Monday, November 1, 2010

உலகத் திரைப்பட விழா - சென்னை

சென்னையில் மழைக்காலம் ஆரம்பித்து ஓடுகிறது. பாதுகாப்பிற்கு குடையுடன் தான் அலைகிறேன். இருந்தாலும் செவந்த் சேனல் சினிமா தயாரிப்பு நிறுவனமும், இண்டர்நேஷனல் தமிழ் ஃபில்ம் அகாதமியும் இணைந்து 28.10.2010 முதல் 31.10.2010 வரை ஏற்பாடு செய்திருந்த சர்வதேசத் திரைப்பட விழாவிற்கு திட்டமிட்டு (மழைக்காக) ஒதுங்கினேன்.

முதல் நாளில், 20 நிமிடம் தாமதமாக விழா துவங்கியது. சாருவுக்காக எல்லோரும் காத்திருந்தார்கள். அவர் வந்ததும் செவந்த் சேனல் மாணிக்கம் நாராயணன் துவக்க உரையாற்றி விழாவைத் துவங்கி வைத்தார். எந்தவித லாப நோக்கும் இன்றி தனது கைக்காசைப் போட்டு இந்த விழாவை ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்தி வருவதாகவும் அதற்கு உறுதுணையாக இருக்கும் அனைவருக்கும் நன்றி கூறினார். சாருவுக்கும் மிஷ்கினுக்கும் நன்றி கூறிய பொழுது சாதாரணமாகப் பேசியவர், பத்திரிகை நண்பர்களுக்கு நன்றி கூறிய பொழுது நிறையவே உணர்ச்சி வசப்பட்டார். சமாளித்துக் கொண்டு சாருவை பேச வருமாறு அழைத்தார்.

மிருதுவான நடையில் துருதுரு பார்வையுடன் சாரு பேச வந்தார். ஏற்கனவே எழுதியிருந்த சினிமா கட்டுரைகளை புத்தகத்திற்காக தொகுத்துக் கொண்டிருக்கிறேன். அந்த பணியின் காரணமாக 10 நிமிட தாமதமாகிவிட்டது. மன்னித்துக் கொள்ளுங்கள். முதல் பக்கத்தில் 'நண்பன் மிஷ்கினுக்கு' என்று எழுதி விட்டுத்தான் இங்கு வந்திருக்கிறேன் என்று பேச ஆரம்பித்தார்.

நானும் ஒரு தயாரிப்பாளரும் மதுவினை குடித்துக் கொண்டிருந்தோம். வேறொரு முக்கியமான சினிமா நண்பர் அப்பொழுது வந்தார். எங்களுடன் சேர்ந்து கொள்ளுங்கள் என்றோம். 'இன்று மட்டும் குடிக்க மாட்டேன்' என்றார். காரணத்தை ஆவலுடன் கேட்டோம்.

'இப்பதான் சார், எந்திரன் பாத்துட்டு வரேன். குடிச்சேன்னா எங்கிட்ட இருக்குற சினிமா நண்பர்களுக்கு ஃபோன் போட்டு, மனசு தீர படம் எடுத்தவங்களை திட்டிடுவேன். அப்புறம் நான் சினிமாத் துறையிலையே இருக்க முடியாது... என்னை விட்டுடுங்க..' என்றார்.

