Sunday, July 22, 2012

வெறுமனே சும்மா இருக்கிறேன்

“இப்போ என்னதான் செய்யுறீங்க?” என்ற கேள்வியை கடந்த இரண்டாண்டு காலமாகவே என்னைப் பார்க்கும் நண்பர்களும், உறவினர்களும், நலம் விரும்பிகளும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். “வெறுமனே சும்மா தான் இருக்கிறேன்” என்ற பதிலில் அவர்கள் உறைந்து போகிறார்கள். “இது பெரிய தப்பு இல்லைங்களா? பொறுப்பில்லாம இப்படி ஒன்னும் செய்யாம இருக்கலாமா?” என்ற கேள்வி அவர்களிடமிருந்து எழும் சமயம், “ஒன்றும் செய்யாமல் இருப்பது வேறு. சுற்றி நடப்பவற்றின் சாட்சியாக, வெற்றுக் கோப்பைபோல வெறுமனே சும்மா இருப்பது முற்றிலும் வேறு” என உதட்டிலிருந்து புன்னகை வழிய பதில் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

“என்னமோ சாமியார் மாதிரி பேசுற...! இதெல்லாம் நல்லதுக்கில்ல... வயசு இருக்கும்போதே ஓடியாடி சம்பாதிச்சிடனும்” என்கிறார்கள்.

முற்றிலும் பயம் தான் இவர்களிடம் ஒளிந்திருக்கிறது. இறந்த காலத்தின் வேர்கள் பற்றி, நிகழ்காலத்தில் முளைவிடும், எதிர்காலம் பற்றிய நிச்சயமில்லா தன்மை பற்றிய பயம். “காலத்தை உணராமல் பயத்தை உண்மையில் போக்க முடியாது” – என்கிறார் ஜே.கிருஷ்ணமூர்த்தி. இதனை பெரிதுபடுத்தி விவாதிப்பதற்கில்லை என்றாலும், ‘ஒன்றும் செய்யாமல்’ என்பது ‘வெறுமனே’-விலிருந்து துருவம் போல் விலகி நிற்கிறது என்பதை நம் மக்களுக்கு எதைக் கொண்டு புரிய வைக்க.

“Being Still is not the same thing as doing nothing” என ‘கராடே கிட்’ படத்தில் ஜேடன் ஸ்மித்திடம் (jaden smith) ஜாக்கிசான் சொல்வதுபோல ஓர் இடம் வரும். இந்த உன்னத தத்துவத்தை எத்தனைபேர் கவனித்திருப்போம். வாழ்வின் சாரமே இந்த ஒற்றை வரியில் தான் அடங்கியிருக்கிறது என்பது என்னுடைய எண்ணம். சில நொடிகளில் காற்றில் கரைந்து தேய்ந்துபோகும் இந்த ஒற்றை வரி தரிசனத்தை, பாறையானது அடைகாக்கும் உயிர்ப்புள்ள தேரையைப்போல வாழ்வெல்லாம் அடைகாக்க ஆசைப்படுகிறேன்.

புத்த நிலையின் நான்கில் ஒன்றை உரசத் துடிக்கும் பிக்குகளும், ஜென் துறவிகளும், சூபிகளும், சித்தர்களும், பக்கிர்களும் – இந்த ‘Being still’ என்ற சூட்சமத்தில் தானே சூல்கொள்ளப் போராடுகிறார்கள். அதில் தானே இன்பமும் இருக்கிறது.

“அதெப்படி வெறுமனே இருக்க முடியும்? போர் அடிக்காதா?” – என்ற கேள்வி இன்னும் சுவாரஸ்யம் நிறைந்தது.

இதற்கும் என்னிடம் பதிலில்லை. என்றாலும் ஆயிரமாயிரம் புதிர்களும், ஆயிரமாயிரம் திருப்பங்களும் நிறைந்தது தானே வாழ்க்கை. சிலசமயம் பேருந்துகளில் பார்த்ததுண்டு. விடுபட்ட கட்டங்களில் வார்த்தைகளையும், எண்களையும் இட்டு நிரப்பும் விளையாட்டை, நாற்பது வயதைக் கடந்தவர்கள் கவனம் பிசகாமல் விளையாடுவதைக் கண்டதுண்டு. ‘குறுக்கெழுத்து, சொதோகு’ – என ஏதேதோ பெயர் சொல்லி விளையாடுகிறார்கள். அவற்றையெல்லாம் விட வாழ்வின் யதார்த்தப் புதிரை எதிர்நோக்குவதும், ஆர்வத்துடன் சிக்கவிழ்ப்பதும் எவ்வளவு சுவாரஸ்யம் நிறைந்தது.

