Tuesday, April 14, 2015

பொருந்தாக் காமம்

சில ஆண்டுகளுக்கு முன்பு - தமிழகக் காவல் துறையில் எஸ்.பி கேடரில் இருந்த ஒரு பெண் அதிகாரி – தனக்குக் கார் ஒட்டிய கடைநிலைக் காவல் அதிகாரியை எளிய முறையில் திருமணம் செய்துகொண்டார். பத்திரிகைகள் இந்தத் திருமணத்தை ஏதோ அவர்கள் இருவரும் ஓடிவிட்டார்கள் என்று கிசுகிசுத் தன்மையில் எழுதுவதைப் போல செய்தி வெளியிட்டிருந்தார்கள். இரண்டு பெரும் பக்குவம் அடைந்தவர்கள். திருமணம் செய்துகொள்ளும் உரிமை அவர்களுக்கு இருக்கிறது. ஆனால் பத்திரிகைகள் இதனை ஏதோ நடக்கக் கூடாத காரியம் நடந்து விட்டதுபோல செய்தி வெளியிட்டிருந்தார்கள். ஆண் – வயதிலும் சமூகத்திலும் உயர்ந்த அந்தஸ்தில் இருக்க வேண்டும். பெண் – அவனுக்கு அடங்கி இருக்கவேண்டும் என்ற ஆணாதிக்க புத்தியில் உதிக்கும் மனோநிலைதான் இந்தச் சம்பவத்தை நாளேட்டின் செய்தியாகும் அளவிற்கு முக்கியத்துவம் அடைய வைக்கிறதோ?

இதே... எஸ்.பி ஆணாக இருந்து, கடைநிலை ஊழியராகப் பெண் இருந்திருந்தால் – ஒன்று, அந்த ஆண் எஸ்.பியை வீரதீரச் செயல் புரிந்ததாகப் பாராட்டி எழுதியிருப்பார்கள். இல்லையேல், இதெல்லாம் ஒரு மேட்டரா? என்பது போலக் கண்டும் காணாதது போல பத்திரிகையாளர்கள் நழுவி இருப்பார்கள்.

ஒரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும். அரசுப் பள்ளியின் மாணவிகள் கற்பம் அடைந்ததைப் பற்றிய செய்தியைப் பத்திரிகைகளில் படிக்கும் பொழுது அதற்குக் காரணமாக இருப்பவர்கள் பெரும்பாலும் 45 வயதைக் கடந்த அரசாங்கப் பள்ளி ஆசிரியர்களாக இருக்கிறார்கள். இதற்கு நேர்மாறாகப் பாடம் கற்பித்த ஆசிரியருடன் தலை மறைவாகும் மாணவர்கள் – பெரும்பாலும் தனியார் பள்ளி மாணவர்களாக இருக்கிறார்கள். இந்த முரணை நாம் கொஞ்சம் நுட்பமாக அலசிப் பார்க்கவேண்டும்.

கடந்த ஆண்டு குமுதினி என்ற உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் தனது பள்ளி மாணவன் ஒருவருடன் ஓடிவிட்டார் என்பதை எல்லா பத்திரிகைகளும் கவர் ஸ்டோரியாக எழுதியிருந்தனர். இங்கு கவனிக்க வேண்டியது என்னவெனில் 16 வயது மாணவன் 26 வயது ஆசிரியருடன் ஓடிவிட்டான். “வாழ்ந்தா... எங்க டீச்சரோடதான் வாழுவேன்...” என்று அந்த மாணவரும் பிடிவாதம் பிடித்தார். இந்த வருடமும் இரண்டு மாணவர்கள் தனது பள்ளி ஆசிரியருடன் தலைமறைவு என்பதை சுவாரஸ்யமாக எல்லோரும் சமூக இணைய தளங்களில் பகிர்கின்றனர். இந்த மாணவர்களும் ஆசிரியர்களுக்கும் கூட ஏறக்குறைய பத்து வயது வித்தியாசம் இருக்கிறது.

