Tuesday, February 18, 2014

பிரபலங்களின் முன் விற்பனைப் பிரதிநிதி

தோப்பில் முகமது மீரானின் சாய்வு நாற்காலியைப் படிக்கும் பொழுது, அடூர் கோபாலகிருஷ்ணனின் திரையாக்கமான “எலிப் பத்தாயம்” நினைவுக்கு வரலாம். “சாய்வு நாற்காலி” வாழ்ந்து கெட்ட கடலோர கிராம நிலச் சுவாந்தார் ஒருவனின் கதை. தனிப்பட்ட ஒருவனின் பூர்ஸ்வா வாழ்க்கையால் ஒரு குடும்பத்திற்கு நேரும் அவலத்தை சித்தரிக்கும் படைப்பு. பாலியல் இச்சையையும் வயிற்றுப் பசியையும் பிரதானமாகக் கருதும் ஒருவனால் குடும்ப கௌரவம் நடுத்தெருவுக்கு வருவதையும், இதன் காரணமாக உறவுகள் நிலைகுலைந்து சிதருவதையும் முன்வைக்கும் பிரதி.

குடும்ப கௌரவத்தைத் தூக்கிச் சுமக்கும் மனது ஒருபுறம், காமத்தில் திளைத்த இளமைக் காலங்களும், அந்த காம நினைவுகளை மறக்க முடியாமல் உடல் சூதேறித் திரியும் முதுமையேரிய வயோதிக உடலின் அசைபோடும் மனது மறுபுறம் என தரவாட்டுக்காரனின் வாழ்வியல் சிக்கலை முன்வைக்கும் படைப்பு. “சாய்வு நாற்காலி” – 1997 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற படைப்பு. இது தமிழக கடற்கரையோர கிராமத்தில் நடக்கும் கதை எனில், “மீஸான் கற்கள்” – கேரள கடற்கரையோர நிலச்சுவாந்தார் ஒருவனின் குடும்ப, சமூக வாழ்வைப் பிரதிபலிக்கும் படைப்பு.

ஒருமுறை மொழிபெயர்பாளர் குளச்சல் மு யூசுப் - எழுத்தாளர் ஜெயமோகனிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது “ஸ்மாரக சிலகள் – நல்ல நாவலாச்சே. முடிஞ்சா தமிழுக்குக் கொண்டுவர முடியுமான்னு பாருங்க.” என்று சொன்னாராம் ஜெமோ.

புனத்தில் குஞ்சப்துல்லாவின் மலையாள மூலம் “ஸ்மாரக சிலகள்” மத்திய சாகித்ய அகாடமி (1980), மாநில சாகித்ய அகாடமி (1977) ஆகிய இரண்டு விருதுகளையும் பெற்றுள்ளது. இளம் வயதிலேயே நாவலாசிரியர் இவ்விருதுகளைப் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. காலச்சுவடு பதிப்பகம் இப்புதினத்தை 2004-ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார்கள். குளச்சல் மு யூசுப் இதனை மொழிபெயர்த்திருக்கிறார். “நினைவுச் சிலைகள்” என்ற பெயரில் சிவன் என்பவராலும் மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது. எனினும் குளச்சல் மு யூசுப்பின் “மீசான் கற்கள்” பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

இரண்டு படைப்புகளும் இஸ்லாம் மார்கத்து வாழ்வியலை நம்முன் வைப்பதால், கடற்கரையோர முஸ்லீம் குடும்பங்களின் வட்டார மொழி கையாளப்பட்டிருக்கும். ஆகவே வாசிப்பதற்கு சற்றே சிரமமாக இருக்கும். எனினும் அட்டகாசமான வாசிப்பனுபவத்தை வாசகர்களுக்குக் கடத்தும் நாவல்கள். நம்மில் பலர் சாய்வு நாற்காலியை வாசித்திருக்கலாம். ஆனால் மீஸான் கற்கள் அப்படியல்ல. ஆகவே காலச்சுவடு அரங்கில் நின்றிருந்த போது நல்ல வாசகர்களாக எனக்குப்பட்ட சில செலப்ரிடிகளுக்கு இப்புத்தகத்தைப் பரிந்துரை செய்தேன். அந்தச் சம்பவங்களில் சில...


இயக்குனர் & நடிகர் - கரு பழனியப்பன்: கிபி: “பழனி இந்த புத்தகத்த படிச்சி இருக்கிங்களா?”

“இல்லியே... நல்லா இருக்குமா?” என்றார்.

கிபி: “லைப்ரரியில கெடச்சா டிரை பண்ணி பாருங்க... நல்லா இருக்கும்.”

