Tuesday, March 15, 2011

கேணியில் ட்ராஸ்கி மருது - 02


1977-ஆம் ஆண்டு சிற்பி ஓய்வுபெற்று கும்பகோணம் சென்றபோது என்னையும் உடன்வருமாறு அழைத்தார். சென்னையில் இருப்பதையே நான் விரும்பினேன். ஏனெனில் ஏராளமான வாய்புகள் இங்கிருந்தது. 1960-70 கள் ஓவியத் துரையின் முக்கியமான மறுமலர்ச்சி ஆண்டுகள். 60-களில் ஓவியர் பணிக்கர், தனபால், ஆதிமூலம் போன்றவர்களும், 70-களில் ஓவியர் சந்தானராஜ், அந்தோனிதாஸ், பாஸ்கர் போன்றவர்களும் வீரியத்துடன் செயல்பட்டுக் கொண்டிருந்த காலம். இவர்கள் எல்லோருமே ஓவியத் துறையின் ஒரு தலைமுறை மாற்றம் நிகழ காரணமாக இருந்திருக்கிறார்கள். அந்த காலகட்டத்தில் அவர்களுடன் இருக்க நேர்ந்தது என்னுடைய பெரிய பாக்கியம். தனித்து இயங்கிய ஓவியம் - சிறு பத்திரிகை, சினிமா என்று விரிந்தது மட்டுமல்லாமல், அதனுடைய இயல்பையும் காப்பாற்றிக் கொண்டது. இன்றுள்ள நிலையில் Manual Work-ன் எதிர்காலத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது. எதிர்காலத்தில் எப்படி இருக்கப்போகிறது என்றும் கலக்கமாக இருக்கிறது. கல்லூரியில் எனக்கு மூத்த மாணவரான ஓவியர் சந்ருவுடன் இருந்த நாட்கள் மிகவும் இனிமையானது. பல விஷயங்களை ஒன்றாகக் கற்றுக் கொண்டோம். முயற்சியின் அடிப்படையில் செய்முறையாக அனைத்தையும் கற்க முடிந்தது.

நான் வரையும் ஓவியத்தில் ஓர் அசையும் தன்மை இருக்கும். சிறுவயதிலிருந்தே எனக்கு அனிமேஷனில் விருப்பம் அதிகம். மதுரையில் ரீகல் டாக்கிஸ் என்றொரு திரையரங்கம் இருந்தது. பகலில் நூலகமாகவும், இரவில் சினிமா அரங்கமாகவும் மாறிவிடும் அதிசய திரையரங்கம். ஏராளமான படங்களை அங்கு பார்த்திருக்கிறேன். குறும்படங்கள், ஆவணப்படங்கள், அனிமேஷன் படங்கள் என அனைத்து வகையான படங்களையும் அங்கே திரையிடுவார்கள். சினிமா பார்க்கும் ஆர்வத்தை எனக்குள் தூண்டியது அப்பாதான். "பள்ளிக் கூடத்தில் பாலைவனம் என்ற வார்த்தையைத் தான் ஆசிரியர் சொல்லித் தருவார். சினிமாவில் அதனை நேரடியாகப் பார்க்கலாம். எனவே சினிமாவிற்குப் போ. பாடங்களைப் பிறகு படித்துக் கொள்ளலாம்" என்பார். டாலியை அப்பாதான் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். பிகாசோவை கடுமையாக விமர்சனம் செய்வார். டாலிக்கு கம்யூனிச இயக்கத்தினருடன் தொடர்பிருந்தது. ட்ராஸ்கியுடனான அவருடைய தொடர்பையும் சொல்லி இருக்கிறார்.

