Sunday, February 9, 2014

முள்ளும் மலரும் – வேர்களைத் தேடி

ஓர் இதழையும் (புதிய தரிசனம்), ஒரு பதிப்பகத்தையும் (அம்ருதா), ஒரு குறும்பட ஆர்வலரையும் (அருண் தமிழ் ஸ்டுடியோ) – போலவே, “முள்ளும் மலரும்” திரைப்படம் சார்ந்து. 

பழைய வார இதழ்களையும், மாத இதழ்களையும் (அதன் பதிப்பாளர்களால்) புத்தகக் கண்காட்சி போன்ற விழாக்கால நாட்களில் வாசகர்களுக்கு இலவசமாகக் கொடுப்பது வழக்கம் தான். இதெல்லாம் ஒரு மார்கெட்டிங் முறை. அப்படித் தான், கடந்த சென்னை புத்தகக் கண்காட்சியின் ஒருநாள் – கால்போன போக்கில் நடந்து கொண்டிருந்த பொழுது - “புதிய தரிசனம் (பார்வை 1, ஏப்ரல் 16-30, 2013)” என்ற ஃபோர்ட்நைட் இதழ் என்னுடைய கைகளுக்கு வந்து சேர்ந்தது. பக்கங்களைப் புரட்டிக் கொண்டே வந்ததில் ஒரு விஷயம் கண்களில் பட்டது. பக்கம் 29-ல் அருண் தமிழ் ஸ்டுடியோ (ஏப்ரல் 11-ல், 11.16 am) – தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்த “முள்ளும்... மலரும்...” என்ற நிலைத்தகவல் பகிர்வு தான் அது. ஏறக்குறைய ஒன்றரை வருடத்திற்கு முந்திய இதழ் என்றாலும் இப்பொழுதுதானே கைகளுக்குக் கிடைத்தது. ஆகவே, பேச வேண்டியது அவசியமாகிறது.

நிலைத்தகவலின் இரண்டாவது பத்தி எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இயக்குனர் மகேந்திரனின் “முள்ளும் மலரும்” திரைப்படத்தைப் பற்றி அவர் பகிர்ந்திருந்த வரிகள் பின்வருமாறு:

“ஒரு சிறுகதையை, இந்த அளவிற்கு நேர்த்தியாக சிறுகதையில் சில மாற்றங்களோடு, இனி ஒருவரால் எடுக்க முடியும் என்கிற நம்பிக்கை எனக்கில்லை. இத்தனைக்கும் அந்த சிறுகதையை எங்கே மாற்ற வேண்டும் என்று மிக தெளிவாக மகேந்திரன் ஒரு வரையறையை செய்திருக்கிறார். அந்த இடத்தைத் தவிர, வேறு எந்த இடத்தில் அந்த சிறுகதையை மாற்றி இருந்தாலும் இப்படி நான் முள்ளும் மலரும் படத்தை பற்றி நான் பேசிக்கொண்டிருக்க முடியாது.”

இதனினும் ஹாஸ்யக் கூத்து வேறொன்றும் இருக்க முடியாது. “புதிய தரிசனம்” எடிட்டராவது கொஞ்சம் கவனத்து பிரசுரம் செய்திருக்கலாம். “முள்ளும் மலரும்” – அருண் தமிழ் ஸ்டுடியோ நினைப்பது போல “சிறுகதை” அல்ல. தொடராக வெளிவந்து வாசகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற உமா சந்தரனின் தொடர் நாவல். இத்தொடர் பின்னர் புத்தகமாகவும் வெளிவந்துள்ளது. (இவரது இயற்பெயர் பூர்ணம் ராமச்சந்திரன். தனது தாயின் பெயரான “உமா”வை சேர்த்துக்கொண்டு உமா சந்திரன் என்ற பெயரில் எழுதியவர். இந்திய வானொலியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது சகோதரர் பூர்ணம் விஸ்வநாதன் நாடக உலகிலும், திரைப்பட குணசித்திர நடிப்பிலும் கோலோச்சிய பூர்ணம் விஸ்வநாதன் என்பது குறிப்பிடத்தக்கது. உமா சந்திரனின் புதல்வர் தான் ஆர். நடராஜ் I.P.S)

“முள்ளும் மலரும்” கல்கி வெள்ளி விழாப் போட்டியில் நடுவர்கள் அனைவராலும் விருப்பத்துக்குரிய படைப்பு என ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமைக்குரிய நாவல். 1976, ஆகஸ்ட் மாதம் “கல்கி” வெள்ளிவிழா இதழில் தொடங்கி எட்டு மாதங்கள் தொடர்ச்சியாக வெளிவந்த இந்த நாவலை அருணா பப்ளிகேஷன்ஸ் வாயிலாக முதற்பதிப்பும், அதன் பின் 1982-ல் வானதி பதிப்பகத்தின் மூலம் மறுபதிப்பும், 2008-ஆம் ஆண்டு மூன்றாம் பதிப்பாக “அம்ருதா”விலும் பிரசுரம் கண்ட நாவல் என்பதை யூகிக்க முடிகிறது. அந்த காலத்திலேயே ரூபாய் 10, 000 –த்தை பரிசுத் தொகையாகப் பெற்ற நாவல் இது. இந்த விஷயங்கள் எல்லாம் அம்ருதா பதிப்பித்த புத்தகத்தில் உள்ளது. ஆர். நடராஜ் IPS மற்றும் இயக்குனர் மகேந்திரன் எழுதிய முன்னுரைகள் அதே அம்ருதா பதிப்பக வெளியீட்டில் இருக்கின்றது. மகேந்திரனின் முன்னுரையில் “முள்ளும் மலரும்” திரைக்கதையாக உருவான கதையை “நாவல் திரைப்படமானது எப்படி?” என தெளிவாக விளக்கியுள்ளார். அவற்றில் சில: “காளியின் வின்ச் ஆபரேட்டர் உத்தியோகமும், அவனுடைய வித்தியாசமான சுய கெளரவமும் என்னைக் கவர்ந்தன. நாவலில் ‘காளி’யைப் புலி ஒன்று தாக்கி, அவனது ஒரு கை போய்விடும். அந்த அத்தியாயத்தோடு நாவலை மூடி வைத்துவிட்டேன்.”

“பிறகு காளி, அவன் தங்கை வள்ளி, இருவரின் குழந்தைப் பருவம் என்று ஒவ்வொன்றாக புதிது புதிதாய்ச் சேர்த்துக் கொண்டேபோய் திரைக்கதையின் கடைசிக் காட்சி வரை என் விருப்பத்திற்கு ஏற்ற மாதிரி திரைக்கதை எழுதி முடித்துவிட்டேன்.”

“துக்ளக் பத்திரிகையில் சினிமா விமர்சனம் எழுதிவந்த நான் தமிழ்ப் படங்களை எப்படியெல்லாம் விமர்சித்திருக்கிறேன்? நானா இப்போது அதே தவறுகளைச் செய்கிறேன். (கமர்ஷியல் சினிமாவிற்கு வசனம் எழுதுவது.)”

“மறுபடியும் மறுபடியும் என்னைக் கதை வசனம் எழுதச்சொல்லி வற்புறுத்திய படத் தயாரிப்பாளர்களிடம் திடீரென இப்படிச் சொன்னேன்: என்னிடம் கதையே இல்லை... ஏதாவது நாவல்கள் வாங்கி வாருங்கள். எனக்குப் பிடித்த நாவலுக்கு நான் திரைக்கதை வசனம் எழுதித் தருகிறேன். இதுதான் என் முடிவு. அவர்களும் சம்மதித்தார்கள். அப்படி என்னிடம் வந்து சேர்ந்த நாவல்களில் ஒன்றுதான் முள்ளும் மலரும். ஏதோ எனது பர்சனல் டயரியில் அந்தரங்க உணர்வை எழுதி வைத்துக்கொள்ளும் விதமாகத்தான் அந்தற்குத் திரைக்கதை எழுதினேன். எனக்கு நன்றாகத் தெரியும், அந்த திரைக்கதையை எந்தத் தயாரிப்பாளர் கேட்டாலும் படமெடுக்க நிச்சயம் ஒத்துக்கொள்ளமாட்டார். ஏனெனில் தமிழ் சினிமாவின் வழக்கமான ‘மெலோ டிராமா’, அதிக வசனம், ஓவர் ஆக்டிங், டூயட், மாமூல் க்ளைமாக்ஸ் எதுவும் எனது முள்ளும் மலரும் திரைக்கதையில் கிடையாது. வேறு மாதிரிச் சொன்னால் அதுவரை நான் கதை வசனம் எழுதி வெற்றி கண்ட படங்களின் ஃபார்முலா சுத்தமாக இதில் இல்லை.”

