Sunday, February 2, 2014

மாணவர்களின் ரவுடிக் கலாச்சாரம்

இளங்கலை கணிதம் பயின்றபோது “தியாகராஜன்” என்ற மாணவர் கல்லூரி சேர்மன் தேர்தலில் நின்று தோற்றவர். கத்திவாக்கத்திலிருந்து தான் தினமும் கல்லூரிக்கு வருவார். படிக்கும் காலத்தில் அவரைப் பார்த்தாலே என் போன்ற அப்ரானிகளுக்குக் கொஞ்சம் பயம் கலந்த நடுக்கம். திடீரென பளபளக்கும் வீச்சரிவாலை கையில் வைத்துக்கொண்டு கல்லூரிக்குள் வீதி உலா வருவார். அங்குமிங்கும் கத்தியுடன் அலைந்துவிட்டு, ஒரு மாஸ் காண்பித்துவிட்டு வெளிநடப்பு செய்வார். கல்லூரி முடிக்கும் வரை பெரிதாக ஒன்றும் அசம்பாவிதம் நடக்கவில்லை. கொலை குத்து இல்லையென்றாலும் அடிதடிகளுக்குப் பஞ்சம் இருக்காது. அதன் பின்னர் அவரைப் பற்றிய தகவல் எதுவும் இல்லை. ஒருநாள் நாளிதழ்களில் தியாகுவின் பெயரைப் பார்த்ததும் அதிர்ந்துவிட்டேன். வட சென்னையின் பிரபல தாதாவாக தியாகுவின் புகைப்படத்துடன் பெயரும் இருந்தது. பின்னர் ஒரு மாத இதழில் அவரது பெயரையும் என்கவுண்டர் லிஸ்டில் பார்த்ததாக ஞாபகம். (கல்லூரி படிக்கும் வரை தியாகுவின் பின்னால் ஐந்து நபர்களுக்கு மேல் யாரும் இருக்க மாட்டார்கள்). திருந்தி வாழ ஆசைப்படுவதாகவும் அவர் பேட்டி கொடுத்திருந்தார்.

போலவே மீண்டும் ஒரு பரபரப்பான செய்தியை, கூடிய சீக்கிரமே நாளேடுகளில் வாசிக்க வேண்டிய சூழல் உருவாகலாம் என்று தான் நினைக்கிறேன். எப்பொழுதும் போல கிபி விளையாடுகிறான் என்று தான் நண்பர்கள் நினைக்கக் கூடும். இது கொஞ்சம் சீரியஸ் மேட்டர்.

வேலையை முடித்துவிட்டு மௌன்ட் ரோட்டிலிருந்து சென்னை சென்ட்ரலுக்குச் செல்ல, டிவிஎஸ் பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தேன் (Jan - 31, 2014). சில பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிந்ததால், ஓரளவிற்கு காலியாக வந்த பேருந்தில் ஏறிக்கொண்டேன். ஸ்பென்சர் பிளாசாவின் சிக்னல் அருகில், கண்ணிமைக்கும் நேரத்தில் திபுதிபுவென மாணவர்கள் ஓடிவந்து ஏறிக்கொண்டனர். தடதடதடவென பேருந்தின் தகரத்தைத் தட்டியவாறு “அக்கா பொன்னே கேளு, நந்தனம் பசங்க பொட்டைங்க... பச்சையபாஸ் பசங்க பொட்டைங்க... நியூ காலேஜ் பசங்க மட்டும்தான் வாட்டான ஆம்பளைங்க... எத்திராஜ் பொண்ணுங்க தெவிடியாளுங்க... குயின் மேரிஸ் பொண்ணுங்க தெவிடியாளுங்க... அக்கா பொண்ணே கேளு...” என்றவாறு சகிக்கமுடியாத வார்த்தைகளைப் போட்டு கானா பாடிக்கொண்டு வந்தனர்.

சென்ட்ரல் வரவும் படியில் நின்றிருந்த மாணவர்கள் இறங்கிக்கொண்டனர். பொதுமக்களின் நண்பர்களாம் போலீஸ் கூட அரண்டுமிரண்டு தான் மாணவச் செல்வங்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர். கொஞ்ச நேரத்தில் சில மாணவர்கள் சலசலவென சப்தமெழுப்பி ஏதோ வம்புத்தனம் செய்து கொண்டிருந்தனர். யாரோ ஒருவர் சம்பவங்களைப் புகைப்படம் கூட எடுத்துக் கொண்டிருந்தார். இதனைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு போலீஸ்காரர் சாலையில் வந்துகொண்டிருந்த ஷேர் ஆட்டோவை நெருங்கி, பின்புறத்தில் ஓங்கி ஓர் அடியடித்தார். உண்மையில் அது மாணவர்களின் மீது விழ வேண்டிய பேரடி. நானோ...! பாட்சா படத்தின் முன்பாதி ரஜினியைப் போல சலசலக்கும் திசைக்கு எதிரான திசையில் ஓடிக் கொண்டிருந்தேன்.

ஓடிய வேகத்தில், பின் மதியம் 2.35 மணிபோல கும்மிடிப்பூண்டி செல்லப் புறப்படும் சென்ட்ரல் நிலைய ரயிலைப் பிடித்துவிடுவேன் என்ற நம்பிக்கை இருந்தது. போலவே Front 3rd Compartment – 2nd class-ல் ஏறி, வசதியாக அமர்ந்து கொண்டு நிம்மதியாக மூச்சு வாங்கினேன். பக்கத்தில் ஒன்றிரண்டு மாணவர்கள் அமர்ந்திருந்தனர். அவர்களிடம் எப்படிப் பேச்சுக் கொடுப்பது என்றும் யோசித்துக் கொண்டிருந்தேன்.

“அண்ணா” என்று ஒரு மாணவன் என்னை அழைத்தான். கண்களைக் கூர்மையாக்கிக் கொண்டு அந்த இளைஞனைப் பார்த்தேன். “Friends வருவாங்க’ண்ணா... கொஞ்சம் முன்னாடி போயி உக்கா(ர்)ந்துக்கங்களேன்.” என்றான்.

“சரிப்பா...” என்று இரண்டு இருக்கைகள் தள்ளிச் சென்று பார்த்தேன். மாணவர்கள் அமர்ந்திருந்தனர். இன்னும் கொஞ்சம் தள்ளிச் சென்று பார்த்தேன். ரயில் பெட்டி முழுவதும் கல்லூரி மாணவர்கள் அமர்ந்திருந்தார்கள். நோட்டம் விடுவதற்கு வசதியாக காலியான இருக்கையைப் பார்த்து அமர்ந்துகொண்டேன். யாரேனும் கிடைத்தால் பேசவும் தயாராக இருந்தேன். சிறிது நேரத்தில் இளமையின் மெருகேறிய, மாநிறமான இளைஞன் ஒருவன் பக்கத்தில் வந்தமர்ந்தான். ஸ்நேகமாக அவனைப் பார்த்துச் சிரித்தேன். அவனும் நட்புடன் ஸ்நேகப் புன்னகை வீசினான். பேச்சு பேச்சாகவே சென்று கொண்டிருந்தது. திடீரென...

“அண்ணா... மீஞ்சூர் ஸ்டேஷன் வறதுக்கு முன்னாடி – நந்தியம்பாக்கம் ஸ்டேஷன் வந்தா கொஞ்சம் எழுந்து முன்னாடி போயிடுறீங்களா?” என்றான்.

ஒருவேளை மீஞ்சூர் ஜெயின் கல்லூரி மாணவிகளில் யாரேனும் ஒருத்தி இவனைப் பார்க்க வருவாளோ...! இருவரும் வழக்கமாக உட்காரும் இருக்கை இதுவாக இருக்குமோ...! என்றவாறு குழம்பிக் கொண்டிருந்தேன். “அண்ணா... அந்த ஜன்னல் விண்டோ கதவு மூடுதான்னு கொஞ்சம் செக் பண்ணிப் பாருங்க.” என்றவாறு இன்ஸ்ட்ரெக்ஷன் கொடுத்துக் கொண்டிருந்தான்.

“ஒருவேளை கம்பார்மெண்டில் இவன் குடும்பமே நடத்தப் போறானோ...? சேச்சே... இருக்காது... இவ்வளோ டீசென்ட்டா பேசுறானே” என்றவாறு பல விஷயங்களையும் பல்லான பல்லான விதத்தில் யோசித்துக்கொண்டு “ஜன்னல்னாலும் விண்டோ-னாலும் ஒண்ணுதான் தம்பி. நடு சென்டர் மாதிரி” என்று சிரித்தேன்.

