Friday, April 24, 2015

டிஸ்கவரி புக் பேலஸ் – இலக்கிய நிகழ்வுகள்

அன்பிற்கினிய நண்பர்களே...! எதிர்வரும் மே, ஜூன், ஜூலை (2015) ஆகிய மாதங்களின் ஞாயிற்றுக் கிழமைகளிலும், அரசு விடுமுறை தினங்களிலும் - சென்னை - கே.கே நகரிலுள்ள டிஸ்கவரி புக் பேலஸில் - சில எழுத்தாளர்களின் படைப்புகளைப் பற்றிப் பேச நிகழ்வினை ஏற்பாடு செய்யலாம் என்றிருக்கிறோம். இந்த இலக்கிய நிகழ்வில் “யுவன் சந்திரசேகர், வேல. ராமமூர்த்தி, இமையம், க. சீ. சிவக்குமார், அ. முத்துலிங்கம், இரா. முருகன், அம்பை” ஆகியோரது படைப்புகளைப் பற்றிப் பேச நண்பர்கள் இசைவு தெரிவித்திருக்கிறார்கள். மேலும் சிலரிடம் பேசிக் கொண்டிருக்கிறோம்.

ஜூலை மாதம் 05-ஆம் தேதி வைக்கம் முகமது பஷீரின் 20-ஆம் ஆண்டு நினைவு தினம். இந்நிகழ்வைப் பல்வேறு அமர்வுகள் கொண்டு சிறப்பிக்கலாம் என்று யோசித்து வைத்திருக்கிறோம். (கவிஞர் சுகுமாரனைப் பேசுவதற்கு வருமாறு அழைத்திருக்கிறோம். பஷீரின் ஜென்மதினம் சிறுகதையை நடிகர் மணிபாரதி அரங்கேற்றுவதாக ஒத்துக் கொண்டிருக்கிறார். சினிமா விமர்சகர் சுரேஷ் கண்ணனும் இந்நிகழ்வில் பேசுவதற்கு வருவதாக இசைவு தெரிவித்திருக்கிறார். பஷீருடன் நெருக்கமான தொடர்பில் இருந்த ஒருசிலரை அழைக்கும் உத்தேசத்திலும் இருக்கிறோம். பேச்சுவார்த்தை இன்னும் முடிவாகவில்லை.) பஷீர் – ஆவணப்படத் திரையிடலும் அதன் ஒரு பகுதியாக இருக்கும். எல்லாம் முடிவான பிறகு நிகழ்ச்சி நிரலைத் தெரியப்படுத்துகிறோம்.

போலவே, தன் வரலாறுகள் நிறையவே தமிழில் வெளிவருகின்றன. ஆங்கிலத்திலிருந்தும், மலையாளத்திலிருந்தும், இதர இந்திய மொழிகளிலிருந்தும் நிறைய நூல்கள் வெளிவருகின்றன. அவற்றைப் பற்றிய பெரிதான விமர்சனக் கட்டுரைகளோ அல்லது கூட்டங்களோ நடைபெறுவதில்லை. போதுமான கவனிப்பும் இத்தைகைய புத்தகங்களுக்குக் கிடைப்பதில்லை. ஆகவே, நிர்பந்தத்தின் காரணமாக வேற்று தேசத்திற்கு அகதிகளாகச் செல்ல நேர்ந்த பதின்பருவத்து சிறுவர்களின் மனநிலையைப் பிரதிபலித்த, அவர்கள் எதிர்கொண்ட சூழ்நிலைகளை முன்வைத்த “போரின் மறுபக்கம் (பத்தினாதன்)” மற்றும் “அப்பாவின் துப்பாக்கி (ஹெனர் சலீம்)” ஆகிய இரண்டு நூல்களையும் பற்றிப் பேசுவதற்கு ஜூன் 28-ஆம் தேதி ஒரு நிகழ்வினை ஒருங்கிணைக்கலாம் என்றிருக்கிறோம். இதே நிகழ்வில் போபடி ஷிரானந்தானியின் தன்வரலாறு - சாகித்ய அகாடமி வெளியிட்ட - “எனது நினைவலைகள்” புத்தகத்தையும் பேசுவதற்கு எடுத்துக் கொள்ளலாம் என்றிருக்கிறோம்.

இம்மூன்று புத்தகங்களும் “ஒரு சாமானியன், ஓர் எழுத்தாளர், ஒரு திரைப்பட இயக்குனர்” என வெவ்வேறு தளத்தில் அகதியாக வாழ்ந்தவர்களின் வாழ்க்கைப் பதிவுகள். இந்தியப் பிரிவினைக்குப் பின் ஷிரானந்தானி – இந்தியப் பிரஜையாக இங்கு வாழ்ந்தாலும் – சிந்தி மொழி பேசும் சிறுபான்மை அகதியைப் போலவே தான் உணர்வதாகத் தன்னுடைய புத்தகத்தில் சொல்லியிருப்பார்.

இந்நிகழ்வில் “செந்தூரன் (உதவி ஆசிரியர் – காலச்சுவடு), ஜெனி (நாடகக்காரர், உதவி இயக்குனர், மொழிபெயர்ப்பாளர்)” ஆகியோர் பேசுவதற்குத் தயார் செய்துகொண்டு வருவதாகத் தெரிவித்திருக்கிறார்கள். சோமீதரன் மற்றும் தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குனர் இன்னொருவரிடமும் பேசிக் கொண்டிருக்கிறோம். அவர்களும் உறுதி செய்த பிறகு இந்நிகழ்வு நடைபெறும் நேரத்தை உறுதி செய்கிறோம்.

இத்தொடர் நிகழ்வின் முதல் நிகழ்வாக யுவன் சந்திர சேகரின் படைப்புகள் குறித்த விமர்சனக் கூட்டம் மே மாதம் 17-ஆம் தேதி, ஞாயிற்றுக் கிழமை மாலை 4.30 மணிக்கு ஏற்பாடாகி இருக்கிறது. இந்த விமர்சனக் கூட்டத்திற்கு யுவன் சந்திரசேகரும் வருவதாகச் சொல்லி இருக்கிறார். நிகழ்வில் பேச இருப்போர்: 


1. யுவன் சந்திரசேகர் படைப்புகள்:

இடம்: டிஸ்கவரி புக் பேலஸ் – தேதி: மே, 17 - நேரம்: மாலை 4.30

கவிதைகள் – கங்காதரன் (கவிஞர், முதுகலை மாணவர் - MCC கல்லூரி, தாம்பரம்)
சிறுகதைகள் – அ. மு. செய்யது (எழுத்தாளர்)
நாவல்கள் – சுரேஷ் கண்ணன் (விமர்சகர், எழுத்தாளர்)
மொழிபெயர்ப்புகள் – கவிதா முரளிதரன் (பத்திரிகையாளர், எழுத்தாளர்)

2. க. சீ. சிவக்குமார் படைப்புகள்:

இடம்: டிஸ்கவரி புக் பேலஸ் – தேதி: மே, 31 - நேரம்: மாலை 4.30

பாஸ்கர் சக்தி (எழுத்தாளர், வசனகர்த்தா, இயக்குநர்)
கவிதா பாரதி (கவிஞர், இயக்குநர்)
யுவ கிருஷ்ணா (பத்திரிகையாளர், எழுத்தாளர்)
பத்மஜா நாராயணன் (கவிஞர், மொழிபெயர்ப்பாளர்)

இதைத் தொடர்ந்து வரும் நிகழ்வுகளிலும் பேசுவதற்கு நண்பர்கள் இசைவு தெரிவித்திருக்கிறார்கள். இன்னும் சிலரிடமும் பேசிக்கொண்டு இருக்கிறோம். நேரமும், தேதியும் இனிமேல் தான் உறுதி செய்யப்பட வேண்டும்.

