Saturday, December 31, 2011

தேவலோக வாழ்க்கை

இதோ இப்போதான் தர்ஷன் பிறந்தா மாதிரி இருக்கிறது. எதைப் பார்த்தாலும் சிரித்து விளையாடிக் கொண்டிருந்தவன் புதியவர்களின் முகம் பார்த்து அழ ஆரம்பித்துவிட்டான். என்னைப் பார்த்து அதிகமாகவே அழுகிறான். பயத்தில் தான் அழுவதாக நினைக்கிறேன். ஒரு பூனையைப் பார்த்து பூனை பயப்படுவதில்லை. நாயைப் பார்த்து நாயும் பயப்படுவதில்லை. யானையைப் பார்த்து யானை கூட பயப்படுவதில்லை. மனிதக் குழந்தைகள் மட்டும் ஏன் புதிய மனிதர்களைப் பார்த்து அழுகிறது?. அப்படியெனில் எது போன்ற ஜந்துக்கலாக வளர்ந்த மனிதர்களின் முகங்கள் குழந்தைகளின் கண்களுக்குப் புலப்படுகிறார்கள். இந்த சந்தேகம் நீண்ட நாட்களாக எனக்கு இருக்கிறது.

“இவன் ஏன் மாமா என்னைப் பார்த்து இப்புடி அழுவுறான்?” என்று தர்ஷனின் தாத்தாவிடம் கேட்டேன்.

“அவம்பேரு தர்ஷன் இல்ல. தூர்....தர்ஷன், அப்படித்தான் அழுவான். தொலவா இருந்து கேட்டுட்டுப் போ” என்றார்.

தொலைவாகச் சென்றதும் அழுகை சத்தம் நின்றது. தாத்தாவின் முகத்தைப் பார்த்து பேரன் சிரித்துக் கொண்டிருந்தான். பட்டாம்பூச்சி பறந்து பூக்களில் தேனெடுப்பது போல சிரிப்பானது இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருந்தது. சாக்லேட் வேணும்னு அழுதுட்டு இருந்த பையன் இந்த அகில். “டேய்... இங்க வாடா விளையாடலாம்! நீ சீட்டிங் பண்ற போடா”-ன்னு பேசிட்டு இருந்த பையன். ஸ்கூலுக்கு அனுப்பியதிலிருந்து “வாங்க மாமா... போங்க மாமா”-ன்னு பேசப் பழகிவிட்டான். அகில் ஏதாச்சும் விளையாடலாம்மான்னு கேட்டா “டிவி பாக்க சொல்ல டிஸ்டர்ப் பண்ணாதிங்க மாமா. என்னோட பேவரைட் ப்ரோக்ராம்” என்கிறான். அப்படிச் சொன்னதும் அக்காவைப் பார்க்கிறேன்.

“டேய், இது கோல்மூட்ட வேறப் பழகிடுச்சிடா” என்று அக்க குறைபட்டுக் கொண்டாள்.

“என்ன ஜெயா சொல்ற?”

“ஆமாண்டா... அம்மா என்ன அடிட்சிட்டான்னு அங்கபோய் சொல்லுது. பாட்டி என்ன திட்டுறான்னு இங்க வந்து சொல்லுது. இதக் கேட்டுட்டு அவரு வானத்துக்கும் பூமிக்குமா குதிக்கிறாறுடா?” என்றாள்.

“வெங்கட் அந்த மாதிரி மனுஷன் இல்லையே ஜெயா? கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ. கொழந்த தானே”.

“அட... ச்சீ... அவரப் பத்தியும் கோல் மூட்டுதுடான்னா” என்றாள்.

யார்கிட்ட ஜெயா?

“வேற யார்கிட்ட, உன்னோட சித்தப்பாவ சொன்னேன். அகிலோட தாத்தாவ” என்றாள்.