இங்கு சலிப்பானது எங்குதான் முளைவிடுகிறதோ தெரியவில்லை. “படிப்போ, பணமோ, புகழோ, வேலையோ, பெண்ணோ, சிற்றின்பமோ” – ஏதோ ஒன்றை அடைய விரும்புவது தவறில்லை. அதற்காக முக்காலத்தையும் அடகு வைக்க வேண்டுமா என்ன? சலிக்காத பயணமாகத் தான் வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது. அதில் அறியப்படாத பல முகங்கள் தலை காட்டிவிட்டுச் செல்கிறார்கள். குளத்தில் எறிந்த கல்போல அவர்களின் நினைவுகள் சலனத்தை ஏற்படுத்த, சலிப்பானது ஆழம்கானா களிம்புச் சேற்றில் புதைந்து கிடக்கிறது என்று நினைக்கிறேன். இதுவரை சலிப்பின் சுவடைக் கூட என்னால் காண முடியவில்லை.

“உங்களுடைய டெய்லி ரொட்டின்ஸ் தான் என்ன?”

போதுமான அளவு சாப்பிடுவதும், தூங்குவதும் தான் பிரதானம். மீதி நேரத்தில் பயணம் செய்வேன். குறைவாக தமிழ் புத்தகங்கள் படிக்கிறேன். யாரேனும் சந்திக்க அழைத்தால் நேரில் சென்று உரையாடுகிறேன். தட்ஸ் இட்.

“தமிழ் புக்ஸ் படிச்சா என்ன பிரயோஜனம்? இங்கிலீஷ் புக்ஸ் படிச்சா நாலேஜ்-ஆவுது வளரும் இல்ல?”

உஹ்... வேதாளம் போல் தொடரும் கேள்வி இது. "அறிவானது நிம்மதியைக் கெடுத்து விடும். இயந்தர கதியில் ஓட நம்மைத் தயாற்படுத்திவிடும். ஆகவே அதனைப் பெருக்கிக் கொள்ள எனக்கு விருப்பமில்லை" என சுருக்கமாக முடித்துக் கொள்ள பழகிவிட்டேன்.

"அப்போ... வாழ்க்கையில் என்ன தான் செய்வதாக உத்தேசம்?"

என்னைப் பார்த்து புன்னகை செய்பவர்களுக்கு புன்னகைக்கப் போகிறேன். என்னிடம் கைகொடுத்து பேசுபவர்களிடம் மகிழ்ச்சியுடன் பேசப் போகிறேன். அவ்வளவே...

"இதெல்லாம் உருப்படுறதுக்கான வழியில்லை...! நாசமா போகப்போற?" என்று சபிப்பதுபோல் அக்கறையாகப் பேசுகிறார்கள்.

நான் பள்ளி வாழ்க்கையில் சுமார். கல்லூரி வாழ்க்கையில் மிக மட்டம். இதையெல்லாம் மீறி ஏதோ நாலுபேர் நின்று அக்கறையுடன் பேசும்படி வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ஆனால் படிப்பில் தோல்வி கண்டபோதெல்லாம் "நீ ரொம்ப கஷ்டப் படப் போற... நாசமாப் போகப்போற" என்று பயத்தை விதைத்தார்கள். உணவகத்தின் எச்சில் டேபிளை தொடைக்கும் வேலைக்குத் தான் லாயக்கி என்று பரிகசித்தார்கள். அந்த நாட்களில் மன அழுத்தத்தின், உணர்ச்சிக் கொந்தளிப்பின் உச்சத்தில் இருந்தேன். காலம் என்னைக் கறை தேற்றியது.

செய்யும் இடத்தின் பாப்புலாரிட்டியோ (Brand Name), செய்யும் வேலையோ நம்மை அடையாள படுத்திவிடாது. செய் நேர்த்திதான் காலம் கடந்தும் நிற்கும். அதிலுள்ள புதுமைதான் நிகழ் காலத்திலும் மெச்சப்படும் என்பது என் எண்ணம். ஆகவே, ஒரு பொதுக் கழிப்பிடத்தைக் காண்பித்து சுத்தம் செய்யும்படி கேட்டுக் கொண்டால், என்னுடைய தன்மை மாறாமல், சுயமரியாதையை விட்டுக் கொடுக்காமல், கொடுத்த வேலையை எப்படிச் செய்யலாம் என்று யோசிப்பேன்.

