Thursday, July 31, 2014

மீண்டும் காலச்சுவடில்...

ஜூலை மாதத்தின் முதல் வாரத்தில் ஒருநாள், காலச்சுவடு கண்ணன் தனது சென்னை பயணத்தின்போது சந்திக்க வருமாறு நேரம் கொடுத்திருந்தார். உங்களுக்குத் தான் தெரியுமே சென்னையின் வாகன நெரிசல்கள் பற்றி...! குறித்த இடத்திற்குச் சென்று சேர்வதற்குள் அரைமணி நேரம் தாமதமாகிவிட்டது. கண்ணன் கேட்டார்:

“பிரபு... நீங்க எப்பவுமே இப்படித்தானா!?”

“ஆங்... எப்படி?” – இது நான்.

“சாவுக்கு ‘வா’-ன்னா. காரியத்துக்கு வராப்போல வந்து நிக்கிறது?” – என்று கேட்டார்.

“ஹாஃபன் அவர் லேட்டெல்லாம்... ஒரு லேட்டே இல்லிங்க கண்ணன்? நீங்க எந்தக் காலத்துல இருக்குறீங்க? எதுக்கு டயம் வேஸ்ட் பண்ணிக்கிட்டு... சரி விஷயத்துக்கு வாங்க...” – இது நான். (குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டக்கூடாது. அப்படியே ஓட்டினாலும் காண்பித்துக் கொள்ளக் கூடாது இல்லையா!)

“விஷயம் இதுதான். போன வருஷம் சென்னை புக் ஃபேர்ல காலச்சுவடு ஸ்டால்ல இருந்தீங்க இல்ல... ஆமா... அதே மாதிரி இந்த வருஷ சென்னை புக் ஃபேர்லயும் ஒரு அசைன்மென்ட் இருக்கு... நீங்க தான் பண்ணனும்...!”

“ஏங்க... புக் ஃபேர்க்கு இன்னும் ஆறு மாசம் இருக்குங்க...! நானெல்லாம் எக்ஸ்ஸாமுக்கே ஓவர்நைட்ல படிக்கிற ஆளு” என்றேன்.

“நானும் தான் கேலண்டர் பாக்குறேன்... எனக்கும் ஆறு மாத இடைவெளி இருப்பது தெரியும். அப்புறம்... எக்ஸ்சாம் எழுதுறது வேற... புத்தகம் விக்கிறது வேற” என்றார். போலவே, “எதிர் வரும் புத்தகச் சந்தையில் உங்களோட அசைன்மென்ட் பெரிதாக ஒன்றும் இல்லை. போன வருஷம் சுமார் ஆயிரம் யங் ரீடர்ஸ்’கிட்ட பேசினேன்னு பெருசா சொன்னீங்க இல்ல! அத எல்லோர் போலவும் நானும் நம்புறேன். ஆனா, அவங்கெல்லாம் மறுபடியும் காலச்சுவடு அரங்கிற்கு புத்தகம் வாங்க வறாங்களா? அதுல எவ்வளோ பேரு மறுபடியும் வறாங்க? உங்கள ஞாபகம் வச்சிருந்து உங்கக்கிட்ட மறுபடியும் பேசுறாங்களா? வேற ஏதாச்சும் புத்தகத்த ரெஃபர் பண்ணச் சொல்லிக் கேக்குறாங்களா?” அப்படி வரவங்க எந்தத் துறையில இருக்குறாங்க? என்பது போன்ற ஒரு டீடெயில் அனாலிசிஸ் ரிப்போர்ட் வேணும்” என்றார்.

எனக்குத் தலையைச் சுற்றியது. “இந்திய உளவுத்துறையும், இஸ்ரேலிய மொசாடும் உங்கக்கிட்ட கெட்டுது போங்க... இந்த மாதிரி ஒரு ரிப்போர்ட்ட டாக்டரேட் (PhD) பண்ற மார்கெட்டிங் ஸ்டூடன்ஸ் கூட (சிறப்பா சப்மிட்) பண்ண முடியாது. அப்படி இருக்கும் போது என்னால சாத்தியமா?” என்றேன்.

“ஆராய்ச்சிய பண்ணனும்னா எலிய வச்சித்தான் பண்ணனுமே தவிர, அறிவாளிய வச்சி இல்ல...!” என்றவாறு, இரண்டு கைகளையும் கோர்த்துக் கொண்டு – பின்னந்தலையில் வைத்தவாறு வானத்தைப் பார்த்துச் சிரித்தார். சமயத்தில், சுந்தர ராமசாமியும் இப்படித் தான் வானத்தைப் பார்த்துச் சிரிப்பாறாம். சீனியர் வாசகர்கள் பகிர்ந்து கொண்டதுண்டு. ஆனால், ஒரு யங் அஸ்பைரிங் டேலண்டை கிண்டலடிப்பாரா என்று தெரியவில்லை.

எனினும் கண்ணனுடைய பதிலிலும் ஞாயம் இருக்கிறது. அதற்கு மேல் நானென்னப் பேச. “ஆகட்டுங்க கண்ணன். நான் பரிசோதனை எலியாவே இருந்துட்டுப் போறேன். வேற ஏதாச்சும் சொல்லனுமா?” என்றேன்.

“வேற ஒன்னும் இல்ல... போயிட்டு வாங்க. நீங்க வேலை செய்யுற அழகைப் புத்தகசந்தையில பார்க்கலாம்” என்றார்.

“பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களும், வேலைக்குச் செல்லும் இளைஞர்களும் இலக்கியம் வாசிக்க விரும்புகிறார்களா? இலக்கியப் புத்தகங்களை வாங்கப் புத்தகச் சந்தைக்கு ஆர்வத்துடன் வருகிறார்களா? ஆம் எனில்...! தொடர்ந்து புத்தகம் வாங்க முன் வருகிறார்களா?” என்பது தான் காலச்சுவடு நிறுவனம் தெரிந்து கொள்ள நினைக்கும் விஷயம். ஒரு பதிப்பகம் இப்படிப்பட்ட விஷயங்களைத் தெரிந்துகொள்ள நினைப்பதும் நல்ல விஷயம் தானே...!

எல்லா காலங்களிலும் விலைபோகும் பண்டங்கள் என மூன்று விஷயங்களைப் பட்டியலிடலாம். அவையாவன, “காதல் (Love), காமம் (Sex), ஆன்மிகம் (Spiritual)” எனலாம். சுகி சிவம் எதைப் பேசினாலும் கேட்கிறார்கள். ஓஷோ எதைப் பேசினாலும் கேட்கிறார்கள். “நித்யானந்தா, பிரேமானந்தா” – என்று யார் பேசினாலும் வாய் பிளந்தவாறு கேட்கிறார்கள். அவர்களது சரக்கும் விலைபோகிறது. காதலும் காமமும் தான் காட்சி ஊடகங்களின் தலையாயப் பண்டங்கள். “காதல், காமம், ஆன்மிகம்” – இந்த மூன்றிலிருந்தும் வேறுபட்ட ஏதோ ஒரு பூடகமான விஷயமாகத் தான் படைப்பிலக்கியத்தை எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் இந்த மூன்றின் ரசபாஷக் கலப்பே இலக்கிய ஆக்கங்கள் என்பது மொழியை முக்கியப் பாடமாக எடுத்துப் படிக்கும் மாணவர்களுக்கே கூட தெரிவதில்லை. மொழிப்பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்கள் சராசரி மாணவர்களைக் காட்டிலும் மோசம்.

