Monday, July 15, 2013

சென்னை மாணவர்களின் ரவுடித்தனம்

(வண்டி எண்: TDJ 0014, பதிவு எண் TN – 01, N 9793: 159 A திருவெற்றியூர் to CMBT)



பாரிமுனையில் நண்பர்களுடனான வியாபார அடிப்படையிலான தேநீர் உரையாடலை முடித்துவிட்டு, நண்பர் பிச்சைப்பாத்திரம் சுரேஷ் கண்ணனைச் சந்திக்க மதியம் போல சென்றிருந்தேன். சில நிமிட நேரங்கள்தான் அவருடன் பேச முடிந்தது. அங்கிருந்து கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரிக்குச் செல்வதுதான் என்னுடைய பயணத் திட்டம். பாரிசிலிருந்து 15G சொகுசு பேருந்தில் ஏறி டெய்லர்ஸ் சாலையில் இறங்கினேன். சொகுசுப் பேருந்துகள் பச்சையப்பன் கல்லூரி நிறுத்தத்தில் நிற்காது என்பதால் தான் ஒரு நிறுத்தத்திற்கு முன்பே இறங்கி, வேறொரு பேருந்திற்காகக் காத்திருந்தேன். திருவற்றியூரிலிருந்து கோயம்பேடு நோக்கிச் செல்லும் 159-A தடம் எண் “White Board” பேருந்து உடனே வந்தது. ஒரே ஓட்டமாக ஓடி பேருந்தில் ஏறினேன். சில இளைஞர்கள் பேருந்திலும், சில இளைஞர்கள் படியிலும், சில இளைஞர்கள் பேருந்துக்கு வெளியிலும் நின்றிருந்தனர். பேருந்து மெதுவாக நகர்ந்து வேகம் எடுத்தது. வெளியில் நின்றிருந்த மாணவர்கள் படிக்கட்டில் தொங்கி பயணம் செய்ய ஓடி வந்தார்கள்.

உள்ளே நின்றிருந்த இளைஞர்கள் குரலெழுப்பி ஆரவாரம் செய்தார்கள். பச்சையப்பன் கல்லூரியைப் புகழ்ந்து கானாப் பாடல்களும் பாடிக் கொண்டிருந்தனர்.

“ஏம்பா இப்பிடி பண்றிங்க? விழுந்திங்கன்னா என்ன ஆவறது? உள்ள வாங்க?” என்றார் மத்திய வயதுடைய நடத்துனர் சலிப்பான குரலில். உள்ளே நின்றிருந்த மாணவர்களில் ஒருவன் நடத்துனரின் முகத்தில் அறைந்து கீழே தள்ளினான். அவர் பயணிகள் இருக்கைகளுக்கு இடையிலுள்ள இடைவெளியில் கீழே சரிந்தார். கடைசி இருக்கையில் நான் அமர்ந்திருந்ததால் மாணவர்களின் ரவுடித்தனம் எனக்குத் தெளிவாகத் தெரிந்தது. சுதாரித்து எழுந்து செல்வதற்குள் நான்கு மாணவர்கள் நடத்துனரின் மார்பில் எட்டி எட்டி உதைத்தனர். முன்பக்கத்தில் நின்றிருந்த மாணவர்களும் இந்த அடாவடியில் சேர்ந்துகொண்டனர். ஏறக்குறைய பதினைந்து மாணவர்கள் இருந்தனர். நான்கைந்து பேர் ஒன்றாகச் சேர்ந்து நடத்துனரைத் தாக்கினர். கண்டக்டரின் பணப்பை அவருடைய கக்கத்தில் இருந்தது. இல்லையேல் அவர்கள் காலால் எத்துவதை நடத்துனரால் தடுத்திருக்க முடியும் என்றே நினைக்கிறேன்.

ரவுடி மாணவர்கள் எல்லோருக்கும் 18 - 20 வயதுதான் இருக்கும். நடத்துனருக்கு 35-40 வயதிருக்கும் என்றே நினைக்கிறேன். முகத்திலும், தலையிலும் என்னைக் காட்டிலும் குறைவான நரைமுடிகள் தான் தென்பட்டன. பயணிகள் எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்துவிட்டோம். கடைசி இருக்கையில் அமர்ந்திருந்த நான் எழுந்து நடத்துனரின் அருகில் செல்ல நினைக்கையில், கைக்குழந்தையுடன் அருகில் உட்கார்ந்திருந்த தாயொருத்தி “ஐயையோ பயமா இருக்கு...” என்றவாறு எழுந்து நின்று கொண்டாள். குழந்தைக்கு மிஞ்சிப் போனால் ஒன்றரை வயது காணாது.

