Thursday, October 21, 2010

அவள் அப்படித்தான் - ருத்ரையா

வரலாற்று சிறப்புமிக்க, தொழில் நுட்பத்தை அதீதமாகப் பயன்படுத்தப்பட்ட, இந்தியாவிலேயே முதன் முறையாக அதிக செலவில் எடுக்கப்பட்ட, ஹாலிவுட்டுக்கு நிகரான, தரமான சினிமாவைப் பற்றி பேசுவதற்காக நண்பர் சுரேஷ் கண்ணனுக்கு தொலைபேசி இருந்தேன். அப்பொழுது அவரிடம் ஒரு விஷயத்தைச் சொல்லி குறைபட்டுக் கொண்டேன்.

"சுகா, என்னால் ஐந்து நிமிடம்கூட பார்க்க முடியாத வேற்று மொழிப் படத்தை நீங்கள் ஐம்பது முறையேனும் பார்க்கிறீர்கள். உங்களுடைய பொறுமைக்கு வானத்தைக் கூட ஒப்பிட முடியாது. நல்ல தமிழ்ப் படங்கள் எவ்வளவு இருக்கின்றன. அவற்றை பற்றி நீங்கள் ஏன் எழுதுவதில்லை? என்றேன்.

அதற்காக, நீண்ட நாட்களுக்கு முன்பு எழுதியிருந்த 'அவள் அப்படித்தான்' பதிவினை படிப்பதற்காக பகிர்ந்திருந்தார்.

நான்கு மாதங்களுக்கு முன்பு என்னுடைய வேலையை ராஜினாமா செய்ததும், முதல் வேலையாக பாரிமுனை சென்று 70-ற்கும் மேற்பட்ட குறும்படங்களும் திரைப்படங்களும் சேகரித்தேன். ஒன்றைக் கூட இதுவரைப் பிரிக்காமல் வைத்திருந்தேன். அவற்றில் 'அவள் அப்படித்தான்' படமும் ஒன்று. எவ்வளவு நாள் தான் கொலுவைக் கலைக்காமல் இருப்பது. அதற்கான நேரம் சென்ற வாரத்தில் கிடைத்தது.

பிராந்திய மொழிப் படங்களில் நடிகராக, இயக்குனராக, தயாரிப்பாளராக, விநியோகஸ்தராக என்று வெவ்வேறு தளங்களில் தனது பங்களிப்பை கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து சிறப்பாக கொடுத்துக் கொண்டிருக்கும் நாடகர் கமலஹாசனின் நெருங்கிய நண்பர் 'ஆனந்து'-வுக்காக என்ற எழுத்துக்களுடன் படம் ஆரம்பிக்கிறது.

'முழு வானில் ஒரு பாதை' - என்று பெண்களின் பிரச்சனைகளை ஆவணப் படம் எடுக்க நினைக்கும் அருண் (கமல்), அவனுக்கு உதவ நினைக்கும் தியாகு (ரஜினி), தியாகுவின் அலுவலக ஊழியர் மஞ்சு (ஸ்ரீபிரியா) ஆகியோரைக் கொண்டு கதை நகர்ந்தாலும், மஞ்சுவின் உளவியல் வெளிப்பாடுதான் சினிமாவின் மையக்கரு. (Dating, outing, live-in relationship, Car key change culture எல்லாம் இன்று சாதாரணமாக இருக்கக் கூடிய காலம். எனவே 25 வருடத்திற்கு முந்தைய வாழ்க்கை மற்றும் கலாச்சாரத்திற்கு நம்மை ஒன்ற வைத்துக் கொள்வது முக்கியம்.)

அருணின் கேமராக் கண்கள் காபரே நடனக்காரியின் இடை அசைவுகளை படமாக்குகிறது. அதனைத் தொடர்ந்து படமாக்குவதற்கு தியாகுவின் நிர்பந்தத்துடன் மஞ்சு துணைக்கு வருகிறாள். அருணின் மென்மையான ஆண்மை குணம் மஞ்சுவிற்குப் பிடித்திருக்கிறது. இருந்தாலும் அவனிடம் கடுமையாகப் பேசுகிறாள். பாறை போன்ற மனதில் வேர்விடத் துடிக்கும் அருணை ஜாக்கிரதையாகத் தவிர்க்கப் பார்க்கிறாள்.

அருணின் வீட்டிற்குச் செல்லும் மஞ்சு ஒரு புத்தகத்தைக் கையிலெடுத்து "நீங்க கம்யுனிஸ்டா?" என்று கேட்கிறாள்.

