Sunday, February 2, 2014

BAPASI-ன் கவனத்திற்கு


பபாசிக்கு கவலையே வேண்டாம். “ஒன்னுக்கு போற எடம் சரியில்ல... கப்பு தாங்கலன்னு...” எதையும் நான் சொல்ல வரல. இந்த மேட்டரே வேற.

புத்தகக் கண்காட்சியில் சேல்ஸ் மேன் வேலையுடன், காலச்சுவடு பதிப்பகம் சார்ந்த சிறு ஆராய்ச்சியும் செய்ததால் எனக்கொரு சந்தேகம் வந்துவிட்டது. “இலக்கிய ஆக்கங்களைப் படிப்பதில் இளைஞர்கள் ஆர்வமுடன் இருக்கிறார்களா?. போலவே, இதர தமிழ்ப் புத்தகங்களையும் படிக்க முன் வருகிறார்களா?” என்பது தான் ஆய்வின் பிரதான நோக்கம். ஆனால் மற்றொரு விதத்தில் எனக்கு மண்டையே வெடித்துவிடும் போலக் கூட இருந்தது. ஏனெனில் பத்து நாட்களில் ஏறக்குறைய 1,000 இளைஞர்களைக் காலச்சுவடு பதிப்பக அரங்கில் சந்தித்துப் பேசியிருக்கிறேன். சாரை சாரையாக இளைஞர்கள் வந்துகொண்டே இருந்தார்கள். அதில் பலரும் முதன் முறையாக புத்தகக் கண்காட்சிக்கு வந்திருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. “முதன்முறையா புத்தகம் வாங்க வரோம் எதாச்சும் புக்ஸ் ரெஃபர் பண்ணுங்களேன்” என்று கேட்டார்கள்.

“இங்க தமிழ் லிட்டரரி புக்ஸ் தான் கெடைக்கும்...” என்று சொல்லியது தான் தாமதம் “அந்த மாதிரி புக்ஸ் தான் தேடிட்டு வந்திருக்கேன்.” என்று பலரும் கூறினார்கள். பொறியியல், மருத்துவம், பொருளியல், கணிதம், ஆராய்ச்சி என பல்துறை மாணவர்களும் இதில் அடக்கம்.

சந்தித்தவர்களில் சுமார் 700 நண்பர்களாவது ஏதேனும் புத்தகத்தை வாங்கிக் கொண்டு தான் சென்றார்கள். எல்லோரும் “டிவி விளம்பரம், டிவி நியூஸ், நாளிதழ் செய்திகள், முகநூல் பகிர்தல்” போன்ற ஏதேனும் ஒன்றைப் பார்த்து வந்தவர்களாகத் தான் இருந்தார்கள். சந்தித்த இளைஞர்களுடன் பேசியதில் – அவர்களுடைய இருப்பிடமானது பெரும்பாலும் சென்னையாகத் தான் இருந்தது. ஒருசிலர் “காஞ்சிபுரம், வேலூர், திருப்பூர், பாண்டிச்சேரி, மதுரை, சேலம், பெங்களூர்” போன்ற இடங்களிலிருந்தும் வந்தவர்களாக இருந்தார்கள். (இவர்கள் எண்ணிக்கையில் மிகக் குறைவு.)