அவளுடைய கையை பிடித்து “நீங்க உக்காந்துக்கோங்க...! இந்த எடத்த விட்டு நகராதிங்க...” என்று அவளை சமாதானப்படுத்தி விட்டுத் திரும்பிப் பார்க்கிறேன். சரமாரியாக நடத்துனரை அடித்துக் கொண்டிருந்த இளைஞர்களும், படிக்கட்டில் நின்றுகொண்டிருந்த இளைஞர்களும், பேருந்தின் முன்னால் நின்றுகொண்டிருந்த மாணவர்களும் – அவசர அவசரமாக பேருந்தைவிட்டு இறங்கி ஓடிக்கொண்டிருந்தனர். இதற்குள் வண்டி பச்சையப்பன் கல்லூரியை நெருங்கிவிட்டது. சிலர் பச்சையப்பன் கல்லூரியை ஓட்டினார் போல இருக்கும் பெட்ரோல் பங்கின் பக்கத்தில் செல்லும் நிழற்சாலையிலும், சிலர் பச்சையப்பன் கல்லூரி பேருந்து நிற்கும் இடத்திலுள்ள தகரத் தடுப்பின் இடைவெளி வழியாகவும், சிலர் மதில் சுவரேறியும் கல்லூரிக்குள் நுழைந்து விட்டனர். முன்னால் அமர்ந்திருந்த பெண் ஒருவர் அடி வயிற்றிலிருந்து குரலெடுத்து மாணவர்களுக்கு சாபம் கொடுத்துக் கொண்டிருந்தார். ஆண்கள் இருக்கையில் அமர்ந்திருந்த எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்திருந்தனர். கண்டக்டர் நிராயுத பாணியாக “ஒரு பொது எடத்துல இப்படிப் போட்டு அடிக்கிறாங்க!? ஒருத்தராவது எதாச்சும் கேட்டிங்களா? இங்கிருந்து பஸ்ஸ எடுக்க நான் விடமாட்டேன்” என்று பேசிக்கொண்டே நடந்தவாறு, தனது மொத்தக் கோவத்தையும் ஓட்டுனரிடம் காண்பித்துக் கொண்டிருந்தார். பச்சையப்பன் கல்லூரிக்கு முன்பு எப்பொழுதுமே ஒன்றிரண்டு போலீஸ் பாதுகாப்பில் இருப்பார். இரண்டு நாட்களாக கல்லூரிக்குள் ஏதோ மாணவர்கள் சண்டை என்பதால் அதிகப்படியான போலீசார் காவலுக்கு நின்றிருந்தனர். நான் பேருந்தை விட்டுக் கீழிறங்கி நேராக போலீசாரிடம் சென்றேன். “பேருந்தில் நடந்த களேபரத்தை” விளக்கமாகச் சொல்லிக் கொண்டிருந்தேன்.

“தேவிடியா பசங்க... பஸ்சுல இருக்க பொம்பளைங்கள வச்சி அவனுங்க மூஞ்சியிலையே காறித் துப்பச் சொல்ல வேண்டியது தானே...! தாயோளி மவனுங்க...” என்று சில போலீசார் நான் விளக்கியதைக் கேட்டுத் திட்டிக் கொண்டிருந்தது காதில் கேட்டது.

கண்டக்டர் இறங்கி கல்லூரிக்குள் ஓடினார். அவரின் பின்னாலேயே சில காவலர்களும் ஓடினர். ஒரு பெண் போலீஸ் தான் இன்சார்ஜ் என்றார்கள். அவரிடம் “என்னுடைய பெயர், முகவரி, மொபைல் எண்” – போன்றவற்றைக் கொடுத்து, “எப்போ வேணும்னாலும் கூப்பிடுங்க...! நான் வந்து சாட்சி சொல்றேன்... இந்த காலேஜ் பசங்கதான் கண்டக்டர அடிச்சாங்க...” என்றேன். “நிச்சயமா கூப்பிட்ரேங்க சார்...” என்றார்.

தகவல்கள் கொடுக்கும் பொழுது நானும் பச்சையப்பன் கல்லூரியின் முன்னால் மாணவன் தான் என்றதும் அந்தப் பெண் காவலர் சிரித்தார். எனக்கென்னவோ முகத்தில் காரி உமிழ்ந்தது போலவே இருந்தது.

இதைப் போலவே நீண்ட நாட்களுக்கு முன்பு, கேணி இலக்கிய சந்திப்பு முடிந்து, அறிவு ஜீவி நண்பர்களுடன் வெளியில் நின்று ஒருமுறை பேசிக் கொண்டிருந்தேன். பதின் பருவ இளைஞர்கள் இரண்டு குழுக்களாக ஒருவருடன் ஒருவர் மோதிக் கொண்டனர். ஒருவன் கீழே விழுந்ததில், மண்டையில் நல்ல அடிபட்டு மயக்கு நிலைக்குச் சென்றுவிட்டான். சுற்றிலும் இருந்த எல்லோரும் செய்வதறியாமல் உறைந்துவிடோம். எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் தான் 108-க்குத் தொடர்பு கொண்டு ஆம்புலன்சை வரவழைக்க போராடிக் கொண்டிருந்தார். புரசைவாக்கம் வழியாகச் செல்லும் பேருந்தில் ஒருநாள் பள்ளி மாணவர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து ஒருவரை ஒருவர் காட்டுமிராண்டித் தனமாக அடித்துக் கொண்டனர். இவற்றையெல்லாம் சின்னச் சின்ன சண்டைகள் என கவனிக்காமல் விட்டு விடுகிறோம். அதுதான் பிரச்சனையே.

சென்னைக் கல்லூரி மாணவர்கள் வீச்சருவாலை வைத்துக்கொண்டுச் சுற்றுவதாக சமீபத்தில் நாளேடுகளில் கூட எழுதினார்கள். நானே கூட சில மாணவர்கள் ஆயுதங்களுடன் சுற்றுவதைப் பார்த்திருக்கிறேன். சென்னையைச் சுற்றிலுமுள்ள எல்லா கல்லூரிகளிலும் 20 சதவீத மாணவர்கள் விஷக் கிருமிகளாகத் தான் இருக்கிறார்கள். “வெட்டுவது, குத்துவது, வழிப்பறி, அடிதடி” போன்ற காரியங்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் மாணவர்களாகத் தான் இருக்கிறார்கள். காவல் துறைக்கும் இது தெரிந்தே இருக்கிறது. என்றாலும் மாணவர்களை ஒன்றும் செய்ய முடிவதில்லை. ஏனெனில் அவர்களின் பின்னால் மாணவ சமுதாயமே இருக்கிறது. நல்ல பிள்ளைகளுக்கு துணை நிற்கிறதோ இல்லையோ, தருதலைகளுக்குத் துணை நிற்க இந்தியா முழுவதிலுமுள்ள ஸ்டூடன்ட் ஃபேடரேஷன் அமைப்புகள் தயங்குவதே இல்லை.

நடத்துனரைத் தாக்கிய மாணவர்கள் ஓடி கல்லூரிக்குள் தஞ்சம் அடைந்து விட்டார்கள். (ஏறக்குறைய பதினைந்து மாணவர்கள்) போலீசால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. இத்தனைக்கும் நான் காவலர்களிடம் “ஒரு பையன் பழுப்பு நிற பேண்டும், வெள்ளை சட்டையும் அணிந்திருந்தான். புடிச்சிட்டு வாங்க நான் அடையாளம் சொல்றேன்... இப்போதான் அந்தப் பக்கம் ஓடினான்” என்றேன். ஒட்டகத்தை முழுங்கிய மலைப்பாம்பு போல காவலர்கள் நெளிந்தார்கள். அவர்களைச் சொல்லியும் குற்றம் இல்லை. யதார்த்தம் அவர்களைத் தடுக்கிறது. வேறென்ன செய்ய இயலும்.