“புத்தகத்தைத் திறந்தாலே எனக்குத் தூக்கம் வருகிறது?” என்று நிறைய பேர் குறைபட்டுக் கொள்கிறார்கள். வாஸ்தவம் தான். முதல்முறை “கட்டிங்” அடிக்கும் போது குமட்டுகிறது. விஷம்போலக் கசக்கிறது. முதல் முறை “தம்” அடிக்கும் போது மூச்சை அடைக்கிறது. நெஞ்சிக்கூடு வெடிக்கிறது. பழகிய பின் இவற்றை விட முடிகிறதா? இவையில்லாமல் வாழ்க்கை இனிக்கிறதா? அதுபோலத் தான் புத்தக வாசிப்பும். “எனக்குத் தூக்கம் வருகிறது?” என்று சொல்லும் நண்பர்களுக்கு ஜெயகாந்தனின் “சுமைதாங்கி” என்ற சிறுகதையை வாசிக்கக் கொடுப்பேன்.

“அண்ணா...! இந்த சிறுகதய படிச்சது ஒரு ஷார்ட் ஃபிலிம் பார்த்தாப் போல இருக்குதே...! நம்ம இந்தக் கதைய ஷார்ட் ஃபிலிமா எடுக்கலாமா?” என்பார்கள்.

“சரி போயிட்டு இன்னொருவாட்டி வா...!” என்பேன். மறுபடியும் தேடி வரும்பொழுது “ஷார்ட் ஃபிலிம் எடுக்கலாம்னு சொன்னியே...!? ஆளையேக் காணோமே!” என்பேன்.

“ஆமா... ஆமா... நல்ல கதை’ங்கண்ணா... என்னால மறக்கவே முடியல...” என்பார்கள்.

“மொத முறையா படிச்ச இல்ல... அதான்... இந்தா இந்தக் கதையக் கொஞ்சம் படிச்சிப் பாரு...” என்று அதே ஜெயகாந்தனின் “தாம்பத்தியம்” என்ற சிறுகதையைக் கொடுத்துவிட்டு, “நீ...! பார்க் போயிருக்கியா?” என்று கேட்பேன்.

“இதென்னக் கேள்வி...?” என்பது போலச் சிரிப்பார்கள்.

கதையைப் படித்துவிட்டு “ஹே... இதுகூட சூப்பரா இருக்குது’ண்ணா...!” என்பார்கள்.

சுமைதாங்கி” – ஒரு சாலை விபத்தை மையமாகக் கொண்டது. “தாம்பத்யம்” – நடைபாதைத் தம்பதிகள் உடலுறவு கொள்ள முடியாமல் அல்லல்படும் கதையைக் கருவாகக் கொண்டது. ஆனால், இரண்டு கதைகளுமே அடுத்தது என்ன என்ற ஆர்வத்தைத் தூண்டும் கதைகள். “இந்தமாதிரி ஒரு நூறு ரைட்டர்ஸ் இருக்குறாங்க! ஆயிரமாயிரம் கதைகள் இருக்குது...! எல்லாத்தையும் ஷார்ட் ஃபிலிமா எடுக்க முடியுமா?” என்பேன்.

“ஓ... அப்பப்பக் கொடுன்னா படிக்கிறேன்.” என்பார்கள்.

“ஒரு ஷார்ட் ஃபிலிம் எடுக்க இதையெல்லாம் படிக்கணும்னு அவசியம் இல்ல. சினிமா(மொழி) வேற. இலக்கிய(மொழி)ம் வேற. சினிமாவுக்கு இலக்கியமும், இலக்கியத்துக்கு சினிமாவும் ஒரு வகையில வளமை சேர்க்கும். அத மொதல்ல புரிஞ்சிக்கனும்” என்பேன். இதெல்லாம் வேதாளத்தின் காதில் சங்கூதிய கணக்கு. அதது அததன் கழுத்தில் தொங்கத்தானே பிரியப்படும். பத்து பேரிடம் இப்படித் தொடர்பில் இருந்தால் ஆறு நண்பர்கள் ஓடிவிடுவார்கள். மீதி நான்குபேர் எதையேனும் வாசிக்கக் கேட்டுக் கொண்டே இருப்பார்கள். நமக்கு நான்கு பேர் போதும். விற்கும் விலைவாசியில் இந்த நான்கு பேருக்குத் தீனிப் போடவே நம்மால் ஆகாது.

நாவல்களைப் பொறுத்த அளவில் “பால்யகாலசகி, மதில்கள், என் பெயர் ராமசேஷன், உப்பு நாய்கள், ராமாவும் உமாவும், நாளை மற்றொரு நாளே” போன்ற நாவல்கள் தான் ஆரம்ப வாசகர்களின் ரசனைக்குத் தீனி போடுகிறது. இவையெல்லாம் உணர்வுகளைத் தூண்டி, வேறொரு கனவு நிலைக்குக் கொண்டுசெல்லும் படைப்புகள். “ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம், உண்மை கலந்த நாட்குறிப்பு, ஒற்றன், வெட்டுப்புலி, பிஞ்சுகள்” போன்ற நாவல்களையும் இந்தக் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம். இந்த நாவல்களைப் பரிந்துரை செய்த யாரும் என்னைத் திட்டியதில்லை. அதன்பின்னர் தான் கஷ்டகாலமே. “சாய்வு நாற்காலி, மீஸான் கற்கள், கூள மாதாரி, நிழல்முற்றம், மௌனத்தின் குரல், இரண்டாம் இடம், பருவம், என் பெயர் சிவப்பு, ஏழாம் உலகம், அஞ்சலை” போன்ற ஏதேனும் ஆக்கங்களைப் பரிந்துரைக்கும் போதுதான் பிரச்சனையே ஆரம்பமாகும். “அண்ணா...! இதெல்லாம் டஃப் லேங்குவேஜா இருக்குதுங்க’ண்ணா. ஒன்னும் புரியல...!” என்பார்கள்.

“தமிழ்ல தானே எழுதி இருக்காங்க. அதெப்படி புரியாம போகும்.” என்று கேட்பேன்.

“ஒரு அம்பது பக்கம் படி அந்த லேங்குவேஜ் உனக்குப் பழகிடும்” என்பேன். அது போலவே சிலருக்குக் கைகூடியும் இருக்கிறது. “அண்ணா. சில இடங்கள்ள அழுதுட்டே’ண்ணா” என்பார்கள்.

