Tuesday, March 1, 2011

கவிதைப் பட்டறை - இரண்டாம் நாள்

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், கலை பண்பாட்டுத் துறை 26-02-2011 முதல் 10-03-2011 வரை வழங்கும் பதிமூன்று நாள் கலை இலக்கியத் திருவிழா பிப்ரவரி 26-ல் துவங்கியது. முதல் நாள் அரசியல் நெடி அடிக்குமென்பதால் தவிர்த்திருந்தேன். இரண்டாம் நாள் ஞாயிறு என்பதால் சொந்த வேலை காரணமாக செல்ல இயலவில்லை. விழாவின் ஒரு பகுதியான கவிக்கோ அப்துல் ரகுமான் தலைமை ஏற்கும் மூன்றாம் நாள் நிகழ்ச்சியான கவிதைப் பட்டறைக்கு அ மு சையதும் வருவதாகச் சொல்லி இருந்தான். ஆகவே சுவாரஸ்யத்துடன் கிளம்பினேன். மெரினா லைட் ஹவுஸ் - சாந்தோம் - சத்யா ஸ்டுடியோ வரை வாழை மரத் தோரணைகள் நம்மை வரவேற்றன. அடடே...! கலைவிழா என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம். "என் பெயரன் திருமணத்திற்கு வருகை தரும்..." என்று அச்சடித்த ப்ளெக்ஸ் பேனர்களில் மருத்துவர் ஐயாவின் சிரித்த முகம் என்னை பாதித்தது. பேருந்தோ பொறுமையை சோதிக்குமாறு நெரிசலில் சிக்கி ஆமை வேகத்தில் சென்றது. காற்றில் வாழை இலைகள் வீசிக்கொண்டு ஆடின.

சிலப்பதிகாரத்தில் ஓர் இடம் வரும். கோவலனும் கண்ணகியும் மதுரை நகரத்திற்கு நெருக்கமாக வருகிறார்கள். மதிலின் மேலுள்ள கொடிகள் காற்றில் ஆடிக் கொண்டிருப்பதை, "இந்த நகரத்திற்கு வராதீர்கள். உங்களுக்கு ஆபத்து காத்துக் கொண்டிருக்கிறது. எனவே திரும்பிச் சென்றுவிடுங்கள்" என்பது போல இளங்கோ அடிகள் வேறுமாதிரி உருவகப் படுத்தியிருப்பார். கொடியின் ஆன்மா கூடு விட்டு கூடு பாய்ந்து வாழையாக பேசுகிறதோ என்று தோன்றியது.

சத்யா ஸ்டுடியோவிற்கு 11 மணி சகிதம் சென்று சேர்ந்தேன். எம்ஜிஆர் ஜானகி கல்லூரியின் நான்கு ஆசிரியர்கள், ஒரே நேரத்தில் இதய வலி காரணமாக சென்ற மாதத்தின் ஒருநாள் மருத்துவமனையில் சேர்ந்ததாக நாளேடுகளில் படித்தேன். காலஞ்சென்ற மாணவியின் சார்பாக அவர்களை வெள்ளைக் கொடியுடன் விசாரித்துவிட்டுச் செல்லலாமா என்று தோன்றியது. பொடி நடையாக, ஏசு அழைக்கிறார் ஜெப கோபுரத்தின் (Jesus Calls) அருகிலுள்ள இசைக் கல்லூரிக்குச் சென்று விழா அரங்கினைத் தேடிக் கொண்டிருந்தேன். நடுக்காட்டில் கயவர்களிடம் சிக்கிக்கொண்ட அபலையைப் போல அரங்கினைக் கண்டுபிடிக்க முடியாமல் தடுமாறினேன். சையது வந்து கதாநாயகன் போல விழா அரங்கிற்கு அழைத்துச் சென்றான். விழா துவங்கியதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. கவிஞர் விக்ரமாதித்யன், ஓவியர் ட்ராஸ்கி மருது, எழுத்தாளர் அழகிய பெரியவன் ஆகியோர் பார்வையாளரோடு பார்வையாளராக அமர்ந்திருந்தனர். யவனிகா ஸ்ரீராம் தாமதமாக வந்து இணைந்து கொண்டார். கவிஞர் தேவதேவன், யுவன் சந்திரசேகர், ரமேஷ் பிரேதன் ஆகியோரை கடைசி வரை காணக் கிடைக்கவில்லை.

