Monday, November 16, 2009

கேணி சந்திப்பு - அசோகமித்திரன்

இரண்டு நாட்களாக அடை மழை பெய்து கொண்டிருந்தது. வீட்டின் ஜன்னலருகில் அமர்ந்து தூறிக் கொண்டிருக்கும் வானத்தையே பார்த்துக் கொண்டிருக்கலாம் என்றிருந்தது. இரண்டாம் ஞாயிறு என்பதால் இருப்புக் கொள்ளவில்லை. அசோகமித்திரன் பங்கு பெற்று கேணியில் உரையாற்ற இருக்கிறார். மழை என்னவோ நின்றபாடில்லை.

"கேணி சந்திப்பு நிச்சயமாக நடைபெறும் கண்டிப்பாக வரவும்" என்று பி
பு குறுஞ்செய்திஅனுப்பியிருந்தார். உடனே அவருக்கு ஃபோன் செய்து "என்னங்க நிஜமாவா சொல்றீங்க? இவ்வளோ மழை பொழியுதே... ரொம்ப வயசானவரு... எதுக்கு அவர தொந்தரவு செய்யணும். அடுத்த மாதம் சந்திப்பை வச்சிக்கலாமே... அவருக்கு வேறு சமீப காலமா உடம்பு சரியில்லையே" என்று கூறினேன்.

"இல்லைங்க கிருஷ்ணா. ஞாநிகிட்ட கேட்டேன்... கண்டிப்பா கேணி சந்திப்பு நடக்கும்னு சொல்லிட்டாரு" என்று பதில் கூறினார்.

இனி விதி விட்ட வழி என்று ஞானியின் இல்லம் நோக்கிப் புறப்பட்டேன். நன்றாக பெய்து கொண்டிருந்த மழை உதயம் திரையரங்கில் இறங்கியதும் நின்ற மாதிரி தெரிந்தது. 'அந்த பயம் இருந்தால் சரி' என்று வானத்தைப் பார்த்து வருண பகவானை எச்சரித்தேன். ஞானி வீட்டின் நுழைவாயிலில் ஒரு வாளியில் தண்ணீரை வைத்திருந்தார்கள். கால்களைக் கழுவிக்கொண்டு உள்ளே சென்றேன். இந்த மாதக் கூட்டம் வீட்டிற்குள்தான் நடைபெறும் என்றார்கள். சாய்ந்துகொள்ள வசதியாக சுவரோரமாக அமர்ந்துகொண்டேன்.

எனக்கு வலப்பக்கத்தில்
இருந்தவர் எழுத்தாளர் பிரபஞ்சனின் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தார். ஓரக்கண்ணால் அவரைப் பார்த்தேன். அவரும் என்னைப் பார்த்தார். சிரித்துக் கொண்டோம்.

"இன்று வரவிருப்பது அசோகமித்திரன்" என்றேன்.

"அப்படியா?
இருக்கட்டுமே... புத்தகம் நன்றாக இருக்கிறது. அதனால் படித்துக் கொண்டிருக்கிறேன்.நீங்கள் என்ன செய்கிறீர்கள்?" என்றார்.
"நான் வேலை செய்துகொண்டிருக்கிறேன். நீங்கள் என்ன செய்கிறீர்கள்?"
"ஆங்கில இலக்கியம் படித்துக் கொண்டிருக்கிறேன்"
என்றார்.
அப்படியெனில் தமிழ் இலக்கிய சந்திப்பில் எப்படி ஆர்வம் வந்தது?
"எனக்கு கவிதை எழுதுவதில் விருப்பம் அதிகம். புத்தகம் கூட வெளியிட்டிருக்கிறேன்.
இன்று பார்த்து என்னுடைய புத்தகத்தை எடுத்துக் கொண்டு வரவில்லை."
"அதனால என்ன...எழுதிய கவிதையில் ஒன்றை சொல்லுங்கள் கேட்டுக்கொள்கிறேன். ..."

அவரும் ஹைக்கூ மாதிரி ஒரு கவிதையை எனக்குக் கூறினார். புரியவில்லை என்றதும் ஆர்வத்துடன் விளக்கிக் கூறினார். கவிதை கேட்ட மயக்கத்தில் இடப்பக்கமாகத் திரும்பினேன்.

மழையில் நனைந்த ஒருவர் அருகில் உட்கார்ந்தார். சிரித்ததும் பதிலுக்கு சிரித்தார்.
என்னைப்பற்றி விசாரித்து தெரிந்துகொண்டார். பதிலுக்கு நானும் விசாரித்தேன்.

"நீங்கள் என்ன செய்கிறீர்கள்?"
"நடித்துக்கொண்டிருக்கிறேன்..."
என்றார்.
"ஓ... நீங்கள் ஷேக்ஸ்பியரின் ரசிகரா?"
"நீங்க என்ன சார் சொல்றீங்க?" என்றார்.
"All the world's a stage, And all the men and women merely players - அப்படின்னு அவரு தானே சொல்லி இருக்காரு..."
"இல்லைங்க சார்... நான் வில்லனா நடிக்க சினிமாவில் முயற்சி செய்றேன். சில டிவி சீரியலிலும், டாகுமெண்டரி படங்களிலும் நடிச்சிக்கினு இருக்கறேன். ஆமா... இங்க என்ன சார் நடக்குது?" என்றார்.