“அதானே பார்த்தேன். பையன் வீக்னெஸ் பார்த்து அடிக்கிறான். நம்மள நம்பி வெங்கட் ஆட்டத்துல எறங்கிடுவாரா என்ன?” என்று நினைத்துக் கொண்டேன். காலம் உருண்டோடுவதை குழந்தைகளே உணரச் செய்கிறார்கள். அன்பானவர்களின் அரவணைப்பை மட்டுமே நம்புவதும், அவர்களின் மூலம் காரியம் சாதிக்கும் முதிர்ச்சியுமே கால ஓட்டத்தின் வெண் திட்டுக்களாக விளங்குகிறது.

இந்த வருடத்தின் ஆகப்பெரிய அனுபவமாக இவையிரண்டும்தான் தோன்றுகின்றன. வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் வழிகாட்டிகள் தேவைப்படுகிறார்கள். அரவணைக்க அன்பு செலுத்த. மென்பொருள் துறையின் நேக்குப் போக்குகளை நாடிபிடித்துப் பயில வெங்கட் பெரிய இன்ஸ்பிரேஷன். வேலையை விட்டு ஏறக்குறைய இரண்டு வருடங்கள் ஆகிறது. சில நல்ல வேலைகள் கிடைத்தும் போவதற்கு மனமில்லை. வீட்டிலிருந்த படியே என்னை நேசிக்கும் சில நிறுவனங்களுக்கு பகுதி நேரமாக வேலை செய்துகொண்டிருக்கிறேன். மிகப் பெரிய வருவாய் இல்லையென்றாலும் “நானே ராஜா! நானே மந்திரி!” என்ற திருப்தி.

ஏறக்குறைய மூன்று வருடங்களாக வலைப்பூவில் எழுதுகிறேன். “என்னை யார் படிக்கப் போகிறார்கள்?” என்று நினைத்ததுண்டு. ஒருசிலர் நேரில் பார்த்து “பரவாயில்லையே! சுமாரா எழுதுறே!” என வாழ்த்தும்போது தொண்டையை அடைக்கும். நன்றாக ஞாபகம் இருக்கிறது. 2011-ஆம் ஆண்டின் ஆரம்ப நாட்களில் காலச்சுவடு பதிப்பகம் கு.அழகிரிசாமியின் மொத்த சிறுகதைத் தொகுப்பு வெளியிட ஏற்பாடு செய்திருந்தார்கள். அன்றைய தினம் எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் சிறப்பு உரையாற்ற வந்திருந்தார். எதிர்பாராத விதமாக மூத்த எழுத்தாளர் திலீப்குமாரையும் அங்கு சந்திக்க நேர்ந்தது. விழா முடிந்ததும் தன்னிடமிருந்த “வெங்கட் சுவாமிநாதன் கட்டுரைத் தொகுப்பு” வெளியீடு பற்றிய அழைப்பிதழ்களை திலீப்குமார் விநியோகிக்க ஆரம்பித்தார். அவரிடமிருந்த அழைப்பிதழ்களில் பாதியை பிடுங்கிக் கொண்டு நானும் விநியோகிக்க ஆரம்பித்தேன். தமிழ்ச்செல்வன் எதிரில் வந்தார்.

“உங்களை ஏற்கனவே பார்த்திருக்கிறேன் தமிழ். மின்னஞ்சல் கூட...” என்று என்னுடைய பெயரை சொல்லி அறிமுகப்படுத்திக் கொள்ளலாம் என்று ஆரம்பித்தேன்.

“கேணியில் நடந்த சேர்ந்திசை (choir) பற்றி எழுதியிருந்திங்களே. அந்த ஒரு எடத்த நுணுக்கமா கவனிச்சி எழுதி இருந்தீங்க. நல்லா இருந்தது” என்றார்.

