Tuesday, January 31, 2012

மைதானத்தில் மூன்றாம் அரங்கு

கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பயிற்சிப் பள்ளியில் ஹோவர்ட் ஃபாஸ்ட் தனது பயிற்சியை நிறைவு செய்யும் பொழுது, 1888 ஆம் ஆண்டு எழுதப்பட்ட “The Ancient Lowly” என்ற புராதன தொழிலாளர்களைப் பற்றிய வரலாற்றுப் புத்தகத்தைப் பரிசாகப் பெறுகிறார். இரண்டு தொகுதிகளைக்கொண்ட இப்புத்தகம் இரண்டாயிரம் பக்கங்களைக்கொண்ட து. அதிலிருந்துதான் ஸ்பார்டகஸ் பற்றிய கதைக்கரு ஃபாஸ்ட்டுக்கு உதித்திருக்கிறது. அதனை நாவலாக்கும் எண்ணம் நீண்ட நாட்களாக இருந்தாலும் ‘வில் பாயின்ட்’ சிறைவாசம்தான் அதற்கான சந்தர்ப்பத்தை வழங்கி இருக்கிறது. அதன்படி 1951-ஆம் ஆண்டு வெளிவந்த இப்புத்தகம், கடந்த 60 ஆண்டுகளில் உலகின் 100 மொழிகளுக்கும் மேல் மொழி மாற்றம் செய்யப்பட்டு பல லட்சம் பிரதிகள் விற்று சாதனை படைத்துள்ளது. “ஸ்பர்டகஸ், கிளாடியேட்டர்” என்ற பெயர்களில் திரைப்படமாகவும் வெளிவந்து பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது. “ஹைதராபாத் புக் டிரஸ்ட்” முயற்சி எடுத்து இந்நாவலை தெலுங்கில் வெளியிட்டுள்ளார்கள். அதனையும் ஆங்கிலத்தையும் மூலமாகக்கொண்டு ஏ. ஜி. எத்திராஜிலு இந்நாவலை தமிழில் மொழிபெயர்த்துள்ளார் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

அதற்கும் முன்பே, ஆங்கில மூலத்தினைக்கொண்டு இந்திய அளவில் புகழ்பெற்ற நாடக ஆசிரியர்களில் ஒருவரான பாதல் சர்க்கார் இதனை நாடகமாக்க விரும்பி இருக்கிறார். அரங்க மேடை வடிவத்தில் இந்நாடகத்தை அரங்கேற்ற முடியுமா என்ற தயக்கம் அவருக்கு இருந்திருக்க வேண்டும். என்றாலும் 1972ம் ஆண்டில் அதனை செய்து முடித்தார். திறந்த வெளி நாடக வடிவத்தை முயற்சித்த போதுதான் அதற்கான துணிச்சலையும் பெற்றிருக்கிறார். 1973-ல் ‘சதாப்தி’ என்ற குழுவினரோடு இந்நாடகத்தை முதன் முறையாக அரங்கேற்றி அதன் பின் பல முறை அரங்கேற்றியிருக்கிறார்.

1989-ஆம் ஆண்டு திருச்சியில் நடந்த பாதல் சர்க்கார் நாடகவிழாவில் மு. ராமசாமியால் முதன்முறையாக இந்நாடகம் தமிழில் அரங்கேற்றப்பட்டது. கோ. ராஜாராம் மொழிபெயர்த்திருந்தார். 86 வயதில் காலஞ்சென்ற பாதல் சர்க்காரின் நினைவை போற்றும் வகையில் கருணா பிரசாத்தின் “மூன்றாம் அரங்கு” இதனை தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நிகழ்த்தி வருகிறார்கள். அதன் காரணமாக தற்கால இளம் நடிகர்களைக்கொண்டு மறுபடியும் DG வைஷ்ணவா கல்லூரி மாணவர்களுக்காக சில மாதங்களுக்கு முன்பு “ஸ்பார்டகஸ்” நாடகத்தை மு ராமசாமி நெறியாள்கை செய்திருந்தார். அக்கல்லூரியின் விஸ்காம் துறையினர் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்கள்.

மைதானத்தை நெருங்கும்போது நறுக்கி வீசப்பட்ட கோரைப் புல்லின் பச்சை வாசம் நாசியில் இறங்கியது. நடிகர்கள் ஒத்திகையில் இருந்தனர். சினிமா மற்றும் நாடகக் கலைஞர் நாசர் ஒத்திகையின் பார்வையாளனாக ஓர் ஓரத்தில் நின்றுகொண்டிருந்தார். குழுக்குழுவாக மாணவர்கள் வரத் துவங்கினர். வந்தவர்கள் எல்லோரும் வட்ட வடிவில் அமர்த்தப்பட்டனர். வட்டத்தின் நான்கு திசையிலும் நுழைவாயில் இருக்குமாறு சற்றே இடைவெளி விட்டு அமர்ந்திருந்தோம்.

ஊலையிட்டுக்கொண்டு நான்கு வாயில்களிலும் அடிமைகள் மையம்நோக்கி நகர்கிறார்கள். அதுவே சந்தையாக மாறுகிறது. காற்றைக் கிழித்துக்கொண்டு குதிரைகள் மையம் நோக்கி முன்னேறுகின்றன. வட்டமடிக்கும் குதிரைகளின் குளம்படி சத்தம் அடிமைகளை நடுங்கச்செய்கிறது. சந்தைக்கு வருவோர் அடிமைகளின் புஜபலத்தைப் பார்த்து விலைபேசுகிறார்கள். விலைக்கு வாங்கப்படும் அடிமைகள் எஜமானனின் சொல்லைக் கேட்டு ஆயுள் முழுவதும் நடக்க வேண்டும். விவசாயம், கல்வெட்டுதல், வியாபாரம், தோட்ட வேலை, கால்நடை பராமரிப்பு என எல்லா வேலைகளிலும் இவர்கள் அமர்த்தப்படுவார்கள். அதில் ஒருவருக்கொருவர் சண்டையிடும் வீர விளையாட்டும் அடங்கும்.

பிரபு வம்சத்தினரும், பொருளாதாரத்தில் முன்னேற்றம் கண்டவர்களும் கூடியுள்ள ஓர் உள்ளரங்கில், விலைக்கு வாங்கி பழக்கப்பட்ட அடிமையானவன் தனக்கு நிகரான மற்றொரு அடிமையோடு விலங்கினைப் போல மோதிச் சண்டையிட வேண்டும். பலம்கொண்ட அடிமை தன்னால் அடித்து வீழ்த்தப்பட்ட சக அடிமையைக் குத்திக் கொன்று, தன் உயிரைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு மனிதன், தன் சக மனிதனோடு மோதிச் சண்டையிட்டு மடியும் இந்நிகழ்வைக் குதூகலத்துடன் கரவொலி எழுப்பி மகிழ்ந்தது கலாச்சாரத்தில் முன்னேறியிருந்த அன்றைய ரோமானிய அரவ வம்சம். இந்தச் சண்டையில் பங்குபெறும் அடிமைகளுக்கு கிளாடியேட்டர் என்று பெயர். ஸ்பார்டகஸ் புகழ்பெற்ற கிளாடியேட்டராக இருந்தவன்.

கிறிஸ்து பிறப்பதற்கு 71 ஆண்டுகளுக்கு முன்பு இத்தாலியிலுள்ள புகழ்பெற்ற நகரில் நிகழும், அரக்கத் தனமான ரோமாபுரி அரசர்களின் பூர்ஷ்வா வாழ்க்கையையும், அதனால் சிக்கலுக்கு உள்ளாகும் அடிமைகளின் எழுச்சிப் போராட்டமுமே இக்தை. ஸ்பார்டகஸ் கொல்லப்பட்ட பிறகு, அவனைக் குறித்த சம்பவங்களை பிரபுக் குலத்தினர் பேசி உரையாடி நினைவு கூர்வதாக இந்நாடகம் அமைக்கப்பட்டிருக்கிறது. அடிமை முறை தற்போது ஒழிந்துவிட்டாலும் முள்ளிவாய்க்கால், சானல்4 போன்ற சம்பவங்களின் ஒப்பீட்டுடனே நாடகம் துவங்கியது. அந்த நொடியில் பாரததேசம் ரோம் சாம்ராஜ்ஜியமாக மாறியது.

கையஸ் கிராசஸஸூம், அவன் தங்கை ஹெலினாவும் ரோமபுரியில் இருந்து கேப்புவா செல்லும் சாலையில் பயணிக்கிறார்கள். பாதையின் இரு மருங்கிலும் ஆயிரமாயிரம் சிலுவைகள் காணக் கிடைக்கின்றன. சிலுவையில் அறையப்பட்ட அடிமைகளின் பிணங்களைத் தாண்டியே அழகிய நகரான கேப்புவாவிற்குச் செல்ல வேண்டும். மூன்றாம் படையின் தளபதியாக இருந்த ஃபிலேவியஸ் அடிமைத் தரகனாக அறிமுகமாகிறான். பிட்சை எடுப்பதை காட்டிலும் தரகனாக இருப்பதில் தவறில்லை என்று நினைக்கிறான். அவனிடம் “இவன்தான் ஸ்பர்டகஸா?” என்று கேட்கிறார்கள்.

“அவன் பிணம்தான் கிடைக்கவில்லையே, தெரியாதா?” என்று பதில் கூறுகிறான்.
“ஸ்பார்டகஸ் சின்னா பின்னமாகிவிட்டான். ஆனால் இதோ இருக்கிறானே இவன் பெயர் பேர்டாக்ஸ். அவனை விட மோசமானவன். ஆனால் உயிருடனே பிடித்துவிட்டார்கள்” என்கிறான் தரகன். மேலும் பிடிபட்டவன் அமைதியாகவே இருந்தான். சிலுவையில் அறையப்பட்டு மரணத்தைத் தழுவும் முன் “நான் திரும்பி வருவேன்… லட்சலட்சமாய் கோடிகோடியாய்..” என்ற அற்புதமான வார்த்தையை சொல்லிச் சென்றதாகக் கூறுகிறான்.
வில்லா சாலேரியா மாளிகையில் ரோம் செனட்டின் படைத் தலைவன் கிராகஸ், அறிஞர் மற்றும் தத்துவன ஞானியான சிகாரோ, பணக்காரனான ஆக்டேநியஸ், பிரபு வம்சத்தவர்களான கையஸ் மற்றும் அவன் தங்கை ஹெலனா ஆகியோர் கூடுகின்றனர். அடிமைகளின் முக்கியத்துவம் பற்றிப் பேசுகின்றனர்.

ரம்யமான இரவில் அறிஞர் சிகாரோ பேசத் துவங்குகிறார். “ரோம் நாகரிகமே அடிமைகளின் மீதுதான் நிற்கிறது. இது ஆபத்தான விஷயம். இப்படியே சென்றால் என்றாவது ஒருநாள் நம்மை அவர்கள் அழித்துவிடுவார்கள்” என்கிறார். அதற்கான காரணங்களை ஆதாரத்துடன் முன்மொழிகிறார். மு ராமசாமி இந்தப் பாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தி இருந்தார். அவருடைய வயதும், நாடகக் கலையின் முதிற்சியும் அறிஞரின் பாத்திரமாக வெளிப்பட்டது.

சிகாரோவின் வார்த்தைகளை மற்றவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. எனவே “ஸ்பார்டகஸின் கதை என்ன ஆனது?. நர்த்தமாவின் மண்ணுக்கு அவன் இறையாகவில்லையா? அதே நிலைமைதான் மற்ற அடிமைகளுக்கும்” என்று கருத்து சொல்கிறார்கள். நான்கு வருடங்கள் படைத் தளபதியாக இருந்த கிராசிஸ் கொஞ்சம் அழுத்தமாகவே சீருகிறான். ஒரு முடிவுக்கும் வரமுடியாமல் கூட்டம் கலைகிறது. கையஸ் மற்றும் ஹெலனா ஆகிய இருவரும் பூங்காவிற்குச் செல்கிறார்கள். சண்டை மைதானத்தின் முதலாளியான லெண்டுலஸ் பாடியாட்டஸ் வருவதற்காக இருவரும் காத்திருக்கிறார்கள். அவனிடம் சண்டை பயின்ற ஸ்பர்டகஸ் பற்றி தெரிந்துகொள்ள திட்டமிடுகிறார்கள். அவனோ குடித்துவிட்டு கழிவிறக்கத்தில் பொருமுகிறான். கிளாடியேட்டர் அடிமைகளை சண்டைக்குப் பழக்கும் தன்னையும் தீண்டத்தகாதவனாக பார்க்கும் மேல்தர சமூகத்தை நினைத்துக் குமுறுகிறான். இந்தப் பாத்திரத்தை ஏற்று நடித்த கருணா பிரசாத் செம்மையாகச் செய்திருந்தார். குதிரையின் குலம்படிச் சத்தத்தை குரல் வழியாக வெளிப்படுத்தியபோது நிஜக் குதிரையே வந்ததுபோல மெய்சிலிர்க்க வைத்தார். ஹெலனாவாக நடித்தவர், சந்தையின் அடிமைகளைப் பார்த்து காமப் பார்வையில் சந்தோஷிப்பது போன்ற முகபாவம் செய்தது யாதார்த்தமாக இருந்தது. ரோம் கலாச்சாரத்தின் காமக் குறியீடாக அவருடைய முகபாவம் அமைந்திருந்தது. முக்கியமான கதாப் பாத்திரங்களைத் தவிர்த்து மற்ற எல்லோரும் ஸ்பார்டகஸாக வந்து சென்றார்கள். புரட்சியின் குறியீடான சிகப்பு நிற துணியே அவனை அடையாளப்படுத்துகிறது. சோக இழையோடும் அந்திகாற்று பாலாவின் குரல் கிளாடியேட்டர்களின் துயரை காற்றில் நிரப்பியது. நாடகம் முடிந்தும் அதன் ரம்யம் எதிரொலித்துக் கொண்டே இருந்தது.