கவிஞர் இளையபாரதியும், உமா சக்தியும் விழாவினைத் துவக்கி வைத்தார்கள். அப்துல் ரகுமானுக்கு பதில் விக்ரமாதித்யன் தலைமை உரையாற்றினார். சங்க இலக்கியத்தையும் கவிஞர்கள் அக்கறையுடன் தெரிந்து கொள்ள வேண்டும். எதுகை மோனை, ஓசை போன்ற விஷயங்களை விடமுடியாமல் தவித்த கவிஞர்களையும், உரைநடை வசனம் போன்றவற்றை மடக்கிப் போட்டு புதுப்பாதை வகுத்த கவிஞர்களையும், பிற்கால மரபினை தோளில் சுமந்த புதுமைப்பித்தன், கு ப ரா, பசுவய்யா, ஞானக்கூத்தன் போன்றவர்களுடைய பங்களிப்பையும், அதனைத் தொடர்ந்து கவிதையின் வடிவத்தை அடுத்த தளத்திற்கு முன்னகர்த்திய தேவதேவன், தேவதச்சன், சுகுமாரன் என்று பலரையும் பற்றி பேசினார். உயிரெழுத்து, காலச்சுவடு, உயிர்மை என்று அவரவர்களுக்கு வாசகர் வட்டம் இருக்கிறது. என்றாலும் தொடக்க காலத்திலிருந்தே நவீன கவிதையை படைப்பாளிகள் சொந்த செலவில் தான் கொண்டு வந்திருக்கிரார்கள். சுகுமாரனையே கூட உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளலாம். சமீபத்திய சங்கர் ராமசுப்ரமணித்தின் புத்தகம் நிறைய செலவாகவில்லை என்று கேள்விப்பட்டேன். ஸ்ரீ நேசன் தென்காசியில் இருக்கிறார். அவருடைய புத்தகம் ஆழி வெளியீட்டில் வந்துள்ளது. அதனை தென்காசியில் வாங்க முடியாது. திருநெல்வேலியிலும் கிடைக்காது. சென்னைக்கு வந்தால் தான் வாங்க முடியும். இந்த நிலைமையில் தான் நிறைய கவிஞர்கள் இருக்கிறார்கள். இங்கு வருவதற்கு முன்புகூட கிரியாவிற்கு சென்று கொண்டாலத்தி (ஆசைத்தம்பி) வாங்கிப் படித்துவிட்டுத் தான் வந்திருக்கிறேன். இதையெல்லாம் மீறித்தான் நவீன கவிதைத் தொகுப்புகள் வந்துகொண்டிருக்கின்றன என்று கவிதை குறித்தும், கவிஞர்களின் நிலை குறித்தும் விரிவாகப் பேசினார். அதைத் தொடர்ந்து ட்ராஸ்கி மருது உரையாற்ற வந்தார்.