எனக்குக் கூட 50 வயசு ஆள் 25 வயசு பையன் மாதிரி காலேஜ் ஸ்டுடென்ட் வேஷம் போட்டுக் கொண்டு மரத்தை சுற்றி ஆடுவதைப் பார்க்கும் பொழுது கரப்பான் பூச்சி உடம்பில் ஊறுவது போல இருக்கிறது. இதற்கு சுவிசர்லாந்து வேறு செல்கிறார்கள். அமிதாபச்சன் 56 வயது கிழவனாக 25 வயது பெண்ணைக் காதலிப்பது போல நடிக்கிறார். எந்த பந்தாவும் இல்லாமல் 25 வயது பையனின் காலில் விழுகிறார். Black, Paa போன்ற வித்யாசமான முயற்சிகளின் மூலம் சினிமாவை முன்னெடுத்துச் செல்கிறார். அந்த துணிச்சல் ரஜினி போன்ற நடிகர்களுக்கு இல்லை. ரஜினி இது போன்ற விழாக்களுக்கு வந்து ஊக்கப்படுத்த வேண்டும். திருவனந்தபுரத்தில் நடக்கும் சர்வதேச பட விழாக்களுக்கு நான் செல்லுவதே இல்லை. கடைசி வரை நின்று கொண்டுதான் பார்க்க வேண்டும். சென்னையிலும் அது போன்ற ஆரோக்கியமான நிலை உருவாக வேண்டும். அதற்கு ரஜினி போன்றவர்கள் முன்வர வேண்டும். இது ஒரு கோரிக்கை மட்டுமே என்று உரையை முடித்தார்.

அழுவது மாதிரியான சுகம் வேறெதுவும் இல்லை. என்னுடைய துணை இயக்குனர்களிடம் 'அழுங்கடான்னு' சொல்லுவேன் என்று பத்திரிகை நண்பர்களைப் பற்றி பேசியபொழுது மாணிக்கம் நாராயணன் சிந்தாத கண்ணீருக்கு கனத்தை ஏற்றினார் இயக்குனர் மிஷ்கின். அவருடைய படத்திற்கான ஸ்கிரிப்ட் எழுதும்போது ஓர் இடத்தில் அடக்க மாட்டாமல் அழுதாராம். அந்த நேரத்தில் சுகமாக இருந்தது என்றார். அவருடைய அம்மாவுடன் சண்டையிட்டு வீட்டைவிட்டு வெளியில் வந்து 13 வருடங்கள் ஆகிறதாம். மறுபடியும் வீட்டிற்கு திரும்பவே இல்லை என்றார். இது வரை 22 வேலைகள் பார்த்திருக்கிறேன். எதுவுமே பிடிக்கவில்லை. லேண்ட்மார்க்கில் இருந்த பொழுது நிறைய புத்தகங்கள் வாசித்தேன். மணிரத்னம் போன்ற மனிதர்களை சந்திக்க முடிந்தது. அவர்களுடன் உரையாட முடிந்தது. அதன் பிறகு சினிமாவில் இருப்பதுதான் பிடித்திருக்கிறது.

சினிமாவைத் திரையிடும் இருட்டறையில் இருக்கும் பொழுது, தாயின் கருவறையில் மீண்டும் சென்றது போல இருக்கிறது என்று இரண்டு கைகளையும் அகலமாக விறித்து நின்றார். டைடானிக் ஹீரோ கெட்டப்பில் மாடியின் உச்சியில் நின்றுகொண்டு கூவம் நதியைச் சுட்டிக் காட்டும் கவுண்டமணியின் பிம்பம் என் கண்களுக்குள் தோன்றி மறைந்தது. போலவே விறித்த கைகளை விறித்தவாறு மிஷ்கின் சுகமாக நின்று கொண்டிருந்தார்.

நல்ல படங்களை எடுக்கும் சூழல் தமிழகத்தில் இல்லை. 'சித்திரம் பேசுதடி, அஞ்சாதே' இரண்டும் மட்டமான படங்கள். ஆனால் ஹிட். நந்தலாலா அருமையான படம். வெளியிடுவதற்கு சிரமப்பட வேண்டியிருக்கிறது. ஒரு படத்தின் ஸ்கிரிப்ட் எழுதுவதற்கு வெளியில் செல்ல இருந்தாராம். இந்த விழாவுக்கு அழைத்ததால் அதையும் பொருட்படுத்தாமல் வந்தாராம். ஹிந்தியில் ஒரு படம் இயக்க இருப்பதாகவும், நந்தலாலா தீபாவளி கழித்து இரண்டு வாரங்களில் வெளிவர இருப்பதாகவும் தெரிவித்தார். இந்தப் படத்தில் இளையராஜா அருமையான குத்துப்பாடல் ஒன்றை அமைத்திருப்பதாக பகிர்ந்து கொண்டார்.