“அடிமைமுறை தற்போது முற்றிலும் ஒழிந்துவிட்டது. அப்படி இருக்கையில் இதுபோன்ற நாடகங்கள் தேவைதானா?” என்று நாடகம் முடிந்ததும் பார்வையாளர்களில் இருந்த நண்பரொருவர் என்னிடம் கேட்டார்.

அடிமைகளை வைத்துக் கொள்வதை கௌரவமாக நினைத்த நாகரிகம் முற்றிலும் மாறி, நவீன நாகரிகத்தில் வீறுநடை போட்டுக் கொண்டிருக்கிறோம். என்றாலும் ரத்தம் சொட்டச்சொட்ட முகத்தில் தாக்கி குத்துச்சண்டை விளையாடுகிறார்கள். அதற்கான பெரிய வியாபாரமே விளையாட்டுச் சந்தையில் இருக்கிறது. கரணம் தப்பினால் மரணம் என்றாலும் அதிவேக கார் பந்தையங்கள் உலகெல்லாம் நடக்கின்றன. பணம் படைத்தவர்கள் கண்டு ரசிக்கும் விளையாட்டில் இதுவும் ஒன்று. தனிமனிதச் சுதந்திரம் கட்டுக்கோப்பாகப் பாதுகாக்கப்பட்டாலும், பண அடிமைகள் விருப்பத்துடன் இது போன்ற போட்டிகளில் பங்கேற்கிறார்கள். உலகமெல்லாம் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. பெரு நிறுவனங்கள் இதற்கான பணத்தை வாரி இறைக்கின்றன. மொழி, இனம், தேசம் கடந்து பார்வையாளர்கள் இதனை ரசிக்கிறார்கள். ரோம பிரபுக்களுக்கும், இதுபோன்ற பார்வையாளர்களுக்கும் என்ன வித்யாசம்? மரபில் வந்த அரக்கத்தனத்தின் புத்தாக்க வடிவம் தானே இது.

“இது போன்ற நாடகங்கள் தேவையா? ஸ்பர்டகஸ் இருக்கிறானா? இறந்துவிட்டானா?” என்பது போன்ற புதிர் கேள்விகளின் விடையைத் தேடுவதல்ல இதுபோன்ற நிகழ்த்துக் கலையின் நோக்கம். அவன் கொல்லப்பட்ட பின்பு, அடிமைகளின் சார்பாக தீபத்தை ஏந்தி யார் வேண்டுமானாலும் ஸ்பார்டகஸாக மாறமுடியும் என்ற நிதர்சன உண்மையை அனுபவமாக பரிமாற்றுவதே இதன் உள்ளர்த்தம். பணத்தாலும், அதிகாரத்தாலும் கட்டுண்டுள்ள சமூகம் அடிமை முறையை வேறுவிதத்தில் உருமாற்றிக் கொண்டிருக்கிறது. அதற்கேற்ப அடிமைத் தலைவனும் ஜனிக்க வேண்டியது அவசியம் இருக்கிறது. அதன் கருவை கலைதான் சுமக்க வேண்டும். நம் கலைஞர்கள் சுமந்துகொண்டிருக்கிறார்கள். பிரசவ நாளை எதிர்பார்த்து.

(முற்றும்)

நாடகப் பிரதி: பாதல் சர்க்கார்,
தமிழில்: கோ ராஜாராம்
நெறியாள்கை: பேராசிரியர் மு ராமசாமி
குரலிசை: அந்திகாற்று பாலா
வீர விளையாட்டுப் பயிற்சி: பழனி, ஜெட்லி சம்பத்
புகைப்பட உதவி: மணிகண்டன் (டேனி)
தயாரிப்பு: மூன்றாம் அரங்கு
பங்குபெற்ற நடிகர்கள்: பேராசிரியர் மு ராமசாமி, கருணா பிரசாத், யோகேஷ் ராஜேந்திரன், சுபாஷ்கர், கேசவன், பாக்யராஜ், ராஜன், வேலாயுதம், கே சரவணன், ஜெ சரவணன், சதீஷ், பாலமுருகன், அழகுராஜ், செந்தமிழ்ச் செல்வன்

நன்றி: தமிழ் பேப்பர் - இணைய இதழ்

தரையில் இறங்கும் விமானங்கள்

“உங்கண்ணா ரொம்ப உயர்ந்த மனுஷர். அவர் மாதிரி ஒருத்தரைப் பார்க்கவே முடியாதோன்னு சில சமயம் எனக்குத் தோணும். இந்த மாதிரி ஒரு மனுஷனான்னு ஆச்சர்யமாக் கூட இருக்கும். அந்த மனசுக்கு எனக்கு என்ன தகுதி இருக்குன்னு அடிக்கடி கேட்டுப்பேன்”.

சட்டென்று திரும்பி அவளைப் பார்த்தான் விஸ்வம். மனசை உலுக்கிவிட்ட மாதிரி இருந்தது. உடம்பு ஒரு தரம் சிலிர்த்தது. ‘என்ன இது! இதில் யார் உயரம் அதிகம்! இந்த மாதிரி பொறுக்கிப் பார்த்து ஸ்வாமி எப்படி ஒன்றாய்ப் போட்டது!’

“என்ன அப்படிப் பாக்கிறீங்க? நான் உண்மையைத் தான் சொல்றேன். அந்த மாதிரி ஒரு மனசு உங்கண்ணாவுக்கு. தப்பா எதையும் நினைக்கத் தெரியாது. யாரையும் தப்பா பார்க்கத் தெரியாது, கோபப்படத் தெரியாது, பிறத்தியார் கஷ்டத்தைப் பார்த்துண்டிருக்கத் தெரியாது. தன் கஷ்டத்தை வெளியே சொல்லிக்கத் தெரியாது. கல்மிஷமில்லாமல் அப்படி ஒரு மனசு யாருக்கும் இருக்க முடியாது. அந்த மாதிரி ஆயிரத்துல ஒருத்தர், லட்சத்துல ஒருத்தராவது இருப்பாரான்றது கூடச் சந்தேகம்தான்.

“ஆனா அவரென்னவோ நான் இடம் மாறி வந்துட்ட மாதிரி நினைச்சுக்கிறார். எங்கயோ கோபுரத்துல இருக்க வேண்டியள்ங்கிற மாதிரி பழகறார். அதுதான் எனக்குக் கஷ்டமா இருக்கு. அழகா இருந்துட்டா அதுக்கு இன்னொரு அழகுதான் சொந்தமாகனும்னு தானா நினைச்சுண்டு அவஸ்த்தைப்பட்டா என்ன பண்றது?”

தலையைக் குனிந்து கொண்டான் விஸ்வம். “ருக்மணி, பேசாதேயேன். என்னால் தாங்க முடியலையே?” என்று சொல்ல வேண்டும் போலிருந்தது. ஆனால், பேசாமல் இருந்தான்.

“உங்காத்லேர்ந்து பெண் பார்த்துட்டுப் போனதுக்கப்புறம் எங்கப்பா வந்து எங்கிட்ட பேசினார். ‘அம்மா, பையன் கொஞ்சம் கருப்புதான். எஸ்.எஸ்.எல்.ஸி தான் படிச்சிருக்கான். சம்பளமும் அவ்வளவா இல்லே. ஆனா குணம் இருக்கே, அது ஒண்ணு போறும். நான் பார்த்து வளர்ந்த பையன். நீ என்ன சொல்றே?” ன்னு கேட்டார். ‘ஏம்பா? நிறம், படிப்பு, சம்பளம் இதெல்லாந்தான் தகுதியா? மனுஷா – மனுஷாளா? இருக்கறது பெரிய தகுதி இல்லையான்?’னு கேட்டேன். ஒரு தரம் அசந்து போன மாதிரி என்னைப் பார்த்தார். அப்புறம் பேசாமல் போயிட்டார்.”

“என்ன சொன்னீங்க? திருப்பிச் சொல்லுங்க” என்று குரல் நடுங்கக் கேட்டான் விஸ்வம்.

“ஆமாம் விஸ்வம். நமக்கு மனுஷத்தனம் மட்டும் இருந்தாப் போறும்னு நினைக்கிறேன். வேற என்ன தெரியணும்? மீதி எல்லாத்தையும் தெரிஞ்சுண்டு இது தெரியாமப் போனா என்ன பிரயோஜனம்? அன்னிக்கி ஒருநாள் நீங்க உங்க ஜமுனாவைப் பத்தி பேசினபோதே சொல்லனும்னு நினைச்சேன். ‘என்னால அவகூடச் சந்தோஷமா இருக்க முடியாதோன்னு பயமா இருக்கு’ன்னு நீங்க சொன்னதைக் கேட்டபோதே சொல்லனும்னு நினைச்சேன். ஆனா அப்பா சொல்லியிருந்த அது அவ்வளவு சரியா இருந்திருக்காது. இப்ப சொல்றேன். நமக்கு யார் கூடவும் சந்தோஷமா இருக்கத் தெரியணும். எப்பவும் சந்தோஷமா இருக்கத் தெரியணும். எங்கப்பா அடிக்கடி சொல்லுவார்; சந்தோஷமா இருக்கத்தான் நாமெல்லாம் பிறந்திருக்கோம்னு. சிரிச்சுண்டே இருந்துட்டா சந்தோஷமா இருந்துடலாம்பார். அந்தச் சிரிப்பு மூஞ்சிலேயும், மனசுலேயும் வந்துட்டா சந்தோஷத்துக்குக் குறைச்சலே இல்லேம்பார். அவர்தான் எனக்குச் சிரிக்கக் கத்துக் கொடுத்தார். எதுக்கும் – எப்போதும் சிரிக்கனும்னு சொல்லிச் சொல்லிப் பயிற்சியாகவே மாத்திட்டார். உங்ககிட்ட அன்னிக்கி பேசிண்டிருந்த போது, இதையெல்லாம் சொல்லிடம்னு தோணித்து. ஆனா ஒரு சந்தர்ப்பம் வரும். சொல்லிக்கலாம்னு இருந்துட்டேன்.

“இப்ப அந்தச் சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு. சொல்லிடறேன். நீங்களா ஒரு கனமான குண்டைத் தூக்கி வச்சுண்டு அவஸ்தைப் படறதைப் பார்த்தா கஷ்டமா இருக்கு. எதுக்கு இந்த அவஸ்தையெல்லாம்? கொஞ்சம் ஈஸியா இருந்துட்டுப் போனால் தான் என்ன? சாதாரணமா இருக்கறதுலே என்ன தப்பு சொல்லுங்கோ?” என்று கேட்டு நிறுத்தினாள் ருக்மணி.

அவன் பதில் சொல்லவில்லை. தலை குனிந்து மௌனமாய் நடந்து கொண்டிருந்தான். அவனிடமிருந்து பதில் வராது என்று புரிந்துகொண்ட ருக்மணி, மீண்டும் தானே பேசினாள்:

“எல்லாத்தையும் தெரிஞ்சிக்கணும்னு நினைக்கிறது நல்ல நினைப்புதான். ஆனா தெரிஞ்சுண்டு என்ன பண்ணப் போறோம்?. தெரிஞ்சுண்டவாள்லாம் என்ன பண்றா? நாம பண்ணறதைத்தான் பண்றா. அதுக்காக தெரிஞ்சுக்கறதே அவசியம் இல்லைன்னு சொல்லலை. தெரியாததனால தப்பு ஒன்னுமில்லேன்னுதான் சொல்ல வரேன். ‘அபத்தமா பேசறா’ன்னு அன்னிக்கி நீங்க ஜமுனாவைப் பத்தி சொன்னீங்களே, அதுக்குத்தான் சொல்றேன். அவளுக்கு உங்கள மாதிரி பேசத் தெரியாம இருக்கலாம். உங்களை மாதிரி அத்தனை படிச்சவளா இல்லாம இருக்கலாம். ஆனா அவளுக்கு உங்கமேல ஒரு பிரியம் இருக்கு. அளவு கடந்த பிரியம். அந்த அன்பைத் தவிர வேற என்ன வேணும் உங்களுக்கு? அது எவ்வளவு பெரிய விஷயம். மனுஷ உறவுகளை விட அதெல்லாம் பெருசா என்ன? உங்க புத்திசாலித்தனத்தை நுழைச்சி எல்லாரையும் துருவிப் பாக்கிறதை நீங்க விட்டுடனும். ஒவ்வொருத்தரையும் அப்படியே ஏத்துக்கணும். நிறை குறைகளோட ஏத்துக்கணும். ஏத்துண்டு சந்தோஷமா இருக்கத் தெரியணும். அவாளையும் சந்தோஷப்படுத்தத் தெரியணும்...”

விஸ்வம் மனசு உருக மேலே நடக்காமல் அப்படியே நின்றான். எது எதுவோ புரிந்த மாதிரி இருந்தது. திடீரென்று எல்லாமே சந்தோஷமாகத் தெரிந்தது. தாங்க முடியாமல் கண் கலங்கிற்று. பேச்சு வராமல் அடைத்துக் கொண்டது.

“மன்னி...” என்ற ஒரே வார்த்தைதான் வெளியில் வந்தது.

தரையில் இறங்கும் விமானங்கள் – இந்துமதி (அத்தியாயம் 22 - கடைசி மூன்று பக்கங்கள்)

Saturday, December 31, 2011

தேவலோக வாழ்க்கை

இதோ இப்போதான் தர்ஷன் பிறந்தா மாதிரி இருக்கிறது. எதைப் பார்த்தாலும் சிரித்து விளையாடிக் கொண்டிருந்தவன் புதியவர்களின் முகம் பார்த்து அழ ஆரம்பித்துவிட்டான். என்னைப் பார்த்து அதிகமாகவே அழுகிறான். பயத்தில் தான் அழுவதாக நினைக்கிறேன். ஒரு பூனையைப் பார்த்து பூனை பயப்படுவதில்லை. நாயைப் பார்த்து நாயும் பயப்படுவதில்லை. யானையைப் பார்த்து யானை கூட பயப்படுவதில்லை. மனிதக் குழந்தைகள் மட்டும் ஏன் புதிய மனிதர்களைப் பார்த்து அழுகிறது?. அப்படியெனில் எது போன்ற ஜந்துக்கலாக வளர்ந்த மனிதர்களின் முகங்கள் குழந்தைகளின் கண்களுக்குப் புலப்படுகிறார்கள். இந்த சந்தேகம் நீண்ட நாட்களாக எனக்கு இருக்கிறது.

“இவன் ஏன் மாமா என்னைப் பார்த்து இப்புடி அழுவுறான்?” என்று தர்ஷனின் தாத்தாவிடம் கேட்டேன்.

“அவம்பேரு தர்ஷன் இல்ல. தூர்....தர்ஷன், அப்படித்தான் அழுவான். தொலவா இருந்து கேட்டுட்டுப் போ” என்றார்.

தொலைவாகச் சென்றதும் அழுகை சத்தம் நின்றது. தாத்தாவின் முகத்தைப் பார்த்து பேரன் சிரித்துக் கொண்டிருந்தான். பட்டாம்பூச்சி பறந்து பூக்களில் தேனெடுப்பது போல சிரிப்பானது இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருந்தது. சாக்லேட் வேணும்னு அழுதுட்டு இருந்த பையன் இந்த அகில். “டேய்... இங்க வாடா விளையாடலாம்! நீ சீட்டிங் பண்ற போடா”-ன்னு பேசிட்டு இருந்த பையன். ஸ்கூலுக்கு அனுப்பியதிலிருந்து “வாங்க மாமா... போங்க மாமா”-ன்னு பேசப் பழகிவிட்டான். அகில் ஏதாச்சும் விளையாடலாம்மான்னு கேட்டா “டிவி பாக்க சொல்ல டிஸ்டர்ப் பண்ணாதிங்க மாமா. என்னோட பேவரைட் ப்ரோக்ராம்” என்கிறான். அப்படிச் சொன்னதும் அக்காவைப் பார்க்கிறேன்.

“டேய், இது கோல்மூட்ட வேறப் பழகிடுச்சிடா” என்று அக்க குறைபட்டுக் கொண்டாள்.

“என்ன ஜெயா சொல்ற?”

“ஆமாண்டா... அம்மா என்ன அடிட்சிட்டான்னு அங்கபோய் சொல்லுது. பாட்டி என்ன திட்டுறான்னு இங்க வந்து சொல்லுது. இதக் கேட்டுட்டு அவரு வானத்துக்கும் பூமிக்குமா குதிக்கிறாறுடா?” என்றாள்.

“வெங்கட் அந்த மாதிரி மனுஷன் இல்லையே ஜெயா? கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ. கொழந்த தானே”.

“அட... ச்சீ... அவரப் பத்தியும் கோல் மூட்டுதுடான்னா” என்றாள்.

யார்கிட்ட ஜெயா?

“வேற யார்கிட்ட, உன்னோட சித்தப்பாவ சொன்னேன். அகிலோட தாத்தாவ” என்றாள்.

“அதானே பார்த்தேன். பையன் வீக்னெஸ் பார்த்து அடிக்கிறான். நம்மள நம்பி வெங்கட் ஆட்டத்துல எறங்கிடுவாரா என்ன?” என்று நினைத்துக் கொண்டேன். காலம் உருண்டோடுவதை குழந்தைகளே உணரச் செய்கிறார்கள். அன்பானவர்களின் அரவணைப்பை மட்டுமே நம்புவதும், அவர்களின் மூலம் காரியம் சாதிக்கும் முதிர்ச்சியுமே கால ஓட்டத்தின் வெண் திட்டுக்களாக விளங்குகிறது.

இந்த வருடத்தின் ஆகப்பெரிய அனுபவமாக இவையிரண்டும்தான் தோன்றுகின்றன. வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் வழிகாட்டிகள் தேவைப்படுகிறார்கள். அரவணைக்க அன்பு செலுத்த. மென்பொருள் துறையின் நேக்குப் போக்குகளை நாடிபிடித்துப் பயில வெங்கட் பெரிய இன்ஸ்பிரேஷன். வேலையை விட்டு ஏறக்குறைய இரண்டு வருடங்கள் ஆகிறது. சில நல்ல வேலைகள் கிடைத்தும் போவதற்கு மனமில்லை. வீட்டிலிருந்த படியே என்னை நேசிக்கும் சில நிறுவனங்களுக்கு பகுதி நேரமாக வேலை செய்துகொண்டிருக்கிறேன். மிகப் பெரிய வருவாய் இல்லையென்றாலும் “நானே ராஜா! நானே மந்திரி!” என்ற திருப்தி.

ஏறக்குறைய மூன்று வருடங்களாக வலைப்பூவில் எழுதுகிறேன். “என்னை யார் படிக்கப் போகிறார்கள்?” என்று நினைத்ததுண்டு. ஒருசிலர் நேரில் பார்த்து “பரவாயில்லையே! சுமாரா எழுதுறே!” என வாழ்த்தும்போது தொண்டையை அடைக்கும். நன்றாக ஞாபகம் இருக்கிறது. 2011-ஆம் ஆண்டின் ஆரம்ப நாட்களில் காலச்சுவடு பதிப்பகம் கு.அழகிரிசாமியின் மொத்த சிறுகதைத் தொகுப்பு வெளியிட ஏற்பாடு செய்திருந்தார்கள். அன்றைய தினம் எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் சிறப்பு உரையாற்ற வந்திருந்தார். எதிர்பாராத விதமாக மூத்த எழுத்தாளர் திலீப்குமாரையும் அங்கு சந்திக்க நேர்ந்தது. விழா முடிந்ததும் தன்னிடமிருந்த “வெங்கட் சுவாமிநாதன் கட்டுரைத் தொகுப்பு” வெளியீடு பற்றிய அழைப்பிதழ்களை திலீப்குமார் விநியோகிக்க ஆரம்பித்தார். அவரிடமிருந்த அழைப்பிதழ்களில் பாதியை பிடுங்கிக் கொண்டு நானும் விநியோகிக்க ஆரம்பித்தேன். தமிழ்ச்செல்வன் எதிரில் வந்தார்.

“உங்களை ஏற்கனவே பார்த்திருக்கிறேன் தமிழ். மின்னஞ்சல் கூட...” என்று என்னுடைய பெயரை சொல்லி அறிமுகப்படுத்திக் கொள்ளலாம் என்று ஆரம்பித்தேன்.

“கேணியில் நடந்த சேர்ந்திசை (choir) பற்றி எழுதியிருந்திங்களே. அந்த ஒரு எடத்த நுணுக்கமா கவனிச்சி எழுதி இருந்தீங்க. நல்லா இருந்தது” என்றார்.

“உங்களோட வார்த்தைகளைக் கேட்கும்பொழுது வானத்தில் பறப்பது போல இருக்குங்க தோழர்” என்றேன். தமிழகம் முழுவதும் தொடந்து பயணம் செய்பவர். ஏராளமான புத்தகங்கள் வாசிப்பவர். என்றாலும் சிறு விஷயத்தை ஞாபகம் வைத்துத் தட்டிக்கொடுத்தார். சமீபத்தில் அ மார்க்ஸ் கலந்துகொண்ட கேணி கூட்டம் நடைபெற்றது. அந்த நாளில் மட்டும் எழுத்தாளர் ஞாநியின் வீட்டிற்கு சீக்கிரமே சென்றுவிடுவது வழக்கம். திடீரென்று பாலபாரதி செல்பேசியில் அழைத்தார். “கேணிக்கு வெளியில் தான் இருக்கேன். ஒரு டீ போட்டுட்டு வரலாம் வா” என்றார். அழைத்துச்சென்று எழுதத் தேவையான பல விஷயங்களை சொல்லிக்கொடுத்தார். ஆரம்ப காலங்களில் செய்த தவறுகள். அதன்மூலம் கிடைத்த அனுபவம் என பலவற்றைப் பகிர்ந்துகொண்டார். “தொடர்ந்து எழுதிக்கொண்டே இரு. உனக்குன்னு மொழியும் தனித்தன்மையும் தானா வந்துடும்” என்று உற்சாகப்படுத்தினார்.

இணைய இதழ்களின் உள்ளடுக்கில் இயங்குபவர்களான தமிழ்பேப்பரின் ஹரன்பிரசன்னா, சொல்வனம் இதழின் ரவி மற்றும் பாஸ்கர் போன்றவர்கள் தொடர்ந்து உற்சாகப்படுத்தி கட்டுரைகளை கேட்டு வாங்கி பிரசுரம் செய்கிறார்கள். அவர்களுடைய அன்பும், அக்கறையும் மறக்க இயலாதது. கமர்ஷியல் சினிமாவையே பார்ப்பதற்கு பொறுமை இல்லாதவன் நான். “காட்சி ஊடகங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். புத்தக வாசிப்பு போலவே அதுவும் ஓர் அனுபவம். அதிலும் கவனம் செலுத்துங்கள்” என நண்பர் பாஸ்கர் சக்தி தொடர்ந்து அக்கறை செலுத்தி, குறும்படம் ஆவணப்படம், சினிமா போன்ற துறைகளில் கவனம் ஏற்படச் செய்தார். கடந்த சென்னை திரைப்பட விழாவில் “அழகர்சாமி குதிரை” படத்தில் சிறந்த பங்காற்றியமைக்காக தனிமனித சிறப்பு விருதை அவருக்குக் கொடுத்தார்கள். அதற்கான சிறு விழா “டிஸ்கவரி புக் பேலசில்” ஏற்பாடாகி இருந்தது. அதற்கு வருமாறு அழைத்தார். பாஸ்கரின் நெருங்கிய சினிமா நண்பர்களுடன் “கதை, வசனம், பாத்திரச் சித்தரிப்பு” என உரையாடியது வித்யாசமான அனுபவமாக இருந்தது. சென்னை திரைக்கல்லூரி மாணவர்களின் உதவியுடன் ஒரு குறும்படம் தயாரித்துக் கொண்டிருக்கிறேன். மருமகன் முத்துவுடன் சேர்ந்து. பாஸ்கரின் அன்பும் அக்கறையும் இல்லையெனில் இதுபோன்ற சோதனை முயற்சிகளில் இறங்கியிருக்கவே மாட்டேன்.

விமர்சகர் ஞாநி எப்போதுமே குறைபட்டுக் கொள்வதுண்டு. “சினிமாவில் ஆர்வம் இருப்பவர்கள் புத்தகம் வாசிப்பதில்லை. வாசிக்கும் பழக்கம் உள்ளவர்கள் நிகழ்த்துக் கலைகளில் ஆர்வம் காட்டுவதில்லை. அரசியலில் ஈர்ப்பு உடையவர்கள் இலக்கியத்தை சீண்டுவதில்லை. ஓவியம், இசை, இலக்கியம், பரதம், நாடகம் எல்லாவற்றின் மீதும் இளைஞர்கள் ஆர்வம் செலுத்த வேண்டும். இளைஞர்கள் மீது எப்போதுமே எனக்கு பெரிய நம்பிக்கை உள்ளது. அதற்கான சிறு உந்துதலை ஏற்படுத்துவதுதான் கேணி சந்திப்பின் நோக்கம்” என்பார். அதற்கேற்றது போல மேடை நடிகர் பாரதிமணியும் தியேட்டர் லேப் ஏற்பாடு செய்திருந்த பஷீரின் நாடகத்திற்கு அழைத்திருந்தார். அவருக்காகச் சென்றிருந்தேன். நாடக அனுபவத்தை வலைப்பூவிலும் எழுதி இருந்தேன். அதை படித்த கனடா நாடகக் குழுவான அராங்கடல் நண்பர் செல்வன் அறிமுகமானார். பின்னர் பஷீரின் அதே குறுநாவலை அராங்கடலுக்காக நாடக வசனமாக மாற்றும் சூழல் ஏற்பட்டது. அதற்கான சன்மானத்தை நண்பர் தளவாய் சுந்தரத்தின் மூலம் செல்வன் கொடுத்தனுப்பினார். எழுதி சம்பாரித்த முதல் பணம் என்பதால் வியப்பாக இருந்தது. அக்கறையுடன் வழிகாட்டிய எல்லோரையும் செல்பேசியில் அழைத்து தம்பட்டம் அடித்துக் கொண்டேன். மிகவும் மகிழ்ந்தார்கள். பாரதிமணி மிகவும் சந்தோஷப்பட்டார்.

ஞாநியை மட்டும் நேரில் சென்று பார்த்தேன். “இதுதான் விஷயங்க ஞாநி என்னை ஆசிர்வாதம் பண்ணுங்கள்” என்று காலைத் தொட்டேன்.

“ஒரு மனிதனின் காலில் இன்னொரு மனிதன் விழுவதில் எனக்கு உடன்பாடில்லை. சந்தோஷமோ துக்கமோ சக மனிதனாக பகிர்ந்துகொள்ளலாம்... ம்... சொல்லுங்க...” என்றார். “இவர் தமிழ்நாட்டில் தானே இருக்கிறார். தமிழக கலாச்சாரம் தெரியவில்லையே. அம்மா இப்படித்தானே பழக்கி இருக்காங்க” என்று நினைத்துக் கொண்டேன்.

