Saturday, March 30, 2013

செல்லாக்காசு – நடிகர் வீரேஷ்


1. ஆரோகணம் திரைப்படம் வெளிவந்த சமயம் – அந்தப் படத்தின் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்த வீரேஷுக்கு வாழ்த்துச் சொல்ல செல்பேசியில் அழைத்துப் பேசினேன். இணைப்பைத் துண்டிக்கும் சமயம் – “டெலி ஃபிலிம் ஸ்கிரிப்ட்” ஒன்றை எழுதிக் கொண்டிருப்பதாகத் தெரியப்படுத்தினான். 

“உங்களுக்கு நெறைய டேலன்ட் இருக்கு... அந்த ப்ராஜக்டும் நல்லா வரும்...” என - அதற்கும் சேர்த்தே வாழ்த்து கூறினேன்.

பிறிதொரு நாளில் அமுதுவை சந்திக்கச் சென்றிருந்த பொழுது, “1985-90 களில் நடக்கும் கதை” என்று எதிரில் உட்காரவைத்துக் கொண்டு முழுக் கதையையும் சொல்லத் துவங்கினான் விரூ. “அடடே... இன்னைக்கு நம்ம ராசிபலன்ல மரண மொக்கையை அனுபவிப்பீர்கள்-ன்னு போட்டிருக்குமோ? பேப்பர பார்க்காம வந்துட்டமே” என ஆரம்பத்தில் நினைத்துக் கொண்டேன்.

“பாருங்க...! சீன் இங்க ஆரம்பிக்குதுங்’ண்ணா! அப்பிடியே Zoom பண்ணி... Focus பண்ணி... இங்க டாப் ஆங்கிள்... (நடுவில் சில இடங்களில் கட்) அப்புறம் மாண்டேஜ் ஷாட்... நச்சின்னு இப்பிடி End ஆகுது...” என மொத்தக் கதையையும் கூறி முடித்தான். மேலதிகமாக “கத எப்பிடின்னா இருக்கு?” என்றான்.

“ஆங்... சூப்பர்...” என்றேன்.

“தேங்க்ஸ்’நா” என்றான்.

“அடக் கிறுக்கு பயலே!... அருமையான கதையச் சொல்லி இருக்க... நான் தானே உனக்கு தேங்க்ஸ் சொல்லணும்...” என்றேன்.

உண்மையில் கதையானது தொன்னூறுகளில் நடப்பதால் மனதிற்கு நெருக்கமாக இருந்தது. ஆனாலும் “இவன் எதுக்கு நம்மகிட்ட இந்தக் கதையச் சொல்லணும்...” என்று மனதில் நினைத்துக் கொண்டேன். அதெல்லாம் ஆகிறது கிட்டத்தட்ட மூன்று மாதம். ஸ்க்ரிப்டை வைத்துக் கொண்டு “செட் ப்ராபெர்ட்டி, அது... இது...” என ஓடிக் கொண்டிருக்கிறான். கூடவே தயாரிப்பாளரையும் தான் தேடிக் கொண்டிருக்கிறான் விரூ.


2. “இந்தப் பக்கமா வந்துட்டுப் போக முடியுமா’’ப்பா?” என ஒருவார காலமாகவே ஆண்டி கேட்டுக் கொண்டிருந்தார்கள். இன்றுதான் கொஞ்சம் போல நேரம் கிடைத்தது.

“ஏன்பா...! அவரு போயி மூணுமாசம் ஆகுது... அங்கிள் பீரோவுல பணம் ஏதாச்சும் இருக்கான்னு பார்த்து எடுத்துக் கொடு...!” என்றார்.

“ஆண்டி இதெல்லாம் ரொம்ப ஓவர்... இதுக்கா என்ன வரச் சொன்னீங்க? புருஷன் பீரோவுல பொண்டாட்டிக்குத் தான் உரிமை அதிகம்...” என்றேன்.

“ஆமா... அவர் இருக்கச் சொல்ல நீதானே ATM-ல பணம் எடுத்துக் கொடுப்ப...! உண்ணத் தவிர வேற யாரையும் அந்த பீரோவைத் தொடவே விட மாட்டாரு...! கஞ்சப் பிஸ்னாரி உயிரோட இருக்கச் சொல்ல அஞ்சி-பத்து கண்ணுல காமிச்சி இருக்குமா? ஏதாச்சும் துட்டு இருக்கான்னு பீராஞ்சிப் பாரு...” என்றார்.

கிட்டத்தட்ட 2500/- ரூபாய் ரொக்கமாக ஆங்காங்கு- கத்தைக் கத்தையாகக் கிடைத்தது. எல்லாம் 10, 20 & 50 ரூபாய் நோட்டுக்கள். பார்ப்பதற்கு சுருக்குப் பைபோல ஒன்றிருந்தது. எடுத்ததும் கலகலவென சப்தம் வந்தது. திறந்து பார்த்தால் - எல்லாம் தொன்னூறுகளின் மத்தியில் புழக்கத்தில் இருந்த 5 காசு, 10 காசு, 20 காசு, 25 காசு நாணயங்கள். கிறுக்குப் பையன் என்று நினைத்திருந்த வீரேஷ் தான் நினைவிற்கு வந்தான்.

“ஆண்டி... இதெல்லாம் செல்லாக் காசு.... நான் எடுத்துக்கட்டுமா?”

“ஓ... செல்லாக் காசுதான...! தாராளமா எடுத்துக்கோ... உனக்கா இல்லன்னு சொல்லுவேன்....” என்று கத்தைக் கத்தையாக பீரோவிலிருந்து எடுத்துக்கொடுத்த பணத்தை தடவித்தடவி எண்ணிக் கொண்டிருந்தார்.


3. கிராமத்திற்கு வந்ததும், எடுத்து வந்த செல்லாக் காசுகளை எனது அறையிலுள்ள மேசை மீது வைத்திருந்தேன். என்னைப் பெற்ற மகராசி நைசாக அதனை எடுத்துப் பார்த்திருக்கிறார்.

“எங்கடா பிச்ச எடுத்தன்னு கேக்கல...” அதற்கு பதிலாக “இந்த மாதிரி காசு’ங்கல நீயும் வச்சிருக்கியா?” என்றார்.

“இல்லியே.... ஒரு கபோதிக்குக் குடுக்கலாம்னு ஆன்டிக்கிட்ட வாங்கிட்டு வந்தேன்...”

“இதுன்னா கொஞ்சம் தான் இருக்கு... என்கிட்டே எவ்வளோ இருக்குப் பார்த்தியா...!?” என ஒரு தகர டப்பாவை திறந்து காண்பித்தார் என்னைப் பெற்ற மகராசி. எல்லாம் என்பதுகளின் மத்தியில் புழக்கத்தில் இருந்த அலுமினியக் காசுகள். (என்னுடைய தாயாருக்கு இது போன்ற நாணயங்களைச் சேகரிக்கும் பழக்கம் இருப்பது இன்று தான் எனக்கே தெரிய வந்தது.)

“ஆமா... யாரோ கபோதின்னு சொன்னியே... அவனுக்கு எதுக்கு இந்த மாதிரி காசுங்க?” என்றார்.

“ஒரு படம் எடுக்கப் போறான். அந்த காலத்துல நடக்குற கத...” என்றேன்.

“இதெல்லாம் கூடவா தேவைப்படும்... சரி இந்தா... அவன்கிட்டையே இதையும் கொடுத்துடு...!” என்று தகர டப்பாவை என்னிடம் நீட்டிவிட்டுச் சென்றார்கள்.


முடிவு:

விரேஷ் அந்தக் கதையை என்னை உட்கார வைத்துச் சொல்லவில்லை எனில் அலுமினியக் காசுகள் எனக்கும் செல்லாக் காசுகளாகத் தான் இருந்திருக்கும். அவற்றைப் பார்த்ததும் “இது எதுக்குங்க ஆண்டி இனிமே...! தூக்கிப் போட்டுடுங்க...” என சொல்லியிருப்பேன்.

“போகச்சொல்ல நீயே குப்பையில போட்டுட்டுப் போயிடு...” என அவர்களும் சொல்லி இருப்பார்கள்.

ஒரு சந்திப்பு – அதன் மூலம் கிடைக்கும் அனுபவங்கள் – நினைவின் தாழ்வாரத்தால் தலையில் தட்டி நம் வாழ்வின் தரிசனன்களை உணர்த்திவிடுகின்றன.

அலுமினியக் காசுகளைப் பார்த்ததும் “இவன் எதுக்கு நம்மகிட்ட இந்தக் கதையச் சொல்லணும்...” – என்று மனதில் நினைத்த வார்த்தைகள் அசரீரி போலக் காதில் கேட்டன. வாழ்வில் நடக்கும் எல்லாவற்றிற்கும் ஒரு காரணம் இருக்கத் தானே செய்கிறது! தூக்கத்தில் வரும் கனவுகளாகவே இருந்தாலும் கூட.

3 comments:

  1. வாழ்வில் நடக்கும் எல்லாவற்றிற்கும் ஒரு காரணம் இருக்கத் தானே செய்கிறது!

    ReplyDelete
  2. வாழ்வில் நடக்கும் எல்லாவற்றிற்கும் ஒரு காரணம் இருக்கத் தானே செய்கிறது! தூக்கத்தில் வரும் கனவுகளாகவே இருந்தாலும் கூட.//

    சிலிர்க்க வைக்கும் நிதர்சனம்!

    நான் கூட இப்படியான காசுகளை சேகரித்து வைத்திருக்கிறேன். இன்னும் காரண காரியம் விளங்காமல்...

    ReplyDelete