Monday, April 27, 2015

வைரமுத்துவும் மனிதன் தான்


ஆரம்பத்திலேயே ஆன்டிசிபேஷன் பெயில் எடுத்துக் கொள்வதுபோல ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்தி விடுகிறேன். பாடலாசிரியனாக வைரமுத்துவை எனக்கு மிகப் பிடிக்கும். கவிதைக்கும் எனக்கும் காத தூரம். ஆகவே, வைரமுத்துவின் கவிதைகளைப் பற்றிச் சொல்வதற்கில்லை. ‘கள்ளிக்காட்டு இதிகாச’த்தைப் புரட்டிவிட்டு – பீச்சாங்கையால் தூக்கி எறிந்ததும் உண்டு. திராபையிலும் திராபையான நாவல். இந்த நாவலை ‘சாகித்ய அகாதமி’ விருதுக்குத் தேர்ந்தெடுத்த புண்ணியவான்கள் யாரென்று தெரியவில்லை.

அந்த வருடத்தின் சாகித்ய விருது சரியான நாவலுக்குத் (கள்ளிக்காட்டு இதிகாசம்) தான் கிடைத்துள்ளது என வெங்கட் சாமிநாதன் வேறு திருக்கரங்களால் எழுதியிருந்தார். அப்படி என்னதான் இந்தப் படைப்பில் கண்டாரோ தெரியவில்லை! இந்நாவல் வெளியான சமீபத்திய வருடங்களில் தான் “ரத்த உறவு, கூள மாதாரி” போன்ற நாவல்களும் வெளிவந்திருகின்றன. இதுபோன்ற கிளாசிக் படைப்புகளை வைரமுத்துவின் பார்வைக்கு அவரது நண்பர் குழாம் எடுத்துச் செல்கின்றதா என்று தெரியவில்லை. இந்தக் கதையையெல்லாம் எதற்காகச் சொல்கிறேன் என்றால், வைரமுத்துவின் படைப்புகளைப் பெரிதாக நான் சிலாகித்துப் படித்ததில்லை. அவரால் எனக்கு ஆகப்போகும் காரியமும் எதுவும் இல்லை. இருந்தாலும் ஒருசில விஷயங்களைச் சொல்லித்தானே ஆகவேண்டும்.

காரணம் வேறொன்றும் இல்லை. தேனி கண்ணன் என்ற பத்திரிகையாளர் இளையராஜாவைத் தூக்கி வைத்தும், ராஜாவுடன், கண்ணதாசன், பட்டுக்கோட்டையார், வாலி போன்றோரை ஏத்தி வைத்தும் – வைரமுத்துவின் சுயநலத் தன்மையை சுட்டிக்காட்டி ஒரு கட்டுரை, ஆராய்ச்சிக் கட்டுரையே எழுதியிருந்தார். நம் மக்கள் பரவலாகப் படித்து வைரமுத்துவை மேலும் மேலும் விமர்சனம் செய்து கொண்டிருகிறார்கள். பெண்கள் துவங்கி மது வரை கண்ணதாசனுக்கு இல்லாத பலவீனங்களா? அவற்றையெல்லாம் நம்மாட்கள் எவ்வளவோ பேசிவிட்டார்கள். “ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு, அந்த கோலமயில் என்...” என்று எழுதிவிட்டுத் தானே சென்றிருக்கிறார். வைரமுத்து இது போன்ற விஷயங்களில் ஒழுக்கமானவர் என்பதும் இதே பத்திரிகைகள் எழுதியிருக்கிறார்கள் தானே!

“ஆதாயம் இல்லாமல் ஒரு நிமிடத்தைக் கூட வீணடிக்க மாட்டார். சுயநலவாதி, மற்றவர்களின் வாய்ப்பைத் தட்டிப் பறிப்பார், இளையராஜாவிற்கு எதிராக 40 வடநாட்டு இசையமைப்பாளர்களை இறக்குமதி செய்தார், தனது மகன்களான மதன் கார்கி மற்றும் கபிலனுக்கு இளையராஜாவிடம் வாய்ப்புக் கொடுக்கச் சொல்கிறார். இத்தியாதி இத்தியாதி இத்தியாதி... புகழை விரும்பக் கூடியவர்...”