மேலும், "மொள்ளமாரி முடிச்சவிக்கி எல்லாம் நல்லா வரும்போது... நமக்கு என்னங்க கொறை"... நமக்கும் நாலு நல்ல உள்ளங்கள் இருக்கத் தானே செய்யுறாங்க.

"ம்ஹூம்... ஒரு கால்கட்டு போட்டால் தான் திருந்துவன்னு நெனைக்கிறேன்?" என்கிறார்கள்.

இதென்ன கதை. கல்யாணம் என்பது மன நிறைவுடன் வாழ்வதற்குத் தானே. அதை ஏன் சிறைபடுத்தும் வைபவமாகப் பார்க்க வேண்டும்? இந்தப் பொதுப்புத்தி மிகத் தவறான வாதம். யூ பிளடி ஃபூல்ஸ்.... யூ ஹவ் டு சேஞ்ச்ஜ் யுவர் மென்டாலிட்டி...

"ஆகட்டும் பிறகு பார்ப்போம்!" என்கிறார்கள். எனக்குத் தெரியவில்லை? ஏன் இவர்கள் வாழ்க்கையை பணம் ஈட்டும் ஒரு வியாபாரமாகவே பார்க்கிறார்கள் என்று!

"சரி... கல்யாணமாகி ஒரு கொழந்த பொறக்கட்டும்!" என்கிறார்கள்.

அதைத் தான் நானும் சொல்கிறேன். அதது நடக்கும்போது நடக்கட்டும். அதன் பிறகு பார்த்துக் கொள்வோம். அதுவரை நிகழ்காலத்தில் சந்தோஷமாக வாழ்ந்துவிட்டுப் போக வேண்டியது தானே. ஒவ்வொரு நாள் கண்விழிக்கும் போதும் நினைப்பதுண்டு, "இன்றைய தினமே பூமியில் எனக்கு கடைசி தினமாகவும் இருக்கலாம்" என்று.

ஆகவே காட்டாற்று வெள்ளம் போல, சுழன்றோடும் காற்றைப் போல, வழிந்து செல்லும் மேகம் போல, சிறகடித்துப் பறக்கும் பறவைபோல... இன்னும் இன்னும் கட்டற எல்லாவற்றையும் போல இருந்துவிட்டுப் போகவே ஆசைப்படுகிறேன்... எனக்கான எல்லா உறவுகளையும் அரவணைத்துக் கொண்டு... பாரதி சொல்வானே "விசைகொண்டு எறிந்த பந்தைப் போல" என்று அதைப் போல...

வாழ்க்கை என்பது வாழ்ந்து பார்ப்பது. எனவே அதன் போக்கில் வாழ்ந்துதான் பார்ப்போமே. எதிர்காலம் குறித்த தேவையில்லாத சஞ்சலங்கள் எதற்கு.

சுபம்... மங்களம்...

Tuesday, July 17, 2012

தமிழ் ஸ்டுடியோ – அறச்சீற்றம்

கொதிக்கும் உலையை மூடலாம், ஊர் வாயை மூட முடியுமா?

தமிழ் ஸ்டுடியோ அருண் தனிப்பட்ட முறையில் நல்ல நண்பர். அருமையானவரும் கூட. அவரின் உற்ற நண்பர்களான குணா மற்றும் தயாளனையும் நன்கறிவேன். ஆழமான நட்பு இல்லையென்றாலும், எங்காவது சந்தித்தால் நலம் விசாரித்துக் கொள்ளும் அளவிற்கு பழக்கம். மூன்று ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, அருணும் குணாவும் தனியாளாக போராடிக் கொண்டிருந்த நாட்களிலிருந்தே தெரியும். ஆரம்பத்தில் அவர்களுடைய கவனம் முழுவதும் குறும்படங்களின் மீதுதான் இருந்தது. பின் ‘படிமை’ என்ற குறும்பட பயிற்சிப் பட்டறையைத் துவங்கினார்கள். அதில் சேர்ந்து பயின்ற சில தம்பிகள் கூட எனக்குப் பரிட்சயம் உண்டு. இன்னும் சொல்லப் போனால், தமிழீழம் சார்ந்த குறும்படமான “18 தீக்குச்சியை” மருமகன் முத்து தயாரிக்க முன்வந்த போது படிமையின் பயிற்சி மாணவரான ‘செந்தூரனை’த் தான் ஈழத் தமிழ் உட்சரிப்பு சரிபார்பிற்காக நாடினேன்.

