Monday, March 14, 2011

அழகர்சாமியின் குதிரை - இசை வெளியீடு

முகப்புத்தகத்தில் (FaceBook) பாஸ்கர் சக்தியின் அழைப்பு:

நண்பர்களே!`அழகர்சாமியின் குதிரை’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு உங்கள் அனைவரையும் அழைக்கிறேன். சத்யம் திரையரங்கில் வரும் புதன்கிழமை (16.03.11)மாலை 6.30 மணிக்கு...அவசியம் வாருங்கள்.

சிறுகதை எழுத்தாளராக பாஸ்கர் சக்தியை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவருடைய "வேலப்பர் மலை, காளான், ஏழுநாள் சூரியன் ஏழுநாள் சந்திரன், தக்ளி" போன்ற கதைகளின் வரிசையில் தேனீ சார்ந்த ஹாஸ்யக் கதையான "அழகர் சாமியின் குதிரை"யும் ரொம்பப் பிடிக்கும். இந்தக் கதையை திரைப்படமாக எடுக்கிறார்கள் என்றவுடன் வியப்பு மேலிட்டது. அதே நேரத்தில் சந்தோஷமும் கூட. பல படங்களுக்கு வசனம் எழுதி இருந்தாலும், அவருடைய கதை திரைப்படமாவது இதுதான் முதல் முறை. இயக்குனர் சுசீந்திரன் இயக்குகிறார்.

நண்பர் வெங்கட்ராமனின் தொகுப்புகள் வலைப்பதிவில் முழுக்கதையும் படிக்கக் கிடைக்கிறது: அழகர் சாமியின் குதிரை – பாஸ்கர் சக்தி


சில மாதங்களுக்கு முன், அவள் விகடனில் பாஸ்கர் சக்தியின் தாயார் பேட்டி கொடுத்திருந்தார்கள்.

"எப்பவும் புத்தகமும் கையுமா படிச்சிட்டே இருப்பான். கதை எழுதறேன்னு வேற சுத்திட்டு இருந்தான். அவனோட கதையை சினிமா எடுக்கறாங்கலாமே. சந்தோஷமா இருக்கு. அவனோட கதையே அவனை காப்பாத்திடுச்சு" என்று சொல்லி இருந்தார்கள். பேட்டியுடன் ஒரு புகைப்படத்தையும் இணைத்திருந்தார்கள்.

அது எப்படி பாஸ்கர்? ஒண்ணுமே தெரியாத பச்ச கொழந்த மாதிரி மொகத்தை வச்சிக்கினு போட்டோவுக்கு போஸ் கொடுக்குறிங்க? என்று கேட்டிருந்தேன்.

"நம்ம மொகத்துல என்ன வாழுது!. எல்லாம் தேனி ஈஸ்வரின் கேமரா செய்யற விஷயம்" என்றார்.

அதே தேனி ஈஸ்வர் தான் இந்த படத்தின் மூலம், முதன் முறையாக ஒளிப்பதிவாளராக அவதாரம் எடுக்கிறார். கிடைத்த வாய்ப்பை நல்ல விதமாக பயன்படுத்திக் கொள்வார் என்றே நம்புகிறேன். இசைகூட இசைஞானிதான் கவனித்துக் கொள்கிறார். முக்கியமான பணிகளை தேனி மனிதர்களே கவனித்துக் கொள்வதால் மண்ணின் மனம் குறைவில்லாமல் வீசும் என்று எதிர்பார்க்கிறேன். அப்படியே படம் திரைக்கு வரும் நாளையும்தான்.

இசை வெளியீட்டிற்கு தங்கையின் புருஷனுடன் செல்ல இருக்கிறேன். உள்ள விடலேன்னா என்ன பண்றது? நம்ம என்ன காட்டிற்கா போகப்போகிறோம். சத்யம் திரையரங்கிற்கு தானே. வர்றவங்க போறவங்கள வேடிக்கைப் பார்த்துட்டு வந்துட வேண்டியதுதான். இசை வெளியீட்டிற்கு இளையராஜா வருவதாக பாஸ்கர் உறுதிப்படுத்தி இருக்கிறார். இப்பொழுதே என் கால்கள் அரிக்கிறது.

:-)

பாஸ்கர் சக்தியின் சார்பாக "வருக... வருக..." என்று அடியோன் எல்லோரையும் வரவேற்கிறேன். வாய்ப்புள்ள நண்பர்கள் விழாவில் தயக்கமில்லாமல் கலந்து கொள்ளலாம்.

நன்றி...

3 comments:

  1. சுரேஷ் கண்ணன்://விழாவில் தயக்கமில்லாமல் கலந்து கொள்ளலாம்.//

    என்ன கிருஷ்ணா, நீங்களே உள்ளே விடலைன்னா' -ன்னு தயக்கத்தோட போறதா சொல்லிட்டு இப்படியொரு அறிவிப்பு விடலாமா? :-)))

    புத்தகக் காட்சியில் பாஸ்கர் சக்தியிடம் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தேன். 'வெண்ணிலா கபடிக் குழு'விற்கு எப்படி ஒரு அபத்தமான படத்தை (நான் மகான் அல்ல) தர முடிந்தது என்று கேட்டேன். திரையுலகின் சர்வைவல் பற்றிச் சொன்னார்.

    குதிரை நன்றாக உருவாக்கப்பட்டு ஓடும் என நம்புகிறென்.

    /-- தாராளமாக வரலாம். சத்தியம் திரையரங்கின் கொள்ளளவு அதிகம்...நம்மளையெல்லாம் தாங்கும் தலைவா :-) --/ FaceBook - Baskar shakthi

    சும்மா ஒரு Flow காக எழுதியது. நேரம் இருந்தால் அவசியம் வாருங்கள் சுக.

    ReplyDelete
  2. கிருஷ்ணா கண்டிப்பாக வருகிறேன், உங்களை சந்திக்க

    ReplyDelete
  3. வாவ், நல்ல ஹாஸ்யமான கதையாச்சே அது. சீக்கிரமே வெள்ளித்திரையில் பார்க்கும் ஆவலுடனிருக்கிறேன்.

    ReplyDelete