Monday, February 10, 2014

பேராசிரியரின் கைகளில் செருப்பு

“மீடியம் சைஸ் லீவிஸ் பிரான்ட் அண்டர்வேர்” கெடைக்கறது குதரக் கொம்பான விஷயம் என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை. ஆகவே, சென்ற வாரத்தின் ஒருநாள் நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையிலிருக்கும் லீவிஸ் ஷோ ரூமுக்கு யதேர்ச்சையாகச் செல்ல நேர்ந்தது. நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் அமைந்துள்ள டி.பி.ஐ அலுவலகத்திலிருந்து நடந்தவாரே லீவிஸ் ஷோ ரூமை அடைந்தேன். சாயம் போன அரதப் பழசான கால்சட்டையும், தையல் பிரிந்த கிழிசல் கண்ட சட்டையும் வேறு அணிந்திருந்தேன். சுமார் இரண்டு கி.மீ தொலைவிருந்தால் அதிகம் தான். 

வேர்த்து விறுவிறுத்தவாறு கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்றதும், முதல் வேலையாக காலணிகளைக் கழட்டி ஓரமாக விட்டுவிட்டு, உள்ளாடை இருந்த ரேக்கிற்குச் சென்று ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். வெள்ளை வெளேரென்றிருந்த ஒருவர் என்னிடம் நெருங்கி பவ்யத்துடன் “சார்... நீங்க செப்பல்ஸ் போட்டுக்கிட்டே பாக்கலாங்க சார்...” என்றார்.

“இல்ல... டிபிஐ-ல இருந்து ரெண்டு, மூணு கிலோமீட்டர் தூரம் நடந்து தான் இங்க வந்திருக்கேன். எதையெல்லாம் மிதிச்சி (எச்சிலும் துப்பலும்) நடந்து இங்க வந்திருக்கேன்னு எனக்கே தெரியல... இவ்வளோ பளபளன்னு வேற மெயிண்டன் பண்றிங்க. மனசு கேக்கல அதான் செருப்ப கழட்டி ஒரு ஓரமாக உட்டுட்டேன்” என்றேன்.

கண்கள் அகல விரிய “ஒஹ்... தேன்ங்க் யூ... தேன்ங்க் யூ சார்...” என்றார் அந்த உருண்டை முகம் கொண்ட வெள்ளை மனிதர். சாயம்போன கால் சட்டையும், கிழிந்த டீ ஷர்ட்டும் அணிந்திருந்த என்னை மட்டுமல்ல – பென்ஸ் காரில் வந்திறங்கி யாரேனும் அந்தக் கடைக்குள் நுழைந்திருந்தாலும் கூட அவர் அப்படித்தான் நடந்துகொண்டிருப்பார்.

பிப்ரவரி 05, 06, 07 ஆகிய மூன்று நாட்களும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிதி நல்கையுடன் – பொன்னேரி “உலகநாத நாராயணசுவாமி அரசினர் கல்லூரியின் தமிழ்த்துறை, “தமிழ்ச் செவ்வியல் மரபில் நெய்தல்நில வாழ்வியல்” என்ற தலைப்பில் மூன்று நாள் தேசிய கருத்தரங்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். எனக்கு மிகப் பிடித்த முனைவர்களான பச்சையப்பன் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவராக இருந்த வளவன், சென்னை பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் வீ. அரசு மற்றும் ஜோ.டி. குரூஸ் ஆகியோரும் பங்கேற்க இருந்ததால் விழாவுக்குச் செல்ல திட்டமிட்டிருந்தேன்.

துவக்க நாளில் சாகித்ய அகாடமி விருதுபெற்ற ஜோ.டி. குரூஸ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று விழாவினை சிறப்பித்தார். மூன்று நாட்களிலும் ஏற்பாடாகியிருந்த பல்வேறு அமர்வுகளில் பேராசிரியர்களும் ஆய்வாளர்களும் கட்டுரையை சமர்ப்பித்து மாணவர்கள் முன்பு, தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்கள். நிறைவு நாளன்று பேராசிரியர் வீ. அரசு கலந்து கொண்டு, சமர்ப்பித்த கட்டுரைகளின் நூல் வடிவத்தை வெளியிடுவதாக இருந்தது. அதற்க்கு முன்பு – இவ்விழாவினை ஒருங்கிணைத்து கருத்தரங்கம் நடைபெறுவதற்குக் காரணமாக இருந்த உதவிப் பேராசிரியர் செல்வகுமார் நன்றியுரை ஆற்றினார்.

இக்கருத்தரங்கு நடைபெறுவதற்கு தமிழ் ஆர்வலரான உ.நா. அரசு கல்லூரி முதல்வர் வீரபத்ரனும், தமிழ்த் துறைத் தலைவர் பொன்முடி சுடரொளியும் காட்டிய ஈடுபாட்டினைச் சுட்டிக்காட்டிய செல்வகுமார், பேராசியர் அரசுவுடனான ஒரு சம்பவத்தையும் பகிர்ந்துகொண்டார். (பெருமாள் முருகன் & வீ. அரசு ஆகியோரின் மாணவர் உதவிப் பேராசிரியர் செல்வகுமார்.)

செல்வகுமார் சொல்கிறார்: இது நடந்தது 1996 –ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். தமிழ்த் துறையில் அப்பொழுது தான் சேர்ந்திருந்த நேரம். கிராமத்திலிருந்து புதிதாகச் சென்னைக்கு வந்திருந்த காலம். ஒருநாள் பேராசிரியர் அரசு ஐயா அவர்கள், பெசன்ட் நகரில் இருந்த அவரது இல்லத்திற்கு எங்களை அழைத்துச் சென்றிருந்தார். கடற்கரை பக்கம் என்பதால் அங்கும் அழைத்துச் சென்றிருந்தார். கடற்கரையைப் பார்த்ததும் பேராசிரியருடன் சென்றிருந்த எங்கள் மூன்று பேருக்கும் மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. கால்களை கடலில் நனைக்க ஆசைப்பட்டு எங்களது செருப்புகளைக் கழட்டி விட்டுவிட்டு முழங்கால் நனைய அலைபுரளும் கடலோரத்தில் உடன் வந்திருந்த ஐயாவை மறந்து சந்தோஷித்திருந்தோம். திடீரென ஞாபகம் வந்து ஐயாவைத் திரும்பிப் பார்த்ததும் அதிர்ந்துவிட்டோம். எங்களது மூன்று பேருடைய செருப்புகளும் ஐயாவின் விரல்களில் தொங்கிக் கொண்டிருந்தது. நாங்கள் பதறி அடித்துக்கொண்டு அவரிடம் ஓடிச்சென்று கேட்டோம்... “என்னங்கையா எங்க செருப்ப நீங்க கையில வச்சிக்குனு இருக்கீங்க...?”

“பின்ன... கடலல செருப்பு எல்லாத்தையும் உள்ள இழுத்துட்டா... பின்னாடி ஓடுறது நமக்கு சிரமம் இல்ல...” என்றாராம் பேராசிரியர் வீ. அரசு. இதுபோன்ற பக்குவப்பட்ட யதார்த்த மனிதர்களைப் பார்ப்பதே அரிதிலும் அரிதுதான். மேற்கூறிய சம்பவங்கள் இரண்டும், ஒரு ஜென் கதையைத் தான் ஞாபகப்படுத்தியது. அகல் வெளியீட்டில் பிரசுரம் கண்ட “ஜென் கதைகள்” தொகுப்பில் இக்கதை உள்ளது.

அலைக்குப் பிறந்த ஞானம்

“ஓ... நான் எவ்வளவு துயரப்படுகிறேன். மற்ற அலைகள் எல்லாம் பிரம்மாண்டமாக இருக்கின்றன. நானோ ரொம்பக் குட்டியாக இருக்கிறேன். சில அலைகள் மிகவும் வலுவாக இருக்கின்றன. நானோ ரொம்பப் பூஞ்சையாக இருக்கிறேன்.” என அலை துயரப்படுகிறது.

“உன் சுயத்தையே நீ இன்னும் பார்க்கவில்லை. அதனால் தான் நீ துயரப் படுகிறாய்.”

“நான் அலை இல்லையா? அப்படியென்றால் வேறென்ன?” என்று அலை கேட்கிறது.

“அலை என்பது உனது தற்காலிக வடிவம். நீ உண்மையில் தண்ணீர்.”

“தண்ணீரா?” என்கிறது அலை.

“உனது அடிப்படையான சாராம்சம் தண்ணீர் என்பதை நீ உணரும் போது, அலையாக இருப்பது குறித்து மனம் குழம்பமாட்டாய். அதோடு, உனது வாட்டமும் போய்விடும்.”

ஜென் தத்துவம் போதிக்கும் இந்த விஷயம் உண்மை தானே நண்பர்களே. ஒவ்வொரு மனிதனும் அறிவாலும் உழைப்பாலும் உச்சத்தை அடைந்தாலும், தலைமைப் பொறுப்பில் இருந்தாலும் – எல்லோரும் சக மனிதர்கள் என்பதை ஒருசிலர் தானே உணர்ந்து வாழ்வினை எளிதாக அமைத்துக் கொள்கிறார்கள். அந்த லீவிஸ் விற்பனைப் பிரதிநிதிக்காவது கஸ்டமர் சாட்டிஸ்ஃபேக்ஷன் என்றொரு நிர்பந்தம் இருக்கிறது. பேராசிரியர் அரசுவுக்கு அதெல்லாம் ஒன்றுமே இல்லை. எனினும் தனது மாணவர்களை சக நண்பர்களாகவும், சக மனிதர்களாகவும் நேசிக்கக் கூடிய பக்குவம் இயல்பிலேயே அவருக்கு இருந்திருக்கிறது போலும். இதுபோன்ற ஆசிரியர்கள் அருகிக்கொண்டே வருகிறார்கள். பதினெட்டு வருடங்களுக்கு முன்னர் நடந்த சம்பவம் என்றாலும், அரசுவின் இந்தச் செயல் மாணவர்கள் எல்லோராலும் கொண்டாடப்பட வேண்டிய ஒன்று. “ஆய்வாளர், எழுத்தாளர், நடக்கக்காரர், விமர்சகர்” என எத்தனையோ காரணங்கள் இருக்கிறது. அவரை நெருங்கிச் சென்று கைகுலுக்க. இதுநாள் வரை அப்படிச் செய்ததில்லை. கருத்திரங்கில் பேசி முடித்து வெளியில் வந்ததும் அரசுவின் அருகில் சென்றேன். “உங்கள சந்திச்சதுல ரொம்ப சந்தோஷங்க அரசு... சென்னை கூட்டங்களில் கடைசி வரிசையில நின்னு, உங்களுடைய பேச்சுக்களைக் கேட்டதுண்டு. எங்க ஊருக்கு வந்து பேசி இருக்கீங்க... ரொம்ப அருமையா பேசுனீங்க... ரொம்ப சந்தோசம்... ரொம்ப சந்தோசம்...” என்று கைகுளுக்கினேன். சிரித்துக்கொண்டே அவரும் கைகளை நீட்டினார்.

எங்களது நான்கு கைகளும் ஒன்றாக சங்கமித்தன. உண்மையில் அவருடைய பேச்சுக்கான கைகுலுக்கல் அல்ல அது. இதுபோன்று ஆயிரம் மேடைகள் கண்டிருப்பார் அவர். எனினும், மாணவர்களின் செருப்பைக் கைகளில் ஏந்திய பேராசிரியரின் விரல்களைத் தொட்டுப்பார்க்கும் சந்தர்ப்பம் இனி வாழ்வில் கிடைக்குமோ என்னவோ! அவருடைய ரேகைகளை என்னுடைய கைகளில் கடத்திக் கொண்டேன்.

பேராசிரியர் வீ அரசுவைக் கொண்டாட வேண்டிய தருணமும் இதுதான். ஏனெனில் இன்னும் சில மாதங்களில் தனது ஆசிரியப் பணியிலிருந்து அரசு ஓய்வு பெறப்போகிறார். அவருக்கு நமது காதலும், நேசமும் உரித்தாகட்டும்.

கோபக்காரன் என்றும் உங்களைச் சொல்கிறார்கள். எனினும் கோபம் இருக்கும் இடத்தில் தானே குணமும் இருக்கும். நீங்கள் அதிசய மனிதர் அரசு. எளிமையான விஷயங்களெல்லாம் என் போன்றவர்களுக்கு அதிசயமாகத் தானே இருக்கிறது.

:-)

Sunday, February 9, 2014

முள்ளும் மலரும் – வேர்களைத் தேடி

ஓர் இதழையும் (புதிய தரிசனம்), ஒரு பதிப்பகத்தையும் (அம்ருதா), ஒரு குறும்பட ஆர்வலரையும் (அருண் தமிழ் ஸ்டுடியோ) – போலவே, “முள்ளும் மலரும்” திரைப்படம் சார்ந்து. 

பழைய வார இதழ்களையும், மாத இதழ்களையும் (அதன் பதிப்பாளர்களால்) புத்தகக் கண்காட்சி போன்ற விழாக்கால நாட்களில் வாசகர்களுக்கு இலவசமாகக் கொடுப்பது வழக்கம் தான். இதெல்லாம் ஒரு மார்கெட்டிங் முறை. அப்படித் தான், கடந்த சென்னை புத்தகக் கண்காட்சியின் ஒருநாள் – கால்போன போக்கில் நடந்து கொண்டிருந்த பொழுது - “புதிய தரிசனம் (பார்வை 1, ஏப்ரல் 16-30, 2013)” என்ற ஃபோர்ட்நைட் இதழ் என்னுடைய கைகளுக்கு வந்து சேர்ந்தது. பக்கங்களைப் புரட்டிக் கொண்டே வந்ததில் ஒரு விஷயம் கண்களில் பட்டது. பக்கம் 29-ல் அருண் தமிழ் ஸ்டுடியோ (ஏப்ரல் 11-ல், 11.16 am) – தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்த “முள்ளும்... மலரும்...” என்ற நிலைத்தகவல் பகிர்வு தான் அது. ஏறக்குறைய ஒன்றரை வருடத்திற்கு முந்திய இதழ் என்றாலும் இப்பொழுதுதானே கைகளுக்குக் கிடைத்தது. ஆகவே, பேச வேண்டியது அவசியமாகிறது.

நிலைத்தகவலின் இரண்டாவது பத்தி எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இயக்குனர் மகேந்திரனின் “முள்ளும் மலரும்” திரைப்படத்தைப் பற்றி அவர் பகிர்ந்திருந்த வரிகள் பின்வருமாறு:

“ஒரு சிறுகதையை, இந்த அளவிற்கு நேர்த்தியாக சிறுகதையில் சில மாற்றங்களோடு, இனி ஒருவரால் எடுக்க முடியும் என்கிற நம்பிக்கை எனக்கில்லை. இத்தனைக்கும் அந்த சிறுகதையை எங்கே மாற்ற வேண்டும் என்று மிக தெளிவாக மகேந்திரன் ஒரு வரையறையை செய்திருக்கிறார். அந்த இடத்தைத் தவிர, வேறு எந்த இடத்தில் அந்த சிறுகதையை மாற்றி இருந்தாலும் இப்படி நான் முள்ளும் மலரும் படத்தை பற்றி நான் பேசிக்கொண்டிருக்க முடியாது.”