பிறகு “கதை சொல்லி, கொஞ்சம் தேநீர் கொஞ்சம் அரட்டை, ஊர் சுற்றலாம் வாங்க” என அவர்களுடைய முயற்சி பல துறைகள் சார்ந்தும் விரிந்து சென்றது. கேணி சந்திப்பின் ஒலி நாடாக்களை அவர்களுக்குக் கொடுத்து தமிழ் ஸ்டுடியோ இணையப் பக்கத்தில் கூட போடச் சொல்லி இருக்கிறேன். அவருடைய சீரிய பங்களிப்பு ஒருபுறம் இருக்கட்டும். நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருக்கிறதுதானே? பூவும் தலையும் சுண்டிவிட்டால் தானே தெரியும்.

கொஞ்ச நாட்களுக்கு முன்பு தமிழ் எழுத்தாளர்கள் பற்றி அருண் ஒரு ஸ்டேடஸ் போட்டிருந்தார். அணு உலைக்கு எதிராக எழுத்தாளர்கள் முழு மூச்சில் செயல்படவில்லை என்று. அவர்கள் தெருவில் இறங்கி போராட முன்வர வேண்டும் என்றும் சொல்லாமல் சொல்லியிருந்தார். அவர்களுக்கு பொறுப்பில்லை என்ற தொனியிலும் சொல்லியிருந்தார். அதற்கு பின்வருமாறு நான் மறுமொழி கூறியிருந்தேன்.

“இதோ பாருங்கள் அருண். தெரியாமல் பேசக் கூடாது. சாகித்யமி அகாடமி விருது வாங்கியவர்கள் உட்பட முக்கியமான எழுத்தாளர்கள் உட்பட 25 எழுத்தாளர்கள் முதலமைச்சரை காண வேண்டி நேரம் கேட்டிருக்கிறார்கள். இன்று வரை அவர்களைக் காண முதல்வர் நேரம் கொடுக்கவில்லை. எல்லோரும் கடிதத்தில் கையொப்பம் இட்டிருக்கிறார்கள்” என்றும் சொல்லியிருந்தேன். (ஞாநியும் பாஸ்கர் சக்தியும் அவர்களில் அடங்குவர்.) அதுவுமில்லாமல் அணு உலை அபாயம் பற்றி கவிஞர்களும் எழுத்தாளர்களும் தொடர்ந்து குரல் கொடுத்து வருவது யாவரும் அறிந்ததே என்றும் சொல்லியிருந்தேன்.

இதுபோன்ற அடுத்தடுத்த பின்னூட்டத்தைப் பார்த்தவுடன் ஸ்டேடசையே டெலிட் செய்துவிட்டார். சரி போகட்டும் அவருடைய அணுகல் முறை அப்படி என்று விட்டுவிட்டேன்.

அடுத்து கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் “நாளைய இயக்குனர்” நிகழ்ச்சி பற்றி எதோ பகிர்ந்திருந்தார். அதற்கு அவருடைய பின்தொடர்தலில் இருக்கும் வளர்ந்துவரும் சினிமாக் கலைஞர்கள் வறுத்தெடுத்து விட்டார்கள். எதோ நானும் என்னுடைய குறை அறிவிற்கு எட்டிய சில கேள்விகளை எழுப்பி இருந்தேன். அதற்கு அவருடைய பதில் “உங்களுக்கு பதில் சொல்ல விருப்பமில்லை” என்பதாகத் தான் இருந்தது.

அடுத்து அ. முத்துலிங்கத்தின் பவித்ரா சிறுகதையை மருமகன் முத்து தயாரித்து, விக்னேஷ்வரன் விஜயன் ‘சித்ரா’ என்ற குறும்படமாக எடுத்திருந்தான். அதற்கு தமிழக அளவில் இரண்டு விருதுகள் கிடைத்தது. அதில் தமுஎகச அளித்த முதல் பரிசு குறிப்பிடத்தக்கது. இந்த குரும்படத்தைப் பற்றி திரு. அருண் அவர்கள் ஒரு ஸ்டேடஸ் பகிர்ந்திருந்தார்.

/-- நிறைய நல்ல குறும்படங்களை இந்த ஆண்டு பார்த்தேன். ஆனால் நெய்வேலி புத்தக காட்சியில் பரிசு பெற்ற படங்களை விட அவை நல்ல படங்கள். தவிர சித்ரா அ. முத்துலிங்கம் அவர்களின் கதை என்பதை விட படம் அவ்வளவு சிறப்பானது என்று சொல்ல என்னால் முடியவில்லை. இப்படி ஒரு படம் எடுக்கிறோம் என்று முத்துலிங்கம் அவர்களிடம் அனுமதியோ, அல்லது எடுத்த பிறகோ அவருக்கு தெரிவிக்கவோ இல்லை என்று வேறு கேள்விப் பட்டேன்.

