Thursday, January 13, 2011

கேணி இசை சந்திப்பு - மம்மது & அகிலா

இசைப் பண்டிதர் ஒருவர் குளித்து முடித்து, மூலவர் தரிசனம் செய்ய வீதி வழியே கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தாராம். அப்போது ஆட்டு மந்தையை ஒட்டிக்கொண்டு ஒரு சிறுவன் வந்துகொண்டிருந்தான். கூட்டத்திலிருந்து விலகிச் செல்லும் ஆடுகளை குரல் கொடுத்து ஒழுங்கு படுத்தினான் இடையச் சிறுவன். ஆடுகளின் நீச்சி வாடையும், புழுக்கையின் துர்நாற்றமும் பண்டிதரை மனம் கோணச் செய்தது. பூஜைக்குச் செல்லும் வேளையில் இதென்னடா சோதனை என்று சங்கடப்பட்டார் பண்டிதர். வீசிய காற்று இடையனின் அழுக்கான வேட்டியை மயில் தோகையென விரித்தது. இவையாவையும் தீட்டென முகம் சுளித்து ஒதுங்கிச் சென்றார் பண்டிதர். நேராக குளத்திற்குச் சென்று தலையில் தண்ணீரைத் தெளித்துக் கொண்டு கோவிலுக்குள் சென்று கடவுளிடம் மனமுருக வேண்டுகிறார்.

"அப்பனே, சதா சர்வகாலமும் உன்னையே நினைத்துக் கொண்டிருக்கிறேன். காலம் தவறாமல் பூஜை செய்கிறேன். என்றாவது ஒரு நாள் கண்முன் காட்சியளிப்பாய் என்ற நம்பிக்கையில் எல்லா நிஷ்டைகளையும் தவறாமல் கடைபிடிக்கிறேன்" என்று உருகுகிறார்.

"......." சிலையென நின்றிருக்கிறார் எல்லாமானவர்.

பண்டிதரின் கண்களிலிருந்து குபுகுபுவென கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கண்களைத் துடைக்கும் நேரத்தில் ஒரு குரல் "குழந்தாய்" என்று கேட்கிறது. உணர்ச்சி நிலை மாறி ஆனந்தக் கண்ணீர் சுரக்கிறது. கண்களைத் துடைத்துக் கொண்டு குரல் வந்த திசையைப் பார்க்கிறார் பண்டிதர். எங்கும் அழகான கோவில் சிற்பங்கள். கோவிலில் சிலைதானே இருக்கும். "உன்னுடைய ஸ்தூலத்தைக் காண்பிக்கக் கூடாதா இறைவா?" என்று கெஞ்சுகிறார்.

"நான்தான் ஆடுகளை மேய்த்துக் கொண்டு உன் எதிரில் வந்தேனே. நீதான் விலகிச் சென்றாய்" என்ற குரல் மீண்டும் கேட்கிறது. தெருவீதியை நோக்கி ஓடோடிச் செல்கிறார் பண்டிதர். வீதியே மயான அமைதியில் இருக்கிறது. காற்று மட்டும் தம்புராவை மீட்டியது போல இசையுடன் செல்கிறது. அதனை ஸ்ருதியாக வைத்து உயிர் கசிய அங்கேயே ஒரு கீர்த்தனையைப் பாடுகிறார். இப்படித்தான் ராகங்களும் கீர்த்தனைகளும் உருவானதாக ஒரு நாட்டுப்புறக் கதை இருக்கிறது.

உணர்ச்சிக் கொந்தளிப்பு இசையாக வடிவம் பெரும்பொழுது "கர்நாட்டிக், ஹிந்துஸ்தானி, கஸல், தமிழிசை" என்ற பாகுபாடு இருக்கிறதா என்ன?. "ராகங்கள், கீர்த்தனைகள்" என்று வகை படுத்தப்படும் ஒலி வடிவங்கள் அனைத்தும் உணர்ச்சிகளின் உயிர்க் கீற்று. அனுபவங்களின் சாரம். உயிர் கசியப் பாடுவதால் தானே உலக மொழியாகிறது 'இசை'.

கேணி தமிழிசை சந்திப்பு வெறும் உரையாடலாக மட்டும் இல்லாமல், தமிழிசை ஆய்வாளர் மம்மதின் உரையாடலுடன் பாடகி அகிலாவின் ஒரு மணி நேர தமிழ்ப் பாடல்களுடன் இனிதே நடந்தது. மம்மது கணிதத்தில் பி.ஏ பட்டமும், தத்துவத்தில் எம்.ஏ. பட்டமும், இசையில் எம்.ஃபில் பட்டமும் பெற்றவர்.