ஒவ்வொரு ஊரிலுமே கள்ளத் தொடர்புகள் இருக்கின்றன. நம்முடைய ரத்த உறவுகள், நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள், தொடர்பில் இருப்பவர்கள் என்று எல்லா வட்டத்திலும் கள்ளத் தொடர்புகளில் ஈடுபடுபவர்கள் இருக்கிறார்கள். இதில் பொருந்தாக் காமமும் – முறையற்ற காமமும் அடக்கம். இவற்றைக் கண்டும் காணாமல் செல்லும் நாம், நமக்கு சம்மந்தமே இல்லாதவர்கள் பொதுவில் சிக்கும்பொழுது புகைப்படங்களைப் பகிர்ந்து இதுபோன்று கும்மியடிப்பது ஞாயமா? அவர்களது புகைப்படத்தையும் செய்திகளையும் உடனுக்குடன் பகிர்வது அடுக்குமா?

திருமணத்திற்கு முன் – திருமணத்திற்குப் பின் என எப்படி பிரித்துப் பார்த்தாலும் இதனை நல்ல உறவாக ஏற்றுக்கொள்ள முடியது தான். ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்வது இயற்கை. இது வயதுக்கு வந்தவர்களின் தனிப்பட்ட விஷயம் என்று பல கோணங்களில் வாதாடலாம். பாலியல் உறவில் ஈடுபடுவது அவர்களது உரிமையும் கூட. ஆனால், நம்முடைய கலாச்சாரப் பின்புலம் சற்றே வித்தியாசப்பட்டது. ஏராளமான ஒழுக்க வரையறைகளுக்கு உட்பட்டுத்தான் நாம் வாழ வேண்டி இருக்கிறது. மேற்கத்திய நாடுகளில் பள்ளிச் சிறுவர்களுடன் பாலியல் உறவில் ஈடுபடுபவர்களின் மேல் கடுமையான சட்டம் பாயும். நம்முடைய சட்டத்தில் ஓட்டைகள் அதிகம், ஆகவே தப்பித்து விடுகிறார்கள். பணம் இருந்தால் எதையும் செய்யலாம் என்ற நிலையும் இங்கிருக்கிறது.

இன்று நடக்கும் பல கொலைகளுக்குக் காரணம் கள்ளத்தொடர்பாகத் தான் இருக்கிறது. இங்கு எல்லாமே சுலபமாகக் கிடைக்கிறது. தெருவுக்குத் தெரு டாஸ்மாக் இருக்கிறது. ஹான்ஸ், பான் பராக், கஞ்சா, அபின், ப்ரௌன் சுகர்... எல்லாமே எல்லோருக்கும் சுலபமாகக் கிடைக்கிறது. நான் சந்திக்கும் அரசுப் பள்ளி மாணவர்களில் பலரும் ஏதேனும் ஒன்றிற்கு அடிமையாகத் தான் இருக்கிறார்கள். அதற்காகத் தனியார் பள்ளி மாணவர்கள் சொக்கத் தங்கம் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் சென்னையிலுள்ள தனியார் பள்ளி மாணவருக்குப் பாடம் எடுக்கச் சென்று கொண்டிருந்தார். அந்த மாணவனுடைய பெற்றோர்கள் தொழிலில் நல்ல வருமானம் ஈட்டுபவர்கள். தாயும் தந்தையும் பிசினஸ் விஷயமாக அடிக்கடி வெளியில் செல்பவர்கள். காலையில் வீட்டைவிட்டுச் சென்றால் இரவில் தான் திரும்புவார்கள். பையன் வெளியில் சென்று கெட்டுவிடக் கூடாதே என்று சிறப்பு ஆசிரியர்களை வீட்டிற்கு வரவழைத்து பாடம் எடுக்கச் சொல்லி இருக்கிறார்கள். பையன் சிறுகுழந்தை என்ற நினைப்பு அவர்களுக்கு. விடுமுறை நாட்களில் சிறப்புப் பாடங்களை ஏற்பாடு செய்திருந்தார்கள்.

மாணவனைப் பற்றி என்னுடைய நண்பர் அடிக்கடி பகிர்ந்து கொள்வார். ஒருநாள், “அவனுக்கு டியூஷன் எடுக்கறத நான் நிறுத்திட்டேன்” என்றார். “நல்ல வருமானத்தை ஏன் எட்டி ஒதைக்கிற?” என்றேன்.