"இல்லையே...! எல்லாத்தையும் தெரிஞ்சிக்கத் தான் படிக்கிறேன். அப்படியே இருந்தாத் தான் என்ன?" என்று அருண் சொல்கிறான்.

கேள்விக்கான பதிலைச் சீண்டாமல் "எனக்கு செகப்பக் கண்டாலே எரிச்சல்" என்று எங்கோ நகர்ந்து செல்கிறாள். புரட்சிக்கான அதே நிறம் தானே விளக்குடன் தொடர்புபடுத்தி விபச்சாரத்தின் இடத்தை சுட்டிக்காட்டப் பயன்படுகிறது. அந்த முரண்பாடுகளே மஞ்சுவின் வாழ்விலும் பேச்சிலும் வெளிப்படுகிறது.

சிறுவயதில் நேரடியாகக் கண்ட அம்மாவின் கள்ளத் தொடர்பு மஞ்சுவின் மனதை வெகுவாக பாதிக்கிறது. தனது அம்மா சோரம்போனதை நினைத்து தனிமையில் வாடுகிறாள். தனிமை அவள் மீதான பாலியல் பலாத்காரத்தை நிகழ்த்துகிறது. வாழ்க்கையின் தொடர்ச்சியான மனச் சிக்கல்களுடன் கல்லூரியில் நுழைகிறாள். கல்லூரிப் பருவம் க்ருபா என்ற தோழனுடன் காதலை அரும்பச் செய்கிறது. சந்தர்ப வசத்தால் அவனைப் பிரிய நேர்கிறது. காதல் உதிர்கிறது. கசப்பான நினைவுகள் துளிர்க்கிறது. அதன் பின் மனோ என்பவனுடன் காதல் கொள்கிறாள். அவனோ மஞ்சுவைப் பயன்படுத்தி விட்டுத் தூக்கி எறிகிறான். வாழ்வின் சூதாட்டத்தில் அவள் தொடர்ந்து தோற்றுக் கொண்டே இருக்கிறாள். தோல்வியின் வலி சமூகத்தின் மீதான, குறிப்பாக ஆண்களின் மீதான வெறுப்பாக மாறுகிறது.

பெண்களை நிர்வாணக் கண்களில் மட்டுமே பார்க்கும் தியாகுவின் அலுவலகத்தில் வேலைக்குச் சேர்கிறாள் மஞ்சு. வியாபார சினிமா முற்றிலும் ஜீரணித்த ரஜினியின் ஆரம்பகால அசத்தலான நடிப்பு இந்தப் படத்தில் வெளிப்படுகிறது. ரஜினியிடம் இருக்கும் நடிப்புத் திறமை உண்மையிலேயே உயர்ந்தது. அவரும் சவாலான பாத்திரங்களையே விரும்புவார் என்று நினைக்கிறேன். இன்றைய திரைப்படங்களில் அவர் செய்யக் கூடிய கதாப்பாத்திரங்கள் எதிர்காலத்தில் அவரை நகையாடப்போகிறது. அந்த நகைப்பில் இது போன்ற பங்களிப்புகள் மறையத்தான் போகிறது.

கடுமையான வார்த்தைகளையும், நடத்தைகளையும் தன்னைச் சுற்றி சுவராக எழுப்பிக் கொண்டு சமூகத்திடமிருந்து தப்பிக்கப் பார்க்கும் மஞ்சு, அந்த போக்கினாலேயே அருணை இழக்கிறாள். அருவியில் நழுவவிட்டதை கடலில் தேடுவதைப் போல அருணைத் தேடி தியாகுவிடம் செல்கிறாள். கோயம்புத்தூரிலிருந்து மனைவியுடன் சென்னைக்கு வரும் அருணை வரவேற்பதுடன் படம் முடிகிறது.

கமல், ரஜினி, ஸ்ரீப்ரியா, உடன் நடித்த அனைவரும் கதாப் பாத்திரத்திற்குத் தேவையான பங்களிப்பைக் கூட்டியோ குறைத்தோ வழங்காமல் சரியாகச் செய்திருக்கிறார்கள். அதற்கான அச்சாணியாய் இருந்த ருத்ரையாவை நிச்சயம் பாராட்ட வேண்டும். படத்தின் வசனத்தை பிரபல எழுத்தாளர் வண்ணநிலவன், சோமசுந்தரம், ருத்ரையா மூவரும் சேர்ந்து எழுதியிருக்கிறார்கள். பல இடங்களில் வசனம் 'நறுக்' என்று இருக்கிறது. பின்னணி இசையிலும், பாடல்களிலும் இளையராஜாவின் தனித்தன்மை ஒ(லி)ளி வீசுகிறது. படத்திலுள்ள மூன்று பாடல்களுமே அருமையான பாடல்கள் தான். கீழுள்ள பாடல்களை YouTube-ல் கேட்கலாம்.

1. உறவுகள் தொடர்கதை - K.J. யேசுதாஸ்
2. பன்னீர் புஷ்பங்களே - கமல்ஹாசன்
3. வாழ்க்கை ஓடம் செல்ல - S.ஜானகி

ஜானகி அம்மா பாடிய பாடல் இணையத்தில் கிடைக்கவில்லை. கர்னாடக இசையின் ஒரு ராகத்தைப் பாடினால் மழை வரும் என்று நம்பப்படுகிறது. அந்த ராகத்தில் அமைந்தது இந்தப் பாடல்.

"வாழ்க்கை ஓடம் செல்ல
வாழ்வில் நீரோட்டம் இல்லை...
யாரும் தேரில் செல்ல
ஊரில் தீரும் இல்லை...
எங்கோ ஏதோ யாரோ...ஓஓஓ"

- என்ற பாடலை ஸ்டுடியோவில் பாடிவிட்டு வீட்டிற்கு சென்றார்களாம். வழியில் தூறல் விழுந்ததற்கான ஈர அடையாளம் இருந்ததாம். இதனை தொலைகாட்சியில் பேசும் பொழுது பகிர்ந்து கொண்டார்கள். நேரில் சந்தித்த பொழுது அதைப்பற்றி விசாரித்தேன். கண்கள் விரிய அந்த நிகழ்வை பசுமை மாறாமல் பகிர்ந்து கொண்டார்கள்.

திரைப்படத்தின் ஆரம்ப 14 நிமிடங்களை கீழுள்ள இணைப்பில் பார்க்கலாம்:
Aval Apadithaan 1/10

"குப்பை மாதிரி வேகமா வளரனும், அப்பத்தான் கோபுரமா உசர முடியும்னு" என்னோட தோழி அடிக்கடி சொல்லுவாள். கோபுரமாக உயர்வதின் ரகசியம் இதுதானோ என்னவோ. அதனால் தான் உச்ச நடிகர்கள் தங்களுக்கான குப்பைகளை கால இடைவெளியில் சேர்த்துக் கொண்டே வேகமாக வளர்கிறார்களோ என்னவோ. அதனால் தானே மகுடத்தின் மணியாகவும், கழுத்தின் ஆபரணமாகவும் உச்ச நட்சத்திரங்கள் வைரமாக ஜொலிக்கிறார்கள்.

வைரம் மண்ணில் இருந்து மட்டும் எடுக்கப் படுவதில்லையே. பாம்பின் விஷமாகக் கூட நம்பப்படுகிறதே. அதனால் தானே வைரம் உயிரை எடுக்கும் விஷமாகவும் பயன்படுகிறது. தற்போதைய சினிமா - தயாரிப்பாளர்கள் சமூகத்தின் மீது உமிழும் விஷமாகத் தானே இருக்கிறது. விஷத்தைத் தானே நாசூக்காக வியாபாரம் செய்கிறார்கள். உண்மையான கலை வடிவம் குழி தோண்டி புதைக்கப் படுகிறது. காலம் ஒருநாள் அவற்றை உண்மையான வைரமாக மாற்றும்.

அவள் அப்படித்தான் - எதிர்காலம் கண்டெடுக்க வேண்டிய அற்புத வைரம்.

2 comments:

  1. அருமையான விமர்சனம், கிருஷ்ணா!

    "தப்பும்மா, ரொம்பத் தப்பு"-ன்னு ரஜினி சொல்ற இடம் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

    //
    வைரம் மண்ணில் இருந்து மட்டும் எடுக்கப் படுவதில்லையே. பாம்பின் விஷமாகக் கூட நம்பப்படுகிறதே. அதனால் தானே வைரம் உயிரை எடுக்கும் விஷமாகவும் பயன்படுகிறது. தற்போதைய சினிமா - தயாரிப்பாளர்கள் சமூகத்தின் மீது உமிழும் விஷமாகத் தானே இருக்கிறது. விஷத்தைத் தானே நாசூக்காக வியாபாரம் செய்கிறார்கள். உண்மையான கலை வடிவம் குழி தோண்டி புதைக்கப் படுகிறது. காலம் ஒருநாள் அவற்றை உண்மையான வைரமாக மாற்றும்.
    //
    கேட்டால் இதைத் தான் மக்கள் விரும்புகிறார்கள் என்பார்கள்.

    ReplyDelete
  2. பகிர்வுக்கு நன்றி கிருஷ்ணா.. பாக்கணும்..:-))

    ReplyDelete