Wednesday, March 16, 2011

கண்டேன் ராசாவை நேரில்

ராசாவை என்றதும் உங்கள் மனம் அலையலையாக நீந்தி திஹாருக்கு சென்றிருக்கலாம். அந்த... ஆ ராசாவை பார்க்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. அப்படியே பார்க்க நேர்ந்தாலும் துக்கத்தில் இருப்பவரிடம் என்ன பேசுவது. ஊழலில் பணம் சேர்த்தாரோ இல்லையோ, உயிருக்குயிரான நண்பரை இழந்துவிட்டாரே!... அய்யகோ... அது இருக்கட்டும் ஊடக பத்திரிகையாளர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

நான் பார்த்தது ராசாய்யாவை. சின்னத் தாயம்மாள் பெற்றெடுத்த சின்ன ராசாவை. கருத்த குட்டையான உருவம். எல்லோரையும் ஈர்க்கக் கூடிய ஆளுமை. தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைப்புரம் என்ற கிராமத்தில் பிறந்தவர். ஆம்... இசையே பிரவாகமாக ஓடும் இளைய ராஜாவை நேரில் பார்த்தேன்.

கடந்த வாரம் கேணி இலக்கிய சந்திப்பில் பாஸ்கர் சக்தியிடம் கைகுலுக்கி விடைபெற்ற போது "அழகர்சாமியின் குதிரை திரைப்பட பாடல்களின் இசை வெளியீடு 16-ஆம் தேதி சத்யம் தியேட்டரில் நடக்குது. வந்துடுங்க" என்றார்.

"இளையராஜா வருவாரா பாஸ்கர்?" என்ற கேள்வியை அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார்.

"ம். இசைஞானி வருவாரு... நீங்க வாங்க..." என்றார்.

மெகா சீரியல்களிலும், திரைப்படங்களிலும் கதாப்பாத்திரங்களை வைத்துக்கொண்டு Comedy செய்வதுபோல, என்னை வைத்துக்கொண்டு ஏதாவது முயற்சி செய்கிறாரோ என்று யோசித்தேன். முகப்புத்தகத்தில் (FaceBook) கூட நண்பர்கள் எல்லோருக்கும் அழைப்பு விடுத்தார். சென்னையில் சில இடங்களுக்குத் தனியாக செல்ல முடியாது. அதுவும் உயர்தர கேளிக்கை கூடங்களில் ஆணாக இருந்து தனியாகச் செல்வது குற்றத்திலும் குற்றம். "தனி ஆளா வரதுக்கு வெக்கமா இல்ல... தூ" -ன்னு காரி துப்புவாங்க. பிறகு அரங்கினுள் நுழைவதே கேள்விக் குறியாகிவிடும். ஜோடி சேரும் அளவிற்குத் திறமையும் இல்லை. நண்பர்கள் யாராவது உடன் வருவதாக இருந்தால் வெளியில் நின்று வேடிக்கைப் பார்த்துவிட்டு திரும்பிவிடலாம் என்று நினைத்தேன். ராம்ஜியாகூ வருவதாக சம்மதம் தெரிவித்தார்.

மேஸ்ட்ரோ-வைப் பார்க்க வேண்டும் என்பது என்னுடைய நீண்டநாள் ஆசை. ஒரு முறை அதற்கான வாய்ப்பு கிடைத்து, கடைசி நிமிடத்தில் முடியாமல் போனது. இந்த விழாவிற்குச் சென்றால் பார்க்கலாம். கூச்சம் என் போன்றவர்களை சுலபத்தில் விடுவதில்லை. இதுவரை சத்யம் திரையரங்கிற்கு ஹேம்நாத்துடன் ஒரேஒரு முறை மட்டுமே சென்றிருக்கிறேன். அதுகூட சினிமா பார்க்க அல்ல. இசை வெளியீடு என்பது பிரபலங்கள் பங்கேற்கும் வைபோகத் திருவிழா. கலைந்த தலைமுடியும், எண்ணெய் வடியும் முகமும், ஏளனமான பார்வையும், எகத்தாளமான பேச்சும் கொண்ட என்னை சாலையோரம் சென்றாலே கழுத்தைப் பிடித்துத் தள்ளுவார்கள். "அரங்கினும் எப்படி செல்வது?" என்று யோசித்தேன். ராம்ஜி யாகூ, மணிஜி, வண்ணத்துப்பூச்சி சூர்யா, உண்மைத் தமிழன் போன்றவர்களின் முகம் தென்படவும் ஓரளவிற்கு தைரியம் வந்தது.