பணம் சம்பாதிக்கும் இயந்திரம் என்று நேரடியாகச் சொல்லவில்லை. அவ்வளவு தான். இந்தக் குறைகள் எல்லோரிடத்திலும் தானே இருக்கிறது. எல்லோரும் சுயநலத்துடன் தானே இருக்கிறோம். பணம் சம்பாதிக்க வேண்டும் என்று எல்லோரும் தானே ஆசைப்படுகிறோம். கார்த்திக் நடித்து வெளிவந்த “சகுனி” என்று நினைக்கிறன். அந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ் நடித்த வேடத்தில் வேறொரு நடிகர் நடித்து முழுப்படமும் எடுத்து முடித்திருக்கிறார்கள். அவரது நடிப்பு சரியில்லையென்று – திருப்தியாக இல்லையென்று - பிரகாஷ் ராஜிடம் பேசி மறுபடியும் ரீஷூட் செய்திருக்கிறார்கள். படம் வெளிவந்த சமயத்தில் பிரகாஷ் ராஜிடம் ஒரு கேள்வி முன்வைக்கப் படுகிறது:

“இன்னொருத்தர் நடிச்ச பாத்திரத்துல நீங்க நடிக்கறதால அவரோட வாய்ப்பு பரிபோகுது இல்லையா? ஒரு நடிகரா சக நடிகரோட வாய்ப்ப தட்டிப் பரிக்கலாமா?”

“நடிப்பு எனக்குத் தொழில். இங்க நான் செண்டிமெண்ட் பார்க்க முடியாது. அவரோட நடிப்பு சரியில்லன்னு தானே எங்கிட்ட வராங்க? நான் நடிச்சிக் கொடுக்குறேன், அதிலென்ன தப்பு இருக்குது” என்றார்.

நைச்சியமாகப் பேசி ஒரு படத்தின் எல்லா பாடல்களையும் எழுதும் வாய்ப்பை வைரமுத்து பெறுகிறார் எனில், அது வைரமுத்துவின் திறமை. இதனை எப்படி சக கவிஞர்களுக்குச் செய்யும் துரோகமாகப் பார்க்க முடியும். ஒரு வருடத்திற்கு ஏறக்குறைய 100 படங்கள் இளையராஜா – வைரமுத்து ஆகிய இருவரும் பரபரப்பாக இருந்த சூழலில் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். அந்த எல்லா படங்களிலுமா வைரமுத்து பாடல்களை எழுதினார். எப்படா கிடைக்கும் வாய்ப்பு என்று வைரமுத்துவைத் தேனி கண்ணன் போட்டுத் தாக்கியிருக்கிறார். சரி, ஒரு மூத்த பத்திரிகையாளனின் ஒருபக்கச் சாய்வு கட்டுரை என்று எடுத்துக் கொள்ள வேண்டியது தான்.

எனக்கு மிகப் பிடித்த ஆளுமை ஒருவருடன் மத்திய கைலாஷ் சாலையில் நடந்து கொண்டிருந்தேன். பிரபல இதழ் ஒன்றில் வேலை பார்த்தவர். வைரமுத்துவும் இவரது நட்பு வட்டத்தில், ஆரம்ப காலகட்டத்தில் இருந்திருக்கிறார் போல. ஏன்? எப்படி? என்று ஞாபகம் இல்லை. வைரமுத்துவைப் பற்றிய பேச்சு வந்தது. நான் வைரமுத்துவைத் திட்டிக்கொண்டு தான் இருந்தேன். பேச்சு வாக்கில் அவர் உதிர்த்த வார்த்தையை இங்குப் பதிய வேண்டிய அவசியம் இருக்கிறது.

“எனக்கு வைரமுத்துவின் படைப்புகள் மேல பெரிய மரியாதை இல்லைங்க கிருஷ்ண பிரபு. ஆனா, அவருக்கு நான் ஒரு வகையில நன்றிக் கடன் பட்டவன்.” என்றார்.

“புரியலையே...” என்று, அவரைப் பார்த்தேன்.