"என்னை 'கிருஷ்ண பிரபு' என்றே கூப்பிடலாம். 'சார்' போடுற அளவிற்கு நான் இன்னும் பெரிய ஆள் ஆகலை. இது இலக்கிய கூட்டம். படைப்பிலக்கியம் பற்றி மூத்த எழுத்தாளர்கள்
வந்து பேசுவாங்க. சில நேரங்களில் சினிமாக்காரங்களும் வருவாங்க. ஆமா... இங்க எப்படி வந்தீங்க?" என்றேன்.

"
வண்டிய இந்த பக்கத்துல சர்வீசுக்கு விட்டிருக்கேன். அதை வாங்கலாம்னு போகும்போது இங்க ஒரே கூட்டம், மழை வேற ஓயாம கொட்டிக்குனு இருந்தது. அங்க இருக்காரே (பதிவர் அகத்தியன்) அவருதான் இங்க வாங்கன்னு கூப்பிட்டாரு. வந்துட்டேன்."

அடடா இது இலக்கிய கூட்டமாச்சே... அசோகமித்ரன்னு பேர்போன எழுத்தாளர் இங்க வரப் போறாரு. அவரோட நாங்க பேசப்போறோம். அவர் சிநிமாகாரன்களைப் பத்தி 'கரைந்த நிழல்கள்-னு ஒரு நாவல் எழுதி இருக்காரு. அவருடைய புலிக் கலைஞன் என்ற சிறுகதை மிகவும் பிரபலம். அதுவும் வேஷம் போடுறவன் பற்றியதுதான் என்று மூச்சுவிடாமல் பேசினேன்.

சுவாரஸ்யமே இல்லாமல்
"அப்படியா" என்றார்.

"தப்பா நெனைக்காதீங்க நடுவுல உட்கார்ந்தா பாதியில எழுந்து போக முடியாது. அதனால வாசல் ஓரமா உட்கார்ந்துக்கோங்க பிடிக்கலன்னா பாதியில போயிடலாம்" என்றேன்.

"இலிங்க, இவளோ தொலைவு வந்துட்டேன். முழுசுமா பார்த்துட்டு போயிடறேனே..." என்றார்.

வெளியில் பார்த்தேன் மழை தூறிக்கொண்டிருந்தது. அசோகமித்திரன் அவருக்கான இடத்தில் வந்தமர்ந்து பேச ஆரம்பித்தார். இடையில் ஞானி குறுக்கிட்டு "நான் வரவேற்புரை கொடுத்துவிடுகிறேனே" என்றார். "Sorry sorry. very sorry" என்று ஞானியைப் பேச அனுமதித்தார்.

தொடக்க உரையாக ஞானி பேசியதையும் அதைத் தொடர்ந்து அசோகமித்திரன் பேசியதையும் எழுத்தாளர் ரவி பிரகாஷ் அழகாக பதிவிட்டுள்ளார்: அசோகமித்திரனும் எனது மித்திரனும்!

அசோகமித்திரன் எந்த தலைப்பில் பேசவிருக்கிறார் என்று ஞானி அவருடைய முகப்புரையில் குறிப்பிடவில்லை. அசோகமித்ரனும் அதைப் பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. தனது உடல் உபாதைகளைப் பற்றி சக மனிதர்களிடம் பேசுவது போல பேச ஆரம்பித்தார். எழுத்தாளரா தான் வாழ்ந்த ஏழ்மையான நாட்களையும், சக எழுத்தாளர்களான ஜி நாகராஜன், கண்ணன் போன்றோரின் குடிப்பழக்கமும், அதனால் தான் பட்ட கஷ்டங்களையும் கூறிய பொழுது நெருடலாக இருந்தது.

ஒரு முறை எழுத்தாளர் கண்ணனுடைய குடும்பம் மிகுந்த வறுமையில் இருக்கவும், அவர்களுடைய குடும்பத்திற்கு தையல் இயந்திரம் வாங்கிக்கொடுக்க முடிவெடுத்திருக்கிறார். உடனே வங்கியில் கடன் வாங்க மேனேஜரை அணுகியிருக்கிறார்.

நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்? உங்களுக்கு நிரந்தர வருமானம் இருக்கிறதா? என்று இவரிடம் கேட்டிருக்கிறார்கள்.
எழுத்தாளருக்கு எங்கிருந்து நிரந்தர வருமானம் இருக்கப் போகிறது. இருந்தாலும் மிகுந்த சிரமத்திற்கிடையில் அந்த குடும்பத்திற்கு உதவியிருக்கிறார். சில நாட்களிலெல்லாம் அந்த மெஷினை அடகு வைத்து கண்ணன் குடித்திருக்கிறார். பிறகு வங்கிக் கடனை இவர்தான் தீர்த்தாராம்.