Animation என்று வரும்போது ஒரு நொடிக்கான விஷயத்தை 16, 24, 36 என்ற Frame எண்ணிக்கையில் தொடர் ஃபிரேம்களில் சொல்ல வேண்டும். திரையில் சில நொடிகள் தான் வரும் என்றாலும், அதற்கான மறைவு வேலைகள் அதிகம். 101 Dalmatians, 10 commandments, Samson and Delilah போன்ற படங்களை சிறு வயதிலேயே பார்த்திருக்கிறேன். அனிமேஷனில் எங்காவது குறையிருந்தால் கண்டுபிடித்து விடுவேன். கதை போகிற போக்கிலேயே கவனித்து விடுவேன். அந்தத் திறமை எனக்கிருந்தது. இவற்றையெல்லாம் பகிர்ந்துகொள்ளத் தான் ஒருவரும் இல்லை. 1980-85 வரை பகிர்ந்து கொள்ள யாருமே கிடைக்கவில்லை. அதன் பிறகு வெங்கியுடன் பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தேன். அவன் மட்டும் தான் சொல்லுவதைக் கேட்டுக் கொள்வான். இவற்றையெல்லாம் சினிமாவில் பரிசோதிப்பது அதனினும் கடினம். ஏதாவது நட்டம் ஏற்பட்டால் சொந்த செலவில் தான் சரிக்கட்ட வேண்டும். சினிமாவில் உள்ளவர்களுக்கு எல்லாவற்றையும் விளக்கமாக எடுத்துச் சொல்ல வேண்டும். மனோபாலா போன்றவர்களை வற்புறுத்தி அழைத்துச் சென்று படங்களைக் காண்பித்து விளக்கியிருக்கிறேன். Vertical Camera-வில் மட்டுமே இதனை சோதித்துப் பார்க்க முடியும். செலவு அதிகமாகும் என்பதால் யாரும் முயற்சி எடுக்காமல் இருந்தார்கள். 80-கள் வரை விளம்பரப் படங்களில் கூட இதையெல்லாம் முயற்சி செய்யவில்லை. பெரிய Vision இல்லாமலே இருந்தார்கள். அப்படியே செய்தாலும், டிஸ்னியின் தாக்கமாகவே அவைகளெல்லாம் இருந்தது.

ஒரு காலம் வரை அனிமேஷனில் விருப்பமுள்ளவர்கள் தனித்து இயங்க முடியாத சூழல் இருந்தது. Photography, Animation ஆகியவை சினிமாத் துறையில் மட்டுமே இருந்தது. இவற்றைக் கற்றுக்கொள்ள சினிமா துறைக்குத் தான் செல்ல வேண்டும். ஆர்டிஸ்ட்-ஐ விட தொழில் நுட்பம் கடினமாக இருந்த காலகட்டம். ஆரம்ப காலத்தில் தனித் தனியாக இருந்த எல்லாம் இன்று ஒரே விஷயமாகிவிட்டன. டெக்னாலஜி மாறினாலும் Technique அதேதான். சின்னச் சின்ன அனுமானங்களின் ஊடே அனைத்தையும் அனுசரித்து செல்ல வேண்டியிருக்கிறது.

ஆங்கில இதழில் அனிமேஷன்ஸ் பற்றிய "Computer is an artist friend" கட்டுரையை வாசித்தேன். அனிமேஷன் வேலைகளின் சாத்தியத்திற்கு கணினியின் பயன்பாட்டினை விளக்கிய அருமையான கட்டுரை. அதைப்படித்துவிட்டு கம்ப்யூடர் வாங்க ஆசைப்பட்டேன். PC, MAC எல்லாம் வராத காலம். ஒரு கம்ப்யூட்டரின் விலையே 22 லட்ச ரூபாய். ஒமேகா என்ற இதழில் ஒரு முகவரி கொடுத்து கம்ப்யூட்டர் விற்பனை செய்வதாகச் சொல்லி தொலைபேசி எண்ணையும் கொடுத்திருந்தார்கள். அவர்களுடன் தொடர்பு கொண்டதில், வீட்டிற்கே வந்து அதைப் பற்றி பேசுவதாகக் கூறினார்கள். இரண்டு நாட்கள் கடந்தும் அவர்கள் வரவில்லை. பொறுமையிழந்து அவர்களைத் தேடி குறிப்பிட்டிருந்த முகவரிக்குச் சென்று கதவைத் தட்டினேன். வாசலிலேயே நிற்கவைத்துப் பேசினார்கள். "உங்க வீட்டிற்கே வரோம். இங்கருந்து கெளம்புங்க" என்று விரட்டினார்கள். கள்ள மார்க்கெட்டில் கம்ப்யூட்டர் விற்றுக் கொண்டிருந்த காலம். பிறகு முதல் கம்ப்யூட்டரை பார்க்க பூனாவிற்கு ரயிலில் கிளம்பினேன். அவர்களே அழைத்துக் கொண்டு சென்றார்கள். ஓவியர்களே நிரல் எழுதிய Design Software கிடைத்த காலம். அந்த மென்பொருட்கள் அருமையாக இருக்கும். அவையெல்லாம் இப்பொழுது இல்லை.