சிறுவர் இலக்கியம் சார்ந்த கூட்டம் ஒன்றை நடத்திப் பார்க்க வேண்டும் என்பது தனிப்பட்ட முறையில் எனக்கு நீண்ட நாட்களாக இருக்கும் ஆசைகளில் ஒன்று. டிஸ்கவரி வேடியப்பனும் இதில் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார். யூமா வாசுகி - தொடர்ந்து அயல்மொழி சிறுவர் இலக்கிய வரிசையைத் தமிழுக்குக் கொண்டு வந்திருக்கிறார். இரா. நடராசன் போன்றவர்களும் தொடர் பங்களிப்பு செய்கிறார்கள். விழியன், விஷ்ணுபுரம் சரவணன் வரை சிறுவர் இலக்கியப் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. குழந்தைகள் இலக்கியம் என்ற பிரிவையும் சேர்த்தே சிறுவர் இலக்கியம் என்று இங்கு நான் சுட்டுகிறேன். என்னுடைய நட்பு வட்டத்தில் இது சார்ந்து இயங்கும் நண்பர்களை யோசித்தால் - யூமா வாசுகி, முரளீதரன் (சுட்டி விகடன் கதைகள்), விழியன், விஷ்ணுபுரம் சரவணன் போன்ற பெயர்கள் தான் வரிசைப்படுத்த வருகின்றன. கடந்த புத்தகக் கண்காட்சியில் பாலு சத்யாவின் சிறுவர் நாவல் ஒன்று வெளியீடு கண்டது. சிறுவர் இலக்கியம் சார்ந்து பெண்கள் யாரேனும் சமீப காலத்தில் பங்களிப்பு செய்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்து யாரேனும் இருந்தால் சொல்லுங்களேன்.

சிறுவர் இலக்கிய உரையாடல் நிகழ்வு:

குமார் ஷா (கதை சொல்லி, அறம் ஃபவுண்டேஷன்)
தம்பிச்சோழன் (நடிகர், எழுத்தாளர்)
பால பாரதி (எழுத்தாளர், ஊடகவியலாளர்)
– இவர்கள் மூவரும் நிகழ்வில் கலந்துகொண்டு பேச இருக்கிறார்கள். பேரா. வளர்மதியுடன் ஒருமுறை பேசிக்கொண்டிருந்த போது – “தமிழில் குழந்தைகள் இலக்கிய நூற்தொகை” ஒன்றிற்காக வேலை செய்துகொண்டிருப்பதாகக் கூறினார். அவரையும் கூடத்திற்கு அழைத்து, அவரது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளச் செய்யலாம் என்று நினைத்து செல்பேசியில் அழைத்தேன். இப்பொழுது சேலத்தில் மாற்றலாகிச் சென்றுவிட்டதாகக் கூறினார். குழந்தைகள் இலக்கியம் சார்ந்து கல்விப் புல ஆராய்ச்சியில் இருக்கும் ஒருவரைத் தேடிக்கொண்டு இருக்கிறோம். கிடைத்ததுமே “சிறுவர் இலக்கிய கூட்டம்” ஒன்றை நடத்திப் பார்த்து விட வேண்டியது தான்.

இதர எழுத்தாளர்களின் படைப்புகளைப் பற்றிப் பேசுபவர்கள் உறுதிப் பட்டிருந்தாலும், இதுவரை மூன்று கூட்டங்களுக்கான தேதிதான் முடிவாகி இருக்கின்றன. எனினும் அதைப்பற்றிய தகவல்கள் கீழே. 