இங்கு பா ராகவனையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். “உங்கிட்ட கொஞ்சம் Stuff இருக்கு. கொஞ்சம் சிரமப்பட்டு உழைச்சா நல்லா வருவடா” என்பார். என்னை எப்படியாவது ஒரு புத்தகம் எழுத வைக்க வேண்டும் என்று மிகுந்த பிரயாசைபட்டார். பாரா கிழக்கில் இருந்தவரை நிறைவேறவில்லை. அவரை செல்பேசியில் அழைத்து தம்பட்டம் அடித்தேன்.

“நீ இன்னும் நல்லா வரணும்டா. ரொம்ப சந்தோசம்டா” என்றார்.

எழுத்தாளர் தமிழ்மகன், பாலுசத்யா, ராம்ஜி, வேல்கண்ணன், பிரபா, விதூஷ் அக்கா, பத்மா அக்கா, யுவா, நேசமித்ரன், கார்த்திகை பாண்டியன், அதியமான், கார்த்திகா வாசுதேவன், மரா, அ மு சையத், முத்துச்சாமி, விஷ்ணு, சாது என எல்லோரும் தொடர்ந்து வாசித்து, கைபிடித்து அழைத்துச் செல்கிறார்கள்.

இதுவரை சென்றது எல்லாமே மகிழ்ச்சி நிறைந்த காலங்கள். அடுத்த ஆண்டுகளுக்கான சிறுசிறு முயற்சியும் திட்டமிடலும் இருக்கிறது. புத்தக விழாக்களுக்கு சாதாரண நுகர்வோராக சென்றிருக்கிறேன். தமிழின் முக்கிய பதிப்பகம் ஒன்றோடு சேர்ந்து வேலை செய்யும் சூழல் 2012-ம் ஆண்டு அமையும் என்றே நினைக்கிறேன் (பகுதி நேர வேலை). ஜனவரி கழித்து அதற்கான வேளைகளில் இறங்க வேண்டி இருக்கும். “புத்தகம் சார்ந்த வியாபாரம் எப்படி இருக்கிறது?” என்பதையும் நோட்டம் விட வேண்டும். “ஒரு லட்சம் தலைப்பில் ஒரு கோடி புத்தகங்கள்” என்ற விளம்பரமே மலைப்பை ஏற்படுத்துகிறது. சவால் நிறைந்த துறையாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.

இதற்கிடையில் சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்டிக் கொண்டிருக்கிறேன். பூமி பூஜையின் போது செங்கல் எடுத்து வைத்ததோடு சரி. எல்லா வேலைகளையும் இளைய அண்ணனே பார்த்துக் கொள்கிறார். இரண்டு நாட்களாக ஒரே மழை. இன்றுதான் கொஞ்சம் தணிந்தது. கட்டிடப் பணிகளை பார்த்து வரலாம் என்று கிளம்பினேன். ஆண்டின் கடைசி நாள் என்பதால் மக்களெல்லாம் உற்சாகமாக தென்பட்டனர். “Where is the party tonight?” என்ற வார்த்தைகள் உள்ளுக்குள் ஒலிக்கிறதோ என்னவோ? புதிதாக வீடுகட்டும் தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தேன்.

வாஸ்துப்படி வர்ணம் பூசப்பட்ட வீட்டின் ஜன்னல் கம்பியில் வளர்ப்பு நாய் கட்டப்பட்டிருந்தது. தெருவில் அலையும் நாயைப் பார்த்து இதுவும் நகரத் துடிக்கிறது. கயிற்றினால் கட்டப்பட்டுள்ளதால் வாலை ஆட்டிக்கொண்டு நாய் குலைக்கிறது. பிராணியை வளர்ப்பவர் வெளியில் வந்து நோட்டம்விட்டார். செல்லப் பிராணியின் தலையில் செல்லமாகத் தட்டிவிட்டு “அடுத்த வாரம் கூட்டிட்டுப் போறேன்” என்று சொல்லிவிட்டுச் சென்றார். தெரு நாய்கள் சுதந்திரமாக சுற்றிக் கொண்டிருந்தது. ஒன்றையொன்று முகர்ந்துகொண்டு. நானும் சுதந்திரமாக நடந்துகொண்டிருந்தேன். நாயுடன் நாயாக எனது புதிய வீட்டை நோக்கி. அடுத்த வருடம் சிந்திப்போம்.

மங்களம்.... சுபம்....

Thursday, December 22, 2011

மை விலேஜ் இஸ் பம்பை – விவரணப்படம்

இந்தியா முழுவதும் கடந்த 2010-ஆம் ஆண்டில் மட்டும் 10, 670 குழந்தைகள் கடத்தப்பட்டிருப்பதாக ‘தேசிய குற்ற நிகழ்வுகள் பதிவு அமைப்பு’ உறுதி செய்திருக்கிறார்கள். இதில் 1, 408 குழந்தைகள் கொலை செய்யப்பட்டும் 5, 484 குழந்தைகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு இருப்பதாகவும் அதே ஆய்வு கூறுகிறது. கடத்தல் குற்றங்களில் தலைநகர் டெல்லி தான் முதலிடத்தில் இருக்கிறது. 29 பேர் கொல்லப்பட்டும், 304 பேர் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டும் இருக்கிறார்கள். டெல்லியை அடுத்து பீகார், உத்திர பிரதேசம், மராட்டியம், ராஜஸ்தான், ஆந்திரப் பிரதேசம், குஜராத் என பட்டியலிட்டிருக்கிறார்கள். இவை யாவும் பணம் படைத்தவர்களின் குழந்தைகள் மீது நடத்தப்படும் திட்டமிட்ட வன்முறை. பெரும்பாலும் இதுபோன்ற குற்றங்கள் மாநகரங்களிலுள்ள பெரு முதலாளிகள் சார்ந்து பணம் ஈட்டுவதற்காக நடத்தப்படுகிறது. இங்கு மற்றொரு விஷயத்தையும் நாம் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

அதே பெருநகரங்களில் வசிப்பவரா நீங்கள்? அரக்கப் பறக்க வேலைக்குச் செல்பவரா? நெரிசல் ஏற்படுத்தும் கூட்டத்துடன் பேருந்துகளிலும், ரயிலிலும் பயணம் செய்பவரா? சுற்றிப் பார்க்க மட்டுமே ஓரிரு தினங்கள் வருபவராக இருந்தாலும் பரவாயில்லை. நிச்சயம் இதுபோன்ற விளம்பரங்கள் உங்களின் கவனத்திற்கு வந்திருக்கும். ஒரு மின்னல் பார்வையில் அந்த கருப்பு வெள்ளை விளம்பர ஒட்டிகளை கடந்து சென்றிருப்பீர்கள்!

“காணவில்லை… தகவல் கிடைத்தால் தெரிவிக்க வேண்டிய முகவரி…” என்று சிறுவனின் புகைப்படம், பெயர், வயது, நிறம், உயரம், அங்க அடையாளம் என கடைசியாக உடுத்தியிருந்த ஆடை வரை பட்டியலிட்டு ஒட்டப்பட்டிருப்பதைக் கண்டிருக்கலாம். பேருந்து மற்றும் மின்சார ரயிலின் உட்சுவர்களில் கூட இதனைக் கவனித்திருக்கலாம். அதெப்படி வளர்ந்த, புத்தியுள்ள குழந்தைகள் காணாமல் போகும்? சமூகச் சிக்கலோ அல்லது உறவினால் ஏற்படக்கூடிய பிணக்குகளோ தான் இதற்கான முக்கிய காரணிகளாக இருக்கின்றன.

“வளர்ந்த குழந்தைகள் வீட்டைவிட்டு ஏன் வெளியேறுகின்றன? குழந்தைகளுக்கு அப்படியென்ன விரக்தி இருக்கப்போகிறது? காரணம் என்னவாக இருக்கும்?” என்பன போன்ற கேள்விகள் நமக்கு எழலாம். வழி தவறியும், பொருளீட்டும் ஆசையிலும், உறவுகள் கசந்து அவர்களிடம் முரண்பட்டும், பருவக் கோளாறினாலும் வீட்டைவிட்டு வெளியேறும் குழந்தைகள் பெருநகரங்களை நோக்கித்தான் பயணிக்கின்றன. இதைப் பற்றிய தெளிவான புள்ளிவிவரங்கள் இல்லையென்றாலும், இந்தியாவில் மட்டும் 30 விநாடிகளுக்கு ஒரு குழந்தையானது வீட்டைவிட்டு யாருக்கும் சொல்லாமல் ஓடிவிடுவதாக புள்ளிவிவரங்கள் தெளிவுபடுத்துகிறது. ஒரு வருடத்திற்கு 10, 368, 00 குழந்தைகள் இதுபோல இடம்பெயர்கிறார்கள். பொது இடங்களில் தான்தோன்றித் தனமாக சுற்றிக்கொண்டிருக்கும் குழந்தைகளை சந்தேகத்தின் பெயரில் விசாரிக்கும் பொழுதுதான் உண்மை நிலவரம் தெரியவருகிறது. இதில் சிலர் பிச்சை எடுக்கிறார்கள், சிலர் சமூகக் குற்றங்களில் ஈடுபடுகிறார்கள், சிலர் குழந்தைத் தொழிலாளர்களாக மாறுகிறார்கள், மிகச் சிலரோ பாலியல் தொழிலில் வலிந்து தள்ளப்படுகிறார்கள்.

இவர்களைக் காப்பதற்காகவே முக்கிய நகரங்களில் சிறுவர் காப்பகங்கள் அரசின் கண்காணிப்பில் செயல்படுகிறது. தென்னிந்தியாவைப் பொருத்தவரை ஆங்கிலேயர்கள் காலத்தில் 1887-ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட செங்கல்பட்டு குழந்தைகள் காப்பகம் தான் மிகவும் தொன்மையானது. அதன் பிறகு மக்கள்தொகை வளர்ச்சிக்கு ஏற்ப ஏராளமான காப்பகங்கள் கால இடைவெளியில் சென்னை (ராயபுரம்), கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, திண்டுக்கல், சேலம், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, வேலூர், திருவண்ணாமலை போன்ற தமிழகத்தின் முக்கிய இடங்களில் துவங்கப்பட்டது. இவையாவும் தமிழக அரசின் சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ், தமிழ்நாடு குழந்தைகள் சட்டம் 1920-ன் படி இயங்கிவருகின்றன.

ராயபுரத்தில் உள்ள தேசிய கவி சுப்ரமணிய பாரதியார் அரசினர் குழந்தைகள் இல்லம் மெட்ராஸ் ரோட்டரி கிளப் மூலம் 1955 -ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சர் சிந்தாமன் தேஷ்முக் முன்னிலையில் துவக்கப்பட்டது. இதில் சிறுவர் காப்பகமும் (Children Home), மீட்டுக் காவல் காப்பகமும் (Remand Home) செயல்படுகிறது. தற்போது 120 முதல் 150 குழந்தைகள் வரை இக்காப்பகத்தில் பாதுகாக்கப்படுகிறார்கள். இதில் முழுக்க முழுக்க ஆண்குழந்தைகள் மட்டுமே பராமரிக்கப் படுகிறார்கள். UNICEF, WorldVision மற்றும் சில தனியார் அமைப்புகள் தங்களால் இயன்ற உதவிகளை இதுபோன்ற காப்பகங்களுக்குச் செய்துத் தருகிறார்கள். மன அழுத்தத்திலுள்ள குழந்தைகளுக்கு சுயமுன்னேற்றம், மன ஆலோசனை, நீதிக் கதைகள் சொல்லுதல், அபாகஸ் வகுப்பெடுத்தல் போன்ற அத்தியாவசியமான உதவிகளையும் தன்னார்வலர்கள் மூலம் செய்துத் தந்து பக்கபலமாய் இருக்கிறார்கள்.

மீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள குழந்தைகளை தான் ஆர் வி ரமணி நேரில் கண்டு ஆவணப்படமாக எடுத்திருக்கிறார். ’மேரா கா(ன்)வ் ஹை பம்பை’ (என் கிராமம் பம்பை) எனப்படும் அதனை NFSC மற்றும் மறுபக்கம் இணைந்து நடத்திய கோடைத் திரைப்பட விழா 2011-ல் திரையிட ஏற்பாடு செய்திருந்தார்கள். சந்தேகத்தின் பெயரில் சிறைபிடிக்கப்படும் குழந்தைகள் முதலில் மீட்டுக் காவலில் தான் அமர்த்தப்படுகிறார்கள். அவர்களிடம் தகவல்கள் பெற்று உரிய நபர்களிடம் தொடர்பு கொள்கிறார்கள். போதிய ஆதாரங்கள் பெற்றபின் குழந்தைகளின் விருப்பப்படியும், அரசியல் சட்டத்திலுள்ள விதிமுறைகளைப் பின்பற்றியும் உரிமை கோருபவரிடம் ஒப்படைக்கிறார்கள். குழந்தைகள் நலவாரியம் (Child Welfare Commity) இதற்கான ஆயத்தங்களை செய்துத் தருகிறது. செவ்வாய் மற்றும் வியாழக் கிழமைகளில் அதற்கான விசாரணை ராயபுரத்தில் நடக்கிறது. குழந்தைகளின் பெற்றோரோ அல்லது உரிமை கோரும் நபரோ அங்கு தோன்றி பதிலளிக்க வேண்டும்.

பெற்றோரை இழந்து உறவினரின் கண்காணிப்பில் வாழ்ந்துவரும் குழந்தை வீட்டிற்குச் செல்ல மனமில்லாத பட்சத்தில் சிறுவர் காப்பகத்திற்கு அனுப்பிவைத்து பாதுகாக்கப்படுகிறார்கள். வெளி மாநிலங்களிலிருந்து வந்த சில குழந்தைகளுக்கு சொந்த மொழி மட்டுமே தெரியும் நிலையில், அவர்களை மீட்க வரும் பெற்றோர்களுக்கும் ஆங்கில சரளம் வராத பட்சத்தில் வெளியிலிருந்து மொழி இடைநிலையாளர்கள் வரவழைக்கப்படுகிறார்கள். அதன்படி ஹிந்தி மொழிபெயர்ப்பிற்கு உதவச் சென்ற நண்பர் ஒருவர் மூலமே இந்த ஆவணப்படம் எடுக்க முடிந்தது. அதுவும் அவசர அவசரமாக இரண்டு நாட்களில் இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்டது. முதல் நாள் காப்பகம் சென்றும், மற்றொருநாள் குழந்தைகளை வழியனுப்பும் போது சென்னை சென்ட்ரலுக்குச் சென்றும் ஒளிப்பதிவு செய்ததாக திரையிடலின் முடிவில் ஆர் வி ரமணி பகிர்ந்துகொண்டார்.

விசாரணையின் முடிவில் சொந்த ஊருக்குச் செல்ல விரும்பும் குழந்தை நேரடியாக பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுவதில்லை. அந்தந்த மாநிலத்தில் சிறுவர் காப்பக தலைமை காப்பகத்தில் ஒப்படைக்கப்படுகிறார்கள். அரசு ஊழியர்கள் விவரங்களை சரிபார்த்து உரிய நபர்களிடம் குழந்தைகள் சென்று சேருமாறு பணிக்கப்படுகிரார்கள்.

இதோ ரயில் வண்டி புறப்படத் தயாராக நிற்கிறது. இலக்கை நோக்கியும், இலக்கில்லாமலும் பயணிக்க ஏராளமானோர் காத்துக் கொண்டிருக்கிறார்கள். காப்பகத்தின் பொறுப்பில் உள்ள குழந்தைகளும் பயணப் பொறுப்பாளருடன் ஆயத்தமாக நின்று கொண்டிருக்கிறார்கள். ஸ்டேஷன் கார்டு தன் கையில் சுருட்டி வைத்திருக்கும் பச்சை வண்ணக் கொடியை அசைக்கும் நேரம் ரயிலானது மெல்ல நகரும். யார் கண்டது? இந்த ரயிலிலும் ஏதேனும் ஒரு குழந்தை யாருக்கும் சொல்லாமல் பயணித்துக் கொண்டிருக்கலாம். வழிதவறிய குழந்தை தூங்கிக் கொண்டிருக்கலாம். பருவக் கோளாறில் ஏதேனும் ஒரு ஜோடி கனவுகளுடன் சிறகடித்துப் பறக்கச் சென்று கொண்டிருக்கலாம்.

NFSC – கோடை திரைப்பட விழா – மே மாதம், 2011
மை விலேஜ் இஸ் பம்பை / ஆவணப்படம்/ 29 நிமிடம் / 2011
மொழி: ஆங்கிலம் / ஹிந்தி / தமிழ்

இடம்: தேசிய நாட்டுப்புற உதவி மையம்,
#505, காவேரி காம்ப்லஸ், 96 எம்.ஜி சாலை,
நுங்கம்பாக்கம், சென்னை - 600 034

Mera Gaon Hai Bambai (My Village is Bambai)
29 mins - Hindi, English, Tamil (With English Sub Title)

Credits:
Editing: R.V.Ramani, Monisha R Baldawa
Produced, Directed and Photographed by: R.V.Ramani

(முற்றும்)

*******************************************************************************************
ஆர் வி ரமணி 1957-ஆம் ஆண்டு பம்பாயில் பிறந்து பம்பாய் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்ற தமிழர். புகைப்பட நிருபராக சில ஆண்டுகள் பணியாற்றியவர். அதன்பிறகு புனே திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து 1985 -ஆம் ஆண்டு அசையும் நிழற்படக் கலைஞராக பட்டம் பெற்றவர். 1989 –ஆம் ஆண்டு சென்னைக்குத் திரும்பியவர் ஒளிப்பதிவாளராகவும், ஆவணப்படக் கலைஞராகவும் தன்னுடைய பயணத்தைத் தொடங்குகிறார்.

தனக்கென தனித் தன்மையான பாணியை அமைத்துக் கொண்டதின் மூலம் இந்திய அளவில் கவனிக்கப்படும் முக்கியமான கலைஞர். இவருடைய ஆக்கங்கள் குரோவேஷியா, ஜேர்மனி, நேபாளம், தென் கொரியா, மெக்ஸிகோ, பிரான்சு, ஜப்பான், பாகிஸ்தான், இந்தோனேஷியா, சீனா, ஸ்விசர்லாந்து, கொரியா போன்ற பல நாடுகளிலும், இந்தியாவின் புனே, கொச்சி, கொல்கொத்தா, சென்னை, மும்பை, டெல்லி, ஹைதராபாத் போன்ற பல இடங்களிலும் நடைபெறும் உலகத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு கவனத்தையும் பாராட்டையும் பெற்றிருக்கிறது.

கன்னியாகுமரியில் ஆழிப்பேரலை தாக்கியபோது மயிரிழையில் உயிர் தப்பியவர். அந்த கோர சம்பவத்தில் இவருடைய கேமரா தொலைந்து பலத்த சேதத்துடன் மீண்டும் கிடைத்திருக்கிறது. சுனாமியால் பாதிப்புக்குள்ளான அந்தக் கேமராவை மையமாக வைத்தும் ஆவணப்படம் எடுத்திருக்கிறார். இதுவரை 20-ற்கும் மேற்பட்ட பல்வேறு ஆவணப் படைப்புகளைத் தந்திருக்கிறார். பல சிரமங்களுக்கு மத்தியில் எடுக்கப்பட்ட “எழுத்தாளர் சுந்தர ராமசாமி” பற்றிய ஆவணப்படம் அவைகளுள் முக்கியமானது.

இலக்கிய வட்டத்திலும், சுரா-வின் தீவிர வாசகர்கள் மத்தியிலும் அந்த அரிய முயற்சி சரியான வரவேற்பைப் பெறவில்லை என்ற வருத்தம் இவருக்கு இருக்கிறது. “வெகுஜனப் பத்திரிகைகளும், நாளிதழ்களும் கொடுத்த கவனிப்பைக் கூட சிற்றிதழ்கள் கொடுக்கத் தவறிவிட்டன. எழுத்தாளுமைகளைப் பற்றிய ஆவணப்படம் வெளிவரும்போது, அது சார்ந்த தீவிர கவனிப்பைக் கொடுக்கும்போது தான் எதிர்வரும் இளம் திரைக் கலைஞர்கள் புதுப்புது முயற்சியில் ஈடுபடுவார்கள். அப்பொழுதுதான் பல்துறை ஆளுமைகளின் தகவல்களும் பதியப்படும். இலக்கிய சிற்றிதழ்கள் இது சார்ந்து யோசிக்க வேண்டும்” என்று மன வேதனையுடன் பகிர்ந்து கொள்கிறார்.

உலகத் திரைப்பட விழாக்களில் நடுவராகவும் பணியாற்றியிருக்கிறார். பயணங்களில் விருப்பமுள்ளவர். மலையேற்றங்களை பெரிதும் விரும்புவதாகக் கூறுகிறார். தற்போது பெசன்ட் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் தனது மகனுடன் வசித்து வருகிறார்.

ரமணியின் படைப்புகளுக்காக தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி:

+91 98401 57606
Email: ramanirv@hotmail.com
Web: www.ramanifilms.com
*******************************************************************************************

பயன்பட்ட தளங்கள்
1. www.missingindiankids.com
2. www.icmec.org
3. http://indianfolklore.org/home.htm
4. www.ramanifilms.com

நன்றி: சொல்வனம் இணைய இதழ் (26-11-2011)

Thursday, December 15, 2011

நான் ஒரு அரை மலையாளி

நண்பருடன் பேசிக்கொண்டு ஒரு தேனிர் கடையை நெருங்கினேன். முல்லைப் பெரியாறு விவகாரத்தில் நண்பர் காரசாரமாகப் பேசிக் கொண்டுவந்தார். “என்ன ஆனாலும் சரி அவர்களை விடக்கூடாது” என்றார்.

“உங்களுக்கு ஒன்று தெரியுமா? நான் ஒரு அரை மலையாளி” என்றேன். என்னை அடிப்பதுபோல பார்த்ததால் அவருக்கு விளக்க வேண்டி இருந்தது.

என்னுடைய அப்பாவின் சித்தப்பா தன்னுடைய அக்காவின் மகளை திருமணம் செய்து வாழப் பிடிக்காமல் தள்ளிவைத்துவிட்டு ஒரு மலையாள செவிலியரை இரண்டாம் தாரமாக காதல் திருமணம் செய்துகொண்டார். எங்களுடைய குடும்பத்தில் அவருடைய வாரிசுகள் மட்டும் கிட்டத்தட்ட 30 பேர் இருக்கிறார்கள். அம்மாவின் அத்தை பெண் ஒரு மலையாளியை காதல் திருமணம் செய்து கொண்டாள். அது தவிர என்னுடைய இன்னொரு சின்ன பாட்டியின் அம்மா ஒரு மலையாளியை வீட்டில் வைத்து வளர்த்தார் (குட்டன்). இந்தியன் ஆர்மியில் வேலை செய்து ஓய்வு பெற்ற அவருக்கு இரண்டு மகள்கள். என் உடன்பிறவா சகோதரிகள். சகோதரிகள் இருவரும் டெல்லி, கண்ணூர் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இருவருமே அப்படி ஒரு அன்பைப் பொழிவார்கள். குட்டனின் சித்தி மகனும் (வேணு) எங்கள் ஊரில் தான் இருக்கிறார். மெடிக்கல் கடையில் வேலை செய்கிறார். உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவரை கலந்தாலோசிப்பதற்கு முன் அவரிடம் தான் ஆலோசனை கேட்பேன்.

சிறுவயதில் என்னுடன் மாயா, மஞ்சு என்ற இரட்டையர் படித்தனர். அவர்களும் மலையாளிகள். சில காரணங்களால் இடையில் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டு இளநிலை கணிதம் படிக்கும்போது மஞ்சுவை மீண்டும் சந்தித்தேன். அதே மஞ்சு... அதே அன்பு...

“டேய் உன்ன இங்க பார்ப்பேன்னு நினைக்கவே இல்லடா!” என்றாள்.

“ச்சி போடி!” என்றேன். அதைக் கேட்டு கொல்லென்று சிரித்தாள். நானும் அவளுடன் சேர்ந்து சிரித்தேன்.

அதே இளங்கலையில் ஆல்பன் என்றொரு நண்பன் புதிதாகக் கிடைத்தான். இப்பொழுது கணித ஆசிரியனாக இருக்கிறான். அருமைனான சக நண்பன். மகிழ்ச்சியுடன் சென்ற கல்லூரிக் காலம் முடிந்து முதுகலை படிக்க பச்சையப்பன் கல்லூரியில் காலெடுத்து வைத்தேன். எந்தவொரு பாடத்திலும் தேற முடியவில்லை. அங்கிருந்த இரண்டு வருடங்களில் எனக்குக் கிடைத்த ஒரே நல்ல விஷயம் “கிறிஸ்டோபர்”. உலகின் எந்த மூளைக்குச் சென்றாலும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை செல்பேசியில் தொடர்பு கொண்டு அக்கறையுடன் நலம் விசாரிப்பான். இப்பொழுது ஏதோ பன்னாட்டு நிறுவனத்தில் அனிமேஷன் சார்ந்து வேலை செய்கிறான். முதுநிலைக் கணிதத்தில் வித்யா ரபீந்தரும் தோழியாகக் கிடைத்தாள். நல்ல சகோதரனாக மதிப்புக்கொடுத்து அன்புடன் பழகக் கூடியவள். வித்யாவுடன் முகநூலில் இன்றும் உறவு தொடர்கிறது. வித்யாவின் தங்கை கூட மகளிர் கிரிக்கெட்டில் தமிழக அளவில் விளையாடியவள் என்று நினைக்கிறேன்.

படித்து முடித்து இதுவரை பல நிறுவனங்களுக்கு நிரந்தர ஊழியனாகவும், தற்கால ஊழியனாகவும் பணியாற்றி இருக்கிறேன். அங்கெல்லாம் பல மலையாளிகளுடன் வேலை செய்து இருக்கிறேன். ஒருவரையும் குற்றம் குறை சொல்வதற்கு இல்லை. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில் நான் அதிக நாட்கள் வேலை செய்த நிறுவனத்தின் பங்குதாரர்களில் பிரஜோஷ் பாலகிருஷ்ணனும் ஒருவர்.

அவருடைய நிறுவனத்தில் சேர்ந்த புதிதில் எனக்கு பிறந்த நாள் வந்தது. மொத்தம் 35 நபர்கள் மட்டுமே வேலை செய்து கொண்டிருந்தோம். கேக்கில் மெழுகுவத்தி ஏற்றி வெட்டச் சொன்னார்கள். இதிலெல்லாம் எனக்கு அவ்வளவாக ஆர்வமில்லை என்பதால் கோபத்தில் சிடுசிடு என்று வெடித்துக் கொண்டிருந்தேன். என்னைச் சுற்றி எல்லோரும் இருக்கிறார்கள். பிரஜோஷ் மட்டும் இல்லை. செல்பேசியில் அழைத்தபோது Spencer Plaza-ல் இருப்பதாகச் சொல்லிவிட்டார். கடமைக்கு கேக் வெட்டி எல்லோருக்கும் கொடுத்தேன். சம்ரதாயங்கள் எல்லாம் முடிந்து வீட்டிற்கு சென்றுவிட்டேன்.

