Friday, August 16, 2013

ஆதலால் காதல் செய்வீர் – ஒரு பார்வை

நண்பர்களைப் பார்ப்பதற்காக தரமணி திரைக் கல்லூரிக்கு விசிட் அடித்துவிட்டு, மத்திய கைலாஷ் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தேன். குரோட்டன்ஸ் செடியை நூல்பிடித்து வெட்டியதைப் போல, தலையிலுள்ள சுருட்டை முடியை ஹேர்கட் செய்திருந்தார் ஒருவர். டிப் டாப்பான தோற்றத்தில் வேறு அந்த நபர் இருந்தார். நெருங்கிச் சென்று “நீங்க பழநியண்ணனோட மூத்த மகன் தானே...!” என்று கேட்டேன். 

“ஆமாங்கண்ணா...” என்றார். விசாரித்ததற்கு MSW (சோஷியல் வொர்க்) படிப்பதாகக் கூறினார்.

“பாக்குறதுக்கு ஃபேஷன் டிசைன் படிக்கறவரு மாதிரி விநோதமா இருக்கீங்க...! மாடலிங் பன்றிங்களோ...? ஹேர் ஸ்டைல் வித்யாசமா இருக்கே?” என்று கமென்ட் அடித்தேன்.

“எதுக்கு மொக்கை போடுறீங்க...?” என்பது போல மெலிதாகச் சிரித்துக் கொண்டார். பேருந்து வரவும் அவருக்கு டாட்டா காட்டிவிட்டு ஏறிக்கொண்டேன். தூரத்திலிருந்து பார்பதற்கு - புட்டபதி சாய்பாபா போல அவரது தலைமுடி புதராகத் தெரிந்தது. 


புதிதாகக் குடியேறியிருக்கும் பொன்னேரி வீட்டின் அடுத்த தெருவில் தான் பழநியண்ணன் குடும்பத்துடன் வசிக்கிறார். திரையில் அவரது மூத்த மகனின் (மோகன்பாபு என்கிற பிரசாத்) முகத்தைப் பார்த்ததும் ஆச்சர்யம் தாங்கவில்லை. பொன்னேரி பழைய பஸ் ஸ்டாண்டில், மசூதியை ஒட்டினாற் போல “பழநி கூல் டிரிங்க்ஸ்” என்றொரு சிறிய பழரசக் கடை இருக்கும். ஏறக்குறைய இருபத்தைந்து வருடங்களாக அந்தக் கடை இருக்கிறது. பழநியண்ணனுக்கு உடல்நிலை சரியில்லையெனில் மோகன்பாபுவை அங்குக் காண முடியும். அவர் தான் ஹீரோவின் கல்லூரித் தோழனாக “ஆதலால் காதல் செய்வீர்” படத்தில் நடித்திருக்கிறார். ரொம்பவும் அழுத்தமான கதாப்பாத்திரம் ஏற்றிருக்கிறார் என்றெல்லாம் சொல்ல முடியாது. இனி நல்ல கதாப்பாத்திரங்கள் அமைந்து கோலிவுட்டில் மோகன்பாபு ஜொலிக்க வாழ்த்துக்கள்.

“ஆதலால் காதல் செய்வீர்” - காதல் செய்பவர்கள் மனதளவில் மட்டுமின்றி, உடலளவில் நெருங்கி விளையாடி குஷியை அனுபவிப்பதும் சகஜம் தான். மெரீனா பீச் சென்று பாருங்கள். பெசன்ட் நகர் சென்று பாருங்கள். சென்னை செம்மொழிப் பூங்காவிற்குச் சென்று பாருங்கள். காதலர்கள் நெருக்கமாக அமர்ந்துகொண்டு ஒருவரை ஒருவர் பிசைந்து மயங்கிக் கிடப்பார்கள். அருகில் யாரேனும் கடந்து சென்றால் கூட அவர்களுக்குப் பிரச்னை இல்லை. உடல் கிளர்ச்சியை விட்டுக் கொடுக்கவே மாட்டார்கள். 
“தூ... இதெல்லாம் ஒரு காதலா...? ஒடம்பு சொகத்துக்கு அலையுற சனியனுங்க...! நல்ல குடும்பத்துல பொறந்ததுங்களா இதுங்க...!? உச்சி வெயில் கொளுத்துதே... சூத்து வெந்துடாது... நாதாரிங்க...” என்போம். நம்மால் செய்ய இயலாத ஒன்றை, அடுத்தவன் செய்யும் பொழுது அடிவயிற்றில் புகை கிளம்புவதும் சகஜம் தானே. அதுவுமில்லாமல் அட்டகாசமான ஃபிகர்ஸ் எல்லாம், அட்டு பசங்கக் கூட சுத்தறது ஜீரணிக்கக் கூடிய ஒன்றா என்ன?

இதே விஷயத்தை ‘ஓர் அமெரிக்கரோ! ஆங்கிலேயரோ! ஜெர்மனியரோ! அல்லது ஏதேனும் மேற்கத்திய நாட்டினரோ’ கோவா பீச்சில் - நிர்வாணக் குளியளுடன், இதழுடன் இதழ் கவ்வி முத்தமிட்டு சந்தோஷித்திருக்கும் காட்சியைக் காண நேர்ந்தால்: “என்னமா லைஃப்-அ என்ஜாய் பன்றான்யா வெளிநாட்டுக்காரன். அவனுங்களுக்கு ஒடம்பெல்லாம் மச்சம்’யா!? பொறந்தா அந்த நாட்டுல பொறக்கனும்யா” என்று ஆதங்கப்படுவோம். உலகின் எந்தப் பகுதியில் வசிப்பவராக இருந்தால் என்ன? காதலில், காம எண்ணங்கள் பீரிடுவதும் ஒரு பகுதி தானே. நமது சமூக அமைப்பு திருமணத்திற்கு முன்பு உடலளவில் நெருங்கிப் பழகுவதையும், உடலுறவு கொள்வதையும் ஒரு பெரிய சமூகக் குற்றமாகக் கருதுகிறது. அந்த உளவியல் சிக்கலைத் தான் இந்தப் படம் பேசுகிறது.

மரபான கலாச்சார வாழ்வு, யதார்த்த வாழ்வியல் முறையிலிருந்து (Life style) முரண்பட்டு விலகுவதை சுசீந்திரன் திரைக்கதையாக வடித்துள்ளார். நடுத்தர குடும்பத்து ஆணும், பெண்ணும் காதலிக்கின்றனர். மரபான கலாச்சாரப் பின்னணியிலிருந்து வந்திருந்தாலும், நபர்கள் வட்டத்தில் அவர்களது வாழ்வியல் முறை மேற்கத்திய கலாச்சாரத்தை ஒத்திருக்கிறது. “காஃபி டே, ஷாப்பிங், டின்னர்” என்று சுற்றுகிறார்கள். போலவே ‘மது அருந்துதல், டேட்டிங் செல்லுதல்’ போன்றவற்றை ‘ஃபிரண்ட்ஸ் பார்ட்டி’ என்ற ஒற்றை வார்த்தையில் கடந்து செல்கிறார்கள். இப்படிப் பட்டவர்களின் முதிர்ச்சியற்ற காதல், கவனக் குறைவான பாதுகாப்பற்ற உடலுறவு மற்றும் அது சார்ந்த பின் விளைவுகள் பற்றியே படம் அலசுகிறது.

ஹீரோவாக நடித்திருக்கும் சினிமா தயாரிப்பாளர் ஒருவரது மகன் “சந்தோஷ் ரமேஷ்” பல இடங்களில் நெருட வைக்கிறார். பார்க்கச் சகிக்கவில்லை. சில இடங்களில் கதாப்பாதிரதிற்கு கச்சிதமாகப் பொருந்திப் போகிறார். ஹீரோயின் கொள்ளை அழக்காக ஜொலிக்கிறார். இவ்வளோ அழகான பொண்ணு ஒருத்தன லவ் பண்ணா...!? எந்த பையன் தான் சும்மா இருப்பான். பூர்ணிமா பாக்கியராஜ், ஜெயபிரகாஷ் போன்றவர்கள் நடுத்தர பெற்றோர்களாக வாழ்ந்திருக்கிறார்கள். கேமரா, எடிட்டிங் போன்றவையும் திரைப்படத்திற்கு கைகொடுதிருக்கிறது. இந்தப் படத்தின் மியூசிக்கை “ஆஹா ஓஹோ”-ன்னு பேசுறாங்க. அதெல்லாம் சபை நாகரீகம் கருதி முகஸ்துதி செய்கிறார்கள்.

கட்டுக்கோப்பான இசையும், பாடல்களும் இருந்திருந்தால் இன்னும் கூட இந்தப் படம் முத்திரையைப் பதித்திருக்கும். பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கும். யுவன் ஷங்கர் ராஜா இந்தத் திரைப்படத்தில் தனது முக்கியத்துவத்தை உணராமல் வேலை செய்திருக்கிறார். படத்தின் கடைசியில் வரும் பாடல் ஆளையே உருக்குகிறது என்று சமூக வலைத்தளங்களில் பார்க்க முடிகிறது. பாலாவின் “சேது” திரைப்படத்தின் வரும் “வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா மார்ப்பு துடிக்குதடி...” என்ற கிளைமேக்ஸ் பாடலுடன் ஒப்பிட்டுப் பேசுகிறார்கள். அதெல்லாம் அதீத ஒப்பீடு. காட்சிகள் ஏற்படுத்தும் சலனத்தைக் கூட, இருட்டு அரங்கில் ஒலிக்கும் பாடல் ஏற்படுத்தவில்லை.

லாஜிகல் மிச்டேக்ஸ் கிடக்கட்டும். எனக்குத் தெரிந்து குறையாகப்படுவது. இந்தப் படத்தில் சொல்லிக்கொள்ளும்படி காமெடி டிராக்கே இல்லை. சுசீந்திரன் எதற்காகத் தவிர்த்தார் என்று தெரியவில்லை. ரெட்டை அர்த்த ஜோக்குகளை துணிந்து சேர்த்திருக்கலாம். (சமீபத்தில் +2 படிக்கும் மாணவர் ஒருவர் அனுப்பி இருந்த ஜோக்கை இங்கு பகிர்ந்தால் என்னுடைய உருவச் சிலையை எரிப்பீர்கள்.)

மொத்தத்தில் “ஆதலால் காதல் செய்வீர்” திரைப்படத்தை விழிப்புணர்வுப் படம் போல எல்லோரும் பகிர்கிறார்கள். கதையுடன் ஒட்டிய விஸ்தாரமான காமெடி டிராக் இல்லாததுதான் அப்படியொரு மூடினை கிரியேட் செய்கிறது போல. இது எல்லோரும் பார்க்கக் கூடிய “பீல் குட் மூவி” தான். தாராளமாக ஒருமுறை தியேட்டருக்குச் சென்று பார்க்கலாம்.

நல்ல படத்தைக் கொடுத்த இயக்குனர் சுசீந்திரன் அவர்களுக்கும், தயாரிப்பாளரான அவரது தம்பி “நல்லு ஸ்டுடியோஸ்” தாய் சரவணன் அவர்களுக்கும், பழநிய’ண்ணனின் மூத்த மகன் மோகன் பாபுவுக்கும், சில ப்ரேம்களில் வந்து சென்ராலும், நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்படும் குறும்படங்களில் தொடர்ந்து முத்திரை பதித்து வரும் நடிகரான ராம் சந்திரன் அவர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

1 comment:

  1. எல்லோரும் ஆகா ஓஹோ என்று புகழ்ந்திருந்தார்கள்.. நானும் காவியப படமாக்கும் என நினைத்தேன். சுசீந்திரனின் நான் அவன் இல்லை பிடித்திருந்தது. ராஜபட்டை மொக்கை.நான் இன்னும் பர்க்கவில்லை படம்

    ReplyDelete