“அந்தப் பையனோட கேரக்டர் சரியில்ல. அவனுக்கு ஹிந்தி பாடம் எடுக்க ஒரு லேடிய அரேஞ் பண்ணி இருக்குறாங்க. அந்த டீச்சர் கூட பையனுக்கு கனெக்ஷன் உண்டாகிடுச்சி. பையன்கிட்ட இருந்து எக்கச்சக்க பணத்தை அந்த டீச்சர் கரந்துட்டு இருக்கா... அவங்க வீட்டுக்குத் தெரிஞ்சி – அந்த பொம்பளைக்கு மேல கொஞ்சம் பணத்தக் கொடுத்து செட்டில் பண்ணி அனுப்பிச்சி இருக்காங்க. இந்த விஷயம் என்னோட காதுக்கு வந்துச்சி. எதுக்கு வம்புன்னு நான் போறது இல்ல. ஒடம்பு சரியில்லன்னு காரணத்த சொல்லி நின்னுட்டேன்” என்றார்.

முறையற்ற காமம் எல்லா எடத்துலையுமே இருக்குது. ஒரு ஈஸ்ட்ரீமுக்கு செல்பவர்களை மீடியா வெளிச்சம் போட்டுக் காண்பிக்கிறது. பிரச்சனையாக நினைக்கும் இந்தக் காதலில் தொடர்புடைய மூன்று மாணவர்களும் தனியார் பள்ளி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு நேர்மாறாக ஒரே பள்ளியைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவிகள் கருவுற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு – கருக்கலைப்புச் செய்த சம்பவமும் சில ஆண்டுகளுக்கு முன்பு அந்திரவை ஒட்டியுள்ள அரசாங்கப் பள்ளியில் நடந்தது. இந்த எல்லை மீறல்களை – வாழும் தலைமுறை – சிக்கலாகப் பார்க்கும் தன்மையைத் தவிர்க்க முடியாது. காலம் இந்தச் செயல்களைச் சாதாரணமானதாக மாற்றிவிடும். மேற்கத்திய கலாச்சாரத்தை அடியொற்றி - வளர்ந்துவரும் தேசங்கள் இந்தச் சிக்கல்களைச் சமாளித்தே ஆகவேண்டும்.

சமீபத்தில் முதலாமாண்டு கல்லூரி மாணவர் என்னைச் சந்திக்க வேண்டும் என்றார். கிராமப் புறதிலிருந்து சென்னைக்கு வந்து படிக்கும் மாணவர். நானும் சென்று அவரைச் சந்தித்தேன். “அண்ணா... ஒரு விஷயம் சொல்லணும் தப்பா நெனச்சுக்க மாட்டிங்களே...?” என்றார்.

“பாரு... எனக்கு ஆயிரம் பிரச்சனை இருக்குது. எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு உன்னை பார்க்க வந்திருக்கேன்... நேரா விஷயத்துக்கு வா...” என்றேன்.

“நேத்தைக்கு ஒரு ஃபங்ஷனுக்குப் போயிருந்தேன்... ஃபிரண்ட்ஸ் எல்லாரும் இருந்தாங்க... என்னோட கேர்ள் பிரண்ட் அதுக்கு வான்னு யாருக்கும் தெரியாம அப்ரோச் பண்ணினா... நான் பயந்துட்டேன்... ஒரே கன்ஃபியூஷனா இருக்குது... ஒரே படபடப்பா இருக்குது...” என்றார்.

இதுபோன்று இன்னும் ஒரு நான்கைந்து சம்பவங்கள் நண்பருக்குக் கிடைத்தால் சென்னையில் நீந்தப் பழகிக் கொள்வார் என்று நினைத்தேன். பெண்களை ஏமாளிகளாக மட்டுமே பார்க்க வேண்டாம் என்பதற்காகத் தான் இதனைக் கூறினேன். இதேபோல், எனக்குத் தெரிந்த ஒரு விளையாட்டு வீரர் தமிழக அளவில் முக்கியமான இடத்தினைப் பெற்று முத்திரைப் பதித்திருக்க வேண்டும். அவருக்கு ப்ரொஃபஷனல் கோர்ஸ் படிக்கும் மாணவி காதல் வலை வீசினார். நண்பருடைய வேண்டாத நேரம் வலையில் சிக்கிவிட்டார். அந்த மாணவியுடன் நண்பரும் வெளியூருக்கெல்லாம் சென்று ரூம் எடுத்துத் தங்கியிருக்கிறார். எல்லாமே நடந்துவிட்டது. ஆனால், நண்பர் உண்மையிலேயே உயிருக்குயிராக அந்த மாணவியைக் காதலித்தார். கடைசியில் தான் தெரியவந்தது – ஒரே நேரத்தில் அந்த மாணவி பலருக்கும் காதல் வலை வீசியக் கதை. இப்படி என்னைச் சுற்றி நடக்கும் கதைகளைச் சொல்லத் தொடங்கினால் நான் வசிக்கும் ஊரில் நிம்மதியாக நான் வாழ முடியாது.