அலர்ஜி, ஆஸ்துமாவுக்கான அலோபதி மருத்துவர் ஸ்ரீதருடன் பாஸ்கர் சக்தி பேசிக் கொண்டிருந்தார். "நண்பருடைய பெயர் ஸ்ரீதர். இவர் ஒரு கவிஞர்" என்று அறிமுகம் செய்து வைத்தார். கூடவே அமெரிக்கா ரிட்டர்ன் என்பதையும் சேர்த்து சொல்லி இருக்கலாம். சரி... சினிமா டென்ஷன்ல மறந்து போயிருப்பார். விழா தொடங்கவும் எல்லோரும் முண்டியடித்துக் கொண்டு உள்ளே சென்றோம்.

படத்தில் பயன்பட்ட பொம்மைக் குதிரையை பத்திரிகையாளர்கள் சுற்றி சுற்றி படமெடுத்துக் கொண்டிருந்தனர். படத்தில் நடித்து பாத்திரங்களுக்கு உயிர்கொடுத்த நடிகர்களையும் புகைப்படம் எடுத்தவாறு இருந்தனர். கடைசி வரிசை எங்கிருக்கிறது என்று தேடினேன். அதற்கு முன் வரிசையின் ஓரத்தில் அமர்ந்துகொண்டேன். தேனி ஈஸ்வரும், பாஸ்கர் சக்தியும் விகடனில் வேலை செய்தனர் என்பதாலோ என்னவோ, என்னுடைய வரிசையிலும், அதற்கு பின் வரிசையிலும் விகடன் நிருபர்கள் உட்கார்ந்திருந்தனர். அருகில் இருந்தவரிடம் சொல்லிக்கொண்டு முன்வரிசைக்குச் சென்று பார்த்தேன். இளையராஜா உட்கார்ந்து கொண்டிருந்தார். இமைக்காமல் அவரையே முறைத்துப் பார்த்தேன்.

"குதிக்கிற குதிக்கிற குதிரக்குட்டி... என் மனச காட்டுதே..." -என்ற ஃ பிரான்சிஸ் கிருபாவின் பாடல் இளையராஜாவின் வித்யாசமான குரலில் ஒலித்தது. மண்மனம் வீசக்கூடிய பாடல். வேறொரு சந்தர்பத்தில் நெருங்கிச்சென்று அவரிடம் பேசலாம் என்று இருக்கைக்குத் திரும்பினேன். படத்தின் ட்ரைலரும் அதைத் தொடர்ந்து இரண்டு பாடல்களும் காண்பித்தார்கள்.

மல்லையாபுரம், அகமலை, குரங்கணி ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்ட காட்சிகள் பச்சைப் பசேல் என்று கண்களைக் கொள்ளை கொள்கின்றன. இடையிடையே ஓடும் மேகங்களும், சிற்றோடைகளும், ஒற்றைப் பாதைகளும் இயற்கையின் வாசலுக்கே அழைத்துச் செல்கிறது. நடிகர்கள் அல்லாத கிராம மக்களை, கதையின் முக்கியத்துவம் கருதி நடிகர்களாகப் பயன்படுத்தியது பாராட்டத்தக்க முயற்சி. அப்பு என்ற குதிரைக்கும், அப்புக்குட்டி என்ற கதாநாயகனுக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி நன்றாகவே வந்திருக்கிறது. கல்யாணியாக வரும் சரண்யா மோகனுடனான கெமிஸ்ட்ரியை விட அதிகம் என்றே சொல்ல வேண்டும். ஓர் இடத்தில் அப்புக்குட்டி வெயிலில் படுத்துத் தூங்குவான். அதைப் பார்க்கும் குதிரை வெயிலை மறைத்து அவனுக்கு நிழல் கொடுக்கும். இது போன்ற நிறைய காட்சிகள் இருக்கின்றன. சுரேஷ் கண்ணன் போன்றவர்கள் கவனித்து எழுத நிறைய விஷயங்கள் திரைப்படத்தில் இருக்கும் என்றே நினைக்கிறேன். "குதிரை கட்டவிழ்க்கப்பட்டது" என்ற வார்த்தைகளுடன் பிய்ந்த கயிற்றினை அறுத்துக் கொண்டு ஓட எத்தனிக்கும் குதிரையின் மூலம், படம் விரைவில் திரைக்கு வருகிறது என்ற கான்செப்டை யார் யோசித்தார்கள் என்று தெரியவில்லை. அந்தக் காட்சிகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

