Monday, August 27, 2012

அடக் கடவுளே...!

சமீபத்தில், அண்ணன் பாலபாரதியை சந்திக்க புதிய தலைமுறை அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன். அலுவலகத்தின் இளம் (ஆண்) ஊழியர்கள் முதலாமாண்டு நிறைவு விழா கொண்டாட்டத் தோரணங்களைக் கட்டிக் கொண்டிருந்தனர். தொலைகாட்சி சேனல் ஆரம்பித்து இதற்குள் ஒரு வருடம் உருண்டோடி இருக்கிறது. சேனலின் வீச்சும் தான் அதற்கேற்ப வேகமாக வளர்ந்திருக்கிறது. அல்லோல கல்லோலப்பட்ட இடத்தின் கண்ணாடிச் சுவரின் ஓரத்தில் அமர்வதற்கு இருக்கை போட்டிருந்தார்கள். அதில் ஒரு வாடிய முகம் தென்பட்டது. கிராமிய முகம் என்பது கூடுதல் சிறப்பு. அவர் மட்டுமே அமர்ந்திருந்தார் என்பதை ஒரு தகவலுக்காக பதிய விரும்புகிறேன்.

அந்த நபரைப் பார்த்து "ஹாய்" என்றேன் குதூகலத்துடன். இதைச் சற்றும் எதிர்பார்க்காதவர் மலங்க மலங்க விழித்தார். "இங்க வேலை செய்யிறிங்களா?" என்றேன்.

"இல்லைங்க சார்... ஒருத்தர பார்க்க வந்தேன்." என்றார்.

"Oh yes.... சார் போட்டுக் கூப்பிடும் அளவிற்கு நான் பெரிய ஆல் இல்லை. என்னோட பேரு கிருஷ்ண பிரபு" என்றேன்.

"என் பேரு பிரபு" என்றார்.

போகட்டும் "யாரைப் பார்க்க வந்திங்க?" என்றேன் மேலும் பேச்சுக் கொடுக்க.

"எதோ ஒரு கட்டுரையைச் சுட்டிக் காட்டி..." அதை எழுதியவரைப் பார்க்க வந்தேன். "அதைப் பற்றிய தகவல்களைத் திரட்ட" என்றார்.

"கூகுளில் தேடி இருக்கலாமே. இவ்வளவு மெனக்கெட்டு வர வேண்டுமா" என்றேன்.

"அதெல்லாம் எனக்குத் தெரியாதே!" என்றார்.

என்னுடைய விசிடிங் கார்டை அவரிடம் கொடுத்துவிட்டு, "மெயில் அனுப்புங்கள். இது தொடர்பாக ஏதேனும் என் கண்ணில் பட்டால் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்" என்று சொல்லி முடிப்பதற்குள் பாலபாரதி வந்து சேர்ந்தார்.

பாலபாரதி குழந்தைகளைப் பற்றி ஆராயக் கூடியவர். ஆர்வமுடன் தகவல்களை சேகரிக்கக் கூடியவர். தன்முனைப்பு குறைபாடுடைய (ஆட்டிசம்) குழந்தைகள் சார்ந்து கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார். என்னுடைய சகோதரி கீர்த்தனா கிருஷ்ணமூர்த்தியும் கடந்த பல வருடங்களாக குழந்தைகள் மன நலம் சார்ந்து இயங்கி வருகிறார். பள்ளி மற்றும் கல்லூரியிலும் - மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மைன்ட் ட்ரைனர்-ஆக இருக்கிறார். பொதிகையில் அது சார்ந்த நிகழ்ச்சியையும் தொடர்ந்து செய்து வருகிறார். கனியமுதனைப் பற்றி பேசிக் கொண்டிருந்ததால் பேச்சு சுழன்று சுழன்று குழந்தைகளைப் பற்றியே சென்று கொண்டிருந்தது. மேலும் விரிவாகப் பேச கீர்த்தனாவுடன் அவரை ஒருநாள் வந்து சந்திப்பதாகக் கூறினேன்.

அண்ணனுடன் குஸ்தி விளையாடிக் கலைத்து, அங்கிருந்து புறப்பட எத்தனித்தேன். ஓவியர் மருது வந்துகொண்டிருந்தார். அவருக்கு எதிரில் சென்று சடுகுடுவில் ஆட்களை மடக்குவதுபோல அரண் அமைத்தேன்.

