தில் வாழ முடியும்” என்பதை ஒரு சமூகமே ஏற்றுக்கொண்டால் என்னவாகும் என்பதற்கு மேற்கூறிய சம்பவம் ஓர் உதாரணம்.

இதுபோன்ற வழிப்பறிகள் தூர தேசத்தில் மட்டுமே நடப்பதில்லை. சென்னை கொளத்தூர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து தங்கச் சங்கிலித் திருட்டில் ஈடுபடுகிறான். பூந்தமல்லி அருகிலுள்ள அரசுக கல்லூரி முதலாமாண்டு மாணவர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று கடந்த ஒரு ஆண்டுகளில் மட்டும் நூறு பவுன் தங்க ஆபரனங்களைத் திருடி இருக்கின்றனர். இது போன்ற பல குற்றச் சம்பவங்களிலும் நம்மைச் சுற்றியுள்ள மாணவர்கள் & வேலையில்லாப் பட்டதாரிகள் ஈடுபடுகிறார்கள். குற்றவாளிகள் பிடிபட்டதும் சொல்லும் காரணம் தான் மேலும் வியப்படைய வைக்கிறது. “மசாஜ் சென்டர் செல்லவும், பெண்களுடன் உல்லாசமாக இருக்கவும் ஆடைப்பட்டுத் தான் திருடினோம்” என்கிறார்கள். இதுபோன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

“கெட்டவனாக மாறினால் தான் ஜனத்தோடு ஜனமாக தற்காலத்தில் வாழ முடியும்” என்ற ஒற்றை மேற்கோளில் நம்பிக்கைக் கொண்டு - ஒரேயொரு நேர்மையான நல்ல அரசியல் வாதியையும், வேலையில்லாமல் சுற்றித் திரியும் சில இளைஞர்களையும் கூட்டாகச் சேர்த்துக்கொண்டு (ஜனரஞ்சகத் தன்மையில் ஹாஸ்யத்துடன்) மேம்போக்கான தமிழ் சினிமா ரசிகர்களின் மனத்தைக் கொள்ளையடித்திருக்கும் படம் தான் “சூது கவ்வும்”.

வேலையற்றவனின் ஒருநாள் பகல் வாழ்வு எவ்வளவு சிரமங்கள் நிறைந்தது என்பதை வாழ்ந்து பார்த்தால் தான் தெரியும். எண்பதுகளுக்கு முன்பும் பின்பும் வாழ்ந்தவர்கள் இதன் முழு அர்த்தத்தை உணர்ந்தவர்கள். ஆனால், தொண்ணூறுகளில் துவங்கி இரண்டாயிரமாவது ஆண்டு வரையுள்ள பத்தாண்டுகள் பட்டதாரிகளின் பொற்காலம் என்று தான் சொல்லவேண்டும். தாராளமயமாக்கம், உலகமயமாக்கம் போன்ற பொருளாதாரக் கொள்கைகள் இந்தியாவின் கலாச்சார வாழ்க்கையையே மாற்றிவிட்டது. தொழில் வளர்ச்சியின் காரணமாக மனிதவளத்தை நிரப்ப ஏகப்பட்ட படிப்புகளும் முளைத்தெழுந்தன. படிக்காததால் வேலையில்லை என்ற நிலைமாறி, லட்சக்கணக்கானோர் படித்து பட்டம் பெற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்தால் முழி பிதுங்கி நிற்கின்றனர். ஒரு நிலையில் இது போன்றவர்கள் தற்கொலைக்கான முடிவைக் கையில் எடுக்கின்றனர். இல்லையேல் குற்றச் செயல்களைக் கையில் எடுக்கின்றனர். இதில் இரண்டாம் வகையினரின் சிலநாள் வாழ்வினை சித்தரிக்கும் படம் தான் இது.

ஐந்து நட்சத்திர ஓட்டலில் கார் பார்க்கிங் செய்யும் வேலையிலிருந்து நீக்கப்பட்ட ஒருவனும், தகாத செயலில் ஈடுபட்டதாக ஒரு பெண்ணால் பழி சுமத்தப்பட்டு வேலை நீக்கம் செய்யப்பட்ட ஒருவனும் சென்னையில் அறை எடுத்துத் தங்குகின்றனர். அவர்களுடன் நயந்தாராவிற்கு ஒன்னரை லட்சம் செலவு செய்து சிலை வடித்தவன் சுற்றத்தாரால் துரத்தியடிக்கப்பட்டு இவர்களுடன் இணைந்து கொள்கிறான். இவர்களின் பிறவிப் பயன் என்றுதான் சொல்லவேண்டும். ஏனெனில் இல்லாத ஹீரோயிநியுடன் கற்பனையாக வாழும் சைக்கோ கடத்தல்காரனான “தாஸ்” என்கின்ற விஜய் சேதுபதியிடன் சென்று சேர்வார்களா? ஐந்து கட்டளையிட்டுத் திருடிக்கொண்டு வரும் விஜய் சேதுபதியை இந்த மூவர் கூட்டணி பெரிய திருட்டிற்கு இழுத்துச் செல்கிறது. இவர்களால் கடத்தப்பட்ட சிறுவனின் தந்தையே இவர்களால் கவரப்பட்டு, கேபினட் மந்திரி ஒருவரின் மகனைக் கடத்த வேண்டுகோள் வைக்கிறான்.