இதனினும் ஹாஸ்யக் கூத்து வேறொன்றும் இருக்க முடியாது. “புதிய தரிசனம்” எடிட்டராவது கொஞ்சம் கவனத்து பிரசுரம் செய்திருக்கலாம். “முள்ளும் மலரும்” – அருண் தமிழ் ஸ்டுடியோ நினைப்பது போல “சிறுகதை” அல்ல. தொடராக வெளிவந்து வாசகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற உமா சந்தரனின் தொடர் நாவல். இத்தொடர் பின்னர் புத்தகமாகவும் வெளிவந்துள்ளது. (இவரது இயற்பெயர் பூர்ணம் ராமச்சந்திரன். தனது தாயின் பெயரான “உமா”வை சேர்த்துக்கொண்டு உமா சந்திரன் என்ற பெயரில் எழுதியவர். இந்திய வானொலியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது சகோதரர் பூர்ணம் விஸ்வநாதன் நாடக உலகிலும், திரைப்பட குணசித்திர நடிப்பிலும் கோலோச்சிய பூர்ணம் விஸ்வநாதன் என்பது குறிப்பிடத்தக்கது. உமா சந்திரனின் புதல்வர் தான் ஆர். நடராஜ் I.P.S)

“முள்ளும் மலரும்” கல்கி வெள்ளி விழாப் போட்டியில் நடுவர்கள் அனைவராலும் விருப்பத்துக்குரிய படைப்பு என ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமைக்குரிய நாவல். 1976, ஆகஸ்ட் மாதம் “கல்கி” வெள்ளிவிழா இதழில் தொடங்கி எட்டு மாதங்கள் தொடர்ச்சியாக வெளிவந்த இந்த நாவலை அருணா பப்ளிகேஷன்ஸ் வாயிலாக முதற்பதிப்பும், அதன் பின் 1982-ல் வானதி பதிப்பகத்தின் மூலம் மறுபதிப்பும், 2008-ஆம் ஆண்டு மூன்றாம் பதிப்பாக “அம்ருதா”விலும் பிரசுரம் கண்ட நாவல் என்பதை யூகிக்க முடிகிறது. அந்த காலத்திலேயே ரூபாய் 10, 000 –த்தை பரிசுத் தொகையாகப் பெற்ற நாவல் இது. இந்த விஷயங்கள் எல்லாம் அம்ருதா பதிப்பித்த புத்தகத்தில் உள்ளது. ஆர். நடராஜ் IPS மற்றும் இயக்குனர் மகேந்திரன் எழுதிய முன்னுரைகள் அதே அம்ருதா பதிப்பக வெளியீட்டில் இருக்கின்றது. மகேந்திரனின் முன்னுரையில் “முள்ளும் மலரும்” திரைக்கதையாக உருவான கதையை “நாவல் திரைப்படமானது எப்படி?” என தெளிவாக விளக்கியுள்ளார். அவற்றில் சில: “காளியின் வின்ச் ஆபரேட்டர் உத்தியோகமும், அவனுடைய வித்தியாசமான சுய கெளரவமும் என்னைக் கவர்ந்தன. நாவலில் ‘காளி’யைப் புலி ஒன்று தாக்கி, அவனது ஒரு கை போய்விடும். அந்த அத்தியாயத்தோடு நாவலை மூடி வைத்துவிட்டேன்.”

“பிறகு காளி, அவன் தங்கை வள்ளி, இருவரின் குழந்தைப் பருவம் என்று ஒவ்வொன்றாக புதிது புதிதாய்ச் சேர்த்துக் கொண்டேபோய் திரைக்கதையின் கடைசிக் காட்சி வரை என் விருப்பத்திற்கு ஏற்ற மாதிரி திரைக்கதை எழுதி முடித்துவிட்டேன்.”

“துக்ளக் பத்திரிகையில் சினிமா விமர்சனம் எழுதிவந்த நான் தமிழ்ப் படங்களை எப்படியெல்லாம் விமர்சித்திருக்கிறேன்? நானா இப்போது அதே தவறுகளைச் செய்கிறேன். (கமர்ஷியல் சினிமாவிற்கு வசனம் எழுதுவது.)”

“மறுபடியும் மறுபடியும் என்னைக் கதை வசனம் எழுதச்சொல்லி வற்புறுத்திய படத் தயாரிப்பாளர்களிடம் திடீரென இப்படிச் சொன்னேன்: என்னிடம் கதையே இல்லை... ஏதாவது நாவல்கள் வாங்கி வாருங்கள். எனக்குப் பிடித்த நாவலுக்கு நான் திரைக்கதை வசனம் எழுதித் தருகிறேன். இதுதான் என் முடிவு. அவர்களும் சம்மதித்தார்கள். அப்படி என்னிடம் வந்து சேர்ந்த நாவல்களில் ஒன்றுதான் முள்ளும் மலரும். ஏதோ எனது பர்சனல் டயரியில் அந்தரங்க உணர்வை எழுதி வைத்துக்கொள்ளும் விதமாகத்தான் அந்தற்குத் திரைக்கதை எழுதினேன். எனக்கு நன்றாகத் தெரியும், அந்த திரைக்கதையை எந்தத் தயாரிப்பாளர் கேட்டாலும் படமெடுக்க நிச்சயம் ஒத்துக்கொள்ளமாட்டார். ஏனெனில் தமிழ் சினிமாவின் வழக்கமான ‘மெலோ டிராமா’, அதிக வசனம், ஓவர் ஆக்டிங், டூயட், மாமூல் க்ளைமாக்ஸ் எதுவும் எனது முள்ளும் மலரும் திரைக்கதையில் கிடையாது. வேறு மாதிரிச் சொன்னால் அதுவரை நான் கதை வசனம் எழுதி வெற்றி கண்ட படங்களின் ஃபார்முலா சுத்தமாக இதில் இல்லை.”

பின்னர் முக்தா ஃபிலிம்ஸ் அதிபர் முக்தா சீனிவாசன் இந்த படத்தைத் தயாரிக்க முன்வந்திருக்கிறார். “நான் சொல்லப் போறது அண்ணன் - தங்கச்சி கதை” என்று மகேந்திரன் சொல்லவும், வேறெதையும் கேட்காமல் முக்தா சீனிவாசன் நடையைக் கட்டி இருக்கிறார். பின்னர் ஷூட்டிங் ஸ்பாட் எதற்கும் கூட சீனிவாசன் வரவில்லையாம். வேணு செட்டியார் மற்றும் படத்தின் கேமராமேன் ஒருவருடன் 2000 கிலோமீட்டர்கள் சுற்றி லொகேஷன் பார்த்திருக்கிறார்கள். பின்னர் கேமரா மேன் இந்தப் படத்திலிருந்து விலகிக்கொள்ள, யாரை கேமரா மேனாகப் பயன்படுத்துவது என்று மகேந்திரன் குழம்பி இருக்கிறார். நடிகர் கமல்ஹாசன் தான் பாலுமகேந்திராவை மகேந்திரனுக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். பின்னர் இளையராஜா இந்தக் கூட்டணியுடன் சேர்ந்துகொள்ள மகேந்திரனுக்கு நம்பிக்கை பிறந்திருக்கிறது. பின்னர், ஒருநாள் படத்தைப் பார்த்த தயாரிப்பாளர் குழு “என் தலையில இடிய எறக்கிட்டையே... படம் தேறாது” என்று சொல்லி இருகிறார்கள். அதுபோலவே இரண்டு வாரங்கள் டென்ட் கொட்டாய்களிலும், டூரிங் டாக்கீஸ்களிலும் கூட்டமே இல்லையாம். மூன்றாவது வாரத்திலிருந்து திரைப்படத்தைக் காண வந்த கூட்டம் அலைமோதியதாம். பின்னர் மகேந்திரனைத் தேடிவந்த தயாரிப்பாளர் ஒரு பிளாங்க் செக்கை நீட்டி “உனக்கு எவ்வளவு வேணுமோ ஃபில் பண்ணிக்கோ என்று நீட்டினாராம்.”

“இந்தப் படத்தை நீங்க தயாரிச்சதே. கோடி ரூபாய்க்கு சமம்” என்றாராம் இயக்குனர் மகேந்திரன்.

இந்த எல்லா விஷயங்களும் அம்ருதா வெளியிட்ட புத்தகத்தின் முன்னுரையில் தெளிவாக இருக்கிறது. அப்படியிருக்க ஆதாரமில்லாத தகவலை – அதாவது “முள்ளும் மலரும்” சிறுகதை, திரைப்படமாக ஆக்கப்பட்டது என அருண் தமிழ் ஸ்டுடியோ எப்படி எழுதினர் என்பது எனக்கு இன்னும் கூட விளங்கவில்லை!. இந்த விஷயத்தை அருமை நண்பர் அருணின் கவனத்திற்கு நண்பர்கள் எடுத்துச் சென்றால் மகிழ்வேன். (ஒருவேளை புதிய தரிசனம் பிழையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்திருந்ததற்கு, அதற்கடுத்த இதழில் வருத்தத்தையும் பதிவு செய்திருக்கலாம்.)

போகட்டும், இனி அம்ருதாவின் “முள்ளும் மலரும்” பதிப்புக்கு வருவோம். முதற்பதிப்பு 1967, முறையே 1976, 1982, 2008 ஆகிய ஆண்டுகளில் அடுத்தடுத்த பதிப்புகள் வெளிவந்துள்ளதென குறிப்பிட்டிருக்கிறார்கள். “இதயத்திலிருந்து...” என்ற முன்னுரையில் ஆர். நடராஜ், இ. கா. ப: “முள்ளும் மலரும் - முதலில் வானதி பதிப்பகம், திருநாவுக்கரசு அவர்களால், 1982-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது” என்கிறார். உமா சந்திரன் “நன்றி” என்ற பின்னுரையில் “1976 ஆகஸ்ட் மாதம் கல்கி வெள்ளி விழா இதழில் தொடங்கி எட்டு மாதங்கள் தொடர்ச்சியாக வெளிவந்த இந்த நாவல் அருணா பப்ளிகேஷன்ஸ் வாயிலாக முதற்பதிப்பு வெளியானது” என்கிறார். 

தலையைச் சுற்றுகிறாதா... “1976 ஆகஸ்டில் வெளிவந்த தொடருக்கு, 1967-ல் முதற்பதிப்பு வந்தது எனில் யாருக்குத் தான் தலையைச் சுற்றத்து! ப்ரூஃப் பார்த்தவர்களின் கவனக் குறைவாக இருக்குமோ என்ற ஐயம் எழுகிறது. அம்ருதா பதிப்பகம் இதனை கவனத்தில் எடுத்துக் கொண்டால் மகிழ்வேன். (மறுபதிப்பு வந்ததா என்று தெரியவில்லை. அப்படி வந்தால் இந்த முரண்கள் களையப்பட வேண்டும் என்ற உந்துதலில் தான் கோடிட்டுக் காண்பிக்கிறேன்.)

மற்றபடி அருணுக்குச் சொல்ல என்ன மிச்சம் இருக்கிறது? அவர் வழி தனி வழி. ஆதாரத்துடன் ஒரு விஷயத்தைச் சுட்டிக் காட்டினால், நண்பர்கள் வட்டத்திலிருந்து நீக்கிவிடுவர். அவருடைய கவனத்திற்கு இந்த விஷயங்களெல்லாம் சென்றால் மகிழ்ச்சி தான்.

நேற்றைய ரயில் பயணத்தில் நண்பர் பிரபாகரன் தவசிமுத்துவை சந்திக்க நேர்ந்தது. அவர் பகிர்ந்த விஷயம் எனக்கு ஏற்றுக்கொள்ளும் படியாக இருந்தது.

“கிருஷ்ணா, ஒரு விஷயம் தனக்குப் பிடித்திருந்தால், அந்த விஷயத்தை பிரம்மப் பிரயத்தனம் செய்தாவது உலகின் மிகச் சிறந்த ஓர் ஆக்கம், நோபலுக்கு நிகர், ஆஸ்காருக்கு ஈக்குவல், கேன்சைவிட கெத்து என்று நிறுவும் வேலையை தற்கால எழுத்தாளர்களும், முகநூல் டெம்ப்லேட் ரைட்டர்களும் ஹயக்கமின்றி செய்கிறார்கள்” என்றார்.

எனக்கும் பிரபாவின் கருத்து ஏற்புடையதாகத் தான் இருந்தது. கணிதத்தில் X, Y, Z, P, Q, R, A, B, C ஆல்ஃபா, பீட்டா, காமா, தீட்டா, டெல்டா என்பது போன்ற பல குறியீட்டு எழுத்துக்களையும் எடுத்துக்கொண்டு கணித சூத்திரங்களை நிரூபணம் செய்வோம். அதுபோலத் தான் தற்கால சினிமா கருத்துப் பகிர்தல்கள், வியந்தோதல்கள் மற்றும் விமர்சனங்களில் “குறியீடுகள்” என்ற வார்த்தை அதிகம் பயன்படுத்தப் படுகிறதோ என்ற எண்ணம் எழுவதைத் தவிர்க்க முடிவதில்லை.

கடைசியாக, அருண் தமிழ் ஸ்டுடியோ பின்வருமாறு முடித்திருந்தார்: “முள்ளும் மலரும் படத்திற்கு நான் ஏதாவது செய்தாக வேண்டும் என்ற நினைப்பே, என்னுடைய எல்லா கவலைகளையும் தாண்டி, இப்போதைக்கு என் மனதில் ஓடிக்கொண்டிருகிறது.”

நண்பர் செய்ய வேண்டிய விஷயங்களில் கொஞ்சம் போல கவனம் எடுத்துக் கொண்டு செய்தால் நல்லது. இல்லையேல் காற்றில் பரவும் கிருமி போல தவறான தகவல்கள் பரவும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.

Sunday, February 2, 2014

BAPASI-ன் கவனத்திற்கு


பபாசிக்கு கவலையே வேண்டாம். “ஒன்னுக்கு போற எடம் சரியில்ல... கப்பு தாங்கலன்னு...” எதையும் நான் சொல்ல வரல. இந்த மேட்டரே வேற.

புத்தகக் கண்காட்சியில் சேல்ஸ் மேன் வேலையுடன், காலச்சுவடு பதிப்பகம் சார்ந்த சிறு ஆராய்ச்சியும் செய்ததால் எனக்கொரு சந்தேகம் வந்துவிட்டது. “இலக்கிய ஆக்கங்களைப் படிப்பதில் இளைஞர்கள் ஆர்வமுடன் இருக்கிறார்களா?. போலவே, இதர தமிழ்ப் புத்தகங்களையும் படிக்க முன் வருகிறார்களா?” என்பது தான் ஆய்வின் பிரதான நோக்கம். ஆனால் மற்றொரு விதத்தில் எனக்கு மண்டையே வெடித்துவிடும் போலக் கூட இருந்தது. ஏனெனில் பத்து நாட்களில் ஏறக்குறைய 1,000 இளைஞர்களைக் காலச்சுவடு பதிப்பக அரங்கில் சந்தித்துப் பேசியிருக்கிறேன். சாரை சாரையாக இளைஞர்கள் வந்துகொண்டே இருந்தார்கள். அதில் பலரும் முதன் முறையாக புத்தகக் கண்காட்சிக்கு வந்திருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. “முதன்முறையா புத்தகம் வாங்க வரோம் எதாச்சும் புக்ஸ் ரெஃபர் பண்ணுங்களேன்” என்று கேட்டார்கள்.

“இங்க தமிழ் லிட்டரரி புக்ஸ் தான் கெடைக்கும்...” என்று சொல்லியது தான் தாமதம் “அந்த மாதிரி புக்ஸ் தான் தேடிட்டு வந்திருக்கேன்.” என்று பலரும் கூறினார்கள். பொறியியல், மருத்துவம், பொருளியல், கணிதம், ஆராய்ச்சி என பல்துறை மாணவர்களும் இதில் அடக்கம்.

சந்தித்தவர்களில் சுமார் 700 நண்பர்களாவது ஏதேனும் புத்தகத்தை வாங்கிக் கொண்டு தான் சென்றார்கள். எல்லோரும் “டிவி விளம்பரம், டிவி நியூஸ், நாளிதழ் செய்திகள், முகநூல் பகிர்தல்” போன்ற ஏதேனும் ஒன்றைப் பார்த்து வந்தவர்களாகத் தான் இருந்தார்கள். சந்தித்த இளைஞர்களுடன் பேசியதில் – அவர்களுடைய இருப்பிடமானது பெரும்பாலும் சென்னையாகத் தான் இருந்தது. ஒருசிலர் “காஞ்சிபுரம், வேலூர், திருப்பூர், பாண்டிச்சேரி, மதுரை, சேலம், பெங்களூர்” போன்ற இடங்களிலிருந்தும் வந்தவர்களாக இருந்தார்கள். (இவர்கள் எண்ணிக்கையில் மிகக் குறைவு.)