“நல்லாத் தான் கடிக்கிறீங்க. கொஞ்ச நேரத்துல தண்டவாளத்துல இருக்கற கல்லெடுத்து வண்டிக்குள்ள உடுவாங்க... அதையும் சேர்த்தே வாங்கிக்கலாம் இருங்க” என்றான்.

“எனக்கு பகீரென்றது. இந்த கம்பார்மென்ட் பசங்க பூராவும் பச்சயபாஸ் காலேஜில படிக்கிறோம். எங்களுக்கும் ஜெயின் காலேஜ் பசங்களுக்கும் கொஞ்ச நாளாவே பிரச்சனையில தான் ஓடிட்டு இருக்குது. எவனாச்சும் ஜெயின் காலேஜ் பசங்க வண்டியில ஏறினாங்க-ன்னா அவங்க காலி... தர்ம அடி அடிக்கப்போறோம்...” என்றான்.

“அடப்பாவிங்களா...! நீங்கல்லாம் படிக்கிற பசங்களா?” என்றேன்.

“அண்ணா... நாங்க சும்மாதான்னா இருக்குறோம்... அவங்க வந்தமா, படிச்சமா, போனோம்மான்னு இருந்தா பிரச்சனை இல்ல... எங்கக் கூடவே சண்டைக்கு வரணுங்க... அவங்க மீஞ்சூர் லோக்கல் பாய்ஸ். அதனால பொன்னேரி, கவரப்பேட்டை, கும்மிடிப்பூண்டில இருந்து வர பசங்கள டிரைன்ல இருந்து எறக்கி அடிக்கறானுங்க’ண்ணா... அப்போ நாங்க என்ன பொட்டைங்களா...!? அந்த பசங்க கத்தி கம்புன்னு வசிக்குனு மெரட்டறாங்க’ண்ணா” என்றான்.

“இருந்தாலும் ஒருத்தர ஒருத்தர் அடிசிக்கிறது நல்லாவா இருக்கு?” என்றேன்.

“இன்னாங்ண்ணா... அப்படிச் சொல்லிட்டிங்க. அப்போ இதுக்கு முன்னாடி இருந்த ரூட்டுத் தல எங்களப் பாத்து காறித் துப்ப மாட்டாராண்ணா. நான் இருக்கச் சொல்ல ரூட்டு எப்புடி இருந்துச்சு... நீங்க என்னடான்னா அடிவாங்கிட்டு வறீங்கன்னு காறித் துப்ப மாட்டாரு... அதெல்லாம் ஒரு கெத்துண்ணா. அதெல்லாம் நம்ம தான் காப்பாத்திக்கணும்” என்றான்.

“ஓ... இதுல பரம்பரைய வேற உருவாக்குறீங்களா?” என்றேன்.

இதற்குள் நந்தியம்பாக்கம் வரவும் “எழுந்து கொஞ்சம் முன்னாடி போயிடுங்க’ண்ணா” என்றான். நான்கு இருக்கைகள் தள்ளிச் சென்று நின்றுகொண்டேன். மீஞ்சூர் வந்ததும் ரயில் நின்றது. ஓவென ஐம்பது மாணவர்களும் குரலெழுப்பினர். ஒரு மாணவன் முகத்தில் கைக்குட்டையைக் கட்டிக்கொண்டு பளபளக்கும் இரண்டுமுழ வீச்சரிவாளைக் கையில் பிடித்தபடி ரயில் நிலையத்தில் இறங்கினான். ரயில்பெட்டியில் இருந்த மாணவர்களின் கூக்குரல் வானத்தை எட்டியது. ஓடிச்சென்று வெளியில் எட்டிப் பார்த்தேன். போர்க்களத்தில் நிற்கும் வீரனைப் போல அந்த மாணவன் நின்றுகொண்டிருந்தான். மீஞ்சூர் ரயில் நிலையத்தில் மயான அமைதி. பச்சை விளக்கெரிந்த சிக்னல் கிடைக்கவும் ரயில் மெதுவாகக் கிளம்பியது. ரயில் சிறிதுதூரம் நகர்ந்ததும் தான் வீச்சரிவாளைப் பிடித்துக் கொண்டிருந்த, முகத்தை மறைத்திருந்த மாணவன் ஓடிவந்து ஏறினான். கொஞ்சம் தவறியிருந்தால் ஓடும் ரயிலிலிருந்து மாணவன் வீச்சரிவாளுடன் கீழே விழுந்திருப்பான். அதற்குள் சக நண்பன் அவனுக்குக் கைகொடுத்து ரயில் பெட்டியின் உள்ளிழுத்துப் போட்டான். எனக்கென்னவோ சாகசத் திரைப்படத்தின் உச்சகட்டக் காட்சியைப் போலவே அந்த ஒருசில நிமிடங்கள் இருந்தது. கைக்குட்டையைக் கழட்டியதும் தான் தெரிந்தது. அவன் ரயில் பெட்டியில் முதலில் என்னிடம் பேச்சுக் கொடுத்த மாணவன். கீழே விழ இருந்தவனை உள்ளிழுத்துப் போட்டவன் என்னிடம் இரண்டாவதாக பேச்சுக் கொடுத்த மாணவன். அருகில் சென்று அவர்களிடம் கத்தினேன்:

“படிக்கிற பசங்களா நீங்க...? அசிங்கமா இல்ல...? கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா கீழ விழுந்து செத்திருப்பான் அவன்...!”

“இதெல்லாம் சகஜம்’ண்ணா...” என்றவாறு அவர்கள் என்னைக் கடந்து செல்கையில் “டம்” என்ற மிதமான சப்தம் கேட்டது. யாரோ ரயிலின் மீது கல்லெறிந்து இருக்கிறார்கள். இருவரும் ஓடிச்சென்று மாணவர்களுடன் சேர்ந்து கொண்டார்கள்.

“அந்த போலீஸ் தேவிடியா பையன் தான் மச்சி கல்லெடுத்து அடிச்சான். நான் பார்த்தேண்டா...” என்று ஒருவன் கூறினான். அதற்குமேல் மாணவர்கள் குசுகுசுவென ஏதோ பேசிக் கொண்டார்கள். திடீரென அந்த மாணவர்களுக்குள் சலசலப்புச் சத்தம் கேட்டது. யார்மீதேனும் கல்லடி பட்டு ரத்தம் வழிகிறதோ என்றவாறு எட்டிப் பார்த்தேன். ஒரே கும்பலைச் சேர்ந்த நண்பர்கள் இருவர் ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ள எக்கிக் கொண்டிருந்தனர்.

ஒரு கல்லூரி மாணவனின் அருகில் சென்று கேட்டேன்: “ஏன் அவங்க ரெண்டு பேரும் அடிச்சிக்க டிரை பண்றாங்க...?”

“தேவையே இல்லாம ஒரு ஸ்கூல் பையன எங்க பிரண்டுல ஒருத்தன் அடிச்சிட்டான்னா... அதுக்காகத் தான் இன்னொருத்தன் அடிக்கப் போறான்” என்றான்.

“யார... ஸ்கூல் பையனையா?” என்றேன்.

“அவன்தான் யூனி ஃபார்ம்ல இருக்கான்ல... அப்போ எதுக்கு அந்த ஸ்கூல் பையன தேவையில்லாம அடிச்ச... சின்ன பையன ஏன்டா அடிக்கிற... தேவிடியா பையான்னு கேட்டுட்டான். அதாண்ணா பிரச்சனை... அதெல்லாம் சமாதானம் ஆயிடுவானுங்க... நீங்க போங்க...” என்றான். அதற்குள் பொன்னேரி ரயில் நிலையம் வந்துவிட்டது. ஒரு பதட்டத்துடனே ரயிலைவிட்டு இறங்கினேன். போலவே மாணவர்களில் சிலரும் இறங்கினார்கள். அதில் ஒருவன்: “நான் சின்ன பையன கோவத்துல அடிச்சது தப்புதான். அதுக்காக அந்தண்ணன் என்னை அடிச்சிருந்தாலும் வாங்கிப்பேன். ஆனா தேவிடியா பையன்னு சொன்னது தப்புன்னா... அதான் அவர அடிக்கப் போனேன்.” என்றவாறு ஒருவன் புலம்பிக்கொண்டிருந்தான்.

