Friday, March 11, 2011

தியேட்டர் லேப் - 6வது ஆண்டு விழா

"தியேட்டர் லேப் வழங்கும் 'சப்தங்கள்' நாடகத்தில் பஷீராக நடிக்கப் போகிறேன். பம்மல் சம்மந்த முதலியாரின் 'சங்கீதப் பைத்தியம்' அதைத் தொடர்ந்து அரங்கேற இருக்கிறது. என்னுடன் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்களேன்" என்று நாடக நடிகர் பாரதிமணி குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். பிடித்த எழுத்தாளரின் பாத்திரத்தில் மனதிற்குகந்த நண்பர் நடிப்பதைத் தவற விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். எல்லா நாடகங்களும் மாலையில் தான் அரங்கேறும். இதுவோ காலை 10 மணிக்கு அரங்கேற இருக்கிறது என்பதையும் குறிப்பிட்டிருந்தார். அதன்படி சரியான நேரத்திற்குச் சென்றிருந்தேன்.

நாடகம்: சப்தங்கள் (வைக்கம் முகமது பஷீர்)
தமிழில்: குளச்சல் மு யூசுப்

இருளின் அடர்த்தியில் நாடக மேடை தனித்திருந்தது. பட்டு போன்ற ரோமங்களைக் கொண்ட பூனையின் முதுகினைத் தடவுவதுபோல கால்களால் கீழ் தளத்தைத் தேய்த்தவாறு அரங்கின் கடைசி இருக்கைக்கு முன்னேறினேன். இருட்டுக்குப் பழகிய கண்களுக்கு மேடையுடைமைகள் (புத்தகங்கள், மதுக்கிண்ணம், Flask, சட்டி, ஜோல்னாபை) தென்பட்டது. யாருமற்ற மேடையின் அழகு சற்றே கூடியிருந்தது. நாடகம் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் பவா செலத்துரையின் கதையினை தழுவி எடுக்கப்பட்ட "என் வீட்டின் முற்றத்தில் ஒரு மாமரம்" என்ற குறும்படம் திரையிடப்பட்டது. இருபது நிமிடம் கழித்து திரையிடல் நிறுத்தப்பட்டு இருள் சூழ்ந்தது. ஊன்றுகோலைப் பற்றியவாறு இருட்டின் நிழல் போல பாரதிமணி மேடையில் தோன்றினார்.

பஷீரின் படைப்புகளை நினைக்கும் பொழுது குளச்சல் மு யூசுப்பை நினைக்காமல் இருக்க முடியவில்லை. அவருக்கு முன் சிலர் மொழி பெயர்த்திருந்தாலும், மூலத்தின் சாயலைக் குலைக்காமல் ஞாயம் செய்தவர் யூசுப் தான். பஷீரின் தனித்தன்மையே அவருடைய வட்டார மொழியும், எளிமையும் தான். பெண்களின் வனப்பையும் அழகையும் படைப்பாளிகள் இலக்கியமாக்கினால், வாயுத் தொல்லையால் காற்றுப் பிரிவதை (குசு) சிறுகதையாக்கியவர் பஷீர். சப்தங்கள் அவருடைய படைப்புகளில் சற்றே வித்யாசமானது. இராணுவ வீரனின் ஊசலாடும் மனநிலையும், தாழ்வு மனப்பான்மையும், குற்ற உணர்ச்சியுமே கதையின் மையக்கரு. பஷீருடனான உரையாடலில் காட்டருவிபோல் தன்னுடைய போக்கில் செல்லும் அவனுடைய பகிர்தலே கதையின் நீட்சி. கதை சொல்லலில் சிக்கலான நடையையும், முரணான வடிவத்தையும் பஷீர் பயன்படுத்தியிருப்பார்.

துர்நாற்றம் வீசும் உடலுடன் அழுக்கான உடையணிந்து இராணுவ வீரன் அறிமுகமாகிறான். அவனால் தண்ணீரில் குளிக்க முடியவில்லை. ஏனெனில் யுத்த ஞாபகங்களால் தண்ணீரை பூமியின் இரத்தம் என்று நம்புகிறான். நாற்சந்தியில் அனாதைக் குழந்தையாக பூசாரியால் கண்டெடுக்கப்படும் அவன், வளர்ந்து இரண்டாம் உலகப் போரில் பங்கேற்கிறான். யுத்தம் முடிந்ததும் போகும் இடம் தெரியாமல் உளவியல் சிதைவுடன் அலைகிறான். இருநாட்டு அரசியல் யுத்தத்தில் அப்பாவி வீரர்களைக் கொன்று குவித்தது அவன் மனதை அரிக்கிறது. போர் விமானத்தின் இரைச்சலும், குண்டு மழையும், யுத்தத்தின் வெப்பமும், மரண ஓலங்களும் அவனுக்கு தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறது. மரணத்துடன் போராடும் நண்பனை கருணைக் கொலை செய்தது மனம் கூசச் செய்கிறது. அவனுடைய முதல் உடலுறவு ஆண் வேசியுடன் அமைந்துவிடுகிறது. பிறந்ததில் இருந்தே பெண்களின் வாசத்தை அறியாதவன். வனப்புடைய பெண்களை பார்க்க நேர்ந்தால் மனம் காமத்தின் இச்சையை சுரக்கிறது. இடையிடையே உரையாடல் தத்துவ ரீதியில் வளர்கிறது.

ஒரு வேசியை அவளுடைய பச்சிளங் குழந்தையுடன் சந்திக்கிறான். அவளை சல்லாபிக்க ஒருவன் அழைக்கிறான். மந்த மயக்கத்தில் மயங்கிக் கிடக்கும் இவனருகில் குழந்தையைக் கிடத்திவிட்டு பாழடைந்த கோவிலுக்கும் அவர்கள் செல்கிறார்கள். ஆயிரம் எறும்புகள் கடித்ததால் குழந்தை வீரிட்டு அழுகிறது. இராணுவ வீரன் குழந்தையைக் கையில் எடுத்து காப்பாற்றுகிறான். இச்சை தீர்ந்து இருப்பிடம் திரும்பும் வேசி குழந்தையைத் திருடுவதாக நினைத்து அவனுடைய மார்பில் எட்டி உதைக்கிறாள். பின்னால் உண்மையை உணர்ந்து பசியால் வாடும் அவனுக்கு கால் ரூபாயை வீசிவிட்டுச் செல்கிறாள். மனச் சோர்விலிருந்து தப்பிக்க தண்டவாளத்தில் தலை கொடுத்து தற்கொலை செய்ய நினைக்கிறான். அதுவும் தோல்வியில் முடிந்து தண்டவாளத்தை இரைச்சலுடன் கடந்து செல்கிறது ரயில் என்பது போல கதை முற்றுப் பெரும்.

நோயுற்ற மனநிலையின் முனகலும், காமத்தின் ஏக்கங்களும், தனிமையின் விகாரங்களும் தான் சப்தங்களாக நாவல் முழுதும் வெளிப்படுகிறது. முழுக் கதையின் பரிமாணத்தையும் வெளிப்படுத்தி நிகழ்த்துக் கலையை உச்ச அனுபவமாக மாற்றுவது சவால் நிறைந்த பணி. அந்த வகையில் பாரதி மணியின் நீண்ட கால அனுபவம் கவர்ச்சியாக இருந்தது. எள்ளலான கேள்விகளைக் கேட்கும் பொழுது அரங்கம் அதிர சிரிக்க வைத்தார். புரியும் படியான ஒரு சில மலையாள வசனங்களும், தமிழ் உச்சரிப்பின் லாவகமும், உடல் மொழியும் நாடகத்துடன் ஒன்ற வைத்தது.

இராணுவ வீரன் கதாப் பாத்திரத்தில் ஏறக்குறைய 10 நபர்கள் நடித்தனர். இந்த முயற்சி நாடகத்தின் இயல்பை சில இடங்களில் நீர்த்துப் போகச் செய்தது. "ஒரே பாத்திரத்தில் இத்தனை நபர்களைப் பயன்படுத்த வேண்டிய தேவை என்ன?" என்ற கேள்வி எழுந்தது.

"ஒவ்வொரு கலைஞருக்கும் தனித்தன்மை இருக்கிறது. அதற்கேற்ப அவர்களைப் பயன்படுத்துவதில் தவறிருப்பதாகத் தெரியவில்லை. எல்லோருக்கும் வாய்ப்பளிக்க வேண்டிய பொறுப்பும் எனக்கிருக்கிறது. மற்றபடி வேறெந்தக் காரணமும் இல்லை" என்று C.H.ஜெயராவ் விவாதத்தின் போது பகிர்ந்துகொண்டார். இதற்கு முன் இது போன்ற பரீட்சார்த்த முயற்சிகள் நடந்துள்ளதா என்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது.

ஆண் வேசியாக மேடையேறும் திருநங்கை ரம்யா வராத காரணத்தால் வேசியின் கதாப் பாத்திரத்தையும் சேர்த்து சபரி ஏற்றார். மேடையின் இண்டு இடுக்கு விடாமல் காமத்தைக் கொப்பளித்து சுழன்றாடினார். விளிம்பு நிலை சபலதாரிகளாக நடித்த இருவரும் மெச்சும்படி செய்திருந்தனர்.

சப்தங்கள் படித்து முடித்ததும் குளச்சல் மு யுசுப்பிற்கு தொலைபேசி இருந்தேன். உரையாடலின் சில பகுதிகள் தெளிவான உச்சரிப்பிலும், சில பகுதிகள் வட்டார வழக்கிலும் கலந்து இருக்கும். முதல் அத்தியாயத்தில் கூட இந்த வேறுபாட்டினைக் காண முடியும். நாவலின் இறுதிப் பகுதிகளான வேசியுடனான உரையாடலில் அதனைத் தெளிவாக கவனிக்க முடியும். அதனைக் குறிப்பிட்டு அவரிடம் கேள்வி எழுப்பினேன்.

"அதைத் தெரிந்தேதான் பஷீர் பயன்படுத்தி இருக்கிறார். மொழிபெயர்ப்பின் போது அதைப்பற்றி பலவாறு யோசித்தேன். சேலம், நாகர்கோவில், கோவை, சென்னை என்று பல வட்டார மொழிகளை தேர்வுசெய்து பார்த்தோம். இறுதியில் சென்னை மொழி இசைவுடன் இருந்ததால் பயன்படுத்திக் கொண்டோம். குறிப்பாக கடைசி மூன்று அத்யாயங்களில் சென்னை மொழியின் வீச்சு அதிகமாக இருக்கும்." என்று பகிர்ந்து கொண்டார். நாடகத்தில் கூட கடைசி பகுதி வெகு சிறப்பாக வந்திருந்தது. குழந்தையின் அழுகையையும், துப்பாக்கியின் வெடிச் சத்தத்தையும், ரயிலோசையையும் பின்னணியில் சேர்த்திருந்தால் இன்னும் நெருக்கமாக இருந்திருக்கும். மொத்தத்தில் சில குறைகளும், பல நிறைகளும் கொண்ட சப்தங்கள் நாடகம் பார்க்க வேண்டி ஒன்று. முழு நாடகத்தையும் வீடியோவில் பதிவு செய்தார்கள். சில நாட்களில் விற்பனைக்கும் கிடைக்கலாம். கதைக்கு வடிவம் கொடுத்து இயக்கியவர் C.H.ஜெயராவ். மணி பாரதி உதவி இயக்குனராக செயல்பட்டுள்ளார்.

நடிகர்கள்: பாரதிமணி / சபரி / அருண் / சுவாமி / ஜெய் ஆனந்த் /
மணி குட்டி / லிங்கேஷ் / ஜகதீஷ் / அவிதேஜ் / சுரேந்திரன் /
விஜய் அதித்யா / கார்த்திக் / ரம்யா / பிரபாத் / மரகதம் / மணிபாரதி / ரவி



சங்கீதப் பைத்தியம்

பம்மல் சமந்த முதலியார் நவீன தமிழ் நாடகங்களின் தந்தையாகக் கருதப்படுபவர். 'சுகுணா விலாஸ் சபா' என்ற நாடகக் குழுவை ஆரம்பித்து 96 நாடகங்களை எழுதியவர். நகைச்சுவை, நையாண்டி, சமூக அரசியல் சாடல் போன்றவற்றை கருவாகக் கொண்ட இவரது நாடகங்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. அவற்றில் சில திரைப்படங்களாகவும் எடுக்கப்பட்டுள்ளன.

சங்கீதப் பைத்தியம் 75 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட முழு நீள நையாண்டி நாடகம். ஓர் அரசன், தன் தாயின் ஆத்மா சாந்தியடைய நாட்டு மக்கள் அனைவரும் சங்கீத மொழியில் பேச வேண்டும் என்று ஆணையிடுகிறான். மீறினால் அபராதம் செலுத்த வேண்டும். இந்த ஆணை நாட்டு மக்களிடையே பெருத்த குழப்பத்தை ஏற்படுத்துகிறது. வியாபாரத்திற்காக அந்நாட்டிற்கு வந்து சேர்பவர்கள் திணறுகிறார்கள். பூண்டு விற்பவர்கள் முதல், பூசாரி வரை செய்வதறியாது பாடிக்கொண்டே தவிக்கிறார்கள். அந்த நேரத்தில் ஒரு சாமியார் பாடியவாறு அரசனின் சமஸ்தானத்திற்கு வந்து சேர்கிறான்.

இரண்டு அண்ணன் தம்பிகள் அவரை தரிசிக்கின்றனர். அவரிடம் இசையைக் கற்றுக்கொள்ள இருவரும் பிரியப்படுகின்றனர். தம்பியானவன் சாமியாரை தன்னுடைய வீட்டிற்கு வருமாறு அழைக்கிறான். அவனுடைய உள் நோக்கத்தைப் புரிந்து கொண்ட அண்ணனோ அவரைத் தன்னுடன் வருமாறு அழைக்கிறான். இருவருக்கும் வாக்குவாதம் முற்றுகிறது. அரச காவலன் அவர்களுடைய சண்டைக்கிடையில் வருகிறான். பாடிக்கொண்டே இருவரும் பிரச்னையை விளக்குகிறார்கள். தம்பியானவன் கையூட்டின் மூலம் தீர்ப்பை தனக்கு சாதகமாக்குகிறான். சாமியாரும் அவனுடன் செல்கிறான்.

தம்பியானவன், சந்தேக புத்தியில் சாமியாரை அடிக்கும் பொழுது மயங்கி விழுகிறார். சாமியார் இறந்துவிட்டதாக நினைத்து, பதறிப்போய் அண்ணனின் வீட்டில் கொண்டு சேர்க்கிறான். அண்ணனோ பயந்து தம்பி வீட்டில் கொண்டு போட்டுவிடுகிறான். இருவரும் சந்நியாசியைப் பந்தாடுகிறார்கள். பிரச்சனை அரசனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. மன்னனின் தலைமையில் விசாரணைக் குழு கூடுகிறது. தம்பியையும் அண்ணனையும் விசாரணைக் கூண்டில் நிறுத்துகிறார்கள். யாருக்கு தண்டனைக் கொடுக்கலாம் என்று வரும்பொழுது சந்நியாசி கண்விழிக்கிறார். பிரச்சனைக்குத் தீர்வு சொல்கிறார். அப்படியே இசையில் தான் பேச வேண்டும் என்ற ஆணையையும் சமயோஜிதமாக தடை செய்யச் சொல்கிறார். நாடகமும் இனிதே முடிகிறது. ஒவ்வொரு கதாப்பாத்திரத்தில் நடித்தவர்களும் முக்கியத்துவம் உணர்ந்து நடித்தார்கள். குறிப்பாக சாமியார் வேடமேற்ற கார்த்திக் அருமையாக நடித்தார். அவருடைய பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்திய போது கரகோஷம் அரங்கையே அதிரச் செய்தது. நாடகத்தை இயக்கியவர் C.H.ஜெயராவ். சுரேந்திரன் உதவி இயக்குனராக செயல்பட்டுள்ளார்.

நிறைவுப் பகுதியாக சப்தங்கள் நாடகம் குறித்து மெகா சீரியல் இயக்குனர் திருச்செல்வன், இயக்குனர் மீரா கதிரவன், கவிஞர் குட்டி ரேவதி, சிறப்புக் குழந்தைகள் பயிற்சியாளர் ஜலாலுதீன் ஆகியோர் உரையாற்றினர். சங்கீதப் பைத்தியம் குறித்து நாடக ஆசிரியர் மற்றும் பேராசிரியர் அய்யாசாமி உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து நீண்டகால நாடக அனுபவங்களை பாரதி மணி பகிர்ந்து கொண்டார். ISSHINRYU கராடே மாணவர்களின் சாகச நிகழ்ச்சியுடன் THeatre Lab நடத்திய 6வது ஆண்டு விழா கொண்டாட்டம் இனிதே நிறைவு பெற்றது.

தொடர்புடைய பதிவு:

பஷீரின் கதைகளில் நானும் ஒரு காதலியாவது… - குட்டி ரேவதி



10 comments:

  1. அல்லயன்ஸ் பிரான்சிஸ், நுங்கம்பாக்கம்

    ReplyDelete
  2. கி.பி இதுபோல் ஏதும் நடந்தால் எங்களுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்ப மாட்டீர்களா.. உங்க பேச்சு க்கா

    ReplyDelete
  3. அடுத்த முறை சேர்ந்தே போவோம் அதிஷா...

    :-)))

    ReplyDelete
  4. எங்கள் ஆண்டுவிழாவிற்கு வந்திருந்தமைக்கும், விமர்சனத்திற்கும் மிக்க நன்றி... :-)

    ReplyDelete
  5. உங்கள் குழுவின் அபார உழைப்பு மொச்சுதற்குரியது மணி. உங்களின் நடிப்பும் நன்றாக இருந்தது. அவகாசம் எடுத்து மீண்டுமொருமுறை பார்க்கவேண்டும் என்றிருக்கிறேன் மணி... நேரில் சிந்திப்போம்.

    :-)))

    ReplyDelete
  6. It was one of the best theater play that I have seen in the recent past...wonderful performance by all. Particularly Karthik who essaed the role of (Sammyar) was tooo good to watch...excellent expressions...keep it up guys...

    ReplyDelete
  7. Hi Mr Pirabu Can I get your Phone Number Please. Thanks!!

    ReplyDelete
  8. Hi Kavin, I will send my mob number. So drop an email to this mail ID: enathu.payanam@gmail.com.

    :-)))

    ReplyDelete