Monday, February 15, 2010

கேணி சந்திப்பு - ஜெயமோகன்

புத்தக வெளியீட்டிற்காக திருப்பூரிலிருந்து முரளியும், வெயிலானும் வந்திருந்ததால் அவர்களைச் சந்திக்க ஒரு மணி நேரம் முன்பாகவே கேணிக்குச் சென்றிருந்தேன். கேணியின் அருகில் ஞானியின் நாடக நண்பர்கள் கூட்டுவதும் பெருக்குவதுமாக இருந்தார்கள். ஜன்னலின் வழியாக உள்ளே பார்த்தேன். பரவலாக அடுக்கப்பட்ட புத்தக அட்டைகளின் வண்ணங்கள் தெறித்தன. ஓர் ஓரத்தில் ஜெயமோகன் சாய்வு நாற்காலியில் ஆடிக்கொண்டிருந்தார். உள்ளே சென்று புத்தகங்களைக் கையிலெடுத்துப் புரட்டிக்கெண்டே ஓரக்கண்ணால் ஜெயமோகனைப் பார்த்தேன். கண்களை மூடிக்கொண்டு நாற்காலியில் முன்னும் பின்னும் ஆடிக்கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் தூக்கம் வரவும் உள்ளே சென்று வசதியாகப் படுத்துக்கொண்டார். நானும் வெளியில் சென்று ஓரமாக அமர்ந்துகொண்டேன்.

நாடக நடிகர் பாரதி மணி, எழுத்தாளர் திலீப்குமார், பிரசன்னா என்று பலரும் வந்திருந்தார்கள். ஜெயமோகனும் ஞானியும் சரியான நேரத்தில் வந்து கூட்டத்தைத் தொடங்கினார்கள். சிறுகதை, நாவல், புனைவு என்று இலக்கியம் சார்ந்து ஜெயமோகன் பேசுவார் என்று எதிர்பார்த்தேன். 'நம்மால் ஏன் விவாதிக்க முடிவதில்லை?' என்ற தலைப்பில் ஜெயமோகன் பேச இருப்பதாக ஞாநி அறிவித்தார். அதைத் தொடர்ந்து நேரடியாக ஜெயமோகன் உரையாடத் தொடங்கினார்.

பதினைந்து நிமிடங்களுக்கு முன்புதான் இந்த தலைப்பைப் பற்றி பேசலாம் என்று முடிவுசெய்தேன். நான் எழுத்தத் தொடங்கி ஏறக்குறைய இருபது வருடங்கள் ஆகிறது. ஆரம்ப நாட்களில் ஆர்வமுடன் பழகிய பலரும் வந்திருக்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக பழகிய நண்பர்களும் ஆர்வமுடன் வந்திருக்கிறார்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது.

விவாதம் என்பது படைப்பாளியை முன்னகர்த்தக் கூடிய முக்கியமான விஷயம். தமிழ் சூழலில் விவாதங்கள் சரியான முறையில் நடக்கிறதா என்றால், திருப்திகரமாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். தற்போதைய சூழலிலும் சரி, இதற்கு முன்பிருந்த வெங்கட் சுவாமிநாதன்-பிரமிள் சூழலிலும் சரி, அதற்கு முன்பும் சரி விவாதங்கள் சரியாக நடக்கவில்லை. விவாதம் என்ற பெயரில் தனிமனிதத் தாக்குதல்கள் தான் அதிகமாக நடந்திருக்கிறது.

மலையாள இலக்கியத்தில் இருப்பது போன்ற விமர்சனங்களின் மீதான மிதமான சூழல் இங்கு இல்லை. பாலச்சந்திரன் சுள்ளிக்காடை - கடந்த இருபது ஆண்டுகளாக கடுமையாக விமர்சிக்கிறேன். ஆனாலும் அவருடைய இளைய சகோதரனாகத் தான் என்னைப் பாவிக்கிறார். ஒரு முறை இந்தியா டுடே-ல் பாலச்சந்திரன் சுள்ளிக்காடை அடக்கம் செய்தால் தான் மலையாள நவீனக் கவிதை பிழைக்கும் என்று எழுதியிருந்தேன். சுள்ளிக்காடான் எனக்கு ஃபோன் செய்து "மோகன், நான் நாகர்கோவில் வரலாம் என்றிருந்தேன். நீ அடக்கம் செய்திடுவியோன்னு பயமா இருந்தது. அதனால ட்ரிப் கேன்சல் பண்ணிட்டேன்"னு சொன்னாரு.

