Friday, March 8, 2013

சுண்டாட்டம் – திரை விமர்சனம்

கிராமத்தில் வாழ்ந்த எங்களுக்கெல்லாம் பள்ளி விடுமுறையானது கொண்டாட்டங்கள் நிறைந்தது. கோடை விடுமுறையில் பாட்டியின் பிறந்த ஊரான ஆமூரில் சில நாட்களும், அம்மாவின் தங்கை வாழ்க்கைப் பட்டுச் சென்ற புதுவண்ணாரப் பேட்டை(கூட்டுசாலை)-யில் சில நாட்களும் தஞ்சம் அடைவோம். அம்மாவின் தங்கை அந்த காலத்திலேயே BA படித்தவள். என்றாலும் குடும்ப சூழ்நிலை காரணமாக பேக்கரியில் வேலை செய்த ஒருவருக்குக் கட்டாயத் திருமணம் முடித்தார்கள். சித்தியின் கணவர் என்னமோ தங்கமானவர். நிறைய சம்பாதிக்கத் தெரியவில்லையே தவிர, அன்பான மென்மையான மனிதர். விடுமுறைக்குச் செல்லும் மாலை நேரங்களில் - மீன் மார்கெட், பீச், சினிமா தியேட்டர் என திருவற்றியூர் முதல் மகாராணி தியேட்டர் வரை எங்காவது செல்லும் பொழுது தெருவீதிகளில் சிறுவர்களும் இளைஞர்களும் திரள் திரளாக நின்று கேரம்போர்ட் விளையாடுவதைப் பார்த்திருக்கிறேன். (வியாசர்பாடி, ஜமாலியா போன்ற இடங்களில் இப்பொழுதும் கூட அரிதாகப் பார்க்கலாம்). விரல்களால் சுண்டி விளையாடும் அந்த விளையாட்டை மையமாகக் கொண்ட கதைக் களம் தான் சுண்டாட்டம்.

ஏறக்குறைய ஆறு வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த சித்தி, இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்த பின்னர் விவாகரத்துப் பெற்று – கார் டிரைவரான கணவரின் நண்பருடன் சேர்ந்து வாழத் தொடங்கினாள். அதன்பின் குடும்ப உறவுகளெல்லாம் அவளை ஒதுக்கி வைத்தார்கள். அப்போதிலிருந்து வட சென்னை வாசமும் அற்றுப் போனது.

ஒரு ரெபரன்ஸ்-க்காக 1985 முதல் 1990 –ம் ஆண்டுகளுக்கு இடையில் பயணிக்கும், நகர வாழ்க்கையை மையமாகக் கொண்ட படைப்புகளில் சிலவற்றை தேடிக் கொண்டிருந்தேன். தேவைப்படுவது போல உருப்படியாக ஒன்றும் கிடைக்கவில்லை. சுண்டாட்டம் (கேரம்ஃபோர்ட்) & பூகோளம் (பாக்ஸிங்) ஆகிய இரண்டு திரைப்படங்களும் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் நடக்கும் கதையை மையமாகக் கொண்டது என்பதால் படம் வெளிவந்ததும் பார்த்துவிட வேண்டும் என்றிருந்தேன். அதில் சுண்டாட்டம் மகளிர் தினமான மார்ச் 8 -ல் திரைக்கு வந்திருக்கிறது. ஜூலை 22, 1990 - ஞாயிற்றுக் கிழமை என கொட்டை எழுத்துகளில் போட்டு, நம்மைத் தயார்படுத்திய பிறகுதான் சினிமா பயணிக்கத் துவங்குகிறது.

பெரும்பாலான திரைப்படங்களில் வாய்ஸ் ஓவரில் கதையைச் சொல்வது நெருடலாகவே இருக்கிறது. கவுதம் வாசுதேவன் படங்களில் இது மிக அதிகமாக இருக்கும். வார்த்தைகளால் கதையைச் சொல்ல சினிமா எதற்கு? (நான் பார்க்கும் பெரும்பாலான குறும்படங்களில் இந்த முறைதான் பயன்படுத்தப்படுகிறது. இதனைக் கொஞ்சம் தவிர்த்து, காட்சியின் மூலம் கதையை நகர்த்தினால் நன்றாக இருக்கும்.)

ரவுடிக் கும்பல் ஒருவனைத் துரத்துகிறார்கள். ஓடவிட்டு அவனை வெட்டுகிறார்கள். வில்லன் பாக்யா கூலாக கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு அறிமுகமாகிறார். (வில்லன் வேடமோ! குணச்சித்திர வேடமோ! கச்சிதமாகச் செய்கிறார் இந்த நடிகர்.) ஆஹ்ஹ்...! நீங்கள் சரியாக கணித்திருப்பீர்கள். ஆம்... இப்பொழுது ஹீரோவின் முறை. அவர் கள்ளத்தனமாக பெட்டிங் செய்து கேரம்போர்ட் விளையாடிக் கொண்டிருக்கிறார். எதிரிகள் சாதூர்யமாக ஹீரோவை ஏமாற்றுகிறார்கள். அவர்களிடம் சண்டையிட்டு ஜெயித்த பணத்தைப் பிடுங்கிச் சென்று தண்ணியடிக்கிறார்கள் ஹீரோ கும்பல். அங்கிருந்து சினிமா அரங்கிற்குச் செல்கிறார்கள். ஹீரோ மட்டும் தன்னை எடைபோட்டுப் பார்க்கிறார். துண்டுச் சீட்டு வெளி வருகிறது. அதில் “உங்கள் தேவதையைக் காண்பீர்கள்” என எழுதியிருக்கிறது. ஹீரோவும் உதடு விரியச் சிரித்துக் கொண்டு அரங்கின் உள்ளே செல்கிறார். அங்கே ப்ளூ ஃபிலிம் ஓடிக்கொண்டிருக்கிறது. “எந்த தேவதை புளூ பிலிம் பார்க்க இங்க வரப்போறா? ஹீரோவின் கண்களில் படப் போறா?” என்ற யோசனையும் உடனெழுந்தது. நல்லவேளை அப்படி எதுவும் நடக்காமல் - போதையில் தல்லாடியவேறே வீட்டிற்குச்சென்று, தட்டைக் கூட பயன்படுத்தாமல் தரையில் மண்சோறு சாப்பிடுகிறார். ஹீரோவின் அம்மா, அப்பா, தங்கை ஆகியோர் அறிமுகமாகிறார்கள். பின்னர் ஹீரோ தூங்கச் செல்கிறார்.

“டக் டக் டக்” என கதவு தட்டும் ஓசை கேட்கிறது. ஹீரோ கண்விழிக்கிறார். நொந்தவாறு எழுந்து சென்று கதவையும் திறக்கிறார். பல் தேய்க்காத அவருடைய முகத்தில் பளிச்சென சூரிய ஒளி அடிக்கிறது. அது சூரிய ஒளி இல்லை – தங்கையின் தோழியான ஹீரோயினியின் முக ஒளி என்பதை அறிகிறார். “தேவதையைக் காண்பீர்கள்!” துண்டுச் சீட்டு அவருக்கு ஞாபகம் வருகிறது. எனக்கோ “அம்மா, அப்பா, தங்கை” ஆகிய மூவரும் இரவு நேரத்தில் வீட்டில் தானே இருந்தார்கள். கதவைக் கூட திறக்காமல் எப்படி அவர்கள் வெளியில் சென்றிருப்பார்கள் என யோசித்துக் கொண்டிருந்தேன். (சரி போகட்டும் ஒரு மூலையில் தூங்கிக் கொண்டிருப்பார்கள்.)

பின்னர் ஹீரோ, ஹீரோயினியை நினைத்து மறுகிறார். கனவுலகில் மிதக்கிறார். பாஸ்போர்ட் எடுக்க்கும் ஏஜெண்டைப் பார்க்கச் செல்லும் இடத்தில் சிலர் கேரம் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். பாக்யாவின் ஆட்கலெனத் தெரியாமல் அவர்களுடன் மல்லுக்கட்டி சண்டை போடுகிறார் ஹீரோ. மீண்டும் அதே இடத்திற்குச் சென்று மாட்டிக் கொள்கிறார். ரவுடிகள் துரத்த, ஹீரோ ஓட... ரவுடிகள் துரத்த, ஹீரோ ஓட... கடைசியில் பாக்யாவின் வீட்டு கக்கூசில் ஒளிந்துகொல்கிறார். பின்னர் பாக்கியாவிடமே கையும் களவுமாக மாட்டிக் கொள்கிறார். இங்கு தான் டிவிஸ்டே ஆரம்பிக்கிறது. பாக்கியா கேரம்போர்ட் வெறியர். அதற்கென கேசினோ டைப் நைட் கிளப் கூட நடத்துகிறார். எனவே இதுவரை வில்லனென நினைத்த பாக்கியா ஹீரோவுக்கு இணக்கமாகிறார். பாக்கியாவின் ஆஸ்தான ப்ளேயர் (டிரக் அடிக்ட்) ஹீரோவுக்கு வில்லனாக மாறுகிறார். தன்னுடைய இடத்தை ஹீரோ பிடித்துவிட்டதால், அவரைப் பழிவாங்கத் துரத்துகிறார் டிரக் அடிக்ட் பிளேயர். வெறியில் இரண்டு கொலைகளைக் கூட செய்கிறார். ஆரம்பத்தில் ஒருவனை போட்டுத் தள்ளினார்களே, அவர்களுடைய கேங்க் பாக்யாவை போட்டுத் தள்ளப் பார்க்கிறார்கள். அதற்கு பாக்கியாவின் தளபதிகளில் ஒருவரையே பயன்படுத்தப் பார்க்கிறார்கள். (பாஸ்போர்ட் எடுக்கும் இடத்தில் ஹீரோ சண்டையிட்டு அடித்தாரே... அவர் தான்...)

சரியான தருணத்திற்காக அந்தத் தளபதி காத்திருக்கிறார். காதலியுடன் திருட்டுக் கல்யாணம் செய்துகொள்ள ஊரைவிட்டு ஓட நினைக்கும் ஹீரோ, அதிகாலையில் CAR-ஐக் கடனாகக் கேட்க பக்யாவிடம் வருகிறார். அந்த நேரத்தில் பாக்கியாவை போட்டுத் தள்ளும் விஷயம் ஹீரோவிற்குத் தெரியவந்து, அவருடைய அடிவயிறு கூரிய கத்தி கொண்டு குத்தப்படுகிறது. பாக்யா அவரை மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றுகிறார். இதற்குள் ஹீரோயினி வீடு மாற்றிக்கொண்டு வெளியூர் சென்றுவிடுகிறார். அவரைக் காணாமல் தவிக்கிறார் ஹீரோ. ஹீரோ ஃபாரின் செல்லும் அவசரத்தில் இருக்க, திடீரென அண்ணனுடன் CAR-ல் வந்து இறங்குகிறார் ஹீரோயின். ஆனால் டிரக் அடிக்ட் பிளேயரால் கழுத்தருத்து கொல்லப்படுகிறார் ஹீரோயின். வாழ்க்கை போட்சேன்னு வாய்ஸ் ஓவரில் வருத்தப்படுகிறார் ஹீரோ. பாரத் தியேட்டர், பாரதி கல்லூரி என்று கண்பிக்கப்படுவதால் – இதனை வட சென்னை கதைக் களமாகக் கொண்டுதான் பார்க்க வேண்டி இருக்கிறது. சினிமாக்களைப் பொருத்த வரை - வட சென்னை மக்களை ரவுடிகளாகவும், போதைக்கு அடிமையானவர்களாகவும், காமத்தில் திளைப்பவர்களுமாகவே சித்தரிக்கிறார்கள். சுண்டாட்டமும் இதில் விதிவிலக்கில்லை.

வட சென்னை மக்கள் உண்மையில் உடலளவில் கடுமையாக உழைக்கக் கூடியவர்கள். “வெல்டிங், எலக்ரிஷன், மீன் பிடித்தல், பளு தூக்குதல், கூலி வேலை” என ஆண்கள் எதையும் தயங்காமல் செய்யக் கூடியவர்கள். குளிரூட்டப்பட்ட இடத்தில் வேலை செய்பவர்களே மதுவினை எடுக்கும் பொழுது, பாரம் சுமப்பவர்கள் உடல்வலியை தாங்கிக்கொள்ள போதை தரும் பொருட்களை எடுத்துக் கொள்ளுதல் இயல்புதானே. பெண்கள் கூட “மார்கெட் வியாபாரம், கையேந்திபவன், பூ வியாபாரம்” என தங்களால் முடிந்த வேலையைச் செய்யக் கூடியவர்கள். அவர்களை தாசிகளாக மட்டுமே சித்தரிப்பது அவலத்திலும் அவலம்.

லோ பட்ஜெட் படம் என்பதால் தொண்ணூறுகளின் தன்மையை படத்தில் கொண்டுவர சிரமப்பட்டிருக்கிரார்கள். இருபதாண்டுகளில் சென்னை எவ்வளவோ மாறிவிட்டது. பேருந்து, பணம், நாணயம், ஆடைகள் என எல்லாம் மாறிவிட்டது. ஆகவே படமாக்குவது சிரமம் தான். எடைபோடும் மெஷினில் பளபளக்கும் வட்ட வடிவ புதிய நாணயத்தையே ஹீரோ நுழைக்கிறார். போலவே பல நடிகர்களும் அணிந்துள்ள ஆடைகளும் பளபளவென புதியதாகவே இருப்பது போலத்தோன்றியது. ஆரம்பத்தில் தலைகாட்டிய ஹீரோவின் குடும்பத்தார் நடுவில் காணாமல் போய்விட்டனர். வயிற்றில் குத்தப்பட்டு மருத்ஹ்டுவன மனையில் சிகிச்சை பெரும்பொழுதும் யார்யாரோ ஹீரோவின் அருகில் இருக்கின்றனர். குடும்பத்தார் தூரத்து உறவினர்கள் போல வந்து செல்கின்றனர். இதிலெல்லாம் கொஞ்சம் கவனம் செலுத்தி மெனக்கெட்டு இருக்கலாம். இசையும் கூட சொல்லிக் கொள்ளும்படி இல்லை.

இர்பான் நன்றாகச் செய்திருக்கிறார். துடிப்புள்ள நடிகர் தான்... என்றாலும் அவருக்கென நேரம் வாய்க்க வேண்டும் தானே! சுண்டாட்டத்தை அவர் ரொம்பவும் எதிர்பார்க்கக் கூடும். ஆனால் பிரயோஜனம் இல்லை.

No comments:

Post a Comment