3. வேல. ராமமூர்த்தியின் படைப்புகள்:

பகவதி பெருமாள் (இயக்குனர் & நடிகர்)
சுகந்தி நாச்சியாள் (ஊடகவியலாளர்)
வேல் கண்ணன் (கவிஞர், எழுத்தாளர்)

4. அம்பையின் படைப்புகள்:

சித்ரா (அம்பையின் படைப்புகளை எம்.ஃபில் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்டவர்.)
அதிஷா (எழுத்தாளர், பத்திரிகையாளர், நடிகர்)
ப்ரியதர்ஷனி (வாசகர்)

5. இமையம் படைப்புகள்:

(ஜூன் 21 – மாலை 4.30 மணிக்கு மேல்...)

அரவிந்தன் (பத்திரிகையாளர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்)
பரமேஸ்வரி (கவிஞர், எழுத்தாளர்)
கதிர் பாரதி (கவிஞர், பத்திரிகையாளர்)

6. அ. முத்துலிங்கம் படைப்புகள்:

மாலன் (எழுத்தாளர், பத்திரிகையாளர், ஊடகவியலாளர்)
உமா ஷக்தி (கவிஞர், பத்திரிகையாளர்)
விக்னேஷ்வரன் (உதவி இயக்குநர்)

ஆய்வு நூல்கள் – உரையாடல்

தொ. பரமசிவம் ஆய்வுகள் – சௌந்தரி (SRM கல்லூரி)
பொ. வேல்சாமி ஆய்வுகள் – காமராசு (மாநிலக் கல்லூரி)
பாலுச்சாமி ஆய்வுகள் – ஜீவ கரிகாலன் (எழுத்தாளர், ‘யாவரும். காம்’ பதிப்பாளர்)

“கவிஞர் சுகுமாரன், தமிழ்ச்செல்வன், திலீப்குமார், ராஜ் கெளதமன், யூமா வாசுகி, கண்மணி குணசேகரன், அழகிய பெரியவன், பாவண்ணன், கீரனூர் ஜகீர்ராஜா, எஸ். சங்கர் நாராயணன், மனுஷ்ய புத்திரன், தேவி பாரதி, ஜே.பி. சாணக்யா, பாலு சத்யா, மீரான் மைதீன், பால பாரதி, தமயந்தி, சு. தமிழ்ச்செல்வி, இரா. முருகன்” என்று கலந்துகட்டி ஒரு ரவுண்டு அடிக்கலாம் என்று இருக்கிறோம். “தொ. பரமசிவம், பாலுச்சாமி” போன்ற ஆய்வாளர்களின் நூலகையும், “யூமா சாசுகி, ஜி. குப்புசாமி, கே.வி. ஷைலஜா, குளச்சல். மு. யூசுப், பாவண்ணன்” போன்றவர்கள் மொழிபெயர்ப்பு செய்த படைப்புகள் பற்றியும் கூட பேசலாம் என்றிருக்கிறோம். எழுத்தாளர்களிடமும், படைப்புகள் குறித்துப் பேச வரும் நண்பர்களிடமும் உறுதி செய்து கொண்டு ஏனைய நிகழ்வுகள் குறித்த சரியான விவரங்களைத் தெரியப் படுத்துகிறோம்.

ஏற்கனவே இந்த படைப்பாளிகளைப் பலரும் வாசித்து இருக்கலாம். வாசிக்காதவர்கள், ஒருமுறை புரட்டி வைத்துக் கொள்ளுங்கள். அப்படியே படிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை கிளம்பி வாருங்கள். இடையிடையே அந்தந்த கூட்டங்களில் – அந்தந்த படைப்பாளிகளின் படைப்புகளிலிருந்து ஒரு சிறு பகுதியை அல்லது நல்லதொரு சிறுகதை அல்லது கவிதையையும் வாசிக்க இருக்கிறோம்.

தயாராக இருக்குங்கள், கூடிய சீக்கிரமே... நாம் எல்லோரும் ஒன்று கூடி இவர்களது படைப்புகளைப் பற்றி நல்லதொரு மாலை நேரத்தில் உரையாடலாம்.

1 comment:

  1. நல்ல அருமையான திட்டமிடல் கிபி. ஆவலுய்டன் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete