Thursday, March 21, 2013

சினிமாக் கங்காணி ஜெமோ

ஜெயமோகன் எழுதியிருந்த “ஞாநியும் பரதேசியும்” என்ற பதிவினைப் படித்தேன். எந்த ஒரு விஷயத்திலும் உடனுக்குடன் எதிர்வினை ஆற்றாமல், கொஞ்சம் ஆறப்போட்டு எழுதுவதுதான் ஜெமோ-வின் ஸ்டைல். “அப்படிப்பட்டவருக்கு உடனடியாக எது ஒன்றையும் சொல்லவேண்டுமா?” என்று நினைத்துத் தான் கொஞ்சம் தாமதமாக இதனை எழுதுகிறேன். இது அவருக்கான விமர்சனம் அல்ல. என்றாலும் இவரைப் போன்ற விசிலட்டித்தான் குஞ்சுகள் அதிகம் கொண்ட எழுத்தாளர்கள், விமர்சனத்தை நேர்கொண்டு அணுகாமல் – அதனை மடை மாற்றி விமர்சகர்கள் காழ்ப்புடன் சினிமாவை அணுகுகிறார்கள், படைப்பாளிகளை ஈவிரக்கமின்றி தாக்குகிறார்கள் என்ற இல்லாத காரணத்தைச் சுட்டிக்காட்டி, அதன் மூலம் கழிவிரக்கத்தைச் சம்பாதித்து, இறக்கப்பட்டுத் தன்னுடன் துணை நிற்கும் வாசகர்களின் மூலம் ஆளுமையை வளர்த்துக்கொண்டு – அப்பாவி வாசகர்களை தவறான புரிதலுக்கு இட்டுச்செல்லும் தன்மையைப் பற்றி அலசி ஆராய்வதுதான் இந்தப் பதிவின் நோக்கம். 


குடைபிடிக்கும் இடத்தில் ஜெமோ-வை மனத்தில் இருத்திக் கொண்டுதான் பத்தியை மேலும் தொடர்கிறேன். ஜெயமோகன் இணையத்தில் சினிமா சார்ந்து எழுதுபவர்களைப் பற்றி பின்வருமாறு கூறுகிறார்:

/-- “வேறெந்த விஷயத்தைப்பற்றி எழுதுவதைவிடவும் வரப்போகும் முக்கியமான படத்தைப்பற்றி எழுதுவதற்கு இணையத்தில் ‘லைக்கு’கள் வந்துகுவியும். அந்தப் படத்துக்காகக் கோடிக்கணக்கில் செலவிட்டு செய்யப்படும் பிரச்சாரத்தின் துளியைத் தானும் அறுவடைசெய்துகொள்ளும் முனைப்பு அது.”--/ -- (ஜெமோ)

இன்டர்நெட்டில் “ஃபேஸ்புக் (FaceBook), ட்விட்டர் (Twitter) மற்றும் பிளாக் (Blogger Page)” ஆகிய ஒருசில சமூக இணையத் தளங்கள் தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதில் முகநூல் சேவையானது Closed Network என்ற தன்மையில் வரக்கூடியது. அதிகபட்சமாக 5000 நபர்களுடன் மட்டுமே நட்பில் இருக்க முடியும் என்பதுதான் உண்மை. அவர்களில் பலரும் சந்தித்த நண்பர்களாகவும், அறிமுகமான நண்பர்களாகவும், ஒத்த கருத்துடையவர்களாகவும் மட்டுமே இருப்பார்கள். ஆகவே இந்த வசதி பெரும்பாலும் தொடர்பிலுள்ள நண்பர்களுடன் கருத்துக்களை பரிமாரிக் கொண்டு உடனுக்குடன் விவாதம் செய்யும் தன்மையில் இருக்கும். ட்விட்டர் & பிளாக் போன்ற சேவைகள் இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை. ஜெமோவின் ஆதங்கத்திற்குக் காரணம் விமர்சகர் ஞாநி பரதேசியைப் பற்றி முகநூலில் பகிர்ந்திருந்ததைப் பற்றியது. ஜெமோவின் சகாக்கள் அவருடைய காதில் போட்டிருக்கிறார்கள். அதற்குத் தான் ஜெமோ பொங்கி எழுதிருக்கிறார். ‘ஜெமோ, எஸ்ரா’ போன்றவர்கள் என்ன செய்தாலும் கொண்டாட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களா? என்ற சந்தேகம் எழுகிறது. ‘எரியும் பனிக்காடு’ நாவலானது ஆவணப் புனைவுவின் வகையில் சேரும். அதுவுமில்லாமல் ஏறக்குறைய 80 ஆண்டுகளுக்கு முன்பு நடக்கும் கதை. சுதந்திரப் போராட்டத்தை ஒட்டி நிகழும், மலையகத் தேநீர்த் தோட்டங்களில் வஞ்சிக்கப்படும் மலைவாழ் மக்கள் மற்றும் உள்ளூர் அகதிகளாகச் சென்றவர்களின் வதைபடும் வாழ்க்கைப் பற்றி நாவல் பேசுகிறது. இதுபோன்ற மக்களுடன் தனது வாழ்நாளைக் கழித்த மருத்துவர் டேனியலின் நாவலைத் தான் (The Red Tea) பாலா படமாக எடுத்திருக்கிறார். இந்த நாவலையும் நாஞ்சில் நாடனின் இடலாக்குடி ராசா என்ற சிறுகதையையும் இணைத்து உருவாக்கிய திரைக்கதையை முன்வைத்து தனது கருத்தினை விமர்சகர் ஞாநி பின்வருமாறு பகிர்கிறார்.

