Sunday, January 23, 2011

வள்ளுவன் கண்ட வாசுகி

தினமலர் ஆன்மீக மலரில் படித்த வரிகள். பிடித்திருந்ததால் உங்களுடன் பகிர்கிறேன். பெண்ணடிமை தனமாகத் தெரிந்தாலும், அதனை மீறிய அதீதக் காதலும் தெரியத் தானே செய்கிறது.

பாட்டு ஒரே பாட்டு...பாட்டு ஒரே பாட்டு...

உலகத்திலுள்ள அத்தனை ஜீவன்களுக்காகவும் ஒன்றரை அடியில் குரல் எழுதிய திருவள்ளுவர், ஒரே ஒரு ஜீவனுக்காக மட்டும் நான்கடியில் ஒரு பாட்டு எழுதியுள்ளார் தெரியுமா!.

யார் அந்த பெருமைக்குரிய ஜீவன்?.

அவரது மனைவி வாசுகி தான்.

அந்த அம்மையார் தனது கணவரின் செயல் பாடுகள் குறித்து வாழ்நாள் முழுவதும் விமர்சித்ததே இல்லை. அவர் செய்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்தவர். தன் கணவர் சாப்பிடும் போது, கையில் ஒரு ஊசி வைத்திருப்பார். கீழே விழும் சோறை எடுத்து தண்ணீர் உள்ள ஒரு கிண்ணத்தில் போடுவார். தண்ணீரை வடித்து விட்டு, மீண்டும் அந்த சோறை சாப்பாட்டுடன் கலந்து கொள்வார். இதற்கான காரணத்தை அந்த அம்மையார் இறக்கும் தருவாயில் தான் கணவரிடம் கேட்டாராம்.

வள்ளுவரின் இல்லத்துக்கு துறவி ஒருவர் வந்தார். அவர்கள், இருவரும் பழைய சாதம் சாப்பிட்டனர். அப்போது வள்ளுவர் வாசுகியிடம், "சோறு சூடாக இருக்கிறது. விசுறு" என்றார்.

"பழைய சோறு எப்படி சுடும்?"

அந்த அம்மையார் கேள்வியே கேட்கவில்லை. விசிற ஆரம்பித்துவிட்டார். இப்படி, கணவருடன் வாதம் செய்யாமல் விட்டுக் கொடுக்கும் மனப் பக்குவம் கொண்டிருந்தார். அந்தக் கற்புக்கரசி ஒருமுறை கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தார். வள்ளுவர் அவரை அழைக்கவே, கயிறை அப்படியே விட்டு விட்டு வந்தார். குடத்துடன் கூடிய அந்தக் கயிறு அப்படியே நின்றதாம்.

இப்படி ஒரு மனைவி கிடைத்தால், அந்தக் கணவன் கொடுத்து வைத்தவன் தானே! அந்த அன்பு மனைவி ஒருநாள் இறந்து போனார்.

"நெருநெல் உளனொருவன் இன்றில்லை
எனும் பெருமை படைத்து இவ்வுலகு"

- என்று ஊருக்கே புத்தி சொன்ன அந்தத் தெய்வப்புலவரே, மனைவியின் பிரிவைத் தாங்காமல் கலங்கி விட்டார்.

நேற்றிருந்தவர் இன்றைக்கில்லை என்பது தான் இந்த உலகத்திற்கே பெருமை" என்பது இந்தக் குரலின் பொருள். ஆக, தனது கருத்துப்படி, அந்த அம்மையாரின் மறைவுக்காக பெருமைப் பட்டிருக்க வேண்டிய அவர், மனைவியின் பிரிவைத் தாளாமல்,

"அடியிற்கிநியாளே அன்புடையாளே
படிசொல் தவறாத பாவாய் - அடிவருடி
பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய் - இனிதா [அ] ய்
என் தூங்கும் என்கண் இரவு"

-என்று ஒரு நாலு வரி பாட்டெழுதினார். அடியவனுக்கு இனியாளே! அன்புடையவளே! என் சொல்படி நடக்காதத் தவறாத பெண்ணே! என் பாதங்களை வருடி தூங்கச் செய்தவளே! பின் தூங்கி முன் எழுபவளே! பேதையே! என் கண்கள் இனி எப்படித்தான் இரவில் தூங்கப் போகிறதோ? என்பது பாட்டின் உருக்கமான பொருள்.

இன்று சிறுசிறு கருத்து வேறுபாடுகளுக்குக் கூட நீதிமன்ற வாசலில் நிற்கும் தம்பதியர், இந்த சம்பவத்தை மனதிற்குள் அசைபோடுவார்களா!

7 comments:

  1. பகிர்விற்கு நன்றிகள் கிருஷ்ணா

    ReplyDelete
  2. நல்ல பகிர்வு. நன்றி கிருஷ்ணா.

    ReplyDelete
  3. இது வள்ளுவர் எழுதினதுன்னு எந்தப் புத்தகத்தில் இருக்கிறது? வள்ளுவர் பற்றிய விவரங்கள் உண்மையில் மிக்க் குறைவாகவே தெரிந்துள்ளன. அவையும் உறுதிசெய்ய முடியாத ஊகங்களே. எனவே கூட இருந்து பார்த்தமாதிரி சொல்லப்படும் இந்தக் கதைகளுக்கு ஒரு அர்த்தமும் இல்லை.

    ReplyDelete
  4. இது எந்த நூலில் இருந்து எடுக்கப்பட்டது
    பி.கு. பதிவின் கடைசி இரண்டு வர்கள் தான் ஆணாதிக்கதனமாக இருக்கிறது

    ReplyDelete
  5. தினமலர் ஆன்மீக மலரில் படித்த வரிகள் வெங்கட். உண்மையா என்பது தெரியவில்லை.

    ReplyDelete
  6. முதல் முறையாக இரண்டு வரிகளை தாண்டிய வள்ளுவர் -
    பகிர்விற்கு நன்றிகள் பல.

    ReplyDelete