மகா குடிகாரனாக இருந்தாலும் கண்ணனுடைய மனைவி மக்கள் அவரிடம் அன்பாக இருந்தார்கள் என்று சொல்லி சந்தோஷப்பட்டார். "எங்கிருந்தாலும் அந்த பெண்கள் சந்தோஷமா இருக்கணும்" என்று ஆசீர்வதித்தார்.
சில நேரங்களில் மளிகை பொருட்கள் வாங்க வைத்திருக்கும் பணத்தை ஜி நாகராஜன் உரிமையுடன் எடுத்துக் கொள்வாராம். எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டாராம்.

இவையனைத்தையும் கேட்டுக்கொண்டிருக்கும் போது
துக்கம் அடைத்துக்கொண்டு வந்தது. ஏனோ தெரியவில்லை என்னுடைய உடல் பாரமாவதை உணர்ந்தேன். என்னடா என்று பார்த்தால் சினிமாக்கார சகா என்னுடைய தோல் மீது சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். 'தூங்குறவங்களை பாதியில எழுப்பினா ஆயுசு கம்மின்னு' எனக்கு சொல்லி இருக்காங்க. அதனால் பாரத்தை தாங்கிக் கொண்டேன்.

தூக்கம் களைந்து எழுந்த சகா "எனக்கு 6 மணிக்கு ஒருவரைப் பார்க்க வேண்டும். வெளிய போனா தப்பா நெனைப்பாங்களா? என்று கேட்டார்.

"ச்சீ... ச்சீ... அப்படி கூட யாராவது நெனைப்பாங்களா?" என்று சொன்ன போது என்னுடைய பாரம் குறைவதை உணர முடிந்தது.

வெளியே பார்த்தேன் மழை நின்றிருந்தது. காற்றில் குளிர்ச்சியுடன் அசோகமித்ரனின் பேச்சு கேட்டது.அவர் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

முன்பெல்லாம் இலக்கிய சந்திப்பாக இருக்கட்டும், கலந்துரையாடலாக இருக்கட்டும் முன்யோசனையுடன் செய்வார்கள். என்ன பேச வேண்டும் என்று யோசித்து செய்வார்கள். இப்பொழுதெல்லாம் அப்படியில்லாதது வருத்தமாக இருக்கிறது.

வரும்போது ஒரு மூட்டையில் குப்பையைக் கட்டி (ஞாநிக்காக அவர் கொண்டு வந்த புத்தகங்கள்) இங்க எடுத்து வந்து கொட்டியிருக்கிறேன். வீட்டில் இது போல இன்னும் நிறைய குப்பை இருக்கிறது அதைக் கொட்ட இடமில்லாமல் தவிக்கிறேன்.

இதில் முக்கியமான விஷயம் என்னவெனில் குப்பைத் தொட்டி எப்பொழுதுமே நிறைந்து வழிகிறது. என்னுடைய குப்பைகளையும் கொட்டினால் தொட்டியை மீறி வெளியில் வந்து பறக்கும். யாருடைய கையிலாவது அந்த குப்பைகள் மீண்டும் கிடைத்துவிடும் என்று பயமாக இருக்கிறது. ஆகவே காலியாகும் சமயத்தை எதிர் பார்க்கிறேன்.

'எழுத்தாளன்' என்பது நான் எப்போதோ பார்த்த வேலை. அதைப் பற்றி இப்போது பேச பயமாக இருக்கிறது.
இப்பொழுதெல்லாம் ஞாபக மறதி அதிகமாகியிருக்கிறது. எதைப் பற்றியும் பேச இயலவில்லை. சில நேரங்களில் கதைகளைப் படிக்கிறேன். யார் எழுதினார்கள் என்று மறந்துவிடுகிறேன். ஆகவே என்னுடைய உரையை இதனுடன் முடித்துக் கொள்கிறேன். ஏதாவது கேள்வி வேண்டுமானால் கேளுங்கள் என்றார்.

தண்ணீர், மானசரோவர், புலிக் கலைஞன் மற்றும் இதர சிறுகதைகளைப் பற்றி கேள்வி கேட்டார்கள்.
அவற்றில் சில...

1.
உங்களுக்கு ஆண்பிள்ளைகள் தானே இருக்கிறார்கள்... ஆனால் பெண்களைப் பற்றி நிறைய எழுதி இருக்கிறீர்களே?
எனக்கு இரண்டு சகோதரிகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள் என்றார்.

2.
உங்களுடைய நாவல் தண்ணீரைப் பற்றி?
எவ்வளோ பேரு பேசிட்டாங்க. கூட்டம் கூட்டமா பேசிட்டாங்க. நாங்க அந்த காலத்துல தண்ணிக்கு ரொம்ப கஷ்டப்பட்டோம். You know, my 4 years old son was sitting in the que for one bucket water. very sad.

