Tuesday, March 22, 2011

2011 - காடுகளின் ஆண்டு

மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், எதிர்கால சந்ததி பயனுரவும் சில சிறப்பு தினங்கள் கடைபிடிக்கப்படுகின்றன. அவற்றில் நான் முக்கியமாகக் கருதுவது உலக வனதினம் - மார்ச் 21 (World forest day), உலக தண்ணீர் தினம் மார்ச் 22 (World Water Day) மற்றும் உலக வானிலை தினம் - மார்ச் 23 (World Meteorological Day) ஆகியவைதான். வானிலை, நீர், காடு ஆகிய மூன்றும் ஒன்றை ஒன்று சார்ந்திருப்பவை.

பூமியானது தட்டை என்பதால் இயற்கையிலேயே சில இடங்கள் பாலைவனமாகவும், சில இடங்கள் காடுகளாகவும் காணப்படுகிறது. பாலைவனத்தை ஒன்றும் செய்வதற்கில்லை என்பதால் அவற்றின் இயல்பிலேயே விட்டுவிடுகிறோம். காடுகலானது யொவனப் பெண்மாதிரி. வாய்ப்புக் கிடைக்கும்பொழுது அபகரிக்கத் தொடங்குகிறோம். துச்சாதனன் திரௌபதியின் சேலையை உருவியது போல இயற்கை வளங்களை உருவிக்கொண்டிருக்கிறோம். அரசுகளும் கண்கள் பொசுங்கிய திருதுராஸ்டன் போல வேடிக்கப் பார்த்துக் கொண்டிருக்கிறது. இயற்கையுடன் ஆடும் காம விளையாட்டில் தோல்வி காண்பது மனிதர்களாகவும், பாதிப்புகளை பெருமளவு சந்திப்பது ஒன்று முதல் ஐந்தறிவு உயிர்களாகவும் அமைந்துவிடுகிறது. ஜப்பான் சுனாமியில் ஏற்பட்ட மனித இழப்புகளையும், ஃபுகுஷிமா தைச்சி அணு உலை வெடிப்பின் கதிர்வீச்சு சீற்றத்தால் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைப் பற்றியும் மட்டுமே பேசுகிறோம். அங்கிருக்கும் விலங்குகள், தாவரங்கள், பூச்சி, புழுக்கள் பற்றி யோசிக்கிறோமா? அவற்றின் அழிவும் நம்முடைய செயலால் தானே ஏற்பட்டது.

இந்த வருடத்தை (2011) காடுகளின் ஆண்டாக (International Year of Forests, 2011) அறிவித்திருக்கிறார்கள். சூரியனில் கரும்புள்ளிகள் அதிகரித்து வருவதால், அதன் வெப்பக் கதிர்களின் வேகம் சற்று தணியும். அதனால் பனிப் பொழிவுகள், மழை அளவு அதிகரிக்கப் போகிறதாம். போதாக் குறைக்கு நிலவு வேறு இதுவரை இல்லாத கோணத்தில் சூரியனிடம் நெருங்கிச் செல்ல இருக்கிறதாம். மேற்கண்ட இரண்டு காரணங்களால் இந்த வருட மழையின் அளவு அதிகரித்து காடுகள் செழிப்பாக வளரும் என்று ஆரூடம் சொல்லி இருக்கிறார்கள். ஆகவேதான் இந்த வருடம் காடுகள் ஆண்டாக முன்மொழிந்திருக்கிறார்கள். இதில் முரண் என்னவென்றால், ஒரு வருடத்தின் சில மாதங்கள் மட்டுமே மழை பொழிந்து, எந்த நாட்டில் புதிதாக காடுகள் வளந்துவிடப் போகிறது. மென்மேலும் உயரும் மக்கள் தொகையால் காடுகளையும், ஏரிகளையும் ஆக்கிரமித்து குடியிருப்புகளை உண்டாக்குகிறோம். தயவுசெய்து காடுகளை அழிக்காதீர்கள், நம் சந்ததிகளுக்காக இயற்கையைக் கொஞ்சம் மிச்சம் வையுங்கள் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தத்தான் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22-ம் தேதி வன தினமாக கொண்டாடுமாறு அறிவித்திருக்கிறார்கள். கெஞ்சல்களுக்கு மனமிறங்கி மிச்சம் வைக்கும் காடுகள் வேண்டுமென்றால் ஓரளவிற்கு வளரலாம்.