“உங்களோட வார்த்தைகளைக் கேட்கும்பொழுது வானத்தில் பறப்பது போல இருக்குங்க தோழர்” என்றேன். தமிழகம் முழுவதும் தொடந்து பயணம் செய்பவர். ஏராளமான புத்தகங்கள் வாசிப்பவர். என்றாலும் சிறு விஷயத்தை ஞாபகம் வைத்துத் தட்டிக்கொடுத்தார். சமீபத்தில் அ மார்க்ஸ் கலந்துகொண்ட கேணி கூட்டம் நடைபெற்றது. அந்த நாளில் மட்டும் எழுத்தாளர் ஞாநியின் வீட்டிற்கு சீக்கிரமே சென்றுவிடுவது வழக்கம். திடீரென்று பாலபாரதி செல்பேசியில் அழைத்தார். “கேணிக்கு வெளியில் தான் இருக்கேன். ஒரு டீ போட்டுட்டு வரலாம் வா” என்றார். அழைத்துச்சென்று எழுதத் தேவையான பல விஷயங்களை சொல்லிக்கொடுத்தார். ஆரம்ப காலங்களில் செய்த தவறுகள். அதன்மூலம் கிடைத்த அனுபவம் என பலவற்றைப் பகிர்ந்துகொண்டார். “தொடர்ந்து எழுதிக்கொண்டே இரு. உனக்குன்னு மொழியும் தனித்தன்மையும் தானா வந்துடும்” என்று உற்சாகப்படுத்தினார்.

இணைய இதழ்களின் உள்ளடுக்கில் இயங்குபவர்களான தமிழ்பேப்பரின் ஹரன்பிரசன்னா, சொல்வனம் இதழின் ரவி மற்றும் பாஸ்கர் போன்றவர்கள் தொடர்ந்து உற்சாகப்படுத்தி கட்டுரைகளை கேட்டு வாங்கி பிரசுரம் செய்கிறார்கள். அவர்களுடைய அன்பும், அக்கறையும் மறக்க இயலாதது. கமர்ஷியல் சினிமாவையே பார்ப்பதற்கு பொறுமை இல்லாதவன் நான். “காட்சி ஊடகங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். புத்தக வாசிப்பு போலவே அதுவும் ஓர் அனுபவம். அதிலும் கவனம் செலுத்துங்கள்” என நண்பர் பாஸ்கர் சக்தி தொடர்ந்து அக்கறை செலுத்தி, குறும்படம் ஆவணப்படம், சினிமா போன்ற துறைகளில் கவனம் ஏற்படச் செய்தார். கடந்த சென்னை திரைப்பட விழாவில் “அழகர்சாமி குதிரை” படத்தில் சிறந்த பங்காற்றியமைக்காக தனிமனித சிறப்பு விருதை அவருக்குக் கொடுத்தார்கள். அதற்கான சிறு விழா “டிஸ்கவரி புக் பேலசில்” ஏற்பாடாகி இருந்தது. அதற்கு வருமாறு அழைத்தார். பாஸ்கரின் நெருங்கிய சினிமா நண்பர்களுடன் “கதை, வசனம், பாத்திரச் சித்தரிப்பு” என உரையாடியது வித்யாசமான அனுபவமாக இருந்தது. சென்னை திரைக்கல்லூரி மாணவர்களின் உதவியுடன் ஒரு குறும்படம் தயாரித்துக் கொண்டிருக்கிறேன். மருமகன் முத்துவுடன் சேர்ந்து. பாஸ்கரின் அன்பும் அக்கறையும் இல்லையெனில் இதுபோன்ற சோதனை முயற்சிகளில் இறங்கியிருக்கவே மாட்டேன்.