“திருவற்றியூர், கத்திவாக்கம், மீஞ்சூர், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, பழவேற்காடு” போன்ற இடங்களிலிருந்தும், அவ்வளவு ஏன்...! “அம்பத்தூர், ஆவடி, ரெட்டில்ஸ், ஊத்துகோட்டை, திருவள்ளூர்” போன்ற இடங்களிலிருந்தும் யாரேனும் நண்பர்கள் வருகிறார்களா என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தேன். ஒருவரையும் காணவில்லை. மீஞ்சூரிலிருந்து “பொன்தமிழ்” என்ற தரமணி திரைத்துறை மாணவர் வந்திருந்தார். திருவற்றியூரிலிருந்து திரைப்படங்களைப் பற்றி எழுதும் பதிவர் பிரபா வந்திருந்தார். ஆயிரத்தில் இரண்டு பேர் என்பது மிகமிகக் குறைவான விகிதம். ரயில் பயணத்தில் கூட புத்தக சந்தைக்குச் சென்று திரும்பிய ஒருவரையும் பார்க்க முடியவில்லை. “எங்கோ இடிக்கிறதே...!” என்று மண்டையே வெடித்தது. அப்படிப்பட்ட சூழலில் தான் “வேலம்மாள் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, பொன்னேரி”-க்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. சமீபத்தில் ஒருநாள், மதியம் போல உணவு நேரத்தில் அந்த கல்லூரிக்குச் சென்றிருந்தேன். ஆகவே, ஏராளமான மாணவர்கள் அங்குமிங்கும் திரிந்து கொண்டிருந்தார்கள். ஏறக்குறைய ஐம்பது நண்பர்களிடம் பேசினேன். உனக்கென்ன இவ்வளவு அக்கறை என்ற சந்தேகம் வரலாம். புத்தகக் கண்காட்சியின் ஸ்டார் ஸ்பான்சர்களில் “வேலம்மாள் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, பொன்னேரி”-யும் ஒன்று. ஆனந்த விகடன் போலவே, இந்தக் கல்வி நிறுவனத்தின் பேனர்களையும் பெரிது பெரிதாக கண்காட்சியின் பல இடங்களிலும் நீங்கள் பார்த்திருக்கலாம். ஆகவேதான் இந்தக் கேள்விகள்:

“ஒரு ரெண்டு நிமிஷம் உங்கக்கிட்ட பேசலாமா?”

“ம்... சொல்லுங்க...”

“ரெண்டு வாரத்துக்கு முன்னாடி மவுன்ட் ரோடு, நந்தனம் YMCA கிரவுண்டுல சென்னை புக் ஃபேர் நடந்துச்சு... அதப்பத்தி உங்களுக்குத் தெரியுங்களா?” என்றேன். (45 மாணவர்களும் 5 மாணவிகளும் இதில் அடக்கம்)

“ஹூஹூம்... எங்களுக்குத் தெரியாதே...” என்று 43 மாணவர்கள் தெரிவித்தனர். இரண்டு மாணவர்களுக்குத் தெரிந்திருந்தும் கண்காட்சிக்கு அவர்களால் செல்ல முடியவில்லை. தேர்வு இருந்ததால் செல்ல முடியவில்லை என்ற காரணத்தைக் கூறினார்கள். மாணவிகளில் ஒருவருக்குத் தான் கண்காட்சி பற்றிய தகவல் தெரிந்திருந்தது. விடுதியில் தங்கிப் படிப்பதால் அந்தச் சகோதரியால் புத்தகக் கண்காட்சிக்குச் செல்ல முடியவில்லை என்று தெரிவித்தாள். மற்ற நான்கு மாணவிகளும் “புத்தகக் கண்காட்சியைப் பற்றி எங்களுக்கு எந்த ஐடியாவும் இல்லை” என்றார்கள். ஸ்டூடன்ஸ் எப்பவுமே இப்படித்தானே. படிக்கிற விஷயத்துல அவங்களுக்கு ஆர்வம் இருக்காதென்று நீங்கள் நினைக்கலாம். அதற்கடுத்து அவர்களிடம் நான் கேட்ட கேள்வி முக்கியமானது:

“சரி... புத்தகக் கண்காட்சி நடந்தது உங்க கவனத்திற்கு வரல... அப்படி நடக்கறது உங்களுக்குத் தெரிஞ்சிருந்தா விசிட் பண்ணி இருப்பீங்களா?” என்றேன்.

“காலேஜ் டேஸ்ல போக முடியாது.” என்றார்கள்.

“பொங்கல் விடுமுறை நாட்களிலும், சனி ஞாயிறுகளிலும் முழு நாட்கள் புத்தகக் கண்காட்சி நடக்கும். காலை 11 மணியிலிருந்து இரவு 9 மணிவரை. மற்ற நாட்களில் மதியம் இரண்டு மணியிலிருந்து இரவு ஒன்பது மணி வரைக்கும் நடக்கும்” என்றேன். “ஓ எஸ்... லீவ் டேஸ்ன்னா கண்டிப்பா பிரெண்ட்ஸ் கூட விசிட் பண்ணி இருப்போம்.” என்றார்கள்.

