Monday, December 6, 2010

நந்தலாலா - மிஸ்கின்

திரைக்கு வந்த மூன்றாவது நாள் 'நந்தலாலா' பார்ப்பதற்கு திரையரங்கு சென்றிருந்தேன். கூட்டமாக இருக்குமெனில் திரும்பிவிடலாம் என்று யோசித்தவாறே சென்றேன். படம் துவங்க 15 நிமிடங்கள் இருக்கிறது. டிக்கெட் கவுண்டரில் எனக்கு முன்பு இரண்டு நண்பர்கள் நின்றிருந்தனர். எனக்கு அடுத்தது யாருமே இல்லை. டிக்கெட் வாங்கிக்கொண்டு எனக்கான இருக்கைக்கு நகர்ந்தேன். 200-ற்கும் அதிக இருக்கைகள் கொண்ட அரங்கில் 35 நபர்கள் மட்டுமே இருட்டறையில் அமர்ந்தோம்.

நீரோட்டத்தின் வாகில் செல்லத் துடிக்கும் புற்களின் அசைவில் படம் துவங்குகிறது. அது கூட அந்திரே தர்கோவிஸ்கி சொலாரிஸின் படத்தில் இருந்து தழுவப்பட்டது என்று ஜெயமோகன் தளத்தில் ஒரு நண்பர் சொல்லியிருந்தார். படிக்க - புல் தண்ணீர் காட்சி.

இங்கு ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்தி விடுவது நல்லது. ஒரு சினிமா மாணவ நண்பரைப் பார்க்க நேர்ந்தது. அவரிடம் உலகப் படங்களின் தாக்கம் தமிழ் சினிமாவில் திணிக்கப்படுவதை அல்லது தழுவப்படுவதைப் பற்றி பேசினேன். உரிமம் இல்லாமல் இந்த மாதிரி வேலைகளை செய்வது ஒரு வகையில் அறிவுத் திருட்டு என்று காட்டமாகக் கூறினேன். சிரித்துக் கொண்டே பாலுமகேந்திரா இதைப் பற்றி பேசியதை என்னிடம் பகிர்ந்து கொண்டார்.

கர்னாடக சங்கீதம். பாரத நாட்டியம் என்று எந்த பாரம்பரியக் கலையை எடுத்துக் கொண்டாலும் குறிப்பிட்ட ராகங்களை அல்லது நடனங்களை
த் தான் திரும்பத் திரும்ப மேடை ஏற்றுகிறார்கள். ஏற்கனவே இருப்பவைகளின் நகல்களைத் தான் அவர்கள் பிரதிபலிக்கிறார்கள் என்பது கவனிக்கப் படவேண்டியது. "புதிதாக எந்த முயற்சியும் ஏன் செய்யவில்லை?" என்று யாரும் அவர்களைக் கேள்வி கேட்பதில்லை. சினிமாவை எடுத்துக்கொண்டால் இது போன்ற விமர்சனங்களைத் தவிர்க்க இயலாது.

பாலு மகேந்திராவின் வார்த்தைகள் அனைத்தும் உண்மை. ஒரு கர்நாடக சங்கீத வித்தாவான் ஓர் இசைக் கோர்வையை மேடையில் பாடுவதற்கு முன்... இந்த ராகத்தில் அமைந்தது... இன்னார் இயற்றியது... அதை இன்னார் மெருகேற்றினார்கள் என்று பட்டியலிட்டுவிட்டு ரசிகர்களுக்கு வழங்குகிறார்கள். திரைபடப் பாடல்கள் கூட இந்த ராகத்தில் அமைந்தது என்று இசையமைப்பாளர்களே சொல்லிவிடுகிறார்கள். சினிமா, இதுபோன்ற நாகரீகங்களிலிருந்து பல நேரங்களில் விலகி நிற்பது வருந்தத்தக்கது.