என்னுடைய சிறுவயதில் டிவியில் பார்த்திருக்கிறேன். லஞ்சம் வாங்கி மாட்டிக்கொண்டவர்களை நியூசில் பார்க்கும் பொழுது முகத்தை மூடிக்கொண்டு காட்சி தருவார்கள். ஊழலில் சிக்கிய அரசியல் வாதிகளும் முகத்தை மூடிக்கொண்டு தான் தோன்றுவார்கள். இன்றைய நாளேடுகளில் ஏராளமான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களின் குரூப் ஃபோட்டோவைப் பார்க்கக் கிடைக்கிறது. “கள்ளக் கடத்தல், பலாத்காரம், கற்பழிப்பு, வழிப்பறி, விபச்சாரம், பொது வாழ்வில் ஊழல்” என எந்தக் குற்றமாக இருந்தாலும் உதட்டில் மாறாத புன்னகையுடன் நாளேட்டின் செய்திகளில் குற்றவாளிகள் காணக் கிடைக்கிறார்கள். குற்றச் செயல்களில் ஈடுபட்டுச் சிறை செல்வது சாதாரணமாகி விட்டது. “எது உனக்குத் தேவையோ அதுவே தர்மம்” என்ற நிலைக்கு நாம் நகர்ந்துவிட்டோம். இதெல்லாம் காலத்தின் குறியீடு.

மகாபாரதக் கிளைக் கதைகளில் ஒன்றுண்டு. சூரிய உதயம் பளிச்சென வந்த பிறகு யுதிஷ்டிரனாகிய தருமன் பல்குச்சியை வைத்துக்கொண்டு பல் தேய்த்துக் கொண்டிருந்தானாம். அதைப் பார்த்த அர்ஜுனன் கிருஷ்ணனிடம் கேட்டானாம்:

“இதென்ன வாசுதேவா? ஊரே விழித்துக்கொண்ட பிறகு தருமர் பல் தேய்க்கிறார்?”

“பார்த்தா... இது தர்மனின் பிழையல்ல... யுகம் மாறிவிட்டது... கலிகாலம் பிறந்து விட்டது” என்றாராம் கிருஷ்ணன்.

ஒருசில விஷயங்கள் காலத்தின் குறியீடு. பத்தாண்டுகளுக்கு முன்பு குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் முகத்தை மூடிக்கொண்டு மீடியாவில் தோன்றினார்கள். மான அவமானங்களுக்கும் அஞ்சினார்கள். இன்றைய தேதியில் “காசு... பணம்... துட்டு... மணி மணி...” என்ற நலன் குமரசாமியின் வரிகளுக்கு, சந்தோஷ் நாராயணின் மெட்டுக்குத் தகுந்தபடி - படல்பாடி ஆடுகிறார்கள். வரம்பை மீறும் அந்தரங்கத் தொடர்புகள் எல்லா இடங்களிலும் – எல்லாக் காலங்களிலும் இருந்துகொண்டு தான் இருக்கின்றன. வெளியில் தெரியாமல் இருந்ததை இன்றைக்கு மீடியா பகிரங்கப் படுத்துகிறார்கள்.

ஒரு புள்ளி விவரத்தை சமீபத்தில் இணையத்தில் எங்கோ ஒரு மூலையில் படித்த ஞாபகம். இளம் வயதினர் காமம் சார்ந்த அதிகப் படங்களையும், வீடியோக்களையும் தேடுகிறார்கள். அதிலும் வீடியோ சார்ந்து தேடுபவர்கள் பெரும்பாலும் “மாலு (மல்லு) ஆண்டி செக்ஸ் வீடியோஸ்” என்று தேடுகிறார்கள். இப்படித் தேடுபவர்கள் பலரும் 13 வயது முதல் 22 வயதுக்கு உட்பட்டவர்கள். எவ்வளவு நாள் தான் திரையில் மட்டுமே பார்த்துத் தினவுகளைத் தீர்த்துக்கொள்வது. ஆகவே பலரும் களத்தில் இறங்கி விடுகிறார்கள்.

நான் அடிக்கடி செல்லும் ஒரு ப்ரௌசிங் சென்டரில் – அதன் உரிமையாளருடன் சேர்ந்து ஒரு மறைமுக ஆய்வில் ஈடுபட்டேன். ஸ்கூல் யூனிபார்மில் வருபர்கள் எதைத் தேடுவதற்காக வருகிறார்கள் என்று ஆய்வு செய்தோம். குழுவாக வரும் மாணவர்கள் கேம்ஸ் விளையாடுவதாகச் சொல்லிவிட்டு ஆபாசப் படம் தான் பார்த்தார்கள். பலரும் தரவிறக்கம் செய்தது ஆபாச வீடியோக்களாகத் தான் இருந்தன. சிலர் செல்பேசியிலும் மெமரி கார்டிலும் பதிந்து கொண்டு சென்றார்கள். இவர்கள் எல்லோரும் 7-ஆம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை படிப்பவர்கள். அரசுப்பள்ளி முதல் பல்வேறு உயர்தரத் தனியார் பள்ளி மாணவர்கள் வரை எல்லோரும் இதில் அடக்கம்.

மாணவருக்குப் பதினாறு வயது... அவருடன் ஓர் ஆசிரியர் பாலியல் உறவில் ஈடுபடுவது தவறு என்று விவாதம் செய்கிறோம். இரண்டு வருடங்கள், சரியாக 730 நாட்கள் கழித்து இதே வேலையை அந்த மாணவர் செய்தால் நாம் எப்படி விவாதிப்போம் என்று யோசிக்கிறேன். சரி போகட்டும் ஒரு கல்லூரி மாணவன் 18 வயதினைப் பூர்த்தி செய்த மாணவன் அதே கல்லூரியைச் சேர்ந்த ஒரு பேராசிரியரைத் திருமணம் செய்கிறான். சட்டப்படி அவர்களுக்குத் திருமணம் செய்துகொள்ளும் உரிமை இருக்கிறது. இப்பொழுது நாம் இந்த விஷயத்தை எப்படிப் பார்ப்போம்?. சிக்கல் தீர்க்க முடியாத புதிர்கள் இவையெல்லாம். பத்திரிகைகளுக்குத் தீனி வேண்டும் என்பதால் இதையெல்லாம் பரபரப்புப் செய்தியாக்கி விடுகிறார்கள். நம்முடைய வாய்க்கும் அவள் கிடைத்து விடுகிறது. இதனினும் கொடுமை என்னவெனில், ஓடிச்சென்ற ஆசிரியரையும் மாணவரையும் கண்ட பொதுமக்கள் அடித்துத் துவைத்திருக்கிறார்கள். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்படிருக்கிறார்கள். இந்த அதிகாரத்தை யார் இவர்களுக்குக் கொடுத்தது என்று தெரியவில்லை. தனிப்பட்ட முறையிலும் சரி, கும்பல் மனோநிலையிலும் சரி தமிழக மக்கள் தரம் கெட்டவர்களாக மாறிக்கொண்டு வருகிறார்களோ?

வளிரிளம் பருவம் சுகத்தைத் தேடி அனுபவிக்க விழையும் பருவம். தொழில்நுட்பத்தின் சாத்தியங்கள் வளர்ந்து சிகரத்தைத் தொடும் இக் காலகட்டத்தில் - அவர்களுக்கு எல்லா விதமான சுகத்தையும் கண்டு துய்க்கும் வசதியை அது ஏற்படுத்திக் கொடுக்கிறது. மாணவர்கள் அதனைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். கருவாட்டுத் துண்டையும், மசால் வடையையும் பொறியில் வைத்துவிட்டு மாட்டிக்கொண்ட எலியைக் குற்றம் சொன்னால் எப்படி?

இதனை நாம் என்று உணர்வோமோ தெரியவில்லை...!

1 comment:

  1. கலிகாலம் தான்... முதலில் பெற்றோர்களுக்கு...!

    ReplyDelete