மறுநாள் காலையில் அலுவலகத்தில் நுழைந்தபோது மொழுமொழு காகிதத்தால் சுற்றப்பட்ட பரிசுப் பொருளை என்னிடம் கொடுத்தார். பிரித்துப் பார்த்தல் மரப் பொருளால் செய்த மணல்கடிகாரம் இருந்தது. முந்திய தினம் தொலைபேசியில் அழைத்தபோது அவர் வெளியில் இருந்ததற்கான அர்த்தம் புரிந்தது. இதுவரை நான் பத்திரப்படுத்தி பாதுகாத்து வரும் பொருட்களில் அவருடைய பரிசுப் பொருளும் ஒன்று.

இத்தனைக்கும் அவர்களிடம் வேலை செய்தபோது ஊழியன் என்ற முறையில் தொல்லைகளைத் தான் அதிகம் கொடுத்திருக்கிறேன். நான் கொடுத்த சிரமங்களையும் மீறி என்மீது அன்பாக இருந்தார். இன்று அதே நிறுவனத்தில் ஏறக்குறைய 100 நபர்கள் வேலை செய்கிறார்கள். அங்கிருந்து வெளியில் வந்து வருடங்கள் ஓடிவிட்டது. இப்பொழுது கூட முன்னனுமதி இன்றி, எந்த நேரத்தில் சென்றாலும் அவருடைய அறைக்குச் சென்று பார்க்கலாம். அந்த அளவிற்கு தன்மையுடன் பழகக் கூடியவர். பிரஜோஷின் தம்பி பிரதீப் பாலகிருஷ்ணனும் என்னுடன் தான் பணி செய்தார். அன்பில் அண்ணனை விஞ்சக்கூடிய தம்பி.

எனக்கு ஆங்கிலத்தில் சமாளிக்கத் தெரியுமே தவிர்த்து, செய்யும் வேலை சார்ந்த கோப்புக்களை ஆங்கிலத்தில் முறையாக தயாரிக்கத் தெரியாது. அவசர நேரத்தில் தன்னுடைய முக்கியமான வேலைகளைக் கூட ஒதுக்கி வைத்துவிட்டு எனக்காக வேலைசெயதவர் ராமகிருஷ்ணன் ராகேஷ். அப்படிச் செய்யவேண்டும் என்ற அவசியம் அவருக்கில்லை. இருந்தாலும் எனக்கென செய்துக் கொடுப்பார். ராமுவின் உதவி இல்லாமல் போயிருந்தால் வாடிக்கையாளர்களை சமாளித்திருக்கவே முடியாது. பூர்வீகம் பாலக்காடு என்றாலும் தமிழகத்தில் ஆங்கில வழியில் படித்தவர். ஹிந்தியை இரண்டாம் மொழியாகக் கொண்டதால் இவருக்கு தாய்மொழியான மலையாளமும் தெரியாது, வாய் மொழியான தமிழும் எழுதப் படிக்கத் தெரியாது. பிறகு நிவாஸ், ஷிஜு, நாசெர் என்று பல மலையாளிகளின் நட்பும் அரவணைப்பும் அதே நிறுவனத்தில் கிடைத்திருக்கிறது.

முத்துவின் மூலம் அறிமுகமான “வினோத் நிச்துல்யா” பற்றியும் இங்கே சொல்லியாக வேண்டும். புனர்ஜனி ஆவணப்படம் பற்றி தமிழில் எழுதிய கட்டுரையை இயக்குனர் மது ஏறவங்கராவிற்காக மலையாளத்தில் மொழி பெயர்த்தவர். ஈழத் தமிழர்கள் பற்றிய குறும்படம் எடுக்கும்போது அதனுடைய மொழிமாற்றத்திலும் பங்காற்றி உதவி செய்தவர். இதுபோல இன்னும் பல நபர்களின் பெயர்கள் சட்டென்று ஞாபகத்தில் வரவில்லை.

தமிழர்களை மலையாளிகள் அடிக்கிறார்கள், கொடுமை செய்கிறார்கள் என்று ஒவ்வொரு நாளும் தொலைக்காட்சியிலும், பத்திரிகை ஊடகங்களிலும் செய்து வெளியிடுகிறார்கள். ரத்த உறவிலும், நேச உறவிலும் ஏறக்குறைய 50 மலையாளிகளுடன் நெருக்கமாகப் பழகி இருக்கிறேன். யோசித்துப் பார்த்தல் எண்ணிக்கை நூறையும் தாண்டலாம். இவர்களில் ஒருவர் கூட மோசமானவர் இல்லை.

தமிழனான என்னுடன் தனிப்பட்ட முறையில் பழகும் மலையாளிகள் என்னை மோசமாக நடத்தவில்லை. தனிநபர் தர்மம் இங்கு நேசத்துடன் காப்பாற்றப்படுகிறது. சமூக தர்மமும், பொது தர்மமும் தனிப்பட்ட நபர்களால் சாத்தியப்படுவதில்லை. இனத்தையோ, மக்களையோ தலைமை ஏற்று நடத்துபவர்களுக்கு தர்மத்தின் மீது பற்றே இருப்பதில்லை. பற்றில்லாதபோது மனிதம் தழைப்பதில்லை. மனிதத்திற்கு மதிப்பில்லாதபோது வன்முறைகள் வெடிக்கிறது. இங்குதான் விஷமிகள் குளிர் காய்கிறார்கள்.

இதனை பாமர மக்கள் புரிந்துகொள்ள முடியாமல் போவது வியப்பில்லை. அறிவுஜீவிகளே புரிந்துகொள்ளாமல் இருப்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது. “உலகெல்லாம் தமிழன் அடிவாங்குகிறான். இனியும் பொறுக்கக் கூடாது” என்று கூக்குரல் இடுகிறார்கள்.

தமிழன் அடிவாங்குவதற்கும், பலியாவதற்குமான சூழ்நிலையை இனத்தையும் மானத்தையும் காப்பாற்றுகிறோம் என்று முழக்கமிடும் அரசியல்வாதிகள் தானே உருவாக்குகிறார்கள். தமிழகம் என்றில்லை உலகின் பல இடங்களிலும் அரசியல் இப்படித்தானே நடக்கிறது. உங்களால் அவர்களை அடிக்க முடியுமா? ஏன் இப்படி மக்களுக்கு எதிராக அரசியல் செய்கிறீர்கள் என்று கேட்க முடியுமா? என்று நண்பரைப் பார்த்து கேட்டேன்.

நாயர் போட்ட சாயாவைக் குடித்துக் கொண்டே முன்னைக் காட்டிலும் கோவமாக நண்பர் என்னைப் பார்த்து சீறினார்.

அவருக்கு நான் இரண்டு வாய்ப்புகள் கொடுத்தேன். “அரை மலையாளியான என்னை அடி. இல்லையேல் முழு மலையாளியான சாயா போடும் நாயரை அடி” என்றேன்.

கோபத்தில் நண்பன் குமுறினான். இருவரும் நாயரைப் பார்த்தோம். சர்கஸ் காண்பிப்பது போல பாதாளத்தில் ஒரு கையையும், ஆகாயத்தில் ஒரு கையையும் வைத்துக் கொண்டிருந்தார். இடையில் ஓடிய தேநீரிலிருந்து புகை வழிந்துகொண்டிருந்தது.

யாரோ யார்யாரோ? யாரோடு யாரோ? எவர் நெஞ்சிநில்தான் யாரோ?

Monday, October 31, 2011

புனர்ஜனி – ஆவணப்படம்

உரசிச் செல்லும் பனிக்காற்று, தவழ்ந்தோடும் குளிர் நதிகள், பச்சைப் பசேல் மலைப் படுகை, மின்னல் போல் நீரூற்று என இயற்கை எழில் கொஞ்சுவதால் “கடவுளின் சொந்த நாடு” என்று கேரளா வர்ணிக்கப்படுகிறது. உலகில் பார்க்க வேண்டிய 50 சுற்றுலா இடங்களின் பட்டியலில் கேரளாவிற்கும் முக்கிய இடமுண்டு. இதனால் வெளிநாடுகளிலிருந்தும், அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் வட இந்தியாவிலிருந்தும் விடுமுறை நாட்களைக் கழிக்க ஏராளமானோர் கேரளாவிற்கு வந்து செல்கின்றனர். உண்மையில் தென்னிந்தியாவின் இதர மாநிலங்களைக் காட்டிலும் கேரளாவின் தட்பவெட்பம் வசிப்பதற்கேற்ற சூழலாக இருக்கலாம். ஆனால் ஐம்பதாண்டு கால இயற்கை வள புள்ளியியல் விவரங்களை ஆராய்ந்தால் இன்றைய கேரளாவின் உண்மை நிலவரம் தெரியவரும். குளிர்பானக் கம்பெனியின் நச்சுக் கழிவுகள் பாதித்த பிளாட்சிமடா நிலச் சீரழிவு மற்றும் அளவிற்கு அதிகமான நிலத்தடி நீர் சுரண்டல் ஆகியவை தேசிய அளவில் எதிர் விளைவுகளை ஏற்படுத்திய பிரச்சினைகளில் மிக முக்கியமானவை. அதைப் போன்றதொரு பிரச்சினைதான் 1980-களின் மத்தியில் துவங்கிய ‘கொடுங்கரப்பள்ளம்’ நீராதாரப் பிரச்சினை. பெருக்கெடுத்து ஓடிய நதி, கிராம மக்களின் அபரிமிதமான இயற்கை சுரண்டலால் 1990–களின் இறுதியில் முற்றிலும் உலர்ந்து வறண்டிருக்கிறது. அதனால் பல வாழ்க்கைப் பிரச்சினைகளைச் சந்தித்த கிராம மக்களின் கூட்டு முயற்சியால், ஏறக்குறைய இறந்துவிட்ட நதிக்கு 25 ஆண்டுகள் கழித்து உயிர் கொடுத்திருக்கிறார்கள். அதைத்தான் மது எரவன்கரா ‘புனர்ஜனி’ என்ற ஆவணப்படமாக எடுத்திருக்கிறார். ‘புனர்’ என்றால் மறுபடியும், ‘ஜனி’ என்றால் பிறப்பு – ஆகவே இறந்த நதியின் மீள்பிறப்பு ஆவணமே புனர்ஜனி .


(Punarjjani – The River).

The rivers are our brothers;
they quench our thirst.
The rivers carry our canoes,
and feed our children.
You must remember,
and teach your children,
That the river are our
brothers and yours,
and you must henceforth give the rivers
the kindness you would give any brother.

– என்று அமெரிக்க ஜனாதிபதிக்கு 1854-ல் சிகப்பிந்தியர்களின் தலைவர் எழுதிய கடிதத்தின் வரிகளிலிருந்தே ஆவணப்படம் துவங்குகிறது.

நீலகிரி, கோயம்புத்தூர், மல்லபுரம் மற்றும் பாலக்காடு ஆகிய பகுதிகளை எல்லைகளாகக் கொண்டுள்ள ‘அட்டப்பாடி’ தமிழக-கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. குறும்பர், முடுகர், இருளர் போன்ற பழங்குடியினர் இங்கு காலங்காலமாக வசித்து வருகின்றனர். காட்டிலுள்ள வளங்களுக்காகவும், விவசாய நிலங்களை அபகரிக்கவும் திருவிதாங்கூர் மற்றும் கோயம்புத்தூரில் இருந்து 1940 முதல் 1980 வரையுள்ள காலகட்டத்தில் தொல்குடியினர் அல்லாதோர் அதிகமாக குடியேறி மலைக்காடுகளை அபகரித்திருக்கின்றனர். பவானி, குந்தி, சிறுவாணி, வரகர், கொடுங்கரப்பள்ளம் ஆகிய முக்கிய நதிகள் இங்கு ஓடி செழிக்கின்றன. பவானி தமிழகத்தில் தவழ்ந்து காவேரியில் சங்கமிக்கிறது. முக்கியமாக, நெல், தேங்காய், பாக்கு, மரச்சீனி, வாழை, இஞ்சி, மஞ்சள், தேயிலை, ஏலக்காய், லவங்கம் போன்றவை தென்மேற்கு மலைச் சரிவுகளில் பயிரிடப்படுகின்றன. வறட்சிப் பகுதிகளான கிழக்கு மலைச்சரிவில் ராகி, நிலக்கடலை, சூரியகாந்தி, கரும்பு, பருத்தி போன்றவை பயிரிடப்படுகின்றன. அடர்ந்த காடுகளில் மருத்துவ குணம் நிரம்பிய அரிய வகை மருத்துவ மூலிகைகள் கூட ஏராளமாகக் கிடைக்கின்றன.

காடுகளை அழிப்பது, மரங்களை வெட்டுவது, கட்டுப்பாடில்லாத நில ஆக்கிரமிப்பு, மண் அரிப்பு போன்ற காரணங்களால் பசுமையுடன் காட்சியளித்த மலைப் பிரதேசம் எண்பதுகளின் மத்தியில் பாறைகளாக காட்சியளிக்க ஆரம்பித்திருக்கிறது. மழை நீர் சேமிப்பிலும் தடை ஏற்பட்டு நிலத்தடி நீர் மட்டமும் குறையத் துவங்கியிருக்கின்றது. மக்களின் பேராசை இயற்கைச் சுழற்சியில் சிக்கலை ஏற்படுத்தியதால் நீரூற்றும் இல்லாமல் போக, ‘கொடுங்கரப்பள்ளம்’ உலர்ந்து வற்றியிருக்கிறது. பெரு நதிகளான பவானி மற்றும் குந்தியின் மூன்று முக்கிய கிளை நதிகளில் கொடுங்கரப்பள்ளமும் ஒன்று. நதியின் இறப்பால் ஆற்றின் நீர்வரத்து குறையவே அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் விவசாயமும், தன்னிச்சையான விளைச்சலும் பாதித்திருக்கிறது. இதனால் இயற்கை வளங்களை நம்பியிருந்த தொல்குடியினர் சிக்கலுக்கு உள்ளாகி இருக்கின்றனர். சிலர் வறண்ட பகுதிகளிலிருந்த களிமண்ணால் செங்கல் சூலை அமைத்து பிழைத்திருக்கின்றனர்.

(கடைசியில் இருப்பவர் கவிஞர் சுகதகுமாரி)

கவிஞரும், சுற்றுப்புற ஆர்வலருமான சுகதகுமாரி இந்த நெருக்கடிகளை தனது நாட்குறிப்பில் எழுதியிருக்கிறார். பசுமையான நாட்களையும், வறட்சியான நாட்களையும் நேரில் கண்டவர் என்பதால் படைப்பாளிக்குரிய அக்கறையுடன் இதனை பதிவு செய்திருக்கிறார். 1980-களின் மத்தியில் எழுதிய சில பகுதிகளை வாசித்துக்காட்டும் அதே நேரத்தில் திரையிலும் மலையாள எழுத்துக்கள் பின்னணியில் ஓடுகின்றன. பழங்குடி வயோதிகர்களின் நேர்முகமும் கவிஞரின் வரிகளுக்கு வலு சேர்க்கிறது.

ஒருகட்டத்தில் நீர் பற்றாக்குறையால் கிராம மக்கள் விவசாயம் செய்ய முடியாமல் தவிக்கின்றனர். ஆயிரமாயிரம் வருடங்களாக இயற்கையுடன் இசைந்து வாழ்ந்தவர்களில் சிலர், பிழைப்பு தேடி அருகிலுள்ள நகரங்களுக்கு இடம்பெயர நேர்கிறது. காலூன்றிய நிலத்தை விட்டு வெளியில் செல்ல மனமில்லாத கிராமவாசிகள் AHADS (Attapady Hills Area Development Society) என்ற வளர்ச்சித் திட்ட சுய உதவிக் குழுமத்தில் ஒன்றிணைந்து வற்றிய நதிக்கு மீண்டும் உயிர் கொடுக்க முயற்சி செய்கிறார்கள். இதற்காக மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி கேரள அரசு ஜப்பானிய நிதி நிறுவனத்துடன் (Japan Bank for International Cooperation - JBIC) இணைந்து 258.31 கோடி ரூபாய் அளவிற்கான திட்டங்களை தொலைநோக்குப் பார்வையில் செயல்படுத்தி இருக்கிறது. அதற்கு சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்ட அரசு அலுவலர்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார்கள். கிராம மக்களும் முனைப்புடன் செயல்படவே நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஆலோசனைகளை வழங்கி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி வறண்ட ஊற்றுக்கு உயிர் கொடுக்கிறார்கள்.

மூன்று பகுதிகளாகப் பிரித்து, திட்டம் வகுத்து, பல குழுக்களாக இவர்கள் உழைத்திருக்கிறார்கள். முதலில் மலைச் சரிவுகளில் மரக்கன்றுகளை நட்டு வளர்த்திருக்கிறார்கள். விலங்குகளிடமிருந்து மரக்கன்றுகளைப் பாதுகாக்கவும் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார்கள். இரண்டாவதாக மலைகளில் கிடைக்கும் சிறுசிறு கற்பாறைகளைக் கொண்டே மதகுகளை ஏற்படுத்தி மண் அரிப்பையும் குறைத்திருக்கிறார்கள். கற்கள் நகர்ந்துவிடாமல் இருக்க கம்பி வலைகளையும் பொருத்தியிருக்கிறார்கள். அந்த மதகுகளின் மூலமே தேவையான இடங்களில் பள்ளம் வெட்டி மழைநீர் சேமித்து நிலத்தடி நீர் மட்டத்தை உயரும்படி செய்திருக்கிறார்கள். மூன்றாவதாக தாழ்ந்த நிலப்பகுதிகளில் ஆங்காங்கு மலைக்காடுகளில் பாதுகாப்பான குழிகளைத் தோண்டி, பலநூறு பள்ளங்களை ஏற்படுத்தி, மழைக்காலங்களில் உருண்டோடும் தண்ணீரை வீணடிக்காமல் குளங்கள் ஏற்படுத்தி நீரினை சேமித்திருக்கிரார்கள்.1996 முதல் செயல்படுத்தப்பட்ட திட்டம் 2008-களின் இறுதியில்தான் பலன் கொடுக்க ஆரம்பித்திருக்கிறது. 2008-ஆம் ஆண்டிலிருந்து வருடத்தின் 10 மாதங்கள் கொடுங்கரைப்பள்ளம் காலநிலைக்கு ஏற்றார்போல வழிந்தோடுகிறது. செயலூக்கத்துடன் கூடிய சுய உதவிக் குழுவின் பயிற்சி திட்டமே இதையெல்லாம் சாத்தியப்படுத்தியிருக்கிறது. இதனை மக்களும் சரியாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
மேலும் காய்கறித் தோட்டம், மண்வள மேம்பாட்டுத் திட்டம், ஆட்டு மந்தைக் குடில் அமைப்பு, காற்றாலை மின்சாரத் திட்டம் போன்ற எல்லா திட்டங்களுமே சுய உதவிக் குழுவின் மூலமே பெரும்பாலும் நிறைவேற்றப் பட்டிருக்கிறது. ஒவ்வொரு திட்டத்தின் சரியான வளர்ச்சியிலும் பெண்களின் பங்கு கணிசமானது. அதிலும் பழங்குடியின பெண்களே அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டிருக்கிறார்கள்.

கேரளாவின் காற்றாலை மின்சார விசைகள் அட்டப்பாடியில்தான் அதிகமாக இருக்கிறதாம். அதற்காக ஏராளமான மரங்களை வெட்டி, காட்டினை அழித்து இதனை சாத்தியப்படுத்தி இருக்கிறார்கள். கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து உயிரைக்கொடுத்து, இறந்த நதிக்கு 25 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஜீவன் கொடுத்திருக்கிறார்கள். காற்றாலைகள் முக்கியமா? இயற்கை வளங்கள் முக்கியமா? என்பதை அரசு இயந்திரம் உணர வேண்டும். ஆவணப் படத்தின் இறுதியில் ஓடும் வரிகள் அதனை அழுத்தமாக உணர்த்துகிறது.

When the last tree is fellled
When the last fish is floating dead
only then you will realize its value
you will then realize that
there is no value for the money
you value now the most
(Tribal chief, Papa new Guinea)

கடந்த மாதம் ‘மது எரவான்கரா’ சென்னை வந்திருந்ததால் தேசிய நாட்டுப்புறவியல் உதவி மையத்தில் (NFSC - Chennai) சிறப்புத் திரையிடல் ஏற்பாடாகியிருந்தது. திரையிடலின் முடிவில் படம் உருவான விதம் பற்றி மது பகிர்ந்துகொண்டார். “மாத்ருபூமி மலையாள இதழின் இணைப்பு மலரில் கொடுங்கரப்பள்ளம் பற்றி நோபல் ஜோஸ் எழுதிய கட்டுரையே இந்த ஆவணப்படத்தை எடுப்பதற்கு உந்துதலாக இருந்தது. முழுப்படத்தையும் முடிக்க 15 மாதங்கள் எடுத்துக் கொண்டது. பல்வேறு கால நிலைகளில் அங்கு சென்று உண்மை நிலவரங்களை உள்வாங்கி, பல்வேறு கிராம மக்கள் மற்றும் அலுவலர்களுடன் உரையாடி, அதிலிருந்து தேவையான விஷயங்களை படம் பிடித்தோம். கடைசி மூன்று மாதங்கள் மட்டுமே படப்பிடிப்பை வைத்துக் கொண்டோம்.” என்று பகிர்ந்துகொண்டார். தயாரிப்புச் செலவுகளை வி.ஆர். ரவி ஏற்றுக் கொண்டிருக்கிறார். இந்தியாவின் சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான சன்னி ஜோசப் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இசை, படத்தொகுப்பு, கலை என்று ஒவ்வொரு துறையிலும் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்கள். இந்தப்படம் இத்தாலி, ஜப்பான், ஜேர்மனி, கனடா மற்றும் அமெரிக்க உலகத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட தேர்வாகி இருக்கிறது.

(முற்றும்)

NFSC – சிறப்புத் திரையிடல் - ஆகஸ்ட் 18, 2011
புனர்ஜனி / ஆவணப்படம்/ ஆங்கிலம்/ 30 நிமிடம் / 2011

இடம்: தேசிய நாட்டுப்புற உதவி மையம்,
#505, காவேரி காம்ப்லஸ், 96 எம்.ஜி சாலை,
நுங்கம்பாக்கம், சென்னை - 600 034


*********************************************************
மது ஏறவங்கரா பற்றி...

மது ஆலப்புழாவிலுள்ள எரவன்கராவில் பிறந்தவர். ஆவணப்பட இயக்குனர், எழுத்தாளர், சினிமா விமர்சகர், சினிமா திறனாய்வாளர், உலக திரைப்பட விழாக்களில் ஜூரி என பன்முகத் தன்மையைக் கொண்டவர்.

மும்பை - இந்தியா (2003), யமகடா – ஜப்பான் (2005). பிரிஸ்பேன்– ஆஸ்திரேலியா (2006), இஸ்தான்புல் – துருக்கி (2008), டொராண்டோ– கனடா (2010) ஆகிய இடங்களில் நடந்த உலகத் திரைப்பட விழாக்களில் ஜூரியாகப் பங்காற்றியிருக்கிறார். சிறுகதை, பயணக் கட்டுரை, சினிமா திறனாய்வு, மொழிபெயர்ப்பு, சினிமா வரலாறு என்று எழுத்து சார்ந்து இயங்கக் கூடியவர்.

ஸ்நானகதங்கள் (சிறுகதை), மலையாள சினிமாயும் சாஹித்யவும் (ஆய்வு), அலிவின்டே மந்தரங்கள் (சினிமா திறனாய்வு), அமர்த்தியா சென்னின் சம்ஸ்காரம், யுக்தி, சமூஹம், சலபயாத்ரகள் (பயணம்), மலையாள சினிமாயிலே அவிஷ்மரநீயர் (சினிமா வரலாறு), நிஷாதம் (வசனம்), பர்லிவயலுகளே உலகுன்ன காட்டு – சமகலீனா லோக சினிமா (சினிமா திறனாய்வு) ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார். சில புத்தகங்களுக்காக தேசிய மற்றும் மாநில அரசின் விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

நங்கூரம் என்ற மலையாள சினிமாவில் வேலை செய்திருக்கிறார். “Plastics, The Milky Way, The Story of PDDP, Crystals, Bricks, Kalarippayattu, Forensic Science, The Films of Adoor Gopalakrishnan, Asmara- The City of Dreams ( Eritrea ), Victims of Silence ( Eritrea ), Nehna I-V ( Eritrea ), Punarakhyanam , The Magic Wheel ( Bahrain ) and Punarjjani” போன்ற ஆவணப் படங்களை எடுத்திருக்கிறார். நிஷாதம் மற்றும் பக்கள்மழா என்ற ஆவணப் புனைவையும் முயற்சி செய்திருக்கிறார்.

1999 ஆம் வருடத்தின் தேசிய விருதையும், ஜனாதிபதியின் தங்கப் பதக்கத்தையும் பெற்றவர். ‘மலையாள சினிமாயும் சாஹித்யவும்’ என்ற சினிமா புத்தகத்திற்கான அதே வருடத்தின் மாநில விருதையும் பெற்றிருக்கிறார். 2000 & 2002 –ற்கான சினிமா விமர்சகர் விருதையும் 2003-ல் கேரள அரசின் சினிமா விமர்சகர் விருதையும், 2007–ஆம் ஆண்டிற்கான கேரள அரசு தொலைகாட்சி விருதையும் பெற்றிருக்கிறார். இலக்கியம் மற்றும் சினிமா சார்ந்து தீவிரமாக இயங்குவதால் இந்திய கலாச்சாரத் துறையால் சிறந்த படைப்பாளியாக கெளரவிக்கப் பட்டிருக்கிறார். FIPRESCI – இந்தியக் கிளையின் செயற்குழு உறுப்பினர்.

அவருடைய படைப்புகளுக்காக தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி:

மது எரவன்கரா,
எரவன்கரா அஞ்சல்,
மவேளிக்கரா, கேரளா
பின்கோடு- 690 108,
இந்தியா.

மின்னஞ்சல்: eravankara@gmail.com

*********************************************************

மேலதிக தகவலுக்கு

1. http://indianfolklore.org/home.htm
2. http://ahads.org
நன்றி - சொல்வனம் இணைய இதழ்.

Wednesday, October 26, 2011

ஏக்கத்தின் குரல்

பதினைந்து வருடங்களுக்கு முன் சண்டிகரில் ஒரு நாடகம் நடக்கிறது. ஒத்திகைக்குப் பின் நாடகக்காரி விரதம் இருப்பது போல் தனித்திருக்கிறாள். பிராணாயாமம் அவளை விழித்திருக்கச் செய்கிறது. ரசிகர்களின் பசிக்காக மேடையேறியவள் சபையினரை வணங்குகிறாள். மீண்டும் வணங்குகிறாள். மறுபடியும் மறுபடியும் வணங்குகிறாள். நாட்டியம், கிராமியக் கலை, சிலம்பாட்டம் உள்ளிட்ட சில பாரம்பரிய கலை வடிவங்களின் குரு வணக்கத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, வார்த்தைகளற்ற பாவங்களை உடலசைவில் உண்டாக்கி, அதையே படிமமாகக் கொண்டு – ஒரு பெண் தனக்குள் இருக்கும் அக்னியை (சக்தியை) வெளிக்கொணர்வதாக மேடையில் நாடகம் அரங்கேறுகிறது. கூத்துப்பட்டறையில் தன்னை புடம் போட்டுக்கொண்ட கலைராணியின் ‘பெண்’ என்ற இந்நாடகம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெறுகிறது.