"இன்னிசை டிரஸ்ட்" என்ற பெயரில் அறக்கட்டளை அமைத்து, அதன்மூலம் இசை மேம்பாட்டுப் பணிகளைச் செய்து வருகிறார். இசை பற்றிய வார்த்தைகளை பொருளுடன் அறிந்து கொள்ளும் வகையில் இசைப் பேரகராதி ஒன்றைத் தயாரித்துள்ளார். அதற்காக இந்த வருடத்தின் தமிழக அரசு வழங்கும் பாரதியார் விருது இவருக்குக் கிடைத்துள்ளது. இசையின் பல தளங்களிலும் இயங்கும் பன்முகம் கொண்டவர் நா மம்மது. நெடுஞ்சாலைத் துறையில் கணக்கராகப் பணியாற்றி, ஓய்வுபெற்று, தற்போது முழுநேர தமிழிசை ஆய்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். தொல்காப்பிய மேற்கோளுடன் கேணி சந்திப்பைத் தொடங்கினார். படித்திருப்பீர்களே ஒற்றிசை நீடல், அளபிறந்து உயிர்த்தல். இசை என்பது Geometrical Progression என்றார்.

அளபிறந்து உயிர்த்தலும் ஒற்றிசை நீடலும்
உளவென மொழிப இசையொடு சிவணிய
நரம்பின் மறைய என்மனார் புலவர் (தொல்காப்பியம்)

ஓர் எழுத்து எத்தனை மாத்திரைக் கொண்டு ஒலிக்க வேண்டும் என்று வரைமுறை இருக்கிறது. உச்சபட்சமாக 3 மாத்திரை வரை ஒலிக்கலாம். இசையில் மட்டும் இந்த மரபை மீறி எழுத்து நீண்டு ஒலிக்கலாம் என்று அதற்கான உதாரணங்களைப் பாடிக் காண்பித்தார். இங்கு மரபு என்பது தொடர்ந்து வருமா? அல்லது மாற்றம் இருக்குமா? என்பதைப் பார்க்க வேண்டும். குரு சிஷ்யப் பரம்பரையில் மரபு தொடர்ந்து காப்பாற்றப்படும். கற்றுக் கொள்வது தொடர்ந்து மெருகேற்றப்படும். என்றாலும் தாழ்ப்பாள் போட்டு வைக்கும்போது உள்ளுக்குள் அழியும்.

கடந்த மாதம் பட்டமளிப்பு விழாவிற்காக கேரளாவிலுள்ள கோழிக்கோடு பல்கலைக் கழகத்திற்குச் சென்றிருந்தேன். அங்கு நடந்த கட்டுரை வாசிப்பில் 'வாமொழி வழக்கு' என்ற சுத்தமான தமிழ்ச் சொல் பயன்படுத்தப்பட்டது. இந்த வார்த்தை நம்மிடையே தற்போது புழக்கத்தில் இல்லை. 'வாய்மொழி வழக்கு' என்ற சொல்லை 'வாமொழி வழக்கு' என தொடர்ந்து பயன்படுத்துகிறார்கள். அது மட்டுமில்லை, 1000 வருடங்கள் பழமை வாய்ந்த கிராமியப் பாடலை மரபு மாறாமல் இன்றும் அவர்கள் தொடர்ந்து பழகி வருகிறார்கள். ஆய்வுக்காக சமீபத்தில் கூட நாங்கள் பதிவு செய்தோம். சடங்கு இசையை தொடர்ந்து அவர்கள் காப்பாற்றி வருகிறார்கள். சடங்கு இசை என்பது இறை இசை அல்ல.

தமிழிசை வகையில் "பக்திப் பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள், ஒப்பாரிப் பாடல்கள், காவடிச் சிந்து, விழாப் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள், நலுங்குப் பாடல்கள், செவ்வியல் இசை, திரையிசைப் பாடல்கள்" என்று பல பிரிவுகள் இருக்கிறது. எல்லாவற்றையும் பற்றிப் பேசுவது கடினம். இந்த குறுகிய அவகாசத்தில் ஒரு துளியை வேண்டுமானால் பகிர்ந்து கொள்ளலாம்.