"வணக்கம் Mr. மருது, ஒரு நிமிடம் உங்களிடம் பேச வேண்டும்" என்றேன்.

"சொல்லுங்க" என்றார்.

"என்னுடைய நண்பர் இந்திய ஓவியங்களைப் பற்றிய, முக்கியமாக தமிழ் ஓவியங்களைப் பற்றிய புத்தகங்களைத் தேடிக் கொண்டிருக்கிறார். உங்களிடம் ஏதாவது பரிந்துரை செய்ய இருக்கிறதா?" என்றேன்.

"அப்படி எதுவும் இருக்க மாதிரி தெரியலை... விட்டல்ராவ் எழுதனது இப்போ கெடைக்கறது இல்ல" என்றார் வருத்தத்துடன்.

இனி பேச எதுவுமில்லை என்பதால், அவரிடமிருந்து விடைபெற்றேன். அங்கிருந்து புறப்படும் நேரத்தில் அந்த நபர் என்னைச் சீண்டினார். பாவப்பட்ட முகத்தை வைத்துக் கொண்டு "உங்களிடம் பேச வேண்டும்" என்றார்.

"சரியாப்போச்சு... உங்களைப் பார்த்தால் ரொம்ப கொழப்பத்துலயும், டெண்ஷன்லயும் இருக்க மாதிரி தெரிஞ்சுது. ஒருவேலை இன்டெர்வியூ-விற்கு வந்திருப்பிங்கலோ-ன்னு நெனச்சி தான் ரிலாக்ஸ் செய்ய பேச்சுக் கொடுத்தேன்... ஆனால், நீங்க கட்டுரையாளரத் தானே பார்க்க வந்திருக்கீங்க. என்கிட்டே பேச என்ன இருக்கு?" என்றேன்.

"நீங்களா தான எங்கிட்ட பேசினிங்க?" என்றார்.

"அட... நான் எந்த ஆபீசுக்கு போனாலும் ரிஷப்ஷனிஸ்ட் கிட்டக்கூட பேச மாட்டேன். இன்டர்வியூ-க்கு வந்திருக்க மாதிரி யாராச்சும் தெரிஞ்சாங்கனா... சும்மா பேச்சு கொடுத்து கொஞ்சம் டென்ஷனை கம்மி செய்வேன். அப்படி நெனட்சிதான் உங்ககிட்ட பேசினேன் " என்றேன்.

"நீங்க மொதல்ல சொன்னது ரொம்ப கரெக்ட்" என்றார்.

"நான் என்னங்க சொன்னேன்...?" என்றேன்.

"நான் ரொம்ப கொழப்பத்துல இருக்கேன்...என்ன பண்றதுன்னே தெரியல?" என்றார்.

இந்தச் சின்னப் பையனிடம் அப்படி என்ன பெருசாக பிரச்சனை இருக்கப்போகிறது என்று "சரி... உட்காருங்கள் இப்பொழுதே பேசி சரி செய்துவிடலாம்" என்றேன்.

"எங்கக் குடும்பம் ரொம்ப வருமையில இருக்காங்க. அக்காவுக்கு கல்யாணம் ஆயிடுச்சி. தம்பி வேலை செய்யுறான். அம்மா தான் எங்களை எல்லாம் காப்பாத்துனாங்க. பாருங்க நான் பண்ணண்டாவது (12th) வரைக்கும் ஃப்ரீ ஹாஸ்டல்ல தங்கி படிச்சேன். பாஸ் பண்ணிட்டு வேலைக்குப் போகலாம்னு தான் நெனச்சேன். படிச்ச ஸ்கூல்ல இருந்த டீச்சேர்ஸ் தான், நீ எஞ்சினியரிங் படின்னு சொன்னாங்க. எனக்கு என்னவோ வேலைக்குப் போகணும்னு தான் தோனுச்சி. ஒருத்தர் நான் படிக்க வக்கிறேன்னு சொன்னாரு. சரின்னு நானும் ஒரு பிரைவேட் காலேஜில சேர்ந்துட்டேன். ஒரு வருஷத்துக்கு மேல அவரால காசு கொடுக்க முடியலை. எதோ கஷ்டம்ம்னு பணம் கொடுக்கறத நிறுத்திட்டாரு.