நந்தலாலா - கிகுஜிரோவின் தழுவல் என்பதை
தயாரிப்பில் இருக்கும் பொழுதே சினிமா விரும்பிகள் கண்டுபிடித்துவிட்டார்கள். ஜப்பானிய மொழியை விரும்பிப் படித்த பொழுது கிகுஜிரோ வாங்குவதற்காக பட்டர் ஃபிளை சூர்யாவைத் தொடர்பு கொண்டேன். "அடடே அந்தப் படமா...? அந்த கதையைத் தழுவி மிஷ்கின் தமிழில் ஒரு படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். உண்மையா? இல்லையா? என்பது திரைக்கு வந்தால்தான் தெரியும்..." என்று பகிர்ந்து கொண்டார். மாயக்கோல் ஒன்று இருந்தால் சுரேஷ் கண்ணன், பட்டர் ஃபிளை சூர்யா போன்ற நண்பர்களின் முன்னாள் நீட்டி இந்த மாதிரி கண்டுபிடிப்புகளை மறக்கடிக்கச் செய்யலாம்.

கிகுஜிரோ - பட்டர்ஃபிளை சூர்யா

நீண்ட விடுப்பில், தனிமையில் வாடும் குழந்தை தொலைவிலுள்ள தாயைப் பார்க்க புறப்படுகிறான். அதற்கு மனைவி கேட்டுக் கொண்டதற்காக அறிமுகமில்லாத ஒருவன் துணைக்குச் செல்கிறான் (லாஜிக் உதைக்கிறது). அவன் ஓர் ஊதாரி. பயணத்தில் சந்திக்கும் இடர்களின் மூலம் அவர்களுக்கான பரஸ்பர அன்பு ஊற்றெடுக்கிறது. ஊதாரித்தனத்திலிருந்து விடுபட்டு பயணத்தை முன்னெடுத்துச் செல்கிறான். சிறுவனின் தாய் வாழும் ஊருக்கு அழைத்துச் செல்கிறான். நந்தலாலாவின் மையக்கருவும் இஃதே என்றாலும் தமிழுக்குத் தேவையான மசாலாக்கள் தேவையான அளவிற்கு சேர்க்கப்பட்டுள்ளது. மேலதிக விஷயங்கள் தான் மூலத்திலிருந்து விலகி இதனை தமிழ் சினிமாவின் தனித்த அடையாளமாக முன்னிறுத்தப் பார்க்கிறது.

எனக்கு ராமகிருஷ்ண பரமஹம்சரின் கதை ஒன்று நினைவிற்கு வந்தது. ஒரு மீன்காரி மீன் விற்கக் கிளம்பினாளாம். பல ஊர்களுக்கும் சென்று பாதி மீன்களை விற்றுவிட்டாள். அவள் மறுபடியும் ஊருக்குத் திரும்புவதற்குள் மேகம் இருண்டு அடைமழை பொழிந்ததாம். செய்வதறியாது திகைத்து நின்றாளாம் மீன்காரி. அருகிலுள்ள ஒரு குடிசைக்குச் சென்று ஒதுங்க நினைத்தாளாம். அது பூ வியாபாரம் செய்பவளின் வீடு. அவளிடம் தயங்கித் தயங்கி "இன்றொரு நாள் உங்கள் குடிசையின் ஓரத்தில் தங்கிக் கொள்கிறேன். நாளை காலை விடிந்ததும் சென்றுவிடுகிறேன்" என்று வேண்டினாளாம்.

பூ தொடுப்பவள் இன்முகத்துடன் அவளை வரவேற்று "தாராளமாக தங்கிக் கொள்ளுங்கள் நானும் தனியாகத்தான் இருக்கிறேன்" என்றாளாம்.
மீன்காரிக்கு இரவு உணவு பரிமாறி விட்டு தூங்குவதற்கு இடத்தைக் காட்டினாளாம்.