“அப்படின்னா... எந்த மாதிரி புக்ஸ் எடுத்து இருப்பீங்க...” என்றேன்.

“அதெப்படி இப்பவே சொல்ல முடியும். அங்க போனா தானே சொல்ல முடியும். எந்த புக் புடிச்சி இருக்குதோ அத வாங்குவோம். சப்ஜெக்ட் புக், ஆங்கில நாவல், தமிழ் புக்ஸ்” என ஏகப்பட்ட பதில்கள் வந்தன. “நாங்க எதுக்கு அங்க போகணும்?” என்ற பதிலும் ஒருசிலரிடமிருந்து வந்தது. ஒருசிலர் என்னை துச்சமாகக் கடந்து சென்றார்கள்.

“புக் ஃபேர் பத்தி - டிவி விளம்பரம், டிவி நியூஸ், பேப்பர் செய்தின்னு எல்லாத்துலையும் போட்டாங்களே நீங்க பாக்கலையா?” என்றேன்.

“இல்லியே... அதுக்கெல்லாம் எங்களுக்கு டயம் இல்ல...” என்ற பதில் தான் பெரும்பாலும் வந்தது. “நியூஸ் எல்லாம் மனுஷன் பார்ப்பானா? அதுக்கு மெகா சீரியல் எவ்வளவோ மேல்” என்ற பதிலும் தான் வந்தது. “காலைல காலேஜுக்கு வந்தா ஈவினிங் தான் வீட்டுக்குப் போறோம். ஏரியா பிரண்ட்ஸ் கூட சேட், சாங்க்ஸ் கேக்குறது, முடிஞ்சா மூவீஸ் பாக்குறதுன்னு ரிலாக்ஸ் பன்றதுக்கே நேரம் சரியா இருக்கும்.” என்றார்கள்.

“அப்போ புக்ஸ் வாங்கினா எப்படி படிப்பீங்க?” என்றேன்.

“டெய்லி பஸ்ல வரும்போதும், போகும்போதும் சப்ஜெக்ட் புக்ஸ் தானே படிக்கிறோம். போர் அடிச்சா மொபைல்ல பாட்டு கேக்குறோம். அதுவும் போர் அடிச்சா வேற புக்ஸ் படிப்போம் இல்ல...” என்ற பதிலும் வந்தது.

இதில் முக்கியமான விஷயம், இந்த மாணவர்கள் கல்வி பயிலும் கல்லூரி தான் புத்தகக் கண்காட்சியின் ஸ்டார் ஸ்பான்சர் என்பதே ஒருவருக்கும் தெரியவில்லை. நான் சொல்லியதை வியப்பாகவே கேட்டுக் கொண்டிருந்தார்கள். வேலம்மாள் கல்வி அறக்கட்டளை ஸ்டார் ஸ்பன்சராக இருக்கும் விஷயத்தை, கல்லூரி அலுவலக நிர்வாகத்தினர் மாணவர்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்லவில்லை. அல்லது தேவையில்லாத விஷயம் என்று கூட நினைத்திருக்கலாம். ஆனால் பபாசி மாணவர்களின் கவனத்திற்குக் கொண்டு செலுமாறு வேண்டுகோள் வைக்கலாம் இல்லையா? ஏனெனில் சென்னையைச் சுற்றிலும் உள்ள இதர வேலம்மாள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஏறக்குறைய 30, 000 மாணவர்களுக்கு மேல் படிப்பார்கள் என்பதற்கு நான் உத்தரவாதம். அண்ணா நகர், முகப்பேர் வேலம்மாள் உயர்நிலைப் பள்ளியில் மட்டும் ஏறக்குறைய 12,000 பள்ளி மாணவர்கள் படிக்கிறார்கள். சூரப்பட்டு, பஞ்ஜெட்டி உயர்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கையைக் கூட்டினால் தலையைச் சுற்றும். சூரப்பட் & பொன்னேரியிலுள்ள வேலம்மாள் கல்லூரிகளில் ஏறக்குறைய 7, 000 மாணவர்கள் படிப்பார்கள்.

இந்த ஒரு கல்லூரியின் நிலைமை இதுவாக இருப்பின் பரவாயில்லை. “மீஞ்சூர் ஜெயின் கல்லூரி, பொன்னேரி உலகநாத நாராயணஸ்வாமி அரசினர் கல்லூரி, கிருஷ்ணாபுரம் ஸ்ரீதேவி கல்லூரி” போன்ற கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் சில மாணவர்களை “பொன்னேரி ரயில் நிலையம், பொன்னேரி பேருந்து நிலையம், பழவேற்காடு பஜார்” போன்ற இடங்களில் சந்தித்துப் பேசினேன். ஒருவருக்கும் புத்தகக் கண்காட்சி நடந்ததைப் பற்றிய எந்தவொரு தகவலும் தெரியவில்லை. சிலமுறை உ.நா அரசு கல்லூரிக்கு நேரிலும் சென்று பல்துறை மாணவர்களையும் சந்தித்தேன்.

“இன்னாது... புத்தகக் கண்காட்சியா...? அப்படியெல்லாம் கூட நடக்குமா...?” என்று மாணவர்கள் வியப்புடன் கேட்டார்கள். எனினும் கண்காட்சிக்குச் சென்று புத்தகம் வாங்குவதிலுமுள்ள ஆர்வத்தையும் தெரியப்படுத்தினார்கள். இதில் பலரும் புனைவு சார்ந்த புத்தகம் வாங்குவதில் ஆர்வமுடனே இருக்கிறார்கள். எனினும், 50 மாணவர்களில் 20 மாணவர்கள், “நாங்க எதுக்கு புக் ஃபேர் போகணும். அதெல்லாம் போக மாட்டோம். லீவ் நாளுன்னா ப்ரண்ட்ஸ் கூட விளையாடுவோம்.” என்றார்கள்.

வடசென்னை மற்றும் நகரத்திற்கு வெளியிலுள்ள கல்லூரிகளில் தான் இந்த நிலைமை இருக்கக்கூடும். சென்னை கல்லூரிகளிலுள்ள மாணவர்கள் படுசுட்டிகள் என்று நீங்கள் நினைக்கலாம். இந்த சந்தேகம் எனக்கும் இருந்தது. ஆகவே “பச்சையப்பன் கல்லூரி, D.G வைஷ்ணவா கல்லூரி, லயோலா கல்லூரி” போன்ற மாணவர்களையும் சந்தித்துப் பேசினேன். ஒருசிலரை “நுங்கம்பாக்கம் ரயில் நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையம், கீழ்பாக்கம் பச்சையப்பன் பேருந்து நிறுத்தம்” போன்ற இடங்களிலும் சந்தித்துப் பேசினேன். மூன்றாவது வருடம் படிக்கும் மாணவர்கள் ஒருசிலருக்கு புத்தகக் கண்காட்சி பற்றி தெரிந்திருந்தது. ஏனெனில் இதற்கு முந்தைய ஆண்டுகளில் பூந்தமல்லி நெடுஞ்சாலையின், பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரிலுள்ள ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் புத்தகக் கண்காட்சி நடந்துள்ளதால் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பயிலும் மாணவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.

லயோலா கல்லூரி மட்டும் புத்தகக் கண்காட்சியைப் பற்றிய குறிப்பையும், கண்காட்சி நடக்கும் இடத்திற்கு செல்லும் வழியையும், பேருந்துத் தடங்களையும் குறிப்பிட்டு காலேஜ் நோட்டிஸ் போர்டில் செய்தி வெளியிட்டிருந்தார்களாம். ஒருசில மாணவர்கள் தெரிவித்தனர். அதையும் கூட பல மாணவர்கள் பார்க்கவில்லை என்பதுதான் வருத்தத்திற்குரியது. “S. A. என்ஜினியரிங் காலேஜ், வேல் டெக் என்ஜினியரிங் காலேஜ்” போன்ற கல்வி நிறுவனங்களில் படிக்கும் ஒருசில மாணவர்களிடமும் பேசினேன். யாருக்குமே எதுவும் தெரியவில்லை.