பின்னர் முக்தா ஃபிலிம்ஸ் அதிபர் முக்தா சீனிவாசன் இந்த படத்தைத் தயாரிக்க முன்வந்திருக்கிறார். “நான் சொல்லப் போறது அண்ணன் - தங்கச்சி கதை” என்று மகேந்திரன் சொல்லவும், வேறெதையும் கேட்காமல் முக்தா சீனிவாசன் நடையைக் கட்டி இருக்கிறார். பின்னர் ஷூட்டிங் ஸ்பாட் எதற்கும் கூட சீனிவாசன் வரவில்லையாம். வேணு செட்டியார் மற்றும் படத்தின் கேமராமேன் ஒருவருடன் 2000 கிலோமீட்டர்கள் சுற்றி லொகேஷன் பார்த்திருக்கிறார்கள். பின்னர் கேமரா மேன் இந்தப் படத்திலிருந்து விலகிக்கொள்ள, யாரை கேமரா மேனாகப் பயன்படுத்துவது என்று மகேந்திரன் குழம்பி இருக்கிறார். நடிகர் கமல்ஹாசன் தான் பாலுமகேந்திராவை மகேந்திரனுக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். பின்னர் இளையராஜா இந்தக் கூட்டணியுடன் சேர்ந்துகொள்ள மகேந்திரனுக்கு நம்பிக்கை பிறந்திருக்கிறது. பின்னர், ஒருநாள் படத்தைப் பார்த்த தயாரிப்பாளர் குழு “என் தலையில இடிய எறக்கிட்டையே... படம் தேறாது” என்று சொல்லி இருகிறார்கள். அதுபோலவே இரண்டு வாரங்கள் டென்ட் கொட்டாய்களிலும், டூரிங் டாக்கீஸ்களிலும் கூட்டமே இல்லையாம். மூன்றாவது வாரத்திலிருந்து திரைப்படத்தைக் காண வந்த கூட்டம் அலைமோதியதாம். பின்னர் மகேந்திரனைத் தேடிவந்த தயாரிப்பாளர் ஒரு பிளாங்க் செக்கை நீட்டி “உனக்கு எவ்வளவு வேணுமோ ஃபில் பண்ணிக்கோ என்று நீட்டினாராம்.”

“இந்தப் படத்தை நீங்க தயாரிச்சதே. கோடி ரூபாய்க்கு சமம்” என்றாராம் இயக்குனர் மகேந்திரன்.

இந்த எல்லா விஷயங்களும் அம்ருதா வெளியிட்ட புத்தகத்தின் முன்னுரையில் தெளிவாக இருக்கிறது. அப்படியிருக்க ஆதாரமில்லாத தகவலை – அதாவது “முள்ளும் மலரும்” சிறுகதை, திரைப்படமாக ஆக்கப்பட்டது என அருண் தமிழ் ஸ்டுடியோ எப்படி எழுதினர் என்பது எனக்கு இன்னும் கூட விளங்கவில்லை!. இந்த விஷயத்தை அருமை நண்பர் அருணின் கவனத்திற்கு நண்பர்கள் எடுத்துச் சென்றால் மகிழ்வேன். (ஒருவேளை புதிய தரிசனம் பிழையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்திருந்ததற்கு, அதற்கடுத்த இதழில் வருத்தத்தையும் பதிவு செய்திருக்கலாம்.)

போகட்டும், இனி அம்ருதாவின் “முள்ளும் மலரும்” பதிப்புக்கு வருவோம். முதற்பதிப்பு 1967, முறையே 1976, 1982, 2008 ஆகிய ஆண்டுகளில் அடுத்தடுத்த பதிப்புகள் வெளிவந்துள்ளதென குறிப்பிட்டிருக்கிறார்கள். “இதயத்திலிருந்து...” என்ற முன்னுரையில் ஆர். நடராஜ், இ. கா. ப: “முள்ளும் மலரும் - முதலில் வானதி பதிப்பகம், திருநாவுக்கரசு அவர்களால், 1982-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது” என்கிறார். உமா சந்திரன் “நன்றி” என்ற பின்னுரையில் “1976 ஆகஸ்ட் மாதம் கல்கி வெள்ளி விழா இதழில் தொடங்கி எட்டு மாதங்கள் தொடர்ச்சியாக வெளிவந்த இந்த நாவல் அருணா பப்ளிகேஷன்ஸ் வாயிலாக முதற்பதிப்பு வெளியானது” என்கிறார். 