“அதெப்படி... லேங்குவேஜ் புரியாம அழுத?” என்று மடக்குவேன்.

“அப்புறம் அப்புறம்... புரிய ஆரம்பிச்சிடுச்சி’ண்ணா...” என்பார்கள்.

இப்படித்தான் நட்பு சூழ் உலகம் உருண்டு கொண்டிருகிறது. “மீசன் கற்கள்” – முதல் நூறு பக்கங்கள் தாண்டுவது கொஞ்சம் சிரமம் தான். அவ்வளவு கதாப்பாத்திரங்கள் இந்த நூறு பக்கங்களில் வருவார்கள். நமக்கு அன்னியப்பட்டக் கதையாக இருந்தாலும், வாசித்து முடிக்கும் போது இந்நாவல் நம்மைச் சுற்றிலும் நடக்கும் கதைபோல இருந்திருக்கும். “சாய்வு நாற்காலி” – ஒருவனது அகச்சிக்கலை முன்வைக்கும் கதை. எனினும், அவனுக்குள் நாம் பிரவேசித்திருப்போம்.

காலச்சுவடு போன்ற இலக்கிய ப்ராண்ட் வேல்யூ உள்ள, ஒர் அரங்கில் வாசக நண்பர்களைச் சந்திப்பதில் உள்ளூர என்றுமே மகிழ்ச்சி தான். அதுவும் முகம் தெரியாத வாசக நண்பர்களைச் சந்தித்துப் பேசுவதில் சொல்லமுடியாத சந்தோசம். அப்படி உரையாடும் வாய்ப்பு கிடைக்கும் போது – நான் விரும்பி வாசித்த படைப்புகளைப் பற்றி சின்னதாக ஒரு டெமோ கொடுப்பதில் என்ன குறைந்துவிடப் போகிறது.

கடந்த புத்தகக் கண்காட்சியில் “கவிஞர் சுகுமாரன், பெருமாள்முருகன், தோப்பில் முகமது மீரான், குளச்சல் மு யூசுப், ஜி குப்புசாமி, பி. ஏ. கிருஷ்ணன்” ஆகியோர் தான் என்னுடைய ப்ராடக்ட். ஆ. ரா. வேங்கடாசலபதியின் “அந்த காலத்தில் காப்பி இல்லை” என்ற புத்தகத்தையும் ஒரு புராடக்டாக எடுக்கத்தான் நினைத்திருந்தேன். ஆனால், கண்காட்சி முடிய இருக்கும் சமயத்தில் தான் புத்தகங்கள் அச்சாகி அரங்கிற்கு வந்து சேர்ந்தன. இங்கு தான் ஒரு தன்னிலை விளக்கம் தேவைப்படுகிறது. இந்தப் பட்டியலிலுள்ள எல்லோரும் என்னுடைய இணக்கமான நண்பர்கள் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பட்டியலில் ஒருசில பேராசிரியர்கள் கூட இருக்கிறார்கள். என் போன்ற சராசரிக்கும் கீழான மாணவர்களுக்கு எந்த ஆசிரியரைப் பிடிக்கும் சொல்லுங்கள்?

உண்மையில், கவிஞர் சுகுமாரனைத் தவிர மற்ற யாருடனும் அதற்கு முன்பு பேசிப் பழக்கமில்லை. கேணியிலும், புத்தக வெளியீடுகளிலும் இதர எழுத்தாளர்களில் ஒருசிலரை தூரத்திலிருந்து பார்த்ததுண்டு. ஒரு மின்னஞ்சலோ!, ஒரு பேச்சு வார்த்தையோ! ஹூஹூம்... எனினும், இவர்களது ஆக்கங்கள் எனக்கு நிறையவே பரிச்சியம். பெருமாள்முருகன் புத்தகச் சந்தைக்கு வந்து சேர்வதற்குள் “கூள மாதாரி, நிழல் முற்றம்” ஆகிய புத்தகங்களை விற்றுத் தீர்துவிட்டேன். சேலத்திலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருக்கையில் பத்தி’அண்ணா முருகனிடம் தொடர்புகொண்டு “உங்க ரெண்டு நாவலையும் கிருஷ்ணபிரபு வித்துத் தீத்துட்டு இருக்குறாரு...!” என்று சொல்லி இருக்கிறார்.

“அப்படியா...? யாரவரு...!” என்று முருகன் கேட்டிருக்கிறார்.

அதன் பிறகு பத்தியண்ணன் என்னிடம் கேட்டார்: “என்னங்க கிருஷ்ணா...! உங்கள பெருமாள்முருகனுக்குத் தெரியாதா?”

“ஹூஹூம்... அவர் கூட பேசினது இல்லைங்க அண்ணா” என்றேன்.

நாகம் அக்காவும், முத்த’ண்ணாவும் கவுன்டரில் அமர்ந்திருக்க “இந்தப் பையன் யாரு... இவ்வளோ எனர்ஜியா வொர்க் பண்றானே...!?” என்று ஆச்சர்யத்துடன் ஜி குப்புசாமி கேட்டிருக்கிறார். பி. ஏ. கிருஷ்ணன், ஆ. ரா. வேங்கடாச்சலாபதி போன்றோருக்கு கண்ணன் அறிமுகம் செய்துவைத்தார். “ஓ...” என்ற ஒலியுடனும், ஒரு சின்ன கைகுலுக்களுடனும் பரஸ்பரம் விலகிச் சென்றோம். இதில், “பெருமாள்முருகனை மட்டும் கொஞ்சம் போல தூக்கி வைத்துப் பேசுகிறீர்களே” என்று எல்லோரும் முறையிடுகிறார்கள்.

நான் புத்தகக் கண்காட்சியை ஒட்டி எழுதியிருந்த பதிவில் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தேன்: “என்னைப் பொறுத்த வரை இந்த வருஷம் பெருமாள் முருகனின் வருடம். போலவே ஜி குப்புசாமியின் வருடமும் கூட...”

காவியா பதிப்பகம் என்று நினைக்கிறேன். யாரோ ஒரு தோழர் பெருமாள்முருகனின் படைப்புகளை முனைவர் பட்டத்திற்காக ஆராய்ச்சி செய்து புத்தகமாக வெளிக்கொண்டு வந்திருக்கிறார். ஒழுங்கா படிச்சிருந்தா இந்த வேலையை நாம் செய்திருக்கலாமே என்று தோன்றும். ஆய்வை விட்டுத் தள்ளுங்கள். வைரமுத்துவின் நாவல்கள் கூட உன்னதமான படைப்புகள் என்று சொல்லி ஆய்வுகள் நடக்கிறது. ரசனையின் அடிப்படையில் என்று வைத்துப் பார்த்தாலும் கூட, முருகனின் படைப்புகள் அவசியம் விவாதிக்க வேண்டிய விஷயம். கொங்குமண் சார்ந்த அவ்வளவு விஷயங்கள் முருகனின் படைப்புகளில் கொட்டிக் கிடக்கின்றன.

