Sunday, August 1, 2010

நீரிழிவு கண்காட்சி 2010

ஏறக்குறைய முப்பது வயதைத் தொடும் சூழ்நிலையில் இருப்பதால் கடந்த ஃபிப்ரவரி மாதம் Full body check up-ற்குச் செய்திருந்தேன். எனக்கான குறைகளாக மூன்று விஷயங்களை மருத்துவர்கள் பரிந்துரைத்தார்கள். சாப்பிட்ட இரண்டு மணிநேரம் கழித்து உங்களுடைய இரத்தத்திலுள்ள சக்கரையின் அளவு கொஞ்சம் கூடுதலாக இருக்கிறது. உடம்பில் இருக்க வேண்டிய நல்ல கொழுப்பின் அளவு (HDL) மிகவும் குறைவாக இருக்கிறது. சிறுநீரகப்பை கொஞ்சம் பலவீனமாக இருக்கிறது என்று அப்பல்லோ வைத்தியர்கள் ஆரூடம் சொன்னார்கள். கொழுப்பின் குறைபாட்டையும், சிறுநீரக பலவீனத்தையும் கொஞ்சம் மெனக்கெட்டால் சுலபமாக சரி செய்து விடலாம். நீரிழுவு மட்டும் மனிதனை மத்தளமாக மாற்றிவிடும். குறைந்தாலும் அடி, அதிகமானாலும் அடி என்று உயிரை எடுக்கும். ஆகவே சக்கரை சமந்தப்பட்ட உணவுகளை எடுத்துக் கொள்வதில் கொஞ்சம் கவனமாகவே இருக்கிறேன்.

இந்திய இளைஞர்களில் 18 முதல் 25 வயதுடைய 18 சதவீதத்தினருக்கு நீரிழிவு இருப்பதாக ஆய்வு கூறுகிறது. காரணம் நம்முடைய உணவு முறையும் வாழ்க்கை முறையும் தான். கிழங்கு, கார்போஹைட்றேட், இனிப்பு பானம் போன்றவற்றை அதிகமாக அன்றாட உணவில் பயன்படுத்துவதுதான் காரணம் என்று நினைக்கிறேன்.
தூங்கி எழுந்தும் எதுவும் சாப்பிடாமல் இரத்தத்தில் இருக்க வேண்டிய சக்கரையின் அளவு 70 முதல் 130 mg/dl. சாப்பிட்ட இரண்டுமணி நேரம் கழித்து இருக்க வேண்டிய அளவு 80 முதல் 140 mg/dl. குளுக்கோஸ் பானம் சாப்பிட்ட இரண்டு மணி நேரம் கழித்து எனக்கு இருப்பதோ 142 mg/dl. அதிகப்படியான 2mg/dl தான் என்னை இந்த பொருட்காட்சிக்கு அழைத்துச் சென்றது.

ராணி மெய்யம்மை ஹாலில் 30-ற்கும் அதிகமான ஸ்டால்களை அமைத்திருந்தார்கள். சர்க்கரை குறைபாட்டைத் தடுக்கும் முறைகளையும், வந்துவிட்டால் பாதுகாத்துக் கொள்ளும் முறைகளையும் ஒவ்வொரு ஸ்டாலிலும் விளக்கப் படத்துடன் ஒட்டி இருந்தார்கள். அதில் குறிப்பிட்டிருந்த சில...

1. தினம் 30 முதல் 40 நிமிட நடை பயணம்.
2. சிரிவிகித உணவு எடுத்துக் கொள்ளுதல்
3. காய்கறிகளை அதிகமாக சேர்த்துக் கொள்ளுதல்
4. பழச்சாறு குடிக்காமல், முழு பழத்தையும் சாப்பிடுதல்
5. துரித உணவுகளைத் தவிர்த்தல்
6. சரியான இடைவெளியில் சாப்பிடுதல்
7. தினம் உடற்பயிற்சி செய்தல்
8. கீரை மற்றும் நார்சத்து உணவுகளை சாப்பிடுதல்

-என்று ஒரு பட்டியலையே சொல்கிறார்கள். வந்ததும் வருந்துவதைவிட, வருமுன் காப்பதே நல்லது என்பதால் அவர்கள் பரிந்துரைத்ததை அக்கறையுடன் பின்பற்றலாம் என்றிருக்கிறேன். நீரிழிவால் பதிக்கப்பட்ட கோரமான உடல்கூறு புகைப்படங்களை சில இடங்களில் ஒட்டி இருந்தார்கள். 'ஆவ்வ்வ்வவ் ...' என்றிருந்தது.

கண்காட்சிக்கு வந்திருந்தவர்களில் 93 சதவீதத்தினர் முதியவர்கள். 7 சதவீதம் மட்டுமே இளைஞர்கள் இருந்தார்கள். அவர்களிலும் பாதி பேர் மருத்துவ மாணவிகள். சர்க்கரை குறைபாடு இந்தியாவில் வேகமாக அதிகரித்து வருகிறது. அதைப் பற்றிய விழிப்புணர்வு நம்மவர்களுக்கு இல்லையென்றே நினைக்கிறேன். அதனை சரிக்கட்ட இந்த மாதிரி கண்காட்சி அவசியம் தேவை. வாய்ப்பிருந்தால் சென்று வாருங்கள் நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாம்..

No comments:

Post a Comment