Tuesday, September 27, 2011

விசையுடன் பாயும் அம்பு(தலித்)

தலித் அதிகாரிகளுக்கு மூவர் போடும் முட்டுக்கட்டை

தமிழக அரசில் கூடுதல் தலைமைச் செயலராகவும், திட்டம் மற்றும் சிறப்பு முயற்சிகள் துறையின் கமிஷனராகவும் இருக்கிறார் ‘கிறிஸ்துதாஸ் காந்தி I.A.S’. இவரது தலைமையில் ‘அம்பு’ (அம்பேத்கார் அனைத்துலக பணியாளர் சங்கக் கூட்டமைப்பு) என்கிற அமைப்பு தலித் மக்களின் முன்னேற்றத்திற்காக இயங்கி வருகிறது. சமீபத்தில் தலித் எம்.எல்.ஏ-க்களையும் அதிகாரிகளையும் வரவழைத்து விருந்து கொடுத்திருக்கிறார் கிறிஸ்துதாஸ் காந்தி. இந்தச் சூழ்நிலையில் அவரைச் சந்தித்தோம்.

அம்பு என்கிற அமைப்பினை உருவாக்கியதன் நோக்கம் என்ன?


தமிழகத்தின் நிர்வாக சரித்திரத்தில் பட்டியலின (எஸ்.சி மற்றும் எஸ் .டி) பணியாளர்களுக்கான ஒரு அமைப்பு 2006 வரை யாரும் சரியாக உருவாக்கவில்லை. உருவாக்கத்திற்காக சிறுசிறு முயற்சிகள் எடுக்கப்பட்ட போதெல்லாம் அதனை அரசு துறைகளிலும் மத்திய நிறுவனங்களிலும் பட்டியலின பணியாளர் சங்கத்துக்கு ஏற்பளிக்கப்பட்டு ஆண்டுக்கு 4 கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் மட்டும் இதனை சாதி சங்கமாகப் பாவித்து அவற்றோடு ஒட்டுவதே தீட்டு என்ற மனப்போக்கிலே அதிகாரிகள் இருக்கிறார்கள். இந்த அவல நிலையை மாற்றுவதற்காக, அனைத்து சிறுசிறு அமைப்புகளை ஒன்று திரட்டும் முயற்சியில் 2006-ல் ஈடுபட்டோம். பட்டியலின ஐ.ஏ.எஸ்-கள், உதவி கலெக்டர்கள் உள்ளிட்ட உயரதிகாரிகள் யாரும் ஈடுபாடு காட்டவில்லை. ஆனால் அனைத்து துறைகளிலும் உள்ள பட்டியலின அலுவலர்கள் ரொம்பவே ஆர்வம் காட்டினார்கள். அம்பு உருவானது. இதுவரை பட்டியலினத்தைச் சேர்ந்த 77 அமைப்புகள் அம்புவில் இணைந்துள்ளன. அனைத்து எஸ்.சி., எஸ்.டி அமைப்புகளுக்கும் நாலெட்ஜ் பேங்காக செயல்படுவது அம்புவின் முதல் நோக்கம். அடுத்து, பட்டியலின பணியாலர்களுக்குரிய உரிமைகளை அவர்களுக்கு எடுத்துச்சொல்வதும் அவர்களுக்காகப் போராடுவதும்தான் முக்கிய நோக்கம். 2006-ல் துவக்கப்பட்ட அம்பு, பல்வேறு வெற்றிகளைப் பெற்றிருக்கிறது.

தமிழக பட்டியலின எம்.எல்.ஏ.க்களை அழைத்து விருந்து கொடுத்திருக்கிறீர்களே?


ஒவ்வொரு மானியக் கோரிக்கையின் போதும் பட்டியலின எம்.எல்.ஏக்களை அழைத்து, பட்டியலினத்துக்கான பிரச்சினைகளை அவர்களோடு கலந்து பேசவும் புதிய திட்டங்களை அரசுக்கு எடுத்துச் சொல்லவும் இத்தகைய விருந்து கூட்டங்களை நடத்துகிறோம். டெல்லியில் இதுபோன்ற முயற்சிகள் அடிக்கடி நடக்கும். இதில் பட்டியலின மக்களின் அனைத்து பிரச்சினைகளும் அலசப்படும். கடந்த ஆண்டுகளில் நடந்த இந்த விருந்துக் கூட்டங்களுக்கு ஒவ்வொரு எம்.எல்.ஏ-க்களையும் தனித்தனியாக நாங்கள் அழைத்தபோது, “எங்க கட்சித் தலைமை என்ன சொல்லுமோ என யோசிக்கிறோம்” என்று கூறி, வருவதற்குத் தயங்கினர். அதனால் இந்தாண்டு தனித்தனியாக அழைப்பதை விட்டு விட்டு, ஒவ்வொரு கட்சித் தலைமைக்கும் கடிதம் எழுதி ‘நாங்கள் நடத்தும் பாராட்டுக் கூட்டத்துக்கு தங்கள் கட்சி பட்டியலின எம்.எல்.ஏ-க்களை அனுப்பி வையுங்கள்’ எனக் கேட்டுக் கொண்டோம். ஆனால் மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய குடியரசு கட்சி, புதிய தமிழகம் கட்சிகளைத் தவிர மற்ற கட்சிகள் எம்.எல்.ஏ-க்களை அனுப்பி வைக்கவில்லை.


தலைமைச் செயலகத்திலுள்ள பட்டியலின ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட உயரதிகாரிகள் சிந்தனைகள் எப்படி இருக்கிறது?

தமிழக ஐ ஏ எஸ் அதிகாரியில் 60 பேர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள். ஒவ்வொரு ஐ.ஏ.எஸ் அதிகாரியும் தேர்வு செய்யப்படும் போது, ‘என் சமூக மக்களுக்காக சேவை செய்ய கிடைத்த ஒரு வாய்ப்பு இது’ என்று சொல்வர். ஆனால் வேலைக்கு வந்த பிறகு இவரது பனியின் மூலமாக எஸ்.சி. மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்வதே இல்லை. பட்டியலின மக்களின் பாதுகாப்பிற்காக, அவர்களின் வளர்ச்சிக்காக இருக்கக்கூடிய சட்டங்களையும் திட்டங்களையும் கூட இவர்கள் கண்டுகொள்வதே கிடையாது.

இது மிகப்பெரிய சமூகத் துரோகம். அதிகாரிகளில் 100-க்கு 90 சதவீதம் பேர் எஸ்.சி., எஸ்.டி மக்களுக்கு செய்யவேண்டிய கடமைகளையும் பொறுப்புகளையும் தட்டிக்கழித்து துரோகம் செய்துகொண்டிருக்கிறார்கள். மீதமுள்ள 10 சதவீத அதிகாரிகளோ பட்டியலின மக்களுக்கான கடமைகளை செய்வதில் நெருக்கடிகளை சந்திக்கிறார்கள். உங்களை யார் இதிலெல்லாம் கவனம் செலுத்தச் சொன்னது என்று உயரதிகாரிகள் கோபமாக கேள்விகள் கேட்பது, கான்பிடன்ஷியல் ரிபோர்டில் இவர் சாதி தீவிரம் காட்டுகிறார் என்று குறிப்பிடுவது, அரசியல் வாதிகளால் இவரை மாற்றுங்கள் என்று அழுத்தம் கொடுப்பது போன்ற நெருக்கடிகள். ஆனால் இந்த நெருக்கடிகளுக்கெல்லாம் பயப்படாமல் எங்கு பணியமர்த்தப் பட்டாலும் எனது மக்களுக்கான பணியை சிறப்பாக செய்வேன் என்று அந்த 10 சதவீத அதிகாரிகள் நினைப்பதால் நெருக்கடிகளெல்லாம் இயல்பாக தெரியும்.

அம்பு நடத்தும் கூட்டங்களில் கலந்துகொள்ள எஸ்.சி அதிகாரிகள் ஆர்வம் காட்டாததற்கு காரணம்?

தங்களை எஸ்.சி என அடையாள படுத்திக்கொள்ள இவர்கள் விரும்புவதில்லை. அப்படி சொல்லிக்கொள்வதை கேவலமாக கருதுகிறார்கள். நான் ஒரு எஸ்.சி அதிகாரி என மார்தட்டிச் சொல்ல வேண்டிய ஒரு காட்சியை இவர்கள் தவிர்த்து தலை கவிழ்ந்து நிற்பது இந்த சமூகத்துக்குச் செய்கிற மற்றொரு துரோகம்.

பட்டியலின மக்களுக்கு நன்மை செய்வதற்காகத்தான் ஆதிதிராவிடர் நலத்துறை இருக்கு. அந்த துறையின் செக்ரட்டிரியாக நியமிக்கப்படுபவர்கள் எஸ்.சி யாகத்தான் இருப்பார். அதன் மூலம் நிறைய நன்மை செய்ய முடியுமே?

பட்டியலின மக்களின் கடமைகளை செய்யாத அதிகாரிகளில் இவர்தான் முதலிடத்தில் இருப்பார். குறிப்பாக ஒண்ணு சொல்லவா? தாட்கோ ஒப்பந்தப் பணிகளை எஸ்.சி ஒப்பந்ததாரர் மட்டும்தான் எடுக்க வேண்டும் என்பது 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட அரசாணை. அதை மாற்ற வேண்டுமென எஸ்.சி துறை செக்ரடரிக்கும் தாட்கோ எம்.டி-க்கும் (இவரும் எஸ்.சி அதிகாரிதான்) அழுத்தம் தரப்பட்டது. முடியாது என்று சொல்லியிருக்க வேண்டாமா? ஆனால் அப்படி மறுக்காமல் இருவரும் அரசாணையை மாற்ற சம்மதித்தனர். மாத்தியாச்சு. இதை எங்குபோய்ச் சொல்வது? அதனால் எஸ்.சி மக்களுக்கான நன்மைகளை செய்வதற்கு எதிரியாக இருப்பது எஸ்.சி அதிகாரிகளே.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கான நலத் திட்டங்கள் பலவற்றை கொண்டு வந்திருக்கிறது தமிழக அரசு. அதனை நடைமுறைப்படுத்த தயங்குகிற அதிகாரிகள் மீது தலைமைச் செயலரிடம் புகார் கூறலாமே?


எஸ்.சி விசயங்களை எஸ்.சி அதிகாரிகள் கையாள்வதற்கு முட்டுக்கட்டை போடுவதே தலைமைச் செயலர், உள்துறைச் செயலர், நிதித்துறைச் செயலர் ஆகிய மூவர்தான். வன்கொடுமை சட்டம் நடைமுறைப் படுத்தப்படுகிறதா என கவனிக்கவேண்டிய பொறுப்பு எஸ்.சி துறை செக்ரடரிக்கு இருக்கு. ஆனால் காவல்துறையை கையாளும் உள்துறைச் செயலரின் இசைவுகளின்றி எஸ்.சி செக்ரடரியால் ஒன்றும் செய்ய முடியாது என்ற சூழல் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இதே சூழல் நிதித் துறையாலும் கையாளப்படுகிறது. இதற்குக் காரணம் மேற்கண்ட 3 பதவிகளிலும் எஸ்.சி அல்லாத அதிகாரிகளே அமர்த்தப்பட்டு வருவதுதான். எந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியிடமும், “உன் டிபார்ட்மென்ட் வேலையை நீ பார்க்கக் கூடாது” என உத்தரவிட முடியாது. ஆனா ஆதிதிராவிடர் நலத்துறை செக்ரடரிக்கு மட்டும் அந்த உத்தரவு வரும். இட ஒதுக்கீடு, வன்கொடுமை சட்டம், துணைத் திட்டங்கள் அமலாக்கம் ஆகிய மூன்று விஷயங்களில் ஒரு துரும்பைக் கூட எஸ்.சி துறை செக்ரட்டிரியால் எடுத்துப்போட முடிவதில்லை.

எஸ்.சி அதிகாரிகள் அச்சம் கொள்கிற நிலைதான் நிர்வாகத்தில் இருக்கிறது. அம்பேத்கர் படத்தைத் தனது அறையில் வைத்துக்கொள்ளக்கூட இவர்களிடம் தயக்கம் இருக்கிறது. காரணம்... ஒன்று பயம், மற்றொன்று தனது சாதி வெளியில் தெரிந்துவிடுமே என்கிற நிலை.


தேர்தலில் ஆளும் கட்சிகள் தோற்பதற்கு பட்டியலின எம்.எல்.ஏக்கள் தான் காரணம் என்று சொல்லி வருகிறீர்களே?

எனது பார்வையில் ஆளும் கட்சிகள் தேர்தலில் தோற்பதற்கு எஸ்.சி – எம்.எல்.ஏக்களும் அதிகாரிகளும் தான் வழி வகுக்கிறார்கள். ஏனெனில் இவர்கள் இவர்களது மக்களுக்காக செய்ய வேண்டிய தேவைகளை செய்ய மறுக்கிறார்கள் அல்லது தடுக்கப்படுகிரார்கள்.

'இதில் எது உண்மையாக இருந்தாலும் ‘அரசுகள்தான் இதை செய்கின்றன’ என்று எங்கள் மக்கள் நம்புகிறார்கள். அது தேர்தலில் அப்படியே பிரதிபலிக்கிறது. பொதுவாக தேர்தல் என்றால் மற்ற சமூகத்தினரின் வாக்குகள் எல்லா கட்சிகளுக்கும் பிரிந்து விழும். ஆனால் எஸ்.சி வாக்குகள்தான் சாய்ந்தால் ஒரே பக்கம் சாயும். சாய்கிறது. மக்கள் தொகையில் தாழ்த்தப்பட்டவர்கள் 20 சதவீதம் தான்.

ஆனால் தேர்தலில் பதிவாகும் வாக்குகளில் 40 சதவீத வாக்குகள் தாழ்த்தப்பட்டவர்களுடையது. அதனால் அதன் தாக்கம் பெரியது. ஆகவே எஸ்.சி மக்களின் பணிகளை எஸ்.சி எம்.எல்.ஏ-க்களும் அதிகாரிகளும் செய்வதற்குரிய முறையான போக்குகளை ஆளும் கட்சிகள் எடுத்தாலே அந்தக் கட்சி மீண்டும் வெற்றி பெரும்.

-சந்திப்பு:
ஆர். இளையசெல்வன்

படங்கள்: ஸ்டாலின்.

நன்றி: நக்கீரன் இதழ் – செப்டம்பர் 07 – 2011 (Vol.24 No.41)

No comments:

Post a Comment