இப்போ படிப்புக்காக காசு கொடுங்கன்னு யார்கிட்டயாவது கேக்க வேண்டி இருக்கு. எல்லாத்துக்கும் அடுத்தவங்ககிட்ட போய் நிக்க வேண்டி இருக்கேன்னு ரொம்ப கஷ்டமா இருக்கு. அதுவே மைன்ட் பிரஷரா இருக்கு... " என்றார்.

"ஓ மை காட்... நான் எச்சைக் கையால் ஈ ஓட்டத் தயங்குபவன். என்னிடம் ஏன் இந்த பச்சிளம் பாலகன் மடை திறந்த வெள்ளம் போல பேசுகிறான் என்று சுதாரித்தேன். மைன்ட் பிரஷ் - பற்றி பாலபாரதியிடம் பேசியதை பையன் கவனித்திருக்க வேண்டும். அதுதான் விஷயம். "சரிங்க பிரபு... என்னுடைய இ-மெயிலுக்கு உங்களுடைய பையோ டேட்டா அனுப்புங்க. நிச்சயமா உங்கள கூப்பிடுறேன். பாருங்க, நான் பணம் கொடுத்து உதவி செய்ய முடியாது. ஏன்னா, ஐ ஆம் ஜாப்லெஸ்... ஆனால் வேறு ஒரு வகையில் உங்களுக்கு உதவ முடியும்" என்றேன்.

"எனக்கு மட்டும் தான் Emotional Training கெடைக்கனுமா? என்ன மாதிரி ஹாஸ்டல்ல நெறைய பேர் இருக்காங்க... அவங்களுக்கும் கெடச்சா நல்லா இருக்கும்" என்றார்.

Btec இரண்டாம் வருடம் படிக்கும் அந்தச் சின்னப் பையனுக்கு எவ்வளோ நல்ல மனசு. ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதாக உறுதி கூறுகிறேன், அந்த வசதியை தனக்காக மட்டும் பயன்படுத்தாமல், தன்னைப் போன்ற இயலாமையில் இருக்கும் பலருக்கும் கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறான். இந்த சந்திப்பைப் பற்றி என்னுடைய அக்காவிடம் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

வலது கையால் கொடுப்பது இடது கைக்கு தெரியக் கூடாது என்பார்கள். இங்கு அப்படியா நடக்கிறது. அகரம் ஃபவுண்டேஷன் முதல் விஜய் டிவி வரை.... இவர்கள் எங்கள் தயாரிப்பு என்று தம்பட்டம் அடித்துக் கொள்வதிலேயே இருக்கிறார்கள். அந்தப் பிஞ்சு நெஞ்சங்களுக்கு எவ்வளவு வலிக்கும். இதை நாம் ரசித்து ரசித்து நெக்குருகி வரவேற்பறையில் உட்கார்ந்துகொண்டு பார்க்கிறோம். குழந்தைகளை அழவைக்கும், காயப்படுத்தும் எல்லா நிகழ்ச்சிகளையும் தடை செய்ய வேண்டும்.

நான் பகிர நினைப்பது, இதிலிருந்து முற்றிலும் முரணான ஒன்று. பிளஸ் 2 ரிசல்ட் வரும் சமயத்தில் கர்ண பரம்பரையில் பிறந்ததுபோல உதவி செய்கிறேன் என்று சொல்லிவிட வேண்டியது. பிறகு தன்னால் முடியவில்லை என்று விலக வேண்டியது. இதனால் குழந்தைகள் எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். பள்ளியோ, கல்லூரியோ - மாணவர்களுக்கு பண உதவியை விட, அன்பும், அரவணைப்பும் ஆறுதலும் தான் முக்கியம். அதை முதலில் கொடுக்க முடியுமா என்று பார்ப்பது நல்லது.

உதவி பெரும் மாணவர்களையும் குறை சொல்லித்தான் ஆகவேண்டும். முற்றிலும் ஒருவரை நம்பி வாழ்வது தவறுதானே. பகுதி நேரமாக ஏதேனும் வேலை செய்யலாம். என்னுடைய உறவினர்களில் பலரும் வெளிநாடு சென்று படிக்கும் பொழுது, அங்குள்ள சூப்பர் மார்கெட், பெட்ரோல் பங்க் போன்ற பகுதி நேர வேலையில் ஈடுபடுகிறார்கள். ஆனால் இந்தியாவில் இருக்கும் பொழுது தண்ணீர் குடித்த டம்ப்லரைக் கூட அருகிலுள்ள சிங்க்கில் கொண்டு வைக்கத் தயங்குவார்கள். இவர்களைத் தடுப்பதுதான் என்னவென்பது புரியவில்லை?

