Monday, August 9, 2010

கேணி இலக்கிய சந்திப்பு - ஷாஜி

இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு தொடரும் கூட்டம் என்பதால் எப்பொழுதும் வருவதை விடக் குறைவாகவே நண்பர்கள் வந்திருந்தார்கள்.

திரையிசை மீதான கவனத்தையும், ஆராய்ச்சியையும் பொருட்படுத்தி ஷாஜி பேச இருப்பதாக ஞானி அறிவித்தார். முக்கியமாக கவனம் செலுத்தப் பட வேண்டிய துறைகளில் இதுவும் ஒன்று என்பது உண்மையே. இசையமைப்பாளர்கள், பாடகர்கள், பாடலாசிரியர்கள், அவர்களுடைய திறமை தனித்தன்மை என ஆங்காங்கு பேசப்பட்டாலும், எழுதப்பட்டாலும் நடு நிலைமையோடு எழுதப்படுகிறதா? விமர்சிக்கப்படுகிறதா? என்பதையும் கவனிக்க வேண்டும்.

பாடல்களை ஒளிபரப்பும் எந்த வானொலியைத் திருப்பினாலும் ஓயாத பேச்சு. அவையெல்லாம் பாடல்களையும், இசையையும் தவிர்த்த மற்ற பேச்சுக்கள். பாட்டுப் போட்டியை நடத்தும் எந்த ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியை பார்க்க நேர்ந்தாலும் ஆடுகிறார்கள். அது பாட்டுப் போட்டியா? நடனப் போட்டியா? இல்லை மாறுவேடப் போட்டியா என்று குழப்பமாக இருக்கிறது.

Jan 24 2007 - Maestro Illayaraja - Dasarathy தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியின் மூன்று பகுதிகளையும் தரவிறக்கிக் கேட்க முடியும் (http://www.itsdiff.com/Tamil2007.html). உங்களுக்குப் பிடிக்குமெனில் கேட்டுப் பாருங்கள். 4 வருடங்களுக்கு முன்பு கிடார் வாசிக்கக் கற்றுக் கொள்ள ஆரம்பித்த நாட்களில் கேட்டது. இன்று கேட்டாலும் அந்தப் பாடல்களின் நுணுக்கம் ஆச்சர்யப் பட வைக்கும். இளையராஜாவின் தீவிர ரசிகன் என்ற முறையில் அந்த நிகழ்ச்சியை விரும்பிக் கேட்டிருக்கிறேன். இவையெல்லாம் படிக்கக் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்திருக்கிறேன். அவற்றைப் போக்கும் வகையில் தான் அகிலன் (http://meedpu.blogspot.com) மற்றும் ஷாஜியின் (http://www.musicshaji.blogspot.com) வலைப் பூக்கள் எனக்குப் படிக்கக் கிடைத்தன.

இருவருமே தங்களுக்கு இசையைப் பற்றிய இலக்கண வடிவங்கள் தெரியாது, இனிமையாகப் பாட வராது என்று சொல்லிவிட்டுத்தான் அதைப் பற்றி எழுதுகிறார்கள். ஆகவே அவர்களுடைய ரசனை சார்ந்தும், தொழில் நுட்ப அறிவு, வியாபார அனுபவம் சார்ந்தும் தான் திரையிசையை அணுகுகிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதிலும் ஷாஜியின் திரையிசை அணுகு முறை கலைஞர்களின் தனிப்பட்ட வாழ்க்கையையும், ஆளுமையையும் அலசுவதாக இருக்கிறது. அதற்கான எதிர்வினையையும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அவர் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதை கேணியின் விவாதத்தின் பொழுது புரிந்துகொண்டேன்.

எப்பொழுது கேணிக்குச் சென்றாலும் பேப்பர், பென்சிலுடன் தான் உட்காருவேன். இந்த முறையும் அப்படித்தான் அமர்ந்திருந்தேன். கூட்டம் ஆரம்பிக்கும் நேரத்தில் வந்த பத்ரி பாக்கட்டிலிருந்து எதையோ எடுத்து ஒலிப் பெருக்கியின் அருகில் தலை கீழாகத் தொங்கவிட்டார். கோடை தாகத்தில் நாவறண்ட ஜீவன் தண்ணீர் குடிப்பது போல அந்தக் கருவியும் எந்தொரு சப்தங்களையும் மிச்சம் வைக்காமல் முழுங்கி விட்டது. விமான சப்தம், ஷாஜியின் பேச்சு, இருமல், நாய்க்குரைப்பு என எல்லாவற்றையும் கேட்கலாம். பத்ரியின் வலைப் பூவிற்குச் செல்லுங்கள்.

கேணி இலக்கிய சந்திப்பின் முழு ஒலி ஓடையையும் பத்ரியின் தளத்தில் படிக்கக் கிடைக்கிறது: http://thoughtsintamil.blogspot.com/2010/08/blog-post_9814.html

குறிப்பு:
1. ஒவ்வொரு மாதமும் இரண்டாம் ஞாயிறன்று நடைபெறும் கேணி சந்திப்பு, ஞாநியின் குடும்ப திருமணத்தை ஒட்டி செப்டம்பர் மாதம் மூன்றாம் ஞாயிறன்று நடக்க இருக்கிறது.
2. ஷாஜியின் இரண்டு புத்தகங்கள் உயிர்மையில் வாங்கக் கிடைக்கிறது.