வேறு யாரையோ வைத்து இந்த குத்துப் பாடலை இசையமைத்து இளையராஜாவைக் கேட்காமல் படத்தில் சேர்த்து விட்டதால் மிஷ்கினுடன் கருத்து வேறுபாடு என்ற செய்தியை நாளேடுகளில் படித்த ஞாபகம். கிக்கிஜிரோ என்ற ஜப்பானிய படத்தின் தழுவல் தான் நந்தலாலா என்று சினிமா நண்பர்கள் சொல்லக் கேட்டதும் ஞாபகம் இருக்கிறது.

மிஷ்கின் தனது உரையை நிறைவு செய்த பொழுது 'ஜாக்கிசேகர்' அருகில் வந்து அமர்ந்தார். அடுத்து டாக்டர் க்ளோரியானா G செல்வநாதன் பேச வந்தார். இவர் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் (மீடியா) பெற்றவர். தொலைகாட்சி மற்றும் பத்திரிகைகளில் நிருபராக வேலை பார்த்தவர். ஒரு TV சேனலையும் நடத்திய அனுபவம் உண்டு. குறும்படங்கள் எடுப்பதற்கு தயாரிப்பாளராக இருக்கிறார். இவர் பங்களித்த குறும்படம் பரிசைப் பெற்றதால் பரவலாக அறியப்பட்டு 2008 ஆம் ஆண்டு ஆசிய பசுபிக் திரைப்பட விழாவின் இயக்குனராக இருந்திருக்கிறார். பிரான்ஸ், ஜெர்மன், லண்டன் போன்ற இடங்களில் திரைப்பட விழாக்கள் நடத்துகிறார்.

உலகப் பட விழாக்களில் ஆங்கிலத்தில் பேசிப்பேசி அலுத்துவிட்டது. இங்கு தமிழில் பேசுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. செவந்த் சேனல் நிறுவனம் மற்றும் இண்டர்நேஷனல் தமிழ் ஃபில்ம் அகாதமியுடன் இணைந்து இந்த விழாவை ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்துவது மகிழ்ச்சியாக இருக்கிறது. திரையிடப் போகும் படங்கள் எல்லாம் சர்வதேச விழாக்களில் ஒரு முறையாவது பங்குபெற்ற திரையிடப்பட்ட படங்கள். எனவே வடிகட்டப்பட்ட படங்களிலும் வடிகட்டப்பட்ட முக்கியமான படங்கள் தான் காண்பிக்க இருக்கிறோம். எதிர் வரும் நான்கு நாட்களும் நான் உங்களுடனே இருப்பேன். எப்பொழுது வேண்டுமானாலும் என்னுடன் உரையாடலாம் என்று உரையை முடித்தார்.

முதல் படம் திரையிடப்பட்ட ஐந்தாவது நிமிடத்தில் சிணுங்காத தொலைபேசியைக் காதில் வைத்துக் கொண்டு ஜாக்கிசேகர் வெளியில் சென்றார். அரங்கில் இருந்தவர்களில் பலரும் தெறித்து ஓடினார்கள். அப்பொழுதேசுதாரித்து இருக்க வேண்டும். எல்லாம் என்னுடைய நேரம், வேறொன்றும் சொல்லுவதற்கு இல்லை. அரை மணி நேரம் கழித்து வெளியில் சென்றேன். "என்னங்க தலையும் புரியல... காலும் புரியல... ஒன்னும் சரியில்லையே" என்று ஜாக்கியிடம் கேட்டேன்.