இதோ...! மறுபடியும் ஒருமுறை புத்தகக் கண்காட்சியில் சேல்ஸ் மேனாக வேலை செய்ய காலச்சுவடு கண்ணன் அழைத்திருக்கிறார். இந்த வாய்ப்பைக் கொஞ்சமும் எதிர் பார்க்கவில்லை. உண்மையில் எந்த எழுத்தாளரைப் பற்றிய டெமோவையும் கொடுக்குமாறு என்னை அவர் பணிக்கவில்லை. கண்ணனுக்குத் தேவையானது – ஆய்வும், அதுசார்ந்த புள்ளிவிவரமும். அப்படியிருக்க மேலதிகமாக இந்த வாய்ப்பினை விருப்பப்படிப் பயன்படுத்திக் கொள்ளவே பிரியப்படுகிறேன்.

அடுத்த சந்தைக்கான டெமோ புத்தகங்களை இனிமேல் தான் தெரிவு செய்யவேண்டும். என்றாலும், முதல் பட்டியலில் “மாதொருபாகன், பனி, திருடன் மணியன்பிள்ளை, பச்சைவிரல்” ஆகிய நான்கு புத்தகங்கள் ஏற்கனவே இடம் பெற்றுவிட்டன.

“நீங்க என்ன கிபி இந்த வருஷமும் பெருமாள்முருகனோட புராணத்தைத் தான் புத்தகச் சந்தையில் பாடப் போறீங்களா?” என்று கேட்பது காதில் விழுகிறது. அதுதான் இல்லை. இன்னும் சில எழுத்தாளர்களும் இருக்கிறார்கள். அவர்கள் யாரென்பது சஸ்பென்ஸ்.

ஆக, புத்தகச் சந்தைக்குப் புதிதாக வருபவராக இருக்கலாம். ஏற்கனவே வந்தவராகவும் இருக்கலாம். நாம் சந்தித்து மகிழ்ச்சியுடன் உரையாடியும் இருக்கலாம். கடந்தமுறை பரிந்துரை செய்த புத்தகங்கள் உங்களுக்கு ஏற்புடையதாக இல்லாமலும் இருந்திருக்கலாம். ஆகவே, என்னுடன் சண்டையிட நீங்கள் பிரியப்படலாம்.

எதிர்வரும் ஜனவரி மாதப் புத்தகக் கண்காட்சியில் சந்தித்து, வேண்டிய மட்டும் உரையாட மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறேன். இயற்கை அதற்கான சாத்தியங்களை உருவாக்கித் தரும் என்றே நம்புகிறேன்.

கவுன்ட் டவுன் ஸ்டர்ட்ஸ் ஹியர்... 

Monday, July 28, 2014

C2H – சேரன் – எஸ்கேபி கருணா

ஓர் ஆங்கிலப் புத்தகத்தைப் பற்றிய குறிப்பை நீண்ட நாட்களுக்கு முன்பு தமிழில் படித்தேன். அதில் அமெரிக்கப் பொருட்களுடன் (Product Guide) வழங்கும் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் வாசகங்களைக் கிண்டலடித்திருந்தார்கள். குழந்தையை வைத்துத் தள்ளிக்கொண்டு செல்லும் வாகனத்துடன் விநியோகிக்கும் புத்தகத்தில் ஒரு குறிப்பு எழுதப்பட்டிருக்கிறது.

“குழந்தையை இதில் உட்காரவைத்து மடிக்கக் கூடாது.”

எந்த முட்டாளாவது அதுபோலச் செய்வார்களா? குழந்தையை உட்காரவைத்துத் தள்ளிக்கொண்டு செல்லும் வாகனத்தை, குழந்தை உட்கார்ந்திருக்கும் சமயம் நான்காக மடிப்பார்களா? அதுவும் மெத்தப் படித்தவர்கள் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் மேற்கத்தியர்கள் வாங்கும் பொருட்களில் இதுபோன்ற குறிப்புகள் தேவைதானா? என்பது போன்ற கேள்விகள் எழும். எனினும் ஒரு பொருளைப் பயன்படுத்தும் போது, “அதனை எப்படிப் பயன்படுத்த வேண்டும்!, எப்படிப் பயன்படுத்தக் கூடாது! பயன்படுத்தாமல் போனால் எப்படி அப்புறப்படுத்த வேண்டும்” என்பதை விளக்கமாகச் சொல்லிவிடுகிறார்கள். அதுதான் முக்கியம். நம்மிடம் இல்லாத விஷயமே இந்தப் பண்புதான். (இது போன்று பல பொருட்களிலுள்ள பயன்படுத்தும் முறையைப் பற்றிய குறிப்பை நக்கலடித்து எழுதப்பட்ட புத்தகம்.)

ஒரு வருடத்தில் சுமார் 300 தமிழ்த் திரைப்படங்கள் உருவாகிறது. அதில் ஐடல் வொர்ஷிப் படங்கள் என்று எடுத்துக்கொண்டால் பத்திலிருந்து பதினைந்து படங்கள் தேறும். இந்தக் குறைந்த எண்ணிகையில் அமைந்த படங்கள் இதர 95% தமிழ்த் திரைப்படங்களை காவு கொள்கின்றன. இந்த மிகுதியான 95% படங்களிலிருந்து “நல்ல படங்களும், ரசனையான படங்களும், கலாப் பூர்வமான படங்களும், கலைப் படங்களும்” தியேட்டர் கிடைக்காமல் முடங்கிவிடுகிறது. அப்படியே கிடைத்தாலும் ஒருவாரதிற்கு மேல் ஒடுவதற்கான கால அவகாசங்கள் கிடைப்பதில்லை. அப்படிப்பட்டத் திரைப்படங்களை மக்களுக்குக் கொண்டு செல்ல ஆசைப்படுகிறார் இயக்குனர் சேரன்.

சமீபத்தில் வெளியான ஒளிப்பதிவாளர் நடராஜன் மையப்பாத்திரம் ஏற்று நடித்திருந்த “சதுரங்க வேட்டை” திரைப்படமானது, சென்ற ஆண்டுகளில் வெளிவந்த ஜனரஞ்சகப் படங்களான “பீட்சா, சூது கவ்வும்” போன்ற படங்களை விடவும், “ஆரண்யகாண்டம்” போன்ற மேக்கிங் அளவில் முக்கியமாகக் கவனிக்கப்பட்டப் படங்களிலிருந்தும் சற்றே விலகிய “நல்ல முயற்சி” என்றே தோன்றுகிறது. எனினும் “வேலையில்லா(ப்) பட்டதாரி, திருமணம் எனும் நிக்காஹ்” போன்ற படங்களின் சுழலில் “சதுரங்க வேட்டை” தியேட்டரை விட்டுக் காணாமல் போனது.