திருடி எடுக்கப்படும் படங்களுக்கும், இதற்கும் என்ன வித்தியாசம். --/

அதற்கு பின்வருமாறு நான் பதில் சொல்லியிருந்தேன்.
/-- இப்படி ஒரு படம் எடுக்கிறோம் என்று முத்துலிங்கம் அவர்களிடம் அனுமதியோ, அல்லது எடுத்த பிறகோ அவருக்கு தெரிவிக்கவோ இல்லை என்று வேறு கேள்விப் பட்டேன்.--/

அ முத்துலிங்கமே கனடா திரைப்பட விழாவிற்கு இதன் ஒரு பிரதியை அனுப்பி வைக்குமாறு கேட்டிருப்பதாக அதன் இயக்குனர் நீண்ட நாட்களுக்கு முன்பு தெரியப்படுத்தி இருந்தார்.

/-- திருடி எடுக்கப்படும் படங்களுக்கும், இதற்கும் என்ன வித்தியாசம்.--/

முழு விஷயம் தெரியாமல் பேசக்கூடாது தோழர்களே. அந்தக் கதையை பாலு மகேந்திரா எடுப்பதற்காக உரிமம் பெற்றிருந்தார். அது சார்ந்து பாலு மகேந்திராவுடனும் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது என்பதுதான் உண்மை,

இலக்கியத்தை நாடி காட்சிப் படுத்துபவர்கள் மிகக் குறைவு. அவர்களைக் கொச்சைப் படுத்தாதீர்கள். என்றும் சொல்லியிருந்தேன். அதனுடன் அ முத்துலிங்கம் விக்னேஸ்வரனை பாராட்டி எழுதியிருந்த சுட்டியையும் கொடுத்திருந்தேன்: http://amuttu.net/viewArticle/getArticle/276

அதோடு அருண் வேறொரு ஸ்டேடஸ்-க்கு பார்த்து பறந்துவிட்டார். சமீபத்தில் ‘பருத்திவீரன்’ படம் பற்றி அடூர் கோபாலகிருஷ்ணன் சொல்லியிருப்பதாக ஏதோ ஒன்றை பகிர்ந்திருந்தார். பகிர்வின் முடிவில் “ஏதும் தெரியாமலே தையா தக்கா” என்று குதிக்க வேண்டாம் என்றும் எழுதியிருந்தார். கவிஞர் மகுடேஸ்வரன் உட்பட இன்னும் சிலர் அதைப் பற்றிய மாற்றுக் கருத்தை முன் வைத்திருந்தனர். அவர்களில் நானும் ஒருவன். மற்றவர்களைவிட என்னுடைய கருத்து அருணை கலக்கப்படுத்தி இருக்க வேண்டும். மேற்கூறிய விஷயங்களைத் தான் பகிர்ந்திருந்தேன் வேறொன்றும் இல்லை.

முடிவில் இப்படிச் சொல்லியிருந்தேன், “நீங்கள் ஆரம்பத்தில் இருந்தது போல இல்லை அருண். கூட்டம் சேர்ந்துவிட்டது. அகவே உங்களை விளம்பரப் படுத்திக் கொள்கிறீர்களோ என்ற சந்தேகப் பார்வை வலுக்கிறது. மேலும் உங்களுடைய அரைவேக்காட்டுத் தனமான பகிர்தல்கள் அயர்ச்சியை ஏற்படுத்துகிறது” என்ற பொருள் வரும்படி எதோ சொல்லியிருந்தேன். ரிஷி மூலத்திலிருந்து சில விஷயங்களை சொல்லி இருந்ததால் என்னுடைய பின்னூட்டங்களை அழித்ததுடன், என்னையும் நட்பு வட்டத்திலிருந்து பிளாக் செய்துவிட்டார். அதுகூட என்னுடைய தம்பி மணி பார்த்து சொல்லியதும் தான் தெரிய வந்தது.

மேலும் அருண் அவருடைய ஸ்டேடசில் இப்படிப் பகிர்ந்திருக்கிறாம், “அருண் மற்றும் தமிழ் ஸ்டுடியோ பற்றி எதுவும் தெரியாமல், காழ்ப்புடன் கருத்து தெரிவித்திருந்தமையால் என்னை நண்பர் வட்டத்திலிருந்து நீக்கிவிட்டதாக கவிஞர் மகுடேஸ்வரனுக்கு” பதில் சொல்லி இருக்கிறார் போல. நான் என்னத்தைக் கண்டேன். திருநள்ளாறில் தொலைத்ததை மீண்டும் சென்று யாரும் சீண்டுவார்களா என்ன? விட்டது எல்லாம்....

நேர்மையாக விமர்சனத்தை அணுகவேண்டும் என்று ஸ்டேடசுக்கு ஸ்டேடஸ் புரட்சி பேசும் அருண், என்னை நட்பு வட்டத்தில் வைத்துக் கொண்டே பேசி இருக்கலாமே. எது எப்படியோ?! எனக்கு நிம்மதிதான்.

என்றாலும் “புரியவில்லை என்ற ஃபேஸ் நண்பர்களுக்காக” மேலும் ஒரு விஷயத்தை பகிர விழைகிறேன். ‘வழக்கு எண் 18/9’ – பற்றி கறாரான விமர்சனத்தை அருண் முன் வைத்திருக்கிறார். அருண் ‘என்ன பேசினார்? ஏது பேசினார்?’ என்று எனக்குத் தெரியாது. எரிச்சலுற்ற இயக்குனர் வசந்தபாலன் அருணை நட்பு வட்டத்திலிருந்து நீக்கி இருக்கிறார். உடனே அருண் கொண்ட அறத்சீற்றம் இருக்கிறதே. அது சிங்கத்தின் கர்ஜனை!

வசந்தபாலன் நேர்மையாக விமர்சனத்தை அணுகாமல் தன்னை ஒதுக்கிவிட்டார். என்று புலம்பித் தள்ளியிருந்தார். நான் கூட அதனை ஷேர் செய்திருந்தேன். அதுவும் பின்வருமாறு எழுதி...

“மனிதன் ஓரமாகச் சென்று ஒதுக்கி வைப்பவை மட்டுமல்ல மலம். மனிதனை ஒதுக்கி வைத்தால் அவனும் மலமே” – என்று சொல்லியது ,மட்டுமல்லாமல், வசந்தபாலனுக்கு என்னுடைய கண்டனங்களையும் தெரியப் படுத்தி இருந்தேன். இன்று ‘என்னை’ - அருண் ஒதுக்கி வைத்திருக்கிறார். இதைப் பற்றிதான் “வசந்தபாலன் உடைத்தால் பொன் சட்டி!”, “அருண் உடைத்தால் மண் சட்டியா?” என்று கேட்டிருந்தேன். வேறொன்றும் இல்லை தோழர்களே. இப்பொழுது புரிந்ததா?

குறிப்பு: ஃபேஸ் குடுமிப்பிடி விமர்சன கலாட்டாவில் குழப்பம் அடைந்த நண்பர்களுகு சமர்ப்பணம்.

Wednesday, July 11, 2012

பொய்யாய் செதுக்கிய நாட்குறிப்பு - 01

அன்றொருநாள் பெருஞ்சாரலுடன் நல்ல காற்று. கொடுத்து வைத்தவன் போல், வீட்டின் முற்றத்தில் இருந்த பிரம்புக் கூடையில் ஆடிக் கொண்டிருந்தேன். மேகத்தின் உரசல் மின்னலென வெட்ட, இடியானது மழையுடன் சல்லாபிக்கிறது. அறிமுகமான நண்பர் செல்பேசியில் அழைத்தார். அந்த துக்கச் செய்தியை நான் எதிர்பார்க்கவில்லை. தொடர்ந்து பேசியவர்...

"கிருஷ்ணா, நம்ம ஃஷார்ட் பில்முல ஒரு சாங்கு இருக்கு. டியூன் கூட ரெடி. பாடல் வரிகளை நீங்க தான் எழுதுறீங்க" என்றார்.

எனக்கு ஷாக் அடித்தது போல இருந்தது. வம்சத்தின் நலம் கருதி, தேவவிரதன் பிரம்மச்சரிய விரதம் பூண்டு பீஷ்மர் ஆனது போல, உலகை உய்விக்க வாழ்நாளில் ஒருக்காலும் கவிஞன் ஆவதில்லை என நானும் சபதம் எடுத்திருப்பதை நண்பருக்கு விளக்கமாகக் கூறினேன். அவரோ புரிந்து கொண்டபாடில்லை. கொட்டித் தீர்க்கும் மழையை ரசிக்க விடாமல் அவரும் ஒற்றைக் கால் கொக்குபோல தன்னுடைய நிலையில் உறுதியாக நிற்கிறார். தூக்கம் வருவதாக பொய்சொல்லி, தொடர்பை துண்டித்துக்கொண்டு மழையை ரசிக்கத் தொடங்கினேன்.

