Thursday, August 15, 2013

எதேர்சையான சந்திப்பு - காஞ்சிவரம் லோகு

எதிரில் வந்தவனை அப்படியே மடக்கினேன்...! முதலில், கபடியில் உள்ளிறங்கி ஆடுவதுபோல நெருங்கினேன். என்ன ஒண்ணு...! கையையும் காலையும் நீட்டி “டச்” ஒன்று தான் செய்யவில்லை.

இரண்டு மூன்று சந்திப்புகளை முடித்துவிட்டு CMBT-யில் பேருந்தைப் பிடிப்பதற்காக சாவகாசமாக சென்று கொண்டிருந்தேன். கருப்பு நிற லன்ஞ்ச் பேக் ஒரு கையில். தூரலில் இருந்து தப்பிக்க கருப்பு நிறக் குடை மற்றொரு கையில். நான்கு அடி ஆறு அங்குலம் உயரத்திற்கு மேல் இருப்பார் என்று சொல்லிவிட முடியாது. “டடக் புடக்... டடக் புடக்...” என எதிரில் வந்து கொண்டிருந்தார்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு மூங்கில் குச்சி போல ஒல்லியாக இருந்தவன், பூசணிக்காய் போல உருண்டு திரண்டிருகிறான். “கண்கள்...” – இந்த ஒன்று தான் அவனை அடையாளம் காட்டியது. ஆகவே துணிந்து மடக்கினேன்.

“என்னை யாருன்னு தெரியுதா...!?”

“நீ கிருஷ்ணபிரபு தானே!?... பார்த்தியா உன் பேர கூட நான் ஞாபகம் வச்சிருக்கேன்.” என்றான்.

“அடப்பாவி... இந்த ஆயிரம் பேரு கூட்டத்துல உன்ன கண்டு புடிச்சது நான் தான்டா... உன் பேரு லோகு தானே!?...” என்றேன். “பரவாயில்லையே... ஞாபகம் வச்சிருக்க....!” என்றான்.

அதெப்படி மறக்க முடியும்?... காஞ்சிபுரம் கலக்டர் ஆபீசுக்கு எதிரில் இருக்கும் கூட்டுறவு மேலாண்மை பட்டாயப் படிப்பை ஓராண்டு காலம் தங்கிப் படித்தேன். மாலை நேரத்தில் நண்பர்களுடன் இறகுப் பந்து விளையாடுவேன். லோகநாதனும் உடன் விளையாடுவான். “சாப்பாடு, வகுப்பு, உறக்கம், விளையாட்டு” – இப்படியே நாட்கள் கடந்து சென்றது. கடைசித் தேர்வும் முடிந்தது. எல்லோரும் வீட்டிற்குக் கிளம்பினோம். உடைமைகளை பேக் செய்துகொண்டு அவரவர் இல்லங்களுக்குத் திரும்ப, என்னுடன் தங்கிய அறைத் தோழர்கள் எல்லோரும் சீக்கிரமாகவே கோ-ஆபரேடிவ் இன்ஸ்டிடியூட்டை விட்டுக் கிளம்பினோம். ஆகவே யாருடனும் அதிகமாகப் பேசமுடியவில்லை.

வீட்டு உரிமையாளரிடம் சாவியைக் கொடுத்துவிட்டு – காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த ஒரு பேருந்தில் நண்பர்கள் அமர்ந்து “ச்சே... இனிமே இந்த ஊருன்னா ஊருக்கு வரமுடியாது இல்ல... எவ்வளோ நல்ல ஊரு...” என்று பேசிக் கொண்டிருந்தோம். ஓரிடத்தில் பிறந்து, ஓரிடத்தில் வளர்ந்து, பேச்சுலராக ஓரிடத்தில் தங்கிப் படிப்பவர்களுக்குத் தான் அந்த அருமை புரியும். (வேலையின் நிமித்தம் பேச்சுலர்ஸ் லைஃப்-ஐ வாழ்பவர்களை எங்களது குரூப்பில் சேர்ப்பதில்லை.)

வியர்க்க விறுவிறுக்க லோகு ஓடி வந்து கொண்டிருந்தான். பேருந்தின் ஜன்னலில் தலையை நீட்டி “என்னடா விஷயம்...!” என்று விசாரித்தோம்.

“மச்சி... உங்க அட்ரஸ், காண்ட்டாக்ட் நம்பர் இதெல்லாம் குடுக்காம போறீங்கலேடா...!” என்றான்.

“அடப்பாவி அதுக்காடா இப்பிடி ஓடிவர...?” என்றோம்.

“பஸ்சு போயிடுச்சின்னா பிறகெப்படி வாங்குறது...!?” என்றான்.

நாங்கெல்லாம் ஒரு ஆளுன்னு, தேடிப் புடிச்சி நட்பு பாராட்டுபவர்களை எப்படி மறக்க!? அதனால் தான் சுதந்திர தினத்தன்று எதிரில் வந்தவனை அப்படியே மடக்கினேன். பரிமாறிக்கொண்ட முகவரிகளும், தொலைபேசி இலக்கங்களும் மாறி – தொடர்பற்று இருந்தோம். எனினும் காலம் எதிரெதிரே நிறுத்தி இருக்கின்றது. இப்படித்தான் எதிர்பார்க்காமல் சில விஷயங்கள் நடந்து விடுகிறது.

சுதந்திர தினம் என்பதால் கோயம்பேட்டில் ஏகப்பட்ட கெடுபிடி. பயணிகளின் உடைமைகளை சரிபார்த்துத் தான் உள்ளே விட்டார்கள். லோகுவின் கைப்பையை ஒரு பெண் போலீஸ் திறந்தார். உள்ளே காலி லஞ்ச் பாக்ஸ்சும், சில நொறுக்குத் தீனிகள் இருந்தன.

“இந்த கவர்மென்ட் வேலை பாக்குறவங்க நொறுக்குத் தீனி இல்லாம எங்கயும் நகர மாட்டாங்க போல...” என்றேன். பெண் போலீஸ் சிரித்தார். 

ஒரு வழியாக உள்ளே சென்றோம். நீண்டநேரம் பேசிவிட்டு, லோகுவினை காஞ்சிபுரம் பேருந்தில் ஏற்றிவிட்டுத் தான் ஊருக்குத் திரும்பினேன். இந்த பத்தாண்டுகளில் லோகு வக்கீலுக்குப் படித்திருக்கிறான். TNPSC தேர்வெழுதி அரசாங்க உத்தியோகத்திலும் சேர்ந்திருக்கிறான். வேலையில் சேர்ந்து இரண்டு மாதங்கள் தான் ஆகிறதாம். சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் தான் வேலை செய்கிறானாம். என்றேனும் ஒருநாள் அவனை சிந்தாதிரிப் பேட்டை அலுவககத்தில் சென்று பார்க்க வேண்டும். இத்தனை ஆண்டுகளில் பொறுப்புள்ள ஒரு மனிதனாக மாறி இருக்கிறான்.

என்னையும் சொல்லுங்க...! வெறுமனே சும்மாத்தானே சுத்திட்டு இருக்கேன்...!

ஆனாலும், வெறுமனே ஊர் சுற்றுவதிலும் ஒரு பிரயோஜனம் இருக்கின்றது. பாருங்கள்...! பத்தாண்டுகளுக்கு முன்பு சந்தித்தவனை – இதோ அடையாளம் கண்டுகொண்டு அளவலாவிவிட்டு வந்தேன். இதெல்லாம் வெறுமனே சும்மா இருப்பதால் தானே வாய்க்கிறது.

No comments:

Post a Comment