விமர்சகர் ஞாநி எப்போதுமே குறைபட்டுக் கொள்வதுண்டு. “சினிமாவில் ஆர்வம் இருப்பவர்கள் புத்தகம் வாசிப்பதில்லை. வாசிக்கும் பழக்கம் உள்ளவர்கள் நிகழ்த்துக் கலைகளில் ஆர்வம் காட்டுவதில்லை. அரசியலில் ஈர்ப்பு உடையவர்கள் இலக்கியத்தை சீண்டுவதில்லை. ஓவியம், இசை, இலக்கியம், பரதம், நாடகம் எல்லாவற்றின் மீதும் இளைஞர்கள் ஆர்வம் செலுத்த வேண்டும். இளைஞர்கள் மீது எப்போதுமே எனக்கு பெரிய நம்பிக்கை உள்ளது. அதற்கான சிறு உந்துதலை ஏற்படுத்துவதுதான் கேணி சந்திப்பின் நோக்கம்” என்பார். அதற்கேற்றது போல மேடை நடிகர் பாரதிமணியும் தியேட்டர் லேப் ஏற்பாடு செய்திருந்த பஷீரின் நாடகத்திற்கு அழைத்திருந்தார். அவருக்காகச் சென்றிருந்தேன். நாடக அனுபவத்தை வலைப்பூவிலும் எழுதி இருந்தேன். அதை படித்த கனடா நாடகக் குழுவான அராங்கடல் நண்பர் செல்வன் அறிமுகமானார். பின்னர் பஷீரின் அதே குறுநாவலை அராங்கடலுக்காக நாடக வசனமாக மாற்றும் சூழல் ஏற்பட்டது. அதற்கான சன்மானத்தை நண்பர் தளவாய் சுந்தரத்தின் மூலம் செல்வன் கொடுத்தனுப்பினார். எழுதி சம்பாரித்த முதல் பணம் என்பதால் வியப்பாக இருந்தது. அக்கறையுடன் வழிகாட்டிய எல்லோரையும் செல்பேசியில் அழைத்து தம்பட்டம் அடித்துக் கொண்டேன். மிகவும் மகிழ்ந்தார்கள். பாரதிமணி மிகவும் சந்தோஷப்பட்டார்.

ஞாநியை மட்டும் நேரில் சென்று பார்த்தேன். “இதுதான் விஷயங்க ஞாநி என்னை ஆசிர்வாதம் பண்ணுங்கள்” என்று காலைத் தொட்டேன்.

“ஒரு மனிதனின் காலில் இன்னொரு மனிதன் விழுவதில் எனக்கு உடன்பாடில்லை. சந்தோஷமோ துக்கமோ சக மனிதனாக பகிர்ந்துகொள்ளலாம்... ம்... சொல்லுங்க...” என்றார். “இவர் தமிழ்நாட்டில் தானே இருக்கிறார். தமிழக கலாச்சாரம் தெரியவில்லையே. அம்மா இப்படித்தானே பழக்கி இருக்காங்க” என்று நினைத்துக் கொண்டேன்.

இங்கு பா ராகவனையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். “உங்கிட்ட கொஞ்சம் Stuff இருக்கு. கொஞ்சம் சிரமப்பட்டு உழைச்சா நல்லா வருவடா” என்பார். என்னை எப்படியாவது ஒரு புத்தகம் எழுத வைக்க வேண்டும் என்று மிகுந்த பிரயாசைபட்டார். பாரா கிழக்கில் இருந்தவரை நிறைவேறவில்லை. அவரை செல்பேசியில் அழைத்து தம்பட்டம் அடித்தேன்.

“நீ இன்னும் நல்லா வரணும்டா. ரொம்ப சந்தோசம்டா” என்றார்.

எழுத்தாளர் தமிழ்மகன், பாலுசத்யா, ராம்ஜி, வேல்கண்ணன், பிரபா, விதூஷ் அக்கா, பத்மா அக்கா, யுவா, நேசமித்ரன், கார்த்திகை பாண்டியன், அதியமான், கார்த்திகா வாசுதேவன், மரா, அ மு சையத், முத்துச்சாமி, விஷ்ணு, சாது என எல்லோரும் தொடர்ந்து வாசித்து, கைபிடித்து அழைத்துச் செல்கிறார்கள்.

இதுவரை சென்றது எல்லாமே மகிழ்ச்சி நிறைந்த காலங்கள். அடுத்த ஆண்டுகளுக்கான சிறுசிறு முயற்சியும் திட்டமிடலும் இருக்கிறது. புத்தக விழாக்களுக்கு சாதாரண நுகர்வோராக சென்றிருக்கிறேன். தமிழின் முக்கிய பதிப்பகம் ஒன்றோடு சேர்ந்து வேலை செய்யும் சூழல் 2012-ம் ஆண்டு அமையும் என்றே நினைக்கிறேன் (பகுதி நேர வேலை). ஜனவரி கழித்து அதற்கான வேளைகளில் இறங்க வேண்டி இருக்கும். “புத்தகம் சார்ந்த வியாபாரம் எப்படி இருக்கிறது?” என்பதையும் நோட்டம் விட வேண்டும். “ஒரு லட்சம் தலைப்பில் ஒரு கோடி புத்தகங்கள்” என்ற விளம்பரமே மலைப்பை ஏற்படுத்துகிறது. சவால் நிறைந்த துறையாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.

இதற்கிடையில் சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்டிக் கொண்டிருக்கிறேன். பூமி பூஜையின் போது செங்கல் எடுத்து வைத்ததோடு சரி. எல்லா வேலைகளையும் இளைய அண்ணனே பார்த்துக் கொள்கிறார். இரண்டு நாட்களாக ஒரே மழை. இன்றுதான் கொஞ்சம் தணிந்தது. கட்டிடப் பணிகளை பார்த்து வரலாம் என்று கிளம்பினேன். ஆண்டின் கடைசி நாள் என்பதால் மக்களெல்லாம் உற்சாகமாக தென்பட்டனர். “Where is the party tonight?” என்ற வார்த்தைகள் உள்ளுக்குள் ஒலிக்கிறதோ என்னவோ? புதிதாக வீடுகட்டும் தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தேன்.

வாஸ்துப்படி வர்ணம் பூசப்பட்ட வீட்டின் ஜன்னல் கம்பியில் வளர்ப்பு நாய் கட்டப்பட்டிருந்தது. தெருவில் அலையும் நாயைப் பார்த்து இதுவும் நகரத் துடிக்கிறது. கயிற்றினால் கட்டப்பட்டுள்ளதால் வாலை ஆட்டிக்கொண்டு நாய் குலைக்கிறது. பிராணியை வளர்ப்பவர் வெளியில் வந்து நோட்டம்விட்டார். செல்லப் பிராணியின் தலையில் செல்லமாகத் தட்டிவிட்டு “அடுத்த வாரம் கூட்டிட்டுப் போறேன்” என்று சொல்லிவிட்டுச் சென்றார். தெரு நாய்கள் சுதந்திரமாக சுற்றிக் கொண்டிருந்தது. ஒன்றையொன்று முகர்ந்துகொண்டு. நானும் சுதந்திரமாக நடந்துகொண்டிருந்தேன். நாயுடன் நாயாக எனது புதிய வீட்டை நோக்கி. அடுத்த வருடம் சிந்திப்போம்.

மங்களம்.... சுபம்....

4 comments:

  1. நிச்சயமாக நீங்கள் எழுத்து துறையிலும், காட்சி வடிவ துறையிலும் சிறந்து விளங்குவீர்கள்.

    எனது வாழ்த்துக்கள் மற்றும் அன்புகள்

    ReplyDelete
  2. நன்றி ராம்ஜி... உங்களுடைய அன்பும் அரவணைப்பும் மகிழ்ச்சியான ஒன்று.

    ReplyDelete
  3. நல்லதொரு பயணம் இது. இனிய புத்தாண்டு வாழ்த்துகள் கிருஷ்ணா.

    ReplyDelete
  4. நன்றி மற்றும் வாழ்த்துக்கள் சரவணா.

    ReplyDelete