நேர்மையான மந்திரியின் மகன் ஜகஜ்ஜாலக் கில்லாடி. வேலையற்றவனான அவனும் இவர்களுடன் கூட்டுக் கடத்தலில் ஈடுபடுகிறான். “கடத்தல், கடத்தியதால் கடத்தல், கடத்தியதற்கு கடத்தியதால் மீண்டும் கடத்தல்” என திரைக்கதை நுட்பமாகச் சுழல்வதால் திரைப்படத்தினை சோர்விலிருந்து மீட்க ஒரு என்கவுண்டர் போலீஸ். சைக்கோ திருடனுக்கு எல்லா விதத்திலும் அம்சமாகப் பொருந்தும் சைக்கோ போலீஸ் இவர். திருடர்களை நீதிமன்றத்தில் நிறுத்துகிறார் இந்த போலீஸ். ஆனால் மாந்திரியின் மகன் அவர்களைக் காப்பாற்றுகிறான். நீதிமன்றம் அவர்களை நிரபராதி என விடுதலை செய்கிறது. என்றாலும் படத்தின் இறுதியில் மந்திரியின் மகனைத் தவிர்த்து இந்தக் கூட்டுக் களவாணிகளை என்கவுண்டர் செய்ய தனியொரு இடத்திற்கு கடத்திச் செல்கிறார் அந்த போலீஸ். விதியின் பயன் அவரது பின்புறத்தைக் கள்ளத் துப்பாக்கியின் ரவை துளைக்கிறது. ஆகவே இவர்கள் தப்பிக்கிறார்கள்.

பாத்திர வார்ப்பும், நடிகர்களின் இயல்பான நடிப்பும், வசன உச்சரிப்பும் படத்தினை தொய்வில்லாமல் கொண்டு செய்கின்றது. குறிப்பாக விஜய் சேதுபதியின் நடிப்பை வெகுவாகப் பாராட்டலாம். ஆங்கிலத்தை கொத்திக் குதறி அவர் பேசுவதிலாகட்டும், இல்லாத பெண் தோழியுடன் உரையாடுவதிலாகட்டும், குடித்துவிட்டு கும்மாலமடிப்பதிலாகட்டும் மற்ற நடிகர்களை விஞ்சி நிற்கிறார். கடைசி காட்சிகளின் இருட்டறையில் போலீசிடம் அடிவாங்கும் பொழுது சேதுவின் உடல்மொழி சிறப்பாக இருக்கிறது.

திரையாக்கம் செய்யத் தேர்ந்தெடுத்திருக்கும் கரு முக்கியமாகத் தான் படுகிறது. ஏனெனில் சூதுதான் தற்கால வாழ்வை நகர்த்திச்செல்கிறது. இப்படிப்பட்ட முக்கியமான எதிர்மறை கருத்தை முன்வைக்கும் பொழுது, கலைஞனாக – சினிமா படைப்பாளியாக சமூகம் சார்ந்த முழிப்பும் அக்கறையும் நிச்சயம் வேண்டும். அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் திருட்டை மொத்த இளைஞர் பட்டாளமுமே சிறு உறுத்தலும் இல்லாமல் காமெடி என்ற பெயரில் கண்டு களிக்கிறது. உண்மையில் தத்தமது உள்மன ஆசைக்குத் தீனியாக இதனைக் கருதுகிறார்களோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது. படத்தின் மூலம் இயக்குனர் நலன் குமாரசாமி என்ன சொல்ல வருகிறார் என்பதை ஆழ்ந்து எச்சரிக்கையுடம் யோசிக்க வேண்டி இருக்கிறது. அப்படி சிந்திக்கும் வேலையில் அறிமுக இயக்குனராக சினிமா வியாபாரத்தில் வெற்றிவாகை சூடிய நலன் குமாரசாமி, படைப்பாளிகளுக்கு இருக்க வேண்டிய சமூக அறம் சார்ந்த விஷயத்தில் இவர் தோல்விகண்டு நிற்கிறார் என்பதுதான் முற்றிலும் உண்மை.

சினிமாவைக் கவ்வும் சூது

Thursday, May 2, 2013

சினிமாவைக் கவ்வும் சூது

சினிமா என்பதே பொழுதுபோக்கும் அம்சம் தான் என்பதை மறுப்பதற்கில்லை. இருந்தாலும், சினிமாவைக் கொஞ்சம் உற்று கவனிப்பத்தின் மூலம், சமூகத்தின் உளவியலையும் நெருக்கமாக உணர முடியும் என்று தோன்றுகிறது. ஆரம்பகால சினிமாவில் இதிகாசக் கதைகளும், புராணக் கதைகளும் திரையாக்கம் செய்யப்பட்டன. அதனை ஒட்டி சமகால சுதந்திர வேட்கையை முடுக்குவிக்கும் கதைகளும் படங்களாக எடுக்கப்பட்டன. ஐம்பதுகளின் முற்பகுதி இப்படி என்றால், பராசக்தி போன்ற முற்போக்குக் கருத்துக்களைக் கொண்ட திரைப்படங்கள் – காதல், கலப்புத் திருமணம், சாதிய அடக்குமுறை போன்ற திரைப்படங்களை எடுக்க ஒரு வெளியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன. அதன் பின்னர் ‘கல்லூரி, காதல், செண்டிமெண்ட்’ என தொண்ணூறுகளின் இறுதிவரை இந்திய சினிமா சகமனித வாழ்வின் நிறைகளையும் குறைகளையும் தண்டவாளமாகக் கொண்டு பயணம் செய்கின்றது. அதன் பிறகு ‘சீழ் பிடித்த அரசியல், தீவிரவாதிகளின் ஊடுருவல்’ என பலவும் திரையாக்கங்களாக முன் வைக்கப்பட்டன. இவையாவும் சமூகத்தில் நடப்பவைதான். நடந்துகொண்டு இருப்பவை தான். ஆகவே சமூகத்தின் பிரதிபலிப்பாக திரைப்படங்களும், திரைப்படங்களின் ஒட்டுண்ணியாக சமூகமும் இருந்திருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. மேற்சொன்ன காலங்களில் வெளிவந்த திரைப்படங்கள் நல்லவைக்கும் கெட்டவைக்குமான மோதலாக உச்சம் பெற்று, “தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்... எனினும் தர்மமே வெல்லும்” என்ற அடிப்படையில் நல்லவை திரைப்படத்தின் இறுதியில் கவுரவிக்கப்படும். ஆனால் தற்கால சினிமாவில் இந்த அடிப்படை ஆட்டம் காண்கிறது. “கொலை, குத்து, ரவுடியிசம், களவு, என்கவுண்டர், ஆள்கடத்தல்” போன்ற விஷயங்கள் ஹீரோயிசமாக கொண்டாடப்படுகிறது. இது சார்ந்து தான் என்னுடைய எண்ணங்களும் விரிகிறது.

நண்பர்களின் பழக்கமும் நேசமும் நகரத்தில் நுழைவதற்கு சிபாரிசுக் கடிதம் போல பலருக்கும் இருக்கின்றது. அதற்கேற்ப நகரமானது நாள்தோறும் மனிதர்களைத் திணித்துக் கொள்கின்றது. பிதுங்கி வழியும் நகர மக்களின் வாழ்வியல் நெருக்கடிகள் வார்த்தைகளால் சொல்லி மாளாதவை. ஒருபுறம் நகர வாழ்வின் கோரக் கரங்களால் ஒடுக்கப்படும் அடித்தட்டு உதிரி மனிதர்களின் வாழ்வானது “வழக்கு எண் 18/9” போன்ற திரைப்படங்களின் மூலம் ரத்தமும் சதையுமாக திரையாக்கம் செய்யப்படுகிறது. இன்னொரு புறம் வன்முறைகளும் வக்கிரங்களும் நிறைந்த மனிதர்களின் கதையென கூலிப் படையினரின் அதீத ரவுடித் தனங்கள் கற்பனையாகத் திரையாக்கம் செய்யப்படுகின்றன. பாட்சா துவங்கி ‘தீனா, ஜெமினி, பீமா, புதுப்பேட்டை, பொல்லாதவன்’ என பல திரைப்படங்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இவற்றின் அடுத்தகட்ட நகர்வாக இன்றைய இளம் தலைமுறை இயக்குனர்களின் படங்கள் தொழிநுட்ப ரீதியில் கொண்டாடப்படுகின்றன. திரைக்கதையின் வேகம் சார்ந்து மெச்சப்படுகின்றன. ஆனால் திரைப்படங்களின் உள்ளடக்கமானது கெட்டவைகளின் ரசவாதங்களாக இருக்கின்றன.

‘ஆள்கடத்தல், பணத் திருட்டு’ போன்றவை மாமாங்க ஆண்டுகளாகவே திரைப்படங்களாக எடுக்கப்பட்டிருக்கின்றன. நகைச்சுவையின் அடிப்படையில் இந்த அம்சங்களைத் தொக்கி நிற்கும் படங்களாக, “மைக்கல் மதன காமராஜன்” முதல் “உள்ளத்தை அள்ளித்தா” வரை பல படங்களை உதாரணமாகச் சொல்லலாம். ரிசர்வ் பேங்கின் பணத்தைத் திருட எத்தனிக்கும் மணிரத்னத்தின் ரொமாண்டிச வகையில் சேரும் “திருடா திருடா”, கொஞ்சம் காமெடி கொஞ்சம் சீரியஸ் என்ற அடிப்படையில் எடுக்கப்பட்ட ஷங்கரின் “ஜென்டில்மேன்” போன்ற படங்களைக் கூட இந்தப் பட்டியலில் வைக்கலாம். (பில்லா போன்ற ஹாலிவுட் காப்பிப் படங்களை இதில் சேர்க்க இயலாது.) ஆனால் திரைப்படத்தின் இறுதியில் சமூக விரோதச் செயல்களுக்கான தண்டனை நிச்சயமாக அவர்களுக்கு இருக்கும். (இல்லையேல் நாடகத் தன்மையில் வில்லன்கள் மனம் திருந்துவார்கள்.)


இதிலிருந்து சமீப காலங்களில் எடுக்கப்பட்ட “பீட்சா, ஆரண்யகாண்டம்” போன்ற நம்பிக்கையளிக்கும் நாளைய இயக்குனர்களின் திரைப் படங்கள் வேறு திசையை நோக்கிப் பயணிக்கத் துவங்கி இருக்கின்றன. தனது முதலாளியிடம் கொல்லையடித்த விலையுயர்ந்த ஆபரணக் கற்களைத் திருடிவிட்டு, வேரூரில் சொகுசாக வாழ்க்கையைத் துவங்கும் கணவன் மனைவியைப் பற்றிய கதை “பீட்சா”. “எது தேவையோ அதுவே தர்மம்” என்ற அடிப்படையில் வக்கிர எண்ணத்துடன் ஒருவரை ஒருவர் ஏமாற்ற நினைக்கும் கதையே “ஆரண்யகாண்டம்”. இந்தப் படங்களில் வரும் கதாப்பாத்திரங்கள் அடுத்தவர்களின் பணத்தை அபகரிக்கவே சூதுடன் நடந்துகொள்கிறார்கள். அதில் வெற்றியும் அடைகிறார்கள். இந்த வரிசையில் மற்றுமொரு ஆக்கமாகத் தான் “சூது கவ்வும்” திரைப்படத்தைக் கருத வேண்டி இருக்கிறது.

தொழில்நுட்பம், திரைக்கதை, எடிட்டிங், நவீன உத்தியைக் கையாளுதல் என எல்லாவற்றிலும் சிறப்பாகச் செய்தவர்கள், சமூகப் பிரக்ஞை சார்ந்த அறத்தை நிலைநாட்டுதலில் கோட்டை விட்டிருக்கிறார்கள். நகரத்தில் வாழும் ஒன்டிக்கட்டைகள் மூவர், சைக்கோத் திருடனான விஜய் சேதுபதிக்கு நண்பர்களாகிறார்கள். புதியவர்களின் நெருக்கம் விஜய் சேதுபதியின் திருட்டுத் தொழிலை வேறு தளத்திற்கு நகர்த்துகிறது. களவுத் தொழிலின் முன்னேற்றச் சிக்கலையும், பிரச்சனையின் தீர்வுகளையும் ஹாஸ்யத்துடன் நகர்த்திச் செல்கிறார் இயக்குனர் நலன் குமாரசாமி.