“பீட்சா, சூது கவ்வும்” போன்ற படங்களுக்கும் இந்த நிலைமை ஏற்பட்டிருக்கலாம். அதிர்ஷ்டவசமாகத் தப்பித்துவிட்டது. உலகத் திரைப்பட விழாக்களிலும், சினிமா பயிற்சியாளர்கள் மற்றும் பழகுனர்களிடமும் “ஆரண்யகாண்டம்” - மிக நல்ல எதிர்வினையை ஏற்படுத்தியது. எனினும், இன்றுவரை அதன் குறுந்தகட்டை நம்மால் பெற முடியவில்லை. (தயாரிப்பாளர் – இயக்குனர் தரப்பு பனிப் போரின் காரணமாக படம் திரிசங்கு போலத் தொங்குகிறது என்கிறார்கள். உண்மை நிலை என்ன என்பது யாருக்குத் தெரியும்?)

கணித மேதை ராமானுஜன் வாழ்க்கையைச் சித்தரித்த “ராமானுஜன்” திரைப்படத்திற்குத் தமிழகத்தின் பல திரையரங்குகள் கிடைக்கவில்லை. “வெங்காயம்” திரைப்படத்திற்கும் கூட திரையரங்குகள் கிடைக்கவில்லை. இயக்குனர் சேரன் போராடி “வெங்காயம்” படத்தின் மீது ஓரளவிற்கு வெளிச்சம் பாய்ச்சினார். இதுபோல ஒவ்வொரு படத்திற்குமா போராடிக் கொண்டிருக்க முடியும். ஆகவே, “சினிமா டூ ஹோம் – C2H” திட்டத்தின் மூலம் “நல்ல, ரசனையான, முக்கியமான, ரசிக்கத்தக்க” திரைப்படங்களை - ரூபாய் 50/- விலை மதிப்பிலான குறுந்தகடுகளாகக் கொண்டுவரும் திட்டமிருப்பதாகக் கூறினார். அதற்கு பல்வேறு தரப்புகளிலிருந்து “ஆதரவுகளும் விமர்சனங்களும்” எழும்பியவாறு இருக்கிறது.

இந்த வியாபாரம் வெளிநாட்டுவாழ் இந்தியர்களிடம் செல்லுபடியாகாது என்கிறார் ஒருவர். முழுக்க முழுக்க சரிவராத வியாபாரம் என்கிறார் இன்னொருவர். இவற்றிலிருந்து முற்றிலும் மாறான சுற்றுச்சூழலியல் கருத்தைத் தோராயப் புள்ளிவிவர அடிப்படையில் முன் வைத்திருக்கிறார் எஸ்கேபி கருணா. 


சூழலியல் கேடு எந்தத் தொழிலில் தான் இல்லை. மைக்கா, டியூப் லைட், காலாவதியான மருந்துகள், எலக்ட்ரிக் சாதனங்கள் , சென்ட், கிரீம் போன்ற அழகுசாதனப் பொருட்கள் முதல் ஆணுறைக் கவசங்கள் வரை குப்பை மேலாண்மை என்பது இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகளில் தலைக் குடைச்சலான விஷயம் தான். ஆறு மாத காலத்தில் குறைந்தது ஒரு கோடி பயன்படுத்தப்பட்டக் குறுந்தகடுகள் சுற்றுப்புறங்களில் வீசப்பட்டு, அதனால் சூழலியல் கேடுகள் உண்டாகும் வாய்ப்புகள் இருக்கிறது. இது கேன்சர் போன்ற வியாதிகளையும், மழை நீரை பூமிக்குள் செல்லவிடாமல் தடுக்கும் என்பதையும் காரணமாகக் கூறிக் கடுமையாக எதிர்ப்பதாகவும் கூறுகிறார். 

தொழில்நுட்பங்கள் வளர வளர இதுபோன்ற பிரச்சனைகளை எதிர்கொண்டு தான் ஆகவேண்டும். எனினும், மாறாக எஸ்கேபி கருணா “டிடிஎச், கேபிள் டிவி ஒளிபரப்பு, இணைய ஒளிபரப்பு” போன்ற முறைகளையே ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தலாம் என்றும் குறிப்பிடுகிறார். இது மறுபடியும் தியேட்டர் போன்ற கார்பரேட் லாபிகளிடம் மாட்டிக்கொள்ளும் கண்ணிகளுக்கு ஒப்பானது. “டிடிஎச், இணையம்” போன்றவை இந்தியாவின் 80% சாமானிய மக்களால் பயன்படுத்தக் கூடிய நிலையிலா இருக்கிறது. போலவே ஒளிபரப்பாகும் குறிப்பிட்ட நேரத்தில் குடும்பத்திலுள்ள அனைவரும் திரைப்படத்தைப் பார்க்கவேண்டிய கட்டாயமும் இந்த முறைகளில் ஏற்படுகிறது. நவக்கிரகம் போல ஆளுக்கொரு திரையை நோக்கி நின்றுகொண்டிருக்கும் நிலையில் இது சாத்தியமா? இடையில் மின்வெட்டு ஏற்பட்டாலும் கட்டிய பணம் ஸ்வாகா. குறுந்தகடு - விருப்பப்பட்ட நேரத்தில் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாகப் பார்க்கக்கூடிய வசதியினை வழங்குகிறது.

பயன்படுத்தப்பட்டு புதர் காடுகளிலும், கழிவரை மலப் பீங்காங்களிலும் வீசி எறியப்படும் ஆணுறைகளும் தான் சதவீதத்தின் அடிப்படையில் அதிகம். ரப்பர் மக்குவதற்கு நாளாகும், சரியான முறையில் அப்புறப்படுத்தாத விந்துக்கள் கசிந்த ஆணுறையால் தொற்றுக்கள் உண்டாகும் என்று யாரேனும் ஆணுறையை எதிர்ப்பார்களா? அதுபோலத் தான் இருக்கிறது இதுபோன்ற வாதங்களும்.