3000க்கும் மேற்பட்ட மரங்களை நட்டு வளர்த்த மரங்களின் தந்தை சத்தியமங்களம் ஏழூர் ”அய்யாசாமி”, சத்குரு வாசுதேவ், பாரம்பரிய விதைகளின் உரிமைக்காகப் போராடும் வந்தனா சிவா, வாழை மரபணு வங்கியை ஏற்படுத்தியுள்ள எஸ்.உமா போன்றவர்கள் முனைப்புடன் செயல்பட்டாலும் இந்த விஷயத்தில் ஒவ்வொரு தனிநபரும் அக்கறை எடுக்க வேண்டும். நம்முடைய வீட்டின் முற்றத்திலோ, தெருவிலோ, சுற்றத்திலோ மரம் வளர்த்து நம் சந்ததிகளின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உதவ வேண்டும். மரங்கள் இல்லையேல் வானமும் பூமியும் எப்படி குளிரும்?

"ஸ்சப்பா... நாளுக்கு நாள் இந்த வெயில் அதிகமாகிக்குனே போகுதே?" என்ற கிசுகிசுப்பை உலகின் பல பகுதிகளிலும், பல மொழிகளிலும் சரளமாகக் கேட்க முடியும். ஆயிரம் வருடங்களுக்கு முன்பு பூமியை நோக்கி சூரியக் கதிர்கள் எப்படி தவழ்ந்து வந்ததோ, அதே வீரியத்தோடுதான் இப்பொழுதும் வெயிலின் கற்றைகள் கசிந்தோடுகிறது. எனில் பூமியின் மனிதர்கள் நாளுக்கு நாள் வெயிலின் சூட்டை அதிகமாக உணர்வது ஏன்? வெக்கையில் சிணுங்குவது ஏன்?

காட்டுமிராண்டித் தனமாக இயற்கையை கபளீகரம் செய்கிறோம் என்பதுதான் முக்கியக் காரணம். வாகனங்களின் கரும்புகை, குளிர்பதனப் பெட்டிகளின் குளோரோ ஃப்ளோரோ கார்பன் வெளியீடு, தொழிற் சாலைகளின் வேதிப்புகை, போதைக்காக உறிஞ்சி வெளிவிடும் புகையிலை, கஞ்சா போன்றவற்றின் மதுப்புகை என்று மனிதர்களின் அன்றாட தேவைகளுக்காக ஒவ்வொரு நிமிடமும் சுற்றுச்சூழலை கெடுத்துக் கொண்டிருக்கிறோம். நாளுக்கு நாள் அதிகரிக்கும் மக்கள் தொகை, பிராண வாயுவான ஆக்சிஜனை உள்ளிழுத்து வெளிவிடும் கார்பன்டை ஆக்சைடும் ஒரு வகையில் பூமியின் உஷ்ணத்திற்குக் காரணம். இதனை சமநிலை செய்ய மரங்கள் இருந்தால் தானே உலக உயிர்கள் நீண்ட நாள் வாழ முடியும்.

நாம் காடுகளை அழிக்கும்போது வாயு மண்டலத்தில் கார்பன்-டை-ஆக்ஸைடின் அளவு அதிகரிக்கிறது. நவீன விவசாய நடவடிக்கைகள், நிலத்தைப் பராமரிக்கும் முறையில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் இதர முறையற்ற நடவடிக்கைகள் அனைத்தும் சேர்ந்து மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்ஸைடு வாயுக்களின் அளவுகளை வளிமண்டலத்தில் அதிகரிக்கச் செய்கின்றன. நவீன மின் சாதனங்களின் பயன்பாடு "க்ளோரோ ஃபுளூரோ கார்பன்"கள் போன்ற வேதிக் கூறுகளை வேளியேற்றுகின்றன. CFCக்கள் ஓசோனில் ஓட்டைகள் ஏற்படக் காரணமாகின்றன. அதிகரிக்கப்பட்டு வரும் கிரீன் ஹவுஸ் வாயுக்கள் பூமியின் வெப்ப நிலையை அதிகரிக்கச் செய்கிறது. இதுவே சங்கிலித் தொடர்புபோல் தண்ணீர்ப் பிரச்சனைக்கும், பூமி வெப்பமடைவதற்கும் காரணமாக அமைகிறது.

உலகமே தண்ணீரால் சூழப்பட்டிருந்தாலும் அவற்றில் ஒரு சதவீத தண்ணீர் மட்டுமே உயிர் வளர்க்கப் பயன்படுகிறது. குட்டை, குளம், கிணறு, எரி, ஊற்று, அருவி, ஓடை, நதி, ஆறு, மழை, நிலத்தடி நீர் என பல வடிவங்களில் நமக்குக் கிடைக்கிறது. என்றாலும் துருவப் பகுதிகளில் பனிக் கட்டிகளாக உறைந்திருப்பதே அதிகம். உலகமே நீரால் சூழப்பட்டிருக்கிறது எனில் தண்ணீர்ப் பற்றாக்குறை எப்படி வருகிறது என்று நாம் யோசிக்க வேண்டும். பிரச்னையை ஆரம்பத்திலேயே வேரறுக்காமல் சமாளிக்கப் பார்க்கிறோம். அந்த சமாளிப்புகளில் ஒன்றுதான் தேசிய நதிநீர் இணைப்புத் திட்டம். இந்தத் திட்டத்திற்கு ஆகும் செலவு 5.5 லட்சத்திற்கும் மேலாக இருக்கும் என்று 2004 ஆம் ஆண்டு தோராயமாக கணக்கு சொன்னார்கள். இன்றைய தேதியில் அதற்கும் அதிகமாக செலவாகலாம். இவ்வளவு பெரிய தொகையை ஒரு திட்டத்திற்கு பயன்படுத்துவதின் மூலம் தேசத்திற்கு ஏற்படும் எதிர்விளைவுகளையும், பாதிப்புகளையும் நாம் யோசிப்பதே இல்லை. சினிமா நடிகர் உண்ணாவிரதம் இருந்து, ஒரு கோடி ரூபாய் பணம் கொடுத்து துவக்கி வைத்தால், அதைவிடச் சிறந்த திட்டம் இல்லை என்ற மனநிலையில் தான் இருக்கிறோம். பத்திரிகைகளும் அவற்றை பெரிதுபடுத்தி நிபுணர்களின் கருத்தை ஆழப்புதைக்கும் செயலையே செய்கின்றன.

நீரின்றி அமையாது உலகு என்பதை கொஞ்சம் உற்று நோக்கினால் தெளிவாக உணர்ந்துகொள்ளலாம். ஓர் ஏக்கர் நிலம் பயிர்செய்ய 2000 லிட்டர் தண்ணீர் பயன்படுவதாக விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். அதே அளவு தண்ணீர் ஒரு காரினைத் (Car) தயாரிக்கவும் பயன்படுகிறது. மரப்பொருட்களைத் தவிர்த்து மற்ற எல்லா உற்பத்திக்கும் தண்ணீரின் பயன்பாடு அத்யாவசியமான ஒன்று. பன்னாட்டுத் தொழிற்ச் சாலைகளின் தயாரிப்புக் கிடங்குகள் இந்தியாவில் இருப்பதின் முக்கிய நோக்கமே இதுதான். இந்தியாவின் இயற்கை வளங்களைக் கபளீகரம் செய்வதுதான் அவர்களுடைய முக்கிய நோக்கமாக ஆரம்பம் முதல் இருந்துள்ளது. ஹீரோஹோண்டா, ஹுண்டாய், ஃபோர்ட், ரெனால்ட் நிஸ்ஸான் என்று எத்தனை தொழிற்ச்சாலைகள். ஒவ்வொரு நிறுவனமும் லட்சக் கணக்கான வாகனங்களை ஒவ்வொரு வருடமும் தயார் செய்து சந்தைக்கு அனுப்புகிறது. அவற்றில் இந்தியர்களின் வியர்வை மட்டுமில்லை, விலை மதிக்க முடியாத தண்ணீரும் உறைந்திருக்கிறது. ஒரு வருடத்தில் இவ்வளவு வாகனங்கள் தான் உற்பத்தி செய்யவேண்டும் என்ற விதியினை நிர்ணயிக்கலாம். அமேரிக்கா எவ்வளவு நிர்பந்தித்தாலும், பெட்ரோல் கொழிக்கும் நாடுகளின் அரசுகள் அதுபோன்ற விதிமுறைகளைத் தானே கடைபிடிக்கின்றன. இதுபோன்ற கடிவாளங்களைப் போடாமல் காலத்தையும், பணத்தையும் வீணாக்கும் செயலையே நாம் பின்பற்றிக் கொண்டிருக்கிறோம்.

உதாரணமாக, ஓர் ஊராட்சியில் தோராயமாக 60 கிராமங்கள் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அவற்றில் 30 கிராமங்களில் கோவிலும், அதற்குச் சொந்தமான குளமும் இருக்கும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த குளங்களைத் தூர் வாருவதற்காக, ஒவ்வொரு குளத்திற்கும் ரூபாய் 1 லட்சம் வீதம் 30 லட்ச ரூபாய் ஓர் ஊராட்சிக்கு ஒதுக்கப்படுகிறது. இந்தப் பணத்தை சரியாகப் பயன்படுத்தினால் குளத்தை நல்ல முறையில் பராமரித்து நிலத்தடி நீர்மட்டத்தை உயரச் செய்யலாம். காய்ந்த ஆகாயத் தாமரையை பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தவும், குளத்தின் கரையை ஒட்டி வளர்ந்த புல் பூண்டுச் செடிகளை வெட்டவும் மட்டுமே இந்த நிதி பயன்படுத்தப்படுகிறது. ஜெயலலிதா கொண்டுவந்த திட்டங்களுள் மழைநீர் சேகரிப்புத் திட்டம் ஆகச் சிறந்த ஒன்று. இவையிரண்டையும் சமரசமின்றி ஒழுங்காகச் செய்தாலே பாதி பிரச்சனையைத் தீர்கலாம். இதன் மூலம் இயந்திரங்களால் அளவுக்கதிகமாக தண்ணீர் உறிஞ்சப்பட்டு ஏற்படும் வெற்றிடமும், நல்ல தண்ணீரில் கடல்நீர் கலப்பதையும் வெகுவாகக் குறைக்க முடியும். நம்மைச் சுற்றியுள்ள நீர் நிலைகளில் கூட மனிதக் கழிவுகளையும், தொழிற்ச்சாலைகளின் நச்சுக் கழிவுகளையும் இட்டு நிரப்புகிறோம். உதாரணத்திற்கு அடையாறு, கூவம் போன்றவற்றை இங்குக் குறிப்பிடலாம். தோல் பதனிடுதல் மூலம் அபாயகரமான நச்சுக் கழிவு பாலாறில் சேர்வதை நாம் அறிந்ததே. ஈரோடு, திருப்பூர் போன்ற இடங்களில் சாயக் கழிவுகளால் ஏற்படும் சிக்கல்களும் நமக்குத் தெரிந்ததே.

நல்ல இடங்களை மாசுபடுத்திவிட்டு, இனி ஒன்றும் செய்ய இயலாது என்ற நிலை ஏற்படும்போது, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கு சென்று அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று கண்டுணர்ந்து, அதற்காக ஒரு 200 கோடி ரூபாய் திட்டம் செயல்படுத்தும் நடைமுறையில் தானே இருக்கிறோம். கோவில் குளத்தை சுரண்டுபவர்கள் கூவம் திட்டத்தையா விட்டுவைக்கப் போகிறார்கள். அப்படி இருக்கும் பொழுது நதிநீர்த் திட்டம் அரசியல் செய்பவர்களுக்கு எவ்வளவு பெரிய வரப்பிரசாதமாக அமையும்.

"இன்று வானிலை மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. கடலோரப் பகுதிகளின் சில இடங்களில் மழை பொழிய வாய்ப்புள்ளது" என்று வானிலை ஆய்வு மையம் தெரியப்படுத்தினால் நமுட்டுச் சிரிப்புச் சிரிக்கிறோம். அந்த கேலிப் புன்னகையின் அஸ்திவாரத்தை கட்டமைத்ததில் ஒவ்வொரு தனி மனிதருக்கும் பங்குண்டு. இயற்கை பல சாதங்கங்களை நமக்கு ஏற்படுத்தித் தருகிறது. அவற்றை சரியாகப் பயன்படுத்துவதே புத்திசாலித்தனம். காடுகளை வளர்த்து, தண்ணீரை சேமித்து உலகை ரட்சிப்பது நம் கையில் தான் உள்ளது. இதற்காக எந்தக் கடவுளும் பூமியில் இறங்கி வரப் போவதில்லை.

அடுத்ததாக, 2011ம் ஆண்டை சர்வதேச ரசாயன ஆண்டாகவும் (
International Year of Chemistry 2011) ஐ.நா. அறிவித்திருக்கிறது. வனப்பகுதிகளை அதிகரிக்கும் அதேநேரத்தில், பூமியை பாதுகாக்க ரசாயனங்களின் பயன்பாட்டை குறைப்பதே இதன் உள்நோக்கம். மெழுகுப் பூச்சு, உலோகப்பூச்சுக் கொண்ட பாலித்தீன் பைகளையும், ரசாயன உரங்களையும், நச்சுக் கழிவுகளையும் குறைப்பதின் மூலம் மட்டுமே இந்த இலக்கை அடைய முடியும் என்று நினைக்கிறேன்.

No comments:

Post a Comment