Sunday, August 1, 2010

நீரிழிவு கண்காட்சி 2010

ஏறக்குறைய முப்பது வயதைத் தொடும் சூழ்நிலையில் இருப்பதால் கடந்த ஃபிப்ரவரி மாதம் Full body check up-ற்குச் செய்திருந்தேன். எனக்கான குறைகளாக மூன்று விஷயங்களை மருத்துவர்கள் பரிந்துரைத்தார்கள். சாப்பிட்ட இரண்டு மணிநேரம் கழித்து உங்களுடைய இரத்தத்திலுள்ள சக்கரையின் அளவு கொஞ்சம் கூடுதலாக இருக்கிறது. உடம்பில் இருக்க வேண்டிய நல்ல கொழுப்பின் அளவு (HDL) மிகவும் குறைவாக இருக்கிறது. சிறுநீரகப்பை கொஞ்சம் பலவீனமாக இருக்கிறது என்று அப்பல்லோ வைத்தியர்கள் ஆரூடம் சொன்னார்கள். கொழுப்பின் குறைபாட்டையும், சிறுநீரக பலவீனத்தையும் கொஞ்சம் மெனக்கெட்டால் சுலபமாக சரி செய்து விடலாம். நீரிழுவு மட்டும் மனிதனை மத்தளமாக மாற்றிவிடும். குறைந்தாலும் அடி, அதிகமானாலும் அடி என்று உயிரை எடுக்கும். ஆகவே சக்கரை சமந்தப்பட்ட உணவுகளை எடுத்துக் கொள்வதில் கொஞ்சம் கவனமாகவே இருக்கிறேன்.

இந்திய இளைஞர்களில் 18 முதல் 25 வயதுடைய 18 சதவீதத்தினருக்கு நீரிழிவு இருப்பதாக ஆய்வு கூறுகிறது. காரணம் நம்முடைய உணவு முறையும் வாழ்க்கை முறையும் தான். கிழங்கு, கார்போஹைட்றேட், இனிப்பு பானம் போன்றவற்றை அதிகமாக அன்றாட உணவில் பயன்படுத்துவதுதான் காரணம் என்று நினைக்கிறேன்.
தூங்கி எழுந்தும் எதுவும் சாப்பிடாமல் இரத்தத்தில் இருக்க வேண்டிய சக்கரையின் அளவு 70 முதல் 130 mg/dl. சாப்பிட்ட இரண்டுமணி நேரம் கழித்து இருக்க வேண்டிய அளவு 80 முதல் 140 mg/dl. குளுக்கோஸ் பானம் சாப்பிட்ட இரண்டு மணி நேரம் கழித்து எனக்கு இருப்பதோ 142 mg/dl. அதிகப்படியான 2mg/dl தான் என்னை இந்த பொருட்காட்சிக்கு அழைத்துச் சென்றது.

ராணி மெய்யம்மை ஹாலில் 30-ற்கும் அதிகமான ஸ்டால்களை அமைத்திருந்தார்கள். சர்க்கரை குறைபாட்டைத் தடுக்கும் முறைகளையும், வந்துவிட்டால் பாதுகாத்துக் கொள்ளும் முறைகளையும் ஒவ்வொரு ஸ்டாலிலும் விளக்கப் படத்துடன் ஒட்டி இருந்தார்கள். அதில் குறிப்பிட்டிருந்த சில...

1. தினம் 30 முதல் 40 நிமிட நடை பயணம்.
2. சிரிவிகித உணவு எடுத்துக் கொள்ளுதல்
3. காய்கறிகளை அதிகமாக சேர்த்துக் கொள்ளுதல்
4. பழச்சாறு குடிக்காமல், முழு பழத்தையும் சாப்பிடுதல்
5. துரித உணவுகளைத் தவிர்த்தல்
6. சரியான இடைவெளியில் சாப்பிடுதல்
7. தினம் உடற்பயிற்சி செய்தல்
8. கீரை மற்றும் நார்சத்து உணவுகளை சாப்பிடுதல்

-என்று ஒரு பட்டியலையே சொல்கிறார்கள். வந்ததும் வருந்துவதைவிட, வருமுன் காப்பதே நல்லது என்பதால் அவர்கள் பரிந்துரைத்ததை அக்கறையுடன் பின்பற்றலாம் என்றிருக்கிறேன். நீரிழிவால் பதிக்கப்பட்ட கோரமான உடல்கூறு புகைப்படங்களை சில இடங்களில் ஒட்டி இருந்தார்கள். 'ஆவ்வ்வ்வவ் ...' என்றிருந்தது.

கண்காட்சிக்கு வந்திருந்தவர்களில் 93 சதவீதத்தினர் முதியவர்கள். 7 சதவீதம் மட்டுமே இளைஞர்கள் இருந்தார்கள். அவர்களிலும் பாதி பேர் மருத்துவ மாணவிகள். சர்க்கரை குறைபாடு இந்தியாவில் வேகமாக அதிகரித்து வருகிறது. அதைப் பற்றிய விழிப்புணர்வு நம்மவர்களுக்கு இல்லையென்றே நினைக்கிறேன். அதனை சரிக்கட்ட இந்த மாதிரி கண்காட்சி அவசியம் தேவை. வாய்ப்பிருந்தால் சென்று வாருங்கள் நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாம்..