“திருவற்றியூர், கத்திவாக்கம், மீஞ்சூர், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, பழவேற்காடு” போன்ற இடங்களிலிருந்தும், அவ்வளவு ஏன்...! “அம்பத்தூர், ஆவடி, ரெட்டில்ஸ், ஊத்துகோட்டை, திருவள்ளூர்” போன்ற இடங்களிலிருந்தும் யாரேனும் நண்பர்கள் வருகிறார்களா என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தேன். ஒருவரையும் காணவில்லை. மீஞ்சூரிலிருந்து “பொன்தமிழ்” என்ற தரமணி திரைத்துறை மாணவர் வந்திருந்தார். திருவற்றியூரிலிருந்து திரைப்படங்களைப் பற்றி எழுதும் பதிவர் பிரபா வந்திருந்தார். ஆயிரத்தில் இரண்டு பேர் என்பது மிகமிகக் குறைவான விகிதம். ரயில் பயணத்தில் கூட புத்தக சந்தைக்குச் சென்று திரும்பிய ஒருவரையும் பார்க்க முடியவில்லை. “எங்கோ இடிக்கிறதே...!” என்று மண்டையே வெடித்தது. அப்படிப்பட்ட சூழலில் தான் “வேலம்மாள் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, பொன்னேரி”-க்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. சமீபத்தில் ஒருநாள், மதியம் போல உணவு நேரத்தில் அந்த கல்லூரிக்குச் சென்றிருந்தேன். ஆகவே, ஏராளமான மாணவர்கள் அங்குமிங்கும் திரிந்து கொண்டிருந்தார்கள். ஏறக்குறைய ஐம்பது நண்பர்களிடம் பேசினேன். உனக்கென்ன இவ்வளவு அக்கறை என்ற சந்தேகம் வரலாம். புத்தகக் கண்காட்சியின் ஸ்டார் ஸ்பான்சர்களில் “வேலம்மாள் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, பொன்னேரி”-யும் ஒன்று. ஆனந்த விகடன் போலவே, இந்தக் கல்வி நிறுவனத்தின் பேனர்களையும் பெரிது பெரிதாக கண்காட்சியின் பல இடங்களிலும் நீங்கள் பார்த்திருக்கலாம். ஆகவேதான் இந்தக் கேள்விகள்:

“ஒரு ரெண்டு நிமிஷம் உங்கக்கிட்ட பேசலாமா?”

“ம்... சொல்லுங்க...”

“ரெண்டு வாரத்துக்கு முன்னாடி மவுன்ட் ரோடு, நந்தனம் YMCA கிரவுண்டுல சென்னை புக் ஃபேர் நடந்துச்சு... அதப்பத்தி உங்களுக்குத் தெரியுங்களா?” என்றேன். (45 மாணவர்களும் 5 மாணவிகளும் இதில் அடக்கம்)

“ஹூஹூம்... எங்களுக்குத் தெரியாதே...” என்று 43 மாணவர்கள் தெரிவித்தனர். இரண்டு மாணவர்களுக்குத் தெரிந்திருந்தும் கண்காட்சிக்கு அவர்களால் செல்ல முடியவில்லை. தேர்வு இருந்ததால் செல்ல முடியவில்லை என்ற காரணத்தைக் கூறினார்கள். மாணவிகளில் ஒருவருக்குத் தான் கண்காட்சி பற்றிய தகவல் தெரிந்திருந்தது. விடுதியில் தங்கிப் படிப்பதால் அந்தச் சகோதரியால் புத்தகக் கண்காட்சிக்குச் செல்ல முடியவில்லை என்று தெரிவித்தாள். மற்ற நான்கு மாணவிகளும் “புத்தகக் கண்காட்சியைப் பற்றி எங்களுக்கு எந்த ஐடியாவும் இல்லை” என்றார்கள். ஸ்டூடன்ஸ் எப்பவுமே இப்படித்தானே. படிக்கிற விஷயத்துல அவங்களுக்கு ஆர்வம் இருக்காதென்று நீங்கள் நினைக்கலாம். அதற்கடுத்து அவர்களிடம் நான் கேட்ட கேள்வி முக்கியமானது:

“சரி... புத்தகக் கண்காட்சி நடந்தது உங்க கவனத்திற்கு வரல... அப்படி நடக்கறது உங்களுக்குத் தெரிஞ்சிருந்தா விசிட் பண்ணி இருப்பீங்களா?” என்றேன்.

“காலேஜ் டேஸ்ல போக முடியாது.” என்றார்கள்.

“பொங்கல் விடுமுறை நாட்களிலும், சனி ஞாயிறுகளிலும் முழு நாட்கள் புத்தகக் கண்காட்சி நடக்கும். காலை 11 மணியிலிருந்து இரவு 9 மணிவரை. மற்ற நாட்களில் மதியம் இரண்டு மணியிலிருந்து இரவு ஒன்பது மணி வரைக்கும் நடக்கும்” என்றேன். “ஓ எஸ்... லீவ் டேஸ்ன்னா கண்டிப்பா பிரெண்ட்ஸ் கூட விசிட் பண்ணி இருப்போம்.” என்றார்கள்.

“அப்படின்னா... எந்த மாதிரி புக்ஸ் எடுத்து இருப்பீங்க...” என்றேன்.

“அதெப்படி இப்பவே சொல்ல முடியும். அங்க போனா தானே சொல்ல முடியும். எந்த புக் புடிச்சி இருக்குதோ அத வாங்குவோம். சப்ஜெக்ட் புக், ஆங்கில நாவல், தமிழ் புக்ஸ்” என ஏகப்பட்ட பதில்கள் வந்தன. “நாங்க எதுக்கு அங்க போகணும்?” என்ற பதிலும் ஒருசிலரிடமிருந்து வந்தது. ஒருசிலர் என்னை துச்சமாகக் கடந்து சென்றார்கள்.

“புக் ஃபேர் பத்தி - டிவி விளம்பரம், டிவி நியூஸ், பேப்பர் செய்தின்னு எல்லாத்துலையும் போட்டாங்களே நீங்க பாக்கலையா?” என்றேன்.

“இல்லியே... அதுக்கெல்லாம் எங்களுக்கு டயம் இல்ல...” என்ற பதில் தான் பெரும்பாலும் வந்தது. “நியூஸ் எல்லாம் மனுஷன் பார்ப்பானா? அதுக்கு மெகா சீரியல் எவ்வளவோ மேல்” என்ற பதிலும் தான் வந்தது. “காலைல காலேஜுக்கு வந்தா ஈவினிங் தான் வீட்டுக்குப் போறோம். ஏரியா பிரண்ட்ஸ் கூட சேட், சாங்க்ஸ் கேக்குறது, முடிஞ்சா மூவீஸ் பாக்குறதுன்னு ரிலாக்ஸ் பன்றதுக்கே நேரம் சரியா இருக்கும்.” என்றார்கள்.

“அப்போ புக்ஸ் வாங்கினா எப்படி படிப்பீங்க?” என்றேன்.

“டெய்லி பஸ்ல வரும்போதும், போகும்போதும் சப்ஜெக்ட் புக்ஸ் தானே படிக்கிறோம். போர் அடிச்சா மொபைல்ல பாட்டு கேக்குறோம். அதுவும் போர் அடிச்சா வேற புக்ஸ் படிப்போம் இல்ல...” என்ற பதிலும் வந்தது.

இதில் முக்கியமான விஷயம், இந்த மாணவர்கள் கல்வி பயிலும் கல்லூரி தான் புத்தகக் கண்காட்சியின் ஸ்டார் ஸ்பான்சர் என்பதே ஒருவருக்கும் தெரியவில்லை. நான் சொல்லியதை வியப்பாகவே கேட்டுக் கொண்டிருந்தார்கள். வேலம்மாள் கல்வி அறக்கட்டளை ஸ்டார் ஸ்பன்சராக இருக்கும் விஷயத்தை, கல்லூரி அலுவலக நிர்வாகத்தினர் மாணவர்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்லவில்லை. அல்லது தேவையில்லாத விஷயம் என்று கூட நினைத்திருக்கலாம். ஆனால் பபாசி மாணவர்களின் கவனத்திற்குக் கொண்டு செலுமாறு வேண்டுகோள் வைக்கலாம் இல்லையா? ஏனெனில் சென்னையைச் சுற்றிலும் உள்ள இதர வேலம்மாள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ஏறக்குறைய 30, 000 மாணவர்களுக்கு மேல் படிப்பார்கள் என்பதற்கு நான் உத்தரவாதம். அண்ணா நகர், முகப்பேர் வேலம்மாள் உயர்நிலைப் பள்ளியில் மட்டும் ஏறக்குறைய 12,000 பள்ளி மாணவர்கள் படிக்கிறார்கள். சூரப்பட்டு, பஞ்ஜெட்டி உயர்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கையைக் கூட்டினால் தலையைச் சுற்றும். சூரப்பட் & பொன்னேரியிலுள்ள வேலம்மாள் கல்லூரிகளில் ஏறக்குறைய 7, 000 மாணவர்கள் படிப்பார்கள்.

இந்த ஒரு கல்லூரியின் நிலைமை இதுவாக இருப்பின் பரவாயில்லை. “மீஞ்சூர் ஜெயின் கல்லூரி, பொன்னேரி உலகநாத நாராயணஸ்வாமி அரசினர் கல்லூரி, கிருஷ்ணாபுரம் ஸ்ரீதேவி கல்லூரி” போன்ற கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் சில மாணவர்களை “பொன்னேரி ரயில் நிலையம், பொன்னேரி பேருந்து நிலையம், பழவேற்காடு பஜார்” போன்ற இடங்களில் சந்தித்துப் பேசினேன். ஒருவருக்கும் புத்தகக் கண்காட்சி நடந்ததைப் பற்றிய எந்தவொரு தகவலும் தெரியவில்லை. சிலமுறை உ.நா அரசு கல்லூரிக்கு நேரிலும் சென்று பல்துறை மாணவர்களையும் சந்தித்தேன்.

“இன்னாது... புத்தகக் கண்காட்சியா...? அப்படியெல்லாம் கூட நடக்குமா...?” என்று மாணவர்கள் வியப்புடன் கேட்டார்கள். எனினும் கண்காட்சிக்குச் சென்று புத்தகம் வாங்குவதிலுமுள்ள ஆர்வத்தையும் தெரியப்படுத்தினார்கள். இதில் பலரும் புனைவு சார்ந்த புத்தகம் வாங்குவதில் ஆர்வமுடனே இருக்கிறார்கள். எனினும், 50 மாணவர்களில் 20 மாணவர்கள், “நாங்க எதுக்கு புக் ஃபேர் போகணும். அதெல்லாம் போக மாட்டோம். லீவ் நாளுன்னா ப்ரண்ட்ஸ் கூட விளையாடுவோம்.” என்றார்கள்.

வடசென்னை மற்றும் நகரத்திற்கு வெளியிலுள்ள கல்லூரிகளில் தான் இந்த நிலைமை இருக்கக்கூடும். சென்னை கல்லூரிகளிலுள்ள மாணவர்கள் படுசுட்டிகள் என்று நீங்கள் நினைக்கலாம். இந்த சந்தேகம் எனக்கும் இருந்தது. ஆகவே “பச்சையப்பன் கல்லூரி, D.G வைஷ்ணவா கல்லூரி, லயோலா கல்லூரி” போன்ற மாணவர்களையும் சந்தித்துப் பேசினேன். ஒருசிலரை “நுங்கம்பாக்கம் ரயில் நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையம், கீழ்பாக்கம் பச்சையப்பன் பேருந்து நிறுத்தம்” போன்ற இடங்களிலும் சந்தித்துப் பேசினேன். மூன்றாவது வருடம் படிக்கும் மாணவர்கள் ஒருசிலருக்கு புத்தகக் கண்காட்சி பற்றி தெரிந்திருந்தது. ஏனெனில் இதற்கு முந்தைய ஆண்டுகளில் பூந்தமல்லி நெடுஞ்சாலையின், பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரிலுள்ள ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் புத்தகக் கண்காட்சி நடந்துள்ளதால் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பயிலும் மாணவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.

லயோலா கல்லூரி மட்டும் புத்தகக் கண்காட்சியைப் பற்றிய குறிப்பையும், கண்காட்சி நடக்கும் இடத்திற்கு செல்லும் வழியையும், பேருந்துத் தடங்களையும் குறிப்பிட்டு காலேஜ் நோட்டிஸ் போர்டில் செய்தி வெளியிட்டிருந்தார்களாம். ஒருசில மாணவர்கள் தெரிவித்தனர். அதையும் கூட பல மாணவர்கள் பார்க்கவில்லை என்பதுதான் வருத்தத்திற்குரியது. “S. A. என்ஜினியரிங் காலேஜ், வேல் டெக் என்ஜினியரிங் காலேஜ்” போன்ற கல்வி நிறுவனங்களில் படிக்கும் ஒருசில மாணவர்களிடமும் பேசினேன். யாருக்குமே எதுவும் தெரியவில்லை.

சரி கல்வி நிறுவனங்களில் தான் இந்த நிலைமை எனில், பொன்னேரி கிளை நூலகத்தில் ஏராளமான இளைஞர்கள் போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்து கொண்டிருப்பார்கள். அவர்களிடமும் அணுகி “புத்தகக் கண்காட்சி” பற்றிய அதே கேள்விகளைக் கேட்டேன். சரிபாதி நபர்களுக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. பபாசி இதையெல்லாம் கருத்தில்கொண்டு ஏதேனும் யுக்தியைக் கையாண்டு “புக் ஃபேர்” பற்றிய விவரங்களை முன்கூட்டியே மாணவர்களிடம் கொண்டு சென்றால் “Actual Audience & Visitors” விகிதத்தை அதிகரிக்கலாமே.

சென்னையைச் சுற்றிலுமுள்ள கல்லூரிகளுக்குக் கண்காட்சி சார்ந்த ஒரு சுற்றறிக்கையை அனுப்பலாம். போலவே, சென்னை நகர்புரதிற்கு வெளியிலுள்ள தலைமை கிளை நூலகங்களுக்கும் ஒரு சுற்றறிக்கையைப் போன்ற A4 SIZE அளவுள்ள சுவரொட்டிக் கூட அனுப்பி வைக்கலாம். மிஞ்சிப் போனால் 25 தலைமை கிளை நூலகங்கள் இருந்தாலும் அதிகம் தான். (சில ஆராய்ச்சி நிறுவனங்களில் மாணவர்களுக்கு புத்தகம் வாங்க வவுச்சர் கொடுப்பார்கள். அதனைப் புத்தகச் சந்தைகளில் அவர்கள் கொடுத்து புத்தகம் வாங்கிக்கொள்ளலாம். டெல்லி போன்ற நகரங்களில் பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த நடைமுறை இருந்தது. சென்னை போன்ற நகரத்தில் உள்ள பெரிய பல்கலைக்கழகங்கள் படிப்பில் சிறந்த மாணவர்களுக்கு இதுபோன்ற சலுகைச் சீட்டைக் கொடுத்து ஊக்குவிக்கலாம்.) எனினும் ஆர்வமுள்ள மாணவர்கள் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது எனில், பபாசி அதனை கவனத்தில் எடுத்துக்கொண்டு – சென்னையைச் சுற்றிலும் சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கல்லூரிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பலாமே. மாணவர்களை புத்தகச் சந்தைக்கு வருமாறு அழைப்பு விடுக்கலாமே. வருவார்களா? இல்லையா? என்பது வேறு விஷயம். புத்தகச் சந்தையைப் பற்றிய விவரம் மாணவர்களுக்குச் சென்று சேர்வதே ஒருவகையில் நல்லது தானே...!

