Saturday, August 3, 2013

மௌனித்து நிற்கும் அப்பாக்கள்

சினிமாவில் கூட ஒரு தந்தையானவன், தனது மகளிடம் கண்ணியமாக (பர்ஃபெக்டா) இருக்கணும்னு எதிர்பார்ப்பவன், நல்ல விஷயங்களை தொடர்ந்து செய்யும் - வெளியுலகிற்குத் தெரியாத ஒரு கலைஞனை நாளிதழ்கள் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பவன், இளைஞர்கள் செய்யும் வித்தியாசமான முயற்சியைத் தட்டிக்கொடுத்து ஊக்குவிப்பவன் – சொந்த வாழ்வில் தனது மகளுக்கு பாதகமாக நடந்துகொள்வானா? சில மாதங்களுக்கு முன்பு நடிகை சுகாசினி தனக்கே உரித்தான பாவனையில் மாநிறம் கொண்ட நடிகர்கள் ஹீரோக்களாக நடிப்பதை அலுத்துக்கொண்டு கருத்து தெரிவித்த போது, மேடையிலேயே தனது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தது மட்டுமல்லாமல், இதுபோன்ற கருத்துக்களைப் பொதுமேடையில் முன் வைத்ததற்காக வருத்தத்தைப் பதிவு செய்யவில்லை எனில் “மேடையை விட்டு நான் இறங்க மாட்டேன்” என்று உணர்ச்சிவசப் பட்டார். இதையெல்லாம் மறந்துவிட்டு ஒருவரை மதிப்பிடக் கூடாது.

காதலானது சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளை சமன் செய்யும் என்பதால் காதல் சார்ந்த பிரச்னைகளுக்கு, காதலர்களுக்கு ஆதரவாக முற்போக்குவாதிகள் குரலெழுப்புகிறார்கள். உண்மையில் பாராட்டப் பட வேண்டிய விஷயம் தான். தற்போதெல்லாம் காதல் சார்ந்த பிரச்சனைகளைப் பற்றி ஊடகங்களில் நிறையவே எழுதுகிறார்கள். அதுவும் பிரபலங்கள் வீட்டுப் பிரச்சனை எனில் ஊடகங்களுக்கு இருட்டுக்கடை அல்வா கிடைத்த மாதிரிதான். அவர்களே சினிமாத் துறையைச் சேர்ந்தவர்களாக இருந்தால் – ஒரு முழம் மல்லிகைப் பூவையும் சேர்த்தே இந்த ஊடகப் பிரதிநிதிகள் வாங்கிக் கொள்கிறார்கள். அந்த அளவிற்குக் குதூகலத்துடன் எழுதுகிறார்கள். நடிகர் ரஜினி துவங்கி, இயக்குனர் சேரன் வரை நிறைய பேரை இதற்கு உதாரணமாகக் கூறலாம். பிரபலங்கள் தான் என்றில்லை - பெற்ற மகள்களுக்கு முன்னால் எப்பேர்பட்ட தந்தையும் குட்டிக்கரணம் அடித்து, தேவைப்பட்டால் கைகட்டி வாய் பொத்தி நிற்கிறார்கள் என்பது தான் உண்மை.

மகாநதி திரைப்படத்தின் ஓர் உணர்வுப் பூர்வமான காட்சி. சோனாகச்சியின் விபச்சார அறையில் தனது மகளை ஒவ்வொரு அறையாகத் தேடிக்கொண்டு செல்கிறான் சேது. விலைமகளாக அங்கங்கள் தெரிவது போலப் படுத்திருக்கிறாள் சேதுவின் (கமலஹாசன்) மகள் காவேரி. ஓர் அறைக் கதவை மெதுவாகத் திறந்து பார்க்கையில் சப்தம் எழுகிறது. ஊரிலிருந்து தேடிக்கொண்டு வந்த தந்தைதான் பின்னால் நிற்கிறார் என்பதை அறியாத மகள் மெதுவான குரலில் முனகுகிறாள்.

“தேவுடியா பசங்களா...! கொஞ்ச நேரம் ரெஸ்ட் கொடுங்களாண்டா...” – இந்த வசவைக் கேட்ட தந்தை வெடித்துக் கதறுகிறான். இந்த இடத்தில் கமல்ஹாசன் “எப்படி ஆக்ட் செய்திருப்பார்...!” என்று சொல்லித் தெறிய வேண்டியதில்லையே. அழுகைச் சத்தத்தைக் கேட்ட விலைமகளான காவேரி திரும்பிப் பார்க்கிறாள். தந்தையை அடையாளம் கண்டுகொண்ட மகள் பதறித் துடிக்கிறாள். அங்கங்கள் தெரிவதுபோல ஆடையணிந்த பதற்றம் வேறு அவளுக்கு. பணம் கொடுத்து புணர வந்தக் காமந்தர்கள் பலரையும் தாங்கிய படுக்கையின் மேல் விறித்திருந்த போர்வையை எடுத்து அங்கங்களை மறைத்துக் கொள்கிறாள் காவேரி. முகத்தை மூடிக்கொண்டு அழுகிறாள் அந்தச் சிறுமி. தந்தையான கமல்ஹாசன் பதறியடித்து ஓடி, தனது மகள் காவேரியை இரண்டு கைகளிலும் தூக்கிக்கொண்டு வேகமாக ஓடுவது போன்ற காட்சி.

தந்தையாக நடித்த கமலஹாசனின் கைகள், மகளாக நடித்த காவேரியின் வனப்பான முலைப் பகுதியின் சமீபத்தில் இருந்திருக்கிறது. இந்த காட்சியைப் பற்றிய அதிருப்தியை பலரது முன்னிலையில் ஓர் உதவி இயக்குனர் கமலஹாசனிடம் நேரிடையாகச் சொல்கிறார்.

“அதெப்படி சார்... மகளோட மார்புப் பகுதியை தொட்டாமாதிரி ஒரு அப்பா அவளைத் தூக்கிட்டு போவாரு. அது சரியா இருகாதுங்க சார்.” என்கிறார் அந்த உதவி இயக்குனர். அடுத்த நாளிலிருந்து அந்த உதவி இயக்குனர் மகாநதி ஷூட்டிங்கில் வேலை செய்யவில்லை. எளிதில் உணர்ச்சிவசப்படும் அந்த நபர் வேறு யாருமல்ல இயக்குனர் & நடிகன் சேரன் தான். காலங்கள் ஓடியதில் இயக்குனர் சேரன் “பாரதி கண்ணம்மா, ஆட்டோகிராஃப், பொற்காலம், தவமாய் தவமிருந்து” போன்ற பல செண்டிமெண்ட் படங்களைத் தமிழில் கொடுத்து பிரபலம் அடைந்தது வேறு கதை. தொழில் ரீதியாக சினிமாவில் முத்திரைபதித்த சேரனைத் தான் ஊடகங்கள் வில்லனைப் போல சித்தரிக்கின்றன. சேரனை தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேசியதில்லை. ஆனால் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு இரண்டு சந்தர்பங்களில் சேரனை நுட்பமாகக் கவனித்ததுண்டு. அந்த சம்பவங்களை மனதில் இருத்தி சேரனைப் பற்றி பகிர வேண்டியது முக்கியமெனப் படுகிறது.

மறுபக்கம் ஆர்.பி.அமுதன் ஓராண்டுகளுக்கு முன்னர் தன்னுடைய “பீ” & மயானம் சார்ந்த ஆவணப்படங்களை சென்னை பல்கலைக்கழக, தமிழ்த் துறை பவளவிழா அரங்கத்தில் திரையிட ஏற்பாடு செய்திருந்தார். வீ. அரசு தலைமையில் ‘இயக்குனர் சேரன், எழுத்தாளர் முத்துகிருஷ்ணன்’ போன்ற பலர் இந்தத் திரையிடலில் கலந்து கொண்டார்கள். சேரன் மேடையில் அமுதனைப் பாராட்டிப் பேசிக்கொண்டிருந்தார். ஆங்கில நாளிதழ் ஒன்றிலிருந்து நிகழ்வை கவர் செய்ய ஒரு புகைப்பட நிருபர் வந்திருந்தார். சேரன் மேடையில் பேசுவதை ஏதாவதொரு கோணத்தில் ஃபோட்டோ எடுக்க அந்தப் புகைப்பட நிருபர் படாதபாடு பட்டுக்கொண்டிருந்தார். சேரன் புகைப்படக் காரரின் ஃப்ரேமில் சிக்கவே இல்லை.

ஒரு கட்டத்தில் பேசுவதை நிறுத்திவிட்டு, அந்த ஃபோட்டோ ஜர்னலிஸ்டிடம் “இங்க பாருங்க Sir... என்ன எதுக்கு ஃபோட்டோ எடுக்குறீங்க? இப்போ நான் ஃபோட்டோ எடுக்கறதுக்கு விட்டுட்டேன்னா - நாளைக்கு என்னோட ஃபோட்டோவ போட்டு இந்த ஈவண்ட சும்மாவாச்சும் கவர் பண்ணிடுவிங்க. இந்த முக்கியமான டாக்குமென்ட்றிய எடுத்தது அவர் தான். அவர ஃபோட்டோ புடிச்சி பேப்பர்ல போடுங்க. அமுதனைப் பத்தி கொஞ்சம் அதிகமா கவர் பண்ணுங்க. அதுதான் ஞாயம். நீங்க என்ன தொடர்ந்து ஃபோட்டோ எடுத்திங்கன்னா – நான் பேசறத நிருத்திடுவேன்.” என்றார் ஆர்.பி.அமுதனை சுட்டிக் காட்டியவாறு. மறுநாள் காலையில் ஆங்கில நாளிதழைப் புரட்டினேன். சேரன் மேடையில் பேசுவதைப் போன்ற படம் போட்டு, நிகழ்வைப் பற்றி எழுதியிருந்தார்கள். சேரன் எதிர்பார்க்காத சமயத்தில் தூரத்தில் நின்றவாறு ஜூம் செய்து அந்தப் புகைப்படக்காரர் ஒருவேளை ஃபோட்டோ எடுத்திருக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன். என்றாலும் சேரனின் முன்யோசனையை நினைத்து சிரித்துக் கொண்டேன்.

ஒருமுறை இலக்கிய விருது நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, இரவு நேரத்தில் அசோகமித்திரன் பேருந்திற்காகக் காத்துக் கொண்டிருந்தாராம். அந்தப் பக்கமாக சேரன் வந்திருக்கிறார். "ஐயா... நீங்க இந்த நேரத்துல இங்க இருக்குறீங்களேய்யா? ஏதாவது உதவி வேனுமாங்கைய்யா." என்று கேட்டிருக்கிறார்.

"வேளச்சேரி பஸ்ல ஏத்தி விட்டுடுங்களேன்" என்று சொல்லியிருக்கிறார் அசோகமித்திரன்.

"ஐயோ... இந்த நேரத்துல எப்படிங்கைய்யா நீங்க பஸ்ல போவிங்க..." என்று தனது காரில் அசோகமித்ரனை ஏற்றி அவரது வீட்டில் இறக்கிவிடச் சொல்லியிருக்கிறார். இதனை ஆனந்த விகடனில் படித்ததாக ஞாபகம். "எவ்வளோ பெரிய எழுத்தாளர் இந்தமாதிரி தனியா உட்கார்ந்துட்டு இருந்தாரே. நம்ம பார்த்தால போச்சு. இல்லன்னா எவ்வளோ கஷ்டப்பட்டிருப்பாரு என்று அசோகமித்ரனை அனுப்பி வைத்துவிட்டு அருகிலிருந்தவர்களிடம் வருத்தப்பட்டாராம் சேரன்.

அதற்கடுத்த சந்திப்பு எதிர்பாராமல் நிகழ்ந்த ஒன்று. மியூசிகல் நாவலை வெளியிடும் ‘பாதை பதிப்பக’த்தின் அங்கத்தினரான அர்ஜூன் செல்பேசியில் அழைத்து “ரணம் சுகம்” இசை வெளியீட்டிற்கு வரவேண்டுமென்று அழைப்பு விடுத்தார். ஏ.வி.எம் பிரிவ்யூ தியேட்டரில் இசைவெளியீடு ஏற்பாடாகியிருந்தது. சென்னை புத்தகக் கண்காட்சில் ஒரேயொரு முறைதான் பாதை அர்ஜுனை சந்தித்திருக்கிறேன். பல மாதங்கள் அவருடன் தொடர்பே இல்லாமல் இருந்தது. என்றாலும் ஞாபகத்தில் இருத்தி அழைத்திருந்ததால் மறுக்க முடியாமல் சென்றிருந்தேன். “மாலை 5 மணிக்கு இசை வெளியீடு” என்ற தகவல் வந்திருந்தது. கொஞ்சம் முன்னதாக 4.30 மணிக்கே AVM preview theatre-க்குச் சென்றுவிட்டேன். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஒருசில கலைஞர்கள் “ரணம் சுகம்” புத்தக ஆல்பத்திலிருந்து ஒருசில வரிகளைப் பாடிக் கொண்டிருந்தார்கள். தொண்டையில் மீன் முள் சிக்கியதால் நெளிகிறார்களோ என்பதுபோல எனக்குப் பட்டது. அடுத்த ஐந்து நிமிடங்களில் சிகப்பு நிறக் கார், பார்க்கிங்கில் வந்து என்னருகே நின்றது. காரிலிருந்து இறங்கிய லட்சணமான பெண், “அப்பா வந்துட்டாரு. கார்ல தான் உட்கார்ந்துட்டு இருக்காரு. ப்ரோக்ராம் ஸ்டார்ட் ஆகும் பொழுது சொல்லுங்க. அவர் வந்துடுவாரு.” என்று தொலைபேசியில் யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தாள். அப்பொழுதுதான் கவனித்தேன் இயக்குனர் சேரன் முன்னிருக்கையில் தவமாய் தவமிருப்பது போல உட்கார்ந்து கொண்டிருந்தார்.

பாடுபவர்களையும், வருவோர் போவோரையும் கவனித்துக் கொண்டிருந்தார். அறிமுகமில்லாத ஒருவரிடம் பேசிக்கொண்டே சேரனை கவனித்துக் கொண்டிருந்தேன். புத்தகங்களைப் புரட்டுவதும், வேடிக்கை பார்ப்பதுமென சாவகாசமாக உட்கார்ந்திருந்தார். அநேகமாக ஏதேனும் ப்ளேயர் முடுக்குவிக்கப்பட்டு பாடலும் ஓடிக் கொண்டிருந்திருக்கலாம். ஏனெனில் அவர் உற்சாகமான மனநிலையில் தான் இருந்தார். ஏறக்குறைய நாற்பது நிமிடங்கள் கழித்துத் தாமதமாகத் தான் நிகழ்ச்சியைத் துவக்கினார்கள். பொறுமையாக அமர்ந்திருந்தார். போதுமான பார்வையாளர்கள் வந்து சேரவில்லை என்பதுதான் இசை வெளியீடு தாமதமானதற்கு முக்கியக் காரணம். இதே நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்த இயக்குனர் ராம், படவா கோபி ஆகிய இருவரும் நிகழ்ச்சி துவங்கிய பின்னர் தான் வந்து சேர்ந்தார்கள். முதலில் மேடையேறிய சேரன் மைக்கைக் கேட்டு வாங்கினார். நிகழ்ச்சி தாமதமானதற்காக திட்டப்போகிறார் என்றுதான் நினைத்தேன்.

“நான் ரொம்ப முன்னாடியே வந்து கார்ல உட்கார்ந்துட்டு எல்லாரையும் கவனிச்சிட்டு இருந்தேன். ரொம்ப ஓடியாடி பரபரப்பா வேலை செய்யிறிங்க. ஆடியன்ஸ் ரொம்ப கொறைவா இருக்காங்களேன்னு கவலைப்படாதிங்க. நல்ல விஷயங்களுக்கு குறைவான நண்பர்கள் தான் ஆதரவு கொடுப்பாங்க. நம்பிக்கையோட தொடர்ந்து பயணம் செய்யுங்க. உங்களோட பதிப்பகத்தின் பெயரே பாதை. இன்னிக்கி நீங்க போட்ற விதை நாளைக்கு பாதையெங்கும் மரமா, செடியா, கொடியா வளர்ந்து நிக்கும். என்னால முடிஞ்ச உதவிய உங்களுக்குப் பண்றேன். வாழ்த்துக்கள்” என்றார். (“ரணம் சுகம்” – மியூசிகல் நாவலை சேரன் தயாரிப்பதற்கு முன்வந்தார். பின்னர் அந்த ப்ரொஜெக்ட் என்ன ஆனது என்று தெரியவில்லை.)

“பாதை” இளைஞர்களுக்கு இயக்குனர் சேரன் “வாய் சவடால் விடுகிறாரோ?” என்று நீங்கள் நினைக்கலாம். சங்ககிரி ராஜ்குமார் இயக்கிய “வெங்காயம்” படம் ஒன்றிரண்டு திரையரங்குகளாவது கிடைத்து தியேட்டரில் ஓடியதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்களில் இயக்குனர் சேரனும் ஒருவர். மூட நம்பிக்கைகளை விமர்சித்து எடுக்கப்பட்ட முற்போக்கான முக்கியமான தமிழ் படம். சேரனின் உதவி மனப்பான்மையை சங்ககிரி ராஜ்குமார் கூட நெகிழ்ச்சியுடன் சில இடங்களில் பகிர்ந்துண்டு. முற்போக்கான விஷயத்தைப் பேசிய திரைப்படம் மக்களைச் சென்று சேரவேண்டும் என்று நினைக்கும் முற்போக்கான மனிதன், தனது சொந்த வாழ்விலும் முற்போக்கான எண்ணங்கள் உடையவனாகத் தானே இருக்கவேண்டும். “எனது தந்தையால் உயிருக்கு ஆபத்து. ரவுடியைப் போல என்னுடைய காதலனைத் துரத்துகிறார்” என்று சேரனின் 20 வயது நிரம்பிய இரண்டாவது மகள் கமிஷனரிடம் புகார் கொடுத்திருக்கிறாராம்.

எனது சொந்த வாழ்விலிருந்தே சில விஷயங்களைப் பேச வேண்டியிருக்கிறது. அம்மாவின் ரத்த உறவினருக்கு நெருங்கிய சொந்தமான ஒரு வயோதிகப் பெண்மணி வீட்டிற்கு வந்திருந்தாள். அந்த அம்மணியின் பேத்திக்கு திருமணம் நிச்சயமாகியிருந்தது. அதுவும் காதல் திருமணம் என்று கேள்விப்பட்டேன். ஆகவே "ஆமா... உங்க பேத்திக்கு கல்யாணமாமே! அவங்க லவ் பன்றவருக்கே பேசி முடிட்சிட்டிங்கலாமே... ரொம்ப சந்தோசம்..." என்றேன்.

இல்லியே இது அரேஞ்ஜிடு மேரேஜ் என்ற ரீதியில் சமாதானம் பேசியவள், கல்யாணப் பெண்ணிடம் என்ன சொறிஞ்சி விட்டாலோ தெரியவில்லை. அதுவும் மாப்பிள்ளை வீட்டார் சம்ரதாயதிற்காக பெண் பார்க்க வரும் நேரத்தில் மணப்பெண்ணின் வாயைக் கிளரியிருகிறாள். சிறுவயது முதலே ஆங்கில வழியில் பயின்று என்ஜினியரிங் படித்து, பன்னாட்டு கம்பெனி ஒன்றில் உயர்தர வேலையில் இருப்பவள். சம்பவ இடத்திலில்லாத என்னை, ஊரார் முன்னிலையில் மிக மோசமாக வசவு பாடியிருக்கிறாள்.

“என்னை பத்தி பேசறதுக்கு அவனுக்கு என்ன ரைட்ஸ் இருக்கு? செருப்பால அடிப்பான் அவன. பொட்டப் பய(ன்). நான் இல்லாத சொல்ல என்னைப் பத்தி பேசறானா? மகளிர் போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணி அந்த பொட்டைய போலீஸ்ல புடிச்சி கொடுக்கறேன் பாரு!” என்று தரக்குறைவான வசவு மொழி வசனங்களைப் பேசி இருக்கிறாள்.

சின்ன அண்ணனிடமிருந்து செல்பேசி அழைப்பு வந்தது. எடுத்துப் பேசினேன். ஹலோ என்று சொல்லி முடிக்கும் முன்னர் "ங்கோத்தா... அவங்கள ரெண்டுல ஒன்னு பாத்துடறேன். பஜ்ஜேரிங்க நம்மள பத்தி இன்னாடா நெனட்சிக்குனு இருக்காளுங்க? முண்டைங்க..." என்று பொறிந்து தள்ளினான்.

“இன்னாடா நடந்தது?” என்றேன். "செருப்பால அடிக்கனமும்னு மத்தி (பெரிய மனுஷி) சொல்றா... பொட்டப் பயன்னு பேத்தி சொல்றா... போலீஸ்ல புடுட்சிக் கொடுக்கணும்னு சொல்றா அவளோட சித்திகாரி..." என கோவத்தில் கொக்கரித்தான் அண்ணன்.

“எப்போவ்... பொட்டன்னு சர்டிஃபிகேட் கொடுத்துட்டாங்க இல்ல. போலீஸ்ல புடிச்சி குடுத்தா லேடீஸ் செல்லுல போடச்சொல்லி ரெக்கமண்ட் பண்ணச் சொல்லு...” என்று ஒருவாராக பேசி சூழலை சமாளித்தேன். அம்மாவின் ரத்த உறவு என்பதால், என்ஜினியரிங் படித்த மணப்பெண்ணின் தகப்பனாரை அழைத்து இரண்டு தரப்பிலும் சமாதானம் பேசி பிரச்னையை முடித்தோம்.

அந்தக் கிழவி அந்தப் பெண்ணிடம் என்ன சொன்னாலோ தெரியவில்லை. என்றாலும் கோவப்பட்ட என்ஜினியரிங் மாணவி, மிகவும் கீழ்த் தரமாகப் பேசியது மட்டுமல்லாமல், போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுப்பேன் என்ற அளவில் கொதித்தெழுந்தாள். தனது காதல் திருமணத்தைப் பற்றி “யார் பேசினார்கள்? என்ன பேசினார்கள்?” என்பதை முழுவதுமாகத் தெரிந்துகொள்ளாமல், பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்து கைநிறைய சம்பாதித்து சொந்தக் காலில் நிற்கும் ஒரு பெண்ணே – காதல் சார்ந்த விஷயங்களில் குயுக்தியாக யோசிக்கும் பொழுது, எந்தவித பொருளாதாரப் பற்றுதலும் இல்லாத கல்லூரி மாணவி எடுப்பார் கைபிள்ளையாக இருந்தாலும் இருக்கலாம் இல்லையா? சாதிக்காக பெற்ற பிள்ளைகளையே கவுரவக் கொலை செய்பவர்கள் இருக்கிறார்கள் எனில், காதலித்தவர்களுக்காக எந்த விளிம்பிற்கும் சென்று பெற்றவர்கள் முகத்தில் கரியைப் பூசும் பிள்ளைகளும் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. கமிஷனரிடம் கொடுத்த ஒரு போலீஸ் கம்ப்ளைண்டை மட்டும் வைத்துக்கொண்டு சேரனை அளவிடுவது அபத்தம். அவரைப் பற்றி செய்தித்தாள்களில் காதலுக்கு எதிரான வில்லன் போல சித்தரித்திருப்பது சங்கடமாகத் தான் இருக்கிறது.

அஜயன் பாலா, சங்ககிரி ராஜ்குமார், வசந்தபாலன் போன்றோர் சேரனுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் எழுதியிருக்கின்றனர். அவர்களுக்கெல்லாம் சேரனுடன் பழகி இருகின்றனர். ஆனால், தனிப்பட்ட முறையில் சேரன் எனக்குப் பழக்கமானவர் அல்ல. அவரைத் தூக்கிப் பிடிக்க வேண்டிய அவசியமும் எனக்கில்லை. இரண்டு சந்தர்பங்களில் அவருடைய இயல்பான பேச்சைக் கேட்டிருக்கிறேன். அவரைப் பற்றி நம்பத் தகுந்த தொழில்முறைத் தகவல்களையும் பகிர்ந்திருகிறேன். அதிலிருந்தே அவரை பற்றி ஒருவாறு யூகத்திற்கு வரமுடியும் என்று நினைக்கிறேன்.

தன்னுடன் பழகியவர்கள், புதியவர்கள் என்று வரும்பொழுதே அவர்களது நளன் சார்ந்து யோசிக்கிறார் எனில், ஒரு தகப்பனாக தன்னுடைய மகளின் எதிர்காலம் குறித்து எந்த அளவிற்கு யோசித்திருப்பார். ஒரு மனிதன் தகப்பனாக மௌனத்தை அடைகாத்து, சமூகத்தின் தனிமனித விமர்சனங்களை சப்தமில்லாமல் மென்று முழுங்குகிறான் எனில் அதற்கு ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும். அந்த அர்த்தங்களும் தன்னுடைய மகளின் நிம்மதியான எதிர்கால வாழ்வு பற்றியதாகத் தான் இருக்கும்.

மகளின் காதலுக்கு எதிரான கருத்துக்களை முன்வைப்பதால் மட்டுமே, முற்போக்கான ஒரு மனிதனைப் பற்றிய எதிர்மறையான தகவல்களை இணைய ஊடகத்தில் ஒருவர் பின் ஒருவராகப் பகிர்வது எந்த விதத்திலும் ஞாயம் இல்லை. தனது மகளின் எதிர்காலம் என்று வரும் பொழுது சிலர் மௌனித்து நிற்கிறார்கள். சிலர் கொஞ்சம் போல அதிருப்தி அடைகிறார்கள். சிலர் வன்முறையைக் கைகளில் எடுக்கிறார்கள். வன்முறையைப் பிரயோகிப்பவர்கள் சார்ந்து குரல் எழுப்புங்கள். மற்றவர்களை இலக்காக வைத்துக் கொள்ளாதீர்கள். அவர்கள் பாவம். ஏனெனில் நமக்கும் குடும்பம் இருக்கிறது. நமக்கும் பிரச்சனைகள் இருக்கிறது. ஊடகங்கள் வேசிமைத் தனத்துடன் சம்பவங்களைப் பிரசுரித்தாலும் நாம் தான் கொஞ்சம் முன்பின் யோசித்து விஷயங்களைப் பகிர வேண்டும். அவ்வளவே...!

1 comment:

  1. அழுத்தமான நிறைய விசயங்கள்..

    ReplyDelete