Monday, February 10, 2014

பேராசிரியரின் கைகளில் செருப்பு

“மீடியம் சைஸ் லீவிஸ் பிரான்ட் அண்டர்வேர்” கெடைக்கறது குதரக் கொம்பான விஷயம் என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை. ஆகவே, சென்ற வாரத்தின் ஒருநாள் நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையிலிருக்கும் லீவிஸ் ஷோ ரூமுக்கு யதேர்ச்சையாகச் செல்ல நேர்ந்தது. நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் அமைந்துள்ள டி.பி.ஐ அலுவலகத்திலிருந்து நடந்தவாரே லீவிஸ் ஷோ ரூமை அடைந்தேன். சாயம் போன அரதப் பழசான கால்சட்டையும், தையல் பிரிந்த கிழிசல் கண்ட சட்டையும் வேறு அணிந்திருந்தேன். சுமார் இரண்டு கி.மீ தொலைவிருந்தால் அதிகம் தான். 

வேர்த்து விறுவிறுத்தவாறு கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்றதும், முதல் வேலையாக காலணிகளைக் கழட்டி ஓரமாக விட்டுவிட்டு, உள்ளாடை இருந்த ரேக்கிற்குச் சென்று ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். வெள்ளை வெளேரென்றிருந்த ஒருவர் என்னிடம் நெருங்கி பவ்யத்துடன் “சார்... நீங்க செப்பல்ஸ் போட்டுக்கிட்டே பாக்கலாங்க சார்...” என்றார்.

“இல்ல... டிபிஐ-ல இருந்து ரெண்டு, மூணு கிலோமீட்டர் தூரம் நடந்து தான் இங்க வந்திருக்கேன். எதையெல்லாம் மிதிச்சி (எச்சிலும் துப்பலும்) நடந்து இங்க வந்திருக்கேன்னு எனக்கே தெரியல... இவ்வளோ பளபளன்னு வேற மெயிண்டன் பண்றிங்க. மனசு கேக்கல அதான் செருப்ப கழட்டி ஒரு ஓரமாக உட்டுட்டேன்” என்றேன்.

கண்கள் அகல விரிய “ஒஹ்... தேன்ங்க் யூ... தேன்ங்க் யூ சார்...” என்றார் அந்த உருண்டை முகம் கொண்ட வெள்ளை மனிதர். சாயம்போன கால் சட்டையும், கிழிந்த டீ ஷர்ட்டும் அணிந்திருந்த என்னை மட்டுமல்ல – பென்ஸ் காரில் வந்திறங்கி யாரேனும் அந்தக் கடைக்குள் நுழைந்திருந்தாலும் கூட அவர் அப்படித்தான் நடந்துகொண்டிருப்பார்.

பிப்ரவரி 05, 06, 07 ஆகிய மூன்று நாட்களும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிதி நல்கையுடன் – பொன்னேரி “உலகநாத நாராயணசுவாமி அரசினர் கல்லூரியின் தமிழ்த்துறை, “தமிழ்ச் செவ்வியல் மரபில் நெய்தல்நில வாழ்வியல்” என்ற தலைப்பில் மூன்று நாள் தேசிய கருத்தரங்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். எனக்கு மிகப் பிடித்த முனைவர்களான பச்சையப்பன் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவராக இருந்த வளவன், சென்னை பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் வீ. அரசு மற்றும் ஜோ.டி. குரூஸ் ஆகியோரும் பங்கேற்க இருந்ததால் விழாவுக்குச் செல்ல திட்டமிட்டிருந்தேன்.

துவக்க நாளில் சாகித்ய அகாடமி விருதுபெற்ற ஜோ.டி. குரூஸ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று விழாவினை சிறப்பித்தார். மூன்று நாட்களிலும் ஏற்பாடாகியிருந்த பல்வேறு அமர்வுகளில் பேராசிரியர்களும் ஆய்வாளர்களும் கட்டுரையை சமர்ப்பித்து மாணவர்கள் முன்பு, தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்கள். நிறைவு நாளன்று பேராசிரியர் வீ. அரசு கலந்து கொண்டு, சமர்ப்பித்த கட்டுரைகளின் நூல் வடிவத்தை வெளியிடுவதாக இருந்தது. அதற்க்கு முன்பு – இவ்விழாவினை ஒருங்கிணைத்து கருத்தரங்கம் நடைபெறுவதற்குக் காரணமாக இருந்த உதவிப் பேராசிரியர் செல்வகுமார் நன்றியுரை ஆற்றினார்.