சென்னையைச் சுற்றிலும் ஏறக்குறைய 100 அரசுக் கல்வி நிறுவனங்களும், தனியார் மற்றும் சுயநிதிக் கல்லூரிகளும் இருக்கும். கல்லூரிக்கு இரண்டாயிரம் பேர் என்று வைத்துக் கொண்டாலும் எண்ணிக்கை லட்சங்களில் செல்லும். இதில் 90% சதவீத நபர்கள் டிவி விளம்பரம், செய்திகள், நாளிதழ்களை வாசிக்காதவர்கள். இவர்கள் தான் முக்கியமான ஆடியன்ஸ். “ஜோசியம், சமையல் குறிப்பு, தாம்பத்திய டிப்ஸ்” தவிர்த்த இதர புத்தகங்களை வாங்கக் கூடிய ஆடியன்ஸ் இவர்கள் தான். இவர்களிடம் சினிமா, விளையாட்டு தவிர்த்த மற்ற விஷயங்களைக் கொண்டு சேர்ப்பதில் மிகுந்த சிரமம் இருக்கிறது. எனினும் கொண்டு செல்வதில் தான் சாதுர்யம் இருக்கிறது.

இசைக் கலைஞர்களைப் பற்றி எழுதும் ஷாஜி தனது கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டதாக ஞாபகம். ஷாஜி சோனி கம்பெனியின் ஆடியோ விற்பனைப் பிரதிநிதியாக இருந்தபொழுது ரகுமான் பகர்ந்ததைக் குறிப்பிட்டிருக்கிறார். இசை தயாரிப்பாளர் எ. ஆர். ரகுமான் பின்வருமாறு சொல்லி இருக்கிறார்: “யங் ஆடியஸ் வாங்கனும்னு நெனைக்கறத கண்டிப்பா வாங்கிடுவாங்க. இசை ஆல்பத்த அவங்ககிட்ட எப்படி எடுத்துட்டு போயி சேக்கறதுன்னு பாருங்க”

ரகுமானின் வார்த்தைகள் இசைத் தகட்டிற்கு மட்டுமல்ல. செல்போன், ஐபேட், கூலிங் கிளாஸ், பைக், கார், ரீபாக் ஷூ, அடிடாஸ் ஷர்ட், பார்ன் வீடியோஸ் போலவே புத்தகத்திற்கும் பொருந்தும் என்றே நினைக்கிறேன். பபாசி கவனத்தில் எடுத்துக்கொண்டால் சரி.

மாணவர்களின் ரவுடிக் கலாச்சாரம்

இளங்கலை கணிதம் பயின்றபோது “தியாகராஜன்” என்ற மாணவர் கல்லூரி சேர்மன் தேர்தலில் நின்று தோற்றவர். கத்திவாக்கத்திலிருந்து தான் தினமும் கல்லூரிக்கு வருவார். படிக்கும் காலத்தில் அவரைப் பார்த்தாலே என் போன்ற அப்ரானிகளுக்குக் கொஞ்சம் பயம் கலந்த நடுக்கம். திடீரென பளபளக்கும் வீச்சரிவாலை கையில் வைத்துக்கொண்டு கல்லூரிக்குள் வீதி உலா வருவார். அங்குமிங்கும் கத்தியுடன் அலைந்துவிட்டு, ஒரு மாஸ் காண்பித்துவிட்டு வெளிநடப்பு செய்வார். கல்லூரி முடிக்கும் வரை பெரிதாக ஒன்றும் அசம்பாவிதம் நடக்கவில்லை. கொலை குத்து இல்லையென்றாலும் அடிதடிகளுக்குப் பஞ்சம் இருக்காது. அதன் பின்னர் அவரைப் பற்றிய தகவல் எதுவும் இல்லை. ஒருநாள் நாளிதழ்களில் தியாகுவின் பெயரைப் பார்த்ததும் அதிர்ந்துவிட்டேன். வட சென்னையின் பிரபல தாதாவாக தியாகுவின் புகைப்படத்துடன் பெயரும் இருந்தது. பின்னர் ஒரு மாத இதழில் அவரது பெயரையும் என்கவுண்டர் லிஸ்டில் பார்த்ததாக ஞாபகம். (கல்லூரி படிக்கும் வரை தியாகுவின் பின்னால் ஐந்து நபர்களுக்கு மேல் யாரும் இருக்க மாட்டார்கள்). திருந்தி வாழ ஆசைப்படுவதாகவும் அவர் பேட்டி கொடுத்திருந்தார்.

போலவே மீண்டும் ஒரு பரபரப்பான செய்தியை, கூடிய சீக்கிரமே நாளேடுகளில் வாசிக்க வேண்டிய சூழல் உருவாகலாம் என்று தான் நினைக்கிறேன். எப்பொழுதும் போல கிபி விளையாடுகிறான் என்று தான் நண்பர்கள் நினைக்கக் கூடும். இது கொஞ்சம் சீரியஸ் மேட்டர்.

வேலையை முடித்துவிட்டு மௌன்ட் ரோட்டிலிருந்து சென்னை சென்ட்ரலுக்குச் செல்ல, டிவிஎஸ் பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தேன் (Jan - 31, 2014). சில பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிந்ததால், ஓரளவிற்கு காலியாக வந்த பேருந்தில் ஏறிக்கொண்டேன். ஸ்பென்சர் பிளாசாவின் சிக்னல் அருகில், கண்ணிமைக்கும் நேரத்தில் திபுதிபுவென மாணவர்கள் ஓடிவந்து ஏறிக்கொண்டனர். தடதடதடவென பேருந்தின் தகரத்தைத் தட்டியவாறு “அக்கா பொன்னே கேளு, நந்தனம் பசங்க பொட்டைங்க... பச்சையபாஸ் பசங்க பொட்டைங்க... நியூ காலேஜ் பசங்க மட்டும்தான் வாட்டான ஆம்பளைங்க... எத்திராஜ் பொண்ணுங்க தெவிடியாளுங்க... குயின் மேரிஸ் பொண்ணுங்க தெவிடியாளுங்க... அக்கா பொண்ணே கேளு...” என்றவாறு சகிக்கமுடியாத வார்த்தைகளைப் போட்டு கானா பாடிக்கொண்டு வந்தனர்.

சென்ட்ரல் வரவும் படியில் நின்றிருந்த மாணவர்கள் இறங்கிக்கொண்டனர். பொதுமக்களின் நண்பர்களாம் போலீஸ் கூட அரண்டுமிரண்டு தான் மாணவச் செல்வங்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர். கொஞ்ச நேரத்தில் சில மாணவர்கள் சலசலவென சப்தமெழுப்பி ஏதோ வம்புத்தனம் செய்து கொண்டிருந்தனர். யாரோ ஒருவர் சம்பவங்களைப் புகைப்படம் கூட எடுத்துக் கொண்டிருந்தார். இதனைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு போலீஸ்காரர் சாலையில் வந்துகொண்டிருந்த ஷேர் ஆட்டோவை நெருங்கி, பின்புறத்தில் ஓங்கி ஓர் அடியடித்தார். உண்மையில் அது மாணவர்களின் மீது விழ வேண்டிய பேரடி. நானோ...! பாட்சா படத்தின் முன்பாதி ரஜினியைப் போல சலசலக்கும் திசைக்கு எதிரான திசையில் ஓடிக் கொண்டிருந்தேன்.

ஓடிய வேகத்தில், பின் மதியம் 2.35 மணிபோல கும்மிடிப்பூண்டி செல்லப் புறப்படும் சென்ட்ரல் நிலைய ரயிலைப் பிடித்துவிடுவேன் என்ற நம்பிக்கை இருந்தது. போலவே Front 3rd Compartment – 2nd class-ல் ஏறி, வசதியாக அமர்ந்து கொண்டு நிம்மதியாக மூச்சு வாங்கினேன். பக்கத்தில் ஒன்றிரண்டு மாணவர்கள் அமர்ந்திருந்தனர். அவர்களிடம் எப்படிப் பேச்சுக் கொடுப்பது என்றும் யோசித்துக் கொண்டிருந்தேன்.

“அண்ணா” என்று ஒரு மாணவன் என்னை அழைத்தான். கண்களைக் கூர்மையாக்கிக் கொண்டு அந்த இளைஞனைப் பார்த்தேன். “Friends வருவாங்க’ண்ணா... கொஞ்சம் முன்னாடி போயி உக்கா(ர்)ந்துக்கங்களேன்.” என்றான்.

“சரிப்பா...” என்று இரண்டு இருக்கைகள் தள்ளிச் சென்று பார்த்தேன். மாணவர்கள் அமர்ந்திருந்தனர். இன்னும் கொஞ்சம் தள்ளிச் சென்று பார்த்தேன். ரயில் பெட்டி முழுவதும் கல்லூரி மாணவர்கள் அமர்ந்திருந்தார்கள். நோட்டம் விடுவதற்கு வசதியாக காலியான இருக்கையைப் பார்த்து அமர்ந்துகொண்டேன். யாரேனும் கிடைத்தால் பேசவும் தயாராக இருந்தேன். சிறிது நேரத்தில் இளமையின் மெருகேறிய, மாநிறமான இளைஞன் ஒருவன் பக்கத்தில் வந்தமர்ந்தான். ஸ்நேகமாக அவனைப் பார்த்துச் சிரித்தேன். அவனும் நட்புடன் ஸ்நேகப் புன்னகை வீசினான். பேச்சு பேச்சாகவே சென்று கொண்டிருந்தது. திடீரென...

“அண்ணா... மீஞ்சூர் ஸ்டேஷன் வறதுக்கு முன்னாடி – நந்தியம்பாக்கம் ஸ்டேஷன் வந்தா கொஞ்சம் எழுந்து முன்னாடி போயிடுறீங்களா?” என்றான்.

ஒருவேளை மீஞ்சூர் ஜெயின் கல்லூரி மாணவிகளில் யாரேனும் ஒருத்தி இவனைப் பார்க்க வருவாளோ...! இருவரும் வழக்கமாக உட்காரும் இருக்கை இதுவாக இருக்குமோ...! என்றவாறு குழம்பிக் கொண்டிருந்தேன். “அண்ணா... அந்த ஜன்னல் விண்டோ கதவு மூடுதான்னு கொஞ்சம் செக் பண்ணிப் பாருங்க.” என்றவாறு இன்ஸ்ட்ரெக்ஷன் கொடுத்துக் கொண்டிருந்தான்.

“ஒருவேளை கம்பார்மெண்டில் இவன் குடும்பமே நடத்தப் போறானோ...? சேச்சே... இருக்காது... இவ்வளோ டீசென்ட்டா பேசுறானே” என்றவாறு பல விஷயங்களையும் பல்லான பல்லான விதத்தில் யோசித்துக்கொண்டு “ஜன்னல்னாலும் விண்டோ-னாலும் ஒண்ணுதான் தம்பி. நடு சென்டர் மாதிரி” என்று சிரித்தேன்.

“நல்லாத் தான் கடிக்கிறீங்க. கொஞ்ச நேரத்துல தண்டவாளத்துல இருக்கற கல்லெடுத்து வண்டிக்குள்ள உடுவாங்க... அதையும் சேர்த்தே வாங்கிக்கலாம் இருங்க” என்றான்.

“எனக்கு பகீரென்றது. இந்த கம்பார்மென்ட் பசங்க பூராவும் பச்சயபாஸ் காலேஜில படிக்கிறோம். எங்களுக்கும் ஜெயின் காலேஜ் பசங்களுக்கும் கொஞ்ச நாளாவே பிரச்சனையில தான் ஓடிட்டு இருக்குது. எவனாச்சும் ஜெயின் காலேஜ் பசங்க வண்டியில ஏறினாங்க-ன்னா அவங்க காலி... தர்ம அடி அடிக்கப்போறோம்...” என்றான்.

“அடப்பாவிங்களா...! நீங்கல்லாம் படிக்கிற பசங்களா?” என்றேன்.

“அண்ணா... நாங்க சும்மாதான்னா இருக்குறோம்... அவங்க வந்தமா, படிச்சமா, போனோம்மான்னு இருந்தா பிரச்சனை இல்ல... எங்கக் கூடவே சண்டைக்கு வரணுங்க... அவங்க மீஞ்சூர் லோக்கல் பாய்ஸ். அதனால பொன்னேரி, கவரப்பேட்டை, கும்மிடிப்பூண்டில இருந்து வர பசங்கள டிரைன்ல இருந்து எறக்கி அடிக்கறானுங்க’ண்ணா... அப்போ நாங்க என்ன பொட்டைங்களா...!? அந்த பசங்க கத்தி கம்புன்னு வசிக்குனு மெரட்டறாங்க’ண்ணா” என்றான்.

“இருந்தாலும் ஒருத்தர ஒருத்தர் அடிசிக்கிறது நல்லாவா இருக்கு?” என்றேன்.

“இன்னாங்ண்ணா... அப்படிச் சொல்லிட்டிங்க. அப்போ இதுக்கு முன்னாடி இருந்த ரூட்டுத் தல எங்களப் பாத்து காறித் துப்ப மாட்டாராண்ணா. நான் இருக்கச் சொல்ல ரூட்டு எப்புடி இருந்துச்சு... நீங்க என்னடான்னா அடிவாங்கிட்டு வறீங்கன்னு காறித் துப்ப மாட்டாரு... அதெல்லாம் ஒரு கெத்துண்ணா. அதெல்லாம் நம்ம தான் காப்பாத்திக்கணும்” என்றான்.

“ஓ... இதுல பரம்பரைய வேற உருவாக்குறீங்களா?” என்றேன்.

இதற்குள் நந்தியம்பாக்கம் வரவும் “எழுந்து கொஞ்சம் முன்னாடி போயிடுங்க’ண்ணா” என்றான். நான்கு இருக்கைகள் தள்ளிச் சென்று நின்றுகொண்டேன். மீஞ்சூர் வந்ததும் ரயில் நின்றது. ஓவென ஐம்பது மாணவர்களும் குரலெழுப்பினர். ஒரு மாணவன் முகத்தில் கைக்குட்டையைக் கட்டிக்கொண்டு பளபளக்கும் இரண்டுமுழ வீச்சரிவாளைக் கையில் பிடித்தபடி ரயில் நிலையத்தில் இறங்கினான். ரயில்பெட்டியில் இருந்த மாணவர்களின் கூக்குரல் வானத்தை எட்டியது. ஓடிச்சென்று வெளியில் எட்டிப் பார்த்தேன். போர்க்களத்தில் நிற்கும் வீரனைப் போல அந்த மாணவன் நின்றுகொண்டிருந்தான். மீஞ்சூர் ரயில் நிலையத்தில் மயான அமைதி. பச்சை விளக்கெரிந்த சிக்னல் கிடைக்கவும் ரயில் மெதுவாகக் கிளம்பியது. ரயில் சிறிதுதூரம் நகர்ந்ததும் தான் வீச்சரிவாளைப் பிடித்துக் கொண்டிருந்த, முகத்தை மறைத்திருந்த மாணவன் ஓடிவந்து ஏறினான். கொஞ்சம் தவறியிருந்தால் ஓடும் ரயிலிலிருந்து மாணவன் வீச்சரிவாளுடன் கீழே விழுந்திருப்பான். அதற்குள் சக நண்பன் அவனுக்குக் கைகொடுத்து ரயில் பெட்டியின் உள்ளிழுத்துப் போட்டான். எனக்கென்னவோ சாகசத் திரைப்படத்தின் உச்சகட்டக் காட்சியைப் போலவே அந்த ஒருசில நிமிடங்கள் இருந்தது. கைக்குட்டையைக் கழட்டியதும் தான் தெரிந்தது. அவன் ரயில் பெட்டியில் முதலில் என்னிடம் பேச்சுக் கொடுத்த மாணவன். கீழே விழ இருந்தவனை உள்ளிழுத்துப் போட்டவன் என்னிடம் இரண்டாவதாக பேச்சுக் கொடுத்த மாணவன். அருகில் சென்று அவர்களிடம் கத்தினேன்:

“படிக்கிற பசங்களா நீங்க...? அசிங்கமா இல்ல...? கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா கீழ விழுந்து செத்திருப்பான் அவன்...!”

“இதெல்லாம் சகஜம்’ண்ணா...” என்றவாறு அவர்கள் என்னைக் கடந்து செல்கையில் “டம்” என்ற மிதமான சப்தம் கேட்டது. யாரோ ரயிலின் மீது கல்லெறிந்து இருக்கிறார்கள். இருவரும் ஓடிச்சென்று மாணவர்களுடன் சேர்ந்து கொண்டார்கள்.

“அந்த போலீஸ் தேவிடியா பையன் தான் மச்சி கல்லெடுத்து அடிச்சான். நான் பார்த்தேண்டா...” என்று ஒருவன் கூறினான். அதற்குமேல் மாணவர்கள் குசுகுசுவென ஏதோ பேசிக் கொண்டார்கள். திடீரென அந்த மாணவர்களுக்குள் சலசலப்புச் சத்தம் கேட்டது. யார்மீதேனும் கல்லடி பட்டு ரத்தம் வழிகிறதோ என்றவாறு எட்டிப் பார்த்தேன். ஒரே கும்பலைச் சேர்ந்த நண்பர்கள் இருவர் ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்ள எக்கிக் கொண்டிருந்தனர்.

ஒரு கல்லூரி மாணவனின் அருகில் சென்று கேட்டேன்: “ஏன் அவங்க ரெண்டு பேரும் அடிச்சிக்க டிரை பண்றாங்க...?”

“தேவையே இல்லாம ஒரு ஸ்கூல் பையன எங்க பிரண்டுல ஒருத்தன் அடிச்சிட்டான்னா... அதுக்காகத் தான் இன்னொருத்தன் அடிக்கப் போறான்” என்றான்.

“யார... ஸ்கூல் பையனையா?” என்றேன்.

“அவன்தான் யூனி ஃபார்ம்ல இருக்கான்ல... அப்போ எதுக்கு அந்த ஸ்கூல் பையன தேவையில்லாம அடிச்ச... சின்ன பையன ஏன்டா அடிக்கிற... தேவிடியா பையான்னு கேட்டுட்டான். அதாண்ணா பிரச்சனை... அதெல்லாம் சமாதானம் ஆயிடுவானுங்க... நீங்க போங்க...” என்றான். அதற்குள் பொன்னேரி ரயில் நிலையம் வந்துவிட்டது. ஒரு பதட்டத்துடனே ரயிலைவிட்டு இறங்கினேன். போலவே மாணவர்களில் சிலரும் இறங்கினார்கள். அதில் ஒருவன்: “நான் சின்ன பையன கோவத்துல அடிச்சது தப்புதான். அதுக்காக அந்தண்ணன் என்னை அடிச்சிருந்தாலும் வாங்கிப்பேன். ஆனா தேவிடியா பையன்னு சொன்னது தப்புன்னா... அதான் அவர அடிக்கப் போனேன்.” என்றவாறு ஒருவன் புலம்பிக்கொண்டிருந்தான்.

பச்சை விளக்கு சிக்னல் பளீரெனத் தெரிந்தது. ரயில் மிதமாக நகர்ந்து கண்ணிமைக்கும் நேரத்தில் வேகம் எடுத்தது. பேசிக்கொண்டிருந்த மாணவர்கள் ஓடிச்சென்று குரங்குபோலத் தாவி, காந்தம் போல பெட்டியின் ஓரங்களில் ஒட்டிக்கொண்டு உள்ளே சென்றார்கள். எல்லோருமே கிராமப்புற மாணவர்கள். மரியாதைத் தெரிந்தவர்களாகவும் இருக்கிறார்கள். பொதுமக்களுக்கு எந்த இடையூரையும் ஏற்படுத்தவில்லை. கும்பலில் ஒருவர் தவறாக நடந்தாலும் – அவர்களில் ஒருவரே சகபயணிக்காக ஞாயம் கேட்கிறார். ஆனால், இவர்கள் தான் “கத்தி, கிரிக்கெட் மட்டை, கிரிகெட் ஸ்டம்ப்” என ஆயுதங்களை எடுத்துக்கொண்டு வேறு கல்லூரி மாணவனை அடிக்கச் செல்கிறார்கள். இந்த முரனை என்னென்று சொல்லவது.

பேருந்துகளிலும், ரயில்களிலும் “ரூட்டுத் தல” கலாச்சாரம் பாலியல் நோய் போல பரவிக்கொண்டு வருகிறது. இதனைத் தடுக்க வேண்டியது மிகமிக முக்கியம். உயர்நீதிமன்ற மாணவர்கள் அடித்துக் கொண்டதை வீடியோ படம் எடுத்துப் போட்டதை எல்லோரும் பார்த்திருக்கிறோம் தானே...! திருவள்ளூர் மாவட்ட பெட்டிச் செய்தியில் என்றேனும் ஒருநாள் கீழ்கண்ட விவரங்கள் வரக்கூடும். அன்றைய தினம் என்னை நினைத்துக் கொள்ளுங்கள்: பச்சையப்பன் கல்லூரி மாணவர்களும், மீஞ்சூர் ஜெயின் கல்லூரி மாணவர்களும் ஆயுதங்களுடன் மோதல் – “சில மாணவர்கள் படுகாயம், மருத்துவமனையில் அனுமதி”

இதெல்லாம் ஓர் அபாய எச்சரிக்கை தான். நம் வீட்டு மொட்டுக்கள் – வெளியில் கன்னிகளாக வெடிக்கிறர்கள். வன்முறை நம் வீட்டில் கண்ணுக்குத் தெரியாமலே வளர்ந்து கொண்டிருக்கிறது. என்றேனும் ஒருநாள் குரூரம் நம் வீட்டு வாசலில் வந்து ரத்தக் களரியுடன் நிற்கத்தான் போகிறது. அன்றைய தினம் உணர்வோம் நாம் படிப்பது செய்திகளை அல்ல. சுற்றிலும் நடக்கும் உண்மைச் சம்பவங்களை என்று. பெற்றோர்களும் கல்லூரி நிர்வாகமும் மாணவர்களின் நலனில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையேல் கஷ்டம் தான். மாணவர்களின் ரூட்டுத் தல ரௌடிக் கலாச்சாரம் தொடர்ந்து கொண்டிருக்கும். “கத்தி, வீச்சரிவாள், வன்முறை ஆயுதங்கலென” மாணவர்கள் பொதுமக்களுடன் பயணம் செய்வது பலவிதத்திலும் அபாயம் நிறைந்தது. ரேகிங், ஈவ் டீசிங் போலவே “ரூடுத் தல” கலாச்சாரத்திற்கும் கடுமையான சட்டங்கள் இயற்றினால் நன்றாகத் தான் இருக்கும். பார்க்கலாம் நடக்கிறதா என்று...!

டிஸ்கி: சில மாதங்களுக்கு முன்பு சென்னை மாநகர பேருந்துப் பயணத்தில் கிடைத்த ஓர் அனுபவம்:

மாணவர்களின் ரவுடித்தனம்

Friday, January 24, 2014

காலச்சுவடும் நானும் – புத்தகக் கண்காட்சி 2014


அன்றொருநாள் காலச்சுவடு கண்ணன் செல்பேசியில் அழைத்திருந்தார். எப்பொழுதும் போல சரமாரியாகத் திட்டப்போகிறார் என்றுதான் நினைத்தேன். “பிரபு... ராயப்பேட் உட்லேண்ட்ஸ் ஹோட்டல் வந்துடங்களேன்... கொஞ்சம் பேசணும்” என்றார். இது நடந்தது டிசம்பர் (2013) மாதத்தின் இரண்டாவது வாரம். 

“நமக்கென்ன வேலையா...! வெட்டியா...! ஓக்க்க்க்கே பார்க்க்க்க்கலாமே...” என்று கண்ணனைப் பார்ப்பதற்காகச் சென்றிருந்தேன். விடுதியின் பழமையான தோற்றத்தில் அமைந்திருக்கும் வரவேற்பறையில் அமர்ந்திருந்தேன். பறவைகளின் கூச்சல்களும் கூக்குரல்களும் சொல்லமுடியாத மனமகிழ்வைப் பிரவாகம் செய்தன. இடையிடையே காலச்சுவடு கண்ணனின் குரல் உப்புக் காகிதத்தை இரும்புத் தகரத்தில் தேய்த்தது போன்ற அசௌகரியத்தை ஏற்படுத்தும் அசரீரி போல ஒலித்துக் கொண்டிருந்தன.

“பிரபு... ஒரு வேலையக் கொடுத்தா ஒழுங்கா செய்யிறீங்களா... பெண்டிங் பெண்டிங் பெண்டிங்...” - இப்படி ஏதாவது அவரும் சொல்ல, நானும் கேட்க, இரண்டு வருட நட்பு ஓடிக்கொண்டிருக்கிறது. “ஸ்கூல் டேசிலிருந்து இதுபோன்ற வசைகளெல்லாம் நமக்கு சகஜம் தானே...!” என்றவாறு மனதினைத் தேற்றிக் கொண்டு ரிசப்ஷனில் அமர்ந்திருந்த பொழுது, “வாங்க பிரபு... ரொம்ப நேரமா வெயிட் பன்றீங்க போல?” என்ற குரல் கேட்டதும் தான் சுதாரித்தேன்.

“January month – Book Expo (2014) வருது இல்ல... அதப்பத்தி பேசத் தான் கூப்பிட்டேன்...” என்றவாறு சிரித்தார் கண்ணன்.

“ஒருக்கா(ல்) நம்மள கவித எழுதச் சொல்லுவாரோ...! ஒருக்கா(ல்) நம்மள நாவல் எழுதச் சொல்லுவாரோ...! ஒருக்கா(ல்) நம்மள சிறுகதை எழுதச் சொல்லுவாரோ...! சொக்கா அவார்டு உனக்குத் தாண்டே....! அடுத்த சோ. டி. குரூஸ் நீ தாண்டே...!” என்பது போல மனசு றெக்கை கட்டிப் பறந்தது.

“Book Expo-ல நம்ம காலச்சுவடு பதிப்பகம் ஸ்டால் போடுவோம் இல்ல...” என்று பேசத் தொடங்கினார்.

“சரி மேட்டருக்கு வாங்க. சீக்கிரம்... சீக்கிரம்... கவிதையா? நாவலா? சிறுகதையா? எல்லாத்துக்கும் நான் ரெடி... சொக்கா அவார்டு உனக்குத் தாண்டே....!” என்பது போல மறுபடியும் மறுபடியும் மனசு றெக்கை கட்டிப் பறந்தது.

“காலச்சுவடு ஸ்டாலுக்கு இலக்கியம் தேடிட்டு வர யூத்ஸ் – எந்த மாதிரி புக்ஸ் தேடிட்டு வராங்க... எந்த மாதிரி புக்ஸ் செலக்ட் பண்றாங்கன்னு – புத்தகக் கண்காட்சி நடக்கற எல்லா நாளும் ஒரு ரிசர்ச் பண்ணனும்... அந்த ரிசர்ச் வேலைய நீங்க தான் பண்ணனும்...!” என்றார்.

நான் அமர்ந்திருந்த இடம் விரிசல் கண்டு, உட்கார்ந்திருந்த நாற்காலி நழுவி, பாதாள இருளின் கதகதப்பான வெளியில் தள்ளப்பட்டு, ஆயிரம் கைகள் கொண்ட அசுரக் கடவுள் என்னை கசக்கிப் பிழிவது போல உணர்ந்தேன். தொண்டையில் எச்சில் இறங்கவில்லை. சுதாரித்துக் கொண்டு, கண்ணனைப் பார்த்துச் சொன்னேன்:

“அய்யய்ய... இந்த மாதிரி வொர்க் செய்யுறது எல்லாம் நமக்குச் சரிப்பட்டு வராதுங்க கண்ணன்... அதெல்லாம் படிச்ச பசங்க பண்றது... ஏதோ கவுஜை, நோவுல்னு ஏதாச்சும் ஈசியான விஷயத்த கான்ட்ரிபியூட் பண்ணச் சொல்லுவீங்கன்னு பார்த்தா(ல்)... நீங்க என்னடான்னா ஆச காட்டி மோசம் பண்றீங்களே...! யாராச்சும் எஜூகேட்ஸ் இருந்தா(ல்) அவங்ககிட்ட அப்ப்ரோச் பண்ணி, இந்த மாதிரி கசடா புசடா வேலையக் கொடுங்க...” என்றது மட்டுமல்லாமல் “நமக்குத் தொழில் எழுத்து” என்பதைக் கூறாமல் கூறினேன்.

“யூத்ஸ் என்ன மாதிரி இலக்கியம் படிக்கிறாங்க?”-ன்னு “ஒரு யூத் ரிசர்ச் பண்ணா நல்லா இருக்கும்”-ன்னு எனக்குத் தோணுது. “அதா(ன்) உங்கக்கிட்ட இந்த அசைன்மென்ட்டக் கொடுக்கறேன்” என்றார்.

அடடா... பலவீனம் பார்த்து மனிதர் அடிக்கிறாரோ என்ற சந்தேகம் ஒருபுறம் இருந்தாலும், எதற்கும் இருக்கட்டுமே என்று தலையாட்டிக் கூறிவிட்டேன்: “சரி... நான் செய்யறேன். ஆனா, இந்த ரிசர்ச் எதுக்குன்னு தெரிஞ்சிக்கலாங்களா?”

“பாருங்க பிரபு... ஒரு பழமொழி சொல்லுவாங்க... உங்களுக்குத் தெரியுங்களா?” என்றார்.

“சொல்லுங்களேன்... தெரிஞ்சிக்கிறேன்...” என்றேன்.

“எச்சி எ(இ)லய எடுக்கச் சொன்னா – எத்தன பேர் சாப்பிட்டாங்கன்னு கேக்கக் கூடாது. சொல்றத செய்யணும்” என்றார். “ஓக்க்க்க்கே... நீங்க பழமொழி எல்லாம் சொல்லி இவ்வளோ பாராட்டி பேசுறீங்க. யூத்துன்னு வேற என்னை நம்பிட்டு இருக்கீங்க... அதனால கண்டிப்பா செய்யிறேன்...” என்றேன்.

சிங்கம் போல சுற்றிக் கொண்டிருந்தவனை காலச்சுவடு கண்ணன் சிறையிலடைத்தது இப்படித்தான். சென்னை புத்தகக் கண்காட்சியின் (2014) ஒவ்வொரு நாளும் காலச்சுவடு அரங்கிற்கு (Stall) வரும் இளைஞர்களின் பின்னால் ஓடிக் கொண்டிருந்ததும் இதனால் தான். அப்பப்பா...! ஏறக்குறைய ஆயிரம் நண்பர்களிடம் பேசியிருக்கிறேன். மலைப்பாகத் தான் இருக்கிறது.

ஆனால், ஒரு விஷயத்தைக் கண்ணனிடம் தெளிவாகக் கூறியிருந்தேன்: “எனக்கு ஒரு ரேக்கின் சில பகுதிகள் வேணும் கண்ணன். அதில், சில புத்தகங்களை வைத்துக் கொண்டு – புத்தகங்களின் சிறப்பு பற்றியும், அந்தந்த எழுத்தாளர்களின் அளப்பரிய இலக்கிய பங்களிப்புகளைப் பற்றியும் - காலச்சுவடு ஸ்டாலிற்கு புத்தகங்களைத் தேடிக்கொண்டு வரும், சக (இளம்) வாசகர்களிடம் பேசவேண்டும்.” என்றேன்.

“நான் கொடுத்த வேலைய ஒழுங்கா செஞ்சிட்டு... பிறகு எதை வேணும்னாலும் பண்ணுங்க...” என்றார் கண்ணன். மேலும் “யார் யாரு... அந்த ரைட்டர்ஸ்...?” என்றும் கேட்டார்.

“அது சஸ்பென்ஸ்...! ஆல்சோ கண்ணன் உங்களோட பந்திக்கு நான் வரல... என்னோட பந்திக்கு நீங்களும் வரக்கூடாது...” என்றேன்.

“நான் சொன்ன பழமொழிய நாசூக்கா - எனக்கே சொல்லிக் காமிக்கிறீங்களா பிரபு?” என்றார்.

“I donna mean it” என்றேன் தோள்களைக் குளுக்கியவாறு, சிரித்துக்கொண்டே.

“இங்கிலீசு... நீங்க Book Fair-ல யூத்ஸ் கிட்ட பேசப் போறீங்க. பேச்சைக் கொஞ்சம் அடக்கி பேசக் கத்துக்கோங்க... பின்னாடி ஹாஸ்பிடல் ட்ரீட்மென்ட்டுன்னு வந்தா அதுக்கும் நான் பொறுப்பு இல்ல...” என்றார் கண்ணன்.

“அத நான் பாத்துக்கறேன். நீங்க கவலைப் படாதீங்க... சென்னை புக் ஃபேர்ல மீட் பண்ணலாம்.” என்று எழுந்துகொண்டேன். “க்கும்... இந்த பந்தாவுக்கெல்லாம் ஒன்னும் கொறை இல்ல... ஆனா, செயல்ல தான் ஒன்னுத்தையும் காணோம்...” என்றார் குத்தலாக.

ஏறக்குறைய அறுநூறு தலைப்பிலான புத்தகங்கள் காலச்சுவடு பதிப்பகத்தின் மூலம் வெளிவந்துள்ளன. மீள்பதிப்பு புத்தகங்களைச் சேர்க்காமல் – சுமார் 60 புதிய புத்தகங்கள் இந்த வருடம் காலச்சுவடு பதிப்பகத்தின் மூலம் வெளியீடு கண்டுள்ளன. எந்தெந்த எழுத்தாளர்களைத் தேர்ந்தெடுப்பது என்பதில் ஆரம்பத்தில் கொஞ்சம் போல சிரமம் இருந்தது. முதலில் “பெருமாள் முருகன்” தான் நினைவிற்கு வந்தார். பின்னர் “கவிஞர் சுகுமாரன்”. அதன்பின் ஆ. ரா. வெங்கடாசலபதி. வைக்கம் முகமது பஷீரின் படைப்புகளைத் தொடர்ந்து மொழிபெயர்த்த “குளச்சல் மு யூசுப்”. உலக இலக்கியங்களைத் தொடர்ந்து தமிழுக்குக் கொண்டுவரும் “ஜி. குப்புசாமி” மற்றும் மொழி பெயர்ப்பாளர் “எம். எஸ்”. போலவே, கட்டுரையாளர் “பி. ஏ. கிருஷ்ணன்”.


எனினும் பெருமாள் முருகனுடைய இரண்டு நாவல்கள், ஜி குப்புசாமியின் தொடர் உலக இலக்கிய மொழி பெயர்ப்புகள், குளச்சல் யூசுப்பின் மலையாள மொழிமாற்றங்கள் பற்றியும் தான் புத்தகச் சந்தைக்கு வரும் நண்பர்களிடம் ஓரிரு தகவல்கள் பகிரவேண்டும் என்றிருந்தேன். அந்த நேரத்தில் தான், மத்திய சாகித்ய அகாடமி விருதுக்கு - ஜோ. டி குரூஸின் படைப்பான கடல் வாழ் பரதவர்களின் சிக்கல் மிகுந்த வாழ்வைப் பிரதிபலித்த, காலச்சுவடு பதிப்பகத்தில் வெளியீடு கண்ட கொற்கை நாவல் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது என்ற மகிழ்ச்சிகரமான அறிவிப்பு வெளியானது. ஆகவே தோப்பில் முகமது மீரானையும் (ஒரு கடலோர கிராமத்தின் கதை, சாய்வு நாற்காலி), புனத்தில் குஞ்சப்துல்லாவையும் (மீஸான் கற்கள்) துணைக்குச் சேர்த்துக்கொண்டேன். எனக்குத் தேவையான காலச்சுவடு புராடக்ஸ் பிரம்மாதமாக அமைந்தது. மத்திய சாகித்ய அகாடமி விருது பெற்ற படைப்புகளான “கொற்கை, சாய்வு நாற்காலி, மீஸான் கற்கள், செம்மீன்” ஆகிய படைப்புகளை ஓர் அடுக்கிலும், நோபல் மற்றும் புக்கர் விருது பெற்ற படைப்பாளிகளின் மொழிபெயர்ப்புகளை மற்றொரு ரேக்கிலும் எடுத்து வைத்துக் கொண்டேன்.

“கொற்கை”க்காக 2013 ஆம் ஆண்டு “ஜோ.டி. குரூஸ்” சாகித்ய அகாடமி பெற்றிருக்கிறார் எனில், “சாய்வு நாற்காலி”க்காக 1997-ஆம் ஆண்டு “தோப்பில் முகமது மீரான்” மத்திய சாகித்ய விருது பெற்றிருக்கிறார். இந்நாவல் கடற்கரையோர தமிழக கிராமத்தின் இஸ்லாமிய நிலச்சுவான்தார் ஒருவனின் வாழ்வியல் சரிவை முன்வைக்கும் பிரதி. குடும்பத்து முன்னோர்களின் பெருமையைப் பேசிக்கொண்டு, யதார்த்த வாழ்வினை விரலிடை மணலாக நழுவவிடும் கதையம்சம் கொண்ட நாவல். இது அவனுடைய கடந்தகால காம இச்சை நினைவுகள், நிகழ்கால யதார்த்த வாழ்வியல் சிக்கல் மற்றும் சிற்றின்பத்தில் திளைக்க விரும்பும் அவனது ஆழ்மான எண்ணங்களை முன்வைத்து நகரும் நாவல். போலவே, 1980-களின் ஆரம்ப ஆண்டுகளில் “ஸ்மாரக சிலகள்” என்ற மலையாள நாவலுக்காக எழுத்தாளர் புனத்தில் குஞ்சப்துல்லா கேரள சாகித்ய அகாடமி மற்றும் மத்திய சாகித்ய அகாடமி விருது பெற்றிருக்கிறார். இந்த மலையாள நாவலை தமிழில் மொழிபெயர்த்தால் சிறப்பாக இருக்கும் என எழுத்தாளர் ஜெயமோகன் – குளச்சல் மு யூசப்பிடம் பரிந்துரை செய்திருக்கிறார். இந்நாவலும் கேரள கடற்கரையோர இஸ்லாமிய நிலச்சுவாந்தார் ஒருவனையும், அவனைச் சுற்றியுள்ள மக்களின் வாழ்வியலையும் சித்தரிக்கும் நாவல். இது “மீஸான் கற்கள்” என தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.


பெருமாள் முருகனின் “கூள மாதாரி” ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு, 2004 ஆம் ஆண்டு க்ரிமா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட புத்தகம். ஆசிய பிராந்திய மொழிகளின் – மொழியாக்கம் செய்யப்பட்ட சுமார் 200 நாவல்களிலிருந்து, அந்த வருடத்தின் கடைசி சுற்றுக்குத் தகுதிபெற்ற முதல் ஐந்து நாவல்களில் கூள மாதாரியும் ஒன்று. இந்நாவல் கிராமம் ஒன்றின் ஆடு மேய்க்கும் பதின் பருவத்து சிறுவர், சிறுமியர் பற்றிய கதை. முழுநாவலுமே களத்து மேட்டில் பயனிக்குமாறு பெருமாள் முருகன் கட்டமைத்திருப்பார். போலவே நிழல்முற்றம் டூரிங் டாக்கிஸ் ஒன்றின் வளரிளம் பருவத்து கூலித் தொழிலாளிகளின் கதை. இரண்டு நாவலுமே பதின்பருவத்து உடல்சார்ந்த சிக்கல், வாழ்வியல் சிக்கல் மற்றும் அந்த பருவத்திற்கே உரிய கேளிக்கைகள் என நுட்பமான விஷயங்களை பதிவு செய்து காட்சிகளாக விரியும் படைப்புகள். இளம் வாசகர்களிடம் பேசும்பொழுது, அவர்கள் கடந்துவந்த பருவத்தின் வாழ்வியல் சம்பவங்களைப் பதிவு செய்த படைப்புகளைப் பற்றிப் பேசினால் நன்றாக இருக்கும் என்பதால் இவ்விரண்டு நாவல்களையும் முதலிலேயே தேர்ந்தெடுத்துக் கொண்டேன். அதுவுமில்லாமல் பெருமாள் முருகன் தமிழின் கொண்டாடப்பட வேண்டிய மிகமிக மிகமிக முக்கியமான எழுத்தாளர் என்பது என் எண்ணம். சிலபல காரணங்களால் முக்கியமான படைப்பாளிகள் பரவலாக அறியப்பட்ட விருதுக் குழுக்களால் அடையாளப் படுத்தாமல் போகும் சூழலில் – அதுபோன்ற முக்கியமான தமிழ் ஆளுமைகள் விளக்கு விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு கௌரவிக்கப் படுகிறார்கள். அந்த வகையில் 2013-ஆம் ஆண்டின் விளக்கு விருது பெருமாள் முருகனுக்கு வழங்கப்பட்டுள்ளது. (இதற்கு முந்திய ஆண்டு இலங்கை எழுத்தாளர் நுஃமானுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. முறையே கவிஞர் விக்கிரமாதித்யன், எழுத்தாளர் திலீப்குமார் என பின்னோக்கி வரிசை நீளும்.)

அடுத்ததாக ஜி குப்புசாமி. இவரைப் பற்றி என்ன சொல்ல!. கடுமையான உழைப்பாளி. உலக அளவில் பரவலாக அறியப்படும் தற்கால நவீன உலக இலக்கியப் படைப்புகளை தமிழுக்குக் கொண்டுவரும் முக்கியமான பணியைச் செய்து வருகிறார். புக்கர் பரிசு பெற்ற படைப்புகளான அருந்ததிராயின் “The God Of Small Things” மற்றும் ஜான் பான்விலின் “The Sea” ஆகியவற்றை “சின்ன சின்ன விஷயங்களின் கடவுள், கடல்” என மொழியாக்கம் செய்திருக்கிறார். போலவே 2006-ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு பெற்ற ஓரான் பாமுக்கின் “My Name Is Red & The Snow” ஆகிய நாவல்களை “என் பெயர் சிவப்பு & பனி” என மொழிமாற்றம் செய்திருக்கிறார். எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் பரிந்துரையால் தான் “என் பெயர் சிகப்பு” நாவலை மொழிபெயர்க்கும் எண்ணம் வந்தது என ஜி. குப்புசாமி புத்தகத்தின் முன்னுரையில் கூட நினைவு கூர்ந்திருக்கிறார். மேலும் “இஸ்தான்புல்” என்ற பாமுக்கின் அடுத்த நாவலையும் தமிழுக்குக் கொண்டுவரும் முயற்சியில் இருக்கிறார். மேலேயுள்ள ஒவ்வொரு புத்தகத்தின் பின்னணியிலும் அவரது கடும் உழைப்பு இருக்கிறது. “பனி” நாவலை மொழியாக்கம் செய்ய ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் எடுத்துக் கொண்டதாகக் கடைசியாக சந்தித்தபோது குப்புசாமி கூறினார்.

புத்தகங்களைத் தேடிக்கொண்டு வருபவர்களிடம் எப்படியும் பேசியாக வேண்டிய சூழலில் தள்ளப்பட்டுள்ளேன். அவர்களிடம் மேலே பட்டியலிட்டுள்ள மிக முக்கியமான படைப்பாளிகளைப் பற்றிய சின்ன டெமோ கொடுப்பதில் நாமென்ன குறைந்துவிடப் போகிறேன்.

அடுத்த அவதாரம் தான் நானெடுத்த மிக முக்கியமான அவதாரம். கவிதை என்றாலே எப்போதும் எனக்கு அலர்ஜி. உண்மையில் மிக சொற்பமான கவிதைகளைத் தான் வாசித்திருக்கிறேன். ஆனால் நிச்சயமாக எனக்குத் தெரியும் – திரைப்பட பாடலாசிரியர்களான “வைரமுத்து, நா. முத்துக்குமார், பா. விஜய், தாமரை” போன்ற கவிகளின் தொகுப்புகளைத் தேடிக்கொண்டு கவிதைப் பிரியர்கள் வருவார்கள். போலவே, Poet-டுகலான “தனுஷ், சிம்பு” என பட்டியல் இன்னுமின்னும் நீளும் என்பது நண்பர்களுக்குச் சொல்லித் தெறிய வேண்டியதில்லை. அவர்களிடம் வாண்ட்டேடாக சில கவிதைகளை படித்துக் காண்பிக்க வேண்டும் என்ற சபதமேற்றேன். ஓரளவிற்கு பலனும் இருந்தது.

கவிஞர் சுகுமாரனின் “கையில் அள்ளிய நீர்” கவிதையை வாசித்துக் காண்பித்தேன். போலவே தேவதச்சனின் “சுதந்திர யாத்திரை”, பெருமாள் முருகனின் “தனக்குரியது” போன்ற கவிதைகளையும் - சல்மா, மாலதி மைத்ரி, வா. மணிகண்டன், நகுலன், அனார், சர்மிளா சையத்” போன்றோரது ஒருசில கவிதைகளையும் நண்பர்களுக்குக் கோடிட்டுக் காண்பித்தேன். அவ்வளவே...!

கவி நேசர்கள் சுகுமாரனின் “கையில் அள்ளிய நீர்” மற்றும் பெருமாள் முருகனின் “தனக்குரியது”, தேவதச்சனின் “சுதந்திர யாத்திரை” ஆகிய கவிதைகளை மிகவும் ரசித்துக் கேட்டார்கள். பத்திநாதன் அண்ணா கூட ஒருமுறை “நீ கவிதை வாசித்து காமிச்சி தான் இந்தத் தொகுப்பு எல்லாம் விக்கப் போகுதா?” என்றார்.

“இங்க விக்கிறது, விக்காதது இல்லிங்கண்ணா பிரச்சனை. அறிமுகம் தான்... அது மட்டும் தான்” என்றேன். பத்தி’யண்ணா தலையிலடித்துக் கொண்டார். (இவர் போரின் மறுபக்கம் – என்ற தன்வரலாற்று நூலை எழுதியவர். தமிழக அகதி முகாம்களின் அவல நிலையை விவரித்துச் சொல்லும் இந்நூல் காலச்சுவடு பதிப்பில் வெளிவந்துள்ளது.)

பெரும்பாலான இளம் வாசகர்கள் சாகித்ய அகாடமி விருது பெற்ற ஜோ.டி குரூஸின் “கொற்கை” நாவலைத் தேடிக்கொண்டு காலச்சுவடு பதிப்பக அரங்கிற்கு வருவார்கள் என்றுதான் நினைத்திருந்தேன். என்னுடைய எண்ணத்தில் மரண அடி விழுந்தது...! ஜி நாகராஜனின் “குறத்தி முடுக்கு, நாளை மற்றொரு நாளே”, சுந்தர ராமசாமியின் “ஒரு புளிய மரத்தின் கதை, ஜேஜே சில குறிப்புகள்” & மௌனியின் தொகுப்பு, பா சிங்காரத்தின் “புயலிலே ஒரு தோணி” போன்ற புத்தகங்களைத் தேடிக்கொண்டு தான் வந்திருந்தார்கள். பெரும்பாலும் ஜி நாகராஜன் தான் இளைஞர்களின் குறியாக இருந்தார். ஜி நாகராஜனின் “மொத்தத் தொகுப்பு கிடைக்குமா?” என சுமார் நூறு நபர்களாவது விசாரித்திருப்பார்கள். (இவர்கள் எல்லோரிடமும் உப்பு நாய்கள் வாசித்துப் பாருங்கள் என்று சொல்லி அனுப்பினேன்.)

ஒருவரிடம் துடுக்காகக் கேட்டேன்: “அப்படி என்ன தான் இருக்கு ஜி. நாகராஜனிடமும், சுராவிடமும்?” “தங்களோட சொந்தக் கருத்து எதையும் இவங்க நமக்கு போதிக்கிறதில்ல. எல்லாத்தையும் தூர நின்னு எழுத்துல சொல்லிட்டு போறாங்க. அதான்...” என்றார்.