3. இப்பொழுதெல்லாம் எழுத்தாளர்களுக்கு உடனுக்குடன் பாராட்டுகள் வருகிறது. உங்களுக்கு பாராட்டுகள் எப்படி வந்தது?
தபாலில் தான். உங்களுடைய படைப்பில் தகவல் பிழை இருக்கிறதே என்று ஒரே வரியில் இருக்கும்

4.
உங்களுடைய படைப்பு சினிமாவாக ஊடக மாற்றம் பெறாதது வருத்தம் இருக்கிறதா?
இல்லை. நான் எழுதுவது படிக்க தான். ஆனால் என்னுடைய புத்தகத்தில் உள்ள காட்சிகள் சில படங்களில் பார்க்க நேர்வதுண்டு. Dozen கணக்குல பார்த்திருக்கிறேன். புத்தகத்தை படித்துவிட்டு அதுபோல வைக்கிறார்களா! இயல்பாகவே அமைகிறதா என்று தெரியவில்லை.

5.
உங்களுடைய 'ஒற்றன்' நாவலில் ஒருவர் Chart போட்டு நாவல் எழுதினர் என்று குறிப்பிட்டுள்ளீர்கள்? (அடியேன் கேட்டது)
உண்மைதான். பேரு நாட்டு எழுத்தாளர். எழுத்தாளரின் பெயரையும் புத்தகத்தின் பெயரையும் குறிப்பிட்டார். புத்தகம் சரியாக விற்கவில்லை என்பதையும்கூறினார்.

6. உங்களுடைய காலங்களில் இந்த மாதிரி கூட்டங்கள் நடைபெற்றதா?
அப்படியெல்லாம் இல்லை. அவ்வளவு சுலபமா எந்த கூட்டமும் இருக்காது. அப்படியே கூடினாலும் அதற்கான முன்யோசனையுடன் கூடுவார்கள். இப்பொழுதெல்லாம் அப்படி நடக்கிறதா என்று தெரியவில்லை. என்னை பொறுத்தவரை எழுத்தாளர்கள் இந்த மாதிரி
க் கூட்டத்தில் பங்கு பெறுவதைத் தவிர்க்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்களுடைய படைப்பாற்றல் சிதைவுறாமல் இருக்கும்.

7. உங்க
ளை இந்தியாவின் ஹெமிங்க்வே என்று கூறுவதைக் கேட்கும் போது எப்படி உணர்கிறீர்கள்?
அந்தாளு அவருடைய வேலையை செஞ்சாரு... அவரு எங்கயோ இருக்காரு. நம்ம எங்கயோ இருக்கோம்.

8. சிறுகதைக்கு வடிவம் இருக்கிறதா?
நிச்சயமாக இல்லை. அது ஒரு அனுபவத்தைத் தரவேண்டும். சிறுகதைக்கோ நாவலுக்கோ வடிவம் கிடையாது.

9. அப்படியெனில் சிறுகதைக்கு வடிவம் இல்லை என்று சொல்லிவிடலாமா?
இல்லை இல்லை. நான் கூறியது என்னுடைய கருத்து. அவரு எனக்கு ஹெல்ப் செய்திருக்கிறார். வடிவம் இருக்குன்னா அந்த சார்ட் மாதிரி ஆயிடும் இல்ல? படைப்பு ஒரு அனுபவத்தைத் தரனும் என்று அவருடைய கைகள் என்னை சுட்டியது. கண்கள் ஒரு நிமிடம் என்னைப் பார்த்து கேள்வி கேட்டவரை ஊடுருவியது.

"எவ்வளோ பேரு உட்கார இடமில்லாமல் நிக்கறாங்க. மழை வேற பெய்யுது. எங்க இருந்தெல்லாம் வந்திருக்கான்களோ!. ரொம்ப கஷ்டமா இருக்குது" என்று கூடம் நிறைவுறும் போது கூறினார்.

அடலேறு, நிலா ரசிகன் மற்றும் மகரந்தன் ஆகியோருடன் பேசிக்கொண்டு இருந்துவிட்டு அசோகமித்ரனைப் பற்றி பல நாட்களுக்கு முன்பு படித்தனை நினைத்துக் கொண்டே சாலைகளில் நடந்துகொண்டிருந்தேன்.

ஆட்டோவில் போன அசோகமித்திரன்

வீட்டுக்கு வீடு கலர் டிவி கொடுத்து தமிழை வளர்க்கிறேன் என்று முழக்கமிடுபவர்கள் இது போன்ற மூத்த படைப்பாளிகளுக்கு என்ன செய்தார்கள் என்று பார்த்தால் விரக்திதான் மிஞ்சும். சரி... நாமாவது தமிழ் புத்தகம் வாங்குகிறோமா என்றால் அதுவும் இல்லை.

"வீட்டுக்கு கிளம்பியவர், முடியாமல் மயக்கத்தில் அப்படியே தரையில் உட்கார்ந்துவிட்டார். உடனே சிலர் அவருக்கு தண்ணீர் எடுத்துவந்து கொடுத்தார்கள். கொடுத்தவர்களுக்கு நிச்சயம் அவர் அசோகமித்திரன் என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை." - உலகம் அறிந்த எழுத்தாளருக்கே இதுதான் நிலைமை என்றால். மற்றவர்களை நினைக்கும் போது நடுக்கமாக இருக்கிறது.