இன்று கண்டக்டரை அடித்தார்கள். ஒரு தாய் தனது குழந்தையை அனைத்துக் கொண்டு பயந்து அலறினாள். நாளை மற்றொரு நாள் – இதே இளைஞர்கள் பொது இடத்தில் பெண்களின் கையைப் பிடித்து இழுக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம். பாலியல் பலாத்காரம் செய்ய மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? சென்னை போன்ற மாநகரங்களில் குற்றச் செயல்கள் அதிகம் நடக்கக் காரணம் தறுதலை மாணவர்கள் தான். அவர்களால் தான் மற்ற மாணவர்களின் பெயரும் கெடுகிறது. ரவுடி மாணவர்களுக்குக் கடிவாளம் போட்டாலே பாதி சமூகக் குற்றங்கள் குறைய வாய்பிருக்கிறது.

கண்டக்டருடன், டிரைவரும் கல்லூரிக்குள் சென்று தனது ஆதங்கத்தை போலீசாரிடம் கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தனர். நான் அந்த பெண் காவலரிடம் நடந்ததைக் கூறி குற்றத்தைப் பதிவு செய்ய வேண்டிக் கொண்டிருந்தேன். சாலையின் ஓரத்தில் நின்றிருந்த பிரச்னை நடந்த பேருந்தில் இருந்து யாரும் கீழே இறங்கவில்லை.

“மாணவ சமூகமே...! இலங்கைத் தமிழர்களுக்கு உண்ணாவிரதம் இருந்து ஈழத்தை மீட்கப் போகிறோம்...” என்று புறப்பட்டீர்கள் சரி. பாராட்ட வேண்டிய சமூக அக்கறை தான். “தமிழ் நாட்டுல இருக்க தமிழர்களை எப்போதிருந்து நிம்மதியாக வாழ வாழ விடப் போகிறீர்கள்...!?”

# “கணித மேதை ராமானுஜம்” இங்க தான் படிச்சாரு, “மு. வ” இங்கிட்டுதான் வேலை செஞ்சாரு, “அண்ணா” இங்க தான் படிச்சாரு, “முரசொலி மாறன்” இங்குட்டு தான் நொட்டினாரூ, “வைரமுத்து” இங்க தான் ஒலாவினாரூ என பட்டியலிடும் பச்சையபா’ஸ் முன்னாள் மாணவர்களே... இந்த விஷயத்தையும் பகிருங்கள். இந்தக் கல்லூரியின் லட்சணம் எல்லோருக்கும் தெரிய வேண்டும் இல்லையா?

21 comments:

  1. இதுபோன்ற ரௌடிகள் கட்டாயமாக அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு இரண்டு மூன்று மாதங்கள் சிறைக்கு அனுப்பப்படவேண்டும். இவர்கள் பிடிக்கப்படாவிட்டால் பஸ் கண்டக்டர்கள் வேலை நிறுத்தம்கூடச் செய்யலாம். தவறே இல்லை. வேலையிடத்தில் பாதுகாப்பு, பொது இடத்தில் உள்ள பொதுமக்களுக்குப் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிசெய்ய முடியாத சட்டம் ஒழுங்குக் காவல்துறை நமக்குத் தேவையே இல்லை. சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர் இதுகுறித்துத் தீவிரமான நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    ReplyDelete
  2. நடத்துனரும் சரி, நானும் சரி - சம்பவ இடத்திலேயே குற்றத்தைப் பதிவு செய்யும் படி சொல்லிப் பார்த்தோம். காவல் துறையினர் கொஞ்சம் போலத் தயங்கினார்கள்.

    அடிதடியில் இறங்கிவிட்டு, கல்லூரிக்குள் ஓடித் தப்பிக்கிறார்கள் என்பது மிக மக மோசமான விஷயம் பத்ரி. காவல் துறை இதனை கவனத்தில் எடுத்துக்கொண்டு, ரவுடித் தனம் செய்யும் மாணவர்களை தண்டிக்க வேண்டும் தான்.

    ReplyDelete
    Replies
    1. //அடிதடியில் இறங்கிவிட்டு, கல்லூரிக்குள் ஓடித் தப்பிக்கிறார்கள்// This shows the real face of these institutions. Without strict actions these kind of problems will not be solved. This has to be taken from the basics. Nowadays there are wrong precedents in their mind like students must bunk the class/exam, smoke, drink and travell in footboard etc.. Cinema also a reason for this. These Ideologies must be changed, collages are to educate not to produce criminals. If these people have no wish to study better they can do something else rather than joining collage.

      Delete
  3. Mr. Krishna
    If Police take action, then these folks would make it as a students issue and create further ruckus that could become big law and order situation. This is the reason why police is not trying to take effective measures. Pachaiyappa college should try to identify the students and would punish them severely and blacklist those students so that those students would find difficult to progress in their life. Political parties should not take advantage of this situation. Recently Loyola college students did a political stunt on Elam issue and after a month the issue simply cooled off. Because of those lazy students whole community suffered and exams got delayed for no reason. Students should shun these political aspiring goons who are in the name of students and they should teach lessons to these guys (I'm avoiding bad word here). Its pathetic situation.

    ReplyDelete
  4. மாநிலக் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி இரண்டுமே கேவலமான கல்லூரிகளாக ஆகிவிட்டன. இந்தக் கல்லூரிகளின் முதல்வர்கள் கடுமையான நடவடிக்கை எடுக்கக்கூடியவர்களாக இருக்கவேண்டும். அப்படி இருப்பதாகத் தெரியவில்லை. அரசு ஊழியர்மீதான தாக்குதல் என்பது கடுமையான குற்றச் செயல். அதுவும் காரணமே இல்லாமல், அவர்களுக்கு நன்மையைப் போதித்தார் என்பதற்காக, எச்சரிக்கை ஏதும் தராமல் அடித்து நொறுக்கியுள்ளனர் என்பதைத் தாங்க முடியவில்லை.

    ReplyDelete
  5. இன்றைய நாளேடுகளில் கல்லூரி மாணவர்களுக்கு இடையிலான மோதல் மற்றும் பேருந்தை சேதப்படுத்திய செய்தி விரிவாக வந்துள்ளது. அந்த சம்பவத்தின் 2-4 மணிநேர இடைவெளியில் நடந்த மற்றொரு சம்பவம் தான் இது.

    ரவுடித் தனம் செய்பவர்கள் "கல்லூரி, மாணவர்கள்" என்ற கேடயத்தைப் பயன்படுத்தி - பொது மக்களுக்கும், சமூகத்திறக்கும் எதிராக நடந்து கொள்வது கடுமையாக ஆட்சேபிக்க வேண்டிய ஒன்று.

    ReplyDelete
    Replies
    1. நான் சென்னையில் படித்தவன் அல்ல. ஆனால் சென்னை நடத்துனர்கள் செய்யும் அடாவடிதனத்தைபோல் வேறு எந்த ஊரிலும் இல்லை என்று சொல்லலாம். இதுதான் தீர்வு என்று சொல்லமாட்டேன். மாணவர்களின் கும்பல் ம‌னப்பான்மை இப்படி தீர்வது துரதிஷ்டமே.

      Delete
  6. பெங்களூரில் உள்ளது போல பேருந்துகளுக்கு கதவுகள் போட வேண்டும். கதவை மூடினால்தான் பேருந்தே நகர முடியும் என்று ஆக்க வேண்டும்.

    கல்லூரி வழியில் செல்லும் பேருந்துகளில் முன்னறிவிப்பின்றி காமிரா வைத்து, எந்தெந்த தறுதலைகள் வன்முறையில் ஈடுபடுகின்றன என்பதைக் கண்டுபிடித்து வேறு ஊர் கல்லூரிகளுக்கு அவர்களைத் துரத்தி அடிக்க வேண்டும் (கல்லூரி மாற்றினாலே அறிவு வந்து விடும்).

    ReplyDelete
  7. நான் சென்னையில் படித்தவன் அல்ல. ஆனால் சென்னை நடத்துனர்கள் செய்யும் அடாவடிதனத்தைபோல் வேறு எந்த ஊரிலும் இல்லை என்று சொல்லலாம். இதுதான் தீர்வு என்று சொல்லமாட்டேன். மாணவர்களின் கும்பல் ம‌னப்பான்மை இப்படி தீர்வது துரதிஷ்டமே.

    ReplyDelete
  8. சென்னையில் கூட சொகுசு மற்றும் ஏர் பஸ்சில் நீங்கள் சொல்லும் கண்ணாடிக் கதவுகள் இருக்கிறது. குறைந்த டிக்கட் வசூலிக்கும் பஸ்சில் கண்ணாடிக் கதவுகள் இல்லை. பெரும்பாலான மாணவர்கள் சாதாரண பேருந்தில் தான் பயணிக்கின்றனர்.

    ReplyDelete
  9. //“வெட்டுவது, குத்துவது, வழிப்பறி, அடிதடி” போன்ற காரியங்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் மாணவர்களாகத் தான் இருக்கிறார்கள். காவல் துறைக்கும் இது தெரிந்தே இருக்கிறது. என்றாலும் மாணவர்களை ஒன்றும் செய்ய முடிவதில்லை. ஏனெனில் அவர்களின் பின்னால் மாணவ சமுதாயமே இருக்கிறது. நல்ல பிள்ளைகளுக்கு துணை நிற்கிறதோ இல்லையோ, தருதலைகளுக்குத் துணை நிற்க இந்தியா முழுவதிலுமுள்ள ஸ்டூடன்ட் ஃபேடரேஷன் அமைப்புகள் தயங்குவதே இல்லை.// உண்மை திரு. கிருஷ்ண பிரபு. இம்மாதிரியான புறம்போக்கு நாய்கள் இச்சமுதாயத்தில் வாழவே அருகதையற்றவர்கள்.

    ReplyDelete
  10. கல்லூரி மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டால் கல்லூரிகள் உடன் மூடப்படும் என்றும் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும், கல்லூரி செயல்படாமல் தடை செய்யப்படும் என்றும் சட்டம் வரலாம். அப்போதாவது கல்லூரி முதல்வர்கள் செயல் படுவார்களா பார்ப்போம். மேலும் மாணவர்கள் வேலை வாய்ப்புக்களில், மேல் படிப்புக்களில் தடை செய்யப்படுவார்கள் என்றும் சட்டம் வந்து அது ஒழுங்காக அமல் செய்யப்பட வேண்டும். மிகவும் மோசமான நீயூ யார்க் குற்றங்களை மிகவும் இரும்புக்கரம் கொண்டே அடக்க முடிந்தது. அப்படி செய்த போலீஸ் தலைவர் நாயகராகப் புகழப்பட்டார். அது போல் இந்தும் நடக்க வேண்டும்.

    ReplyDelete
  11. இந்தப் பதிவு அதிர்ச்சி அளித்தது. ஒரு வேளை அந்த ஓட்டுனர் இதய நோய் உள்ளவராக இருந்திருந்தால் ? அவரது குடும்பம் என்ன ஆவது ? மிக சுலபமாகப் பேருந்துகளில் ஒரு காமிரா பொருத்தினால் பல குற்றங்களைத் தடுக்கலாம். இதற்க்கு ஒன்றும் பெரிய செலவு இல்லை. அரசு செய்யுமா?

    ReplyDelete
  12. See 17/07/2013 Dinamalar 5th page......................

    ReplyDelete
  13. See 17/07/2013 Dinamalar 5th Page

    ReplyDelete
  14. நம்முடைய இயலாமையை என்னவென்று சொல்வது...! என்ன உரிமை இல்லை நமக்கு..? இருந்தும் என்ன செய்துவிட முடிகிறது...? இதெல்லாம் மாற்றவேண்டிய இளைய சமுதாயமே இப்படி சீரழித்தால்...! எல்லாவற்றிற்கும் காரணம் யார்...? விடை தெரியா கேள்வி..!

    ReplyDelete
  15. என்னதான் நடக்கிறது...? நம் இளையசமுதாயம் எதை நோக்கி செல்கிறது...? எதிர்காலம் எப்படி இருக்க போகிறது...? விடை யாரிடம்...?

    ReplyDelete
  16. நல்ல பிள்ளைகளுக்கு துணை நிற்கிறதோ இல்லையோ, தருதலைகளுக்குத் துணை நிற்க இந்தியா முழுவதிலுமுள்ள ஸ்டூடன்ட் ஃபேடரேஷன் அமைப்புகள் தயங்குவதே இல்லை.//

    அரசியல்வாதிகளும்.

    ReplyDelete