மீன்காரிக்குத் தூக்கமே வரவில்லையாம்.
புரண்டு புரண்டு படுத்தாளாம். விழித்துப் பார்த்தால் தலைமாட்டில் பூக்கூடைகள் இருந்ததாம். அதன் வாசனை அவளுக்குப் பிடிக்கவில்லை. வெளியில் சென்று ஓரமாக வைத்திருந்த மீன்கூடையை எடுத்து வந்து தலைமாட்டில் வைத்துக் கொண்டு நிம்மதியாகத் தூங்கினாளாம் மீன்காரி. அழகான வண்ணப்பூக்களும், மலர்கள் நிறைந்த கூடைகள் இருந்தாலும் "கவிச்சிக் கூடையை சுமந்தவர்களுக்கு பூவாசம் பிடிக்குமா?" என்பது போல இருக்கிறது உலகப் படங்களை தழுவலாக எடுப்பது. நம்மிடம் இல்லாத கதைகளா? நம்மைச் சுற்றி நடக்காத கதைகளா? அவற்றில் ஒன்றை உள்வாங்கி திரைப்படம் எடுக்கலாமே?.

சுராவின் படைப்பு நேரடியாக ஹீப்ருவில் மொழிமாற்றம் செய்யப்பட்டால் மார்தட்டிக் கொள்கிறோம். 'யாவரும் நலமே' உரிமம் பெற்று ஹாலிவுட்டில் படமாக எடுக்கப்பட்டால் உச்சி குளிர்ந்து போகிறோம். நம் சமூகத்தைச் சேர்ந்த படைப்பாளிகள் அடுத்தவர்களால் அங்கீகாரம் செய்யப்பட்டு கௌரவிக்கப்படுகிறார்கள். நாம் கூட நாகரீகம் கருதி அடுத்தவர்களுக்கு அதைச் செய்யலாமே. கல்யாணப் பூசணியை தர்பூசணி என்று வார்த்தை ஜாலம் செய்ய வேண்டாமே!.

"தமிழ் சினிமாவை உலக அளவில் முன்னெடுத்துச் செல்ல உச்ச நடிகர்கள் முன்வர வேண்டும்" என்று மிஷ்கினை அருகில் வைத்துக் கொண்டு சாரு நிவேதிதா நடிகர் ரஜினிக்குக் கோரிக்கை வைத்தார். அதே கோரிக்கையை நானும் மிஷ்கினுக்கு வைக்கிறேன். ஒரு படைப்பின் மூலம் பாதிக்கப்பட்டால் "Inspired By" என்ற இரண்டு வார்த்தையை சேர்த்து உங்களுடைய படைப்புகளை விளம்பரப் படுத்தலாமே?

தொடர்புடைய இதரப் பதிவுகள்:

1.
நந்தலாலா: மிஷ்கினின் கூழாங்கற்கள்
2.
நந்தலாலா: உருவகக் குப்பையில் ஒரு மாணிக்கம்
3.
பனிக்குடத்தினுள் நீந்திய களிப்பு... நந்தலாலா
4. நந்தலாலா - மிஷ்கின் ஐ லவ் யூ
5.
நந்தலாலா : வாழ்க்கையெனும் ஜீவநதி
6. நந்தலாலா – மூலமும் நகலும்
7. நந்தலாலா பார்க்கவேண்டியபடமா?
8. நந்தலாலா... உகுநீர் நெஞ்சு சுட

பின் குறிப்பு: சந்தேகமே இல்லை. கண்டிப்பாக இந்தப் படம் பல விருதுகளைப் பெரும். அந்த நேரத்தில் இயக்குனர் சந்திரன் பல வருடங்களுக்கு முன் தீராநதியில் கொடுத்த பேட்டியில் சொல்லியிருந்ததை நினைத்துக் கொள்வேன். அவரின் வார்த்தைகள்:

"சினிமா என்றால் என்னவென்றே தெரியாத நாட்டில், சினிமா என்றால் என்னவென்றே தெரியாத மனிதர்களால் நேர்ந்தேடுக்கப்பட்டு, தேசிய அளவில் சினிமாவுக்கான சிறந்த இயக்குனராக நான் தேர்ந்தெடுக்கப் பட்
டு விருது பெறுவதில் பெரிய அதிசயம் ஒன்றும் இல்லை. சாதனையும் இல்லை".

10 comments:

  1. //
    "சினிமா என்றால் என்னவென்றே தெரியாத நாட்டில், சினிமா என்றால் என்னவென்றே தெரியாத மனிதர்களால் நேர்ந்தேடுக்கப்பட்டு, தேசிய அளவில் சினிமாவுக்கான சிறந்த இயக்குனராக நான் தேர்ந்தெடுக்கப் பட்டு விருது பெறுவதில் பெரிய அதிசயம் ஒன்றும் இல்லை. சாதனையும் இல்லை". //

    :))

    ReplyDelete
  2. அருமையான மற்றும் முதிர்ச்சியான விமர்சனம்ப் பதிவு.