ஒருமுறை பயண கதியில், டாம்பீகமான வழிப்போக்கன் ஒருவனை சந்தித்தேன். என்னுடைய இருப்பு அவனை தொந்தரவு செய்திருக்க வேண்டும். அழுக்கடைந்த என்னுடைய உருவத்தைப் பார்த்து முகத்தைச் சுளித்துக்கொண்டே"வாட் ஆர் யு டூஇங்?" என தெனாவட்டாகக் கேட்டான்.

"இட்ஸ் நன் ஓஃப் யூவர் பிசினஸ்" - என்ற அதரப் பழசான சொலவடையில் கடந்து சென்றேன். நாட்டை ஆண்டால் என்ன? டேபிள் துடைத்தால் என்ன? வேலை செய்யும் நேரம் தவிர்த்து, மற்ற நேரங்களில் சாதாரண மனிதனாக வாழப் பழகினால் எல்லாமே கைகூடும். இதைத் தான் பள்ளிகள் கற்றுக் கொடுக்க வேண்டும். மாறாக போட்டி மனப்பான்மையையும், அமைதியின்மைக்கான சூழலையுமே தற்போதைய கல்விமுறை விதைத்துக் கொண்டு வருகிறது.

எத்தனை மாணவர்கள் தினம்தினம் குமுருகிறார்களோ!... அடக் கடவுளே...!

Tuesday, August 21, 2012

அகில இந்திய வானொலி

செல்ஃபோனுக்கு சிக்னல் கிடைக்காமல் முக்கியமான நேரங்களில் தவிக்க வேண்டி இருக்கிறது. அப்படியே கிடைத்தாலும் பாதியில் சிக்னல் ஜேம்-ஆகி பேச்சு தடைபடுகிறது. செல்பேசியில் வந்த நண்பர்களை மீண்டும் அழைக்கும்போது "எங்கு விட்டோம்? எதில் விட்டோம்?" -என்று யோசிப்பதற்குள் பேச வந்த விஷயம் மறந்து பிரக்ஞையானது அந்தரத்தில் தொங்குகிறது. இதுபோன்ற சமயங்களில் என்ன செய்வதென்றும் புரிவதில்லை!. மெசேஜ் அனுப்பலாம் என்றால் அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. ஐந்து குறுந்தகவலுக்கு மேல் (குறிப்பிட்ட காலம் வரை) அனுப்ப இயலாது என அரசு முட்டுக்கட்டை போட்டுள்ளது.

சுதந்திர தினத்தன்று, All India Radio வழங்கும் "மாத்தியோசி" நிகழ்ச்சியில் "நவீன தொழில் நுட்பம் நம்மை அடிமைப்படுத்துகிறதா?" என்பது பற்றி ஐந்து நிமிடங்கள் வருமாறு, உங்களுடைய கருத்துக்களை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று அதற்கு முந்தைய நாளே கவிஞர் ஆசைத்தம்பி சொல்லியிருந்தார்.

என்னுடைய நிலையை எடுத்துச் சொல்லி, "நேராக ஸ்டுடியோ வந்துட்றேன் ஆசை. ஐந்து நிமிடம் என்ன? அரைமணி நேரம் வேண்டுமானாலும் பேசத் தயார். அதுதான் நல்லதும் கூட. பாருங்கள்... இந்த ஐந்து நிமிட சம்பாஷணைக்குள் இரண்டுமுறை பேச்சு அறுபட்டுவிட்டது" என்றேன்.

"இல்லைங்க கிருஷ்ணா. சுதந்திர தினத்துக்கு லீவ் என்பதால் நாளைக்கு யாரும் ஆபீஸ் வரமாட்டாங்க. ஃபோன்லயே மேனேஜ் பண்ணிக்க முடியுமா?" என்றார். அதன் பிறகு நம் கையில் என்ன இருக்கிறது. எல்லாம் அவன் செயல் என்று நினைத்துக் கொண்டேன்.

மறுநாள் காலை, தனது நண்பர் குழாமுடன் ஜெயா கிராமத்திற்கு வந்திருந்தாள். விடுமுறை தினம் என்பதால் ஆந்திர எல்லைக்குச் சென்றுவர கிளம்பியிருப்பார்கள் என்றே நினைக்கிறேன். மழை பெய்ய வேண்டிய காலத்தில் தகிக்கும் வெயிலை இதற்கு முன் கண்டதில்லை. வந்தவர்களை வழியனுப்பிவிட்டு, பத்தரை மணிவாக்கில் தகிப்பின் அசதியைப் போக்க குட்டித் தூக்கம் போடச் சென்றேன். சரியாக ஒரு மணிக்கு செல்பேசி அதிர்ந்தது. அவர்களே தான்....

"வணக்கம். நான் கிருஷ்ணபிரபு. மைன்ட் ஃபிரஷ் - என்ற கம்பெனியின் relationship Manager ஆக பதவி வகிக்கிறேன்." என்று ஆரம்பிப்பதற்குள் "உங்களின் பேச்சு உடைகிறது" என்றார் எதிர் முனையில் தொடர்பு கொண்ட நண்பர். முத்திரை மோதிரத்தை வைத்துக்கொண்டு சீதையைத் தேடியலைந்த அனுமன் போல - மொபைல் ஃபோனைக் கையில் வைத்துக்கொண்டு சிக்னல் சரியுமிடம் தேடி அலைய நேர்ந்தது. மூன்று அடுக்குகள் கொண்ட கான்கிரீட் கட்டிடத்தின் மேல் தளத்திற்குச் சென்று ஓர் ஓரத்தில் ஒதுங்கினேன். வெயில் மண்டையைப் பிளந்தது.
"நவீன தொழில் நுட்பம் நம்மை அடிமைப்படுத்துகிறதா?" - என்றவுடன் கல்யாண்ஜியின் கவிதையொன்று தான் நினைவிற்கு வருகிறது...

கூண்டுக் கிளிகளின்
காதலில் பிறந்த
குஞ்சுப் பறவைக்கு
எப்படி முளைத்தன?
எதற்கு முளைத்தன?
"சிறகுகள்"

- என்று ஆரம்பித்துப் பேசினேன். காய், கனிகளை கல்லில் உடைத்து, தரையில் அடித்து சாப்பிட்ட காலம் மறைந்து, கத்தியால் அறுத்து சாப்பிட ஆரம்பித்ததே தொழில் நுட்பத்தின் வளர்ச்சி தான். ஒரு முனையில் இணையத்தின் மூலம் புரட்சி வெடிக்கிறது, அடுத்த முனையில் வெகுளிப் பெண்களின் வாழ்க்கை சீரழிகிறது. ஆகவே அறிவியல், விஞ்ஞான, தொழில்நுட்ப வளர்ச்சியானது மனித வாழ்வின் இன்றியமையாத அம்சம் என்ற சாதக, பாதக புரிதலுடனே அது சார்ந்த மாற்றுக் கருத்தையும் அணுக வேண்டியிருக்கிறது.

ரயில் பயணமா? பேருந்துப் பயணமா? விமானப் பயணமா? - எதுவாக இருப்பினும் உட்கார்ந்த இடத்தில் இருந்தவாறே முன்பதிவு செய்துவிடலாம். வார விடுமுறையில் சினிமா பார்க்க விரும்புகிறீர்களா அதையும் உட்கார்ந்த இடத்திலிருந்தே செய்துவிடலாம். பணப் பரிமாற்றங்கள் கூட இணையத்தின் மூலமே நடந்துவிடுகிறது. எதற்கும் சக மனிதர்களின் பிரயாசை தேவையில்லை. கடந்த இருபது ஆண்டுகளின் தொழில்நுட்ப வளர்ச்சி மனிதர்களை ஓர் இயந்திர கதியில் தான் நகர்த்திக் கொண்டிருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் இதன் சதவிகிதம் அதிகமோ அதிகம்.

ஏதேனும் ஓர் அலுவலகத்தில் நுழைய நேர்ந்தால், சுற்றிலும் கணினிகள். திரும்பும் இடமெல்லாம் மானிட்டர்கள். வேலை முடிந்து வெளியில் வந்தால் செல்ஃபோன். அதில் 'Texting, Radio Tuning, Listening songs, watching videos (Porn - என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை)' என செயல்படத் துவங்குகிறோம். பணத்தேவை எனில் ATM செல்கிறோம். திரையைத் தொட்டுத்தடவி பணத்தை எடுத்துக் கொள்கிறோம். வீட்டிற்கு வந்தால் தொலைகாட்சி என சட்டகத்தின் ஒளிரும் திரையில் (Monitor Screen) தான் நம்முடைய காலம் கழிகிறது. யாரும் பார்க்கவில்லை என்றாலும் தொலைக்காட்சி ஓடிக் கொண்டிருக்க வேண்டும் என்பது தான் நம்மவர்களின் விசேஷம் குணம். பெரியவர்கள் போலவே குழந்தைகளும் 'கம்பியூட்டர் கேம்ஸ், ப்ளே ஸ்டேஷன்ஸ்' என டிஜிட்டல் விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். சக மனிதர்களிடம் முகம் கொடுத்துப் பேசுவது இன்றுள்ள நிலையில் எல்லோர்க்கும் இரண்டாம் பட்சம் என்றாகிவிட்டது.
நவீன டிஜிட்டல் தொழில்நுட்பம் ஏற்படுத்தித் தரும் சிறப்பு வசதிகளை (Comfortable) பயன்படுத்திக் கொள்வதில் தவறே இல்லை. பணத்தையும் நேரத்தையும் அதன் மூலம் சேமிக்க முடியும் என்பதும் உண்மையே. ஆனால் மேலதிக சாதகமாகப் (advantage) பயன்படுத்தும் போதுதான் பிரச்சனை எழுகிறது. அந்தப் புள்ளியில் தான் அடிமைத்தனம் தொடங்குகிறது. "Internet, Mobile Phone, Digital video" போன்றவை நம்மைச் சிறைபடுத்தி வைத்திருக்கின்றது என்பது தான் உண்மை. சக மனிதர்களைக் காட்டிலும் சாதனங்களுடன் அதிகம் உறவாடுகிறோம். புன்சிரிப்பைக் காட்டிலும், ஸ்மைலியைத் தான் அதிகம் பயன்படுத்துகிறோம்.

கட்டற சுதந்திரத்தில் வாழ்வதாக நினைத்துக் கொண்டாலும், நவீன தொழில்நுட்ப சாதனங்களால் நாம் சிறைபட்டுத்தான் கிடக்கிறோம். கூண்டுக் கிளிகளுக்குப் பிறந்த பட்சியைப் போல. ஆகவே தான் கல்யாண்ஜியின் கவிதை ஞாபகத்திற்கு வந்தது என்று பேசி இருக்க வேண்டும். என முடிப்பதாக எண்ணம். உறக்கத்தில் இருந்து எழுந்ததால் யோசித்ததில் பாதியைத்தான் பேச முடிந்தது. மறுநாள் நிகழ்ச்சியைக் கேட்டபோது, சவுன்ட் எஞ்சினியர் நான் உளறியிருந்ததை - கத்தரித்து, வெட்டி, ஒட்டி ஒருவாறு சரி செய்திருந்தார். வெட்டுப்பட்டதில் தவறாக வாசித்த கல்யாண்ஜியின் கவிதையும் அடக்கம்.

டிஸ்கி: கவிதையை தப்பாக வாசித்தது, நண்பருடன் உரையாடி இணைப்பைத் துண்டித்த பிறகுதான் நினைவிற்கு வந்தது. அதற்குள் இரண்டுமுறை இணைப்பு துண்டித்தும், தடங்கல் ஏற்பட்டும் பேச நினைத்த விஷயத்தில் பாதிகூட பகிரவில்லை என்பது என்னளவில் வருத்தமே.

கூண்டுக் கிளிகளின்
காதலில் பிறந்த
குஞ்சுப் பறவைக்கு
எப்படி வந்தன?
எதற்கு வந்தன?
"சிறகுகள்"

Wednesday, August 1, 2012

பொய்யாய் செதுக்கிய நாட்குறிப்பு - 02

சங்கிலியால் தொங்கிய மார ஊஞ்சலில் அந்த பெரிய மனிஷி வந்தமர்ந்தாள். உட்கார்ந்த வேகத்தில் ஊஞ்சலானது முன்னும் பின்னும் ஆடியது. அம்மாவிற்கு நெருங்கிய உறவு முறை என்பதால் பேச்சுக் கொடுத்தேன். உண்மையில் அந்தப் பெரிய மனுஷி ரெண்டு கை சொந்தம். அப்பாவிற்கு ரெண்டு மடங்கு தூரம் எனில், அம்மாவிற்கு அதில் பாதி தூர பந்தம் உண்டு. இனி நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.

"பிளட் ஷுகர் எல்லாம் கண்ட்ரோல்ல இருக்குதா"

"எங்கப்பா... ஒண்ணுமே சாப்புடறது இல்ல... ஆனா ஷுகர் மட்டும் ஏரிக்குனே இருக்குது." என்றாள். எனக்குப் பாவமாக இருந்தது. "சரி சரி... கவலைப் படாதிங்க... எல்லாம் சரியா போயிடும்" என்றேன்.

"க்கும்... உனக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான் போல..." என்றாள். மேலும் அவளை காயப்படுத்தாமல் பேச்சை மடை மாற்றுவதாக எண்ணிக் கொண்டு, எனக்கே தெரியாமல் உளறிவிட்டேன்.

"ஆமா... உங்க பேத்திக்கு கல்யாணமாமே! அவங்க லவ் பன்றவருக்கே பேசி முடிட்சிட்டிங்கலாமே... ரொம்ப சந்தோசம்..." என்றேன் யதார்த்தப் புன்னகையுடன்.

"எந்த நாயி சொன்னா அந்த மாதிரி... இது நாங்க பெரியவங்களா பார்த்து பேசி முடிச்சி வச்ச கல்யாணம். ஊருல இருக்கவங்களுக்கு வேற வேலை இருந்தா தான?" என்று காய வைத்த எண்ணையில் கடுகைத் தூக்கிப் போட்டது போல பொறிந்து அடங்கினாள்.

"ஊருல எல்லோரும் அப்படிதான் சொல்றாங்க" என்றவாறு நிலைமையைப் புரிந்தும் புரியாமல் பக்கத்தில் நின்றிருந்த அம்மாவைப் பார்த்தேன். ஆவி பறக்கும் காஃபியை ஆற்றியவாறு கண்களை உருட்டி சைகை செய்தாள்.

"அதெல்லாம் இல்லப்பா... ரெண்டு பேரும் காலேஜுல ஒண்ணா படிச்சாங்க. அந்தப் பையன் ஞாயித்துக் கெழமன்னா எங்க வீட்டுக்கு வருவான். மத்த படி 'லவ்'வெல்லாம் இல்ல..." என்றவாறு நீட்டிய காஃபியை வாங்கிக் கொண்டாள் பெரிய மனுஷி. அவள் சென்ற பிறகு என்ன சொல்லி திட்டலாம் என்பது போல இருந்தது அம்மாவின் உடல் மொழி. இதே அப்பாவின் சொந்தமாக இருந்திருந்தால் அவளும் சேர்ந்து கேள்விகளை அடுக்கி இருப்பாள். தனக்கும் நெருங்கிய சொந்தம் என்பதால் கொஞ்சம் திணறித்தான் போனாள். நானும் எதுவும் பேசாமல் இருந்துவிட்டேன்.

நாட்களும் சென்றது. மேற்படி சம்பவத்தையும் முற்றிலும் மறந்துவிட்டேன். அவசியம் இருந்ததால் சின்ன அண்ணனை செல்பேசியில் அழைத்தேன். "ங்கோத்தா... அவங்கள ரெண்டுல ஒன்னு பாத்துடறேன். பஜ்ஜேரிங்க நம்மள பத்தி இன்னாடா நெனட்சிக்குனு இருக்காளுங்க? முண்டைங்க..." என்று அடுக்கிக் கொண்டு சென்றான்.

"அடேய்... அடேய்... சும்மா இருடா! எதுக்கு இப்போ குதிக்கிற? அப்புடி இன்னாடா பண்ணிட்டாங்க உன்ன?" என்றேன்.

"அதெல்லாம் உனக்கு எதுக்கு? நான் சொல்ல மாட்டேன்" என்றான்.

"டேய்... சொல்றான்னா" என்றேன்.

"செருப்பால அடிக்கனமும்னு மத்தி (பெரிய மனுஷி)சொல்றா... பொட்டப் பயன்னு பேத்தி சொல்றா... போலீஸ்ல புடுட்சிக் கொடுக்கணும்னு சொல்றா அவளோட சித்திகாரி..." என கோவத்தில் கொக்கரித்தான்.

"ஆமா... யாரடா சொல்றாங்க?" என்றேன் ஒன்றும் புரியாமல்.

"ஆங்... ஊரையா சொல்லுவாங்க? உன்னதாண்டா" என்றான்.