அடிப்படையில் ஒரு கவிஞனின் படைப்பு நிலைக்கு என்ன மனநிலை இருக்கிறதோ, அதே தளத்தில் தான் ஓவியனின் மனநிலையும் இருக்கிறது. 1960-70 களில் சிறு பத்திரிகை நண்பர்களுடன் இயங்கும் வாய்ப்பு ஓவியர் ஆதிமூலம், தட்சிணா மூர்த்தி, நாகை பாஸ்கர் போன்றவர்களின் மூலம் கிடைத்தது. அந்த காலத்தில் சிறுபத்திரிகை நடத்துவது கடினமான செயல். 'கணையாழி, கசடதபற' போன்ற இதழ்களை உதாரணத்திற்குச் சொல்லலாம். ஓவியம் எல்லோருக்கும் சென்று சேரவேண்டுமென்று ஆதிமூலம் போன்றவர்கள் வலியச் சென்று சிறுபத்திரிகையில் இணைந்து பணியாற்றினார்கள். அதுவரை தனித்து இயங்கிய ஓவிய (Painting) சூழல், ஒரு காலத்திற்குப் பிறகு எழுத்துடன் சேர்ந்து இயங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அந்த காலத்தில் நானும் அவர்களுடன் நெருக்கமாக இருந்திருக்கிறேன். அப்பொழுது தனபால், கே மாதவன் போன்றவர்கள் கூட என்னுடன் நெருக்கமாக இருந்தார்கள். சுபமங்களா-வின் ஆரம்பம் முதல் கடைசி இதழ் வரை என்னுடைய ஓவியங்கள் தான் இருக்கும். இந்த சூழல் சிறுகதை, நாவல் கவிதை என்று இயங்கிய நண்பர்களுடனான தொடர்பிற்கு வழி வகுத்தது.

பாப்லோ மேகசின் வந்த பிறகு ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டது. அழகான ஓவியங்களுக்கு பதில் சிதைந்த ஓவியத்தை படைப்புகளுக்கு ஏற்ப பயன்படுத்தினார்கள். ஆரம்பத்தில் சிறுபத்ரிகையின் இந்தச் செயலை பெரிய பத்திரிகைகள் கிண்டலடித்தன. சிறு பத்திரிகையில் பணியாற்றிய நண்பர்கள் 80களின் ஆரம்பத்தில் வெகுஜன பத்திரிகைகளில் சேர்ந்தார்கள். பெரிய பத்திரிகைகள் தங்களுடைய நிலையிலிருந்து மாற வேண்டி இருந்தது. கிறுக்கல் ஓவியத்தில் கூட ஏதோ இருக்கிறது என்று வாசகர்களும் கவனிக்க ஆரம்பித்தார்கள். 30 வருடங்கள் தொடர்ந்து இயங்கியதால் தான் இந்நிலை சாத்தியமானது. அட்சரத்திலிருந்து தொடங்குவதைப் போலத்தான் இதையும் கருத வேண்டும்.

படைப்பை வாசித்துவிட்டு ஓவியத்தைப் பார்க்கிறார்கள். அல்லது ஓவியத்தைப் பார்த்துவிட்டு படிக்கிறார்கள். எனவே ஓவியத்துடன் தொடர்பு கொள்ள ஒரு சிறு பகுதியேனும் அதில் இருக்க வேண்டும். படைப்பிலிருந்து தனியாக எடுத்தாலும் ஓவியம் தனித்து இயங்க வேண்டும். எழுத்து சார்ந்த மகிழ்ச்சியான தருணங்கள் ஏராளமாக நினைவிலிருக்கின்றன. அவற்றை ஏற்படுத்திக் கொடுத்த நண்பர்களுக்கும், சிறு பத்திரிகைகளுக்கும் நன்றி...என உரையாடலை முடித்துக் கொண்டார்.

அதைத் தொடர்ந்து அழகிய பெரியவன் மெல்லிய சாரல் போல பேச ஆரம்பித்தார். சாரல் மழையாகி சொட்டச் சொட்ட நனைத்தது. இலக்கியத்தில் மனதிற்கு நெருக்கமாக உரையாடுவது கவிதைதான். கவிதைக்குத் தடைகள் இல்லை. அவைகள் கொடுக்கக் கூடிய படிமங்களும், அனுபவங்களும் சொல்லில் அடங்காதவை. 3000 ஆண்டுகளான கவிதை மரபில் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை வெளிப்படுகிறது. அதில் பாணன், பறையன், துடியன், கடம்பன், இழிசினர் போன்ற சொற்கள் பயன்படுத்தப் படுகின்றன. இவையனைத்தும் மனதை உறுத்தும் அதே வேலையில் இவர்கள் தான் தொல்குடிகள், இவர்கள் இல்லையேல் சமூகம் இல்லை என்பதும் புலனாகிறது. 'யோனி பேதம்' போன்ற கடுமையான சொற்களைக் கூட சங்க இலக்கியத்தில் காண முடிகிறது என்று வரிகளையும், கவிதைகளையும் மேற்கோள் காட்டிப் பேசினார். மேலும் மொழிவிளையாட்டு மற்றும் தத்துவ விசாரணையில் எழுதுவதுதான் நவீனம் என்ற நிலை மாறி ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் புழக்கத்தை பதிவு செய்யும் சமகால படைப்பாளிகளின் கவிதைகளை ஆங்காங்கு மேற்கோள்காட்டி தலித்திய களத்தில் அவருடைய நிலைப்பாடுகளைப் பகிர்ந்துகொண்டார்.

RainBow (101.4) பண்பலையில் 'கடைசி பென்ச்' நிகழ்ச்சி நடத்தும் கவிஞர் சரவணனுடன் கடைசி இருக்கையில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தேன். எங்களுடைய வரிசையில் நடுத்தர பெண் ஒருவர் மாணவர்கள் எழுதிய தேர்வுத் தாள்களை திருத்துவதுபோல எழுதிய வார்த்தைகளை சுழித்துக் கொண்டிருந்தார். அடுத்ததாக பேராசிரியர் பத்மாவதி விவேகானந்தன் உரையாற்றுவார் என்றதும் சலனமில்லாமல் எழுந்து சென்றார்.

அடிமைத் தனத்திற்கு எதிராகப் போர் தொடுக்கும் கருவியாகப் பயன்படும் பெண் கவிஞர்களின் படைப்புகள் சார்ந்த பார்வையை பேராசிரியர் பத்மாவதி முன்வைத்தார். அவருடைய பேச்சில் பிரெஞ்சு ஆளுமைகளான சாச்சு, பாத், சௌசௌ, பொடலங்கா, பெங்களூர் கத்திரிக்கா என்று வாயில் நுழையாத பல பெயர்களும் அடிபட்டன. போலவே பிராய்டின் சில கருத்துக்களையும் மேற்கோள்காட்டிப் பேசினார். பெண்கள் சார்ந்து முறையாக கவிதை எழுதியவர்களில் கனிமொழி முக்கியமானவர் என்று பதிவு செய்தார். தமிழச்சி, மாலதி மைத்ரி, குட்டி ரேவதி, வெண்ணிலா போன்றவர்களைத் தவிர்த்த பெயர்களை உச்சரிக்கத் தயங்கினார். சிலருடைய பெயரைத் தவிர்த்து கவிதையை மட்டும் வாசித்தார். மையங்களை உடைத்து வரலாறை மீட்டெடுக்க சில வார்த்தைகள் வீரியமாகப் பயன்படுத்தப் படுகிறது. "முலைகள், யோனி" போன்ற வார்த்தைகள் எதிர்வினையை முன்வைக்கத் தான். அதில் தவறிருப்பதாகத் தெரியவில்லை என்றார். குடிபோதையில் சுற்றித் திரிந்த ஒவையாரின் வரலாறு இன்குலாப் எழுதியிருப்பதாக பேச்சோடு பேச்சாக பகிந்துகொண்டார்.

மதிய உணவிற்குப் பிறகு யவனிகா ஸ்ரீராம் பேசினார். ௨௦௦௦ வருட தமிழ் மரபு இருந்தாலும், மருத்துவ குறிப்புகளைக் கூட கவிதையாக வைத்திருப்பது தமிழின் சிறப்பு. வேறு எந்த மொழியிலும் இத்தகைய சிறப்பைக் காண இயலாது. எழுதத் துவங்குவதுதான் கவிதையின் துவக்கம். ஆகவே தயக்கமில்லாமல் எழுதுங்கள். தரமானதா இல்லையா என்பதை பிறகு பார்த்துக்கொள்ளலாம். லட்சியவாதங்கள் தோற்றபோது தோன்றியவைதான் நவீனக் கவிதைகள். மரபிலிருந்து நவீனக் கவிதையின் புள்ளி எங்கு வேறுபடுகிறது என்பதைப் பார்க்க வேண்டும், மாணவர்களின் எழுச்சி இதற்கு ஆரம்பமாக இருந்திருக்கலாம். குழந்தைப் பருவத்தின் விளையாட்டுதான் கவிதைகள் ஆகிறது. சேட்டைகள் தான் கவிதைகளை உருவாக்குகிறது. சிறுவயதில் பார்த்த கட்சிகளின் துருப்பு பின்னாளில் படைப்பிற்கான வித்தாகிறது.

குழந்தைப் பருவத்தில் பார்த்த செம்பருத்தி பூவாகவும், வழிபாட்டுக்கான பொருளாகவும் மட்டுமே நமக்கு அர்த்தப்பட்டிருக்கும். பள்ளிக்கு செல்லும் பொழுது ஹைபிஸ்கஸ் ரோசா சைனான்சிஸ் என்று வேறு மாதிரி தெரியவரும். கல்லூரிக்கு சென்றதும் வேறு மாதிரி அர்த்தப்படும். ஒன்றைக் குறித்தான வேறுபட்ட அர்த்தங்கள் மனதை உருத்தும்பொழுது, பறவைப் பார்வையில் பார்க்கும்பொழுது படைப்பாக வெளிப்படுகிறது. மாங்காய் என்ற சொல்லை உச்சரிக்கும் பொழுது உங்களுடைய வாயில் நீர் சுரக்கலாம். இல்லாத மாம்பழம் எப்படி இந்த அனுபவத்தை உங்களுக்குத் தருகிறது.. இங்கு மாங்காய் புளித்ததோ? வாய் புளித்ததோ? என்ற சொலவடைதான் ஞாபகம் வருகிறது என்ற நீண்ட சுவாரஸ்யமான உரையாற்றினார். கவிஞர்களான சக்தி ஜோதி, உமா ஷக்தி, உமா தேவி, பாண்டியன் செல்வன் போன்றோர் கவிதை வாசிப்புடன் விழா இனிதே முடிந்தது.

ஒரே குறை என்னவென்றால், விழா துவங்க தாமதமானதால் கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைப் பட்டறை துவங்கும் முன்பே திரும்பிச் சென்றுவிட்டார். "கோவப்பட்டு சென்றுவிட்டாரா?" என்றால் எனக்குத் தெரியாது. சென்னையின் வாகன நெரிசல் சொல்வதற்கில்லை. இதில் பிரபலங்களின் பெயரன், கொள்ளுப் பெயரன் போன்றோருடைய கல்யாணம் நெரிசலை அதிகப் படுத்தியிருக்கலாம். பார்வையாளர்களும், இதர விருந்தினர்களும் தாமதமாக வருவதற்கு வேறு காரணம் தேவையில்லையே. இருந்தாலும் என்னுட்பட எல்லோரும் சிந்திக்க ஒரு விஷயம் இருக்கிறது. என் வயதிலும் இரண்டு மடங்கு வயோதிகரான கவிக்கோ எப்படி சீக்கிரம் வந்தார். கவிதை என்பது சிலருக்கு ஆர்வம். சிலருக்கோ இலக்கியம். ஒரு சிலருக்குத் தான் மூச்சு.



2 comments:

  1. Full coverage !! வழக்கம் போல.

    பேராசிரியர் பத்மாவதி உரையைப் பற்றி இன்னும் நிறைய எழுதியிருக்கலாம்.

    அவர் ஆற்றிய இரண்டரை மணி நேர சாக்கு மூட்டையை உமது கைக்குட்டைக்குள் அடக்குவது நியாயமா ?

    ReplyDelete