“............. வேலை செய்த போது மிகுந்த மனக் கொந்தளிப்பில் இருந்தேன். சென்னையை விட்டுச் சென்றுவிடலாம் என்று கூட நினைத்திருந்த காலம். அப்பொழுதெல்லாம் வைரமுத்துவைச் சந்தித்துப் பேசிப் பழக்கும் வாய்ப்புகள் இருந்த காலம். அந்த நேரத்தில் வேலையை தக்கவைத்துக் கொள்ள அவசியமான உதவியை வைரமுத்து எனக்குத் தெரியாமலே செய்திருக்கிறார். என்னுடைய நிர்வாகத்துடன் பேசி இருப்பார் போல. அந்த வகையில் அவருக்கு ரொம்ப நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்.” என்றார்.

வேறு யாராவது இதனைச் சொல்லியிருந்தால் நம்பியிருக்க மாட்டேன். இந்த விஷயத்தைப் பகிர்ந்து கொண்ட நண்பர் எனது பெருமதிப்பிற்குரிய நண்பர்களுள் ஒருவர். என்னுடைய நண்பர் வேலை செய்த நிர்வாகம் அவருடைய நட்பு வட்டத்தில் இருந்ததால் பேசி நிலைமையைச் சரி செய்திருக்கிறார். இதனைச் செய்ய வேண்டிய அவசியம் வைரமுத்துவுக்கு இல்லையே. தன்னுடைய அளவிலான அக்கறையான நடவடிக்கையைத் தனது நண்பருக்குத் தேவைப்போது வெளிப்படுத்தி இருக்கிறார் அல்லவா?

இன்னொரு சம்பவமும் நினைவிற்கு வருகிறது. வைரமுத்துவிடம் உதவியாளராக இருந்த ஒருவரைச் சந்திக்க நேரம் கேட்டு – வைரமுத்துவின் அலுவலகம் இருக்கும் பெசன்ட் நகர் கடற்கரைக்குச் சென்றிருந்தேன்.

“இந்த சினிமாகாரங்க எல்லாருமே தன்கீழ வேல செய்யிறவங்கள டார்ச்சர் பண்ணுவாங்கலாமே. வைரமுத்து அன்பா நடந்துக்குறாரா?” என்று பேச்சுவாக்கில் கேட்டேன்.

“அவரிடம் அன்பை எதிர்பார்க்க முடியாது... ஆனா, அவரோட விசாரிப்புல அக்கறை இருக்கும்... இப்படி இருந்துக்கோ. அப்படி இருந்துக்கோன்னு சிலமுறை கைட் பண்ணுவாரு” என்றார்.

வைரமுத்து காசு விஷயத்தில் கறார் பார்ட்டி என்று சினிமாக்கார நண்பர்கள் சொல்லக் கேட்டதுண்டு. தனது வளர்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்தும் கடைந்தெடுத்த சுயநலவாதி என்பதும் ஊரறிந்த விஷயம். சமீபத்தில் ஒரு நண்பருடன் பேசிக் கொண்டிருந்தேன். பிரபல எழுத்தாளர் ஒருவர் – தான் பார்த்து வரும் அரசு வேலைக்குப் போகாமல் சம்பளம் மட்டும் பெற்று வருகிறாராம். வேலை வேண்டாம் என்று எழுதிக் கொடுத்துவிட்டு எழுத்துப் பணி ஆற்ற வேண்டியது தானே. அந்த எழுத்தாளர் நீண்ட விடுப்பில் இருப்பதாகக் கேள்விப்பட்டேன். திரைப்படத்திலும் எழுத்தாளராகப் பணியாற்றுகிறாராம் அந்த நபர். இவரும் கூட வைரமுத்துவின் மீது தன்னால் முடிந்த மட்டும் விமர்சனக் கனையை வீசியிருக்கிறார். தன்னுடைய வாழ்க்கையில் குறைந்தபட்ச நேர்மையையாவது கடைபிடிக்கும் இவரைப் போன்றவர்கள் தான் நேர்மையைப் பற்றிப் பேசுகிறார்கள். (இந்த எழுத்தாளர் யார் என்று கேட்காதீர்கள். ஒரு கற்பனைக் கதாப்பாத்திரம் என்று வேண்டுமெனில் கூட வைத்துக்கொள்ளுங்கள். ) யோசித்துப் பார்த்தால் எல்லோரும் சிறியார் தான்.

உடல்நிலை முடியாமல் இருந்த சமயத்தில் ஜெயகாந்தனிடம் முறையற்ற தன்மையில் கையொப்பம் பெற்று பாராட்டுக் கடிதத்தைப் பெற்றதற்காக வைரமுத்துவைத் தாளித்து எடுத்துவிட்டார்கள் நம்மவர்கள். உண்மையிலேயே தாளித்தெடுக்க வேண்டிய விஷயம் தான். ஆனால், அதற்கும் ஓர் எல்லை இருக்கிறதல்லாவா?