அதே மாதிரி ஷாஜி எழுதிய இளைய ராஜா பற்றிய கட்டுரையை மொழி பெயர்த்திருந்தேன். அதைப் பற்றிய விமர்சனக் கட்டுரையையும் நானே எழுதியிருந்தேன்.ஷாஜிக்கு ஃபோன் செய்து ஜெயமோகனை விடக் கூடாதுன்னு சிலர் சொன்னார்களாம். என்னுடைய பக்கம் சில பேரு இருக்காங்க. ஷாஜியை விடக் கூடாதுன்னு சொல்றாங்க. விவாதம் இளையராஜாவின் பங்களிப்பைப் பற்றியது. அது சமந்தமாக யாருமே பேசவில்லை.

இளைய ராஜாவின் ரீ-ரெகார்டிங் பங்களிப்பு மகத்தானது. அதை யாராலும் மறுக்க முடியாது. 'சரத்பாபு Below Emotion நடிகர்' என்று இயக்குனர் பாலுமகேந்திராவுடன் பேசிக்கொண்டிருக்கும் போது சொன்னார். அவர் தலையைத் தொங்கப் போட்டால் இளைய ராஜாவின் வயலின் தான் சோகமா இருக்காருன்னு சொல்லும். சினிமா என்பது கூட்டு முயற்சி, unit work. இளையராஜாவிற்கு முன்பு படப்பிடிப்பு பெரும்பாலும் உள்-அரங்கிலேயே நடக்கும். அவருடைய காலத்தில் வெளிப்புற படப்பிடிப்பு எளிமையானது. அந்தத் தொழில் நுட்பமும் இளையராஜாவின் இசைக்கு வலு சேர்த்திருக்கலாம் இல்லையா?. இதை ஒருவர் கூட சொல்லவில்லை. ஒரு நிலையில் நானே எனக்கு இந்த Point-ஐ பின்னூட்டம் அளித்துக் கொள்ளலாமா என்று நினைத்தேன்.

விவாதம் செய்ய சில புரிதல்கள் தேவை.
ஒரு படைப்பாளியின் Frame of reference என்ன என்பதைப் புரிந்துகொண்டு அதற்குள் விவாதிக்க வேண்டும். அதற்கு வெளியிலுள்ள விஷயங்களை விவாதிக்கக் கூடாது. உதாரணமாக, சிவராமனின் (பைத்தியக்காரன்) பதிவை விவாதிக்கும் போது பதிவிற்கு பின்னூட்டம் அளித்தவரின் பதிவினை விவாதிக்கக் கூடாது. நிறைய பேர் அப்படித்தான் செய்கிறார்கள். ஒரு படைப்பின் எல்லைகள் எந்த Frame of reference-ல் இருக்கிறதோ, அவற்றிலுள்ள விஷயங்களை விவாதிப்பது ஆரோக்கியமானது. அதில் சொல்லப்படாத விஷயங்களை 'ஏன் சொல்லவில்லை?' என்று விவாதிப்பதில்அர்த்தம் இல்லை.

விவாதங்களில் மிகச்சிறந்த விவாதத்திற்கு பதில் சொல்ல வேண்டும். அப்பொழுதுதான் நம்மை நாம் செழுமைப் படுத்திக்கொள்ள முடியும். மேலை நாடுகளில் பள்ளி நாட்களிலேயே விவாதங்களைத் தொடங்குகிறார்கள். அதனால் தான் அவர்கள் பள்ளி முடித்து வெளிவரும் போது தன்னம்பிக்கையுடன் வெளிவருகிறார்கள். நம்முடைய பிள்ளைகளுக்கு கோனார் உரைக்கு அடுத்து எதுவும் தெரிவதில்லை. சமீபத்தில் என்னுடைய நண்பர் கல்லூரிகளில் வகுப்பெடுத்தார். அதைப்பற்றிய எதிர்வினையை எல்லோரையும் எழுதச்சொல்லி இருக்கிறார். மாணவர்களின் கருத்துக்களைப் படிக்குமாறு என்னை கேட்டுக்கொண்டார். படித்து அதிர்ந்துவிட்டேன். முப்பது பேரில் ஒருவர் தான் ஓரளவிற்குப் பரவாயில்லை என்று எழுதியிருக்கிறார்கள்.

மேலை நாடுகளில் காலம் கடந்து நிற்கும் ஆக்கங்களை மேற்கோள் காட்டுகிறார்கள். நம்மில் யாராவது 'ஆதி சங்கரின்' வரிகளை மேற்கோள் காட்டுகிறோமா?... 16-ஆம் நூற்றாண்டு வரை நம்மிடமும் செழுமையான விவாதங்கள் நடந்துள்ளது. உபநிஷத்துகள் கூட விவாத நடையில் தான் இருக்கிறது. விவாதத்தில் இரண்டு முறைகள் இருக்கிறது...

1. சந்தஸ் -
கொள்கையை முன்பே வகுத்துக் கொண்டு விவாதிப்பது.
2.
நியாயம் - ஒரு விஷயம் சரியான முறையில் பொய்ப்பிக்கப்பட்டு நியாயத்தை நிலைநாட்டுவது.

மேலைச் சிந்தனை, வேத சித்தாந்தங்கள் போன்ற Professional விவாதங்களில் நான் கலந்து கொள்வதுண்டு. ஆரம்பித்த பத்து நிமிடங்களில் விவாதம் சூடுபிடித்துவிடும். ஒவ்வொருவரும் அவர்களுக்கான நிலையிலுள்ள தன்மையான கருத்திக்களை முன்வைப்பார்கள். அதுபோன்ற விவாதங்களின் மூலம் தான் நம்மைக் கண்டடைய முடியும். அடுத்த கட்டத்திற்கு நம்மை நகர்த்த முடியும்.

சரியான அர்த்தத்தில் ஒரு விஷயம் மறுக்கப்படும் பொழுதுதான் அடுத்த கட்டத்திற்கு நம்மை எடுத்துக் கொண்டு செல்ல முடியும். இல்லையெனில் தேங்கிவிடுவோம்.
ஆகவே ஆரோக்கியமான விவாதங்களை மேற்கொள்வது அவசியம் என்று தனது உரையை நிறைவு செய்தார்.

கேள்வி நேரத்தின்போது பல நண்பர்களும் ஆர்வமுடன் கேள்வி கேட்டார்கள். சிலர் 'உங்களைக் காயப்படுத்துவதற்காக இந்தக் கேள்வியைக் கேட்கவில்லை. வாசகன் என்ற முறையில் கேட்கிறேன்' என்று தயங்கித் தயங்கி கேள்வி கேட்டார்கள். 'நீங்க அப்படி நினைக்கவே வேண்டாம். நான் மன வருத்தமே அடையமாட்டேன். தாராளமா கேளுங்க' என்று தட்டிக் கொடுத்து கேள்விகளை எதிர்கொண்டார். அதைப்பற்றி டோண்டு ராகவன் வலைப்பூவில் படிக்கக் கிடைக்கிறது.

கேணி சந்திப்பு - 14.02.2010

நிகழ்ச்சி முடிந்து ஞானி பேசும்போது 'ஜெயமோகன் புத்தகங்கள் விற்பனைக்கு இருப்பதாகவும் 10 சதவீத விற்பனைக் கழிவு உண்டு' என்றும் அறிவித்தார். கேணிக்கு வந்துவிட்டு எழுத்தாள நண்பரிடம் பேசாமலோ, கேள்வி கேட்காமலோ போனால் எப்படின்னு ரெண்டு புத்தகங்களை வாங்கிக்கொண்டு ஜெயமோகனிடம் சென்றேன்.

உங்களுடைய பெயர் என்ன?- ன்னு அவர் முந்திக்கொண்டார்.

கிருஷ்ண பிரபு... (புத்தகத்தில் என்னுடைய பெயரெழுதி அவருடைய கையொப்பத்தை இட்டுக்கொண்டிருந்தார்.)

"ஜெயமோகன்" என்றேன்.

"ம்...!?" என்று திரும்பிப் பார்த்தார்.

உங்களுடைய படைப்புகளிலேயே உங்களுக்கு பிடித்த படைப்பு எது?

புனைவா?... புனைவல்லாத புத்தகமா?...

எதாச்சும் மனசில் பட்டதை சொல்லுங்க...

"கொற்றவை" என்றார்.

என்னிடம் அந்தப் புத்தகமில்லை. ஆகவே இவ்வளவு நேரம் பேசியதில் ஓர் அர்த்தம் இருக்கிறது என்ற திருப்தியுடன் கேணியிலிருந்து திரும்பினேன்.


பின் குறிப்பு:
1. என்னுடைய ஞாபகத்தில் இருப்பதை மட்டுமே எழுதி இருக்கிறேன்.
2.
கேணி சந்திப்பை வீடியோ எடுத்தார்கள். அதை வாங்க ஞானியிடம் கேட்டுப்பார்க்கலாம்.
3.
பிக்காசாவில் கேணி புகைப்படங்களைக் காண அழுத்தவும்.


Monday, February 8, 2010

லைப் ஸ்கில்ஸ் - புத்தக வெளியீடு

கேணியில் இதுவரை இலக்கிய சந்திப்புகள் மட்டுமே நடந்து கொண்டிருக்கிறது. முதன் முறையாக சென்ற வாரம் ஞாநி மற்றும் ஏ.எஸ்.பத்மாவதி அவர்களால் எழுதப்பட்ட லைப் ஸ்கில்ஸ்’ புத்தகம் வெளியிடப்பட்டது. குழந்தைப் பருவம் முதல் வயோதிகப் பருவம் வரை பல்வேறு துறையிலுள்ள அனைவருக்கும் பயன்படக் கூடிய வாழ்க்கை வழிகாட்டி நூல் இது என்பது குறிப்பிடப்பட வேண்டியது.

'சுய முன்னேற்றம், வாழும் கலை' போன்ற விஷயங்களில் பிடிப்பிருந்தாலும், புத்தகங்களாக வாங்கிப் படிப்பது குறைவு தான். ஆகவே 'என் வாழ்க்கை என் கையில்' - புத்தக வெளியீட்டிற்குப் போகலாமா? வேண்டாமா? என்ற இரண்டு மனநிலைகளில் இருந்தேன். சென்று பார்ப்போம் பிடிக்கவில்லையெனில் திரும்பிவிடலாம் என்று தான் கேணிக்குச் சென்றிருந்தேன்.

டாக்டர் வசந்தி தேவி, ஸ்ரீராம், ராஜீவ்காந்தி யூத் ஃபவுண்டேஷன் உயர் அதிகாரி, நாசர், Life skills trainer ஒருவர் ஆகியோரை சிறப்பு விருந்தினர்களாக அழைத்திருந்தார்கள். அவர்களைப் பற்றிய அறிமுக உரையுடன் நிகழ்ச்சியைத் தொடங்கினார்கள். அதைத் தொடர்ந்து பத்மாவதி Life Skills பற்றி உரையாற்றினார்.

1. நான் யார் என்று உணர்
2. தன்னைப் போல் பிறரை நினை
3. உறவாட கற்றுக்கொள்
4. உரையாட கற்றுக்கொள்
5. எதையும் கேள்வி கேள்
6. எதற்கும் பதில் கண்டுபிடி
7. தெளிவான முடிவெடு
8. சிக்கல்களை அவிழ்
9. உணர்ச்சிகளை உணர்ந்துகொள்
10. அழுத்தங்களை லேசாக்கு

ஆரம்பத்தில் இந்தப் பத்து கட்டளைகளை பாலியல் தொழிளார்களுக்கு வகுப்பெடுக்கப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அனால் இதையே குழந்தைக் குற்றவாளிகள், மன அழுத்தத்திலிருக்கும் பள்ளி சிறுவர்கள், இன்னும் சொல்லப் போனால் அனைத்து துறையினரும் பயன்படுத்தலாம் என்று கூறினார். தமிழ்நாடு AIDS கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் ராஜீவ் காந்தி ஃபவுண்டேஷன் போன்ற அமைப்புகளில் பயிற்சியாளராக தனக்குக் கிடைத்த அனுபவங்களை சுவாரஸ்யமாகப் பகிர்ந்துகொண்டார்.

ஒருசில நிறுவனங்கள் இவர்களை அழைத்து ஒரு நாளில் வகுப்பெடுத்து முடிக்கச் சொல்வார்களாம்.
பயிற்சியின் முழுப்பலன் கிடைக்க வேண்டுமெனில் குறைந்தது ஒரு வாரமாவது வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பயிர்ச்சியாளர்கள் செல்வார்கள். ஒரே நாளில் எடுக்கும் பொழுது பல பயிற்சிகள் விடுபட்டுவிடும். சரியான கால அவகாசத்தில் இந்தப் பயிற்ச்சியை தொடர்ந்து மேற்கொண்டு வரும் பொழுது நல்ல முன்னேற்றம் இருக்கும். முக்கியமாக ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் இந்தப் பயிற்சி நல்ல பலனை அளிக்கும் என்று தனது உரையை நிறைவு செய்தார். அதனைத் தொடர்ந்து புத்தக வெளியீடு நடைபெற்றது.

முதல் பிரதியை சிறப்பு விருந்தினர்களுக்குக் கொடுத்தார்கள். அதன் பிறகு ஞானியின் சகோதரிகள் இருவருக்கும், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நண்பர் ஒருவருக்கும், கேணி வீட்டின் உரிமையாளர் திரு: புருஷோத்தமன் அவர்களுக்கும்
பிரதியை வழங்கினார்கள். புருஷோத்தமன் புத்தகத்தை பெற்றுக்கொள்ள வரும் பொழுது பலத்த கரகோஷம் வானைப் பிளந்தது. அண்ணார்ந்து பார்த்தேன். கேணியின் மாடியிலிருந்து வயதான பெண்மணி சந்தோஷமான முகத்துடன் புருஷோத்தமனையே பார்த்துக் கொண்டிருந்தார்.

புத்தக வெளியீட்டைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் உரையாற்றினார்கள். கடைசியாக, பள்ளிச் சிறுமியின் infatuation சமந்தமான பிரச்னை ஒன்றையும் லைஃப் ஸ்கில்ஸையும் இணைத்து ஞாநி இயக்கி, நாசர் மற்றும் துணை நடிகர்கள் நடித்த 'ஆனந்தி' என்ற குறும்படத்தைத் திரையிட்டார்கள். புத்தகத்தினைத் தழுவி எடுக்கப்பட்ட குறும்படம் என்பதால் அனைவரும் இருந்து பார்த்தனர். படம் முடியும் பொழுது மணி 7.30 PM. ஆகவே யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் புத்தகத்தின் இரண்டு பிரதிகளை வாங்கிக்கொண்டு கிளம்பினேன்.

இதே புத்தக வெளியீட்டைப் பற்றி நண்பர் ரவிபிரகாஷ் எழுதிய பதிவினைப் படிக்க கீழே அழுத்தவும்:


Tuesday, February 2, 2010

வம்சி - புத்தக வெளியீடு

ஞானியுடன் சேர்ந்து கேணி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து, இலக்கிய ஆளுமைகளுடன் உரையாட வழி வகுத்தவர் என்ற முறையில் பாஸ்கர் சக்தியின் மேல் எனக்கு தனி ஈடுபாடு உண்டு. அவருடைய புத்தக வெளியீடு 'Book Point, Chennai'-ல் நடக்கவிருக்கும் தகவல் அறிந்து சந்தோஷப்பட்டேன். புத்தக வெளியீட்டிற்கு முந்தின தினம் இடம் மாற்றப்பட்டு கீழ்ப்பாக்கத்தில் உள்ள தீபிகா சென்டரில் இனிதே நடந்து முடிந்தது.

கேணி சந்திப்புக்கு முதன் முறையாக செல்லும் வரை பாஸ்கர் சக்தி எழுத்தாளர் என்பதே எனக்குத் தெரியாது. அதன் பிறகுதான் அவருடைய தொகுப்புகளை தேடித்தேடி வாங்கினேன்.

பழுப்பு நிற புகைப்படம் புத்தகத்தின் முன்னுரையில் வரும் சக்தியின் வார்த்தைகள்:

"...எல்லாவற்றையும் வடிகட்டி நகர்கிறது காலம். உரித்துப் போட்ட பாம்புச் சாட்டைகளாய் முன்னே எனது கதைகள்..." - எதோ ஒரு விஷயத்தை உணர்த்திவிட்டு காலம் சுவடில்லாமல் நகரும் பொழுது, சம்பவங்களைக் கோர்வையாக்கி சுவாரஸ்யமான கதைகளாக பாஸ்கர் நமக்குத் தருகிறார்.

'அழகர்சாமியின் குதிரை (வம்சி பதிப்பகம்), பழுப்பு நிற புகைப்படம் (தமிழினி பதிப்பகம்)' ஆகிய இரண்டு தொகுதிகளும் என்வசம் இருக்கின்றன. ஒன்றையும் முழுமையாகப் படித்ததில்லை. இந்தத் தொகுதிகள் தற்பொழுது கிடைக்கிறதா என்றும் தெரியவில்லை. இரண்டு விடுபட்ட சமீபத்திய படைப்புகளையும் கனக துர்காவில் சேர்த்து

விழா துவங்குவதற்கு முன்பே தீபிகா சென்டருக்கு சென்றுவிட்டேன். போகும் வழியில் கேணி நண்பர்கள் பிரபுவும், லிவிங் சன்னும் இணைந்து கொண்டார்கள். செல்லத்துரை, பாஸ்கர் ஷக்தி, க சீ சிவக்குமார்... இன்னும் பலரும் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்வதில் மும்முரமாக இருந்தார்கள்.

கே.வி.ஷைலஜாவின் வரவேற்புரையுடன் நிகழ்ச்சி இனிதே துவங்கியது. திருவண்ணாமலைக்கு வெளியே நடக்கும் வம்சியின் முதல் நிகழ்ச்சி என்பதாலும், தவிர்க்க முடியாத காரணங்களால் கடைசி நேரத்தில் இடம் மாற்றப்பட்டதையும் பொருட்படுத்தாமல் ஆர்வமுடன் வந்திருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார்.

பத்திரிகையாளர் ஞாநி, கவிஞர் யுகபாரதி, இயக்குனர் மகேந்திரன் மற்றும் சிம்பு தேவன் ஆகியோர் முதல் அமர்வில் பாஸ்கர் சக்தியின் கனகதுர்காவை வெளியிட்டு பேசினார்கள்.

இயக்குனர் சிம்பு தேவன்:

பத்திரிகைத் துறையில் வேலை செய்த நாட்களிலிருந்தே பாஸ்கர் சக்தியை எனக்குத் தெரியும். அவருடைய கதைகள் பலவற்றையும் விரும்பிப் படித்திருக்கிறேன். பழுப்பு நிறப் புகைப்படம், தக்ளி, கனக துர்கா இன்னும் சில கதைகளைப் பற்றி விரிவாகப் பேசினார். அவருடைய எழுத்தில் இருக்கும் நகைச்சுவை பிரதானமான ஒன்று. அவருடைய பாத்திரப் படைப்புகள் எல்லாம் சுவாரஸ்யம் நிறைந்தவை. ஒரு கார்டூனிஸ்டாக பார்க்கும் பொழுது அதில் நிறைய விஷயங்கள் இருக்கும். கதாப்பாத்திரங்கள் ஒவ்வொன்றையும் நுணுக்கமாக கவனித்து செய்திருப்பார். என்னைப் பொறுத்தவரை பாஸ்கர் சக்தி கார்டூனிஸ்டாக வந்திருந்தால், அவருடைய நுட்பமான கவனிப்புக்கு மிகப் பெரிய உட்சத்தைத் தொட்டிருப்பார். அவருடைய கதை ஒன்றை திரைப்படமாக எடுக்கும் ஆசை இருக்கிறது என்று பேசிமுடித்தார்.

கவிஞர் யுகபாரதி:

எனக்கு நடை போகும் பழக்கம் இருக்கிறது. அப்படி ஒருநாள் சென்றுகொண்டிருந்த பொழுது ஒருவர் என்னைப் பார்த்து சிரித்தார். "என்னைப் பார்த்து யார் சிரிக்கப் போகிறார்கள்?" என்று பின்னால் திரும்பிப் பார்த்தேன். எனக்கு பின்னால் யாரும் இல்லை. அவர் என்னைப் பார்த்து தினமும் சிரித்துக் கொண்டே இருந்தார். இப்படியே நடந்து கொண்டிருந்தது. அதன் பிறகு அவரைப் பார்க்க முடியாமல் போனது. ஒருநாள் ஆனந்த விகடனில் ஒரு கதை பிரசுரமாகியிருந்தது. அடடே... நல்ல கதையாக இருக்கிறதே என்று விகடனில் பணிபுரியும் நண்பருக்கு தொலை பேசியிருந்தேன்.

நமக்குத் தெரிஞ்சவருதான். நல்லா எழுதுவாரு அவரோட நம்பர் கொடுக்கட்டுமான்னு கேட்டாரு.
சரின்னு வாங்கி உங்களுடைய கதை நன்றாக இருக்கிறதென்று....பேசிக்கொண்டிருந்தேன். பிறகு அவரைப் பற்றி விசாரித்தேன்.

"உங்களை எனக்குத் தெரியும், தினந்தோறும் பார்த்து சிரிப்பேனே" என்றார்.

அது வேறு யாருமில்லை பாஸ்கர் சக்திதான்.
இப்படி ஆரம்பித்ததுதான் எங்களுடைய நட்பு என்று அவருடைய சிறுகதைகளைப் பற்றி பேசினார்.

பவா புத்தக வெளியீடு என்று அழைத்ததும் நான் ஒரு கேள்வி கேட்டேன். பவா நீங்கள் மாத இதழைத் தொடங்க வேண்டி இருக்குமே என்று. இப்பொழுதெல்லாம் ஒரு பதிப்பகத்தின் மாத இதழில் அடுத்த பதிப்பகத்தின் புத்தகத்தை, நல்ல புத்தகமாகவே இருந்தாலும் கடுமையாக விமர்சனம் செய்வது தானே கலாச்சாரம் என்று நகைச்சுவைகாச் சொன்னார்.

சுப்ரமணிய ராஜு சிறுகதைகள் மீது
எனக்கு விருப்பம் அதிகம். அதன் பிறகு என்னைக் கவர்ந்தது பாஸ்கர் சக்தி தான்... இன்னும் சில சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டு அவரது உரையை முடித்தார்.

பத்திரிகையாளர் ஞாநி:

ஞாநி பேச வந்ததும் நீண்ட மைக்கை சிலம்பம் போல கையில் எடுத்துக் கொண்டார். பாஸ்கர் சக்தியின் மண்டையில் ஓங்கி ஒரு போடு போடப் போறாருன்னு நெனைச்சேன். மக்கள் இந்தப் பக்கம் இருக்கும் போது, மைக் பொசிஷன் அதற்கு ஏற்றார் போல இருக்க வேண்டும் என்று சரி செய்தார்.

எந்த வேலையை எடுத்துக் கொண்டாலும் இது என்னுடைய வேலை இல்லை என்று புறக்கணிக்கிறோம். எல்லாவற்றையும் தனித் தனியாகப் பிரித்து Specialist Specialist என்கிறோம். holistic View - யாருக்குமே இல்லை. இந்த இடத்தில் மட்டுமில்லை இந்தக் குறை. எல்லாத் துறைகளிலும் இருக்கிறது. இந்த அபாயகரமான சூழ்நிலை மாற வேண்டும் என்று எல்லா மேடைகளிலும் நான் வற்புறுத்துகிறேன்.

இளைஞர்கள்
சமுதாயத்தின் மீதும் பார்வையை செலுத்த வேண்டும். பாஸ்கர் சக்தியின் எழுத்து எதோ ஒரு வகையில் சமூகத்தின் குரலை அங்கதமாகக் கொண்டுள்ளன என்பதில் எனக்கு சந்தோஷமே. பத்து வருடங்களாக பாஸ்கர் சக்தி எனக்கு பழக்கம். இன்று குடும்ப உறுப்பினர்களில் ஒருவராகத் தான் என்னால் கருத முடிகிறது. "உன்னைப் பார்க்கும் பொழுது சிறுவயதில் என்னைப் பார்ப்பது போலவே இருக்கிறது" என்று பாஸ்கரிடம் சொல்லி இருக்கிறேன்.

பாஸ்கர் நுழையும் துறைகளிலெல்லாம் வெற்றி பெறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.
அவரிடம் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. தமிழ் நாடு முழுவதும் ரூட் பஸ்களில் பயணம் செய்த அனுபவத்தை எழுதி வைத்துள்ளார். அவற்றையும் புத்தகமாக வெளியிடலாம். எழுத்தாகட்டும், தொலைக் கட்சி சீரியல்களுக்கு வசனம் எழுதுவதிலாகட்டும், திரைப்படமாகட்டும் அவருக்கென ஒரு இடத்தை ஏற்படுத்துக் கொண்டதுமகிழ்ச்சியளிக்கிறது. பாஸ்கரின் நீண்ட நாள் ஆசை ஒன்று இருக்கிறது. அதை இங்கு போட்டு உடைக்கலாம் என்றிருக்கிறேன். திரைப்படம் இயக்க வேண்டும் என்பது அவரது நீண்ட கால விருப்பம். அதற்கான முயற்சிகளையும் அவர் செய்துகொண்டிருக்கிறார். அதிலும் அவர் வெற்றி பெறுவார் என்று உரையை நிறைவு செய்தார்.