“சாலையில் நடந்து சென்ற பெண்மணியின் நகைத் திருட்டு. பார்க்கிங்கில் நின்றிருந்த கார் கடத்தல், செயின் பறிப்பு, அடையாளம் தெரியாதவரின் பிணம்” என நாளிதழில் வெளிவரும் பல சம்பவங்களில் கல்லூரி மற்றும் மாணவர்கள் தொடர்புடையவர்களாக இருப்பது வேதனையளிக்கும் சம்பவமாக இருக்கின்றது. இந்தப் படத்திலும் டிகிரி படித்த இருவர் விஜய் சேதுபதியுடன் திருட்டுத் தொழிலில் இணைகின்றனர். சின்னச் சின்ன கடத்தல்களைச் செய்பவர்கள், நிர்பந்தத்தின் காரணமாக அமைச்சர் ஒருவரின் மகனைக் கடத்துகின்றனர். ஒரு டீலிங் பேசி அமைச்சரின் மகனும் இந்தக் கடத்தலுக்கு உடன்படுகிறார் (டிகிரியில் அரியர் வைத்திருப்பவர்). ஏகத்துக்கும் லாஜிக் இல்லாமல் பயணிக்கும் இந்தத் திரைக்கதை பல இடங்களில் அரங்கத்தையே சிரிப்பலையில் அதிர வைக்கிறது. என்றாலும் கடத்தலில் தொடர்புடைய ஒருவரும் தண்டனைக்கு உட்படவில்லை. மாறாக சமூக அரசியலில் களம் இறக்கப்படுகிறார்கள். இளைய தலைமுறை இயக்குனர்கள் சமூக விரோதச் செயலை ஆதரிக்கிறார்களா? அல்லது சமூகம் நம்பும் மனசாட்சியற்ற விஷயங்களை சினிமா இயக்குனர்கள் ஆவணப் படுத்துகிறார்களா? ஒரு படம் எனில் இதனை விவாதிக்காமல் விட்டு விடலாம். தொடர்ந்து வெளிவரும் படங்கள் இந்தத் தன்மையில் இருப்பதால் இது சார்ந்த யோசிக்க வைக்கிறது.

நடிகர்கள் ஒவ்வொருவரும் மனத்தைக் கவர்கிறார்கள். விஜய் சேதுபதி சிறப்பாகச் செய்திருக்கிறார். ஆரம்பகாலத்தில் ரஜினி தான் நடித்தத் திரைப்படங்களில் நடிகராக உச்சத்தைத் தொட்டிருப்பார். “முள்ளும் மலரும், புவனா ஒரு கேள்விக்குறி, ஆறிலிருந்து அறுபதுவரை” போன்ற படங்களில் நடிகனாகத் தனது முத்திரையைப் பதித்திருப்பார் ரஜினி. அதன் பின்னர் வியாபார வியூகத்தின் பற்களுக்கிடையில் மாட்டிக்கொண்டு, வியாபார கமர்ஷியல் ஹீரோவாக உச்சத்தைத் தொட்டிருக்கிறார். ரஜினியுடன் விஜய் சேதுபதியை ஒப்பிட இயலாது. என்றாலும் “தென்பெற்குப் பருவக்காற்று” நடிகராக விஜய் சேதுபதிக்கு முக்கியமானப் படம். அதன் பிறகு அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் படங்கள் வேறு ஒரு திசையை நோக்கிப் பயணிப்பதை உணர முடிகிறது. இந்தக் கமர்ஷியல் பார்முலாவில் உன்னத நடிப்பாற்றலை இழக்காமல் இருந்தால் சரி.

நாளிதழ்களில் படித்த செய்திதான், சமூகப் பொறுப்புடன் “வழக்கு எண் 18/9” என்ற படமாக எடுக்கப்படுகிறது. பல்வேறு உலக நாடுகளில் நடக்கும் திரை விழாக்களில் பரிசையும் தட்டிச் செல்கிறது. அதே நாளிதழ்களில் படிக்கும் செய்திதான் கொஞ்சமும் சமூகப் பிரக்ஞை இன்றி காமெடி மசாலாக்களைத் தூவி இது போன்ற படங்களாகவும் முன் வைக்கப்படுகின்றது. இரண்டிற்கும் ரசிகர்கள் ஏகோபித்த ஆதரவைத் தருவதுதான் எனக்கு ஆச்சர்யமாக இருக்கின்றது. இதில் எங்கிருந்து சினிமாவைக் கொண்டு சமூக உளவியலை நாடி பிடித்துப் பார்க்க...!?

எனக்கு ஏன் வம்பு? - நல்லதோ கெட்டதோ? விருதுகளைக் குவிக்கிறீர்களோ! ரசிகர்களின் உற்சாகக் கைத்தட்டளைப் பெருகிறீர்களோ! ஆக மொத்தம் சினிமாக் கலைஞர்களுக்கு எனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் சொல்லிக் கொள்கிறேன்.