வைரமுத்துவைப் பணம் சம்பாதிக்கும் இயந்திரமாகவும், மனிதத் தன்மையே அற்றவராகவும் சித்தரித்து பல்வேறு தன்மையிலான பதிவுகள் மற்றும் கட்டுரைகள். குறிப்பாக தேனி கண்ணன் எழுதிய கட்டுரை வைரமுத்துவின் அறியாத பக்கத்தை முன்வைப்பதாக இருந்தது. எனினும், அந்த அளவிற்கு வைரமுத்துவை இளையராஜாவுக்கு எதிராக வில்லன் போலச் சித்தரித்திருக்க வேண்டாம். ஒட்டு மொத்த சினிமா பாடலாசிரியர்களுக்கு எதிரான ஒரு நபராக சித்தரித்திருக்க வேண்டாம். விமலாதித்த மாமல்லன் போன்றவர்கள் வெறுமனே சலங்கையைக் கட்டிக்கொண்டு ஆடுவார்கள். ஜெயகாந்தனின் மகளே ஒரு நிலைத்தகவலைப் பகிர்ந்தால் சும்மா இருப்பாரா? இதைவிட வைரமுத்துவுக்குப் போறாத காலம் வேறென்ன இருக்க வேண்டும்?

“பெயர், புகழ், பணம், செல்வாக்கு” – இவற்றையெல்லாம் விரும்பாதவர்கள் யாரேனும் இருக்கிறார்களா? வைரமுத்துவுக்கு இவற்றிலெல்லாம் பிடிப்பு அதிகம் என்பது தெரிந்த விஷயம் தான். பொன்மணியுடன் வைரமுத்துவின் உறவைப் பற்றிய சரடையும் இடையிடையே காண முடிகிறது. ஸ்ருதிஹாசனிடம், கமல்ஹாசன் – சரிகா விவாகரத்து பற்றிய கேள்வியை ஒருமுறை மீடியா எழுப்பியபோது “அவங்க ரெண்டு பேருமே மெச்சூர் ஆனவங்க. அவங்க பிரச்சனைகள அவங்களே பார்த்துப்பாங்க... என்னதான் பெற்றோர்களா இருந்தாலும் கூட அவங்களோட ப்ரைவசில மூக்கை நுழைப்பது சரியில்லை” என்றார்.

தனது பெற்றோரின் விஷயத்திலேயே மகள் ஒதுங்கி நிற்கிளாள். பொன்மணி அடிப்படையில் ஒரு பேராசிரியர். தனது தனிப்பட்ட சுதந்திரத்தைக் காப்பாற்றிக் கொள்ள அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும். அவற்றையும் மீறி பல்லைக் கடித்துக்கொண்டு இருக்கிறார் எனில் ஏதேனும் காரணம் இருக்கும். பொன்மணியே வாய் திறக்காமல் இருக்கும் பொழுது நாம் அவற்றைக் கிண்டிக் கிளறலாமா?

மதன் கார்க்கி & கபிலனுக்காக வாய்ப்பு கேட்கிறார் என்றும் தேனி கண்ணன் விமர்சனம் செய்திருக்கிறார். வைரமுத்துவின் அந்தப் பேட்டியை நான் படிக்கவில்லை. வீடியோவையும் பார்க்கவில்லை. எனினும், யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்வதில்லை என்ற கொள்கையில் உறுதியுடன் இருப்பவர் வைரமுத்து என்று கேள்விப் பட்டதுண்டு. மதன் கார்கிக்கும், கபிலனுக்கும் திறமை இல்லாமல், ‘வைரமுத்து’வின் மகன்கள் என்பதால் மட்டும் வாய்ப்பைப் பெற்று முன்னுக்கு வந்துவிட முடியுமா என்ன? அப்படியே சிபாரிசு செய்தாலும் என்ன தவறிருக்கிறது? எந்த தந்தை தான் தனது மகன்களுக்கு சிபாரிசு செய்யமாட்டான்? இதையெல்லாம் காரணம் காட்டி வைரமுத்துவை கோடம்பாக்கத்தின் ‘லிரிஸ்ட் வில்லன்’ போலச் சித்தரிக்க வேண்டுமா என்ன?