பச்சை விளக்கு சிக்னல் பளீரெனத் தெரிந்தது. ரயில் மிதமாக நகர்ந்து கண்ணிமைக்கும் நேரத்தில் வேகம் எடுத்தது. பேசிக்கொண்டிருந்த மாணவர்கள் ஓடிச்சென்று குரங்குபோலத் தாவி, காந்தம் போல பெட்டியின் ஓரங்களில் ஒட்டிக்கொண்டு உள்ளே சென்றார்கள். எல்லோருமே கிராமப்புற மாணவர்கள். மரியாதைத் தெரிந்தவர்களாகவும் இருக்கிறார்கள். பொதுமக்களுக்கு எந்த இடையூரையும் ஏற்படுத்தவில்லை. கும்பலில் ஒருவர் தவறாக நடந்தாலும் – அவர்களில் ஒருவரே சகபயணிக்காக ஞாயம் கேட்கிறார். ஆனால், இவர்கள் தான் “கத்தி, கிரிக்கெட் மட்டை, கிரிகெட் ஸ்டம்ப்” என ஆயுதங்களை எடுத்துக்கொண்டு வேறு கல்லூரி மாணவனை அடிக்கச் செல்கிறார்கள். இந்த முரனை என்னென்று சொல்லவது.

பேருந்துகளிலும், ரயில்களிலும் “ரூட்டுத் தல” கலாச்சாரம் பாலியல் நோய் போல பரவிக்கொண்டு வருகிறது. இதனைத் தடுக்க வேண்டியது மிகமிக முக்கியம். உயர்நீதிமன்ற மாணவர்கள் அடித்துக் கொண்டதை வீடியோ படம் எடுத்துப் போட்டதை எல்லோரும் பார்த்திருக்கிறோம் தானே...! திருவள்ளூர் மாவட்ட பெட்டிச் செய்தியில் என்றேனும் ஒருநாள் கீழ்கண்ட விவரங்கள் வரக்கூடும். அன்றைய தினம் என்னை நினைத்துக் கொள்ளுங்கள்: பச்சையப்பன் கல்லூரி மாணவர்களும், மீஞ்சூர் ஜெயின் கல்லூரி மாணவர்களும் ஆயுதங்களுடன் மோதல் – “சில மாணவர்கள் படுகாயம், மருத்துவமனையில் அனுமதி”

இதெல்லாம் ஓர் அபாய எச்சரிக்கை தான். நம் வீட்டு மொட்டுக்கள் – வெளியில் கன்னிகளாக வெடிக்கிறர்கள். வன்முறை நம் வீட்டில் கண்ணுக்குத் தெரியாமலே வளர்ந்து கொண்டிருக்கிறது. என்றேனும் ஒருநாள் குரூரம் நம் வீட்டு வாசலில் வந்து ரத்தக் களரியுடன் நிற்கத்தான் போகிறது. அன்றைய தினம் உணர்வோம் நாம் படிப்பது செய்திகளை அல்ல. சுற்றிலும் நடக்கும் உண்மைச் சம்பவங்களை என்று. பெற்றோர்களும் கல்லூரி நிர்வாகமும் மாணவர்களின் நலனில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையேல் கஷ்டம் தான். மாணவர்களின் ரூட்டுத் தல ரௌடிக் கலாச்சாரம் தொடர்ந்து கொண்டிருக்கும். “கத்தி, வீச்சரிவாள், வன்முறை ஆயுதங்கலென” மாணவர்கள் பொதுமக்களுடன் பயணம் செய்வது பலவிதத்திலும் அபாயம் நிறைந்தது. ரேகிங், ஈவ் டீசிங் போலவே “ரூடுத் தல” கலாச்சாரத்திற்கும் கடுமையான சட்டங்கள் இயற்றினால் நன்றாகத் தான் இருக்கும். பார்க்கலாம் நடக்கிறதா என்று...!

டிஸ்கி: சில மாதங்களுக்கு முன்பு சென்னை மாநகர பேருந்துப் பயணத்தில் கிடைத்த ஓர் அனுபவம்:

மாணவர்களின் ரவுடித்தனம்

No comments:

Post a Comment