"அது முன்னாடியே தெரிஞ்சதாலதான் எழுந்து வந்துட்டேன்" என்று கூலாக பதில் சொன்னார். முதல் நாளை அப்படியே முடித்துக் கொண்டு ஜாக்கிக்கு டாட்டா காட்டினேன். எதிர் டாட்டா காட்டியவர் இருட்டறையில் மறைந்து போனார்.

இரண்டாவது நாள் வேலை இருந்ததால் செல்லவில்லை. ஆகவே மூன்றாம் நாள் சென்றிருந்தேன். பத்து நிமிடம் தான் அரங்கில் படம் பார்த்தேன். பாலுமகேந்திரா திரைப் பட்டறையில் படித்த அனந்துவை சந்தித்தேன். சுரேஷ் கண்ணனின் சினிமா கட்டுரைகளை வெகுவாகப் புகழ்ந்தார். அண்ணா சாலையில் நடந்தவாறே 'ஆதவன், இபா, எஸ்ரா, ஜெமோ, கோபி கிருஷ்ணா, கோணங்கி, லாசாரா' என்று பலரது நாவல்களையும் பற்றி பேசிக் கொண்டே ஒரு தூதரகத்தின் அருகில் சென்று நின்றார். அங்கு வேலை செய்யும் அவருடைய நண்பரான கணேஷை அறிமுகப் படுத்தினார்.

அலுவலகத்தில் நான் வேலை செய்வதைப் பார்த்து 'உன் வாழ்க்கை யாருக்குடா வரும்' என்று உடன் வேலை செய்த பலரும் பொறாமைப் பட்டதுண்டு. வாழ்க்கையில் முதன் முதலில் ஒருவரைப் பார்த்து பொறாமைப் படுகிறேன் என்றால் அது கணேஷாகத் தான் இருக்கும். அவர்களுடன் உரையாடியே விழாவின் மூன்றாவது நாளைக் கழித்தேன்.

விழா நடத்துனர் க்ளோரியானாவிடம் உரையாடும் சந்தர்ப்பம் கடைசி நாளன்று கிடைத்தது.

கேள்வி 1: விழாவுக்கான படங்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள்?

சர்வதேச பட விழாக்களில் ஒரு முறையாவது பங்கு பெற்ற படங்களைத் தான் தேர்வு செய்கிறோம். தேர்வு நாட்டிற்கு நாடு வேறுபாடும். திரையிடப் போகும் நாடுகளின் அரசியல், மதம், கலாச்சாரம், வெளியுறவுக் கொள்கைக்கு ஏற்ப படங்களைத் தேர்வு செய்து தணிக்கைத் துறைக்கு அனுப்புவோம். அவர்களின் ஒப்புதலுக்குப் பிறகுதான் இங்கு திரையிடப் படுகிறது. சில படங்களை தணிக்கைத் துறையினர் நிராகரித்து விடுவார்கள்.

கேள்வி 2: விழாவின் துவக்கத்தில் திரையிடப்பட்ட படத்தினை எதன் அடிப்படையில் தேர்வு செய்தீர்கள்?

ஒன்றிணைந்த ரஷ்யா சிதறியபொழுது உருவான சிறிய தேசம் தயாரித்து இயக்கிய முதல் படம் என்பதால் இந்தப் படத்தை தெரிவு செய்தேன். புதியவர்களை அறிமுகம் செய்வதும் நமது பணி தானே. (http://www.sweatybeards.com)

கேள்வி 3: தமிழ் ஃபில்ம் அகாதமி இணைந்து நடத்தும் விழாவில் ஒரேயொரு தமிழ்ப் படம் கூட திரையிடப் படவில்லையே - ஏன்?