/-- எந்தப் படத்தையும் முழுமையாக ஏற்கவும் முடியாது. நிராகரிக்கவும் முடியாது என்ற வாதங்கள் வைக்கப்படுகின்றன. இது ஏற்றுக் கொள்ளவேண்டிய உண்மை போல தோன்றும். ஆனால் இதே வாதம் படு மோசமான மசாலா படங்களுக்கும் பொருந்தும். அவற்றில் கூட ஓரிரு ஏற்கத்தக்க அம்சங்கள் எப்போதும் இருக்கத்தான் செய்கின்றன. இரண்டு கதைகளும் கருப்பொருளில் தொடர்புடையவையே அல்ல. எனில், இதற்கான அவசியம் என்ன ? எரியும் பனிக்காடு அதனளவில் முழுமையாகப் படமாக்கப்பட்டாலே மூன்று மணி நேரப் படமாக எடுக்கும் சாத்தியங்களும் பாத்திரங்களும் உள்ள நாவல். ஆனால் அதில் பாலா தன் படங்களில் வழக்கமாக வைத்திருக்ககூடிய பார்முலாவுக்கான பாத்திரம் எதுவுமில்லை.--/ -- (ஞாநி)

மேலதிகமாக திரைப்படத்தின் கால நிர்ணயம் சார்ந்த நுட்பமான கேள்வியை ஞாநி எழுப்புகிறார். 

/-- எரியும் பனிக்காடு நாவலை எழுதிய டாக்டர் டேனியல் ஒரு விஷயத்தை தெளிவாக முன்னுரையில் சொல்லியிருக்கிறார். அந்தக் கதை 1900களில் தேயிலைத்தோட்டங்களில் நடந்த நிகழ்வுகளைப் பற்றி அப்போது அங்கே வேலை பார்த்தவர்களிடம் அவர் கேட்டு பதிவு செய்ததன் அடிப்படையில் எழுதுவதாக் சொல்கிறார். தன் கதையின் ஆரம்பத்திலேயே கதை நடக்கும் வருடம் 1925 என்று சொல்கிறார். அந்தக் கிராமம் அரிஜனங்கள் வாழும் கிராமம் என்று எழுதுகிறார். பாலாவோ தன் படத்தில் கதை நடப்பது 1939ல் என்கிறார்.--/ -- (ஞாநி)

/-- பாலா காட்டும் தேயிலை எஸ்டேட்டும் 1939ன் எஸ்டேட் அல்ல. ஏனென்றால் 1936 லேயே தேயிலைத் தோட்டங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்க நடவடிக்கைகள் ஆரம்பமாகிவிட்டன. அதற்கான விழிப்புணர்ச்சி அங்கே தொடங்கிவிட்டது. பாலாவின் எஸ்டேட்டில் அதற்கான அறிகுறியே இல்லை. காரணம் நாவல் 1925ல் நடப்பதாக டேனியல் சொன்னதை பாலா 1939 என்று மாற்றிய தவறுதான். ஏன் 1939 என்று மாற்றினார் ? --/ -- (ஞாநி)

இவையாவும் மூளையைக் கொஞ்சமேனும் தேய்த்து பல கோணங்களில் யோசிக்கும் யாரொருவருக்குமே எழக்கூடிய சந்தேகங்கள் தானே. இதைப் பற்றியெல்லாம் ஜெமோ வாயே திறக்கவில்லை. இதன் பிறகு ஞாநி பகிர்ந்ததுதான் ஜெமோவின் இரத்தக் கொதிப்பு ஏறக் காரணமோ என்ற ஐயம் எழுகிறது. ஜெமோ இந்துத்துவத்தை வக்காலத்து வாங்கக் கூடியவர் என்பது ஊரறிந்த விஷயம். பாலாவின் இந்துத்துவ எண்ணம் சார்ந்த காட்சிப்படுத்தலை ஞாநி பின்வருமாறு எழுதுகிறார்.

/-- எழுத்தாளர் டாக்டர் டேனியல் 1940 எஸ்டேட்டுக்குள் வந்தார். பாலாவின் படத்தில் வரும் கிறித்துவ டாகடர் பரிசுத்தமும் அப்போதுதான் வரவேண்டும் என்பதற்காக கதையை பாலா 1939ஆக மாற்றியிருக்கிறார். அதாவது டேனியல் பாத்திரத்தைத்தான் பரிசுத்தமாக பாலா இழிவுபடுத்த் திட்டமிட்டிருக்கிறார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.பாலாவின் இந்துத்துவ அரசியல் தொடர்ந்து கண்காணிக்கப்படவும் ஆய்வு செய்யப்படவும் வேண்டியதாகும். டேனியலின் நாவலில் அவர் தன்னையே ஆபிரகாம் என்ற டாக்டர் பாத்திரமாக்கி தான் எஸ்டேட்டுக்கு வந்ததையும் தன் அனுபவங்களையும் சொல்கிறார். தொழிலாளர்களுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடியதை விவரிக்கிறார். அந்த கிறிஸ்துமஸ் அனுபவங்களை பாலா எடுக்கவில்லை. நேர்மாறாக டேனியலைக் கேவலப்படுத்தி குத்தாட்டம் போட்டு மதமாற்றம் செய்யும் கோமாளியாகக் காட்டியிருக்கிறார். கதை உரிமையை படமாக்க பாலாவுக்குக் கொடுத்த டேனியலின் வாரிசுகள் இதற்காக பாலா மீது அவதூறு நஷ்ட ஈடு வழக்கு போட போதுமான முகாந்தரம் இருக்கிறது. மத போதகர்களை கிண்டலடிப்பதையும், படத்தின் முதல்பாதியில் நாஞ்சில் நாடனின் சரமாரியான தென் தமிழக பாலியல் கெட்ட வார்த்தை வசவுகளையும் யூ படத்தில் அனுமதித்திருக்கும் சென்சார் போர்ட், இனி பாலாவின் ஆன்மீக வழிகாட்டி ஜக்கி, ஜயேந்திரர், பிஜே போன்றோரை கிண்டல் செய்தும், சென்னை தமிழ் வசவுகளை சரமாரியாக அனுமதிக்கவும் முன்வரவேண்டும் என்று வலியுறுத்த விரும்புகிறேன். --/ -- (ஞாநி)

இதுபோன்ற கருத்துக்களை பகிர்ந்த ஞாநிக்கு ஜெமோ நேர்மையான முறையில் எதிர் வினையாற்றியிருக்கலாம். அதை விடுத்து “குய்யோ... முறையோ...” என அந்தக்காலத்து கருப்பு வெள்ளைப் பட குணச்சித்திர நாயகி கண்ணாம்பாள் போல குமுறுகிறார். மேலும் நடிகர்களை துன்புறுத்துவது போன்ற பாலாவின் யூ டியூப் காணொளி குறித்து அங்கலாய்த்ததுடன் நிற்காமல், அது சார்ந்து ஞாநி பகிர்ந்த நிலைத்தகவளுக்கு மன்னிப்புக் கூறும்படியும் எதிர்பார்க்கிறார்.

ஆனந்த விகடன் பகிர்ந்திருந்த இந்தக் காணொளிக்கு “பரதேசி ரியாலிட்டி டீஸர்” என தலைப்பிட்டிருந்தார்கள். இதுவே பழைய ஜெயமோகனாக இருந்திருந்தால் – இதுபோன்ற வீடியோவை பதிவேற்றிய ஆனந்த விகடனை கிழிகிழியென கிழித்திருப்பார். இப்பொழுது கோடம்பாக்கக் கங்காணிகளின் கடைக்கண் பார்வை இவருக்குத் தேவைப்படுகிறது இல்லையா? ஆகவே ஞானியிடம் பின்வருமாறு கேள்வி கேட்கிறார்:

/-- இப்போது பரதேசி படம் வந்துவிட்டது. அதைப்பார்ப்பவர்களுக்குத் தெரியும் அந்த விளம்பரப்படத்தில் பாலா நடிகர்களை அடிப்பதாகக் காட்டியிருப்பது முழுக்க அந்தப்படத்தில் வந்த காட்சிகளைத்தான் என்று. அவர் நடிக்காத காரணத்துக்காக எவரையும் அடிக்கவில்லை, மாறாக நடிப்புச் சொல்லித்தருகிறார் என்று தெளிவாகிவிட்டது. பரதேசி குழுவினரே விளக்கமும் அளித்துவிட்டனர். பரதேசி படத்தை ஞாநி பார்த்தும் விட்டார். தான் தவறாகப்புரிந்துகொண்டமைக்காக ஒரு சொல் மன்னிப்புகோர ஞாநி முன்வந்தாரா? --/ -- (ஜெமோ)


பாலா குறித்த ஜெயமோகனின் கரிசனம் மெய்சிலிர்க்க வைக்கிறது. உண்மை என்னவெனில் தொழின்முறை சினிமா கலைஞர்களே கூட இந்த டீஸருக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். பாலாவின் பிதாமகன் படத்தில் நடித்திருந்த மனோபாலா தோழர் மார்க்ஸ்-ஐ தொடர்புகொண்டு குமுரியிருக்கிறார். தோழர் அதனை முகநூலில் கூட தெரியப்படுத்தியிருந்தார். ஜெமோவின் உச்சப் புரட்டே இனிமேல் தான் ஆரம்பிக்கிறது. ஞாநியை மட்டுமல்லாமல் இதர சினிமா சார்ந்த எழுத்தளர்களின் மீதும் புழுதியை வாரித் தூற்றுகிறார். ஹாலிவுட் நடிப்புப் பயிற்சியை காரணம் காட்டி, சினிமா இயக்குனர் பாலாவிற்குத் துணைநிற்கும் இவர் பின்வருமாறு கூறுகிறார்:

/-- ஞாநியின் கோபம் என்பது மிகமிகத் தனிப்பட்ட காழ்ப்பு சார்ந்தது. இன்று தமிழில் சினிமா பற்றி எழுதக்கூடிய எழுத்தாளர்கள் பெரும்பாலும் அனைவருமே வணிகசினிமாவுக்குள் நுழைய பெரும் கனவுகளுடன் முட்டிமோதியவர்கள். சில படங்களில் சம்பந்தப்பட்டவர்கள் உண்டு. அந்த வாய்ப்பு கிடைக்காமல் வருடங்களைத் தொலைத்தவர்கள் உண்டு. இன்றும் கதவுகளைத் தட்டிக்கொண்டே இருப்பவர்களும் உண்டு. தோல்வியின் அவமதிப்பு அவர்களில் வன்மமாகத் தேங்கிவிட்டிருக்கிறது. அவர்களைப்பொறுத்தவரை சினிமாபற்றி எழுதுவதென்பது அந்த விஷத்தை சினிமாக்கலைஞர்கள் மீது உமிழ்வதுதான்--/ -- (ஜெமோ)