    அருமையான எழுத்து நடை, பாராட்டுக்கள் நன்றிகள்

    ReplyDelete
  3. கிருஷ்ணா...

    நந்தலாலாவைப் பற்றிய உங்கள் கருத்தே எனதும். கடைசிப் பத்தி மிகக் காட்டமாக இருக்கிறது :)

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  4. நன்றி கிருஷ்ணா...

    ReplyDelete
  5. ஹே கிருஷ்ணா... நீ? தியேட்டருக்கு? படம்? விமர்சனம்?

    கலக்கு மேன்.... :-)

    இன்னும் நந்தலாலா பார்க்கவில்லை, எனது கருத்துக்களும் உனது கருத்துக்களோடு உடன்பட்டவையே.

    ReplyDelete
  6. தேர்ந்ததொரு பதிவு.

    ReplyDelete
  7. தமிழ் சினிமாவின் போக்கை மிகவும் தூரமான இடத்திற்கு மாற்றிய முதல் படம் இது (நீங்கள் உட்பட அனைவருமே ஒத்துக்கொள்ளும் விஷயம் இது). இப்போதைய நமது தேவை இந்த படத்தை சுரேஷ் கண்ணனை போல தீவிரமாக அலசி அணுகுவதே. தோண்ட தோண்ட புது புது அனுபவங்களை தந்துகொண்டே இருக்கும் தீவிரத் தன்மை கொண்டது நந்தலாலா. வியாபாரம் சம்பந்தமான அலைகள் ஓய்ந்தபிறகே இதுபோன்றே தழுவல் விஷயங்களை பார்த்துகொள்ளலாம். காப்பி என்பதற்காக படத்துக்கே போகாத புத்திஜீவிகள் வாழும் ஊர் இது.



    தழுவல்கள் இருவகை. தழுவி குப்பையாக எடுப்பது ஒன்று, மற்றொன்று மூலபடைப்பு தந்த அனுபவத்தை வைத்துக்கொண்டு செவ்வியல் படைப்பாக பார்வையாளனுக்கு தருவது. நந்தலாலா இரண்டாம் வகை என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. தீவிரமான வாசிப்பும் முதிர்ந்த ரசிப்புத்திறனும் கொண்ட, அதையும் மிகத்திறமையாக திரையில் வடிக்கும் திறனும் கொண்டவர் மிஷ்கின் என்பதற்கு சாட்சிகளாக இப்படத்தில் பல காட்சிகள் உண்டு. கிளாசிக் நாவலை வாசித்த அனுபவத்தை இந்தப்படம் தந்தது. நந்தலாலா-வின் திருட்டுத்தனமான தழுவல் உங்களை கோபமூட்டினால் சமூகம் தரும் இதை விஞ்சிய கோபங்கள் நம்மை மெண்டலாக்கிவிடும் என்பதே உண்மை.



    தழுவி படமெடுத்துவிட்டு வாசகனுக்கு அதை முறையாக தெரிவிக்காதது குற்றம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லைதான். இருந்தாலும் கொஞ்சகாலம தள்ளி அதை விவாதிக்கலாம் என்பதே என் கருத்தாகும். உங்கள் பதிவிற்கு முதலில் என் கடுமையான கண்டனங்கள் பிரபு.

    ReplyDelete
  8. /-- கடுமையான கண்டனங்கள் பிரபு --/

    பிரபா...நேரில் பார்த்த பொழுது இதைப்பற்றி பேசி இருக்கலாமே... அடுத்த முறை ஞாபகமாக விவாதிக்கலாம்.

    :-)))

    ReplyDelete
  9. @ முரளிகுமார் பத்மநாபன்

    உனக்கு போட்டியாக கிளம்பி இருக்கிறேன் முரளி...

    ஹ ஹ ஹ ஹா...

    ReplyDelete