“கலை, அறிவியியல், என்ஜினியரிங், மருத்துவம்” என பல துறைகளிலும் பயிலும் மாணவர்கள் இலக்கியப் புத்தகங்கள் வாங்க வந்திருந்தது மகிழ்ச்சியாக இருந்தது. சந்தித்துப் பேசிய ஆயிரம் நண்பர்களில் சுமார் எழுநூறு பேராவது “இப்போதான் ஃபிக்ஷன் படிக்க ஆரம்பிச்சி இருக்கேன்... எதாச்சும் நல்ல புக்ஸ் இருந்தா(ல்) ரெக்கமண்ட் பண்ணுங்களேன்...” என்ற கோரிக்கையை முன்வைத்தார்கள். ஒரு சிலர் சுஜாதாவை மட்டும் வாசித்தவர்களாக இருந்தார்கள். மேலும் ஒரு சிலர் “எஸ்ரா, ஜெமோ, சாரு” போன்றவர்களது விசிரிகளாக இருந்தார்கள். அவர்களிடம் “அசோகமித்திரன், ஜெயகாந்தன் (ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம்), அ. முத்துலிங்கம்” போன்றோரது புத்தகங்களைப் பற்றியும், அவர்களது நீரோட்டம் போன்ற இலகுவான எழுத்து பற்றியும் பேசினேன். நண்பர்களும் ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டனர்.

எனினும், என்னைப் பொருத்தவரை இந்த வருடம் பெருமாள் முருகனின் வருடம். போலவே ஜி குப்புசாமியின் வருடமும் கூட. சந்தித்துப் பேசிய ஆயிரம் நண்பர்களிடமும் “பெருமாள் முருகன், பெருமாள் முருகன், பெருமாள் முருகன்” என்றும் “ஜி குப்புசாமி ஜி குப்புசாமி ஜி குப்புசாமி” என்றும் இருவரது பங்களிப்பு குறித்தும் தான் அதிகம் பேசினேன்.

முடிவாக “உங்கக் கூட பேசினதுலையும், இந்த ரைட்டர்ஸ் பத்திய சின்ன டெமோ கொடுத்ததுலையும் எனக்கு அளவில்லாத சந்தோசம். அடுத்த வருஷம் புத்தகக் கண்காட்சிக்கு வரும்போது உங்களோட லிஸ்டுல இந்த ரைட்டர்ஸ் பெயரும் இருந்தால் நான் ரொம்பவும் சந்தோஷப் படுவேன்.” என்றேன்.

“நிச்சயமாக...” என்றவாறு நண்பர்கள் கடந்து சென்றார்கள். நாட்கள் மிக வேகமாக நகர்கிறது. பன்னிரண்டு நாட்கள் ஓடியதே தெரியவில்லை. கடைசியாக காலச்சுவடு கண்ணனுக்கு எதிரில் சென்று திமிருடன் நின்றேன். ஏனெனில் நான் தான் ஆயிரம் நண்பர்களைச் சந்தித்திருக்கிறேனே!. அதைப் பற்றிய குறிப்பும் இருக்கிறதே. சென்செஸ் ரிப்போட்டை அவரிடம் நீட்டினேன்.

புரட்டிப் பார்த்தவருக்கு வியப்பு தான் மிஞ்சும் என்று நினைத்தேன். புருவத்தை உயர்த்தியவர் என்னைப் பார்த்துக் கேட்டார்: “எத்தனை நாட்கள் முழுநாள் கண்காட்சி நடந்தது.”

“சரியா தெரியலை... ஒரு ஏழு நாள் இருக்கும்” என்றேன்.

“சரி ஆறு நாளுன்னே வச்சிக்கோங்க. உங்களுக்கு சலுகையா இருக்கட்டும். காலையில 11 மணிக்கு Book Fair ஆரம்பிச்சா – நீங்க மதியம் ஒரு மணிக்குத் தான் கண்காட்சிக்கு வந்தீங்க. ஒத்துக்குறீங்களா?” என்றார்.

“ஆமா.... ஆனா... உவ்வளோ உன்னிப்பா என்னை நீங்க வாச் பண்ணீங்களா?” என்றேன்.

“இரவு 9 மணிக்கு Book Fair முடியுதுன்னா – 8 மணிக்கே வீட்டுக்கு கெளம்பிட்டிங்க... ஆம் ஐ ரைட்?” என்றார்.

“எக்ஸ்சாக்ட்லி...” என்றேன்.

“ஆறுநாள் முழுநாள் கண்காட்சி. நீங்க மதியம் ஒரு மணிக்கு தான் என்ட்ரி ஆகி இருக்கீங்க. ஆகவே, ஆரெண்டு பன்னெண்டு, கண்காட்சி நடந்த எல்லா நாளும் ஒருமணி நேரம் சீக்கிரமா(க)வே கெளம்பிட்டிங்க... அதையும் சேர்த்தால் பதனொன்னொன்னு ஒண்ணு பன்னொன்டு. இதில் மூன்றாம் நாள் லீவ் எடுத்துட்டீங்க. ஆக மொத்தத்தையும் கூட்டினால் 32 மணிநேர ரிப்போர்ட் மிஸ்ஸிங்...” என்றார் கண்ணன் கூட்டிக் கழித்து.

“இட்’ஸ் இஞ்ஜஸ்டிஸ்...” என்றேன் ஆற்றாமையில்.

“நீங்க எதை சொல்றிங்க...?” என்றார்.

“பதனொன்னொன்னு ஓன்னு பன்னொன்டு”ங்கறது என்றேன்.

“சரி சரி... அத அப்புறம் பேசிக்கலாம். ஆனால் 32 மணிநேரம் என்பது 4 முழுநாள் வேலைக்குச் சமமான கால அவகாசம். அப்படின்னா... உங்க வேலையில குறை இருக்குறது உண்மை தானே” என்றார்.

“ஹூம்.... இல்ல நீங்க போங்கு ஆட்டம் ஆடுறீங்க கண்ணன்” என்றேன்.

“யாரு நானா...! பிரபு, நீங்க லேட்டா வந்து சீக்கிரமா போனிங்களா இல்லையா? இந்த லட்சணத்துல உங்களுக்கு இண்டர்னொட்டின் இலக்கிய நடுமரம்னு வேற விளம்பரம் பண்றாங்க...” என்றார்.

“நாங்கெல்லாம் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவோம் கண்ணன்...” என்றேன்.

“சரி சரி... ஏதோ இத்தனை நாள் வேலை செய்யிறேன்னு நம்ம ஸ்டால்ல ஓபி அடிச்சி இருக்கீங்க. உங்கள கஷ்டப் படுத்தினதா இருக்க வேண்டாம். அதனால உங்களுக்குத் தேவையான புத்தகத்தை எடுத்துக்குனு வீட்டுக்குப் போங்க...” என்றார் கண்ணன்.

“பேக்கட்ல பணம் இல்லிங்கிலே கண்ணன்...” என்றேன்.

“அத... அப்புறம் பாத்துக்கலாம்... இப்போ எடுத்துட்டுப் போங்க... அடுத்த புக் ஃபேர்ல வேற ஒரு ரிசர்ச் இருக்குது... சந்திக்கலாம்... பை பை” என்றவாறு எழுந்து சென்றார் கண்ணன். காலச்சுவடு நாக’க்காவின் பரிந்துரை இல்லையேல் இந்த புத்தக ஆஃபரும் கிடைத்திருக்க வாய்ப்பில்லை. ஆகவே, அக்காவிற்கு எப்பொழுதும் போல என்னுடைய அன்பும் நேசமும். இப்படியாக இந்த வருடத்தின் புத்தகச் சந்தை இனிதே முடிந்தது. அடுத்த புத்தகச் சந்தைக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. சிறந்த முறையில் திட்டம் வகுத்து நுட்பமான முறையில் கண்ணனை ஏமாற்ற வேண்டும். அதற்கான தீவிர திட்டம் வகுத்தலில் இறங்கவேண்டும்.

அதுவரை... Bye Bye சென்னை புக் ஃபேர் 2014.

Wednesday, December 25, 2013

ரஜினிக்கு ஒரு கடிதம்

ரஜினிக்கு,

நலம் தானே நண்பரே? நீங்கள் “இவன் வேற மாதிரி” படத்துக்கு எழுதியிருந்த கடிதத்தை, பிரபல தமிழ் நாளிதழ்களின் திரைப்பட விளம்பரப் பகுதியில் பார்க்க நேர்ந்தது. (22/12/2013 – தினகரன் & தினத்தந்தி நாளிதழ்). தனிப்பட்ட மடல்களில் ஆயிரம் பிழைகள் இருக்கலாம். அதெல்லாம் ஒரு விஷயமே இல்லை.

எழுத்துப் பிழைகள், ஒற்றுப் பிழைகள், வார்தை மற்றும் வாக்கியப் பிழைகளும் கூட இருக்கலாம். கடித எழுத்தில் இதெல்லாம் இயல்புதான். ஆனால், உங்களுடைய கடிதமானது பலகோடி ரசிகர்களின் கவனத்திற்குச் செல்லக் கூடிய ஒன்று. சமீப ஆண்டுகளில் திரைப்படங்களைப் பற்றி தாங்கள் எழுதிய பாராட்டுக் கடிதங்களை நாளிதழ் விளம்பரங்களிலும், திரைப்பட சுவரொட்டிகளிலும் நிறையவே பார்க்க முடிகிறது. எனினும் கவனம் கொண்டு வாசித்ததில்லை. ஆனால் மேற்படி குறிப்பிட்டுள்ள பிரபல நாளிதழ்களில் வெளியாகியிருந்த, “இவன் வேற மாதிரி” படத்தின் மடலை வாசிக்க நேர்ந்தது. அதில் சில விஷயங்கள் கண்ணில் பட்டன.

உதாரணமாக,

1. /-- படத்தை பார்த்தேன்--/ - என்ற வார்த்தைகளுக்கு இடையில் “ப்” சேர்ந்து “படத்தைப் பார்த்தேன்” என்பதாக வரவேண்டும்.

2. /--உட்ச்சகட்ட காட்ச்சிகள் பிரமிக்க வைக்கிறது--/ - என்ற வாக்கியத்திலும் பிழைகள் இருப்பதாகத் தோன்றுகிறது. உச்சகட்ட காட்சிகள் பிரம்மிக்க வைக்கிறது என்பது தான் சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது. மேலும் “பிரம்மிக்க வைக்கின்றன” என்றிருந்தால் இன்னும் கூட நன்றாக இருக்குமோ என்ற எண்ணமும் எழுகிறது.

3. போலவே, /-- இந்த படம் வெற்றிக்கு என் வாழ்த்துக்கள்--/ என்ற வாக்கியமும் தங்களது மடலின் கடைசி வரியாக அமைகிறது. இதுவும் கொஞ்சம் போல உதைக்கக் கூடிய வாக்கிய அமைப்புதான். “இந்தப் படம் வெற்றிபெற என்னுடைய வாழ்த்துக்கள்” அல்லது “இந்தப் படத்தின் வெற்றிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்” என்பது போல வாக்கியத்தை அமைத்திருந்தால் கோர்வையாகவும் அழகாகவும் இருந்திருக்கும்.

“இவன் இலக்கிய மாணவனாக இருப்பானோ?”, “மொழி ஆர்வலனோ?” என்பது போன்ற எண்ணங்கள் உங்களுக்கு எழலாம். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. வாசிப்பதில் மிகுந்த நாட்டம் உள்ளவன். அந்த வகையில் தான் தங்களின் கடிதத்தையும் வாசித்தேன். அதிலுள்ள ஒன்றிரண்டு அபிப்ராயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள நினைத்தேன். அவ்வளவே.

உங்களுடைய “Letter Pad” –ல் கைப்பட எழுதித் தரும் திரைப்படங்களைப் பற்றிய பாராட்டு வாசகங்கள் - ஸ்லோகங்கள் போல நாளிதழ்களிலும், திரைப்பட சுவரொட்டிகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. எனவே கொஞ்சம் போல கவனம் எடுத்து எச்சரிக்கையுடன் எழுதித் தரலாமே. முடிந்தால் ஓர் உதவியாளரின் துணைகொண்டு, கடிதத்திலுள்ள பிழைகளைத் திருத்தி உரிய நபர்களுக்கு அனுப்பி வைக்கலாமே. ஓர் அரங்கக் கலைஞனாக இருந்தவருக்கு, மேடை நாடக நடிகராக இருந்தவருக்கு பிழையற்ற மொழியின் முக்கியத்துவம் பற்றி சொல்லித் தெறிய வேண்டியது இல்லையே.

மடலின் வழியே உங்களுடன் பேசியதில் மிக்க மகிழ்ச்சி நண்பரே. இக்கடிதத்தை நேர்மறையாக அணுகி, நட்புடன் சகித்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

நன்றி.

அன்புடனும் நட்புடனும்,
கிருஷ்ணபிரபு

Friday, December 20, 2013

மாணவியை மிரட்டுவது ஞாயமா?


உப்பு சப்பில்லாத விஷயமாகத் தோன்றலாம். இதன் பின்னணியில் இருக்கும் மரபான உளவியல் அவசியம் களையப்பட வேண்டிய ஒன்று. ஆங்கிலேயர்களிடமிருந்து கடன் பெற்ற “
Sir, Madam” போன்ற வார்த்தைகளை – அரசு இயந்திர ஊழியர்களும், கல்வித்துறை ஊழியர்களும் பிடித்துக் கொண்டு விடாமல் தொங்கிக்கொண்டிருப்பதன் தாத்பர்யம் தான் எனக்கு இன்னும் விளங்கவில்லை. 

“யுவர் ஆனர், மை லார்ட்” – போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி என்னை அழைக்க வேண்டிய அவசியமில்லை. அதென்ன “யுவர் ஆனர், மை லார்ட்”? நீதிமன்றத்தில் எல்லோரும் சரிசமம். எனவே சாதாரணமாகவே வாதாடலாம். வேண்டுமெனில் “
Sir” என்ற வார்த்தையிப் பயன்படுத்துங்கள் என்கிறார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்ற நீதிநாயகம் சந்துரு.   

அம்பேத்கர் “மிஸ்டர், மிஸ், மிசர்ஸ்” என்ற அடைமொழியிட்டு பெயர் சொல்லியே எல்லோரையும் அழைக்கிறார். காந்திஜியை எல்லோரும் மகாத்மா என்றே அழைக்கிறார்கள். அம்பேத்கரோ “மிஸ்டர் காந்திஜி” என்றே ஒவ்வொருமுறையும் அழைக்கிறார். உச்சமாக “பூமியில் நிறைய மகாத்மாக்கள் பிறக்கிறார்கள். இறக்கவும் செய்கிறார்கள். ஆனால் தீண்டாமையால் ஒடுக்கப்படும் மக்களுக்கு அவர்களால் நல்லது எதுவும்  நடக்கவில்லை” என்கிறார். எல்லோராலும் மகாத்மா என்றழைக்கப்பட்ட ஒருவரை “மிஸ்டர் காந்தி... மிஸ்டர் காந்தி” என்றே இறுதிவரை அம்பேத்கர் அழைக்கிறார். அப்படியெனில் காந்தியை அம்பேத்கர் அவமானப் படுத்திவிட்டாரா? கலங்கப்படுத்திவிட்டாரா?

அம்பேத்கரின் வாழ்வில் சில விதிவிலக்குகளும் இருக்கின்றது. தன்னைப் படிக்க வைத்த பரோடா இளவரசரையும், பிறகு மேல்படிப்பு படிக்க, பத்திரிக்கை நடத்த என பல்வேறு உதவிகளை செய்த முற்போக்கான நவாப்பையும் “
Sir என்றே அழைக்கிறார். மற்ற எந்த ஒரு நபரையும் அவர் பெயர் சொல்லியே அழைக்கிறார். தனது பொருளாதார ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்த ஆங்கிலப் பேராசிரியரான வழிகாட்டியையும் கூட “மிஸ்டர் ...................” என்று பெயர் சொல்லியே அழைக்கிறார். 

சமீபத்தில் நான் படித்த கல்லூரியின் ஊழியர் ஒருவருக்கு, ஓர் இலக்கிய விழா சார்ந்த சந்தேகத்தை எழுப்பி – அதன் விவரம் தருமாறு கேட்டிருந்தேன். 

HI XYZ” என்று ஃபார்மலாக பெயருடன் “ஹாய்” சேர்த்து, பல கல்லூரிகளிலும்  ஏற்பாடாகியிருக்கும் ஓர் இலக்கிய விழா சார்ந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ள மின்னஞ்சல் (E-Mail) & முகநூல் உள்பெட்டித்  தகவலை (FB Message) – நான் படித்த கல்லூரியில் வேலை செய்யும், அந்த கல்லூரியின் விழா பொறுப்பினை ஏற்றிருக்கும் “XYZ” என்ற நபருக்கு அனுப்பியிருந்தேன்.

எனக்கான பதில் மின்னஞ்சல் வந்து சேரவே இல்லை. சரி அந்த “XYZ” மிகவும் பிசியான நபராக இருக்கக் கூடும் என்று நினைத்துக் கொண்டேன். (கல்லூரி விரிவுரையாளர்களுக்கும், பேராசியர்களுக்கும் இருக்கக் கூடிய மேலதிக வேலையைக் காட்டிலும் – இந்த பிரபஞ்சத்தில் வேறு யாருக்கு இருக்கக் கூடும்.)

விழா நடைபெற்ற நாளன்று அந்த கல்லூரிக்குச் சென்று நோட்டம் விட்டேன். மத்திய அரசின் வருடாந்திர பட்ஜெட் தயாரிக்கும் இடமான குவாரண்டம் போல, உச்ச பட்ச பாதுகாப்பில் விழா நடக்கும் அரங்கமானது இருந்தது. யாருக்கும் அனுமதி இல்லை என்றார்கள். கல்லூரி மாணவர்களுக்கும் கூட அனுமதி இல்லையாம். அவ்வளவு ஏன்? போட்டியில் கலந்துகொள்ளும் நபர்களைத் தவிர்த்து – கல்லூரியில் பயிலும் இலக்கியத் துறை மாணவர்களுக்கும் கூட அனுமதி இல்லை. கூத்து என்னவெனில் நடந்தது “கவிதை ஒப்பிக்கும் போட்டி”...!

இலக்கியம் பயிலும் மாணவர்களுக்கு பார்வையாளராக உட்கார அந்த இடத்தில்  அனுமதி இல்லை என்பது துருதிஷ்டம். போதிய இடவசதி இல்லை என்று சொல்லி சமாளிக்கலாம். கல்லூரி வளாகத்தில் திறந்தவெளி மேடை இருக்கிறதே...! அது எதற்கு...? 

சில துறையைச் சார்ந்த மாணவர்கள் தேர்வெழுதுகிறார்கள். அவர்களுக்குத் தொந்தரவாக இருக்கும் என்ற நொண்டிச் சாக்கைச் சொல்லலாம்...! அப்படியெனில், மாணவர்களுக்குத் தேர்வு நடக்கும் பொழுது, “எப்படி ஓர் இலக்கிய விழா ஏற்பாடாகியிருக்கிறது?”. மற்ற துறையைச் சேர்ந்த மாணவர்களுக்கு இலக்கியத்தில் ஆர்வம் இருக்காதா? ஒரு பல்கலைக் கழகம் இதையெல்லாம் யோசிக்காதா?. கவனத்தில் எடுத்துக் கொள்ளாதா? அல்லது கல்லூரி நிர்வாகம் தான் இதனை அவர்களுக்கு எடுத்துச் செல்லாதா? (நாற்பதுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பல்வேறு நிரல்களுடன் கூடிய இந்த இலக்கிய விழா நடக்கிறது. ஒரு பிரசித்திபெற்ற பல்கலைக்கழகமானது, சில தனியார் நிறுவனங்களுடன் இணைந்து நடத்தும் இதுபோன்ற சடங்கான விழாவினை ஆதாரத்துடன் கடுமையாக விமர்சனம் செய்து ஒரு பதிவினை எழுத வேண்டும் என்றிருக்கிறேன். அவகாசம் இருந்தால் அந்த விஷயங்களைப் பிறகு பார்க்கலாம்.)

“நல்ல விதி நேராகாகச் சென்றால், கோணல் விதி குறுக்கால் வருமாம்” என்பது போல, எதிரில் பழவேற்காடு மீனவ குப்பத்தைச் சேர்ந்த ஒரு தங்கை வந்துகொண்டிருந்தாள். பார்த்தும் பார்க்காதது போல முகத்தை வெட்டிக்கொண்டு சென்றவளை குரல் கொடுத்து அழைத்து பேசிக்கொண்டிருந்தேன். இதனை தூரத்திலிருந்த அந்த “
XYZ” என்ற நபர் பார்த்திருக்கக் கூடும் போல. நான் அங்கிருந்து கிளம்பியதும் தங்கையைத் தனியாக அழைத்து மிரட்டியிருக்கிறார்.

“உங்கூட பேசிக்கினு இருந்தாருள்ள... அவரு எனக்கு
HI  XYZ-ன்னு ஃபேஸ் புக்குல - எம்பேரச் சொல்லி எப்படி மெசேஜ் அனுப்பலாம்?. அந்த மாதிரி இனிமே அவர், என் பெயரைச் சொல்லி மேசேஜ் பன்னினாருன்னா நான் உன்ன சும்மா விடமாட்டேன்.” என்று உடன் வேலை செய்யும் பல ஆசிரியர்களுக்கு முன்னால் அந்தத் தங்கையை மிரட்டியிருக்கிறார். (தங்கையை மிரட்டியதற்கு ஆதாரம் இருக்குமாயின் நடந்திருக்கும் கதையே வேறு. அவள் தைரியத்துடன் பேசிவிட்டு வந்திருக்கிறாள் என்பதும் வேறு கதை.)

தங்கையைக் கூப்பிட்டு மிரட்டிய விஷயத்தை என்னுடைய காதில் ஒருவர் போட்டுவிட்டுச் சென்றார்.
தங்கை இளங்கலை படிக்கிறாள். அவளுக்கு முதலிரண்டு வருடத்தில் ஆங்கிலமும் பாடமாக வரும் (| & || Paper). அவளுடைய அண்ணன் கல்லூரிக்குச் சென்றிருந்தாலும்... இன்னும் பட்டம் வாங்கவில்லை. அவனுக்கு இன்னும் ஒன்றிரண்டு பாடத்தில் அரியர் இருக்கிறது. அந்த வகையில் இவள் தான் குடும்பத்தின் முதல் பட்டதாரி ஆகப் போகிறாள். கடற்கரை கிராமத்தைச் சேர்ந்த தலித் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணும் கூட.

எனக்கு எங்குமில்லாத கோவம் வந்துவிட்டது. மெயில் அனுப்பியது நான். முகநூலில் மெசேஜ் செய்ததும் நான். மிரட்ட வேண்டுமெனில் என்னை மிரட்டி இருக்கலாம். கேட்க வேண்டுமெனில் என்னிடம் நேரடியாகவே அதை பற்றிக் கேட்டிருக்கலாம். மின்னஞ்சலில் தனது அதிருப்தியை குறிப்பிட்டு, விமர்சனம் செய்து மின்னஞ்சல் அனுப்பி இருக்கலாம். அதை விட்டுவிட்டு, இந்த விஷயத்தில் சம்மந்தமே இல்லாத ஒரு மாணவியைக் கூப்பிட்டு மிரட்ட வேண்டிய அவசியம் தான் என்ன? எங்கிருந்து இதுபோன்ற குறுக்கு புத்தியும், பழிவாங்கும் மனப்பான்மையும் ஓர் ஆசிரியருக்கு வருகிறது? இந்த தைரியம் எப்படி அவர்களுக்கு வருகின்றது?

ஆகவே, கல்லூரி இருக்கும் பகுதியின் SFI President-ஐ அழைத்து என்னுடைய ஆதங்கத்தை மிக அழுத்தமாக பதிவு செய்தேன். கூடவே “Sir, Madam-ன்னு எல்லாம் இவங்கள எதுக்குக் கூப்பிடனும். அம்பேத்கரிடமிருந்து கடன்வாங்கிக் கொண்ட பெயரிட்டு அழைக்கும் முறைதான் என்னுடைய பழக்கமும் கூட. சம்மந்தமே இல்லாத விஷயத்திற்கு ஒரு மாணவி ஏன் தண்டிக்கப்படனும்? அவங்கள பேர் சொல்லி தான் கூப்பிட்டேன். ஆனால் மரியாதைக் குறைவாகவோ அல்லது தனிப்பட்ட தேவையில்லாத விஷயத்தையோ அவர்களிடம் எதுவும் பேசவில்லை. அதனால வர்ற பிரச்சனைய நான் பாத்துக்குறேன் தோழர். ஒன்றுமில்லாத விஷயத்திற்கு - என்னை வச்சி ஒரு மாணவிய பழி வாங்கறாங்கன்னா அத நீங்க தான் கவனிக்கணும்... ஒருத்தரை பிளாக்மெயில் பண்றதும், மிரட்டுவதும் சட்டப்படி தப்பு. சாட்சிகள் இருக்கும் பட்சத்தில் அந்த தங்கச்சிக்கு உங்க இயக்கம் சப்போர்ட் பண்ணணும் தோழர். ஒருவேளை சாட்சிகள் இல்லை எனினும் இந்த மாதிரி விஷயத்துக்கு எந்தவிதத்தில் தீர்வு காண்பது என்பதையும் யோசித்துப் பாருங்கள்.” என்றேன்.

“கண்டிப்பாங்க’ண்ணா...” என்றார் SFI President.

யாரேனும் நம்மைப் பெயர் சொல்லி அழைத்தால் அதனை அவமானமாகக் கருத வேண்டுமா? இந்தியர்களின் ஆன்மாவுடன் Sir, Madam போன்ற வார்த்தைகள் இரண்டறக் கலந்துவிட்டது போல. இந்த வார்த்தைகளைக் காதால் கேட்டு உச்சி குளிர்வதில் தான் இவர்களது ஜென்மப் பிறவியே இருக்கிறது போல. “வா, போ, வாடி, போடி, வாடா, போடா...” என்று ஒருமையில் அழைப்பது தவறு. பெயர் சொல்லியும், பெயருடன் “வாங்க போங்க” என்று அழைப்பது எந்த விதத்தில் மரியாதைக் குறைவான காரியம் என்றே புரியவில்லை.

பேராசிரியர் அ. மார்க்ஸ், (மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக) தமிழ் துறைப் பேராசிரியர் அ. ராமசாமி, நாடகத் துறைப் பேராசிரியர் மு. ராமசாமி, பேராசிரியர் (வெங்கடா)சலபதி, மனிதவளத் துறைப் பேராசிரியர் ஸ்ரீனிவாசன், பேராசிரியர் பெருமாள் முருகன், ஆங்கிலத் துறைப் பேராசிரியை மங்கை, ஓய்வுபெற்ற பேராசிரியர்கள் ரத்னவேல், முனைவர் ராமகுருனாதன், முனைவர் திருப்பூர் கிருஷ்ணன் போன்ற பலரையும் கூட பெயர் சொல்லி கூப்பிட்டுப் பேசியிருக்கிறேன். ஒருவரும் முகம் சுழித்ததில்லை. அருவருப்பாகப் பார்த்ததில்லை. வாஞ்சையுடன் மட்டுமே பேசியிருகிறார்கள். அடுத்தடுத்த சந்திப்புகளிலும் அன்புடன் அனுகியிருக்கிறார்கள். வழி நடத்தியும் இருக்கிறார்கள். இவர்களில் பலரும் “நவீன படைப்பிலக்கியம், விமர்சனம், கட்டுரை, நாடகம்” என பல வடிவங்களில் வளமான பங்களிப்பை மொழிக்குச் செய்திருக்கிறார்கள். அந்தந்த துறைகளில் பழம் தின்று கொட்டையைப் போட்டவர்கள் என்பதும் முக்கியமான விஷயம்.
நேரடியாகக் கூப்பிட்டு என்னிடம் பேசியிருந்தால் அதற்கு மரியாதையாகவும் பணிவுடனும் விளக்கமளித்திருப்பேன். தரம்கெட்ட முறையில் ஒரு மாணவியைத் தனியாகக் கூப்பிட்டு மிரட்டிய ஓர் ஆசிரியரை விட்டுவிட முடியுமா? அப்படி மிரட்டியதை அந்த துறையைச் சேர்ந்த மற்ற ஆசிரியர்களும் பார்த்துக்கொண்டு எதிர்வினையாற்றாமல் இருந்திருகிறார்கள். படமெடுக்கும் நாகத்தின் படர்ந்த தலையில் நின்றுகொண்டு நர்த்தனம் ஆடுவதுதான் திருவிளையாடலா என்ன? மரபில் ஊறித் திளைக்கும் மனிதர்களுக்கு எதிராக - மாற்றத்தின் குறியீடாகவும், நவீனத்தின் அடையாளமாகவும் வாழ்வின் போக்கில் சில எதிர்வினைகளை ஆற்றுவதும் திருவிளையாடல் தானே...! அதைத் தான் செய்யலாம் என்றிருக்கிறேன்.

இனி என்னுடைய நக்கலும் நையாண்டியுமான திருவிளையாடல் ஆரம்பமாக இருக்கிறது. அதே கல்லூரியில் அடுத்து நடக்கவிருக்கும், அதே இலக்கிய விழாவின் மற்றொரு நிகழ்வைப் பற்றிய சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ள, பிரசித்தி பெற்ற பல்கலைக்கழகம் விழாவினை நெறியாள்கை செய்யும் பொறுப்பினை ஒப்படைத்துள்ள அதே “
XYZ” என்ற நபருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்ப உத்தேசித்திருக்கிறேன். அந்த மின்னஞ்சலை இப்படி ஆரம்பித்தால் நன்றாக இருக்கும் தானே...!

Respected Prof XYZ,

Blah blah blah….
Blah blah blah…. Blah blah blah…. Blah blah blah….

With Humble,
Krishna Prabhu

மாணவியைக் கூப்பிட்டு மிரட்டிய விஷயம் என்னுடைய காதிற்கு வந்துவிட்டது என்பதை சூசகமாக உணர்த்த வேறு வழியில்லையே...! மேற்கண்ட மின்னஞ்சலைக் கண்டு மேன்மை பொருந்திய மாண்புமிகு ஸ்ரீலஸ்ரீ
“XYZ” அவர்கள் ஒற்றைக்காலில் நர்த்தனம் ஆடலாம். பதில் சொல்லும் விதமாக நானும் அந்தரத்தில் நடனம் ஆடலாம் என்றிருக்கிறேன். அதற்கும் மேல் கடவுள் விட்ட வழி... 

# ஒரு கல்லூரியின் பழைய மாணவனாக, அந்தக் கல்லூரியின் இலக்கிய விழாவில் பங்கெடுக்கும் உரிமை எனக்கிருக்கிறதா? இல்லையா?
என்று கேள்வி எழுப்ப நினைத்த எனக்கு “கல்லூரியில் பயிலும் இலக்கியத் துறை மாணவர்களே புறக்கணிக்கப் படுகிறார்கள்...” என்பது மலைப்பான விஷயமாக இருக்கிறது. மரபில் ஊறிய ஆசிரியையின் போக்கு அதனினும் மலைப்பாக இருக்கிறது.

மேலும் அட்டானமஸ் காலேஜ் என்பதால் உப்புசப்பான சமந்தமே இல்லாத விஷயத்திற்கெல்லாம் கூட மாணவர்கள் மிரட்டப்படுகிறார்கள் என்பது மேலதிக பதைப்பாக இருக்கின்றது.  
பழைமை ஊறிய கல்வித்துறையும், அந்த பழங்குட்டையில் ஊறிய பழைமைவாதி ஆசிரியர்களும் திருந்தவே மாட்டார்கள் போல.

அசுபம்... அமங்களம்...