மத்திய அரசின் Weaver Service Centers-ல் வேலை பார்த்த பொழுது கைநிறைய சம்பளம். ஆனாலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பணியில் இருப்பது சிரமமாக இருந்தது. அதிலிருந்து வெளியில் வர நினைத்தேன். சாரங்கன் அவருடைய படத்திற்கு அனிமேஷன் செய்யவேண்டும் என்றார். மூன்று மாதம் 20 மணி நேரங்கள் வேலை செய்து 300 அடி செய்து கொடுத்தேன். பெரிய வெற்றிப் படம் இல்லை. என்றாலும் என்னுடைய வேலையில் நான் திருப்திப்பட்டேன். முதன் முதலில் செய்த அனிமேஷனை திரையில் பார்க்கும் பொழுது ஆறு வினாடிகள் மட்டுமே குறை இருந்தது. அதற்கு ஆர்ட் கிளப் அவார்ட் கொடுத்தார்கள். உடனே மத்திய அரசுப் பணியை ராஜினாமா செய்துவிட்டேன். அனிமேஷன் செய்ததற்காக கிடைத்த பணத்தில் ஒரு கம்ப்யூட்டர் வாங்கிவிட்டேன்.

பிரசாத் லேப் உரிமையாளார் எங்களுடைய அனிமேஷனைப் பார்த்துவிட்டு எங்களை அழைத்துப் பேசினார். அதன் பிறகு ஐந்து கோடி ரூபாய் செலவில் அனிமேஷனுக்கான வசதியான லேப் நிறுவினார்கள். Vector என்ற கணினிப் பயிற்சி மையத்தையும் தொடங்கினார்கள்.

சினிமாவில் சேர்ந்த போது ஆரம்பத்தில் Optical Animation செய்து வந்தேன். வேலுபிரபாகரன் பரீட்சார்த்த முயற்ச்சிகள் செய்தபொழுது அவருடன் சேர்ந்து வேலை செய்திருக்கிறேன். அவருடைய முயற்சிகளுக்கு என்னையும் சேர்த்துக் கொள்வார். பிறகு ஸ்ரீதருடன் வேலை செய்திருக்கிறேன். அப்போதுதான் நாசரின் தொடர்பு ஏற்பட்டது. அதன் மூலம் தேவதை படத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.

சிறுவயதில் கூட கேமரா மூலம் படம் எடுத்திருக்கிறேன். பொம்மைக் கடையில் 45 ரூபாய்க்கு வாங்கியது. என்னுடைய சேமிப்பையும், வீட்டில் செலவிற்காக வைத்திருந்ததையும் போட்டு வாங்கியது. அந்தக் கேமராவில் Table Lamp வெளிச்சத்தில் சின்னச் சின்ன பொம்மை வீரர்களை நிற்க வைத்துப் படங்கள் எடுப்பேன். நான் வரைந்த பின்னணியையும், வீரர்களையும் கொண்டு முயற்சி செய்வேன். என்றாலும் முதன் முதலில் கேமராவைப் பார்த்தது தாத்தாவின் ஷூட்டிங்கில் தான். கேமராவின் வழி உலகம் வேறு மாதிரி தெரிந்தது. அது மறக்க முடியாத முதல் அனுபவம்.