**************************************************

புலிக் கலைஞன்
சிறுகதையை வாசிக்க 'ச.ந.கண்ணன்' அவர்களின் இணையப் பக்கத்திற்கு செல்லவும்:[1] [2] [3]

ஜெய மோகனின் : அசோகமித்திரன் படைப்புலகுக்கு ஒரு வாசல்

Friday, November 13, 2009

சேரலின் அழைப்பு: தொடர் பதிவு

பிடித்த, பிடிக்காத விஷயங்களாக தமிழகத்தைத் தொடர்புபடுத்தி, தமிழக பிரபலங்களைத் தொடர்புபடுத்தி பதில்கள் தருமாறு சேரல் சொல்லி இருந்தான். ஆனால் எண்ணங்கள் அந்த நிபந்தனையை மீறிச் செல்கிறது.. அதை அப்படியே இங்கு பதிகிறேன். அழைப்பிற்கு நன்றி சேரல்.

இந்தத் தொடர் பதிவுக்கான விதிகளாகக் கொடுக்கப்பட்டிருப்பவை

1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள்ள இருக்கணும். (நீங்க எழுதறப்பவோ நாங்க அதைப் படிக்கறப்பவோ அவரு ஷீட்டிங்குக்கோ, மீட்டிங்குக்கோ வெளிநாடு போயிருக்கலாம்.. தப்பில்ல!)

I always break the rules. ha ha ha ha ha... But i hope others will follow...

2. நீங்க இதை எழுத அழைக்கிற பதிவர் குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம்.

நான் யாரன்னு கண்டு பிடிப்பேன் சேரல்...! முயற்சி செய்கிறேன்.

3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும். அவங்களை உங்களுக்கு இப்பத்தான் பிடிக்கல, பின்னாடி பிடிக்கலாம்ங்கற சமயத்தில தற்போது-ன்னு சேர்த்திக்கலாம்.

4. கேள்விகள் குறைந்தது ஏழு இருக்கணும். ஆனா பத்தைத் தாண்ட வேண்டாம்.

இனி பட்டியல்....

01.
பிடித்த நிர்வாகி : ஸ்ரீதர் வேம்பு (zoho corporation - http://www.zohocorp.com/) சப்தமே இல்லாமல் சாதனை செய்துகொண்டிருக்கும் தமிழர்.
பிடிக்காத நிர்வாகி : ராமலிங்க ராஜு (காரணம் உங்களுக்கே தெரியும்.)

02.
பிடித்த தலைவர் : நர்மதா அணையின் அருகிலுள்ளவர்களுக்காகப் போராடும் 'மேதா பட்கர்'. நோபல் பரிசு வாங்கிய பர்மாவின் இரும்புப் பெண்மணி ஆங் சான் சூ கி மற்றும் செடி,கொடிகளுக்காகக்கூட குரல் கொடுத்த கென்யாவின் வங்காரி மாதாய். இவர்கள் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் அவர்களைப் பற்றி நாளேடுகளில் படித்தேன் என்பது நிறைவான விஷயம். இவர்களுடைய எளிமையான வாழ்வு என்னைக் கவருகிறது. அவர்கள் நினைத்திருந்தால் எப்படி வேண்டுமானாலும் சுகமாக வாழ்ந்து இருக்கலாம். ஆனால் ஒரு தலைமுறைக்காகவே போராடுகிறார்கள்.
பிடிக்காத தலைவர்: 'மனிதன் ஒரு அரசியல் விலங்கு' என்று யாரோ ஒரு தத்துவமேதை கூறியது ஞாபகம் வருகிறது. அதற்கும் ஒரு படி மேலே சென்று மத அரசியல், ஜாதி அரசியல், கட்சி அரசியல், ஆன்மீக அரசியல், ஊடக அரசியல் என்று மிருகங்களாகக் காட்சியளிக்கும் தொண்டன் முதல் தலைவன் வரை அனைவரும். "அட, அப்போ தற்போதுள்ள எல்லா அரசியல் வாதிகளும் என்று சொல்கிறீர்களா?" நிச்சயமாக... அப்போ கருணாநிதி, ஜெயலலிதா, ராமதாஸ், வை கோ, எல்லாரையும் சேர்த்துக்கோங்க.

03.
பிடித்த எழுத்தாளர்கள்: கி ரா, அ முத்துலிங்கம், அசோகமித்திரன், மாலன், குரு மூர்த்தி(www.gurumurthy.net), பாரதி, மதன், சுஜாதா, ஜெ. மோ, எஸ். ரா, கல்கி, ராஜ் கௌதமன், ஆதவன், பாவண்ணன்... இன்னும் இன்னும்...
பிடிக்காத எழுத்தாளர்கள் : சொந்த ஆதாயத்திற்காக தகவல் பிழையுடன் எழுதும் அனைவரும். குறிப்பாக அரசியல் எழுத்தாளர்கள். சில நேரங்களில் BJP மற்றும் RSS இயக்கத்தை உயர்த்திப் பிடிக்கிறாரோ என்று குரு மூர்த்தியையும் நெருடலுடன் வாசித்ததுண்டு.

