Wednesday, October 3, 2012

டீனேஜ் வொர்க் ஷாப்


கீர்த்தன்யாவின் நான்கு நாள் விடலைகள் பயிலரங்கிற்கு சென்னையின் பல பகுதிகளிலிருந்தும் – 12  வயது முதல் 17 வயது வரையுள்ள, கிட்டத்தட்ட 35 குழந்தைகள் வந்திருந்தனர். குழந்தைகளை கவனித்துக் கொள்ள அக்காவிடம் பகுதிநேர பயிற்றுனர்கள் (Coach) பலரும் இருக்கிறார்கள். குழந்தைகளைக் கண்காணிக்கும் பணியில் அமர்த்துபவர்களைப் பொறுத்தவரை அக்கா சமரசம் செய்துகொள்ளவே மாட்டாள். பொறுமைசாலிகளாகவும், கோவப் படாதவர்களாகவும், சமயோஜிதமாக நடந்து கொள்பவர்களாகவும் இருக்கவேண்டுமென எதிர் பார்ப்பாள். என்றாலும் சாதுவை அவர்களில் ஒருவராக வைத்துக் கொள்ளுமாறு நேரில் சந்திக்கும் ஒவ்வொரு தருணத்திலும் அக்காவை நச்சரித்துக் கொண்டிருந்தேன். முன்பொருமுறை சாது என்னிடம் பகிர்ந்ததுண்டு...

கிருஷ்ணா! எனக்கு 24 வயசாகுது. இது வரைக்கும் தொடர்ந்து 2 மணி நேரம் கூட ஒரே இடத்தில் உட்கார்ந்ததில்ல. “ஸ்கூல், காலேஜ், சினிமா தியேட்டர்” –ன்னு எல்லாத்துக்கும் இது பொருந்தும்  என்றான்.

சாதுவின் இயல்பைத் தெரிந்துதான் அக்காவிடம் பரிந்துரை செய்திருந்தேன். அக்கா, என்ன நினைத்தாளோ தெரியவில்லை! மறுப்பேதும் சொல்லாமல் சாதுவை எடுத்துக் கொண்டாள். பயிலரங்கின் மூன்றாம் நாளில் சாது மெல்ல என்னிடம் நெருங்கினான். “கிருஷ்ணா! எனக்குக் கடுப்பா இருக்கு! என்ன இங்க கொண்டுட்டு வந்து போட்டு ஏன் டார்ச்சர் பண்றிங்க!? என்னால முடியல!  இதுக்கு மேல ஒரு நிமிஷம் கூட பொருக்க முடியாது... இப்பவே...” என்று நற நறவென தாடைப் பற்களைக் கடிக்கப் போகிறான் என்றுதான் நினைத்தேன்.

மாறாக, “கிருஷ்ணா! ஐ லவ் திஸ் ஜாப்... ஐ லவ் திஸ் கிட்ஸ்” என காதோரம் கிசுகிசுத்துவிட்டு குழந்தைகளுடன் சேர்ந்து ‘Chamak Chalo’ சொல்லியவாறு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டான். வாண்டூஸ்களோ – இடுப்பை ஒடித்து வெட்டியவாறு, கால்களைத் தரையில் உதைத்து, கைகளைக் காற்றில் நீட்டி நடனமாடிக் கொண்டிருந்தனர். ஒருசிலர் கைகளையும், பின்புறத் தோளையும் பற்றி பனைமரம் போல அவனை பாவித்து ஏறிக் கொண்டிருந்தனர்.


வெளியில் நின்றிருந்த அக்காவிடம் “சாது எப்படி? ஓரளவிற்கு பரவாயில்லையா? உனக்கு சரியா இருப்பானா?” என்றவாறு பல கேள்விகளை எழுப்பினேன்.

“டேய் வீணாப்போனவனே!... MindFresh is not a place for me. It’s a perfect place for young kids. அவங்களுக்கு எது சரிப்பட்டு வருதோ – அத வச்சிக்க நான் தயங்கவே மாட்டேன். சாதுவிடம் ரொம்ப ஈஸியா கொழந்தைங்க SET ஆயிட்டாங்க... அதுக்கு மேல நான் முடிவெடுக்க என்ன இருக்கு...” என்றாள் பக்குவமாக. 

ஏழாவது படிக்கும் சிறுவன்/சிறுமி கூட “கீர்த்தன்யா... கீர்த்தன்யா...” என்று உரிமையுடன் ஏலம் போட்டுக்கொண்டு அக்காவைச் சுற்றிவரும் ரகசியம் இதுவாகத்தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். நான் சாதுவைச் சுட்டியவாறு நன்றிப் பெருக்குடன் அக்காவைப் பார்த்தேன். 

“டேய்... டேய்... ஓவர் ஆக்டிங் கொடுக்காத... ஒடம்புக்கு ஆகாது!” என்பதைப் போல நக்கலாகச் சிரித்துவிட்டு, கண்ணாடிக் கதவைத் திறந்துகொண்டு, குளிரூட்டப்பட்ட அறைக்குள் நுழைந்தாள். சக தோழியின் வருகையைக் கண்ட குழந்தைகளின் ஆரவாரக் குரல் ஒரே மூச்சில் வெளிப்பட்டு காதைப் பிளந்தது.

“கவனிக்கிறோம்” நண்பர்களுடனான சந்திப்பு ஏற்பாடாகியிருந்ததால், பட்டறையின் கடைசி நாளன்று குழந்தைகளுடன் பொழுதைக் கழிக்க முடியவில்லை என்பதில் மிகப் பெரிய வருத்தம். பின்னிரவில் சாதுவை செல்பேசியில் அழைத்தேன்.

“அடேய்... வொர்க் ஷாப் நல்லபடியா முடிஞ்சிதா?”

“அதை ஏன் கேக்குறீங்க கிருஷ்ணா!... சில கொழந்தைங்க அழுதுட்டாங்க...” என்றான்.

“ஏன்டா...? என்ன ஆச்சு?”
“Team -யும், Friends -யும் மிஸ் பண்றாங்க இல்ல... அதான்...!” என்றான்.

குழந்தைகளின் உலகம் அலாதியானது. அழுகையையும் சேர்த்துத் தான் சொல்கிறேன்.

:-( 

WebSite: www.mindfresh.in

1 comment:

  1. ரொம்ப அருமையான பதிவுகளை போட்டு இருக்கீங்க வாழ்த்துக்கள் முடிச என்கபக்கமும் வந்து போங்க

    ReplyDelete