"அவங்க அப்படியெல்லாம் திட்ட மாட்டாங்க. சும்மா யாராச்சும் சொல்லி இருப்பாங்க. என்னமோ நேருல கேட்ட மாதிரி கோவப் பட்ரையே..." என்றேன்.

"செல்போன ஆன் பண்ணி வச்சிட்டு, கேக்கட்டும்ன்ற திமுருல தான திட்டுறாங்க " என்றான் அடக்க முடியாத கோவத்தில்.

"டேய்... அவங்க என்ன தான திட்டுறாங்க. எனக்கே கோவம் வரல. நீ ஏன் குதிக்கிற" என்றேன்.

"ம்...மயிறு நீ அங்க இங்கன்னு போயிடுற. நாலு பேரு பேசறத நாங்க தான கேக்க வேண்டியிருக்கு. சும்மா இருக்க நம்ம என்ன அவளுங்க சொன்ன மாதிரி பொட்டைங்களா?" என்றான்.

பெரிய மனுஷியின் பேத்தியை பெண் பார்க்க மாப்பிளை வீட்டார் வந்து கொண்டிருக்கின்றனர். அம்மாவின் நெருங்கிய உறவு என்பதால் எங்கள் வீட்டையும் அழைத்திருந்தார்கள். அங்கு செல்வதற்கு முன்பு எதையோ கேட்பதற்காக, செல்பேசியில் கூப்பிட்டு பேச நினைத்து, அவர்கள் திட்டுவது காதில் விழுந்து - அண்ணன் துள்ளிக் குதித்துக் கொண்டிருப்பதாக அம்மாதான் தெரியப் படுத்தினாள்.நானும் ஒரு வழியாக அவனை சமாதானம் செய்தேன். ஆனால், இரண்டு கண்டிஷன்களை என்னிடம் சொன்னான். அதாவது...

"1. அந்த நாய பொண்ணு பார்க்க வராங்க இல்ல. நம்ம வீட்டுல இருந்து யாரும் போகக் கூடாது
2. அந்த பன்னியோட கல்யாணத்துக்கும் போகக் கூடாது"

என்றான் தீர்மானமாக. இதென்ன பிரமாதம் என்று நிலைமையை சமாளிக்க நானும் ஒத்துக் கொண்டேன். அம்மாவிற்கு இதில் ஏக வருத்தம். "அடப் பாவிங்களா! ஒண்ணுமில்லாத விஷயத்த இப்புடிப் பெருசாக்கி சொந்த பந்தத்தைப் பிரிக்கிறிங்களே?" என்றாள் அழுவாத குறையாக.

இரண்டு நாட்களில் கோவம் தணியும் என்று நினைத்தேன். ம்ஹூம்... அண்ணனின் கோவம் தணிவது போலத் தெரியவில்லை. உறவு முறையில் சித்தப்பா மகன் என்னிடம் வந்தான்.

"அந்த பொட்ட நாயிங்கள ரெண்டுல ஒன்னு பாத்துடனும்" என்றான்.

அதெப்படி சில ஆண்களுக்கு பெண்கள் பொட்டைகளாகவும், சில பெண்களுக்கு ஆண்கள் பொட்டைகளாகவும் தெரிகிறார்கள் என்பது விளங்குவதே இல்லை. பள்ளி மற்றும் கல்லூரி விடலைகள் கோவத்தில் சக நண்பனையோ அல்லது எதிர் கூட்டணியில் உள்ளவனையோ "போடா பொட்ட" என்று திட்டுவதை அதிகமாகக் கேட்க முடிகிறது.

"எதோ கோவத்துல பேசிட்டாங்க வுடுடா!" என்றேன்.

"ஊருல எல்லாரும் இதப் பத்திதான் பேசிக்குறாங்க. உனக்கு கொஞ்சம் கூட ரோஷமே வரலையா? உனக்கு ஒடம்புல ரத்தம் ஓடுதா இல்ல சீழ் ஓடுதா?" என்றான்.

"ஹ ஹ ஹ ஹா ஹ" என சத்தம் போட்டு சிரித்தேன்.

"போடா போடா... உன் மூஞ்சில மொட்ட நாயி பீ பேல" என்றான். நான் அடக்க மாட்டாமல் வானத்தை நிமிர்ந்து பார்த்துச் சிரித்தேன். வெண்மேகத் திட்டுக்கள் சமாதானப் புறாவைப் போல கடந்து சென்றன.