மூன்று வருடமாக நின்றுபோன திருவிழாவை நடத்தப் போவதாக அறிவித்துக் கொட்டப்படும் முரசைத் தொடர்ந்து ஒலிக்கும் "அடியே இவளே... ஊருக்குள்ள திருவிழாவாம்... அழகர்சாமிக்கு..." என்ற பாடலும், இடையிடையே ஒலிக்கும் கிராமியக் கருவிகளும் கூத்துப் பரம்பரை விழாக்களை நினைவுபடுத்தியது. இசைஞானி இளையராஜாவின் பாடலும், பின்னணி இசையும் திரைப்படத்தின் பரிமாணத்தை அழுத்தமாகப் பதிவு செய்யும் என்றே நினைக்கிறேன். ஹங்கேரி இசைக் குழுவைச் சேர்ந்த 5 கலைஞர்களை வரவழைத்து படத்தின் இசைக்காக பயன்படுத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்ரைலர் மற்றும் பாடல்காட்சிகள் ஒளிபரப்பாகி முடிந்ததும், சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப் பட்டவர்களும், படத்தின் தொழில் நுட்பக் கலைஞர்களும் மேடையேற்றப் பட்டார்கள். சுசீந்திரன் வரவேற்புரை கொடுக்கத் துவங்கியதும் தியேட்டரிலிருந்து கிளம்பினேன். என் பாட்டி பகிர்ந்துகொண்ட விஷயம் ஒன்று ஞாபகம் வந்தது.

"டேய், தலக் காவேரின்னு சொல்றாங்க. காவேரி அங்கதான் பொறக்குதாம். மலைமேல ஏறிப் பாத்தா ரெண்டடிக்கு ரெண்டடி சின்னதா ஒரு குழி இருக்குதுடா. ஊற்று மாதிரி லேசா தண்ணி வருது. அதுதான் இவ்வளோ பெரிய ஆறா விரிஞ்சி ஓடுதான்னு ஆச்சர்யமா இருக்குதுடா" என்று 35 வருடங்களுக்கு முன்பு பார்த்ததை 5 வருடங்களுக்கு முன்பு பகிர்ந்து கொண்டாள்.

இளையராஜாவை தூரத்திலிருந்து பார்த்தபோது "கட்டை குட்டையான அகத்திய முனி போன்ற இந்த எளிமையான உருவத்திலிருந்தா தமிழர்களை மயக்கும் மெட்டுக்கள் வந்து கொண்டிருக்கின்றன. உலகெல்லாம் ஒலிக்கின்றன" என்று நினைத்துக் கொண்டேன். இந்த ஏப்ரல் மாதம் அழகர்சாமியின் குதிரை கட்டவிழ்க்கப்பட்டு திரைக்கு வருகிறதாம். தவறாமல் சென்று பார்க்க வேண்டும். முடிந்தால் நீங்களும் பாருங்கள்...

:-)))

3 comments:

  1. பார்ர்ரா...ம்ம்ம்ம்...
    படம் பார்க்க ஆரம்பிச்சதுமில்லாம, நீங்களும் பாருங்களேனாம்.. கிருஷ்ணா, நீ ரொம்ப மாறிட்ட... :-)

    ReplyDelete
  2. எல்லாம் "தும்மல்... இருமல்..." மாதிரி அதுவா அமையித்துடா. எதிர்பார்க்காதது எல்லாம் நடக்குது...

    ReplyDelete
  3. அருமையான பகிர்வு ;) கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் - குறிப்பாக இசை தெய்வத்துக்கு ;)

    ReplyDelete