நீண்ட நாள் கழித்து அதே நண்பர், "குறும்படம் முடிந்து விட்டதாகவும், அவசியம் திரையிடலுக்கு வரவேண்டும்" எனவும் செல்பேசியில் அழைப்பு விடுத்தார். ஏ. வி. எம் ஸ்டுடியோவில் நடந்த திரையிடலுக்கு திரளான இளசுகள் வந்திருந்தனர். "இவன நம்பி இவ்ளோ பேர் எந்த தைரியத்தில் வந்திருக்காங்க" என்று நினைத்துக் கொண்டேன். அருகில் சென்று "சீப் கஸ்ட்" யாரென்று கேட்டேன். கொலையான வெறியுடன் மெட்டமைத்த இசை வல்லுநர் என்றார்கள். ஆமாம்... இங்ஙனக்குல்லையே கேட்டுக்குறா மாதிரி மியூசிக் நோட்ஸ் எழுதுபவர்கள் வெறும் இசை அமைப்பாளர்கள். அங்கிங்கெனாதபடி அகிலமெல்லாம் கேக்குறா மாதிரி மியூசிக் அடிச்சா ((காப்பி)) அவங்க பரிசுத்தமான இசை வல்லுநர்கள் என்பது நம்மோர் கணக்கு.

"வல்லுனரும்...இதோ வருவார், அதோ வருவார்" என்று காத்துக் கிடந்தார்கள். பூப்பெய்தியவள் பிள்ளைபெற்று, பேரப் பிள்ளையும் கண்டு, பிடிச்சாம்பலாய் மாறவேண்டி காடுகூட செல்லும் நிலை வரலாம், அந்த செலப்ரிட்டி தான் வந்தபாடில்லை. நண்பருக்கு முதல் அனுபவம் என்பதால் பதட்டத்துடன் இருந்தார். மெல்ல நெருங்கி யோசனை சொன்னேன். "நீங்கள் ஏன் திரையிடலை ஆரம்பிக்கக் கூடாது?. இவ்வளவுபேர் எதற்காக காத்திருக்க வேண்டும்? இது அநியாயம் இல்லையா?"

"செலேப்ரிட்டி கோச்சிப்பாரே கிருஷ்ணா" என்றார்.

"கோவம் வந்தா கோழிப் பீயில கொண்டு கையை வைக்கச் சொல். மேலதிகமாக உன்னுடைய நடுவிரலை மட்டும் அவருடைய முகத்திற்கு நேராகக் காண்பி" என்றேன்.

"பாட்டெழுத மாட்டேன்னு சொன்னிங்களே, அன்னைக்கே காட்டியிருக்க வேண்டும். இதோ இப்போ காட்டறேன் பாத்துக்கோங்க" என்று முகத்திற்கு நேராக விரலைக் காண்பித்தார். பதிலேதும் சொல்லாமல் இருட்டறையில் சென்று அமர்ந்துகொண்டேன். அழுதிருந்தால் கூட யாருக்குத் தெரியப்போகிறது. ஆறுதல் சொல்ல விஸ்காம் மாணவர் தினேஷ் ஆதி மட்டுமே அருகில் இருந்தார். ஆரம்பத்தில் பாடல் ஒளிபரப்பானது. வரிகள் கூட கேட்கும் படியாகத் தான் இருந்தது. அதைத் தொடர்ந்து திரையிடல் முடிந்து வெளியில் வந்ததும் தான் விசாரிக்கத் தோன்றியது. அந்தப் பாடலை எழுதியது யாரென்று?. படத்தின் இயக்குனரே பாடல் வரிகளை எழுதியதாகச் சொன்னார்கள். மிக மோசமான படமாக்களுக்கும், சுமாரான வரிகளுக்கும், கேட்கும்படியான இசைக்கும் மௌனத்தால் வாழ்த்து சொல்லி விடைபெற்று வீடு திரும்பினேன்.

சமீபத்தில் அந்த நண்பர் மீண்டும் அழைத்தார். "கிருஷ்ணா, ஒரு டெலிபிலிம் எடுக்கப்போறேன். ஒரு டீம் ஃபார்ம் பண்ணி தீயா ஒழட்சிட்டு இருக்கோம். நீங்க ப்ரொடக்ஷன் மேனேஜரா ரோல் எடுத்துக்க முடியுமா? இட்ஸ் எ மேட்டர் ஆஃப் மணி. தட்ஸ் வொய்?" என்றார்.