தலையைச் சுற்றுகிறாதா... “1976 ஆகஸ்டில் வெளிவந்த தொடருக்கு, 1967-ல் முதற்பதிப்பு வந்தது எனில் யாருக்குத் தான் தலையைச் சுற்றத்து! ப்ரூஃப் பார்த்தவர்களின் கவனக் குறைவாக இருக்குமோ என்ற ஐயம் எழுகிறது. அம்ருதா பதிப்பகம் இதனை கவனத்தில் எடுத்துக் கொண்டால் மகிழ்வேன். (மறுபதிப்பு வந்ததா என்று தெரியவில்லை. அப்படி வந்தால் இந்த முரண்கள் களையப்பட வேண்டும் என்ற உந்துதலில் தான் கோடிட்டுக் காண்பிக்கிறேன்.)

மற்றபடி அருணுக்குச் சொல்ல என்ன மிச்சம் இருக்கிறது? அவர் வழி தனி வழி. ஆதாரத்துடன் ஒரு விஷயத்தைச் சுட்டிக் காட்டினால், நண்பர்கள் வட்டத்திலிருந்து நீக்கிவிடுவர். அவருடைய கவனத்திற்கு இந்த விஷயங்களெல்லாம் சென்றால் மகிழ்ச்சி தான்.

நேற்றைய ரயில் பயணத்தில் நண்பர் பிரபாகரன் தவசிமுத்துவை சந்திக்க நேர்ந்தது. அவர் பகிர்ந்த விஷயம் எனக்கு ஏற்றுக்கொள்ளும் படியாக இருந்தது.

“கிருஷ்ணா, ஒரு விஷயம் தனக்குப் பிடித்திருந்தால், அந்த விஷயத்தை பிரம்மப் பிரயத்தனம் செய்தாவது உலகின் மிகச் சிறந்த ஓர் ஆக்கம், நோபலுக்கு நிகர், ஆஸ்காருக்கு ஈக்குவல், கேன்சைவிட கெத்து என்று நிறுவும் வேலையை தற்கால எழுத்தாளர்களும், முகநூல் டெம்ப்லேட் ரைட்டர்களும் ஹயக்கமின்றி செய்கிறார்கள்” என்றார்.

எனக்கும் பிரபாவின் கருத்து ஏற்புடையதாகத் தான் இருந்தது. கணிதத்தில் X, Y, Z, P, Q, R, A, B, C ஆல்ஃபா, பீட்டா, காமா, தீட்டா, டெல்டா என்பது போன்ற பல குறியீட்டு எழுத்துக்களையும் எடுத்துக்கொண்டு கணித சூத்திரங்களை நிரூபணம் செய்வோம். அதுபோலத் தான் தற்கால சினிமா கருத்துப் பகிர்தல்கள், வியந்தோதல்கள் மற்றும் விமர்சனங்களில் “குறியீடுகள்” என்ற வார்த்தை அதிகம் பயன்படுத்தப் படுகிறதோ என்ற எண்ணம் எழுவதைத் தவிர்க்க முடிவதில்லை.

கடைசியாக, அருண் தமிழ் ஸ்டுடியோ பின்வருமாறு முடித்திருந்தார்: “முள்ளும் மலரும் படத்திற்கு நான் ஏதாவது செய்தாக வேண்டும் என்ற நினைப்பே, என்னுடைய எல்லா கவலைகளையும் தாண்டி, இப்போதைக்கு என் மனதில் ஓடிக்கொண்டிருகிறது.”

நண்பர் செய்ய வேண்டிய விஷயங்களில் கொஞ்சம் போல கவனம் எடுத்துக் கொண்டு செய்தால் நல்லது. இல்லையேல் காற்றில் பரவும் கிருமி போல தவறான தகவல்கள் பரவும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.

No comments:

Post a Comment