தமிழ் படங்கள் இங்கு ஏற்கனவே திரையிடப்படுகின்றன. குறும்படங்களையும் சில தொலைக்கட்சி சேனல்கள் ஒளிபரப்புகின்றன. அதே படங்களை மறுபடியும் ஒளிபரப்ப வேண்டாமே என்று தான் கருதினோம். மற்றபடி தவிர்க்க வேண்டிய அவசியமில்லை. வெளிநாடுகளில் விழாவை நடத்தி இருந்தால் கண்டிப்பாக தமிழ்ப் படமும் காண்பித்திருப்போம்.

கேள்வி 4: திரையிடப்படும் படங்களுக்காக எவ்வளவு செலவு செய்கிறீர்கள்?

ஒரு முறை திரையிடுவதற்கு 100 EURO முதல் 1200 EURO வரை படத்தினை வாங்கிய கம்பெனிக்குக் கொடுக்க வேண்டும். குறும்படத்திற்கு 50 EURO வரை கொடுக்கிறோம். அவர்களுக்கு இதுதானே வருமானம்.

இரண்டாவது கேள்வியை மனதில் வைத்துதான் அவருடனான உரையாடலை ஆரம்பித்தேன். அதற்கான பதில் கிடைத்துவிட்டதால் நேரம் எடுத்து உரையாடியதற்கு நன்றி கூறி விடை பெற்றேன்.

28-ஆம் தேதி காலையில் தினத்தந்தி வாசித்த பொழுது என்னுடைய ராசிக்கு 'புதிதாக நல்ல அறிமுகம் கிடைக்கும்' என்றிருந்தது. நாளிதழை வைத்துவிட்டு செல்பேசியைக் கையில் எடுத்தேன். 29-ஆம் தேதி வளைகாப்பு ஏற்பாடாகி இருந்த தங்கைக்கு, முந்திய நாள் அதிகாலை 1.50-க்கு அழகான ஆண் குழந்தை பிறந்திருப்பதாக ஹேம்நாத்திடமிருந்து தகவல் வந்திருந்தது. இந்த நான்கு நாட்களில் எத்தனையோ நண்பர்கள் அறிமுகமானார்கள். இருந்தாலும் தோளில் ஏறி தலையில் ஒன்னுக்கடிக்கப் போகிறவன் போல வருமா? விழா முடிந்ததும் அவனைப் பார்ப்பதற்கு தான் சென்றுகொண்டிருக்கிறேன். அடுத்த ஆண்டு சுட்டிப் பையனும் என்னுடன் வருவான்.

8 comments:

  1. மருமகனுக்கும் வாழ்த்துகள் :)

    ReplyDelete
  2. // 'உன் வாழ்க்கை யாருக்குடா வரும்' என்று உடன் வேலை செய்த பலரும் பொறாமைப் பட்டதுண்டு //

    நானும், முரளியும் கூட..... :)

    ReplyDelete
  3. நல்லதொரு அனுபவக் கட்டுரை கிருஷ்ணா.

    சில எழுத்துப் பிழைகளைத் தவிர்த்திருக்கலாம்.
    //
    விறித்த கைகளை விறித்தவாறு
    தோலில் ஏறி
    //

    மாமா ஆனதற்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. ஹா ஹா.. தல வெயிலானை வழிமொழிகிறேன். கிருஷ்ணா........ கிர்ர்ர்ர்ர்..

    ReplyDelete
  5. பகிர்வுக்கு நன்றி கிருஷ்ணா..

    ReplyDelete
  6. நல்லா எழுதி இருக்க.. கிருஷ்ணா... நல்ல கவனிப்பு.. நான் தியேட்டர் போன வைபரேட்டர்ல போட்டு விடுவேன்... அதான் சினுங்காத தொலைபேசியாக மாறிவிட்டது.... நீ அனுப்பிய கதை படித்து மனம் பாதித்து விட்டது. இது போல அடிக்கடி பாதிக்க செய்வாய் என்று நம்புகின்றேன்....

    ReplyDelete
  7. பகிர்வுக்கு நன்றி கிருஷ்ணா. கூடவே வாழ்த்துகளும் :)

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete