Sunday, June 6, 2010

இந்திரா பார்த்தசாரதி புத்தக வெளியீடு

கோடைகாலத்தின் லேசான தூறல் அனுபவிக்க வேண்டிய விஷயங்களில் ஒன்று. மூத்த ஆளுமையின் புத்தக வெளியீடும் சேர்ந்து வரும் பொழுது மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது. அதிகாலை மட்டுமல்லாமல் விடுமுறை தினம் வேறு. ஆனந்தப்பட விஷயங்கள் இருந்தாலும், ஒரு பதற்றம் அடிவயிற்றில் உருண்டையாக ஓடிக்கொண்டிருந்தது. "காரணம் பாராவின் கண்களில் பட்டுவிடுவேனோ!" என்றுதான். அவர் ஒன்றும் மோசமானவர் இல்லைதான். என்றாலும் அவருடன் சேர்ந்து செய்வதாகச் சொல்லி இருந்த பணி, அலுவலக வேலையினால் தாமதமாவதைச் சுட்டிக் காட்டினால், அகத்தியர் காவிரியைக் கமண்டலத்தில் அடக்கியது போல என்னையும் எதிலாவது அடக்கிவிடுவார் என்ற பயம்தான்.

டேக் மையத்தில் நுழைந்தவுடன் காலை உணவு பரிமாறினார்கள். பாராவை நினைத்துக் கொண்டதால் வாயில் போட்ட எதுவும் தொண்டையில் இறங்கவில்லை. நெய்யில் செய்த ரவா கேசரியும் பொங்கலும், வடையும் இட்லியும் சுவையாக இருந்ததால், பாரா வரும் பொழுது பார்த்துக் கொள்ளலாம் என்று கஷ்டத்தைப் பார்க்காமல் சாப்பிட்டேன். அருகில் எழுத்தாளர் சங்கர் நாராயணன் அமர்ந்திருந்தார். தூரத்தில் லக்கிலுக், அதிஷா, ஷங்கர் மற்றும் வெங்கட்ரமணன் ஆகியோர் நிம்மதியாக சாப்பிட்டுக் கொண்டே பேசிக் கொண்டிருந்தார்கள்.


வெங்கட் ரமணனை முதன்முறையாகப் பார்ப்பதால் அவரைப் பற்றி விசாரித்தேன். கோவைக்காரர் என்றார். பல வருட சென்னை வாசம். பல படைப்பாளிகளின் விவரங்களை மனுஷன் விரல் நுனியில் வைத்திருக்கிறார். என்னுடைய அக்கா ஜெயாவுடன் வேலை செய்வதாகக் கூறினார். அவருடன் பேசிக்கொண்டே விழா நடக்கவிருக்கும் அரங்கின் முன் வரிசையில் சென்று அமர்ந்து கொண்டேன்.

பத்ரி கண்ணில் பட்டார். அவரிடம் சென்று "பாரா-வருவாரா?" என்று கேட்டேன்.


"இதுவரைக்கும் வரலை... வந்தால் தான் வருவார்."

"இல்லைங்க பத்ரி, அவருக்கு ஒரு வேலை செய்து கொடுக்கறதா சொல்லி சொதப்பிட்டு இருக்கேன்..."

"எங்க கொன்னுடப் போறாரோன்னு பயப்படுரின்களா!" -ன்னு சிரிச்சாரு.


அதற்குள் விழா ஆரம்பிக்கவும் என்னுடைய இடத்தில் சென்று அமர்ந்துகொண்டேன்.

எல்லாம் இன்பமயம். புவிமேல் இயற்கையினாலே - என்ற அருமையான பாடலுடன் நிகழ்ச்சியைத் தொடங்கினார்கள்.

[கருப்பு வெள்ளைப் படம் பிடிக்காதவர்கள் அதே பாடலை நித்யஸ்ரீயின் குரலில் கேட்க இங்கே சொடுக்கவும்... ]

சாரி புத்தகத்த்தின் முதல் பிரதியை வெளியிட நடிகர் சிவக்குமார் பெற்றுக்கொண்டார். அதைத் தொடர்ந்து நடிகர் சிவக்குமாரைப் பேச அழைத்தார்கள். இபா-வின் ‘உச்சி வெயில்’ என்ற கதையை மூலமாகக் கொண்டு இயக்குனர் சேது மாதவனால் ‘மறுபக்கம்’ என்ற பெயரில் படமாக்கப்பட்ட போது அதில் நாயகனாக நடித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். அதே நேரத்தில் குமுதம் இதழின் சிறப்பாசிரியராக இருந்தபொழுது, இந்தப் படத்தின் புகைப்படத்தை முகப்பில் பயன்படுத்தியதை ஞாபகப்படுத்திக் கூறினார். இதழின் ஒரு பிரதியையும் கையுடன் கொண்டுவந்து காண்பித்தார். மேலும் கம்பராமாயணம் பற்றிப் பேசி, தனது கம்பராமாயணச் சொற்பொழிவுகளை இ.பா மிகவும் ரசித்ததைச் சுட்டிக்காட்டி தனது பேச்சை முடித்துக்கொண்டார். மகாத்மா காந்தியின் ஓவியத்தை இபாவிற்கு நினைவுப் பரிசாக வழங்கினார்.

அடுத்ததாக 'திருப்பூர் கிருஷ்ணன் (பதி பஷி பாசம்), சுஜாதா விஜயராகவன் (நாயகன்), குடந்தை கீதப்பிரியன் (குருதட்சனை), ராமசாமி சுதர்சன் (அஸ்வத்தாமன்) ஆகியோர் இ.பா எழுதியிருந்த கதைகளை முறையே தேர்ந்தெடுத்துச் சொன்னார்கள். இதில் 'திருப்பூர் கிருஷ்ணன்' எல்லோரையும் தூக்கி சாப்பிட்டுவிட்டார். அவர் தேர்ந்தெடுத்துக் கொண்ட கதையும், குரல் ஏற்ற இறக்கங்களும், குறைந்த நேரமே இருப்பினும் சுற்றி வளைக்காமல் கதை சொல்லிய விதமும் அருமையிலும் அருமை.

கதைசொல்லிகள் தங்களுடைய பங்களிப்பை முடித்ததும் இந்திரா பார்த்தசாரதி பேச வந்தார். ரத்ன சுருக்கமாக பேசினார். இந்திரா பார்த்தசாரதியின் சிறுகதைகளின் மொத்தத் தொகுப்பு என்று பத்ரி சொல்லியிருக்கிறார். இனிமேல் கதை எழுதப்போவதில்லை என்றெல்லாம் அவரிடம் நான் சொல்லவே இல்லை. இனிமேலும் எழுதுவேன், அந்தத் தொகுப்பும் வெளிவரும். உங்களைத் தொல்லைப் படுத்தாமல் விடமாட்டேன். உச்சி வெயில் கதையை திரைப்படமாக்கிய சேதுமாதவனின் மகன் சந்தோஷ் 'நாயகன்' என்ற சிறுகதையை குறும்படமாக்கி தேசிய விருது பெற்றதை சுட்டிக் காட்டினார். முதல் புத்தக வெளியீடு 42 வருடங்களுக்கு முன்பு நடந்தது. தி.ஜா வெளியட நா.பார்த்தசாரதி பெற்றுக் கொண்டார். அதன் பிறகு நடக்கும் என்னுடைய இரண்டாவது புத்தக வெளியீடு இதுதான் என்று கூறினார். பிறகு இந்த புத்தகம் வெளிவரக் காரணாமாக இருந்த அனைவருக்கும் நன்றி கூறிக்கொண்டார்.

விழாவின் இறுதியில் 600/- ரூபாய் பெருமானமுள்ள புத்தகத்தை சலுகை விலையில் 150/- ரூபாய்க்குக் கொடுத்தார்கள். வந்திருந்த அனைவரும் முண்டியடித்துக் கொண்டு வாங்கினோம். புத்தகத்துடன் வரிசையில் நின்ற அனைவருக்கும் இந்திரா பார்த்தசாரதி பொறுமையாக கையெழுத்திட்டுக் கொடுத்தார்.

டேக் மையத்தைவிட்டு வெளியில் வந்தேன். எழுத்தாளர் திலீப்குமார் நின்றுகொண்டிருந்தார். அறிமுகப்படுத்திக்கொண்டு "உங்களுடைய முழுத்தொகுப்பு எப்பொழுது வெளிவரும்?" என்று கேட்டேன். "இந்தப் புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும்..." என்றார்.

மழை காலத்திற்கான வெல்லக் கட்டிகளை எறும்புகள் சுமந்துகொண்டு போவதுபோல, இபாவின் சிறுகதைத் தொகுப்புகளைச் சுமந்துகொண்டு வாசகர்கள் சாரை சாரையாக சென்று கொண்டிருந்தனர். வெளியில் லேசான தூறல் விழுந்துகொண்டிருந்தது. எந்தக் கவலையும் இல்லாமல் சூழ்நிலையை அனுபவிக்கத் தொடங்கினேன்.

இந்தப் புத்தகம் சலுகை விலையில் கிடைக்கிறது. அதுவம் இந்த ஒரு வாரத்திற்கு மட்டுமே. தேவைப் படுகிறவர்கள் கீழுள்ள சுட்டியை அழுத்தவும்.

இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் ‘ஸ்பெஷல் ஆஃபர்’

இதே நிகழ்வைப் பற்றிய பதிவுகள்:

1. பத்ரி - இந்திரா பார்த்தசாரதி சிறுகதை வெளியீடு நிகழ்ச்சி

2. ஹரன் பிரசன்னா - இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் வெளியீட்டு விழா - சிறுகுறிப்பு

3. அதிஷா - டிகிரி காப்பியுடன் ஒரு வாசிப்பனுபவம்!

பின் குறிப்பு:

1. டைம் டு கம், டைம் டு கோ - என்ற ரீதியில் விழாவை ஏற்பாடு செய்திருந்தது அருமை. பாராட்டப் படவேண்டிய ஒன்று.
2. ஒவ்வொரு மாதமும் ஏதாவதொரு ஞாயிற்றுக் கிழமை (எந்த வாரமும் இருக்கலாம்) டேக் மையத்தில் இதே போல விழாக்கள் நடக்கிறது. அவையனைத்தும் கலை மற்றும் படைப்புகளுடன் சமந்தப்பட்டது. நிழைவு இலவசம். காலை உணவும் வழங்குகிறார்கள். ஆனால் ஒன்று சரியான நேரத்தில் செல்லவேண்டும்.