அரங்கின் மூலையில் கூட்டத்தோடு கூட்டமாக உட்கார்ந்திருந்த, கோவாவைச் சோந்த ஹாட்மேன் டிசூசா என்ற நாடக இயக்குநர் கலைராணியின் திறமையால் கவரப்பட்டு தன்னுடன் ஒரு நாடகம் செய்ய அழைக்கிறார். அதற்காக உகாண்டா கவிஞர் Okot p’Bitek’ எழுதிய ‘Song of Lowino’ என்ற கவிதையை தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள். கணவனை இழந்த பழங்குடிப் பெண் ஒருத்தி தன் மணவாழ்க்கையில் அனுபவிக்க நேர்ந்த ஒடுக்குமுறை அவஸ்தைகளையே இக்கவிதை பேசுகிறது. ஜாஸ் இசையின் பின்னணியில் ஆங்கிலத்தில் போடப்பட்ட இந்நாடகம் பின்னர் மு. நடேஷ் என்பவரால் தமிழாக்கம் செய்யப்பட்டு, இந்திய வாத்தியக் கருவிகளின் இசைப் பின்னணியில், 1994 ம் ஆண்டிலிருந்து பல மேடைகளில் அரங்கேற்றப்பட்டிருக்கிறது. கூத்துப்பட்டறை நவராத்திரி விழாவிற்காக நீண்டநாள் கழித்து மீண்டுமொரு முறை கடந்த வியாழனன்று அரங்கேற்றப்பட்டது.

செம்மண் விளக்கின் மஞ்சள் வெளிச்சத்தில் கொலுவில் வைக்கப்பட்ட பொம்மைகள் பிரகாசிக்கின்றன. பொம்மையின் பல வண்ணத் திட்டுக்கள் இருண்ட அரங்கில் தெறிக்கின்றன. அமைதியை குலைக்கும் வகையில் பறையொலி முழக்கம் அதிர்வை உண்டாக்குகிறது. பறையொலி தேய்ந்து பூனையின் கத்தல் லேசாக ஒலிக்கிறது. விம்மிக்கொண்டே தன்னுடைய கணவன் இறந்ததாக நினைத்து அழத் தொடங்குகிறாள் பழங்குடிப் பெண் லெவினோ. ஆப்ரிக்க தொல்குடி அச்சோலி மரபில் வாழும் இவளுக்கும், மேற்கத்திய மோகத்தில் திளைக்கும் தன் கணவன் ஒகோல் என்பவனுக்குமான முரண் எண்ணங்களே நாடகத்தின் அடிநாதம். கலாசாரத்தையும், சகமனித உணர்வுகளையும் மதிக்கத் தெரியாத தன்னுடைய கணவன் இறந்ததாக நினைத்து அழுகிறாள்.

ஒகோல் இறந்தான். ஊர் தலைவனின் மகன், எருதின் மைந்தன், அளவில்லாத வன்முறைகளால் கொல்லப்பட்டான். ஓர் அசைவில்லாத குட்டை போல பிணமாகக் கிடக்கிறான்’ என்ற ஒப்பாரியுடன் பிதற்றலை ஆரம்பிக்கிறாள். சொந்த கலாசாரத்தை மறந்து மேற்கத்திய மோகத்தில் வாழும் அவனைச் சாடுகிறாள். பாழடைந்த கட்டடத்தில் விட்டுவிட்டுப் போன பயன்படுத்த முடியாத பொருளைப் போலவும், காட்டு விலங்கினைப் போலவும் தன்னை பாவித்த கணவனை கொச்சையான அசைவுகளின் மூலம் நையாண்டி செய்கிறாள். தன்னுடைய முன்னோர்களின் மரபுசார் கலாசாரத்தை அன்றாட வாழ்வில் பின்பற்றியதை நினைத்து கர்வமும் கொள்கிறாள். தன்னுடைய இயலாமையை நினைத்து கொலுவிற்கு மத்தியில் நின்று லெவினோ மூர்க்கமாக அழுகிறாள். சாம்பலை எடுத்துத் தூவிக்கொண்டே ருத்ரதாண்டவம் ஆடுகிறாள். அப்பொழுது பழைய நினைவுகளின் பொருட்டு தலையிலும், பாசத்தின் வெளிப்பாடாக மார்பிலும், விரக வேதனையில் பெண்ணுறுப்பிலும் அடித்துக்கொண்டு அழுகிறாள்.

நவீன உலகுடன் தொடர்பற்று வாழும் லெவினோவை முற்றிலும் வெறுக்கிறான் ஒகோல். அவனுடைய நெருக்கத்தையும், அந்தரங்க உணர்வுகளை நேசமுடன் பகிர்ந்து கொள்ளவும் லெவினோ விரும்புகிறாள். அது முடியாமல் போகவே தனிமையில் பேசிக்கொள்கிறாள். உலகத்தின் ஆண்கள் தங்களை நேசிக்கும் பெண்களின் உணர்வுகளை ஆற்றுப்படுத்துவதே இல்லை. அதற்கு பெரும்பாலான ஆண்கள் முயல்வதுகூட இல்லை. உலகமெல்லாம் இந்த முரண் பொருந்திப் போவதால் காலனியாதிக்க கலாசார நகலெடுப்பின் குறியீடாகவே ஓகோலை கருத வேண்டியிருக்கிறது. தேவையான இடத்தில் பறவைகளின் சப்தங்களையும், விலங்குகளின் கேவல்களையும் கச்சிதமாகப் பயன்படுத்தி நாடகத்தின் உணர்ச்சி வெளிப்பாட்டை வேறு தளத்திற்கு நகர்த்திச் செல்கிறார் கலைராணி.

சூரியனின் மறைவிற்காக காத்திருக்கிறாள் லெவினோ. “அவன் வருவானா? அடுத்து சாவதற்குமுன் இதே இடத்திற்கு நேரத்தில் வந்து சேர்வானா?” என்று தனிமையில் ஏங்குகிறாள். ‘பிறப்புறுப்பை பித்தநீர் எரிக்கிறது. அவயங்கள் காற்றில் அலைக்கழிக்கப் படும் அதே நேரத்தில் அவர்களது கொட்டைகள் வகுப்பறையில் நசுக்கப்பட்டன, பெரிய பக்கங்களுக்கு இடையே’ என்று, ஏட்டுப்படிப்பின் மேற்கத்திய மோகத்தில் தறிகெட்டுத் திரியும் அறிவுஜீவி ஆண்களை விரையடிக்கப்பட்ட வண்டி மாடுகளாகச் சித்தரிக்கிறாள். சிலர் கோவில் மாடுகளாகச் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் உண்மையே. மேற்கின் சூரியன் சீக்கிரமே அஸ்தமிக்கும். அவளுடைய கணவன் ஒகோலும் வந்து சேர்வான். இரவின் முடிவில் உதயமாகும் விடிகாலைச் சூரியனை பூனை விழுங்கி சப்தமிடும் அதே வேலையில் லெவினோவின் குரல் மீண்டும் ஒலிக்கத் துவங்கும்.

சாங் ஆஃப் லெவினோ–வைத் தொடர்ந்து நந்திகிராமில் 1993ம் ஆண்டு முதன்முறையாக பரிசோதனை முயற்சியில் அரங்கேற்றப்பட்ட கலைராணியின் மற்றொரு நாடகமான ‘வருகலாமோ அய்யா…’ நிகழ்த்தப்பட்டது.
ஓர் ஊர்வலத்தில் தேரானது நகரும்பொழுது நாதஸ்வரத்தில் மல்லாரி ராகம் வாசிப்பார்கள். அதற்குமுன் பறை மேளம் கொட்டப்பட வேண்டுமென்பது ஐதீகம். அப்பொழுதுதான் தேர் புறப்படும். இதனை நா.முத்துசாமி தான் எழுதிய ‘England’ என்ற நாடகத்தில் பயன்படுத்தி இருப்பார்.

‘மல்லாரியில் நகராத தேருக்கு
பறை கொட்டும் வேண்டும்’

இதனை ஆரம்ப வரிகளாக வைத்து, நந்தனார் சரித்திரக் கீர்த்தனையின் பல்லவி மற்றும் அனுபல்லவியைத் தவிர்த்துவிட்டு சரணத்தை மட்டுமே முழுவதுமாக எடுத்துக்கொண்டு, நா.முத்துசாமியின் வரிகளுக்கு அடுத்து வருமாறு அமைந்த கலைராணியின் தனிநடிப்பு பல பரிசோதனை முயற்சிகளை உள்ளடக்கியதாக இருந்தது. பக்தியை லட்சியமாகக் கொண்ட நந்தனார் தில்லை நடராஜனை தரிசிக்க பேராவல் கொள்ளும் பகுதிகளை பரதத்தின் அபிநய சாயலிலும், ஒடுக்கப்படும் பெண்களின் குரலாக வெளிப்படும் கலைராணியின் உள்ளார்த்த சுயபரிசோதனைப் பகுதிகளை நவீனத்தின் சாயலிலும் அமைத்து திறம்படச் செய்திருந்தார். ஓர் ஆணின் குரலில் நந்தனாராகவும், அதேவேளையில் ஒடுக்கப்படும் பெண்களின் குரலாகவும் ஒலிப்பதால் இருபாலினரையும் அடையாளப்படுத்தும் விதமாக உடையலங்காரத்தில் கவனம் செலுத்தியிருந்தார்.

கோபலகிருஷ்ண பாரதியார் தான் இயற்றிய நந்தனார் சரித்திர பாடல்களில் தில்லை நடராஜனின் அருங்குணத்தையும், நந்தனாரது எளிமையான திட பக்தியையும் புகழ்ந்துப் பாடியுள்ளார். நந்தன் தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்தவர் என்பதால் கோவிலுக்குள் நுழைய தடைவிதிக்கிறார்கள். எனவே சந்நிதிக்குள் நுழைந்து மூலவரை தரிசிக்க முடியாமல் தவிக்கிறார்.

திட பக்தியால் ஈசனின் மனம் குளிர்ந்து, நந்தனின் கனவில் தோன்றி “நான் உன்னைப் பொன்னம்பலத்திற்கு வரச்செய்து தரிசனம் தருகிறேன்” என்று உறுதிமொழி கொடுக்கிறார். நந்தனுக்கு சந்தேகம் வலுக்கிறது. “இவ்வளவு நாள் தன்னை கீழ் சாதியன் என்று கோவிலுக்குள் நுழையவிடாத சமூகம் இதற்கு எப்படி சம்மதிப்பார்கள்?” என்ற பயம் அவருக்கு ஏற்படுகிறது. தன்னுடைய கனவு நிறைவேறாமல் போய்விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.
எனவே ‘உன் அருகில் நான் வருகலாமோ ஐயா’ என்று சிவனை நோக்கி கசிந்துருகிப் பாடுகிறார். புண்ணியம் செய்யாததால் இந்தப் பூவுலகில் கீழ்சாதியில் பிறந்து, சந்நிதிக்கு வெளியே நின்று உன் தரிசனம் கிடைக்காமல் தவிக்கிறேன்’ என்று ஏங்குகிறார்.

“பூமியில் புலையனாய்ப் பிறந்தேனே
புண்ணியம் செய்யாமல் இருந்தேனே
சாமி உன் சந்நிதி வந்தேனே
பவசாகரம் தன்னையும் கடந்தேனே
கரை கடந்தேனே
சரணம் அடைந்தேனே
தில்லை வரதா பரிதாபமும் பாவமும் தீரவே (வருகலாமோ ஐயா…)”

நந்தனார் தில்லை அம்பல நடராஜனை வெளியில் தேடுகிறார். சிவம்தான் அவருக்கு லட்சியம். ஆருத்ரா நன்னாளில் நடராஜரை நேரில் தரிசித்து அவருடன் இரண்டறக் கலக்க வேண்டும் என்பதே அவருடைய குறிக்கோள். ஆகவே பக்தி வழியில் மென்மையாக வெளிப்படுகிறார். நந்தனார் சிவத்தில் கலந்தபோது கலைராணி ரசிகர்களுடன் கலந்ததை நான் உணர்ந்தேன். ஒரு நடிகையாகவும் ஒரு ரசிகனாகவும் இது ஓர் உச்சம். கலையே தெய்வம் என்ற அகம் வெளிப்படும் தருணம். சாமானியர்களின் லட்சியம் இருப்பைச் சார்ந்தது. இருப்பின் தேவைகளைச் சார்ந்தது. வாழ்வின் இருப்பில் கோவம் வெறுப்பு, காதல், தோழமை என்று எல்லாமே கலந்திருக்கும். அதற்கேற்பவே நம் குரல் அமையும்.
இரண்டு வெவ்வேறு முரண் தன்மைக்கேற்ப குரலையும், உடல் மொழியையும் சரியாக வெளிக்கொணர்வது மிகக் கடினமான செயல். கலைராணிக்கு அது சர்வ சாதாரணமாக வாய்க்கிறது.

இயக்கி நடித்தவர்: நடிகை கலைராணி
அரங்க ஒளியமைப்பு: ஆவணப்பட இயக்குனர் R.V.ரமணி
இசை: கருணா பிரசாத், மணிகண்டன், சரத் மற்றும் பரத்
அரங்க வடிவமைப்பு: கலைச் செல்வன்.
பின்னரங்க உதவி: பிரபு.

பயன்பட்ட தளங்கள்:
1. http://www.youtube.com/watch?v=mrvk-aFVjUw
2. http://kalairaani.weebly.com

(நன்றி - தமிழ் பேப்பர் - இணைய இதழ்)