‘கமர்ஷியல் சினிமாவை இவ்வளவு நுட்பத்துடன் அவதானிக்க வேண்டுமா? விமர்சனம் செய்ய வேண்டுமா?’ என்ற நாலாந்தர வாதம் தீராநதியில் எழுதும் கௌதம சித்தார்த்தன், முகநூலில் பகிரும் ஒருசில எழுத்தாளர்கள் மீது (சினிமாவுடன் தொடர்புடைய நபர்களால்) வைக்கப்படுகிறது. இதை விட அபத்தம் வேறென்ன இருக்கிறது. உலகத்திரைப்பட விழாக்களில் திரையிடப்படும் கலைப்படங்கள் ஒரு வட்டத்திற்கு மட்டுமே சென்று சேருவது போலத் தோன்றினாலும், உலகமெல்லாம் திரையிடப்படும் இடங்களில் அதன் மேக்கிங் சார்ந்தும், உள்ளடக்கம் மற்றும் இதர விஷயங்கள் சார்ந்தும் விவாதிக்கப்படுகிறது. ஆனால் கமர்ஷியல் திரைப்படங்கள் பெருவாரியான மக்களைச் சென்று சேர்கிற பட்சத்தில் – சாதாரண மக்களைச் சென்று சேரும் ஆக்கங்கள் “என்ன அரசியலைப் பேசுகிறது? என்ன தத்துவத்தைப் பேசுகிறது? என்ன கலாச்சாரத்தைப் பேசுகிறது? மொழி சார்ந்த விஷக் கங்குகளை எப்படித் திணிக்கிறது?” என்பது போன்ற விஷயங்களைப் பதிவு செய்யாமல் – வியாபார சினிமாவை மக்கள் நலன் சார்ந்து எந்த வகையில் முன்னெடுப்பது. அது கூடாது என்கிறார் ஜெயமோகன். ஏனெனில் அவர் சமந்தப்பட்ட சினிமா வியாபாரத்தின் குறிப்பிட்ட பங்கு அவருக்குச் சென்று சேர்க்கிறது இல்லையா? அதனால் தான் பின்வருமாறு கேக்கிறார்:

/-- எழுத்தாளர்கள் சினிமாவுக்குச் சென்று நல்ல சினிமாவுக்காக ஏதும் செய்யவில்லை என்று சொல்லும் ஞாநி அப்படி ஏதும் நடந்துவிடக்கூடாது என்று தான் உள்ளூர நினைக்கிறார்....

.... இதைத்தான் எஸ்.ராமகிருஷ்ணனுக்கும் செய்தார் ஞாநி. பெயர்தெரியாத ஏதோ உதவி இயக்குநர் நாலாந்தர இணைய இதழ் ஒன்றில் எஸ்.ராமகிருஷ்ணனின் சினிமாவாய்ப்புகளை இல்லாமலாக்கும் நோக்குடன் எழுதிய அப்பட்டமான அவதூறுக்கட்டுரையை தன்னுடைய ஃபேஸ்புக் தளத்தில் புழக்கத்துக்கு விட்டார் அவர். [அதைப்போன்ற அப்பட்டமான அவதூறுக் கட்டுரைகள் என்னைப்பற்றியும் வந்துள்ளன. ]ஞாநியின் உணர்ச்சிதான் என்ன? சினிமாவில் எழுத்தாளர்கள் வெற்றிபெற்றுவிடக்கூடாது, ஏனென்றால் அது அவர் தோற்ற துறை. ஓர் ஆளுமையின் கீழ்மையின் அடிமட்டம் இது. --/ (ஜெமோ)

‘கஸ்தூரி மான்’ படத்தைச் சார்ந்த கேள்விக்கு ஞாநிதான் பதில் சொல்ல வேண்டும். அதை அவர் பார்த்துக் கொள்வார். ஆனால் ஞாநி சினிமாவில் பங்காற்றும் எழுத்தாளர்களுக்கு எதிரானவர் என்பதை நிரூபிக்க எப்படிக் கூட்டுச் சேர்க்கிறார் பாருங்கள்? “எஸ்ரா” சார்ந்த வியாபார நட்டக் கட்டுரையை பலரும் படித்துப் பகிர்ந்திருந்தார்கள். ஆனால் ஞாநி போன்ற கடுமையான விமர்சகர்களின் வாயை அடைக்க இதுபோன்ற சம்பவங்களை தூசுத் தட்டுகிறார் ஜெமோ. பாலா சாருக்கு தேயிலைத் தோட்டக் கங்காணிபோல எஸ்ரா சல்யூட் அடித்து ஒரு பதிவினை அவருடைய இணையத்தளத்தில் எழுதியிருந்தார். நாஞ்சில் நாடனைத் தவிர்த்து மற்ற எல்லோருக்கும் அதில் வாழ்த்துச் சொல்லி இருந்தார். நாஞ்சிலின் மீது அவருக்கு அப்படியென்ன வஞ்சமா தெரியவில்லை. ‘வசனம்’ தான் இந்தப் படத்தை உலகத் தரத்திற்கு உயர்த்துகிறது என ஊர் உலகமே கொண்டாடுகிறது. அப்படியிருக்க எஸ்ரா அதுபற்றி ஒரு வார்த்தைக் கூட எழுதாதது ஆச்சர்யமாக இருந்தது. ‘எஸ்ரா, ஜெமோ’ போன்றவர்கள் தான் சக போட்டியாள வசனகர்த்தா திரைத்துறையில் மின்னுவதைப் பார்த்து அநியாயத்திற்கும் அதிர்ந்துபோய் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். மாறாக விமர்சகர்கள் மீது பழியைத்தூக்கிப் போடுகிறார் ஜெமோ. 

எழுத்தாளர் சுஜாதா இருந்த வரை – ஜெமோ, எஸ்ரா போன்றவர்கள் கோடம்பாக்கக் கதவுகளை முட்டிமோதி பிரயத்தனப் பட்டார்கள். சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. சுஜாதா போல இவர்களால் எழுத்திலும் சரி, சினிமாவிலும் சரி ஜொலிக்க முடியவில்லை என்ற தாழ்வு மனப்பான்மையே விமர்சகர்களைச் சார்ந்து தரக்குறைவாக பேச வைக்கிறது என்று நினைக்கிறேன். இவர்கள் கைகோர்க்கும் வியாபார சினிமா பல நேரங்களில் தோல்வியில் தான் முடிகிறது. “எழுத்தாளர்கள் பங்குபெறும் திரைப்படங்கள் பெரும்பாலும் தோல்வியில் முடிகின்றன” என்பதை இன்னொரு கோணத்திலும் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது. 

சினிமா இயக்குனர்களின் திறமையற்ற திரைக்கதை ஆக்கத்திலும் இருக்கிறது இல்லையா? கடல் அருமையான கதை. அதனை மணிரத்னம் சொதப்பி இருக்கிறார் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டிய தன்மையிலும் பேசலாம் இல்லையா? ஆனால் மணிரத்னத்தை உயர்த்திப் பிடிக்க “காட்சிப் படிமங்களால் நகரும் தமிழின் முதல் சினிமா...” என ஜெமோ குழாம் பேசுகிறது. இங்குதான் உண்மையைக் குழி தோண்டிப் புதைக்கிறார்கள். இதென்ன வார்த்தை விளையாட்டு என்று தெரியவில்லை. சினிமா என்பதே காட்சிப் படிமங்களால் நகரும் படைப்பாக்கம் தானே! கடல் படத்தை இந்தத் தன்மையின் முதல் ஆரம்பம் என எப்படிச் சொல்ல முடியும்?
இந்தக் கூத்தில் “காட்சிப் படிமங்களால் திரைக்கதையை நகர்த்தும் தமிழின் முதல் படம் பரதேசி” என முத்துக்குமாரசாமி ஒரு திரியைக் கொளுத்திப் போடுகிறார். ஜெமொவிற்குக் கேடயம் வைக்கிறாரோ என்று நினைத்துக் கொண்டேன். சரி விஷயத்திற்கு வருவோம். ஜெமோ தொடர்ந்து பின்வருமாறு பிதற்றுகிறார்:

/-- ஞாநி எல்லாவகையிலும் தோற்றுப் பின்வாங்க நேர்ந்தது. அரசு தொலைக்காட்சியில் வெற்றி முக்கியமல்ல, தொடர்புகளே முக்கியம். அதைக்கொண்டு அவர் சில திராபையான தொடர்களை எடுத்தார் அவ்வளவுதான். ஞாநியின் சினிமா அனுபவங்கள் கசப்பானவை என்பதை நான் அறிவேன். ஆனால் வேறு வழியே இல்லை. அவ்வளவுசெயற்கையாக இருக்கும் அவரது நடிப்பு .--/

ஞாநி ஓர் இன்டிபென்டன்ட் ஃபிலிம் மேக்கர் வகையில் சேர்பவர். குறும்படங்கள், ஆவணப்படங்கள் மற்றும் ஆட் ஃபிலிம்ஸ் போன்றவற்றை ஏற்கனவே எடுத்திருக்கிறார். முக்கியமாக திலீப் குமார் போன்ற எழுத்தாளர்களின் சிறுகதையை குறும்படங்களாக எடுத்தால் – கதை அந்த சிருகதையாலருடையது என்று நேர்மையாக சொல்லிவிடுகிறார். ஆக, ஞாநியுடன் சினிமாவிற்கு டேட்டா என்ட்ரி வேலை செய்யும் எழுத்தாளர்களும், மேலதிகமாக வசனம் எழுதும் எழுத்தாளர்களும் எந்த வகையில் ஒபிட்டுக்கொள்ள இயலும். அடிப்படையில் ஜெமோ போன்றவர்களுடைய மனப்பான்மையே தவறு. இதுகூடத் தெரியாத குழந்தையா ஜெயமோகன்.

ஞாநியுடன் பழகியவர்களுக்குத் தெரியும் அவர் சமரசம் செய்துகொள்ளாத பத்திரிகையாளர் என்று. மற்றவர்களைப் போல கூழைக் கும்பிடு போட்டிருந்தால் அவர் கூட நிறைய படங்களுக்கு வசனம் எழுதியிருக்கலாம். லொகேஷன் பார்க்க “பாலா சார், மணி சார்” போன்றவர்களுடன் தஞ்சாவூர், திருநெல்வேலி, காசி என சுற்றியிருக்கலாம்.

கடைசியாக ஒரு ஞாயத்தை பாலாவிற்காகக் கேட்டிருக்கிறார் ஜெமோ:

/-- ஞாநி உட்பட இந்தக் கும்பல் பாலாவைப்பற்றி என்னென்னவோ வசைபாடியிருப்பதைப் பார்க்கிறேன். எவ்வளவு கீழ்மை. இந்த அளவுக்கு வசைபாட, சமூகவிரோதிபோல வேட்டையாடப்பட , அந்தக்கலைஞன் தமிழ்ச்சமூகத்திற்குச் செய்த அநீதிதான் என்ன? --/

இதற்கு பரதேசியையே உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். “நான் கடவுள், கடல்” போன்ற படங்களில் ‘கதை இலாகா, திரைக்கதை, வசனம்’ போன்ற பொறுப்புகளில் ஜெமோவின் பெயர் வரும். ஆனால் பரதேசி திரைப்படத்தின் முன்பாதி நாஞ்சில் நாடனின் “இடலாக்குடி ராசா” என்ற சிறுகதையின் சாரம். நாஞ்சிளின் பெயர் கதை இலாக்காவில் ஏன் வரவில்லை? (இந்த விஷயத்தில் இயக்குனர் மகேந்திரன், வசந்த், வசந்தபாலன், சுசீந்திரன் போன்ற கண்ணியமானவர்களும் இருக்கிறார்கள்.) சரி போகட்டும் “ரெட் டீ”-யைத் தமிழில் மொழி பெயர்க்கவில்லை எனில் பாலாவின் கவனத்திற்கு வந்திருக்குமா? மொழிபெயர்ப்பாளர் இரா. முருகவேள் சார்ந்து ஒரு வார்த்தை சொல்லியிருப்பாரா?