நம்மாட்கள் எதைக் கொடுத்தாலும் பயன்படுத்துவார்கள். நம் மக்களுக்கு ஒரு வரைமுறையே கிடையாது. ஆளுயர வினைல் ஹோர்டிங் சூழலுக்கு மிகுந்த கேட்டினை விளைவிக்கக் கூடிய ஒன்று. நண்பரும், எழுத்தாளருமான ஞாநி தனது மேற்கத்திய நாட்டுப் பயணத்தைப் பற்றி “ஆப்பிள் தேசம்” என்ற தலைப்பில் கட்டுரை எழுதியபோது - மேற்கத்திய நாடுகளில் “வினைல் ஹோர்டிங் பேனர்கள்” தடை செய்யப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டு எழுதியிருந்தார். இந்தியாவில் பேனர்கள் தென்படாத ஏதேனும் விழாக்கள் உள்ளதா? பயன்படுத்திவிட்டுத் தூக்கி வீசப்பட்ட மெழுகு போன்ற வழவழ பேனர்கள் தான், மழைக் காலத்தில் ஏழைக் குடிசைகளில் கூரையாக இருக்கிறது. பேனர்களில் அச்சிடப்பட்ட ரசாயனகள் மழைநீர் பட்டு, சாலைகளில் ஓடுகிறது. ஏழைச் சிறுவர்கள் அந்த நீரில் தான் விளையாடுகிறார்கள். இந்த ரசாயனங்களாலும் தோல் வியாதிகள் உட்பட கேன்சர் வருவதாகக் கூறுகிறார்கள். பொது இடங்களில் தூக்கி வீசப்படும் பேனர்களாளும் மழை நீர் பூமிக்குள் செல்வது தடைபடுகிறது. “காதுகுத்து, கல்யாணம், கருமாதி, பிறப்பு, இறப்பு, பூப்பெய்திய பெண்ணைக் குந்த வைக்கும் சடங்கு” என குடும்பம் தோறும் விழாக்களுக்கு பிளக்ஸ் பேனர்கள் வைக்கிறார்கள் எனில், அரசியல்வாதிகள் பத்தடிக்கு ஒரு பேனர் வைக்கிறார்கள். “முதிர்ந்த மூத்தத் தமிழே...! முத்தமிழே...! தளபதியே, அஞ்சா நெஞ்சனே” என்று இந்தப் பக்கம் வைத்தால், “அம்மா தாயே...” என்று அந்தப் பக்கம் வைக்கிறார்கள்.

இதுபோன்று மக்களின் வாழ்வில் இரண்டறக் கலந்த பொருட்களால் வராத சூழலியல் கேடா சேரனின் C2H நிறுவனத்தின் குறுந்தகட்டால் வந்துவிடப் போகிறது. சகோதரர் எஸ்கேபி கருணா இன்ஜினியரிங் கல்லூரி சார்ந்து இயங்குவதால் இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும். புள்ளி விவரத்தில் கூறினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

தமிழகத்தில் மொத்தம் 550 –க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லூரிகள் இருக்கின்றன. கல்லூரிக்குச் சராசரியாக 1, 000 நபர்கள் இன்ஜினியரிங் முடித்துவிட்டு வருவதாக எடுத்துக் கொண்டாலும், வருடத்திற்கு 5, 50, 000 இன்ஜினியர்கள் தமிழகக் கல்லூரிகளில் இருந்து மட்டும் வெளியில் வருகிறார்கள். இதில் பாதிபேர் சினிமா ஆசையினாலும், இன்ஜினியரிங் படிக்க முடியாததாலும் டிகிரியை வாங்க முடிவதில்லை. தொடர்ந்த பத்து வருடங்களுக்கு ஒரு தோராயக் கணக்கை எடுத்துக் கொண்டாலும் சுமார் 55 லட்சம் இன்ஜினியரிங் க்ராஜூவேட்ஸ் பத்து ஆண்டுகளில் உருவாகிறார்கள். இவர்கள் எல்லோருமா வேலைக்குச் செல்கிறார்கள். படித்து முடித்தும் வேலையில்லாமல் அலைகிறார்கள். பாடத்தில் கோட்டை விட்டவர்கள் எப்படியாது அடித்துப்பிடித்து மீண்டும் தேர்வெழுதி என்ஜினியரிங் பட்டத்தை வாங்கி விடுகிறார்கள். எனினும் தகுந்த வேலை கிடைக்காமல் எல்லோரும் திண்டாடுகிறார்கள். இந்த வேலையில்லாத அபரிதமான மனித எண்ணிக்கைகளைக் காட்டிலுமா சமூகக் கேட்டைக் காடிலுமா குறுந்தகடுகள் போன்ற பொருட்கள் சூழலியல் கேட்டை ஏற்படுத்திவிடப் போகிறது. “கொலை, கொள்ளை, அடிதடி, வழிப்பறி” போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் பற்றிய நாளிதழ் செய்திகளில் பெரும்பாலும் என்ஜினியரிங் மாணவர்களின் பெயர்கள் தான் அடிபடுகின்றன. சமூக உளவியலில் இதுபோன்ற நெகடிவ் திசையில் பயணிக்கும் என்ஜினியரிங் மாணவர்கள் ஏற்படுத்தியுள்ள தாக்கம் நுட்பமாக அவதானிக்க வேண்டியுள்ளது.

மாணவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கு, அவர்கள் படித்த என்ஜினியரிங் கல்லூரிகளைக் குற்றம் சொல்ல முடியுமா என்ன? அதுபோலத் தான் இருக்கிறது – சினிமா சார்ந்து ஆக்கப்பூர்வமாக ஒரு நிறுவனத்தைத் தொடங்க இருக்கும் இயக்குனர் சேரனைக் கடுமையாக விமர்சிப்பதும் எதிர்ப்பதும்.

“கார்பொரேட் மென்பொருள் நிறுவனங்கள், ஆடியோ கம்பெனிகள், டிப்ளமோ சான்றிதழ் வழங்கும் கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவங்கள்” போல, சேரனும் தான் சார்ந்த துறையின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு அடியெடுத்து வைக்கிறார். அதற்கு இது போன்ற சூழலியல் காரணங்களை எதிர்மறையாக முன்வைப்பது ஞாயமே அல்ல.

“டிவிடி, சிடி” போன்றவற்றால் சூழலியல் கேடு உண்டாகும் என்ற வாதத்தைக் காட்டிலும், கல்லூரியில் பயிலும் பொறியியல் மாணவர்களுக்குப் போதிய வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்து – “மறுசுழற்சி முறையில் இதுபோன்ற உபயோகமற்ற பொருட்களை என்ன செய்யலாம்?” என்பதை ப்ராஜெக்டாகச் சமர்ப்பிக்கச் சொல்லலாம். கலை மனிதர்களைப் பண்படுத்தும். நல்ல விஷயங்கள் அடித்தட்டு மக்களிடம் சென்று சேருவதில் தடை இருப்பதால் தான் எல்லா பிரச்சனைகளுமே ஆரம்பமாகிறது. இயக்குனர் சேரன் நல்ல படங்களை எடுப்பவர். நல்ல படங்கள் திரையரங்குகளுக்குச் சென்று சேர வேண்டும் – எல்லா தரப்பு மக்களிடமும் சென்று சேர வேண்டும் என்று நினைப்பவர். அவரைக் குறுக்கிடாமல் இருப்பதே நல்ல சினிமா வெளிவருவதற்கு நாம் செய்யும் உதவி. உங்களது (எஸ்கேபி கருணா) நட்பு வட்டத்தில் இருக்கக் கூடிய நல்ல சினிமா நண்பர்களில் சேரனும் ஒருவர் என்கிறீர்கள். உங்களைப் போன்றவர்கள் அவருடன் கைகோர்க்க வேண்டும். இல்லையேல் பேசாமல் இருந்துவிட வேண்டும். எதற்குக் கடுமையாக ஆட்சேபிக்க வேண்டும். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

ஐ சப்போர்ட் சேரன்... 
சமூகப் பொறுப்பு சினிமாக்காரர்களிடம் மட்டுமே இருக்க வேண்டிய விஷயமா என்ன? அது எல்லோருக்குமே இருக்க வேண்டும். முக்கியமாகப் பொதுமக்களுக்கு. சினிமா இயக்குனராக இருந்தால் என்ன? எழுத்தாளனாக இருந்தால் என்ன? என்ஜியரிங் கல்லூரி நிறுவனராக இருந்தால் என்ன? அரசியல்வாதியாக இருந்தால் என்ன? எல்லோரும் சமூகத்தின் அங்கம் தானே!அங்கம் தானே!

குறிப்பு: இயக்குனர் சேரனை ஆதரித்துப் பல்வேறு தருணங்களில் – இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் கால இடைவெளியில் எதையாவது சொல்லிக் கொண்டிருக்கிறேன். ஆகவே, சேரன் எனக்கு நண்பராக இருப்பாரோ என்று தப்புக் கணக்குப் போட்டுவிடாதீர்கள். ஆர் பி அமுதனின் ஆவணப்படத் திரையிடலிலும், பாதை புத்தக வெளியீட்டிலுமாக இரண்டு தருணங்களில் தூரத்திலிருந்து சேரனைப் பார்த்ததோடு சரி. மற்றபடி வானத்து நட்சத்திரம் போலவே, இயக்குனர் சேரனும் எனக்கு தூர தூரமாக... C2H – நல்ல முயற்சி. வளர்ந்து செழிக்க வாழ்த்துக்கள்.

Thursday, July 10, 2014

கேணி சந்திப்பு - இயக்குநர் ஞான. ராஜசேகரன்

பாரதிமணியை அவருடைய வீட்டில் சில ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்தபோது “கிருஷ்ணா...! கணித மேதை ராமானுஜன் வாழ்க்கையை இயக்குனர் ஞானராஜசேகரன் படமா எடுக்க இருக்குறாரு...” என்றார். 


மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. ஏனெனில் கணிதத்தை முக்கியப் பாடமாக எடுத்து – இளநிலை மற்றும் முதுநிலையில் – அரியர் மேல் அரியர் வைத்து - அட்டைக்கு மேல் அட்டை வாங்கிய – அசாத்தியமான மாணவர்களில் நானும் ஒருவன். பின்னர் “ராமானுஜன்” படத்தில் நண்பர் மணிபாரதி நடித்திருப்பது தெரிந்ததும் சந்தோஷத்தில் ததும்பி வழிந்தேன். இருக்காதே பின்னே...! “ராமானுஜன்... ராமானுஜன்...” படத்தில் நமக்குத் தெரிந்த ஒரு நபர் - சின்ன பாத்திரத்தில் தலையைக் காட்டுகிறார்.

ராமானுஜன் படத்தைப் பற்றி பேசுகையில் “பை கணித மன்ற” சிவாவைப் பற்றி நினைக்கவில்லை எனில் என் கட்டை வேகாது. ஒரு நாள் தனது வீட்டிற்கு வருமாறு சிவா அழைப்பு விடுத்திருந்தார். சென்னையின் வீதிகளில் ‘அழுக்கான, சாயம்போன, கிழிந்த’ ஆடையுடன் சுற்றுவதுதான் எனக்கு மிகப் பிடிக்கும். ஆகவே பெரும்பாலான விருந்தோம்பல் அழைப்புகளைத் தவிர்த்துவிடுவேன். ஆனால், ‘பை கணித மன்ற’ சிவாவை அப்படித் தவிர்க்க இயலாது.

டி. ஜி. வைஸ்னவா கல்லூரியில் இளநிலைக் கணிதமும், சென்னை ஐஐடி-யில் முதுநிலைக் கணிதமும், சென்னைப் பல்கலைக் கழகத்தில் தனது முனைவர் பட்டத்தையும் கணிதத்தில் பெற்றவர். டாக்டரேட் பட்ட ஆராய்ச்சியிலும் ராமானுஜத்தின் நிரூபனங்களைத் தொட்டுத்தான் பயணித்திருக்கிறார். தற்போது டி. ஜி. வைஸ்னவா கல்லூரியில் பேராசிரியராகக் கடமையாற்றுகிறார். அவரைச் சந்தித்ததின் காரணம் இதுவல்ல. மாறாக பல்வேறு இதழ்களிலும் கணிதம் சார்ந்து தமிழில் எழுதுகிறார். “தி ஹிந்து” தமிழ் நாளிதழில் வாரம்தோறும் கணித்ததைப் பற்றி ஏதேனும் எழுதுகிறார். கணித மேதைகள் பகுதி | & || என்ற தொகுதிகள் ஏற்கனவே வெளிவந்துள்ளது. ராமானுஜன் பற்றிய விரிவான புத்தகத்தைத் தமிழில் எழுதி இருக்கிறார். சிவாவின் இரண்டு புத்தகங்கள் தமிழக அரசு விருது பெற்றுள்ளன.

அன்றாட வாழ்க்கையில் “கணிதப் பயன்பாடுகள்” என்பது நம் போன்ற எளிய மக்களால் புரிந்துகொள்ள முடியாத விஷயம். ஆகவே, “கணிதப் பயன்பாடுகள்” என்ற புத்தகத்தைக் கூடிய சீக்கிரமே கொண்டுவரும் முயற்சியிலும் இருக்கிறார். இது போன்ற மனிதர்களை சந்திக்கச் செல்வது சுவாரஸ்யம் நிறைந்த விஷயம் தானே...!

வீட்டில் நுழைந்ததுமே அவரது படுக்கையறைக்கு அழைத்துச் சென்றார். சுவரில் கணித அறிஞர்களின் பிளாக் & வொயிட் படம் மாட்டப்பட்டிருந்தது. தரையில் அமர்ந்துகொண்டேன். சிவா பேசத் துவங்கினார்:

“இங்க பாருங்கோ கிருஷ்ணா...! நான் எங்கையாவது வெளிய போறதா இருந்தாச்சும் கூட ராமானுஜனை சேவிச்சிட்டுத் தான் போவேன்...! அவர் தான் எனக்கு எல்லாமே. கடவுள் மாதிரின்னு வச்சிக்கோங்கோ...!” என்றார்.

இப்படிக் கூடவா மனிதர்கள் இருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு, “நீங்க ஆச்சரியப் படுத்துறீங்க சிவா...!” என்றேன்.

ஏறக்குறைய ஆயிரம் கணிதப் புத்தகங்களின் சேகரிப்புகள் சிவாவிடம் இருக்கிறது. ராமானுஜத்தின் தேற்றங்களைத் தனது முனைவர் பட்ட ஆராய்ச்சிக்காக எடுத்துக் கொண்டவர் சிவா. அவரது அலமாரியிலுள்ள புத்தகங்கள் தான் “ராமானுஜன்” படத்தில் ராமானுஜனாக நடித்த – நட்சத்திரத் தம்பதிகளான ஜெமினிகணேசன் – சாவித்திரியின் பேரன் வைத்துக்கொண்டு திரிந்திருக்கிறார். நமக்குத் தெரிந்தவரின் புத்தகங்கள் ராமானுஜன் படத்தில் நடித்திருக்கிறது. “ஐயோ... ஐயோ... ஐயோ...” சந்தோசம் தாங்கள...!

இரவு நேரத்தில் சென்னை சென்ட்ரலில் இருந்து - வீடு திரும்ப சில நேரங்களில் பயணிப்பதுண்டு. மீஞ்சூர் ரயில் நிலையத்தில் இறங்கும் ஒரு நண்பர் அப்படிப்பட்ட பயணங்களில் பழக்கம். அவரது பெயர் உஸ்மான். பார்ப்பதற்கு லட்சணமாக இருப்பார். ரயில் ஸ்நேகம் – ரயில் பயணத்தோடு முடிந்துவிடும். ஒரு நாள் திநகர் பழைய GRT தங்க நகைக்கடைக்கு எதிரிலுள்ள மேம்பாலத்தின் கீழ், ரோட்டோரத்தில் கடை விரித்து - உஸ்மான் துணி விற்றுக் கொண்டிருந்தார். “ஓ... நீங்க இங்கதான் வியாபாரம் பண்றீங்களா?” என்றேன்.

“ஆமா’ண்ணா! நீங்க எங்க இந்தப் பக்கம்?” என்றார். கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு அங்கிருந்து கிளம்பினேன். அதன் பிறகு நீண்ட நாட்களாகிவிட்டது உஸ்மானைப் பார்த்து. இரண்டு நாட்களுக்கு முன்பு மீண்டும் கண்ணில் பட்டார்.

“என்னங்க ஆளையே பார்க்க முடியல?” என்றேன்.

“ராமானுஜன் படத்துல ஒரு சின்ன ரோல்ல நடிச்சேங்க’ண்ணா... கும்பகோணத்துல ஷூட்டிங்... கொஞ்ச நாள் அங்க போயிருந்தேன்... அதான்...” என்றார்.

“அடடே...! மீஞ்சூரில் இருந்தும் ஒருவர் ராமானுஜன் படத்தில் நடிக்கிறாரா?” என்று இறும்பூஊஊஊது எய்தினேன்.

எனுடைய கணிப்பு சரி எனில்... முதுகைக் காட்டிக்கொண்டு உட்கார்ந்திருக்கும் பயல் தான் – சக பயணி உஸ்மான். இந்தப் பயலின் மண்டையும், முகவெட்டும் உஸ்மானைப் போலவே உள்ளது.

என்னுடைய பள்ளி ஆசிரியர் சொல்லி இருக்கிறார்: “டேய்.... பசங்களா நீங்க எங்க போனாலும் இந்த மேத்ஸ் உங்கள உடாது... ஒழுங்கா படிச்சிடுங்க...!”

அவர் எந்த அர்த்தத்தில் சொல்லியிருப்பார் என்று தெரியவில்லை. நாமாவது படிப்பதாவது!? எனினும், கணிதமேதை ராமானுஜன் பல விதங்களிலும் என்னைத் துறத்துகிறான். என்னமோ தெரியவில்லை இந்தப் படத்தில் வேலை செய்பவர்களை அடிக்கடி சந்திக்க நேர்கிறது.

இதோ ராமானுஜன் படத்தின் இயக்குனர் ஞான ராஜசேகரன் “கேணி சந்திப்புக்கு” வர இருக்கிறார். “மோகமுள், பாரதி, காமராஜர், ராமானுஜன்” போன்ற முக்கியமான படங்களை இயக்கி இருக்கிறார். ஞானராஜசேகரன் ஓர் ஐ.ஏ.எஸ் என்பது குறிப்பிடத்தக்கது.


“சங்கராபரணம், இது நம்ம ஆளு” போன்ற படங்களில் இசை விற்பன்னராக – முக்கியமான பாத்திரத்தில் நடித்தவர் ஓர் ஐ.ஏ.எஸ் ஆபீசர் என்று கேள்விப்பட்டதுண்டு. அதுகூடப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகுதான் நடிக்க வந்தார். ஞானராஜசேகரன் மூன்று வருடங்களோ என்னவே – இடையில் விடுமுறை எடுத்துக்கொண்டு வந்தவர். அரசாங்க வேலையில் தொடர்புடையவர்கள் – கலைத்துறையில் ஈடுபடும் பொழுது எதுபோன்ற “பிரச்சனைகளையும், இடர்பாடுகளையும் சந்திக்க நேர்கிறது” என்பதை தோழர் ஞானராஜசேகரிடம் கேட்கலாம் என்றிருக்கிறேன். உங்களுக்கும் சில கேள்விகள் இருக்கலாம். தோழரை சந்திக்க எழுத்தாளர் ஞாநியின் வீட்டிற்கு வாருங்கள். நண்பருடன் உரையாடலாம்.

நாம் சந்திக்கப்போகும் இடம் மற்றும் நாள் பின்வருமாறு:

கேணி சந்திப்பு:

பாரதி','பெரியார்', 'ராமானுஜன்' பட இயக்குநர் ஞான. ராஜசேகரன் பேசுகிறார்.

ஜூலை 13, ஞாயிறு மாலை 4 மணி,

39 அழகிரிசாமி சாலை,

கலைஞர் கருணாநிதி நகர்,

சென்னை 78.

அன்புடன் அழைப்பது
ஞாநி, பாஸ்கர் சக்தி.

டிஸ்கி: தியேட்டருக்குச் சென்று நீண்ட நாட்கள் ஆகிறது. ராமானுஜன் படத்தைத் திரையரங்கில் பார்க்கலாம் என்றிருக்கிறேன். திருட்டு சிடி-ய இடையில உட்டு எங்கனவுல மண்ணைத் தூவாதிங்க. போலவே, படம் கலக்ஷ்ன் சரியா இல்லைன்னு படத்தையும் தியேட்டர வுட்டு தூக்கிடாதிங்க. இதுபோன்ற அறிவுசார் ஆளுமைகளைப் பற்றிய படங்கள் தமிழுக்குப் புதிது. அவசியம் ஓடவேண்டும். தமிழ் சினிமா வேறு தளத்திற்கு நகரவேண்டும். நம் அசலான மக்களின் முகங்கள் திரையில் தெரிய வேண்டும்.

Wiki: இயக்குநர் ஞான. ராஜசேகரன்