04.
பிடித்த இயக்குனர்கள்: 1.கருப்பு வெள்ளை படம் 'சபாபதி' பட இயக்குக்னர் (பெயர் தெரியவில்லை), 2.காதலிக்க நேரமில்லை 'ஸ்ரீதர்', 3. சில்ரேன்ஸ் ஆப் ஹெவன் 'மஜித் மஜிடி' 3. இயக்குனர் பாக்கியராஜ் ('தூறல் நின்னு போச்சு'-எவ்வளோ அழகான திரைப்படம்!)... (யாரு கண்டா என்னோட மருமகன்கள் முத்துவும், வினோத்தும் கூட இந்த வரிசையில பின்னாளில் வரலாம். பிரபலங்கள் ஆகலாம்.)
பிடிக்காத இயக்குனர்கள்: உதவி இயக்குனர்களிடம் வேலை வாங்கிவிட்டு டைட்டிலில் தன்னுடைய பெயரைப் போட்டுக்கொள்ளும் அனைத்து இயக்குனர்களும். (அப்போ எல்லா இயக்குனரும் என்று சொல்கிறீர்களா? அப்படியும் எடுத்துக் கொள்ளலாம்.)

05.
பிடித்த இசைக்கலைஞர்: இசைஞானி இளையராஜா... (அவருடைய படைப்பில் பங்கு செலுத்திய நிறைய பேர்...). ஒரே வருடத்தில் 20 முதல் 30 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் என்று தெரிய வரும் பொழுது பிரம்மிப்பாக இருக்கிறது. அவருக்கு உதவியாளர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிடிக்காத இசைக்கலைஞர்: 1. இளையராஜா இசையமைத்த அனைத்துப் பாடல்களுமே பிரசித்தி பெற்றது என்று சொல்ல முடியாது. சில நேரங்களில் குறுகிய நாட்களில் படத்திற்கு இசையமைக்கும் அளவிற்கு பரபரப்பாக இருந்திருக்கிறார். அந்த மாதிரியான நேரங்களில் சில சோர்வான படைப்புகள் வருவது இயல்புதானே. அதுபோன்ற அவசர நிலை படைப்புகளைக் கொடுத்த அவருடைய இசை எனக்குப் பிடிக்காது. அந்த நேரங்களில் "நீயா இதை செய்தது?" என்று கோபம் வரும். அடுத்த நிமிடமே அவருடைய சிறந்த படைப்பைக் கேட்டு என்னை சரி செய்துகொள்வேன்.
2. பழையப் பாடல்களை ரீ-மிக்ஸ் செய்பவர்கள் அனைவரும்.

06.
பிடித்த பாடகர்: ஜேசுதாஸ் மற்றும் எஸ்.பி.பி
பிடித்த பாடகி: ஜானகி அம்மா
பிடிக்காத பாடகர்கள்: பிடிக்காதவர்கள் என்று யாரும் ஞாபகம் வரவில்லை. பிடிக்காத பாடல்களை உடனே மாற்றிவிடுவேன். சில நேரங்களில் பிடித்த பாடல்களிலேயே சில கோளாறு இருக்கும். அதாவது பாடும்போது இடையிடையே மூச்சு விடுவதும், எடுப்பதும் கேட்கக் கூடாது. அப்படியில்லாமல் சில பாடல்களைக் கேட்கும் போது பாடியவர்களின் மீது எரிச்சலாக இருக்கும். உதாரணமாக 'முன்பே வா என் அன்பே வா- பாடலில் ஸ்ரேயா கோஷல்' மற்றும் 'எனதுயிரே எனதுயிரே' - பாடலில் நிகில் மாத்யூ.

07.
பிடித்த அரசு அதிகாரி: T.N.சேஷன் (தேர்தல் அதிகாரி), இறையன்பு I.A.S மற்றும் கிரண் பேடி I.P.S (அரசு நிர்வாகத்திலுள்ள அரசியல் காரணமாக வேலையை ராஜினாமா செய்துவிட்டார் என்று நினைக்கிறேன்.) உங்களுக்குத் தெரிந்து நேர்மையானவர்கள் இருந்தால் தெரியப்படுத்துங்கள். பகிர்ந்துகொள்ளலாம்.
பிடிக்காத அரசு அதிகாரி: நிறைய பேர் இருக்கிறார்கள். நாங்கள் தான் ஏணிகள் என்று சொல்லிக் கொள்ளும் ஆசிரியர்கள். பரீட்சை முடிவுக்காக குழந்தைகள் காத்திருக்கும் போது விடைத்தாள்களைத் திருத்தமாட்டோம் ஊதிய உயர்வு வேண்டும் என்று அடம் பிடிக்கும் சங்கங்கள் முழுவதும். (எனக்குப் பிடித்த நிறைய பேர் இதில் அடங்குவார்கள். அதை அவர்களிடமே சொல்லி இருக்கிறேன்.)

08.
பிடித்த பத்திரிகையாளர்: மாலன்
பிடிக்காத பத்திரிகையாளர்: நக்கீரன் கோபால்

அழைக்கும் பதிவர்கள் :

வேல் கண்ணன்
ரகுநாதன்
சுள்ளிக்காடன் ஹிஜு
நிர்வாணம் ஞானசேகர்
அடலேறு

Saturday, November 7, 2009

அன்று பெய்த மழை

மெல்லிய ஓசை "சரசர... சடசட..." வென கேட்டுக் கொண்டே இருந்தது. சிறு வயதிலிருந்தே கேட்டுப் பழகிய ஓசை என்பதால் சப்தம் வந்த திசையை நோக்கி கால்கள் தானாக இடம் பெயர்ந்தது. அலுவலகம் முழுவதும் குளிர்சாதன வசதி இருந்தாலும் இயற்கையாகப் பெய்யும் மழையின் சாரலும், காற்றில் பரவி எலும்பை உருக்கும் பனியின் புகையும் ஏற்படுத்தும் சிலிர்ப்புமே வாழும் வாழ்க்கையில் அலாதியானது.

இந்த வருட மழை அவ்வளவுதான்... இனி அடுத்த வருடம் தான் மழையை எதிர்பார்க்க முடியும் என்றிருந்த நிலையில் திடீரென பெய்த மழை உற்சாகத்தை ஏற்படுத்தியது.

அலுவலக தோழர்களிடம் கண்களில் மகிழ்ச்சியுடன் "வெளியே மழை பெய்யுதுடா... வந்து வேடிக்கை பாருங்க... ஜாலியா இருக்குது, வந்து சாரலை அனுபவியுங்கள்" என்றேன்.

"போங்க கிருஷ்ணா, நீங்கதான் ஒரு வேலை செய்யாம சும்மா இருக்கீங்க. நாங்களும் அப்படியா?... அதுவும் இல்லாம ஆபீஸ் டைம்ல வெளிய போனா யாராச்சும் ஏதாவது சொல்லப் போறாங்க... Tempt பண்ணாம எடத்த காலிபன்னுங்க கிருஷ்ணா" என்று பதில் கூறினார்கள்.

"டேய், நான் இதோட பத்துவாட்டி வெளிய போயி வேடிக்கை பார்த்துட்டு வந்துட்டேன். என்னை யாரும் எதுவும் சொல்லலையே..."

"உங்கள மாதிரி நாங்க வர முடியுமா... கிருஷ்ணா..." என்றார்கள்

சிறிது நேரம் கழித்து அனைவரும் Break Time-ல் வெளியில் சென்றோம்.

"We are almost missing many wonderful feelings & experience inbetween our working hours. இந்த Climate-க்கு கோட்டரும், வறுத்த வேர்கடலையும், சிகரெட்டும், சிக்கன் 65-ம் இருந்தா எப்படி இருக்கும். அதுதான் சரி கிருஷ்ணா..." என்று வெளியில் வந்த நண்பர்களில் ஒருவன் கூறினான்.

"டேய், அதோட நிறுத்திக்கோ... அதுக்கு மேல நீ என்ன சொல்லுவேன்னு எனக்குத் தெரியும்... மழையே ஓர் ஆனந்தமான விஷயம் தானே. அதை அனுபவிக்காமல் வேறு எங்கயோ போறயே..." என்று சொல்லிவிட்டு என்னுடைய இருக்கைக்கு வந்தேன்.

அப்படியே 'ஹேம்நாத்'திடம் "டேய் பொடிப்பயலே, இன்னைக்கு மழையில நனஞ்சிக்கினே வீட்டுக்கு போகலாம் சரியா...!" என்று சொல்லியிருந்தேன்.

"கண்டிப்பா கிருஷ்ணா, அனா நம்ம புறப்பட சொல்ல மழை பெய்யணுமே."

"அதெல்லாம் கண்டிப்பா பெய்யும், நீ கவலைப் படாதே... "

நல்லவேலை அலுவலகத்திலிருந்து கிளம்பும் போது லேசான மழை பெய்துகொண்டிருந்தது. ஆனந்தமாகப் புறப்பட்டோம். சாரை சாரையாக பெய்த மழையில் வாகனங்கள் அங்குமிங்கும் நகர்ந்துகொண்டிருந்தன. மேடு பள்ளங்களில் உருண்டு செல்லும் மழைத் தண்ணீரில் வாகனங்கள் மிதப்பது போலவே இருந்தன. நாங்களும் மிதந்துகொண்டிருந்தோம்.

ஓர் இடத்தில் "கிருஷ்ணா... இப்போ சாக்கடை தண்ணீரில் போயிட்டு இருக்கோம். கொஞ்ச நேரம் கழிச்சி நல்ல தண்ணீர் வரும் அப்போ கால்களை நனச்சிடுங்க." என்று ஹேம்நாத் கூறினான்.

"பரவாயில்லடா... வீட்டுக்கு போயி குளிச்சிடலாம். பிரச்சனை இல்ல..."

"நாலு வருஷம் முன்னாடி பெய்த மழையில் இந்த ஏரியாவுல ஒரே வெள்ளம்... என்னோட தொடை வரைக்கும் தண்ணி இருந்தது கிருஷ்ணா..."