இக்கருத்தரங்கு நடைபெறுவதற்கு தமிழ் ஆர்வலரான உ.நா. அரசு கல்லூரி முதல்வர் வீரபத்ரனும், தமிழ்த் துறைத் தலைவர் பொன்முடி சுடரொளியும் காட்டிய ஈடுபாட்டினைச் சுட்டிக்காட்டிய செல்வகுமார், பேராசியர் அரசுவுடனான ஒரு சம்பவத்தையும் பகிர்ந்துகொண்டார். (பெருமாள் முருகன் & வீ. அரசு ஆகியோரின் மாணவர் உதவிப் பேராசிரியர் செல்வகுமார்.)

செல்வகுமார் சொல்கிறார்: இது நடந்தது 1996 –ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். தமிழ்த் துறையில் அப்பொழுது தான் சேர்ந்திருந்த நேரம். கிராமத்திலிருந்து புதிதாகச் சென்னைக்கு வந்திருந்த காலம். ஒருநாள் பேராசிரியர் அரசு ஐயா அவர்கள், பெசன்ட் நகரில் இருந்த அவரது இல்லத்திற்கு எங்களை அழைத்துச் சென்றிருந்தார். கடற்கரை பக்கம் என்பதால் அங்கும் அழைத்துச் சென்றிருந்தார். கடற்கரையைப் பார்த்ததும் பேராசிரியருடன் சென்றிருந்த எங்கள் மூன்று பேருக்கும் மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. கால்களை கடலில் நனைக்க ஆசைப்பட்டு எங்களது செருப்புகளைக் கழட்டி விட்டுவிட்டு முழங்கால் நனைய அலைபுரளும் கடலோரத்தில் உடன் வந்திருந்த ஐயாவை மறந்து சந்தோஷித்திருந்தோம். திடீரென ஞாபகம் வந்து ஐயாவைத் திரும்பிப் பார்த்ததும் அதிர்ந்துவிட்டோம். எங்களது மூன்று பேருடைய செருப்புகளும் ஐயாவின் விரல்களில் தொங்கிக் கொண்டிருந்தது. நாங்கள் பதறி அடித்துக்கொண்டு அவரிடம் ஓடிச்சென்று கேட்டோம்... “என்னங்கையா எங்க செருப்ப நீங்க கையில வச்சிக்குனு இருக்கீங்க...?”

“பின்ன... கடலல செருப்பு எல்லாத்தையும் உள்ள இழுத்துட்டா... பின்னாடி ஓடுறது நமக்கு சிரமம் இல்ல...” என்றாராம் பேராசிரியர் வீ. அரசு. இதுபோன்ற பக்குவப்பட்ட யதார்த்த மனிதர்களைப் பார்ப்பதே அரிதிலும் அரிதுதான். மேற்கூறிய சம்பவங்கள் இரண்டும், ஒரு ஜென் கதையைத் தான் ஞாபகப்படுத்தியது. அகல் வெளியீட்டில் பிரசுரம் கண்ட “ஜென் கதைகள்” தொகுப்பில் இக்கதை உள்ளது.

அலைக்குப் பிறந்த ஞானம்

“ஓ... நான் எவ்வளவு துயரப்படுகிறேன். மற்ற அலைகள் எல்லாம் பிரம்மாண்டமாக இருக்கின்றன. நானோ ரொம்பக் குட்டியாக இருக்கிறேன். சில அலைகள் மிகவும் வலுவாக இருக்கின்றன. நானோ ரொம்பப் பூஞ்சையாக இருக்கிறேன்.” என அலை துயரப்படுகிறது.

“உன் சுயத்தையே நீ இன்னும் பார்க்கவில்லை. அதனால் தான் நீ துயரப் படுகிறாய்.”

“நான் அலை இல்லையா? அப்படியென்றால் வேறென்ன?” என்று அலை கேட்கிறது.

“அலை என்பது உனது தற்காலிக வடிவம். நீ உண்மையில் தண்ணீர்.”

“தண்ணீரா?” என்கிறது அலை.

“உனது அடிப்படையான சாராம்சம் தண்ணீர் என்பதை நீ உணரும் போது, அலையாக இருப்பது குறித்து மனம் குழம்பமாட்டாய். அதோடு, உனது வாட்டமும் போய்விடும்.”

ஜென் தத்துவம் போதிக்கும் இந்த விஷயம் உண்மை தானே நண்பர்களே. ஒவ்வொரு மனிதனும் அறிவாலும் உழைப்பாலும் உச்சத்தை அடைந்தாலும், தலைமைப் பொறுப்பில் இருந்தாலும் – எல்லோரும் சக மனிதர்கள் என்பதை ஒருசிலர் தானே உணர்ந்து வாழ்வினை எளிதாக அமைத்துக் கொள்கிறார்கள். அந்த லீவிஸ் விற்பனைப் பிரதிநிதிக்காவது கஸ்டமர் சாட்டிஸ்ஃபேக்ஷன் என்றொரு நிர்பந்தம் இருக்கிறது. பேராசிரியர் அரசுவுக்கு அதெல்லாம் ஒன்றுமே இல்லை. எனினும் தனது மாணவர்களை சக நண்பர்களாகவும், சக மனிதர்களாகவும் நேசிக்கக் கூடிய பக்குவம் இயல்பிலேயே அவருக்கு இருந்திருக்கிறது போலும். இதுபோன்ற ஆசிரியர்கள் அருகிக்கொண்டே வருகிறார்கள். பதினெட்டு வருடங்களுக்கு முன்னர் நடந்த சம்பவம் என்றாலும், அரசுவின் இந்தச் செயல் மாணவர்கள் எல்லோராலும் கொண்டாடப்பட வேண்டிய ஒன்று. “ஆய்வாளர், எழுத்தாளர், நடக்கக்காரர், விமர்சகர்” என எத்தனையோ காரணங்கள் இருக்கிறது. அவரை நெருங்கிச் சென்று கைகுலுக்க. இதுநாள் வரை அப்படிச் செய்ததில்லை. கருத்திரங்கில் பேசி முடித்து வெளியில் வந்ததும் அரசுவின் அருகில் சென்றேன். “உங்கள சந்திச்சதுல ரொம்ப சந்தோஷங்க அரசு... சென்னை கூட்டங்களில் கடைசி வரிசையில நின்னு, உங்களுடைய பேச்சுக்களைக் கேட்டதுண்டு. எங்க ஊருக்கு வந்து பேசி இருக்கீங்க... ரொம்ப அருமையா பேசுனீங்க... ரொம்ப சந்தோசம்... ரொம்ப சந்தோசம்...” என்று கைகுளுக்கினேன். சிரித்துக்கொண்டே அவரும் கைகளை நீட்டினார்.

எங்களது நான்கு கைகளும் ஒன்றாக சங்கமித்தன. உண்மையில் அவருடைய பேச்சுக்கான கைகுலுக்கல் அல்ல அது. இதுபோன்று ஆயிரம் மேடைகள் கண்டிருப்பார் அவர். எனினும், மாணவர்களின் செருப்பைக் கைகளில் ஏந்திய பேராசிரியரின் விரல்களைத் தொட்டுப்பார்க்கும் சந்தர்ப்பம் இனி வாழ்வில் கிடைக்குமோ என்னவோ! அவருடைய ரேகைகளை என்னுடைய கைகளில் கடத்திக் கொண்டேன்.

பேராசிரியர் வீ அரசுவைக் கொண்டாட வேண்டிய தருணமும் இதுதான். ஏனெனில் இன்னும் சில மாதங்களில் தனது ஆசிரியப் பணியிலிருந்து அரசு ஓய்வு பெறப்போகிறார். அவருக்கு நமது காதலும், நேசமும் உரித்தாகட்டும்.

கோபக்காரன் என்றும் உங்களைச் சொல்கிறார்கள். எனினும் கோபம் இருக்கும் இடத்தில் தானே குணமும் இருக்கும். நீங்கள் அதிசய மனிதர் அரசு. எளிமையான விஷயங்களெல்லாம் என் போன்றவர்களுக்கு அதிசயமாகத் தானே இருக்கிறது.

:-)

No comments:

Post a Comment