Saturday, January 1, 2011

துயில் - எஸ்ரா புத்தக வெளியீடு

உறக்கம் என்பது உயிர்களுக்கு அத்யாவசியமான ஒன்று. தேவர்களுக்கு வெற்றியை பெற்றுத் தந்த காலயமணன் கூட விரும்பிக் கேட்ட வரம் துயில் தானே. இடைஞ்சல்கள் இல்லாத நீண்ட துயில் தானே. துயில் என்பது கண்களை மூடிக்கொண்டு உறங்குவது மட்டுமல்ல. இயற்கைக்கு நம்மை அற்பனிப்பது. இயற்கையுடன் இரண்டறக் கலப்பது. நாம் உணரா உம்மத்த நிலையின் நீட்சியை, அதே இயற்கை தானே விழிப்படையவும் செய்கிறது. நண்பர் நர்சிம்மின் வரிகளை இங்கு கடன்வாங்கிக் கொள்கிறேன்...

ஏதேனுமொரு பறவையின்
குரல் இருள்விரட்டித்
திறக்கின்றன தினத்தை

நேற்றைய பறவையின்
குரல் இப்படி இருக்கவில்லை
இன்று நேற்றைப் போல
கழியப்போவதில்லை
->> தீக்கடல் (கவிஞர் நர்சிம்) http://www.narsim.in/2010/03/blog-post_18.html

நேற்றும் இன்றும் வித்யாசம்படுவது இருக்கட்டும், அடுத்தடுத்த மணித்துளிகளும் ஒரே மாதிரி இருப்பதில்லையே. வீட்டிலிருந்து புறப்படும்பொழுது ஆங்கிலப் புத்தாண்டின் மாலைநேரம் எஸ்ராவின் புத்தக வெளியீட்டில் கலந்து கொள்வதாகத்தான் இருக்கப்போகிறது என்று நினைத்தேன். அதையும் மீறி எஸ்ராவுடன் உரையாடும் களமாகவும் அந்த இனிய மாலை அமைந்தது.

வெளியீட்டு அரங்கில் நுழைந்தபோது உயிர்மை நண்பர்கள் புத்தகத்தை அடுக்கிக் கொண்டிருந்தனர். புத்தக வாசனை நாசியில் நுழைந்து ஏதோ செய்தது. தூக்கத்திலிருந்து எழுப்புகிறதா அல்லது தூக்க மயக்கத்தைத் தூண்டுகிறதா என்று பிரித்தறிய முடியாத நிலை. சிறிது நேரத்திற்கெல்லாம் எஸ்ரா அவருடைய நண்பர் திருமூர்த்தியுடன் வந்து சேர்ந்தார். அடுக்கியிருந்த புத்தகத்தில் ஒன்றை எடுத்துத் தடவிப் பார்த்தார். புத்தகத்தின் முன் அட்டை ஒரு மரத்தின் கிளையில் நீண்ட இறகுகளை உடைய சேவல் உட்கார்ந்திருப்பது போல இருந்தது. அவரைச் சூழ்ந்து பல வாசகர்கள் நின்றிருந்தனர். அதில் நானும் ஒருவன்.

"புத்தாண்டு வாழ்த்துக்கள் எஸ்ரா. இந்த நாவல் என்ன சேவல் பற்றியதா?"

அப்படி இல்லை. உறக்கத்தை களைய வேண்டியதை சேவல் தானே அறிவிக்கிறது. சேவல் என்பது விடியலின் குறியீடு. அதனால் பயன்படுத்தி இருக்கிறோம். அட்டை வடிவமைப்பு ரொம்ப எளிமையா இருக்கணும்னு நெனச்சேன். அழகா வந்திருக்கு இல்ல.

எப்படி இந்த சேவல் ஓவியத்தை தேர்ந்தெடுத்தீர்கள்?

இது ஜப்பான் ஓவியர் வரைந்தது. அதனைக் கொஞ்சம் மாற்றி இறகுகளுடன் தலைமுடி இருப்பது போல சேர்த்துப் பயன்படுத்தி இருக்கிறோம்.

அப்போ, பயன்படுத்துவதற்கு அவருடைய சம்மதம் தேவைப்பட்டிருக்குமே?

இது 150 வருடத்திற்கு முந்திய படைப்பு. எந்த ஒரு படைப்பையும் 100 ஆண்டுகள் கழித்து யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இந்தியாவைப் பொறுத்தவரை 60 ஆண்டுகள் கழித்து யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

அப்போ உங்களுடைய எழுத்தைக் கூடவா?

ஆமாம். காப்பீடு செய்தால் கொஞ்ச காலத்திற்கு நீட்டிக்க முடியும்.