"அப்போ... என்னோட இடுப்பளவு தண்ணி போயிருக்கும்... "

"ஆமா கிருஷ்ணா"

இப்படி பேசிக்கொண்டே சென்றுகொண்டிருக்கும் பொழுது காரில் சென்ற ஒருவனின் வண்டிச்சக்கரம் எங்கள் மீது சாலையிலுள்ள நீரை வாரி இறைத்தது.

"டேய்... பொடிப்பயல இப்பவும் சாக்கடை தண்ணியில தான் போயிட்டு இருக்கோமா?"

"ச்சே ச்சே... இல்ல கிருஷ்ணா, அந்த எடம் அப்பவே போயிடுச்சி கிருஷ்ணா. எதுக்கும் வீட்டுல போயி குளிச்சிடுங்க..."

"சரிடா... நாளைக்கு பார்க்கலாம்."

எனக்கான இடத்தில் என்னை இறக்கிவிட்டு ஹேம்நாத் புறப்பட்டான். மழை கொட்டிக்கொண்டே இருந்தது. உடம்பில் உயிர் ஒட்டிக்கொண்டுள்ளதைப் போல ஈரமும், குளிரும் என்னை அப்பிக்கொண்டிருந்தன. அந்த மாதிரியான நேரங்களில் தான் உஷ்ணத்தின் ஆனந்தமும் புரிய வருகிறது.

வீட்டிற்கு சென்று சேரும் வரை அடைமழை பெய்து கொண்டிருந்தது. சுடுதண்ணீரில் குளித்து முடித்து என்னுடைய உறங்கும் அறைக்குச் சென்றேன்.

சிமெட் ஓடு (சீமை ஓடு) வேயப்பட்ட கூரையின் மேலிருந்து சொட்டு சொட்டாக மழை நீர் சொட்டிக் கொண்டிருந்தது. ஆயிரம் துளிகளுக்கு ஒரு துளி வீதம் கூரையின் ஐந்து இடங்களில் ஆங்காங்கு ஒழுகிக்கொண்டிருந்தது. அதை நாங்கள் பாத்திரங்கள் வைத்து சேமித்துக் கொண்டிருந்தோம். துளிகள் பாத்திரங்களில் விழும் போது டங்... டிங்... டொங்.. என்ற சத்தம் எழும்பி அறைமுழுவதும் எதிரொலித்தது. சுவர்களும், தரையும் ஓதம் ஏற்படுத்தி குளிரும்படி செய்துகொண்டிருந்தது. இந்த நிலையில் தான் நண்பர் மார்க் நெருப்புக் கட்டிகளை சட்டியில் ஏந்திக்கொண்டு வந்தார். அவை தங்கம் போல் ஜொலித்துக் கொண்டிருந்தன.

பல வருடங்களுக்கு முன்பு நான் வாழ்ந்த கிராமங்களில் விறகு அடுப்புதான் பயன்படுத்துவார்கள். அப்பொழுதெல்லாம் மழைக் காலங்களிலும், குளிர் காலங்களிலும் சமயலரைக்குச் சென்று ஆனந்தமாகக் குளிர் காய்வேன். குழம்பு, பொரியல், வறுவலுடன் நெருப்பின் வாசனையும் ரம்யமாக இருக்கும்.

பிறகு அனைவரும் LPG அடுப்புகளுக்கும், மின் அடுப்புகளுக்கும் மாறிவிட்டார்கள். ஆகவே கரித்துண்டுகளையும், நெருப்பையும் பார்க்க முடிவதில்லை. நீண்ட நாட்கள் கழித்து தகதகவென ஜொலிக்கும் நெருப்புத் துண்டுகளைப் பார்த்த போது சொல்ல முடியாத சந்தோசம் பெருக்கெடுத்தது.

கைகளையும் கால்களையும் நெருப்பின் அருகில் நீட்டி மகிழ்ச்சியாக குளிர் காய்த்தேன். அடைமழைக்கு நெருப்பின் கதகதப்பு இதமாக இருந்தது. இளையராஜாவின் இதமான பாடல்கள் வானொலியில் வழிந்துகொண்டிருந்தது. பாதங்களை மழை நீரில் நனைத்துவிட்டு மீண்டும் நெருப்பில் காட்டினேன். மழைத் தண்ணீரில் கால்களை நனைப்பதும் நெருப்பில் காட்டுவதுமென என்னுடைய விளையாட்டு நெடுநேரம் தொடர்ந்தது. நள்ளிரவைத் தாண்டியும் விளையாட்டு அளிக்கவேயில்லை.

உலகமே ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது விளையாடிக் கொண்டிருக்கும் ஒரே ஜீவன் நானாகத்தான் இருக்குமோ என்ற எண்ணம் தோன்றியது. ஆகவே படுக்கைக்குத் திரும்பினேன். எப்பொழுது தூங்கினேன் என்று தெரியவில்லை. கண்விழித்த போது மழை சன்னமாக கொட்டிக் கொண்டிருந்தது.