சரி கல்வி நிறுவனங்களில் தான் இந்த நிலைமை எனில், பொன்னேரி கிளை நூலகத்தில் ஏராளமான இளைஞர்கள் போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்து கொண்டிருப்பார்கள். அவர்களிடமும் அணுகி “புத்தகக் கண்காட்சி” பற்றிய அதே கேள்விகளைக் கேட்டேன். சரிபாதி நபர்களுக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. பபாசி இதையெல்லாம் கருத்தில்கொண்டு ஏதேனும் யுக்தியைக் கையாண்டு “புக் ஃபேர்” பற்றிய விவரங்களை முன்கூட்டியே மாணவர்களிடம் கொண்டு சென்றால் “Actual Audience & Visitors” விகிதத்தை அதிகரிக்கலாமே.

சென்னையைச் சுற்றிலுமுள்ள கல்லூரிகளுக்குக் கண்காட்சி சார்ந்த ஒரு சுற்றறிக்கையை அனுப்பலாம். போலவே, சென்னை நகர்புரதிற்கு வெளியிலுள்ள தலைமை கிளை நூலகங்களுக்கும் ஒரு சுற்றறிக்கையைப் போன்ற A4 SIZE அளவுள்ள சுவரொட்டிக் கூட அனுப்பி வைக்கலாம். மிஞ்சிப் போனால் 25 தலைமை கிளை நூலகங்கள் இருந்தாலும் அதிகம் தான். (சில ஆராய்ச்சி நிறுவனங்களில் மாணவர்களுக்கு புத்தகம் வாங்க வவுச்சர் கொடுப்பார்கள். அதனைப் புத்தகச் சந்தைகளில் அவர்கள் கொடுத்து புத்தகம் வாங்கிக்கொள்ளலாம். டெல்லி போன்ற நகரங்களில் பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த நடைமுறை இருந்தது. சென்னை போன்ற நகரத்தில் உள்ள பெரிய பல்கலைக்கழகங்கள் படிப்பில் சிறந்த மாணவர்களுக்கு இதுபோன்ற சலுகைச் சீட்டைக் கொடுத்து ஊக்குவிக்கலாம்.) எனினும் ஆர்வமுள்ள மாணவர்கள் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது எனில், பபாசி அதனை கவனத்தில் எடுத்துக்கொண்டு – சென்னையைச் சுற்றிலும் சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கல்லூரிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பலாமே. மாணவர்களை புத்தகச் சந்தைக்கு வருமாறு அழைப்பு விடுக்கலாமே. வருவார்களா? இல்லையா? என்பது வேறு விஷயம். புத்தகச் சந்தையைப் பற்றிய விவரம் மாணவர்களுக்குச் சென்று சேர்வதே ஒருவகையில் நல்லது தானே...!

சென்னையைச் சுற்றிலும் ஏறக்குறைய 100 அரசுக் கல்வி நிறுவனங்களும், தனியார் மற்றும் சுயநிதிக் கல்லூரிகளும் இருக்கும். கல்லூரிக்கு இரண்டாயிரம் பேர் என்று வைத்துக் கொண்டாலும் எண்ணிக்கை லட்சங்களில் செல்லும். இதில் 90% சதவீத நபர்கள் டிவி விளம்பரம், செய்திகள், நாளிதழ்களை வாசிக்காதவர்கள். இவர்கள் தான் முக்கியமான ஆடியன்ஸ். “ஜோசியம், சமையல் குறிப்பு, தாம்பத்திய டிப்ஸ்” தவிர்த்த இதர புத்தகங்களை வாங்கக் கூடிய ஆடியன்ஸ் இவர்கள் தான். இவர்களிடம் சினிமா, விளையாட்டு தவிர்த்த மற்ற விஷயங்களைக் கொண்டு சேர்ப்பதில் மிகுந்த சிரமம் இருக்கிறது. எனினும் கொண்டு செல்வதில் தான் சாதுர்யம் இருக்கிறது.

இசைக் கலைஞர்களைப் பற்றி எழுதும் ஷாஜி தனது கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டதாக ஞாபகம். ஷாஜி சோனி கம்பெனியின் ஆடியோ விற்பனைப் பிரதிநிதியாக இருந்தபொழுது ரகுமான் பகர்ந்ததைக் குறிப்பிட்டிருக்கிறார். இசை தயாரிப்பாளர் எ. ஆர். ரகுமான் பின்வருமாறு சொல்லி இருக்கிறார்: “யங் ஆடியஸ் வாங்கனும்னு நெனைக்கறத கண்டிப்பா வாங்கிடுவாங்க. இசை ஆல்பத்த அவங்ககிட்ட எப்படி எடுத்துட்டு போயி சேக்கறதுன்னு பாருங்க”

ரகுமானின் வார்த்தைகள் இசைத் தகட்டிற்கு மட்டுமல்ல. செல்போன், ஐபேட், கூலிங் கிளாஸ், பைக், கார், ரீபாக் ஷூ, அடிடாஸ் ஷர்ட், பார்ன் வீடியோஸ் போலவே புத்தகத்திற்கும் பொருந்தும் என்றே நினைக்கிறேன். பபாசி கவனத்தில் எடுத்துக்கொண்டால் சரி.

2 comments:

  1. உங்களின் ஆர்வமும் இந்த முயற்சியும் கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டியது.

    ReplyDelete
  2. அன்புடையீர்,

    தற்போது படிப்பதற்கு உபயோகப்படும் கருவிகளாக Mobiles மற்றும் பல்வேறு
    கையிருப்புக் கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது.

    இந்நிலையில் நாங்கள் http://www.FreeTamilEbooks.com எனும் வலைதளத்தில்,
    பல்வேறு தமிழ் மின்புத்தகங்களை வெவ்வேறு துறைகளின் கீழ் சேகரிப்பதற்கான
    ஒரு புதிய திட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

    இங்கு சேகரிக்கப்படும் மின்புத்தகங்கள் பல்வேறு கணிணிக் கருவிகளான
    Desktop,ebook readers like kindle, nook, mobiles, tablets with android,
    iOS போன்றவற்றில் படிக்கும் வண்ணம் அமையும். அதாவது இத்தகைய கருவிகள்
    support செய்யும் ebub, mobi, pdf போன்ற வடிவமைப்பில் புத்தகங்கள்
    அமையும்.

    இதற்காக நாங்கள் உங்களது
    வலைதளத்திலிருந்து பதிவுகளை
    பெற விரும்புகிறோம். இதன் மூலம் உங்களது பதிவுகள்
    உலகளவில் இருக்கும் வாசகர்களின் கருவிகளை நேரடியாகச் சென்றடையும்.

    எனவே உங்களது வலைதளத்திலிருந்து பதிவுகளை பிரதியெடுப்பதற்கும் அவற்றை
    மின்புத்தகங்களாக மாற்றுவதற்கும் உங்களது அனுமதியை வேண்டுகிறோம்.

    இவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்களில் கண்டிப்பாக ஆசிரியராக உங்களின்
    பெயரும் மற்றும் உங்களது வலைதள முகவரியும் இடம்பெறும். மேலும் இவை
    "Creative Commons” உரிமத்தின் கீழ் மட்டும்தான் வெளியிடப்படும் எனும்
    உறுதியையும் அளிக்கிறோம்.

    http://creativecommons.org/choose
    இங்கே சென்று, தேவையான உரிமத்தை தெரிவு செய்க.


    கீழ் காணும் பதிவில் உள்ளது போல ஒரு பதிவையும், widget or footer ஐயும்
    சேர்த்து விட்டு எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

    http://blog.ravidreams.net/cc-by-sa-3-0/


    நீங்கள் எங்களை பின்வரும் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம்.

    e-mail : freetamilebooksteam@gmail.com
    9841795468

    எங்களைப் பற்றி : http://freetamilebooks.com/about-the-project/

    Google Group : https://groups.google.com/forum/#!forum/freetamilebooks

    FB : https://www.facebook.com/FreeTamilEbooks

    G +: https://plus.google.com/communities/108817760492177970948

    நன்றி.

    ஸ்ரீனி

    ReplyDelete