நான் பெரிதும் மதிக்கக் கூடிய இசை ஆய்வாளர் சம்பமூர்த்தி நீண்ட காலம் ஆராய்ச்சி செய்து வெளியிட்ட புத்தகத்திற்கு "South Indian Music" என்று தான் பெயர் சூட்டியுள்ளார். கர்நாட்டிக் மியூசிக் என்று தனது புத்தகத்திற்கான தலைப்பாக அவர் தேர்வு செய்யவில்லை. ஒரு காலத்தில் விந்திய மலை முதல் குமரி வரை தமிழகமாகத் தானே இருந்தது. அதற்கான ஏராளமான குறிப்பு நம்மிடம் இருக்கிறது.

MS சுப்புலட்சுமி போன்ற மாபெரும் இசைக் கலைஞர்கள் இறந்துவிட்டால் கர்னாடக சங்கீதத்திற்கு மாபெரும் இழப்பு என்ற தலைப்பில் இரங்கல் செய்தி வரும். இந்த செயல் எனக்கு மிகுந்த மன வேதனையைத் தரும். ஏன்? அவர் தமிழ்ப் பாடல்களைப் பாடவில்லையா? தமிழிசை உலகிற்கு பேரிழப்பு என்று ஏன் குறிப்பிடுவதில்லை? அதற்கு பதில் "இசை உலகிற்கு மாபெரும் இழப்பு" என்று குறிப்பிடலாமே.

சில சந்தப் பாடல்களையும், திரை இசைப் பாடல்களையும் மம்மது பாடிக் காண்பித்து விளக்கம் கொடுத்தார். அதைத் தொடர்ந்து பாடகி அகிலா தமிழ்ப் பாடல்களைப் பாட வந்தார். ஒரு ஸ்ருதிப் பெட்டியையும், ஒரே ஒரு பக்க வாத்தியத்தையும் வைத்துக் கொண்டு அருமையாக கச்சேரி செய்து முடித்தார். "பாரதியார், பாரதிதாசன், தணிகாச்சலம்" போன்றோருடைய பாடல்களைத் தேர்வு செய்து பாடினார். பக்க வாத்தியக் கலைஞரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். "முத்தைத் தரு பத்தித் திருநகை" என்ற சந்தத்தில் அமைந்த புரட்சிப் பாடல் அனைவரின் கவனத்தையும் பெற்றது.

மொழியா? இசையா? என்பது பரவலாகக் கேட்கப்படும் கேள்வி. பல நேரங்களில் மொழி ஊமையாகிறது. அதற்கினையாக பல நேரங்களில் இசை நரக வேதனையைத் தருகிறது. "கர்நாடிக் இசை, ஹிந்துஸ்தானி இசை, கஸல், வெஸ்டேர்ன் மியூசிக்" என்று இசைக்கு வட்டார சாயம் பூசுவதில் என்றுமே நாம் தயங்குவதில்லை. என்றாவது ஒரு நாள் மாபெரும் பிரளயம் வந்து பூலோகமே அழியலாம். அன்று பறவைகள் தான் வானில் பறந்து தப்பிக்கப் போகின்றன. 'கொண்டலாத்தி' என்ற கவிதைத் தொகுப்பில் கவிஞர் ஆசைத்தம்பி எழுதிய வரிகள் நினைவிற்கு வருகிறது.

ஒரு மொழியின் கடைசி மனிதன்
இறந்து போனான்

அந்த மொழியின் முதல் சொல்லைத்
தன் கூட்டில் அடைகாக்கிறது
ஒரு பறவை...

பின் குறிப்பு:
1. என்னுடைய ஞாபகத்தில் இருப்பதை மட்டுமே எழுதி இருக்கிறேன்.
2. அவருடைய 3 மணிநேர பேச்சின் சிறுவடிவம் தான் இது. ஆகவே தகவல்கள் நிறைய விடுபட்டிருக்கலாம். அதற்கு நானே பொறுப்பு. பிழை இருந்து யாரேனும் தெரிவித்தால் சரிசெய்துவிடுகிறேன்.
3. பிப்ரவரி 13 - 2011 அன்று நடக்கும் கேணி சந்திப்பில் நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம்.

5 comments:

  1. arumaiyaana pathivu, upayokamana thakavalkal.

    ReplyDelete
  2. ஹலோ கிருஷ்ணா,
    வழக்கம் போலவே, இந்த தடவையும் பதிவு அருமை. ஒலிப்பதிவு கேட்க கிடைக்குமா?(given this time it was about songs!).

    Essex சிவா.

    ReplyDelete
  3. வாய்ப்பே இல்லை சிவா. யாரும் பதிவு செய்யவில்லை.

    ReplyDelete
  4. அடடா! Anyway, நன்றி தகவலுக்கு!

    Essex சிவா

    ReplyDelete