திரைப்படங்களில் என்னுடைய பங்களிப்பு மிகவும் தீர்மானிக்கப்பட்ட சிறிய அளவில் தான் இருக்கிறது. அங்கு எல்லாவற்றையும் தீர்மானிப்பவர் இயக்குனர் தான். எனக்கான குறைந்த பகுதியில் ஆகச்சிறந்த பங்களிப்பைக் கொடுக்கவே விரும்புகின்றேன். வெற்றிகரமான விளம்பரப் படங்களுக்கு ஸ்டோரி போர்ட் வரைந்திருக்கிறேன். ஸ்டோரி போர்டின் முக்கியத்துவத்தை எழுதியும், நானே வரைந்தும் செயல்பட்டிருக்கிறேன். சிவக்குமார், நாசர் போன்றவர்களுடன் இதே மாதிரி சினிமாவிலும் பணியாற்றி இருக்கிறேன். தேவதை படத்திற்கு வரைந்த ஸ்டோரி போர்டும், கலர் ஸ்கீமும் இப்பொழுது கூட என்னிடம் இருக்கிறது. நாசரிடமும் கொஞ்சம் இருக்கிறது.

நடனம், ஓவியம், இசை, திரைப்படம் போன்ற கலைக் கூறுகள் மொழியைக் கடந்து எல்லோராலும் ரசிக்கப்படுகிறது. புரியும் தன்மையில் இருக்கின்றன. அந்த வகையில் அனிமேஷனும் எல்லையற்ற சாத்தியக் கூறுகளைக் கொண்டுள்ளன. நினைத்தவற்றை நினைத்த விதத்தில் செய்யக்கூடிய சுதந்திரம் எனக்கிருக்கிறது. கலாப்பூர்வமாக இயங்கக் கூடிய களத்தை என் சார்ந்து நானே அமைத்துக் கொண்டேன். நான் எதையெல்லாம் செய்ய விரும்பினேனோ அவை அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறேன். அதுவே எனக்குப் பெரிய சந்தோசம். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று கடைசி இரண்டு வரிகளை அழுத்தமாகக் கூறி அனுபவப் பகிர்வுகளை நிறைவு செய்தார். அதைத் தொடர்ந்து நீண்ட நேர கேள்வி பதில் விவாதம் நடந்தது. இறுதியாக பாஸ்கர் சக்தியின் நன்றியுரையுடன் கேணி ஓவியர் சந்திப்பு இனிதாக நிறைவு பெற்றது.

மருதுவின் ஓவியம் சார்ந்த தகவல்களை அந்திமழை இதழின் ஒரு பகுதியாகக் காணக் கிடைக்கிறது: M. Trotsky Marudu - An Indian Artist

ஓவியர்களின் வலைப்பூ - அனிகார்த்திக்

பின் குறிப்பு:
1. என்னுடைய ஞாபகத்தில் இருப்பதை மட்டுமே எழுதி இருக்கிறேன்.
2. அவருடைய 4 மணிநேர பேச்சின் சிறுவடிவம் தான் இது. ஆகவே தகவல்கள் நிறைய விடுபட்டிருக்கலாம். அதற்கு நானே பொறுப்பு. பிழை இருந்து யாரேனும் தெரிவித்தால் சரிசெய்துவிடுகிறேன்.
3. அடுத்த மாதம் நடக்கும் கேணி சந்திப்பில், ஓய்வுபெற்ற தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா I.A.S அல்லது கர்னாடக சங்கீத கலைஞர் T.M கிருஷ்ணா இவர்களில் யாரேனும் ஒருவர் பங்குகொள்ளலாம். நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளவும்.

No comments:

Post a Comment