இங்குதான் தோழரின் புத்திக் கூர்மையை ஆலிங்கனம் செய்ய வேண்டும். திருடன் என ஊருக்குத் தெரிந்தவன் தானே காவலுக்கு உகந்தவன். என்றாலும் சுதாரித்துக் கொண்டு அறிவுரை வழங்கினேன். "வெக்கிறதுக்கு எடமில்லன்னு மசால் வடைய கொண்டுட்டு போயி எலிப் பொந்துல வக்கலாமா? நானோ ஐ.டியில் வேலை செய்தவன். அதுவுமில்லாம கற்பூரம் கணக்கா கையில இருக்குற காசயெல்லாம் காத்துல கரக்கிறவன் நானு. இதெல்லாம் சரிப்பட்டு வராது. நீங்க வேற ஆளப் பாருங்க" என்றேன். நம்ம சர்க்கிள்ல இருக்க பூரா பயலுங்களும் திருடந்தான்னு இந்தாளு மோப்பம் புடிச்சிருப்பான் போல."உங்களுக்குத் தெரிஞ்சவங்க யாரையாவது ரெகமன்ட் பண்ணுங்க" என்றார்.

மண்டையில அடப்பெடுத்து யோசிச்சி பாத்ததுல உதவி இயக்குனர் யோகிதான் நினைவிற்கு வந்தான். தம்பியான தம்பியை அழைத்துக் கொண்டு தோழரிடம் சென்றேன். "இவ்வளோதான் பட்ஜெட், இதுதான் ஸ்டோரி" என ஒன்லைன் சொல்லியவரைப் பார்த்து யோகி சிரித்தான். தோழருக்குத் தெரியாதவாறு அவனைச் சீண்டி, "சிரிக்காதே... தப்பா நெனட்சிக்கப் போறாரு" என்று சமிஞ்ஞை செய்தேன். யுத்தக் களத்தில் நிற்பதுபோல் எதிரில் இருப்பதால் அவருக்குத் தெரியாமல் இருக்குமா என்ன?. சுதாரித்துக் கொண்டு யோகியைப் பார்த்து "ஏன்டா சிரிக்கிற? அவரென்ன பைத்தியக்காரனா? இல்ல அம்மணமா நிக்கிறானா? ஜாக்கரத ஆமான்னு..." நொங்கு நொங்கென பனை போல் வளர்ந்தவனின் தலையை எட்டி எட்டிக் கொட்டினேன்.

"நோவ்... சும்மா இருங்கண்ணா? இதே கதையதான் எங்க சாரு படமா எடுக்கப் போறாரு. ஸ்கிரிப்ட் வொர்க் போயிட்டு இருக்கு. பின்னே இவரு கூட எப்படி-ணா இருக்கது. அதெல்லாம் தப்பா போயிடும். நீங்க வேற ஆளப் பார்த்துக்கோங்க" என தேனீர் பருகிக் கொண்டிருந்த கண்ணாடித் தம்ளரை டங்கென வைத்துவிட்டு புறமுதுகைக் காட்டியவாறு நடந்து சென்றான். தோழரைக் கூப்பிட்டுக் காண்பித்தேன். "அவன் எதக் காமிட்சிக்குனு நடந்து போறான் பாத்தியா?".

"உலகத்துல எவ்வளோ பெரிய ஆளா இருந்தாலும் நமக்கு முன்னாடி நடந்து போனால், அவனோட முதுகுதான் தெரியும் கிருஷ்ணா" என்றார்.

"முதுகுக்குக் கீழதான் புட்டம் இருக்கு. அவன் நமக்கு சூத்த காம்சிட்டு போறான்டா நேந்து வுட்டப் பாவி. இந்த மானபங்கம் எனக்குத் தேவையா?" என்றேன்.

"இதெல்லாம் ஒண்ணுமே இல்ல கிருஷ்ணா. இன்னும் நம்ம எவ்வளவோ பாக்க வேண்டியிருக்கு" என்றார் உருக்கமாக.

"எனக்கெதுக்குடா இந்த மானங்கெட்ட பொழப்பு. இந்த நம்ம நம்ம-ன்ற சமாச்சாரத்த எல்லாம் இன்னியோட நிறுத்திக்கோ" என கோவத்தில் முஷ்டியை மடக்கி தோழருக்கு நடுவிரலைக் காண்பித்து நடக்கத் துவங்கினேன், நீட்டிய விரலால் செல்பேசியை எடுத்து சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு.