Tuesday, November 9, 2010

திருவடிசூலம் to திருக்கழுக்குன்றம்

ஜில் புயலின் மூர்க்கம் தணிந்து காலநிலை சாதகமாக இருந்ததால், பால்ய நண்பன் வில்சன்ராஜின் திருமணத்திற்கு திருக்கழுக்குன்றம் கிளம்பினேன். மாலை 6 மணிக்கு நடக்கவிருக்கும் திருமண வரவேற்பிற்கு காலை பத்து மணிக்கே 10 நண்பர்களுடன் கிளம்பிவிட்டேன். முதலில் திருவடிசூலம் என்ற மலை கிராமத்திற்கு செல்வதாக முடிவானது. செங்கல்பட்டு - திருபோரூர் செல்லும் வழியில் இருக்கிறது. பனைமர உயர அம்மன் சிலையை நிர்மாணித்து இந்த ஊரில் கோவில் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.எங்களுடைய குலசாமி முனீஸ்வரன். என்னுடைய தம்பிக்கு இந்த அம்மன் தான் குலசாமி மாதிரி. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை.

சிலையை கிராமத்தில் எடுத்து வந்து சேர்க்க ஏதோ ஒரு ஷிப்பிங் கம்பெனியை அணுகினார்களாம். பல லட்சம் தரவேண்டியிருக்கும் என்று அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதே நேரத்தில் கம்பெனி முதலாளிக்கு நீண்ட நாட்கள் இழுத்துக் கொண்டிருந்த வேறொரு வியாபாரத்தில் பெருத்த லாபம் கிடைத்ததாம். இந்த சிலை வந்த நேரம் தான் அதிர்ஷ்டம் கொட்டுகிறது என்று இலவசமாகவே சிலையை கிராமத்திற்கு எடுத்து வந்து கொடுக்கச் சொன்னாராம். L&T கூட இலவசமாகவே சிலையை பூப்போல எடுத்து நிமிர்த்தினார்கலாம். அதுமட்டுமில்லாமல் இரண்டு நிறுவனமும் ஏதோ நன்கொடை வேறு வழங்கி இருக்கிறார்கள்.

"இதையெல்லாம் யாரும் சும்மா செய்யமாட்டாங்கடா...! ஏதோ சக்தி இருக்குது...! நீ வேணும்னா பாரு, இன்னும் கொஞ்ச நாள்ல இந்த இடம் பெரியப்பாளையம் மாதிரி, திருவேற்காடு மாதிரி... பிரபலம் ஆயிடும்" என்று தம்பி சொல்லிக் கொண்டிருந்தான். சிலையின் பிரம்னாண்டத்தைப் பார்த்தவுடன் எனக்கும் அப்படித்தான் தோன்றியது.

திருபோரூர் செல்லும் பிராதான சாலையில் திருவடிசூலம் அமைந்துள்ளது. மலைகள் சூழ்ந்த அமைதியான கிராமம். பிரதான சாலைகள் கூட வளைந்து நெளிந்துதான் செல்கிறது. அங்கிருந்து பிரிந்து செல்லும் கிளைச் சாலையின் 3 கி மீ தொலைவில் இந்த இடம் அமைந்துள்ளது. அம்மன் கோவில் செல்லும் வழியில் பழமைமிக்க சிவஸ்தலம் அமைந்துள்ளது. (ஞானபுரீஸ்வரர், இடைச்சுரநாதர்) அதனைக் கடந்து சென்றால் 'ஆதி பரமேஸ்வரி தேவி ஸ்ரீ கருமாரியம்மன் க்ஷேத்ரம்' பிரமாண்டத்துடன் நம்மை வரவேற்கிறது.

நாங்கள் சென்ற நேரத்தில் ஜோடியாக இரண்டு தம்பதியினர் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களைத் தாண்டி சென்றதும் பூசாரி எங்களை வரவேற்று தீப ஆராதனை காண்பித்தார். போலவே ரவா கேசரியை தொன்னையில் வைத்துக் கொடுத்தார். நாங்களும் பிரசாதம் சாப்பிட உட்கார்ந்தோம். இலவச பிரசாதம் சுவையாக இருந்தது.

கோவில் கோபுரங்கள் இன்னும் முழுமை பெறவில்லை. அதற்கான பணிகளை நன்கொடையின் மூலம் செய்து கொண்டிருக்கிறார்கள். கட்டுமானப் பணிகள் முடிந்ததும், பிரம்மாண்ட அளவில் கும்பாபிஷேகம் நடக்க இருப்பதாக பூசாரி பகிர்ந்துகொண்டார். கோபுரவிழா விரைவில் நடக்கவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் கீழ்கண்ட முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்.

ஆதி பரமேஸ்வரி தேவி ஸ்ரீ கருமாரியம்மன் க்ஷேத்ரம்,
ஸ்ரீ கோவில்புரம், திருவடி சூலம்,
செங்கல்பட்டு தாலுகா - 603108

(அல்லது)

9/13, முதல் மேற்கு தெரு,
காமராஜ் நகர், திருவான்மியூர்,
சென்னை - 41

ஒருவழிச் சாலையாக இருக்கும் திருபோரூர் சாலையை அகலப்படுத்த மக்கள் - சாலை மறியல் செய்ததாக நீண்ட நாட்களுக்கு முன்பு படித்த ஞாபகம். அவர்களுக்கு சாதகமாக விஷயம் நடக்குமெனில் இயற்கை அன்னை கொஞ்சம் அனுசரித்துக் கொள்ளவேண்டும். சிவன் கோவில் மூடி இருந்ததால் பார்க்க முடியவில்லை. அங்கிருந்து திருக்கழுக்குன்றம் சென்றோம்.

திருக்கழுக்குன்றம் - http://thirukalukundram.blogspot.com

மலைக்கோவிலுக்குச் செல்ல சாதாரணமாகவும், செங்குத்தாகவும் செல்லும் படிகளில் ஏறினோம். மூச்சுவாங்க கோவிலுக்குள் நுழையும் பொழுது அபிஷேகம் ஆரம்பமாகியிருந்தது. சிவனும், அம்மனும் அமிஷேகம் முடிந்து பிரகாசமாக காட்சி தந்தார்கள். கலை நயமிக்க தூண்களும், சித்திர வேலைப்பாடுகளும் மனத்தைக் கொள்ளை கொண்டது. எண்ணை விளக்கின் மனமும், ஒளியும் மனதிற்கு புத்துணர்வை அளித்தது. மலையின் மேலிருந்து ஊரினைப் பார்க்கும் பொழுது தெரியும் பெரிய கோவிலும், தெப்பக்குளமும், வயல் வெளியும் தேர்ந்த கலைஞனின் ஓவியம் போல தெரிந்தது. பூஜை முடிந்ததும் வேறு பதை வழியாக கீழே இறங்கினோம். அங்கிருந்து பெரிய கோவிலுக்கு சென்றோம்.


பெரிய கோவிலைச் சுற்றி வீடுகளும், கடைகளும் இருப்பதால் மக்கள் நெருக்கம் அதிகமாக இருக்கிறது. மழைக் கோவிலின் அமைதி இங்கு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். சிவனும் அம்மனும் அலங்காரமாக வீற்றிருக்கிறார்கள். முருகர், விநாயகர் என்று பல கடவுளுக்கும் சிறிய அளவில் கோவில்களும் உள்ளே இருக்கின்றன. வேகமாக ஒரு சுற்று சுற்றிவிட்டு திருமண வரவேற்பிற்குச் சென்றோம்.

நண்பன் அவனுடைய துணையுடன் மேடையில் நின்று கொண்டிருந்தான். அவனுக்கு வாழ்த்து சொல்லிவிட்டு பிரியாணி வேட்டையில் இறங்கினோம். பிரியாணியில் பீஸ் கம்மி, குஸ்கா அதிகம். வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு இருண்ட சாலையில் ஹெட் லைட் வெளிச்சத்தில் செங்கல்பட்டிலிருந்து வண்டலூர் வழியாக அம்பத்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் பயணமானோம். சில இடங்களில் பாலியல் தொழிலாளிகள் கையசைத்து நின்று கொண்டிருந்தனர். இந்த மாதிரி நபர்கள் சபலப்பட்டு நிற்பவர்களிடம் கொள்ளை அடிப்பது பரவலாக நடப்பதாக நாளேடுகளில் படித்தது ஞாபகம் வந்தது. தம்பி உடையான் படைக்கு அஞ்சான். கூடவே தடிமாடு மாதிரி வாலிபர்கள் பக்கத்தில் இருந்ததால் வண்டியை நிறுத்துமாறு தம்பியிடம் கூறினேன். "நல்லபடியா போறது உனக்கு புடிக்கலையா? அதுவும் இல்லாம பாக்கறவங்க என்ன நெனைப்பாங்க?" என்று தம்பி இடித்துரைத்தான்.

"அவர்களிடம் 10 நிமிடம் நேர்முகம் செய்வதில் நீ ஒன்றும் குறைந்து விடப்போவதில்லை" என்று குரலை உயர்த்தியதும் நிறுத்த சம்மதித்தான்.

"என்னமோ கடவுள் விட்ட வழி... டேய் கழுத்துல நகை இருந்தா மறச்சிக்கன்கடா.." என்று பின்னால் குரல் கொடுத்தான்.

"வண்டியிலிருந்து இறங்கி ஹாய்..." என்றதும் பாலியல் தொழிலாளிகள் ஓடி விட்டார்கள்.

"நீ ரம்பம்னு அவங்களுக்கு எப்படிடா பேசாமலேயே தெரிஞ்சிது" என்று தம்பி வண்டியுடன் சேர்த்து என்னையும் ஒட்டிக் கொண்டு ஊரை நோக்கி பயணமானான். என்னுடைய மனமோ தப்பித்து எதிர்திசையில் ஓடியவர்களுடன் பயணம் செய்துகொண்டிருந்தது.

No comments:

Post a Comment