இயக்குனர் மகேந்திரன்:

பத்து வருடங்களுக்கு முன்பு விகடனில் என்னுடைய பேட்டியைக் கேட்டிருந்தார்கள். சூட்டிங் வேலைகளுக்கு இடையில் ஒருநாள் காலையில் வரச்சொல்லி இருந்தேன். பாஸ்கர் சக்தி தான் நிருபராக வந்திருந்தார். அதுதான் எங்களுடைய முதல் சந்திப்பு. என்னால் முடிந்த அளவு அவருக்கு பதில் சொன்னேன். எனக்குத் திருப்தி இல்லாததால் மாலை ஒருமணி நேரம் கொடுக்கறேன்... வந்து முடிச்சிடுங்கன்னு சொல்லி இருந்தேன். அதே போல வந்து தொந்தரவு இல்லாம முடிச்சிட்டாரு. அந்தப் பேட்டி விகடனில் வந்ததும் எனக்கு நிறைய பாராட்டுக் கடிதங்களும் தொலைபேசி அழைப்புகளும் வந்தன. உடனே மகிழ்ச்சியோட விகடனுக்கு பாஸ்கரைப் பாராட்டி ஒரு கடிதம் எழுதினேன்.

சமீபத்தில் அவருடைய சிறுகதைத் தொகுப்பைக் கொடுத்து படிக்கச் சொன்னார். அற்புதமான கதைகள். அவருக்கு ஃபோன் செய்து பேசினேன். திருவண்ணாமலையில் புத்தகப் பணியில் இருப்பதாகக் கூறினார். எல்லாக் கதைகளுமே அவ்வளவு நகைச்சுவை. நான் எல்லா முக்கியமான எழுத்தாளர்களையும் படிப்பேன். ஆனால் சிலருக்கு மட்டுமே ஆஸ்தான இடம் கொடுப்பேன். பாஸ்கர் சக்தியும் அவர்களில் ஒருவர் என்று உரையை நிறைவு செய்தார்.

நன்றியுரை - பாஸ்கர் சக்தி:

என்ன பேசறதுன்னே தெரியல... புத்தக வெளியீட்டிற்கு இவர்கள் நால்வரையும் கூப்பிட்டதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. இவர்கள் அனைவருமே ஆரம்பத்தில் பத்திரிகையில் வேலை செய்தவர்கள்.

"மகேந்திரன் சார் என்னுடைய கதைகளைப் பாராட்டிப் பேசறாருன்னு நினைக்கும் போது சந்தோஷமா இருக்கு. விகடனில் இருக்கும் போது அவர் அனுப்பிய கடிதம் என்னிடம் பத்திரமாக இருக்கிறது. நான் ஒன்னும் பெருசா எழுதிடலை. அவர் சொன்னதைத் தான் எழுதினேன். அவர் உச்சத்தில் இருந்த காலத்தில் சாதாரண நிருபரை மதித்து கடிதம் எழுதியதை நினைக்கும் போது நெகிழ்வாக இருக்கிறது. சிம்பு தேவன் டென்ஷனோட இருக்காரு. அவருக்கு வேறொரு விருது நிகழ்ச்சி இருக்கு. நண்பர்கள் என்னோட சிறுகதைகளைப் பாராட்டி பேசியது மகிழ்ச்சியா இருக்கு" என்று வந்திருந்தவர்களுக்கு நன்றி கூறி உரையை நிறைவு செய்தார்.

அதன் பிறகு மேலும் இரண்டு புத்தகத்தின் வெளியீடுகள் தொடர்ந்து கொண்டிருந்தன. திரும்புவதற்கு மனமில்லாமல் நண்பர்களிடம் விடைபெற்று வெளியில் வந்தேன். எழுத்தாளர் பிரபஞ்சனும், திலீப் குமாரும் பேசிக்கொண்டே என்னைக் கடந்து சென்றனர்.