“அப்படியா...” என்று புத்தகத்தைப் பற்றி கேட்டுத் தெரிந்துகொண்டார். மேலும் “உங்கள எங்கயோ பார்த்தா போல இருக்குதே...?” என்றார் கரு. பழனி.

கிபி: “பாஸ்கர் சக்தி, கவிதா பாரதின்னு ரெண்டு பேரு டீக்கடை அரசியல் சங்கம் ஒண்ணு நடத்துறாங்க இல்ல. அவிங்க போடுற கூட்டத்துக்கு எப்பவாச்சும் வாரதுடுண்டு. நமக்கும் ஒரு அரசியல் பின்புலம் வேணும்ல...”

“ஓ... சரி சரி... புத்தகத்த எடுத்துக்குறேன்...” என்று சிரித்துவிட்டுக் கடந்து சென்றார்.

கவிஞர் & பாடலாசிரியர் நா. முத்துக்குமார்: கிபி: “முத்துகுமார்... ஒரு நிமிஷம்...! இந்த புத்தகத்தைப் படிச்சி இருக்கிங்களா?”

புத்தகத்தை உற்றுப் பார்த்தவர், “குளச்சல் யூசப் மொழிபெயர்ப்பா...! ஏற்கனவே அவரோட மொழிபெயர்ப்ப படிச்சிருக்கேன். ஏனோ தெரியல... என்னால அவரோட எரியாக்குள்ள போக முடியல...” என்றார்.

கிபி: “சரி சரி... அப்போ வேண்டாம்... வேற எதாச்சும் உங்களுக்குப் புடிச்ச புத்தகத்த நீங்களே பாருங்க...” என்று சொல்லிவிட்டு வேறொருவருடன் பேசிக் கொண்டிருந்தேன். கடந்து சென்ற முத்துக்குமார் அடுத்த சில நிமிடங்களில் என்னுடைய தோள்களைத் தொட்டுக்கொண்டு நின்றிருந்தார்.

கிபி: “சொல்லுங்க முத்து... Do you need any help?”

“புத்தகத்துக்கு தானே செலவு பண்றோம். நான் படிக்கலன்னாலும் கூட இருக்க யாராச்சும் படிப்பாங்க இல்ல. நீங்க சொல்றத பார்த்தா முக்கியமான புத்தகமா தெரியுது... நான் ஒண்ணு எடுத்துக்கறேன்.” என்றார்.

எழுத்தாளர் & சினிமா ஆர்வலர் சுகா: “மூங்கில் மூச்சு, வேணுவனம்” சுகாவுடன் ஒருவர் வந்திருந்தார். அதுநாள் வரை சுகாவுடன் கூட ஒரு வார்த்தை பேசியதில்லை. உடன் இருந்தவரை நேரில் பார்த்ததில்லை என்றாலும் தொலைபேசியில் நிறைய பேசி பழகியதுண்டு. பிறகுதான் தெரிந்தது அவர் சொல்வனம் பாஸ்கர் என்பது.

கிபி: “இந்த புத்தகத்த படிச்சி இருக்கிங்களா சுகா...?”

“நான் புக்ஸ் வாங்க வரல. ஏற்கனவே பர்சேசிங் முடிச்சாச்சு. சும்மா பாக்கறதுக்காக வந்தேன். இருந்தாலும் ஏதோ சொல்ல வறீங்க... சொல்லுங்க...” என்றார்.

கிபி: “நல்ல ட்ரான்ஸ்லேஷன். முடிஞ்சா வாசிச்சி பாருங்க...” என்றேன்.

இரண்டு நாட்கள் கழித்து சுகா மீண்டும் வந்திருந்தார். மறக்காமல் பரிந்துரைத்த புத்தகத்தை எடுத்துவந்து, என்னிடம் காண்பித்துவிட்டு “நல்லா இருந்தா உங்ககிட்ட பேசறேன்...” என்றார்.

கிபி: “நல்லா இல்லைன்னா என்ன கூப்பிட்டு திட்டுங்க... பாஸ்கர் கிட்ட செல்பேசி இலக்கங்கள் இருக்குது...” என்றேன். சிரித்துக்கொண்டே பேன்ட் பாக்கட்டில் கையை நுழைத்தவாறு கடந்து சென்றார். சில நேரங்களில் பாலுமகேந்திராவும் அதுபோன்ற மேனரிசத்துடன் கடந்து சென்றதுண்டு.


எழுத்தாளர், அரசியல்வாதி – சிவகாமி I.P.S: கிபி: “ஹேலோ சிவமாமி... நான் இங்க சேல்ஸ் மேன். இந்த புத்தகத்த பாருங்களேன்.”