சிறுகதை, நாவல், கட்டுரை எழுதுவதில் உள்ள சவால்கள் பற்றி சுற்றி இருந்தவர்கள் கேள்வி கேட்க பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு படைப்பின் ஆரம்பமும் முடிவும் தான் முக்கியம். நாம் எதையுமே முடிவு செய்ய இயலாது. ஒரு குரல் நமக்கு கேட்கும். அதுதான் முடிவு செய்யும். நெடுங்குருதி நாவல் எழுதி புத்தக அச்சுக்கு அனுப்பிவிட்டு ஒரு பயணத்திற்குக் கிளம்பினேன். பேருந்து பயணத்தில் ஓர் ஊரைக் கடக்கும் பொழுது மயில் சத்தம் கேட்டது. ஊருக்குள் "வா வா" என்று அழைப்பது போல இருந்தது. ஊர் திரும்பியதும் நெடுங்குருதி நாவலின் முடிவை மாற்றினேன்.

பேச்சு சுவாரஸ்யமாக சென்றபோது நடிகர் பாரதி மணி, இந்திரா பார்த்தசாரதி, மனுஷ்யபுத்திரன் என்று ஒருவர் பின் ஒருவராக வந்து சேர்ந்தனர். பதிவர்கள் துளசிகோபால், நிலாரசிகன், நர்சிம், லக்கிலுக், அதிஷா, பிரபா போன்ற பலரைப் பார்க்க முடிந்தது. குறிப்பிட்டிருந்த நேரத்தையும் கடந்துதான் விழா ஆரம்பமானது. அரங்கின் கடைசி வரிசையில் சென்று நண்பர் சிவாவுடன் அமர்ந்து கொண்டேன். எனக்குப் பக்கத்து இருக்கையில் வேறுயாரும் இல்லை. சிறிது நேரத்தில் எழுத்தாளர் பாலபாரதி வந்து அமர்ந்தார்.

பாலபாரதியின் திருநெல்வேலி வட்டார மொழி ஆளை மயக்கக் கூடியது. "ஆம்லே... மாப்ளே..." இந்த மாதிரி வார்த்தைகள் அவ்வளவு சுலபத்தில் சென்னையில் கிடைப்பதில்லை. அவருடன் அளவளாவியபோது முன் இருக்கையில் அமர்ந்திருந்த பெரியவர் எங்களைப் பார்த்து முறைத்தார். நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து முறைத்துக் கொண்டோம். வாய்பொத்தி மௌனித்து தூரத்திலிருந்து மேடையைப் பார்த்துக் கொண்டிருந்தோம். இந்திரா பார்த்தசாரதி முதல் பிரதியை திருமூர்த்தி அவர்களுக்குக் கொடுத்தார். அதன் பிறகு மற்றவர்களும் அவர்களுக்கான பிரதியை பெற்றுக் கொண்டனர். அதன் பிறகு ஒவ்வொருவராக நாவல் பற்றி பேச ஆரம்பித்தனர்.

எனக்குள் ஒரு குரல் கேட்க ஆரம்பித்தது. அந்தக் குரல் "களம்புடா..." என்று சொல்லும். உடனே பாலாவிடம் சொல்லிக் கொண்டு வெளியில் வந்தேன். உயிர்மை நண்பர் தனசேகர் பதட்டத்துடன் நின்றுகொண்டிருந்தார்.

"என்ன தனசேகர் இங்க இருக்கீங்க? ஏதாச்சும் பிரச்சனையா?"

"இல்லங்க... விழாவிற்கு வந்திருப்பவர்களுக்கு, டீ - சமோசா ஏற்பாடு பண்ணியிருந்தோம். எடுத்து வர பசங்களுக்கு சின்ன விபத்து. அதான்...."

"அடடா, பசங்களுக்கு பெரிய அசம்பாவிதம் எதுவும் இல்லையே..."

"கொஞ்சமா தேச்சிக்கிச்சாம். மத்தபடி எதுவும் இல்ல...டீ வேற எடத்துல சொல்லி இருக்கோம். அதான் இங்க இருக்கேன்."

"தாமதம் ஆவது ஒன்னும் பிரச்சனை இல்லையே தனா... Be cool" என்று சொல்லிவிட்டுக் கிளம்பினேன். என்னுடைய நிம்மதியான உறக்கத்தைத் தேடி பயணமானேன். மீண்டும் நர்சிம்மின் கவிதையைக் கடன் வாங்கிக் கொள்கிறேன்.

நாளை அதிகாலை
எனக்கான
பறவையின் குரல்
என்னைத் திறக்கும்.

3 comments:

  1. புத்தகம் வாங்கலையா? ஏன்ப்பா..:-((

    ReplyDelete
  2. இன்னும் இல்ல சாமி... நிதானமா வாங்குவோம்...

    ReplyDelete
  3. படித்துவிட்டுச் சொல்லுங்கள் பிரபு.கணங்கள் மாறும் வேகம் துடிப்புதான். சிலசமாயம் அதிர்ச்சி. உடனே சமாளித்துக் கொள்ளும் மனம் இரண்டுமே உலக அதிசயம்.

    ReplyDelete