நாஞ்சில் நாடனை இருட்டடிப்பு செய்வது தமிழுக்குச் செய்யும் திரோகம் இல்லையா? இது போதாதா? இத்தனைக்கும் நாஞ்சில் நாடன் ஜெமோ-வின் பலவருடகால நண்பர்தானே!? எழுத்தாளர்களின் அறம் நாளுக்கு நாள் மரணித்துக் கொண்டே வருகிறது. பாலாவின் ஜனரஞ்சக சினிமா வெளிச்சம் தன்மீதும் விழ, அவருடன் கைகோர்க்க – விமர்சகர்களைத் திட்டி தேவையற்று வக்காலத்து வாங்குவது கீழ்த்தரமான விஷயம். அதைத் தான் ஜெமோ நுட்பமாகச் செய்துகொண்டிருக்கிறார்.

ஞாநியைப் பற்றி வாய்கிழியப் பேசும் ஜெமோ – கதை இலாக்காவில் நாஞ்சில் நாடனின் பெயரை இருட்டடிப்புச் செய்து தன்னுடைய பெயரைப் போட்டுக்கொண்ட பாலாவின் அறமற்ற செயலைப் பற்றி பேச ஜெமோ முன்வருவாரா? மனமைத்துனம், கைமைத்துனம் துவங்கி சிட்டுக்குருவி லேகியத்தின் மூலிகைச் சேர்ப்பு வரை யார் எதைக்கேட்டாலும் பதிலளிக்கும் ஜெமோ – பாலா நாஞ்சில் நாடனுக்குச் செய்த இருட்டடைப்பைப் பற்றி பேச முன்வருவாரா?

1 comment:

  1. Krishna Prabhu, உங்கள் கட்டுரையை இப்போதுதான் கண்டேன் கிருஷ்ணா, ரொம்ப டீடேய்லா ஜெயமோகனின் கட்டுரைக்கு பதில் எழுதி இருக்கீர்கள். நன்றாக இருந்தது, உங்கள் ஒவ்வொரு பாய்ன்ட்டையும் என்னால் ஆமோதிக்க முடியாவிட்டாலும், ஒட்டுமொத்தமாக ஜெயமோகனுக்கான பதில் நன்றாக இருக்கிறது.

    ஜெயமோகனின் அந்த கட்டுரையில் இருந்து நான் புரிந்து கொண்டது ஒன்றே ஒன்றுதான், அது அவரது கடல் பட தோல்வியின் வெறுப்பு முகம். கடல் படத்தை மிக எதிர்பார்த்திருக்கிறார், (ஏன் அதன் வெற்றியை அவர் அவ்வளவு எதிர்பார்க்க வேண்டும் என்று தெரியவில்லை, ஜெயமோகன், சினிமா உங்கள் துறை அல்ல, அதில் நீங்கள் சாதிக்கவேண்டும் என்ற எந்த தேவையும் இல்லை மேலும் அது ஒரு கூட்டு திறமை தேவைப்படும் துறை, அதில் அல்லது அதன் வெற்றியில் உங்கள் பங்கு, ஒரு கதை, திரைகதை எழுத்தாளனாக மிக சிறியது, அது ஒரு இயக்குனரின் துறை, உங்கள் பணியை அதில் சிறப்பாக செய்யுங்கள், அது முடிந்தவுடன் அதில் இருந்து வெளியேறிவிடுங்கள், முழுமையாக, அதன் வெற்றி தோல்வியை பற்றிய எந்த எண்ணங்களும் உங்களுக்கு தேவை இல்லை ஏனெனில் அதை முழுமுதலாக தீர்மானிப்பது உங்கள் பணி மட்டும் அல்ல.) அந்த தோல்வி அவரை ரொம்பவே பாதித்துவிட்டது, மேலும் ஞாநி கடல் படத்தின் சில இயக்குநர் முடிவுகள் சம்பந்த்தபட்ட காட்சிகளில் கூட தேவை இல்லாமல் "அறம்" புகழ் என்று ஜெயமோகனை தேவை இல்லாமல் சீண்டி கொண்டே இருந்தார். இதுதான் ஜெயமோகனை தன்னிலை இழக்க செய்துவிட்டது என்று நினைக்கிறேன். தன்னிலை இழந்து சாரு இப்படி பேசினால் நாங்கள் கடந்து சென்று விடுவோம், ஜெயமோகனுக்கு அந்த இரக்கத்தை காட்டமுடியாது. இன்னும் சொல்லபோனால் அந்த கட்டுரைக்காக ஜெயமொகன்தான் ஞாநியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.நன்றி.

    ReplyDelete