ஒரு மனிதனிடம் பலமும் இருக்கும், பலவீனமும் இருக்கும். வைரமுத்துவின் பலவீனம் அவருக்கு எதிராக இந்த அளவிற்குத் திரும்பும் என்று அவரே கூட எதிர்பார்த்திருக்க மாட்டார். (எனினும் இதுவரையிலும் வைரமுத்து நேரடியாக வாய்திறந்து எதையும் மீடியாவிற்குச் சொல்லவில்லை. அப்படியெனில் இந்த எதிர்மறை செய்திகளையும் தனது பப்ளிஸிடியாக எடுத்துக் கொள்கிறாரோ என்னவோ?) இளையராஜாவிடம் “தான்” என்ற அகங்காரம் இல்லையா? அதற்கு நேரெதிராகப் பிரவாகமெடுக்கும் ஆளை மயக்கும் இசையும், அரிதாக வெளிப்படும் குழந்தைத் தன்மையும் அவரிடம் இல்லையா? வைரமுத்து எல்லாவற்றையும் ஆதாயத்துடன் அணுகக் கூடியவர் என்கிறார்கள். அது தவறு. அடிப்படையில் மனிதர்களுக்கே இருக்கக் கூடிய பலவீனங்கள் அவரிடம் இருக்கலாம். நம்மைக் காட்டிலும் அதிகமாகவே கூட இருக்கலாம். எனினும் “வைரமுத்துவும் மனிதன் தான்” என்பதை நாம் மறக்கக் கூடாது. அவருக்குள்ளும் எங்கோ கொஞ்சம் ஈரம கசியத்தானே செய்யும். அதற்கான உதாரணங்கள் தான் மேற்கூறிய நண்பர்களுடனான உரையாடல்கள். இயக்குநர் சீனு ராமசாமிக்கு பிரஸ்மீட் ஏற்பாடு செய்து, அவரது முதல் படம் பெரிதாக வெளியில் தெரியக் காரணமாக இருந்தவர் வைரமுத்து. பாடல்கள் எழுதியதோடு நிறுத்திக் கொண்டிருக்கலாமே. சீனு ராமசாமிக்கு இந்த அளவிற்கு மெனக்கெட வேண்டிய அவசியம் என்ன? சீனு ராமசாமியின் மேல் வைரமுத்துவுக்கு இருந்தது மனிதம் வெளிப்படக் கூடிய ஏதோ ஒன்று (அன்பு / அக்கறை) தானே!

இறுதியாக, “பத்திரிகையாளர்களைத் தனது விருப்பத்திற்கு ஏற்ப வைரமுத்து பயன்படுத்திக் கொண்டவர். தன்னைப் பற்றிய செய்தி எப்படி வர வேண்டும் என்று முடிவெடுக்கும் அதிகாரம் படைத்தவர் வைரமுத்து” என்ற தேனி கண்ணனின் விமர்சனத்தை நாம் கொஞ்சம் கூர்மையாக அவதானிக்க வேண்டும். இந்த இடத்தில் தேனி கண்ணன் சேம்சைட் கோல் போட்டிருக்கிறார். ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றான பத்திரிகைத் துறை புரையோடிப் போயிருப்பதையே இந்த வாக்கியம் சுட்டிக் காட்டுகிறது. அடுத்தவர்களின் அதிகாரத்தின் வழிகாட்டுதலில் செய்தியைப் பிரசுரிக்கும் இவர்களை நம்பியா நாம் எல்லாச் செய்திகளையும் தெரிந்துகொள்கிறோம். ஒரு சினிமா பாடலாசிரியனுக்கே சலாம் போடும் இவர்கள் – அரசியல் மற்றும் அதிகாரம் படைத்தவர்கள் ஊதும் மகுடிக்கு மயங்காமல் இருப்பார்கள் என்பது என்ன நிச்சயம். பெருவாரியான பத்திரிகையாளர்களும் நிருபர்களும் ஏதோ ஒன்றிற்கு விலை போகிறார்கள் என்று சொல்ல வருகிறாரா இவர்?

என்ன கொடுமைங்க ஃப்ரெண்ட்ஸ் இதெல்லாம்?

No comments:

Post a Comment