“ஒரு நிமிடம் புத்தகத்தின் பின்னட்டையைப் பார்த்தவர். இந்த நாவல இன்னும் படிச்சதில்ல. நல்லா தான் இருக்கும் போல எடுத்துக்கறேன்.” என்று கடந்து சென்றார்.

இயக்குனர் சசி: கிபி: “சசி... நான் இங்க சேல்ஸ் மேன். இந்த புக் உங்களுக்கு புடிக்குதா பாருங்களேன்.”

“நல்ல புத்தகங்களா...?” என்றார்.

கிபி: “ஓரளவுக்கு... புத்தகத்த பிரிச்சி பாருங்க. புடிச்சி இருந்தா வாங்கிக்கோங்க...”

“ஒரு நிமிடம் பக்கங்களைப் புரட்டியவர். சரி எடுத்துக்கறேன்” என்றதுடன், “கு. அழகிரிசாமி மொத்தத் தொகுப்பு இங்க இருக்குதுங்களா?” என்றார்.

பெருமாள் முருகன் தொகுப்பில் வெளிவந்த “கு. பா. ரா சிறுகதைத் தொகுதியை” எடுத்து அவரிடம் நீட்டினேன்.

“மன்னிக்கணும்... கு. அழகிரிசாமி தொகுப்பு கேட்டேன்.” என்றார் சசி.

கிபி: “ஓ... சாரி... சாரி... ஏதோ ஞாபகத்துல தப்புப் பண்ணிட்டேன்.” என்றேன்.

“ச்சே ச்சே... இதெல்லாம் சகஜம் தானே” என்று சிரித்தார். “நான் இங்க சேல்ஸ் மேன்” என்று அறிமுகப்படுத்திக் கொண்டு அவரிடம் பேசிக்கொண்டிருந்தாலும் – மிகப் பணிவாகவும், மரியாதையுடனும் சசி பேசியது மகிழ்ச்சியாக இருந்தது. சக மனிதனாக நேசிக்கத்தகுந்த மனிதர் இயக்குனர் சசி.


கவிஞர் வா. மணிகண்டன்: கிபி: “மணி... மீஸான் கற்கள் படிச்சி இருக்கியா?”

“இல்லியே கிருஷ்ணா...! எதாச்சும் ஸ்பெஷல் புத்தகமா அது.”

கிபி: “நல்ல நாவல் மணி... ட்ரை பண்ணி பாரு...”

இரண்டு நாட்கள் கழித்து புத்தகச் சந்தைக்கு வந்தபோது மறக்காமல் வாங்கிக்கொண்டு சென்றான் நண்பன் மணி.

வலசை இதழ் 
கார்த்திகைப் பாண்டியன்: கிபி: “கார்த்தி... இந்த புக் படிச்சி இருக்கியாடா?”

“இல்லையேடா... நல்லா இருக்குமா?”

கிபி: “நீதான் படிச்சி பார்த்துட்டு சொல்லணும்”

பில் கவுண்டரிலிருந்து கிளம்பும் போது “டேய்... இங்க பாருடா... கெளம்பறேன்...” என புத்தகத்தைத் காட்டி கையசைத்துவிட்டுச் சென்றான்.

இயக்குனர் சமுத்திரக்கனி: கிபி: “ஹேலோ கனி... இங்க நான் சேல்ஸ் ரேப். இந்த புக்க பத்தி சொல்லட்டுமா?”

“அச்சோ. புக்ஸ் பத்தின்னா வேணாம்னா சொல்லுவேன்... தாராளமா... சொல்லுங்க...” என்றார் சந்தோஷமாக. கனியும் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார். இரண்டு இளைஞர்கள் வந்து “ஃபோட்டோ பிளீஸ்” என்றார்கள். அவர்களுடன் சிரித்துக்கொண்டு நின்றுவிட்டு மீண்டும் என்னிடம் பேச வந்தார். மீண்டும் சில இளைஞர்கள் அழைத்தனர். அடுத்தடுத்து ரசிகர்கள் வரவும் “ஐயோ... இது சரிப்பட்டு வராது... உங்களுக்கும் டிஸ்டர்ப் ஆகுது... நான் கெளம்பறேன்” என்று கைகொடுத்துவிட்டு கடந்து சென்றார்.

இயக்குனர் வெற்றிமாறன்: சிலபல வருடங்களுக்கு முன்பு உயிர்மையின் புத்தக வெளியீட்டு நிகழ்வு. அரங்கில் ஏராளமான கூட்டம். தாடியைத் தடவி விட்டவாறு பக்கத்தில் இருந்தவரிடம் அந்த இளைஞன் கூறிக் கொண்டிருந்தார்: “எனக்கும் இலக்கியத்துக்கும் என்ன சமந்தம். இலக்கியத்த பத்தி எனக்கு என்ன தெரியும்? என்ன எதுக்கு இங்க கூப்பிட்டாங்கன்னு தெரியல?”

மேடையில் அறிவிப்பு செய்து, மேடை ஏறும் பொழுது தான் கூச்சப்பட்டவாறு பேசிக் கொண்டிருந்த தாடிவைத்த இளைஞர் வெற்றிமாறன் என்பதே தெரிய வந்தது. அவருடைய முதல் திரைப்படம் வந்திருந்த நேரம் என்று நினைக்கிறேன்.

சமீபத்தில் கூட காலச்சுவடு புத்தக வெளியீட்டில் வெற்றிமாறனைப் பார்க்க நேர்ந்தது. போலவே புத்தகக் கண்காட்சியிலும் எனக்கு அருகில் புத்தகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

கிபி: “ஹலோ வெற்றி... இந்த புக்ஸ் எல்லாம் பாருங்களேன்.”

“நீங்களே சொல்லுங்க...” என்றார்.

“என் பெயர் சிவப்பு...” என்று வாயை எடுத்தேன் “படிச்சிட்டேன்” என்றார்.

“கடல், சின்ன சின்ன விஷயங்களின் கடவுள், செம்மீன், பனி, கடவுளும் கிழவனும்...” எந்த புத்தகத்தைப் பற்றிக் கூறினாலும் “படிச்சிட்டேன்” என்றார்.

கடைசி அஸ்திரமாக “மீஸான் கற்கள்” என்றேன். “படிச்சிட்டேன்” என்றார்.

கிபி: “சரி... அப்போ நீங்களே பார்த்து செலக்ட் பண்ணிக்கோங்க” என்றேன். வெற்றியும் கடந்து சென்றார்.

பக்கத்தில் நின்றிருந்த ஒரு கவிஞர் கூறினார்: “சில சினிமாகாரங்க எதுவும் படிக்கலன்னாலும் படிச்சதா காமிச்சிப்பாங்க”

கிபி: “எது எப்படியோ... வெற்றிமாறனைப் பார்த்தல் இனி எதிர்த்திசையில் ஓடுவேன். ஏனெனில் அவரிடம் விற்பதற்கு என்னிடம் எதுவும் இல்லையே...!”

எழுத்தாளர் நாஞ்சில்நாடன்: நாடனை நோக்கிச் செல்லும்போதே காலச்சுவடு கண்ணன் உத்தேசித்திருக்க வேண்டும். “தச்சன் இருக்கும் தெருவுல ஊசி விக்கப் போறீங்களா...?” என்றார்.

“சும்மா இருங்க கண்ணன். எல்லாம் எனக்குத் தெரியும்...!” என்றேன்.

கிபி: “ஹேலோ நாஞ்சில் நாடன்... எப்படி இருக்கீங்க...?”

“நல்லா இருக்கேன்... நீங்க?” என்றார்.

கிபி: புத்தகத்தை அவரிடம் கொடுத்து “இந்த புத்தகத்த படிச்சிருக்கீங்களான்னு பாருங்களேன்?”

“ஓ... மீஸான் கற்களா...! பத்து வருஷமா நானும் பாக்கறவங்க கிட்ட எல்லாம் படிச்சி பாருங்கன்னு ரெக்கமண்ட் பண்றேன். எவன் கேக்குறான்...! வந்தபோதே படிச்சிட்டேன்...” என்றேன்.

கிபி: “ஓ... உங்களுக்குப் புடிச்சி இருந்துசிங்களா?”

“நிச்சயமா... வாசிக்க வேண்டிய புத்தகம்...” என்றார்.

காலச்சுவடு கண்ணன் கிண்டலுடன் சிரித்தார். அதன் உள்ளர்த்தம் “தச்சனிடம் ஊசி விற்காதே” என்பது போல இருந்தது. எனினும் நாஞ்சில் நாடனைப் பார்த்தால் எதிர்த் திசையில் ஓடமாட்டேன். நாஞ்சில்நாடன் பரந்துபட்ட வாசிப்பாளி என்பது தெரியும். அவரிடம் தெரிந்துகொள்ள, கற்றுக்கொள்ள நிறையவே இருக்கிறது.

“ஓ... மீஸான் கற்களா...! பத்து வருஷமா நானும் பாக்கறவங்க கிட்ட எல்லாம் படிச்சி பாருங்கன்னு ரெக்கமண்ட் பண்றேன். எவன் கேக்குறான்...!” என்று நாஞ்சில் நாடன் பகிர்ந்த போது “சரி... நம் வார்த்தைகள் காற்றிலோ நீரிலோ எழுதியதாகத் தான் இருக்கட்டுமே” என்று நினைத்துக்கொண்டேன்.

No comments:

Post a Comment